கலியுகம் பற்றி கிருஷ்ணர்

பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று தங்கள் சந்தேகத்தை கேட்டனர். அதற்கு சொல்வதென்ன எப்படி இருக்கும் என்றே காண்பிக்கிறேன் என்று கூறி நான்கு அம்புகளை நான்கு திசைகளிலும் செலுத்தினார் கிருஷ்ணர். அவற்றை கொண்டு வருமாறு நான்கு பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். நால்வரும் நான்கு திசைகளில் சென்றனர்.

பீமன் அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு ஐந்து கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு அதைச் சுற்றி நான்கு கிணறுகள் சுற்றியுள்ள நான்கு கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

அர்ஜுனன் அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண் முயலை கொத்தி தின்றுகொண்டிருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி குழப்பத்தோடு அங்கிருந்து கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

சகாதேவன் கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றியிருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நகுலன் கிருஷ்ணரின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில் இருப்பதைக் கண்டு எடுதுதுக்கொண்டு திரும்பினான். மலைமேல் இருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும் தடைகளையும் இடித்து தள்ளி வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு அதை கண்ட சகாதேவன் தெளிவுபெற கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.

நான்கு பாண்டவர்களும் கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும் மனதில் உள்ள குழப்பத்தையும் கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.

பீமா கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும் அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். தங்களிடம் மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள். வற்றிய கிணற்றுக்கு அருகாமையில் உள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல்.

அர்ஜுனா கலியுகத்தில் போலி மதகுருக்கள் ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும் கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள். குயிலை போல.

சகாதேவா கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண் மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணமாவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள் பசுவை போல்.

நகுலா கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல் நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுத்தமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல்படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே தடுத்துநிறுத்தி நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும் பாறையை தடுத்த சிறுசெடியை போல் என்று பதில் சொல்லி முடித்தார்.

ஜ்வாலமுகி

இமாச்சலிலுள்ள ஜ்வாலமுகி கோவில் இது. சக்திவாய்ந்த சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் 9 வடிவங்களைக் குறிக்கும் ஒன்பது தீப்பிழம்புகள் காலங்காலமாக இங்கு எரிந்து கொண்டிருக்கின்றது. இங்கு சிலைகள் இல்லை.

இந்த எரிபொருளை தொடர்ச்சியாக மாற்றும் இயற்கை எரிவாயு அல்லது எண்ணெயை அதிகாரிகள் சோதிக்க முயன்றனர். எரிவாயு எங்கிருந்து வருகிறது என்ற மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

புன்னைநல்லூர் ராமர்

தஞ்சாவூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னைநல்லூர். சுமார் 500 வருடப் பழைமை வாய்ந்த ஆலயம் கோதண்டராமர் திருக்கோயில். இந்தக் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீகோதண்டராமர் சாளக்ராமம் எனும் கல்லால் ஆனவர். வைஷ்ண சம்பிரதாயத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு துளசிமாடத்தையும் சாளக்ராமத்தையும் பெண் வீட்டார் அந்தக் காலத்தில் வழங்கி வந்தனர். இது ஒரு வழக்கமாகவே இருந்து வந்தது. சாளக்ராமம் எனும் கல் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சம் என்று போற்றப்படுகிறது. நேபாளத்தில் உள்ள கண்டிகை நதியில்தான் சாளக்ராமம் தோன்றுகிறது. நேபாள மன்னனும் தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னனும் ஒருகட்டத்தில் சம்பந்தியானார்கள். நேபாள மன்னர் மாப்பிள்ளை வீட்டாரான தஞ்சை மன்னருக்கு ஏராளமான சீர்வரிசைகள் வழங்கினார். தங்கமும் வெள்ளியும் வழங்கினார். பட்டாடைகள் வழங்கினார். எல்லாவற்றையும் விட முக்கியமாக மிகப்பெரிய சாளக்ராமத்தை வழங்கினார். சிலகாலங்கள் கழிந்தன. மகாராஷ்டிர மன்னர் பிரதாபசிங்கின் ஆளுகையின் கீழ் தஞ்சாவூர் தேசம் வந்தது. அப்போது இந்த சாளக்ராமத்தைக் கண்டு சிலிர்த்தார் மன்னர் பிரதாபசிங்.

இந்த சாளக்ராமத்தைக் கொண்டு அழகிய ஸ்ரீராமரின் விக்கிரகத்தை அமைத்து அழகிய கோயிலும் எழுப்பி அந்தக் கோயிலுக்கு நிலங்களும் பசுக்களும் தானமாக அளித்தார் மன்னர் பிரதாப்சிங். சௌந்தர்யமாக அழகு ததும்ப காட்சி தருவதினால் அவர் குடிகொண்டிருக்கும் கருவறையின் விமானம் செளந்தர்ய விமானம் என்று பெயர் பெற்றது. கோதண்டராமர் ஐந்தடி உயரம் சாளக்ராம மூர்த்தம். மூலவராக நின்ற திருக்கோலத்தில் லட்சுமணர் சீதாதேவி ஆகியோருடன் சுக்ரீவன் உடனிருக்க சேவை சாதிக்கிறார் ஸ்ரீகோதண்டராமர். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கி.பி.1739-1763 ல் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் பிரகார சுற்றுச்சுவரில் இராமாயணக் காட்சிகள் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

அர்ஜூனனின் காண்டீபம்

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன் கர்ணா இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள் என்றான். கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று சொன்னான் கர்ணன். நீ அல்லவோ சுத்த வீரன் அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர் கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றார். அது என்ன என்று கேட்டான் அர்ஜுனன். நேரம் வரும் போது சொல்கிறேன் என்றார் வியாசர். பல ஆண்டுகள் கழிந்தன. மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின் கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். அர்ஜுனா நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு என்று கூறினான் கிருஷ்ணன். கனத்த மனத்துடன் கிருஷ்ணரிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும் யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படும் வில்லுக்கு விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்.

வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில் இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். அர்ஜுனா நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது என்று கூறினார் வியாசர். கிருஷ்ணரே புறப்பட்ட பின் நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால் என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது. இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே என்ன காரணம் என்று கேட்டான் அர்ஜுனன். அதற்கு வியாசர் உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கிருஷ்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால் இதை உன்னால் தூக்க முடியவில்லை என்றார்.

சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே ஏன் தெரியுமா கிருஷ்ணரின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய். கிருஷ்ணரின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும். அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன் கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான். பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் இறைவன் தான் வழங்குகிறார் என்றார் வியாசர்.

அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன்

அர்ஜூனனுக்கு ஒரு முறை ஒரு சந்தேகம் வந்தது. ராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி என்றால் ஏன் அவர் தன் வில்லினால் அம்பைக்கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை. வானரங்களை வைத்து கல்லினால் ஏன் பாலம் கட்டினார் எப்படியாவது இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினான். பாசுபதாஸ்திரம் வேண்டி அவன் சென்று கொண்டிருந்தபோது ஒரு நதியின் அருகே அனுமன் தனது சுய உருவை மறைத்து ஒரு சாதாரண வானரம் போல உருவம் கொண்டு அமர்ந்து ராமநாமம் ஜபம் செய்து கொண்டிருப்பதை பார்த்தான். அவரிடம் சென்று ஏய் வானரமே உன் ராமனுக்கு உண்மையில் திறன் இருந்திருந்தால் வில்லினாலேயே பாலம் கட்டியிருக்கலாமே ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார் என்றான் கர்வமாக. தியானம் கலைந்த அனுமன் எதிரே நிற்பது அர்ஜூனன் என்பதை உணர்ந்துகொள்கிறார். அவன் கர்வத்தை ஒடுக்க எண்ணுகிறார்.

வில்லினால் கட்டப்பட்ட சரப்பாலம் என் ஒருவன் பாரத்தையே தாங்காது எனும் போது எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும். ஆகையால் கல்லினால் வானரங்களை வைத்து பாலம் கட்டினார் என்றார் அனுமன். அதற்கு அர்ஜூனன் இந்த நதியின் குறுக்கே நான் அம்பினால் ஒரு பாலம் கட்டுகிறேன். நீயல்ல எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் உறுதியாக நிற்கும் என்கிறான் அர்ஜூனன். பாலம் உடைந்துவிட்டால் வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன் என்கிறான். பாலம் உடையவில்லை என்றால் என் ஆயுளுக்கும் உனக்கு அடிமையாக உன் தேர்க்கொடியில் இடம்பெறுவேன் என்கிறான் அனுமன். அர்ஜூனன் அம்பினால் சரப்பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து ராமநாமம் ஜெபம் செய்யத் தொடங்கினார். அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும் அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தார் உடனே பாலம் தகர்ந்து சுக்குநூறானது. பார்த்தாயா என் ராமனின் சக்தியை என்ற அனுமன் ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் வெட்கித் தலைகுனிந்தான்.

போரில் வெற்றி பெற பாசுபாதாஸ்திரத்தை தேடி வந்த நான் தேவையின்றி ஆணவத்தால் ஒரு வானரத்திடம் தோற்றுவிட்டேனே நான் உயிர் துறந்தால் என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள் கிருஷ்ணா என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். அனுமன் தடுத்தபோதும் தனது வாக்கிலிருந்து பின்வாங்க அர்ஜூனன் தயாராக இல்லை. அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது என்ன நடக்கிறது இங்கே என்ன பிரச்சனை என்று ஒரு குரல் கேட்டது. குரல் கேட்ட திசையில் ஒரு அந்தணர் தென்பட்டார். இருவரும் அவரை வணங்கி நடந்ததை கூறினார். பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும் பிறகு முடிவு செய்துகொள்ளலாம் யார் பலசாலி என்று அந்தணர் கூற இருவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இரண்டாவது முறை கட்டுவதால் மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப்போகிறது என்று கருதிய அர்ஜூனன் கிருஷ்ணனரை நினைத்துக்கொண்டு கிருஷ்ண கிருஷ்ண என்று சொல்லியபடி பாலம் கட்டினான். தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை பாலத்தை உடைத்திருந்தபடியால் கர்வம் சிறிது தலைக்கு ஏறியிருந்தது. இம்முறை ராம நாம ஜெபம் செய்யவில்லை. அர்ஜூனன் பாலம் கட்டியவுடன் அதில் ஏறுகிறார் நிற்கிறார் ஓடுகிறார் ஆடுகிறார் பாலம் ஒன்றும் ஆகவில்லை. அனுமனுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

அந்தணரை நோக்கி வந்து யார் நீங்கள் என்று கேட்கிறார் அனுமன். அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர். நீங்கள் இருவருமே தோற்கவில்லை. வெற்றி பெற்றது கடவுள் பக்தியும் இறைவனின் நாமமும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும்போது தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில் என்னை மறந்து பாலம் கட்டினான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ராம நாமத்தை ஜபித்தான். ராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் வென்றான். இரண்டாம் முறை அகந்தை அழிந்த அர்ஜூனன் கிருஷ்ணா கிருஷ்ணா என்று நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன் தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி ராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். எனவே இருமுறையும் வென்றது இறைவனின் நாமம்தான் தவிர நீங்கள் அல்ல என்றார்.

கர்வம் தோன்றும் போது கடமையும் பொறுப்புக்களும் மறந்து விடுகின்றன. உங்கள் இருவருடைய பக்தியும் அளவுகடந்தது சந்தேகமேயில்லை. ஆனால் தன்னால் முடியும் என்று கர்வத்துடன் எண்ணும் போது இறை நாமத்தையும் அனைதுத்தும் அவர் செயலே என்பதையும் மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா இந்த வானரன் வேறு யாருமல்ல சிரஞ்சீவி அனுமனே என்றார். உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்டினார். அர்ஜூனன் அவரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். அனுமனை நோக்கி திரும்பிய கிருஷ்ணர் ஆஞ்சநேயா பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை அவன் தேர் கொடியில் இருந்து காக்கவேண்டும். அதன் பொருட்டே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன். நீ இருக்கும் வரை அந்த இடத்தில எந்த மந்திர தந்திரங்களும் வேலை செய்யாது என்றார். அப்படியே ஆகட்டும் பிரபோ என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன்.

பயத்தை எதிர்த்து நில்

காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் காசியில் துர்க்கை கோயிலின் மதில்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன. சில குரங்குகள் அவரைப் பிறாண்டின சில குரங்குகள் அவரைக் கடித்தன சில குரங்குகள் அவரது உடையைப் பிடித்திழுத்தன. இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர் குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். ஆனால் அவர் ஓடினாலும் குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக் குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை என்று அவர் நினைத்தார். விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும் ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.

உடனே அவர் விவேகானந்தரைப் பார்த்து நில் குரங்குகளை எதிர்த்து நில் என்று உரத்த குரலில் கூவினார். அந்தச் சொற்கள் விவேகானந்தரின் காதுகளில் விழுந்தன. அவர் புதிய ஓர் ஊக்கம் பெற்றார். உடனே ஓடுவதை நிறுத்தி துணிவுடன் குரங்குகளை நோக்கித் திரும்பினார். இப்போது அவர் குரங்குளை நோக்கி முனைப்புடன் முன்னேறத் தொடங்கினார். அவர் உறுதியுடன் வீறுடன் குரங்குகளை எதிர்க்கும் நிலையில் இருந்தார். அவ்வளவுதான் அவரது தோற்றத்தைப் பார்த்து குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இவர் நம்மைத் தாக்குவார் இவரிடமிருந்து இப்போது நாம் எப்படியும் தப்பிக்க வேண்டும் இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதும் என்று குரங்குகள் நினைத்து அங்கிருந்து பின்வாங்கி மிகவும் வேகமாக வந்த வழியில் திரும்பி ஓட ஆரம்பித்தன. இந்த நிகழ்ச்சி விவேகானந்தரின் உள்ளத்தில் மிகவும் நன்றாகப் பதிந்துவிட்டது.

இதை அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் நியூயார்க்கில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் கூறினார். அந்தச் சொற்பொழிவில் அவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டார்: இது நம் வாழ்க்கை முழுவதற்கும் நல்ல ஒரு படிப்பினையாகும். பயத்தை எதிர்த்து நில் தைரியமாகப் பிரச்னைகளை எதிர்த்து நில் ஒருபோதும் அவற்றுக்கு பயந்து ஓடாதே இவற்றுக்கு நாம் பயந்து ஓடாமல் இருந்தால் அந்தக் குரங்குக்கூட்டம் போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும். மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும் பிரச்னைகளையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. கோழைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள் துன்பங்களை எதிர்த்து நில்லுங்கள் அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்.

ஆயிரம் காளியம்மன்

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் தன்நாடு செழிக்கவும் மக்கள் நலமாக இருக்கவும் என்ன வழி என்று சான்றோர்களையும் சாஸ்திர வல்லுநர்களையும் கேட்டான். அன்னை காளி தேவிக்கு ஓர் ஆலயம் அமைத்து தினமும் ஆயிரம் பொருட்களால் அர்ச்சனை ஆராதனை செய்ய வேண்டும். ஒரு நாள் பூ வைத்தால் அடுத்த நாள் பழம். அதற்கு மறு நாள் பலகாரம் இப்படி மாற்றி மாற்றி வைக்க வேண்டும். ஒரு நாள் வைத்து அதே பொருள் அடுத்த நாள் கூடாது. இப்படி தொடர்ந்து பூஜித்தால் அம்பிகை மனம் இரங்குவாள். நீ வேண்டுவதெல்லாம் கிடைக்கும். அவர்கள் சொன்னார்கள். அப்படியே அரசன் ஐந்து ஆண்டுகள் பொறுமையாக வழிப்பட்டான். அதற்கு அடுத்த நாள் பூஜைக்கான நேரம் நெருங்கியது. அவசர அவசரமாக ஓடி வந்தார் மந்திரி. மன்னா நேற்று வரை விதவிதமான பொருட்களை காணிக்கையாக வைத்து விட்டோம். ஆனால் இன்று எதை வைத்து பூஜை செய்வது என்றே தெரியவில்லை. எல்லாம் முன்பு வைத்த பொருட்களாகவே இருக்கின்றன. பதட்டாமாக அவர் சொன்னது அரண்மனை முழுக்க எதிரொலித்தது. அது நகரம் நாடு என பரவி எல்லோரையும் தொற்றிக்கொண்டது. என்ன செய்ய போகிறார் மன்னர் என்று எல்லோரும் பதைபதைத்தார்கள். செய்யத் தவறினால் தெய்வ குற்றம் வந்துவிடுமே என்று தவித்தார் அரசர்.

அரசன் முன்னிலையில் மொத்தம் ஆயிரம் பேர் வந்தார்கள். வந்தவர்களில் தலைவர் சொன்னான். வேந்தே கவலைப்பட வேண்டாம். நானும் எங்கள் இனத்தவருமாக மொத்தம் ஆயிரம் பேர் இதோ வந்திருக்கிறோம். எங்களையே காளி தேவிக்கு காணிக்கையாக அர்பணித்து பூஜைசெய்யுங்கள். சிலிர்த்துபோனான் அரசன். பரவசபட்டார்கள் ஊர்மக்கள். நாட்டுக்காக இப்படி ஓர் அர்ப்பணிப்பா ஆச்சரியப்பட்டார்கள். பூஜையை ஆரம்பித்தான் மன்னன். ஆயிரம் பேரும் தயாராக வந்து அம்மன் முன் நின்றார்கள். அப்போது ஓர் அசரீரி எழுந்தது. மன்னா உன் வேண்டுதலை ஏற்றேன். உன் நாடு இனி எந்த பஞ்சமும் இல்லாமல் செழித்து விளங்கும். எனக்கு மனப்பூர்வமாக தங்களை அர்ப்பணிக்க வந்தவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன். நீ பூஜிக்கும் என் திருவடிவை உன் இறுதிகாலத்தில் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு அசரீரியாக அம்மன் வாக்கு வந்தது.

நாடு செழிப்பாகவே இருந்ததால் மன நிறைவோடு ஆட்சி செய்தான் மன்னன். தன் வாழ்நாள் நிறைவடையும் காலத்தில் அம்மன் திருவடிவினை அழகான பேழையில் வைத்து ஆற்றில் விட்டான். அம்மனை சுமந்து கொண்டு தொட்டில் போல் அசைந்து ஆடியபடியே ஆற்றில் மிதந்தது பெட்டி உள்ளே ஆனந்தமாக உறங்கியபடி வந்த காளி தங்களையே காணிக்கையாக தர முன் வந்த மக்கள் வசிக்கும் இடத்திற்கு வந்ததும் விழித்தாள். இனத்தவரின் தலைவர் கனவில் தோன்றினால் காளிதேவி. பெட்டிக்குள் தான் இருப்பதை சொன்னாள். உடனே அனைவரும் ஓடினார்கள். அனைவரும் உரிய மரியாதைகளோடு அம்பிகையை அழைத்து வந்தார்கள். என் மக்கள் என்று சொன்ன தாயை தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து சகல சீர்களுடன் கூட்டிக்கொண்டு வந்தார்கள். கோயில் கட்டினார்கள். பெட்டியை வைத்து திறக்க போனார்கள். இப்போதும் அசரீரி வாக்காக அம்மன் பேசினாள். ஐந்து ஆண்டுகள் மன்னன் பூஜித்த பின் நீங்கள் என் முன் வந்ததால் அந்த நாளில் மட்டுமே இனி நான் வெளியில் வருவேன். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளித்தாலும் என் அருள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்கும். உங்கள் இனத்தவரே என்னை தொடர்ந்து பூஜிக்கட்டும். அதே சமயம் இங்கே வந்து என்னை யார் வழிப்படாலும் அவர்கள் வேண்டுவன யாவும் கிடைக்கும் என்று அசரீரீயாக கூறினாள். ஐந்து வருடங்கள் கழித்து பேழையைத் திறந்து பார்த்து அதனுள் இருந்த ஓலைக் குறிப்பைக் கொண்டு அன்னைக்குத் தினமும் பூஜை செய்யும் முறையையும் அன்னைக்குப் படைக்கும் பொருட்கள் ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு பூஜைகளை நடத்தினர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூஜை செய்திட முடிவெடுத்து அதன்படி தற்போது பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

பூஜை செய்து பேழையில் வைக்கப்படும் அம்மன் ஐந்து ஆண்டுகள் கழித்து திறக்கும் போது மஞ்சள் பூச்சி பிடிக்காமல் இருப்பதும் எலுமிச்சை கெடாமல் இருக்கிறது. காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைராயன் பட்டினத்தில் இருக்கிறது ஆயிரம் காளியம்மன் ஆலயம்.

கலிபுருஷன்

பரீட்சித்து அரசன் மத்சய நாட்டு இளவரசி உத்தரைக்கும் அபிமன்யுவிற்கும் பிறந்தவன். குருச்ஷேத்திரப் போரில் கௌரவர்களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது பரிட்சித்து உத்திரையின் கர்ப்பத்தில் இருந்தவன். குருச்சேத்திரப் போர் முடிந்த நாளில் அசுவத்தாமன் பிரம்மாஸ்வரத்தை ஏவி உத்தரையின் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது கிருஷ்ணர் பரீட்சித்தை காப்பாற்றுகிறார்.

கிருஷ்ணரும் பாண்டவர்களும் கலியுகம் ஆரம்பிக்க போகிறது ஆகவே உலகைவிட்டு செல்ல முடிவெடுத்து பரீட்சித்துவை அரசனாக்கிவிட்டு செல்கின்றனர். குரு நாட்டின் அரசாட்சியை ஏற்கும் பரீட்சித்து கிருபரின் வழிகாட்டுதலில் நல்லாட்சி புரிகிறான். பரீட்சித்து மகாராசா தன் நாட்டை சுற்றிப்பார்த்து வரும்போது ஒரு இடத்தில் மூன்று கால்களை இழந்து ஒற்றைக்காலில் நிற்கும் ஒரு காளையையும் அருகில் கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கும் பசுவையும் இவைகளின் அருகே சாட்டையுடன் ஒருவன் நின்று காளையை அடிப்பதையும் காண்கிறான்.

மூன்று காலை இழந்து நிற்கும் காளை தர்மதேவதை. கிருதயுகத்தில் தர்மதேவதையான இந்த காளைக்கு நான்கு கால்கள். திரேதாயுகத்தில் தர்மம் குறைந்ததால் ஒரு கால் குறைந்து கால்கள் மூன்றானது. துவாபரயுகத்தில் மற்றொரு காலை இழந்தது. கலியுகத்தில் கலிபுருஷனிடம் அதர்மம் கூடியிருந்ததால் இன்னொரு காலையும் இழந்து ஒற்றைக் காலில் நிற்கிறது தர்மதேவதை. அருகே நிற்கும் பசு தான் பூமாதேவி. கலிபுருஷனின் அதர்ம ஆதிக்கத்தைக் கண்டு கண்ணீர் விடுகிறாள் பூமித்தாய். தர்மதேவதையோ மனிதர்களைக் காப்பதற்காக உருவெடுத்து வந்துள்ளது. ஆனால் மனிதர்களோ தர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறார்கள். இதனால் காளையின் மூன்று கால்கள் இல்லாமல் போய்விட்டன. சாட்டையுடன் காளையின் அருகில் நின்று காளையை மிரட்டி அடித்துக் கொண்டிருப்பவன் தான் கலிபுருஷன். தர்மத்தையே மிரட்டும் வலிமை கொண்டு அதர்மத்தை ஆட்சிபுரிய அனுமதித்தவன் தான் இந்த கலிபுருஷன். பரீட்சித்து மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எதிரே நிற்பவன் கலிபுருஷன்.

கிருஷ்ணர் மறைந்தவுடன் நிலவுலகில் அதர்மத்தை நிலைநாட்ட கலிபுருசன் அடி எடுத்து வைத்துவிட்டான். உடனே தனது வாளை எடுத்து நான் இருக்கும் வரையில் தர்மம் அடிபடுவதை அனுமதிக்கமாட்டேன் என்று கூறி கலிபுருசனை வெட்ட தயாராகிறான் பரீட்சித்து. கலிபுருஷன் அஞ்சுகிறான். பாண்டவர் வம்சத்தில் வந்தவன் இந்த பரீட்சித்து அவனை வெற்றி பெற இயலாது. கலிபுருஷன் பரீட்சித்து மகாராஜாவிடம் சரணடைகிறான். சரணடைந்தவனைக் காப்பது முறை. எனவே கொல்லாமல் விடுகிறான் பரீட்சித்து. இந்த நிலவுலகில் ஏதாவது ஓர் இடத்தைக் காண்பியுங்கள் நான் அங்கே போய் பிழைத்துக் கொள்கிறேன் என்று கலிபுருஷன் பரீட்சித்துவிடம் கெஞ்சுகிறான். பரீட்சித்து மகராஜா கலிபுருசனுக்கு நான்கு இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்கிறார்.

  1. சூதாட்டம் ஆடும் இடம்
  2. மது அருந்தும் இடம்
  3. பெண்களை அவமரியாதை செய்யும் இடம்
  4. பிராணிகளை வதை செய்யும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் நான்கு இடங்களை கொடுக்கிறார்.

  1. தங்கம் இருக்கும் இடம்
  2. பொய் பேசப்படும் இடம்
  3. ஆணவம் செருக்கு இருக்கும் இடம்
  4. காமம் கோபம் இருக்கும் இடம்

கலிபுருஷனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. இந்த இடம் போதவில்லை என்று கூறி மேலும் சில இடங்கள் கேட்கிறான். பரீட்சித்து மகராஜா மேலும் இரண்டு இடங்களை கொடுக்கிறார்.

  1. பேராசை இருக்கும் இடம்
  2. பகைமை இருக்கும் இடம்

திருப்தி அடைந்த கலி நான் இருக்கும் இந்த 10 இடங்களில் உங்களுடைய மக்கள் யாரும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். யாரையும் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உத்திரவாதம் கொடுத்து உலகத்தில் கலியுகத்தை ஆரம்பிக்கின்றார் கலிபுருசன்.