ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் பெற்ற சகாதேவன்

காட்டில் இருந்த பாண்டு மன்னன் தன் உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் மாறாக பிய்த்து தின்று விடும்படியும் அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ணர் வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் உங்களுக்கு என்ன ஆனது யாராவது பிணத்தை தின்பார்களா வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார். மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் விறகு எடுக்க சென்றதும் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அது மற்ற‌வர்கள் கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார். அவரருகில் சென்ற சகாதேவன் கிருஷ்ணரிடம் எல்லோரும் விறகை சுமந்து வந்தீர்கள். சகோதரர்கள் நால்வரும் க‌ளைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்து தானே வந்தது. நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய் என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான். எதிர்காலம் தேவ ரகசியம் என்றும் இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம் சத்தியம் கிருஷ்ணர் வாங்கிக் கொள்கிறார். தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகி விட்டது.

துரியோதனன் பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க சகாதேவனும் நாளைக் குறித்துக் கொடுக்கிறான். அந்தளவிற்கு அவன் ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான். போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான் கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியவில்லையே என்று ஜோதிடத்தில் சற்று நம்பிக்கை இழக்கிறான். 18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படிகூறலாமா என்று கேட்கிறார். ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு என்று கேட்டார். இந்த பதிலைகேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் அனைத்தும் கடவுளின் பிடியில் மட்டுமே இருக்கும் என்பதை உணர்ந்தான். அடங்கியது அவன் கர்வம்.

பரமாத்மா

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறதென்றும், அரசனது அலுவலர் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா உங்கள் சோதனை என்று இகழ்ச்சியுடன் கேட்டான். பின்னர் அவன் தனது அலுவலர் அனைவரையும் அழைத்து துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர். அன்றிரவு அவ்வாறே ஒவ்வொருவரும் ஒரு குடம் பாலை அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. துணுக்குற்ற அரசன் அலுவலர் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது தான் ஒருவன் மட்டும் பால் ஊற்றினால் எப்படித் தெரியப் போகிறது என நினைத்து எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.

இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார்: கதையில் கண்ட அலுவலர்களைப் போலவே நாமும் நமது பங்கு வேலையைச் செய்து வருகிறோம். அதாவது எல்லா உயிர்களிலும் இறைவன் வசிக்கிறான் என்று கூறுகிறோம். ஆனால் அது கொள்கையளவில் இருக்கிறதே தவிர நடைமுறைக்கு வரவேயில்லை. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை அல்லது தனியுரிமை யாருக்குத் தெரியப் போகிறது என நினைக்கிறோம். நம்மிடமுள்ள இறைவன் எல்லோரிலும் இருக்கிறார். ஒவ்வோர் உயிரும் பரமாத்மாவின் கோவிலே. இதனை உணர்ந்து நம்முள் இருக்கும் சுயநலப்போக்கை தூக்கியெறிந்துவிட்டு எல்லா மக்களையும் சமமாகக் காணும் ஞானத்தைப் பெற முயலுங்கள் என அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

நம்பிக்கை

அர்ஜுனனும் கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது. கிருஷ்ணர் அதைப் பார்த்தார். அதை அர்ஜுனனுக்கும் காட்டினார். அர்ஜுனா அது புறா தானே என்று கேட்டார் கிருஷ்ணர். ஆமாம் கிருஷ்ணா அது புறா தான் என்றான் அர்ஜுனன். சில விநாடிகளுக்குப் பிறகு அர்ஜுனா எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது என்றார் கிருஷ்ணர். அடுத்த விநாடியே ஆமாம் ஆமாம் அது பருந்து தான் என்று சொன்னான் அர்ஜுனன். மேலும் சில விநாடிகள் கழித்து அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால் அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது என்று கிருஷ்ணர் சொல்ல கொஞ்சமும் தாமதிக்காமல் தாங்கள் சொல்வது சரிதான் அது கிளி தான் என பதிலளித்தான் அர்ஜுனன். இன்னும் கொஞ்சம் நேரமானதும் அர்ஜுனா முதலில் சொன்னது எல்லாம் தவறு. இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு காகம் என்று சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர். நிஜம் தான் கிருஷ்ணா அது காகமே தான் சந்தேகமே இல்லை பதிலளித்தான் அர்ஜுனன்.

அர்ஜுனா நான் சொல்வதை எல்லாம் நீயும் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே உனக்கென்று எதுவும் யோசிக்கத் தெரியாதா என்று கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார். கிருஷ்ணா என் கண்ணை விடவும் அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நீ ஒன்றைச் சொன்னால் அது பருந்தோ காகமோ புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது. அதனால் நீ என்ன சொல்கிறாயோ அப்படித் தானே அது இருக்க முடியும். தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும் என்று அமைதியாகச் சொன்னான் அர்ஜுனன். இந்த நம்பிக்கை தான் கிருஷ்ணரை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

என்னுடையது இல்லை

ஒரு அரசன் ஞானியிடம் சென்று என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றான். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை என்றான். அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு என்றார் ஞானி. எடுத்துக் கொள்ளுங்கள் என்றான் மன்னன். நீ என்ன செய்வாய் என்றார் ஞானி. நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன் என்றான் அரசன். எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு வழக்குகளை பார்க்கிறேன் என்றார். சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்து சிம்மாசனத்தில் அமர வைத்து நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும் என்ற ஞானி நீ இப்போது எப்படி இருக்கிறாய் என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன். முன்பு நீ செய்த பணிகளுக்கும் இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்? விழித்தான் அரசன். ஞானி சொன்னார். அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. இந்த உயிர் எனதல்ல. வேலை செய்வதற்காக இந்த உடல் எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய் என்று கூறி விடைபெற்றார் ஞானி.

கிருஷ்ணரால் உயிர்ப்பிக்கப்பட்ட பரீட்சித்

பாரதப் போர் முடிவுற்ற தருவாயில் துரோணரின் மகன் அஸ்வத்தாமன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்க முனைந்தான். யுத்த தருமம் மீறித் தன் தந்தையைக் கொன்றவர்களை அழிக்க முடிவு செய்து அசுவத்தாமன் பாண்டவர்களின் பாசறைக்கு இரவில் சென்று உறங்கிக் கொண்டிருந்த பாஞ்சாலன் திருஷ்டத்யும்னனைக் வெட்டிக் கொன்றான். அங்கே உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் மகன்களான உப-பாண்டவர்கள் ஐவரையும் பாண்டவர்கள் என நினைத்து கொன்றான். வெளியே சென்றிருந்த பாண்டவர்களும் கிருஷ்ணரும் கூடாரம் வந்தபோது நிகழ்ந்தவை கேள்விப்பட்டு அசுவத்தாமன் பின்னே வியாசரின் ஆசிரமம் சென்றனர். பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் தான் கொன்றது உபபாண்டவர்களைத் தான் என்றும் பாண்டவர்களை அல்ல என்றும் உணர்ந்து பாண்டவர்களை அழிக்க ஒரு புல்லை உருவி மந்திரம் ஜெபித்து அதை பிரம்மாஸ்திரமாகப் பயன் படுத்தினான். கிருஷ்ணனின் ஆலோசனைப்படி அர்ஜூனனும் பிரம்மாஸ்திரம் ஏவினான். இந்த இருவர்களின் அஸ்திரப் பிரயோகத்தால் ஏற்படும் அழிவை வியாசமுனி தடுத்து ஏவிய அஸ்திரங்களைத் திரும்பப் பெறக் கோருகிறார். திரும்பப் பெறும் வித்தை அறிந்த அர்ஜூனன் தன் அஸ்திரத்தை திரும்பப் பெறுகிறான். அதனைத் திரும்பப்பெறத் தெரியாத அசுவத்தாமனிடம் இலக்கை மாற்றச்சொல்ல அவன் அதை அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கருவின் மேல் ஏவுகிறான். உத்தரை கருவில் இறந்த குழந்தையைக் கரிக்கட்டை சாம்பலாக பிரசவித்தது கிருஷ்ணர் நீர் தெளித்து அந்த சாம்பலை உயிர்ப்பித்தார். அக்குழந்தைதான் பரீட்சித். கருவிலேயே பரீட்சிக்கப் பட்டதால் பரீட்சித் எனும் பெயர் வந்தது.