உண்மையான பக்தி

தெய்வம் என் அருகே அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை என அர்ஜூனனின் மனம் பாரதப் போரின் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது. உன்னைவிட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்று கிருஷ்ணர் கேட்டார். என் மனதில் ஓடுகிற எந்தச் சிறு சிந்தனையையும் உடனே படித்து விடுகிறானே கிருஷ்ணர் என அர்ஜூனன் திடுக்கிட்டான். அர்ஜூனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க கிருஷ்ணர் முடிவு செய்தார். அர்ஜூனா நான் பெரிதும் மதிக்கும் எனது பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகில் வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா என்று கிருஷ்ணர் அழைத்தார். இதே தோற்றத்தில் போனால் உன் உயிருக்கு ஆபத்து நேரலாம். நான் பெண்ணாக மாறுகிறேன். நீயும் என் தோழியாக மாறு என்றான். சற்று நேரத்தில் அரண்மனையிலிருந்து கிருஷ்ணரும் அர்ஜூனனும் பெண்களாக மாறி பிங்கலையின் வீட்டுக் கதவை தட்டினர்.

தெய்வீக ஒளியுடன் ஒரு மூதாட்டி கதவைத் திறந்தாள். தாயே நாங்கள் அடுத்த ஊருக்குச் செல்வதற்காக நடந்துவந்தோம். கால்கள் வலிக்கின்றன. இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லலாமா என்று கேட்டார் கிருஷ்ணர். உள்ளே வாருங்கள். நான் பூஜை செய்துகொண்டிருக்கிறேன். பூஜை முடிந்த பிறகு நீங்கள் உணவருந்திவிட்டுச் செல்லலாம் என்றாள் பிங்கலை. பூஜையறையில் ஒரு பீடத்தில் கிருஷ்ண விக்கிரகமும் சிறியதாக ஒரு கத்தியும் நடுத்தர வடிவில் ஒரு கத்தியும் பெரியதாக ஒரு கத்தியும் இருந்தன. தாயே கிருஷ்ண விக்கிரகத்தோடு மூன்று கத்திகளையும் பூஜிக்கிறீர்களே கத்திகள் யாருடையவை என்று கிருஷ்ணர் கேட்டார். என்னுடையவைதான் வாய்ப்பு கிட்டும்போது கிருஷ்ணனுக்குக் கொடுமை செய்த என் விரோதிகள் மூவரைக் கொல்ல வேண்டும் அதற்காக மூன்று கத்திகள் வைத்திருக்கின்றேன் என்றாள். யார் அந்த விரோதிகள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன், திரௌபதி, அர்ஜூனன் இந்த மூவரும் என்றாள். குசேலரைக் கொல்ல சின்னக் கத்தி. திரௌபதிக்கு நடுத்தரக் கத்தி. மாவீரன் என்று தன்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டு திரியும் அர்ஜூனனைக் கொல்ல இந்தப் பெரிய கத்தி என்றாள். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இந்த மூவரும் கிருஷ்ணருக்கு என்ன கொடுமை செய்தார்கள் தாயே என்று கேட்டார் கிருஷ்ணர். குசேலன் அந்தத் தவிட்டு அவலைக் கிருஷ்ணருக்குக் கொடுக்கலாமா என் கிருஷ்ணர் வெண்ணெய்யை விரும்பித் திண்பவன். வாய் உறுத்தாத ஆகாரம் அது. அவல் என் கிருஷ்ணரின் நீண்ட தாமரை இதழ்போன்ற நாவில் புண்ணைத் தோற்றுவிக்காதா இந்த புத்திகூட இல்லாமல் பக்தி என்ற பெயரில் அவலை அவனுக்குக் கொடுத்தான். ஆகவே அவனுக்கு சிறிய கத்தி என்றாள்.

திரௌபதி எப்படி உங்கள் விரோதியானாள் என்று கேட்டார் கிருஷ்ணர். அஸ்தினாபுரத்தில் இருக்கும் திரௌபதிக்கு துவாரகையில் இருக்கும் கிருஷ்ணர் வாரி வாரிப் புடவைகளை அருளினானே புடவைகளை இழுத்து இழுத்து துச்சாதனன் கைவலிக்க மயக்கம் போட்டு விழுந்தான். புடவையை இழுத்த துச்சாதனனுக்கே கைவலிக்குமானால் புடவைகளை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்கிய கிருஷ்ணருக்கு கை எவ்வளவு வலித்திருக்கும் கிருஷ்ணரின் கைகளை வலிக்கச் செய்த திரோபதியை சும்மா விடுவேனா அவளுக்கு நடுத்தர அளவுள்ள கத்தி என்றாள்.

அர்ஜூனன் கிருஷ்ணரின் பக்தர்களிலேயே தலை சிறந்தவனாயிற்றே அவன் மேல் ஏன் விரோதம் என்று கேட்டார் கிருஷ்ணர். அர்ஜூனனின் பக்தியை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும். உண்மையான பக்தனாக இருந்தால் கை வலிக்க வலிக்கத் தேரோட்டச் சொல்வானா. குதிரைகளின் கயிற்றை இழுத்து இழுத்துக் கிருஷ்ணர் கைகள் எத்தனை துன்பப்பட்டிருக்கும் தேர்க் குதிரைகளை ஓட்டுவது சாதாரண வேலை இல்லை. ஊரில் தேரோட்டிகளுக்கா பஞ்சம் என் முன்னால் என்றாவது ஒருநாள் அகப்படுவான் அர்ஜூனன். அன்று அவனை பார்த்துக் கொள்கிறேன் அவனுக்கு பெரிய கத்தி என்றாள்.

அர்ஜூனன் பதற்றத்தோடு நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்து நகைத்தார் கிருஷ்ணர். குசேலன் அறியாமல் செய்தான். அவனிடம் தவிட்டு அவலைத் தவிர வேறு பொருள் இல்லை. எந்தப் பிரதிபலனையும் அவன் எதிர்பார்க்கவும் இல்லை. கிருஷ்ணர்தான் அவன் கேட்காமலே செல்வத்தைக் கொடுத்தான். சுயநலமற்றவன் என்பதால் குசேலனை மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை யோசித்தாள். பீடத்திலிருந்த சிறிய கத்தியைத் தூக்கி வீசினாள். திரௌபதிக்கு புடவை கொடுத்ததில் கிருஷ்ணர் கைகள் வலித்தது உண்மைதான். என்றாலும் ஒரு பெண்ணுக்கு மானம் மிகப் பெரிதல்லவா அதைக் காத்துக்கொள்ள அவள் கொலைகூடச் செய்யலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. எனவே சுயநலமே ஆனாலும் மானம் காக்க வேண்டியதால் திரௌபதியையும் மன்னித்து விடுங்களேன் என்றார் கிருஷ்ணர். பிங்கலை இரண்டாவது கத்தியையும் வீசிவிட்டாள்.

போரில் தனக்கு வெற்றி கிட்ட வேண்டும் என்னும் உலகியல் சார்ந்த சுயநலத்திற்காக கிருஷ்ணரை தேரோட்டச் செய்த அர்ஜூனனை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் இந்தப் பெரிய கத்தி இந்தப் பீடத்திலேயே இருக்கட்டும் என்றாள் பிங்கலை. சுயநலம் பிடித்த அர்ஜூனனை நீங்கள் கொல்வது நியாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என்றான் கிருஷ்ணர். அர்ஜூனனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கிருஷ்ணர் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னார் அர்ஜூனன் கிருஷ்ணர் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான் அர்ஜூனனை நீங்கள் கொன்றுவிட்டால் உற்ற நண்பனை இழந்து கிருஷ்ணர் வருந்துவானே. கிருஷ்ணர் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா என்று கேட்டார் கிருஷ்ணர். நீ சொன்ன கோணத்தில் நான் சிந்தித்துப் பார்க்கவில்லை. நீ சொல்வதும் சரிதான். எனக்கு இந்தப் பிறவியிலோ மறுபிறவியிலோ எதுவும் வேண்டாம். முக்திகூட வேண்டாம். என் கிருஷ்ணர் உடல் வருத்தமோ மன வருத்தமோ இல்லாமலிருந்தால் அதுபோதும் எனக்கு. கிருஷ்ணருக்கு மன வருத்தம் தரும் செயலை நான் செய்யமாட்டேன் என்று கூறிய பிங்கலை மூன்றாவது கத்தியையும் பீடத்திலிருந்து எடுத்துக் கீழே வீசினாள். பெண் வேடத்திலிருந்த அர்ஜூனன் மூதாட்டி பிங்கலையை கீழே விழுந்து வணங்கியபோது அவன் ஆணவம் முற்றிலுமாக அழிந்திருந்தது.

சதாசிவ பிரம்மேந்திரர்

ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர் இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால் சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும் அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட குருவானவர் அவரை அழைத்து ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அதுவே வேத வாக்காக குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.

சுமார் நூறாண்டு காலம் அவர் ஒருநாள் வழக்கம் போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள் ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார். முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக எதிலும் லட்சியமே இல்லாதவர் போல் நடந்து செல்கிறாரே என்ன ஆணவம் ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும் சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார் அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை.

இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை. ராணிகள் நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று அரசரிடம் வேண்டினார்கள். உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில் அரசரும் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்து செல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை. துண்டுபட்ட வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம் என்ன வேண்டும் என்று கேட்டார் பிரம்மேந்திரர். அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர் தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது. .

சுவாமி ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார் மன்னர். எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது. இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.

இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு ஒரு சாமியார் இருந்தாரே ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போது சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள் புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில் தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். உற்சவமூர்த்தி. திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர். புதுக்கோட்டை மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி 1753-ம் ஆண்டு சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தது.

அன்னதானம் பெற்ற உணவை சாப்பிடும் முறை

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். தன் உடலை விட்டுவிட வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம் அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற யுதிஷ்டிரர் விரும்பினார். தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிஷ்மரிடம் சென்றார். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி பிதாமகரே தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் என்று கேட்டார் யுதிஷ்டிரர். உடனே திரௌபதி பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் நெடியை உணர்ந்த யுதிஷ்டிரர் நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் இது தகாத செயல் என்று கடுமையாகக் கேட்டார்.

துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர் அந்தச் சபையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும் போது சிரிக்காமல் என்ன செய்வது என்று கூறினாள். யுதிஷ்டிரர் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார். திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும் உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள். ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னமிட்டால் அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் திரௌபதியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன். ஆனால் இப்போது அர்ஜூனன் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன். என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

குறிப்பு: முற்காலத்தில் இந்த காரணத்தை ஒட்டியே விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் மற்றவர்களிடம் பெற்ற உணவை இறைவனுக்கு படைத்துவிட்டு உண்டார்கள்.

குரு

மகான் ஒருவரிடம் வந்த பக்தர் ஒருவர் அவரிடம் குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா குருவின் வழிகாட்டல் அவசியம் தேவையா என்று கேட்டான். அதற்கு அந்த மகான் அவனிடம் ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும் பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது. அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார்.

இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல் அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள் ஒரு நல்ல குருவின் அருளும் வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம் என்றார். உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.

சகுனியை பெருமைபடுத்திய கிருஷ்ணர்

குருசேத்திரப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர் தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர். யாகம் தொடங்கலாமே சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்றா எனக் கேட்டார் கிருஷ்ணர். ஆயிற்று கண்ணா முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம் என்றான் அர்ஜுனன். யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில் கேட்டார் கிருஷ்ணர். குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான் என்றார் யுதிஷ்டிரன். வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொன்னவுடன் பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான் அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது. என்னாயிற்று கண்ணா உனக்கு முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே என்றார் கிருஷ்ணர் அமைதியாக. பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா கேட்டான் அர்ஜுனன். அர்ஜுனா வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து எத்தனை தடைவந்தாலும் தகர்த்து தன் லட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் லட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர்கள் தோற்கவில்லை. ஆனால் எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் லட்சியமும் வெல்லவில்லையே என கேட்டான் யுதிஷ்டிரன். போரில் உடன்பிறந்தவர் உற்றார் உறவினர் பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது. உங்கள் வாரிசுகளை அழித்த பின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள் கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள். அப்படிப் பார்த்தால் சகுனியின் லட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே என அர்ஜுனன் கேட்க சிரித்தார் கிருஷ்ணர். அர்ஜுனா எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய் என்றார் கிருஷ்ணர்.

கெளரவர்களை அழிப்பதே சகுனியின் லட்சியமா ஏன் கிருஷ்ணா என்று அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார். கெளரவர்களை மட்டும் அல்ல உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம் இலட்சியம் எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால் கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி என்றார் கிருஷ்ணர். பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன். பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான் என்றார் கிருஷ்ணர். சகுனி துரோகி நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே என்றார் திருதராஷ்டிரன். இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான் உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால் அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால் திரௌபதியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால் தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி உங்கள் எல்லோரையும் விட நல்லவனே என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணா எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான் தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன சொல் கிருஷ்ணா என கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன். அது எனக்கும் பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா முடியாதா கேட்டார் கிருஷ்ணர். கோபப் படாதே கிருஷ்ணா யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே என்றார் யுதிஷ்டிரர் அமைதியாக. யுதிஷ்டிர வீரனாக நல்லவனாக ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் என்பதை அறிவாயா தப்பிப் பிழைத்தவன் சகுனி தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் லட்சியம் வெல்வதற்காக இதில் என்ன தவறு போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களாகும் போது அவன் கொண்ட லட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே என்றார் கிருஷ்ணர்.

திரௌபதியை துகிலுரிக்க வைத்தது சகுனி செய்த தர்மமா என கேட்டான் பீமன். பீமா யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன் எங்களுக்கு பதிலாக கிருஷ்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால் அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி யுதிஷ்டிரனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே. திரௌபதியின் அவமானம் சகுனியால் திட்டமிடப்பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யுதிஷ்டிரனும் துரியோதனனும் தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான் பழிகாரன் அல்ல கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன். கிருஷ்ணா பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும் என்றான் சகாதேவன் அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர். யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார் அவரைப் பின் தொடர்ந்தான் சகாதேவன்.

கிருஷ்ணா சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன் என்றான் பணிவுடன். சகாதேவா காலத்தின் மறு உருவம்தான் நீ. அதனால்தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது கவலை வேண்டாம். அது மட்டுமின்றி இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே. என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன் அவன். உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை. அவனை என் பக்தனாக அவன் விரும்பாவிடினும் அவனை நான் ஏற்றுக் கொண்டதனால் யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன். என்னை விரும்பி நினைப்பதோ விரும்பாமல் நினைப்பதோ என்னை நினைப்பது மட்டுமே முக்கியம். ஒருவனை நான் ஆட்கொள்ள அதுபோதும் என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்.

இறைவன் இருக்கும் இடம்

ஓர் ஊரில் வசித்த விவசாயி முருகன் இறைவன் மீது பெரிதும் பக்தி கொண்டவன். நல்லவன் பெரியோர்களை மதிப்பவன். ஏழையான அவன் போதும் என்ற மனதுடன் வாழ்ந்து வந்தான். செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதி நேர்மையாகத் தொழில் செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு மனைவியும் ஐந்து வயதில் மகனும் இருந்தார்கள். ஒரு சமயம் அவனுக்கு இறைவனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இறைவா நீங்கள் உங்கள் தரிசனத்தை எனக்குத் தந்து அருள் புரியுங்கள் என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் முருகனின் பிரார்த்தனை பலித்தது. இறைவன் முருகனின் கனவில் தோன்றி அன்பனே வரும் புதன்கிழமை நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினார். கனவு கலைந்து எழுந்த முருகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். தன் மகிழ்ச்சியை மனைவியிடமும் மகனிடமும் பகிர்ந்துகொண்டான். அவர்களும், தங்களுக்கு இப்படி ஒரு பாக்கியம் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் மூழ்கினர். இறைவன் தங்கள் வீட்டிற்கு வரும்போது அவரை எப்படி உபசரிக்கலாம் என்று கலந்து பேசினார்கள். முடிவில் இறைவனுக்கு வழங்குவதற்கு இனிப்பு தயார் செய்ய வேண்டும். ஒரு ஜோடி புதிய செருப்பு கொடுக்க வேண்டும், ஒரு சால்வை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இறைவன் குறிப்பிட்ட புதன்கிழமை வந்தது. முருகன் குடும்பத்தினர் வீட்டை அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஆவலோடு வாசல் கதவருகில் காத்திருந்தார்கள்.

காலை மணி பத்தாயிற்று. அப்போது முருகன் வீட்டருகில் 35 வயது மதிக்கத்தக்க ஏழைப்பெண் தன் எட்டு வயது மகளுடன் வந்து கொண்டிருந்தாள். அவளது நடையில் ஒரு தளர்ச்சி காணப்பட்டது. முருகன் வீட்டுக்கு அருகில் வந்தபோது மயங்கி விழுந்து விட்டாள். முருகன் அந்தப் பெண் அருகில் சென்று, அவளுக்கு முதலுதவி அளித்தான். சிறிது நேரத்தில் அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்தாள். முருகன் அவளுடன் பேசியபோது அவளும் அவள் மகளும் வறுமை காரணமாக இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் பட்டினியாகக் கிடப்பதும் பசியில் மயங்கி விழுந்தததும் தெரிய வந்தது. காரணம் தெரிந்ததும் அவன் அவர்களை தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். முருகன் குடும்பத்தினர் அவர்களுக்கு இறைவனுக்குத் தருவதற்காக வைத்திருந்த இனிப்புகளை கொடுத்தார்கள். மீதமிருந்த இனிப்பையும் அவர்களிடமே கொடுத்து இவற்றை எடுத்துச் செல்லுங்கள் என்றனர். அந்தப் பெண் முருகன் குடும்பத்தினருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றாள்.

முருகனின் உள்ளம் இறைவன் பக்கம் திரும்பியது. அவர் எப்போது வரப் போகிறார் என்று பரபரத்துக் கொண்டிருந்தான். நேரம் கடந்தது. இந்த நிலையில் கடுமையான வெயிலில் ஒரு பிச்சைக்காரன் முருகன் வீட்டுக்கு அருகில் வந்தான். அவன் முருகனிடம் உங்களிடம் ஏதாவது பழைய செருப்பு இருந்தால் அதை எனக்குக் கொடுத்து உதவுங்கள் என்று வேண்டினான். முருகன் வீட்டிற்குள் சென்று, தான் இறைவனுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஒரு ஜோடி புதிய செருப்பை எடுத்து வந்து அவனிடம் கொடுத்தான். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட பிச்சைக்காரன் நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினான். மாலையில் குளிர் கடுமையாக இருந்தது. குளிரில் நடுங்கியபடியே முதியவர் ஒருவர் தெருவில் நடந்து வந்தார். அவரைப் பார்த்த முருகன் இவர் இப்படி குளிரில் கஷ்டப்படுகிறாரே என்று வீட்டிற்குள் சென்று கடவுளுக்காக வைத்திருந்த சால்வையை எடுத்தான். அவன் மனைவி இறைவனுக்காக இதை மட்டுமாவது வைத்திருங்கள் என்று கூறி தடுத்தாள். முருகன் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. சால்வையை முதியவருக்குப் போர்த்தினான். அவர் முருகனுக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றார். அன்று பகல் முடிந்து இரவும் வந்து விட்டது. இறைவன் வரவில்லை. முருகன் மிகவும் மனம் வருந்தினான். அந்த ஏமாற்றம் அவனைப் பெரிதும் பாதித்தது. அவன் இறைவனிடம் இறைவா நீங்கள் ஏன் இன்று என் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டுப் பிரார்த்தனை செய்தான். அப்போது இறைவனின் குரல் அசரீரீயாக ஒலித்தது:

இன்று நான் மூன்று முறை உன் வீட்டிற்கு வந்து நீ கொடுத்தவற்றைப் பெற்றுக் கொண்டேன். முதலில் ஒரு ஏழைப்பெண் அவள் மகள் வடிவத்தில் உன்னிடம் வந்து நீ கொடுத்த இனிப்புகளைப் பெற்றுக்கொண்டேன். இரண்டாவதாக ஒரு பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து செருப்பையும் அடுத்து முதியவர் வடிவத்தில் வந்து சால்வையைப் பெற்றுக்கொண்டேன் என்றார்.

சுவாமி விவேகானந்தரின் கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது. இறைவனுக்கு உதவுகிறேன் என்று இல்லாமல் அவருக்காக பணியாற்றும் பேறு பெற்ற நாம் பாக்கியசாலிகள் ஆவோம். உதவி என்ற சொல்லை உன் உள்ளத்திலிருந்தே விலக்கிவிடு. நீ உதவி செய்ய முடியாது. அப்படி நீ நினைப்பதே தெய்வ நிந்தனையாகும். இறைவனுடைய விருப்பத்தினால் தான் நீ இங்கு இருக்கிறாய். நீ ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு கொடுக்கும்போது அந்த நாயை இறைவனாகவே நினைத்து வழிபடு. அந்த நாய்க்குள் இறைவன் இருக்கிறார். அவரே எல்லாமுமாய் இருக்கிறார். எல்லாவற்றிலும் இருக்கிறார்.

கலியுகம் பற்றி யுதிஷ்டிரர்

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சந்தைக்குள் நுழைந்து ஒரு அழகான குதிரையை பார்த்த உடன் குதிரையின் உரிமையாளரை நெருங்கி குதிரை என்ன விலை என்று கேட்டான். அதற்கு குதிரையின் உரிமையாளர் இந்த குதிரை விற்பனைக்கு அல்ல நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால் குதிரையை இலவசமாகவே கொடுப்பேன் என்றார். சகாதேவன் உடனே சரி கேள்வியைச் சொல்லுங்கள் என்றான். ஒரு பெரிய கிணறு அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால் அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால் பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன் என கேட்க சகாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.

சற்று நேரத்தில் சகாதேவனை தேடிக்கொண்டு் வந்த நகுலன் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.குதிரையின் உரிமையாளர் நகுலனிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை ஏன் என்று கேட்டார். நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. சகாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில் அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும் குதிரையைப் பார்த்து அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர் அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார். ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில் அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள் என்று கேட்டான். பதில் சொல்ல முடியாததால் அர்ஜுனனும் அங்கேயே உட்கார்ந்து விட்டான்.

சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க அரண்மனையில் அவர்களைக் காணாமல் யுதிஷ்டிரர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு தம்பி நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய் அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா என்றார். பீமனும் போய் தேடிப்பிடித்து அர்ஜுனன் நகுலன் சகாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். திரௌபதியோடு அரியணையில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் அவர்களைப் பார்த்ததும் அர்ஜுனா நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள் எனக் கேட்டார். அதற்குப் அர்ஜுனன் நடந்ததை எல்லாம் சொல்லி குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். யுதிஷ்டிரர் நடுங்கிவிட்டு பதில் சொல்லத் தொடங்கினார். எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள் என்று விரிவாகக் கூறினார்.

அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள் ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி அவ்வளவு பிள்ளைகளையும் பிரியமாக காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது என்றார். இரண்டாவது கேள்விப்படி இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள் முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில் அதன் வால் போக முடியவில்லை என்று பதில் கூறினார். அடுத்து மூன்றாவது கேள்வி பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும் பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள் வறுமையில் வாடுவார்களே தவிர அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான் வேலி அப்படியே இருக்க பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது. கலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி முடித்தார் யுதிஷ்டிரர்.

குரு சீடன்

ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு. உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம் மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு சீடனைப்பார்த்து சிறிது கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால் வலிக்குமா குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான். குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும் என்று கேட்டார். என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை இதுதான் என்றார் குரு. காலில் விழுந்தான் சீடன்.