ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்கள். அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர் இதையெல்லாம் பார்த்துகொண்டு இருப்பார். இந்த வேதவிற்பன்னர்களைப் போல பேச முடியவில்லையே வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார். அவரது ஏக்கத்தைப் புரிந்து கொண்டார் ரமணர். ஒருநாள் தனக்கு அவர் பணிவிடை செய்து கொண்டிருந்த போது இன்று சவரம் செய்து கொண்டாயா? எனக் கேட்டார். அவர் ஏதும் புரியாமல் ஆமாம் சுவாமி என்றார். கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய் என்று திரும்பவும் கேட்டார் ரமணர். பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல் ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார். கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். நீ சவரம் செய்யும் வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது உதவுகிறது. அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா என்றார் ரமணர். முடியாது சுவாமி என்றார் பக்தர். அதேபோல் தான் வேதங்களும் உபநிஷதங்களும் சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல் காயப்படாமல் முக்தியடைய அவை உதவும் அவ்வளவு தான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும் இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும். அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார்.
உண்மையான அன்போடு இறைவனை வழிபடுதலும் இறைவனின் அங்கமான ஒவ்வரு உயிருக்கும் தொண்டு செய்வதே உண்மையான பக்தி உண்மையான இறைவழிபாடு. பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் மணிகளும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம். அன்பு இருந்தால் மட்டும் போதும்.
யுதிஷ்டிரன் தனது ஆட்சியில் மக்களை நல்வழியில் நடத்துவது தன் கடமை என உணர்ந்து செயல்பட்டான். அவன் ஆட்சியில் குறை ஏதும் தென்படவில்லை. நிறைவு எங்கும் நிலைத்திருந்தது. மக்கள் அனைவரும் யுதிஷ்டிரனை தங்கள் தந்தையாக கருதிவந்தனர். ஆட்சி புரிபவன் நான் என்ற எண்ணம் அரசனிடமும் இல்லை. ஆளப்பட்டு வருகின்றோம் என்ற எண்ணம் மக்களிடம் இல்லை. நாட்டில் உள்ள அனைவரும் பரந்த ஒரே குடும்பமாக அனைவரும் வாழ்ந்து வந்தார்கள்.
யுதிஷ்டிரன் தனது பெரியப்பாவாகிய திருதராஷ்டிரனுக்கு முழுமனதுடன் பணிவிடை செய்தான். திருதராஷ்டிரன் தனது மக்கள் அனைவரையும் இழந்துவிட்டான். துரியோதனனை ஆட்சில் அமர வைக்க வேண்டும் என்ற திருதராஷ்டிரனுடைய வாழ்வின் நோக்கம் நிறைவேறவில்லை. திருதராஷ்டிரன் நிலைமை இப்போது பரிதாபகரமாக இருந்தது. அத்தகைய நிலையில் திருதராஷ்டிரனுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுப்பது யுதிஷ்னிரனுடைய நோக்கமாக இருந்தது. துரியோதனன் திருதராஷ்டிரனுக்கு ஓயாத தொல்லை கொடுத்து வந்தான். அதற்கு நேர்மாறாக இப்பொழுது பாண்டுவின் புதல்வர்கள் யுதிஷ்டிரன் தலைமையில் சிறிதளவும் தர்மத்திலிருந்து பிசகாமல் நடந்து கொண்டார்கள். அதேவேளையில் நாட்டின் சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்து வருவது தான் அல்ல. திருதராஷ்டிரன் தான் என்பதை என் பெரியப்பாவிடம் யுதிஷ்டிரன் சொல்லிக்கொண்டே வந்தான். யுதிஷ்டிரன் படைத்திருந்த பரந்த மனப்பான்மையின் விளைவாக மன வேதனையில் இருந்து திருதராஷ்டிரன் விடுபட்டான். குந்தியும் திரௌபதியும் காந்தாரிக்கு பணிவிடை செய்து அவளுக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுத்தார்கள்.
யுதிஷ்டிரனுடைய நெறி பிறழாத ஆட்சி முறையிலும் பாதுகாப்பிலும் திருதராஷ்டிரன் 15 வருடகாலம் வாழ்ந்து வந்தான். சௌபாக்கியம் நிறைந்த அந்த நல்ல சூழ்நிலையில் வாழ்ந்து வந்ததன் விளைவாக துரியோதனன் சகுனி மற்றும் பலரின் நடுவில் பொல்லாங்கு மனதுடன் வாழ்ந்து வந்த திருதராஷ்டிரன் நல்ல மனதும் ஆழ்ந்த சிந்தனையும் உடைய மாறிவிட்டான். பீமனும் துரியோதனனும் ஜன்ம விரோதிகளாக முன்பு வாழ்ந்துவந்தனர். அதை முன்னிடு திருதராஷ்டிரன் பீமன் மீது கோபம் மிக படைத்திருந்தான். பீமன் எச்சரிக்கையாக நடந்து கொண்டதன் விளைவாக தற்போடு திருதராஷ்டிரனின் மனப்பான்மையை பீமன் அடியோடு மாற்றி விட்டான். திருதராஷ்டிரரின் மனதை திருத்தி அமைத்த சிறப்பு பாண்டவர்களுக்கு உரியதாக இருந்தது.
கீரிப்பிள்ளை நடந்த நிகழ்வு ஒன்றை கூற ஆரம்பித்தது. சிறிது காலத்திற்கு முன்பு பக்கத்தில் இருந்த நாடு ஒன்றில் பயங்கரமான பஞ்சம் உண்டானது. பட்டினி கிடந்து பலர் மாண்டு போயினர். உணவு போதவில்லை. அந்த ஊரில் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் அவருடைய மனைவி அவருடைய மகன் மருமகள் என நால்வர் வாழ்ந்து வந்தனர். பஞ்சத்தை முன்னிட்டு அந்த ஆசிரியர் தம்முடைய தர்மமாகிய கல்வி புகட்டும் செயலை நிறுத்தி விடவில்லை. ஆசிரியரின் குடும்பம் பட்டினியால் வாடுவது பற்றி அறிந்த மாணவன் ஒருவன் அந்த ஆசிரியருக்கு கொஞ்சம் கோதுமை மாவு கொடுத்தான். அதை கொண்டு நான்கு சப்பாத்திகள் செய்தனர். உணவை அவர்கள் அருந்த போகும் தருவாயில் பட்டினியுடன் ஒருவன் விருந்தாளியாக வந்து சேர்ந்தான். விருந்தாளிக்கு ஆசிரியர் தனது பங்கு சப்பாத்தியை கொடுத்து அதை ஏற்கும் படி வேண்டினார். அந்த சப்பாத்தியை சாப்பிட்டதன் விளைவாக அவனுக்கு பசி அதிகரித்தது. ஆசிரியரின் மனைவி தனக்குரிய பங்கு சப்பத்தியை வந்தவனுக்கு எடுத்து வழங்கினாள். அதன் விளைவாக விருந்தினருக்கு பசி மேலும் அதிகரித்தது. மகன் தனக்குரிய பங்கை வழங்கினான். விருந்தாளிக்கு மேலும் உணவு தேவைப்பட்டது. மருமகள் தனது உணவை விருந்தாளியின் இலையில் வைத்து அவனை வணங்கினாள். அதனையும் சாப்பிட்ட விருந்தாளி மிகவும் திருப்தி அடைந்தவனாக அனைவரையும் வாழ்த்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
தங்களது உணவை விருந்தாளிக்கு கொடுத்த ஆசிரியரின் குடும்பம் பசியில் சாகும் நிலையில் கிடந்தனர். அவர்கள் செய்த தியாகத்தை அறிந்த விண்ணுலகத்தவர்கள் வியந்தனர். தேவர்கள் ரதம் ஒன்றை மண்ணுலகிற்கு கொண்டு வந்து ஆசிரியர் குடும்பத்தார் உடலிலிருந்து அவர்களை விடுவித்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் சென்றனர். தேவலோகத்தில் அவர்கள் பசியில்லாமல் தாகமில்லாத மேல் நிலைக்கு சென்றனர்.
கீரிப்பிள்ளை தொடர்ந்து பேசியது. நான் என் வலையில் இருந்து வெளியே வந்து அவர்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப்பட்ட தரையின் மீது படுத்து உருண்டேன். தரையில் சிதறிக் கிடந்த கோதுமை மாவின் புனிதம் சிறிதளவு என் உடலின் ஒரு பகுதியில் ஒட்டியது. மாவு ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பொன்நிறமாக மாறியது. எனது உடலின் மீதி பகுதியையும் பொன்நிறமாக மாற்றுவதற்காக தானதர்மங்கள் செய்யும் யாகசாலை எங்கேனும் இருக்கிறதா என்று நான் தேடி பார்த்து ஒவ்வொரு இடமாக படுத்து உருண்டு கொண்டிருக்கின்றேன். எங்கும் எனது உடல் பொன்நிறமாக மாறவில்லை. யுதிஷ்டிரன் செய்த இந்த யாகம் நடந்த இடத்திலும் படுத்து உருண்டேன். இங்கும் எனது உடலின் மீதிப்பகுதி பொன்நிறமாக மாறவில்லை. ஆகவே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியரின் தானத்திற்கு நிகராக யுதிஷ்டிரனின் இந்த யாகம் இல்லை. இந்த யாகத்தை நீங்கள் அனைவரும் மிகவும் பெருமையாக பேசுகின்றீர்கள். ஆகவே நீங்கள் பொய் பேசுகின்றீர்கள் என்று கூறினேன் என்று தனது பேச்சை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது.
கீரியின் இக்கூற்றை கேட்ட பெருமக்கள் அனைவரும் திகைத்துப்போய் மௌனத்துடன் இருந்தனர். ஆசிரியர் செய்த தர்மம் ஆடம்பரமான எந்த வேள்விக்கு நிகராகாது என்பதை அனைவரும் அமைதியாக ஏற்றுக் கொண்டனர். எந்த சிறிய செயலானாலும் செய்யும் மனநிலை பொருத்தே அதன் சிறப்பு என்னும் கோட்பாடு இங்கு நிரூபிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுடைய அசுவமேத யாகத்திற்கு வந்திருந்த கிருஷ்ணன் சிறிது காலம் ஹஸ்தினாபுரத்தில் தங்கியிருந்தார். யுதிஷ்டிரனை சிம்மாசனத்தில் அமர்த்துவது கிருஷ்ணனின் முக்கியமான செயலில் ஒன்று. அந்த அரிய செயலும் இப்பொழுது நிறைவேறியது. எனவே கிருஷ்ணனை பாண்டவர்கள் அரைமனதோடு துவாரகைக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.
அசுவமேத பருவம் முற்றியது. அடுத்து அசிரமவாசிக பருவம்.
காசில்லா பக்தனுக்கு தூரத்திலும் காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா இது என்ன நியாயம் என்று ஒருவன் இறைவனிடம் கேள்வி கேட்டான்.
கலகலவென சிரித்தார் இறைவன். தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை. தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை. ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை. எனக்கான இடத்தை எனக்கான நேரத்தை எனக்கான விழாக்களை என்னை வணங்கும் முறையை எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள். இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேள்வி கேட்பது என்ன நியாயம் என்றார் இறைவன்.
அரச சிம்மாசனத்தில் அமர்ந்த யுதிஷ்டிரன் ராஜ தர்மங்களில் தன் மனதைச் செலுத்தினான். ஆட்சி முறையின் ஒரு பகுதியாக அஸ்வமேத யாகம் நிகழ்த்துவது அவசியமாக இருந்தது. வியாசர் அவன் முன்னிலையில் தோன்றி அதன் அவசியத்தை அவனுக்கு எடுத்து விளக்கினார். பல அரசர்கள் தேடி வைத்திருந்த செல்வத்தில் பயன்படாமல் இருந்ததை சிற்றரசர்களிடமிருந்து சேகரிக்க வேண்டியது இந்த யாகத்தின் ஒரு பகுதி ஆகும். சிற்றரசர்களிடமிருந்து செல்வத்தையும் யாகத்திற்கு தேவையான திரவியங்களை சேகரிக்கும் பணிக்கு அர்ஜுனன் நியமிக்கப்பட்டான். யுதிஷ்டிரன் செய்யும் அந்த யாகத்திற்கு அறிகுறியாக அவன் குதிரை ஒன்றை அக்கம் பக்கங்களில் இருந்த நாடுகளுக்கு அர்ஜுனன் ஓட்டிச் சென்றான். யாகம் செய்ய தடை கூறுபவர்கள் தங்கள் நாட்டிற்குள் குதிரையின் நடமாட்டத்திற்கு ஆட்சேபனே கூறலாம். அவர்களை வெல்லுவது அர்ஜுனனின் கடமையாக இருந்தது. ஆனால் அத்தகைய தடை யாரும் கூறவில்லை. அனைத்து அரசர்களும் தங்கள் தேவைக்கு மேலிருந்த செல்வத்தை அளித்தனர். யாகத்திற்கு தேவையான திரவியங்களையும் ஏனைய பொருட்களையும் அவன் பெரிதும் இமாசலப் பிரதேசத்திலிருந்து சேகரித்துக்கொண்டான்.
அஸ்வமேதயாகம் அரங்கில் சிறப்பாக நிகழ்ந்தது சிற்றரசர்களும் நாடாளும் மன்னர்கள் பலரும் அழைக்கப்பட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்த அரசர்களும் நெடுந்தூரத்துக்கு அப்பால் இருந்த அரசர்களும் அந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள். சாஸ்திரங்களில் உள்ளபடியே நடைமுறைகள் அனைத்தும் ஒழுங்காக நிகழ்ந்தது. ஏழை எளியவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. சமுதாய முன்னேற்றத்திற்கு என புதிய திட்டங்களுக்கு தேவையான செல்வம் வழங்கப்பட்டது. பயன்படாமல் இருந்த செல்வங்களை எடுத்து நல்வழியில் பயன்படுத்துவது இந்த யாகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சான்றோர்கள் வகுத்து வைத்திருந்த முறைப்படி யாகம் நிறைவேறியது. இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். யுதிஷ்டிரன் செய்த அஸ்வமேயாகம் ஒப்புயர்வு அற்றது என்று அனைவரும் கூறினர்.
அப்பொழுது யாகசாலையில் கீரிப்பிள்ளை ஒன்று வந்து சேர்ந்தது. அதனுடைய மேல்பகுதி சாம்பல் நிறமாகவும் மற்ற பகுதிகள் பொன் நிறமாகவும் இருந்தது. இந்த அதிசயத்தை பார்த்து அனைவரின் கவனமும் அதன்மேல் சென்றது. கீரிப்பிள்ளை தரையில் படுத்து புரண்டது. பிறகு எழுந்து நின்று அங்கு கூடியிருந்த அனைவரிடமும் நீங்கள் அனைவரும் அறிந்தோ அறியாமலோ யாகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று பொய் பேசினீர்கள் என்று அது குற்றம் சாட்டியது. தாங்கள் அறிந்து பொய் ஏதும் சொல்லவில்லை என்று அனைவரும் தெரிவித்தார்கள். மேலும் கீரிப்பிள்ளை சாட்டிய குற்றச்சாட்டை தெளிவு படுத்தும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
தேவி உபாசகர் ஒருவர் செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பம் இட்டிருந்தார். ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை. ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்தார். அப்போது கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து உங்களுக்கு பணம் தானே வேண்டும் கூச்சல் போடாதீர்கள் சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன் என்று மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தாள். சிறிது நேரத்தில் சிறு பையுடன் வந்தாள் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே இதோ பாருங்கள். இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான வட்டியும் உள்ளன. பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டாள். செல்வந்தரும் பத்திரத்துடன் வீட்டுதிண்ணையில் அமர்ந்து கொண்டார்.
சிறிது நேரத்தில் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்புடன் உங்களை கவனிக்க வில்லை மன்னியுங்கள் என்று பிரசாத தட்டை நீட்டினார். செல்வந்தர் முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் என்றார். அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஆச்சரியம். நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே என்று பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர். உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு பத்திரத்தை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்றார். ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் மனைவியை அழைத்து நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே உண்மையா என்று கேட்டார். அந்த அம்மையாரோ திகைப்புடன் நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன். இது எப்படி சாத்தியம்? என்றார். அப்போது பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி குரல் கேட்டது நான் தான் பணம் கொடுத்தேன். குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைந்தனர். அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு யாரும் இல்லை.
இப்போது அனைத்தும் புரிந்தது தேவி உபாசகருக்கு. கடனை அடைக்க தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி. உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் மன்னியுங்கள் என்று செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார். அந்த தேவி உபாசகர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர். அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது. தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர். இவர் தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.
காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும் குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் பற்றி திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர் தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார். பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும் மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர் வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து அந்தந்த யோகினிகளுக்கான பெயர் மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது வைதீகர்கள் தமது தலைவரான யோகி குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று கேட்டார்கள். அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்ல. நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுனார். யோகி வைதீகர்ளுக்கு அந்தக் காட்சியை காண விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றனர்.
ஆதிசங்கரர் பல ஊர்களுக்கு சென்று ஆங்காங்கே இருந்த கோவில்களில் இறைவனை தரிசித்து போற்றியவாறு கைலாயத்தை அடைகிறார். அங்கு ஈசன் உமையவள் தரிசனமும் கிடைக்கிறது. அப்போது ஈசன் 5 ஸ்படிக லிங்கங்களை ஆதிசங்கரருக்கு வழங்குகிறார். பஞ்சலிங்கங்கள் அனைத்துக்கும் சந்திரமெளலி என்று பெயர். அப்போது அன்னையவள் ஒரு சுவடுக் கட்டினைத் தன் சார்பாகத் தருகிறார். சுவடியில் இருந்தது தேவி குறித்த மந்திர சாஸ்திரங்கள். இவற்றைப் பெற்றுக் கொண்ட சங்கரர் கைலாயத்தை விட்டு வெளிவருகிறார். வெளியில் இருந்த அதிகார நந்தி ஆதிசங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டைப் பார்த்த உடன் கையிலையின் மிகப்பெரிய புதையலான மந்திர சாஸ்திரம் கையிலையை விட்டுப் போகிறதே என்று எண்ணி ஆதிசங்கரர் கையில் இருந்த சுவடிக்கட்டை பிடித்து இழுக்கிறார். ஆனால் ஆதிசங்கரர் இதனை கவனிக்காமல் நகர்ந்து விடுகிறார். நந்திகேஸ்வரன் இழுத்ததால் சில சுவடிகள் மட்டுமே ஆதிசங்கரர் கையில் மீந்துவிட மற்றதெல்லாம் கைலாய வாயிலில் விழுந்து விடுகிறது. இந்த நிகழ்ச்சி மார்க்கண்டேய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆதிசங்கரரிடம் கிடைத்த சுவடிகளில் உள்ள ஸ்லோகங்கள் எண்ணிக்கை முதல் 41. இதனை உணர்ந்த தேவி ஆதிசங்கரர் முன் பிரத்யஷமாகி மீதமுள்ள 59 ஸ்லோகங்களையும் புதிதாக இயற்ற ஆதிசங்கரரைப் பணிக்கிறார். உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல அவர் 59 ஸ்லோகங்களில் அன்னையின் ரூப லாவண்யத்தைப் பாடுகிறார். இவ்வாறாக பாடப்பட்ட 59 ஸ்லோகங்கள் சௌந்தர்ய லஹரி என்றும் கையிலையில் அன்னை தந்த சுவடியில் மிஞ்சிய 41 ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி என்றும் பெயர் பெற்றது. ஆனாலும் மொத்தமாக செளந்தர்யலஹரி என்பது 41+59 சேர்ந்த 100 ஸ்லோகங்களே. முதல் 41 ஸ்லோகங்களில் மந்திர சாஸ்திரங்களும் குண்டலினி பற்றியும் ஸ்ரீவித்யா வழிபாட்டுத் தத்துவங்களும் விளக்கப்பட்டுள்ளது. இதில் முதல் 41 ஸ்துதிகள் யோக முறையில் சாதகம் செய்து அன்னையின் பாதத்தை சரணடைந்தால் மட்டுமே கிடைக்கப் பெறுவது ஆனந்தம் எனவே ஆனந்த பிரவாஹம் என்று பெயர் பெற்றது. இந்த 41 ஸ்லோகங்கள் யோக முறையில் சாதகம் செய்பவர்களுக்காகவும் பின் வந்த 59 ஸ்லோகங்கள் பக்தி மார்கத்தில் உள்ளவர்களுக்கு பயன் தரும் வகையிலும் உள்ளது.
செளந்தர்ய லஹரி என்ற பெயர் ஏன்?.
செளந்தர்யம் என்றால் அழகு. லஹரி என்றால் பிரவாஹம் அல்லது அலை என்றும் பொருள். உலகில் உள்ள அத்தனை அழகுகளும் எங்கிருந்து பிறந்ததோ அந்த பரம சக்தி உமையவள் உருவினை தலையிலிருந்து கால்வரை அங்கம் அங்கமாக வர்ணிக்கும் ஸ்துதி ஆகையால் செளந்தர்யலஹரி என்ற பெயர் பெற்றது.
பீஷ்மர் தானறிந்த ஞானம் அனைத்தையும் அழிந்து போகாதவாறு யுதிஷ்டிரனிடம் கூறினார். பீஷ்மர் தான் அறிந்த அரிய ஞானத்தை யுதிஷ்டிரன் வாயிலாக உலகிற்கு எடுத்து வழங்கினார். யுதிஷ்டிரருக்கும் திருதராஷ்டிரருக்கும் பீஷ்மர் ஆறுதல் அளித்தார். மகாபாரத யுத்தம் முற்றுப் பெறும் வகையில் பீஷ்மர் ஆத்மா நிட்டையில் அமர்ந்த அவர் நிமிர்ந்திருந்த தியானத்தில் அமர்ந்தார். அவருடைய மேனியிலிருந்து அம்புகள் தானாக உதிர்ந்தது. இவ்வுலகை விட்டு வெளியேற பீஷ்மர் கிருஷ்ணனுடைய அனுக்கிரகத்தை நாடினார். கிருஷ்ணரும் அவரை ஆசிர்வதித்தார். பீஷ்மர் வடிவத்திலிருந்து ஆன்மா விண்ணுலகை நோக்கி மேலே சென்றது. அப்பொழுது விண்ணுலகிலிருந்து பூமாரி பொழிந்தது. அங்கு கிளம்பிய இசை மண்ணுலகுக்கு எட்டியது. குரு வம்ச தலைவர் பீஷ்மரை எண்ணி திருதராஷ்டிரரும் பாண்டவ சகோதரர்களும் கண்ணீர் சிந்தினர். அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து யுதிஷ்டிரன் வருந்தினான். அப்போது யுதிஷ்டிரரிடம் வியாசர் வருந்தாதே ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும் துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள் என்று ஆறுதல் சொன்னார். பின்பு தக்க முறையில் அவருடைய தேகத்தை தகனம் செய்தார்கள்.
பீஷமருடைய சாம்பலை அவர்கள் கங்கையில் கரைக்க கங்கைக்கு கொண்டு சென்றனர். கங்காதேவி மானிட வடிவெடுத்து வந்து அந்த சாம்பலை ஏற்றுக் கொண்டாள். அப்போது அவளுடைய முகத்தில் துயரம் தென்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு சொர்க்கத்தில் உள்ள அஷ்ட வசுக்களில் ஒருவனை சந்தனுவுக்காக மகனாக பெற்றேன். இவன் தலை சிறந்த தரமான பயிற்சிகள் பல பெற்று நிறை ஞானத்தை பெற்றான். யாராலும் தோற்கடிக்க முடியாத வல்லமையை பெற்றான். மானிடர்கள் எவராலும் சாதிக்க முடியாத அரும்பெரும் செயல்கள் சாதிப்பான் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் இவனோ தன் வாழ்க்கையை எளிமையாக முடிவுக்குக் கொண்டு வந்து விட்டான் என்று வருத்தத்துடன் கூறினாள்.
கிருஷ்ணன் கங்கையிடம் தாயே உன்னுடைய தமையன் தேவவிரதன் செயற்கரிய செயலை செய்து பீஷ்மர் என்னும் பெயர் பெற்றார். அவருடைய மண்ணுலக வாழ்வு ஒப்பு உயர்வு அற்றது. தர்மத்திற்கு விளக்கமாக அவர் திகழ்ந்தார். தீயவர்களை அழிக்க பரம்பொருளின் கையில் கருவியாக அமைந்திருந்தார். அம்முறையில் அவருடைய தியாகம் உச்சநிலையை அடைந்தது. அதன் பிறகு தன்னுடைய சந்ததிகளில் பொருத்தமான யுதிஷ்டிரரிடம் தம்முடைய ஞான பொக்கிஷத்தை அவர் ஒப்படைத்துள்ளார். யாவற்றுக்கும் மேலாக தர்மமே வடிவெடுத்துள்ள யுதிஷ்டிரனை அவர் சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்துள்ளார். இவருக்கு நிகரான மூர்த்தி மண்ணுலகிலும் விண்ணுலகிலும் இல்லை என்று கிருஷ்ணர் கங்கா தேவியிடம் கூறினார். தன் வீரச்செல்வனை பற்றிய இந்த விமர்சனத்தை கேள்விப்பட்ட கங்காதேவியும் மகிழ்வடைந்தாள். தன் செல்வனை பெருமை பாராட்டி அங்கிருந்து கிளம்பினாள்.
அனுசாஸன பருவம் முற்றியது. அடுத்து அஸ்வமேதிக பருவம்.
கிருஷ்ணர் பீஷ்ரிடம் தர்மத்திற்கு உரிய பாங்குகள் அனைத்தையும் தாங்கள் யுதிஷ்டிரனுக்கு எடுத்து புகட்ட வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டுகிறேன் என்றார். அதற்கு பீஷ்மர் தர்மத்தை எடுத்து புகட்டுவதற்கு உங்களைவிட மிக்கவர் யாரும் இல்லை. தாங்கள் முன்னிலையில் வைத்து இந்த விஷயத்தை நான் எப்படி எடுத்து விளக்குவது? மேலும் என் ஞாபக சக்தியும் மங்கி வருகிறது. உடலில் வேதனையும் அதிகரித்து வருகிறது. இந்த உடலை நான் ஒதுக்கித்தள்ள நான் ஆயத்தமாக இருக்கிறேன் என்றார். அதற்கு கிருஷ்ணர் உங்கள் ஞாபக சக்தியை நான் மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். உங்கள் உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட நிலையில் நீங்கள் எப்பொழுதும் இருந்து வருகின்றீர்கள். உங்கள் உடல் வலிமையான ஆற்றலை நெறி பிறழ்ந்து போன ஒரு பேரனுக்கு கொடுத்தீர்கள். உடல் வலிமை ஆற்றலை விட மிகவும் பெரியது அறிவு. தங்களிடம் உள்ள அறிவு தங்களோடு மறைந்து போக கூடாது. அப்படி போனால் நீங்கள் இவ்வுலகிற்கு வந்துள்ள நோக்கமும் நிறைவேறாமல் போகும். ஆகையால் அந்த அறிவை இந்த தகுதி வாய்ந்த மற்றொரு பேரன் யுதிஷ்டிரனுக்கு கொடுத்து உதவுங்கள். அதன் மூலம் இந்த அறிவு இந்த உலகிற்கு சொந்தமாகும். இந்த அறிவு ஞானத்தை கொடுப்பதின் வாயிலாக தாங்களின் பெயர் நிலவுலகில் எப்பொழுதும் நிலைத்திருக்கும். தாங்கள் வழங்குகின்ற ஞானம் நான்கு வேதங்களுக்கு நிகராகும் என்றார் கிருஷ்ணர்.
பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு தர்மத்தை கூற சம்மதம் தெரிவித்தார். யுதிஷ்டிரன் கேட்ட கேள்விகளும் அதற்கு பீஷ்மர் கொடுத்த பதில்களும் சாந்தி பருவம் என்று பெயர் பெறுகின்றது. இவை அனைத்தையும் கற்று உணர்வதற்கு மனிதனுக்கு ஒரு ஆயுள் போதாது அவற்றுள் சில மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஊழ்வினை மிகவும் வலியது முயற்சியால் அதை ஓரளவு மாற்றலாம்.
பரம்பொருளுக்கு நிகரானது சத்தியம். சத்தியத்தை கடைபிடிப்பவன் வாழ்க்கையில் தோல்வி அடைய மாட்டான்.
வாழ்வில் வெற்றியடைய விரும்புகின்றவன் தன்னடக்கம், பணிவு, தர்மம், ஆகியவற்றை கடைபிடித்தல் வேண்டும்.
மானுடன் ஒருவன் மிகவும் கோழை மனம் படைத்தவனாகவோ கல் நெஞ்சம் படைத்தவனாகவோ இருக்க கூடாது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னுடைய பாங்குகளை அவன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தளர்வுற்று சோம்பலுடன் இருப்பது ஒழுக்கமாகது. அதிலிருந்து கேடுகள் பல உருவாகின்றன.
சோம்பலுடன் இருப்பது துருப்பிடித்து போவதற்கே நிகராகும். உழைப்பின் வாயிலாக உலக வாழ்வு ஓங்குகிறது.
இரக்கமும் கண்டிப்பும் ஒன்றையொன்று சார்ந்திருத்தல் வேண்டும்.
ஒழுக்கமின்மைக்கு இடம் கொடுப்பது மனிதனை வீழ்ச்சியில் கொண்டு சேர்க்கும்.
மனிதனுக்குள் உண்டாகும் வெறுப்பு விஷமாக மாறிவிடுகின்றது.
அன்பு வல்லமை மிகவாய்க்கப் பெற்றது. அன்பு மனிதனை அக்கத்துறையில் எடுத்துச் செல்கின்றது. வீழ்ந்து கிடப்பவனை மீட்டெடுக்கும் வல்லமை வாய்ந்தது அன்பு
யுதிஷ்டிரனுக்கு புகட்டப்பட்ட இந்த கோட்பாடுகள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை. இவைகளை மக்கள் கடைபிடிப்பதற்கு ஏற்ப மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். யுதிஷ்டிரனுக்கு பீஷ்மர் புகட்டிய தர்ம சாஸ்திரத்தில் பெரும்பகுதி மோட்ச தர்மத்தை பற்றியதாகும்.
விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பலவிஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்கமுடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்கு கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார். இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் இறைவனைப் பற்றிய ஆன்மிக விஷயங்களை பேசினார். விடைபெறும் நேரத்தில் வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார். இவ்வளவு நேரம் இறைவனைப் பற்றி நல்ல விஷயங்களை பேசியதற்கு கிடைத்த புண்ணிய பலனை உமக்கு அளிக்கிறேன் என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது.
நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனும் இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்று தானே யோசிக்கிறீர்கள் என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார். எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர். இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள் என்றார் பிரம்மா. அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும் என்றார் விஷ்ணு. கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தர வேண்டினர். சிவனும் உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாளலோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள் என்றார்.
விஸ்வாமித்திரரும் வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை ஆதிசேஷனிடம் எடுத்துக்கூறினர். இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும். அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள். தலையில் சுமக்க கடினமாக இருக்கும். எனவே ஆகாயத்தில் இதை நிலைநிறுத்தி வையுங்கள் என்றார் ஆதிசேஷன். உடனே விஸ்வாமித்திரர் நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன். அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும் என்றார். ஆனால் பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்று கொண்டிருந்தது. வசிஷ்டர் தன் பங்குக்கு அரைமணி நேரம் இறைவனைப் பற்றிய நல்ல விஷயங்கள் பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன். இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும் என்றார்.
இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து தன் தலையில் மீண்டும் வைத்துக் கொண்டு நல்லது நீங்கள் இருவரும் வந்த வேலைமுடிந்து விட்டது போய் வரலாம் என்றார். கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லாமல் வழியனுப்பினால் எப்படி என்றனர் ரிஷிகள் இருவரும். உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி அரைமணி நேர இறைவனைப் பற்றிய நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது என்றார் ஆதிஷேசன். இறைவனை உணர்ந்த பெரியவர்களுடன் இறைவனைப் பற்றிய உரையாடல் புண்ணியமே தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விடசிறந்தது என்றார் ஆதிசேஷன்.