மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -5

பீமன் கொடுத்த ஒரு பயங்கரமான அடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு துரியோதனன் மேல் நோக்கி லாவகமாக குதித்தான். அவன் கால் கீழே படுவதற்குள் அவனுடைய இரண்டு தொடைகளையும் கதையால் ஓங்கி அடித்தான் பீமன். துரியோதனனின் இரண்டு தொடைகளும் உடைந்து அழிந்தன. துரியோதனன் நிற்க இயலாமல் கீழே வீழுந்தான்.

இடுப்புக்குக் கீழ் அடிப்பது பிழை. அது போர் நெறி ஆகாது. எந்த போர் வீரனும் இந்த அடாத செயலை ஆமோதிக்க மாட்டான். இது பீமனுக்கும் தெரியும். ஆனால் துரியோதனனின் கோபத்தை கிளப்புதல் பொருட்டே வேண்டுமென்றே பீமன் தொடையில் அடித்தான். அதன் பிறகு பீமன் துள்ளி குதித்தான் இக்காட்சியைப் பார்த்த துரியோதனன் ஆத்திரமும் சினமும் கொண்டான். பீமா இதுவா போர் முறை இதுவா சத்திரிய தர்மம் என்றான்.

துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் துரியோதனா நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய் அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா. கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே அது தர்மமா. அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே அது தர்மமா. திரோபதியை சபையில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மானபங்கம் செய்தாயே அது தர்மமா. எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே அது தர்மமா. பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய். நீ செய்த செயல்களின் வழியாக குரு வம்சத்திற்கு பேரழிவைக் கொண்டு வந்த பொல்லாத பாவி நீ. இந்த நெருக்கடியில் உன்னுடைய தொடைகளை நொறுக்கி தள்ளுவேன் என்று நான் சபதம் ஏற்று இருக்கிறேன். அதே வேளையில் உன் தலையின் மீது என் காலை வைப்பேன் என்று சபதம் ஏற்றேன். அதனை இப்போது நிறைவேற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு தரையில் கிடந்த துரியோதனனை காலால் உதைத்து காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்.

பீமனின் இச்செயலை யுதிஷ்டிரர் விரும்பவில்லை. வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் இல்லை என பீமனைக் கண்டித்தார். பீமன் செய்த இச்செயலுக்காக துரியோதனிடம் யுதிஷ்டிரர் மன்னிப்பு கேட்டார். நடந்த இந்த துர்பாக்கியங்கள் அனைத்தும் துரியோதனன் தனக்குத்தானே தேடிக் கொண்டவைகள் என்று அவனுக்கு விளக்கிக் காட்டினார். அதற்கு துரியோதனன் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆண்ட வீரமும் க்ஷத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதத்துடன் உயிர் துறந்து நண்பர்களுடன் சொர்கத்தில் இருப்பேன் என்றான். படுகாயம் அடைந்த துரியோதனன் மரணத்தின் வாயிலில் நிற்கவோ நடக்கவோ முடியாத சூழ்நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தான். இதற்கு மேல் அவனை தாக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர் பாண்டவர்கள். தானாக இறந்து விடுவான் என்று கருதி அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால் அவன் உயிர் பிரியவில்லை. துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை. பாண்டவர்கள் மீது இருத்த வஞ்சம் அவனை இன்னும் சாக விடாமல் உயிருக்கு உரமாகி கொண்டே இருந்தது.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -4

யுதிஷ்டிரன் யுத்தத்திற்கு அழைத்ததும் துரியோதனன் பேசினான் என்னுடைய நண்பர்கள் அனைவரும் எனக்காக உயிரை கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் பட்டிருக்கும் கடனை நான் உங்கள் அனைவரையும் அழித்து அதன் வாயிலாக அவர்களுக்கு என் கடனை திருப்பி செலுத்துவேன். ஆனால் இப்பொழுது என்னிடம் ஆயுதம் ஏதுமில்லை. கவசம் எதுவும் இல்லை. ரதம் இல்லை. நீங்கள் அனைவரும் அறநெறி பிறழாத போர்வீரர்கள். ஆயுதம் இல்லாமல் இருக்கின்ற என்னை நீங்கள் தாக்குதல் பொருந்தாது என்றான். அதற்கு யுதிஷ்டிரர் அறநெறி இல்லாத முறையை கையாண்டு சிறுவனாகிய அபிமன்யுவை ஆயுதம் அற்றவனாக நீங்கள் செய்து வைத்தீர்கள். நிராயுதபாணியாக இருந்த பொழுது அவனை மகாவீரர்கள் ஒன்று கூடி அவனை கொன்றீர்கள். உன்னை அணுஅணுவாக சித்ரவதை செய்து கொன்றாலும் தகும். ஆனால் இது போன்று நாங்கள் செய்ய மாட்டோம். உனக்கு தேவையான ஆயுதங்கள் நாங்கள் தருகின்றோம். நாங்கள் அனைவரும் தனித்தனியாக உன்னுடன் யுத்தம் செய்கின்றோம். எங்களில் யாரேனும் ஒருவரை நீ கொன்றால் மற்றைய நான்கு பேரும் வனவாசத்தை நோக்கி செல்கின்றோம். அப்போது எதிரி இல்லாத சாம்ராஜ்யத்தை ஏற்று அனுபவிப்பாயாக என்று கூறினார்.

பீமன் இடையில் துரியோதனனிடம் பேசினான். உன்னுடைய சகோதரர்கள் அனைவரையும் நான் அழித்து விட்டேன். அதற்கெல்லாம் மேலாக உன்னையும் கொல்ல வேண்டும் என்று நான் உறுதி கொண்டிருக்கின்றேன். ஆகையால் தயவு செய்து என்னுடன் போர் புரிய வா என்றான். அதற்கு துரியோதனன் உன்னுடன் கதை யுத்தம் செய்ய வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக என்னிடம் இருக்கிறது. இப்போது கதை ஆயுதம் ஒன்று தான் என்னிடம் இருக்கிறது. உன்னிடத்தில் க்ஷத்திரனுக்குரிய பாங்கு இருக்குமாகில் நீ அணிந்திருக்கும் கவசங்களையும் ஏனைய ஆயுதங்களையும் புறக்கணித்துவிட்டு தரையில் நின்று என்னுடன் நீ சண்டை புரிவாயாக. ஏனென்றால் இப்பொழுது என்னிடத்தில் ரதம் ஏதும் இல்லை என்றான். இந்த நிபந்தனைக்கு இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவரும் குருஷேத்திரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள். யுத்தம் துவங்கியது.

யுத்த நியதிகளை இருவரும் கடைபிடித்தனர். அவரவர் திறமைகளை இருவரும் நன்கு வெளிப்படுத்தினர். பார்ப்பதற்கு ஒருவருக்கொருவர் பொருத்தமான எதிரியாகவே தென்பட்டார்கள். திறமையை காட்ட துவங்கிய சிறிது நேரத்தில் சண்டை உயிரை வாங்கும் விதமாக வடிவெடுத்தது. அத்தகைய சண்டையிலும் போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை. பீமன் வல்லமை வாய்ந்தவன். துரியோதனன் திறமைசாலி. இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது. கிருஷ்ணர் யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால் தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து அவன் தொடையைப் பிளக்க வேண்டும் என அர்ஜூனனிடம் குறிப்பால் தெரிவிக்க அர்ஜூனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையை தட்டிக்காட்டினான்.

நம்பிக்கை

ஒரு பக்தன் ஒருவன் நெடுங்காலமாக சிவனை வேண்டிக் கொண்டிருந்தான். காலங்கள் கடந்தும் சிவனின் தரிசனம் கிட்டவில்லை. அவனது வேண்டுதல்களும் ஏதும் நிறைவேறவில்லை. கோபம் கொண்ட அவன் சைவத்தில் இருந்து வைணவத்திற்கு மாறி விஷ்ணுவை வழிபட ஆரம்பித்தான். சிவன் சிலையை தூக்கி பரண் மேல் வைத்து விட்டு புதிய விஷ்ணு சிலையை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்து சாம்பிராணி ஊதுவத்தி ஏற்றினான். நறுமணம் அறை முழுவதும் பரவியது. நறுமணத்தை உணர்ந்த அவன் சிவன் அந்த நறுமணத்தை நுகரலாகாது என எண்ணி பரண் மீது ஏறி சிவன் சிலையின் மூக்கை துணியால் கட்டினான்.

துணியை கட்டிய அடுத்த நொடி சிவன் அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்து போன அவன் சிவனிடம் கேட்டான். இத்தனை நாட்கள் உன்னை பூஜித்த போது காட்சியளிக்காத நீ இப்பொழுது காட்சி தருவது ஏன் என கேட்டான். பக்தா இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்று தான் இந்த சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ உணர்ந்த அந்த நொடி நான் உன் கண் முன் வந்து விட்டேன் என இறைவன் பதிலளித்தார்.

பசுபதீஸ்வரர்

மூலவர் பசுபதீஸ்வரர். அம்மாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் கொன்றை. புராண பெயர் திருஆமூர் கடலூர் மாவட்டம். பழமையான ஆலயம் தேவாரப் பாடல் பாடிய அப்பர் என்ற அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அவதரித்த தலம். இத்தலத்தின் சிறப்பை சேக்கிழார் பெரிய புராணத்தில் சிறப்பித்து கூறுகின்றார். சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் நின்ற திருக்கோலத்துடன் அருள்பாலிக்கிறார். அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப் பட்டிருக்கிறது. தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது. அப்பரின் குருபூஜை சித்திரை சதய நட்சத்திரத்திலும் அப்பரின் ஜெயந்தி நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு புளிப்பு துவர்ப்பு கசப்பு உவர்ப்பு கார்ப்பு என்ற அறு சுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கிபி 7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.

திருவாமூர் என்ற இந்த தலத்தில் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார். தாயார் மாதினியார். சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக் கொண்டார். திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான  சைவ சமயத்திற்கு மீட்டுத்  தரவேண்டும் என சிவபெருமானிடம்  வேண்டிக் கொண்டார். இதையடுத்து திருநாவுக்கரசரை சூலை நோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர் சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கிபி 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

தனித் தேவாரத்திருப்பதிகம் இக்கோயிலுக்கு இல்லை என்றாலும் அப்பர் சுவாமிகள் பாடியருளிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து இறைவரைக் குறித்தே அருளிச் செய்யப் பெற்றதாகும். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். 3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம் 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.

சதிதாண்டவமூர்த்தி

சிவபெருமான் தட்சனின் மகள் சதிதேவிதை திருமணம் செய்ததைக் கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும் சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த தன்மகள் சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தார். இதனால் சதி தேவியார் யாகத்தை அழிக்க யாககுண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்கச் சிவபெருமான் தன் ஜடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார். மேலும் வீரபத்திரன் மிகுந்த கோபம் கொண்டு பிரஜாபதி தட்சன் தலையைக் கொய்து பிரஜாபதி தட்சனின் யாகக் குண்டத்திலியே போட்டார். பின் தேவர்களின் மீது கோபம் கொண்டு அவரவர்க்கு உரிய தண்டனை தந்தார். ஈசன் தன் கருணையால் பிரஜாபதி தட்சன் தலைக்குப் பதில் அங்குள்ள ஒரு ஆட்டின் தலையை பொருத்தினார். பின் சதி தேவியின் உடலைச் சுமந்து பிரபஞ்சம் முழுதும் கோபத்துடன் சுற்றி திரிந்தார். அப்போது அவர் ஆடிய ருத்ரதாண்டவமே சதிதாண்டவமூர்த்தி எனப்படுகிறது. இதனைக் கண்ட மகாவிஷ்ணு தன் சுதர்சனத்தால் அன்னையின் உடலைப் பிரித்துச் சக்தி பீடங்களாக மாற்றினார்.

இந்த அரிய சோழர்கால சிற்பம் தற்போது கேரள மாநிலம் நேப்பியர் அருங்காட்சியகத்தில் உள்ளது.

கிரிஸ்னேஸ்வரர் கோவில் ஔரங்கபாத்

மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் திருத்தி அமைக்கப்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அகில்யபாய் ஹோல்கர் கோவில் திருத்த வேலைகளைச் செய்வித்தார்.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -3

பாண்டவர்களில் சகாதேவன் சகுனியை கொல்வேன் என்ற தன் சபதத்தை நிறைவேற்றினான். பீமன் 100 கௌரவர்களையும் அழிப்பேன் என்ற சபதத்தில் துரியோதனை தவிர்த்து அனைவரையும் அழித்துவிட்டான். துரியோதனனையும் அழித்து தன் சபதத்தை முடிக்க துரியோதனனை தேடினான்.

துரியோதனன் யுத்தகளத்திலிருந்து நடந்த செல்ல ஆரம்பித்தான். இந்த வம்சம் முழுவதும் அழிந்து போவதற்கு நீயே காரணமாக இருப்பாய் என்று விதுரர் துரியோதனிடம் கூறியது அவனுக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது. தன்னுடைய தேகம் தீயினுள் போட்டு வெந்து கொண்டிருப்பது போன்று இருந்தது துரியோதனனுக்கு. தன்னுடைய கதையை தவிர அவன் கைவசம் வேறு எதுவும் இல்லை. தன் கதாயுதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து சென்ற அவன் அருகில் இருக்கும் துவைபாயன தடாகத்தை அடைந்தான். தன் உடலின் எரிச்சலை தணிப்பதற்கு தடாகத்திற்குள் அமர்ந்தான்.

துரியோதனன் மரணத்திலிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடிவிட்டான் என்று கருதிய பாண்டவர்கள் ஏமாற்றமடைந்தனர். அவன் உயிர் பிழைத்திருத்தால் யுத்தம் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று பாண்டவர்கள் எண்ணினார்கள். வேட்டைக்காரர்கள் கூட்டமொன்று அவர்களை அணுகி துரியோதனன் துவைபாயன தடாகத்தில் அமர்ந்து இருப்பதாக தெரிவித்தார்கள். அது மாலை நேரம். பாண்டவர்களும் கிருஷ்ணன் விரைந்து சென்று துரியோதனனை கண்டுபிடித்தனர். துரியோதனனை கண்ட யுதிஷ்டிரர் நீ ஒரு க்ஷத்திரன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீ ஒரு பயந்தாங்கோலி போன்று உன் உயிரை காப்பாற்றுவதற்கு இங்கு வந்து ஒளிந்து கொண்டு இருக்கின்றாய். உனக்காக உயிர்த்தியாகம் செய்த கூட்டத்தாரை நீ மறந்து விட்டாய் என்றான். அதற்கு துரியோதனன் என் உடலுக்கு சிறிது ஓய்வு தருதல் பொருட்டே நான் எங்கே இருக்கின்றேன். என்னுடைய சகோதரர்கள் நண்பர்கள் அனைவரையும் இழந்தேன். இப்போது ராஜ்யத்தில் எனக்கு ஆசை ஏதும் இல்லை. ஆகையால் இந்த ராஜ்யத்தை உனக்கு தானமாக கொடுத்து விட்டு காட்டிற்குள் சென்று தவ வாழ்க்கை வாழ எண்ணியுள்ளேன் என்றான்.

அன்று முதியவர்கள் கொடுத்த புத்திமதியை நீ ஏற்கவில்லை. நாங்கள் சம்பாதித்த ராஜ்ஜியத்தில் ஐந்து ஊசிமுனை நிலம் கூட கொடுக்க மாட்டேன் என்று மறுத்தாய். இப்பொழுது யுத்தத்தில் தோற்கும் தருவாயில் தானமாக கொடுக்கின்றேன் என்கிறாய். உன்னுடைய பித்தலாட்டம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிகிறது. இந்த ராஜ்யம் உன்னுடையது என்று நீ உரிமை கொண்டாடினால் உன்னை வென்று அந்த ராஜ்யத்தை பெற நான் விரும்புகின்றேன். நான் ஒரு க்ஷத்திரன் என்பதை தயவு செய்து நீ தெரிந்துகொள். யாரிடமிருந்தும் நான் தானமாக எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படியிருக்க உன்னை போன்ற எதிரி ஒருவனிடம் இருந்து நான் எப்படி தானமாக ஏற்பது யுத்தத்திற்கு வா என்று யுதிஷ்டிரர் அழைத்தார்.

சிவனடியார்

திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும் சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்க்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் அவர்கள் மீதும் பட்டுவிட்டது. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர். சிவனடியாரோடு சிவனடியாராக ஆலயத் தொண்டு புணைய முனைந்து விட்டனர்.

அனுப்பிய தூதர்கள் இருவரும் திரும்பி வராதததைக் கண்டு மேலும் இரு தூதர்களை அனுப்பினான் எமதர்மன். சிவாச்சாரரும் மற்றும் சிவஞானம் பெற்றிருந்த யமதூதர்கள் இருவரும் சேர்ந்து ஆலயப் பிரகாரத்தில் உழவாரபணி மேற்க் கொண்டிருந்தனர். அந்தநேரத்தில் சிவனடியார் ஆலயப் பிரகாரத்தில் முளைத்திருந்த புற்களை சிவநாமம் சொல்லி பிடுங்கி உதறிக் கொண்டிருந்தார். அப்போது திரும்ப வந்த யமதூதர்கள் இருவரும் சிவாச்சாரரைத் தேடி ஆலயப் பிரகாரம் வந்தனர். புற்களை பிடுங்கி உதறியதிலிருந்து தெறித்த மணல் படிமங்கள் இரண்டாம் முறையாக வந்த எமதூதர்கள் இருவர் மீதும் பட்டது. இவர்களும் சிவஞானம் பெற்று சிவனடியாராக மாறிவிட்டனர். மேலும் அடியார்களோடு அடியாராக ஆலயப் பணியை மேற்கொண்டனர். இரண்டாவதாய் அனுப்பிய இருவரும் திரும்பி வராததால் என்ன ஆயிற்று என நினைத்த எமதர்மன் நாமே நேரில் சென்று பார்க்கலாம் என புறப்பட்டான்.

பிரகாரத்தை சுத்தம் செய்த சிவனடியார் ஈசனுக்கு மாலையில் வழிபாடு செய்வதற்காக வில்வதழைகளைக் கொண்டு வாழைநாரில் தொடுத்துக் கொண்டிருந்தார். சிவச்சாரரைத் தேடி ஆலயம் வந்து பார்த்தான் எமதர்மன். அங்கே சிவாச்சாரருடன் தன் தூதர்கள் நால்வரும் சிவத் தொண்டு செய்து கொண்டிருப்பதை பார்த்து விட்டான். இதைக் கண்டதும் சிவாச்சாரரை ஆவேசத்தோடு நோக்கி என்ன மாயவித்தை செய்து இவர்களை சிவவேலை பார்க்கச் செய்தீர் என்றதுடன் இப்போது நானே வந்திருக்கிறேன். என்னை என்ன செய்யப் போகிறாய் பார்க்கலாம் என்றான் எமதர்மன். சிவ நாமத்தை கூறிக் கொண்டு விழ்வதழையை தொடுத்துக் கொண்டிருந்த சிவனடியார்க்கு எமதர்மனின் பேச்சு எரிச்சல் அடையச் செய்தது. திருப்பணி செய்ய விடாமல் இதென்ன தொல்லையா போச்சு என வில்வதழையை தொடுத்துக் கொண்டிருந்த வாழைநாரை எடுத்தார். திருவூறல்நாதா எனச் சொல்லி அந்த வாழைநாரை எமதர்மன் மீது எறிந்தார் சிவனடியார். விரைந்த வாழைநார் ஒரு வலையாக உருவெடுத்து எமனின் கை கால்களை கட்டிப் போட்டன. எமன் மந்திரத்துக்கு கட்டுண்டவர் போல செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். நாம எவ்வளவு பாசக்கயிறை வீசியிருப்போம் ஆனால் இந்த சாதாரண வாழைநாரை நம்மால் அறுத்தெறிய முடியவில்லையே என வியந்து சிவாச்சாரரைப் பணிந்தார். சிவனடியாரும் எமதர்மனை பார்த்து இத்தலத்தில் தக்கோலத்தில் சுயம்புநாதராக வீற்றிருக்கும் மகாதேவன் திருவடியை தொழுவாயாக மகாதேவனை சரணடைந்தால் உமக்கு கதிமோட்சம் உண்டாகும் என்று சிவனடியார் எமதர்மனுக்கு வழிகாட்டினார்.

எமதர்மனும் நேராகச் சென்று மகாதேவரை சரணடைந்து வணங்கினான். தஞ்சம் என வருவோர்க்கு அருளுபவன் திருவூறல்நாதன் ஆவார். காலனே இங்கு வந்து சரணடைந்து விட்டதார். எமனுக்குக் காட்சி தந்து என்னடியார்கள் மீது கைவினை செய்யாதே என்று உன்னிடம் பல முறை கூறியுள்ளேன். திருக்கடையூரில் மார்க்கண்டேயனை திருவெண்காட்டில் சுவேதுவை போன்ற என் அடியார்கள் மீது நீ பாசக் கயிறை வீசியிருக்கின்றாய். ஒவ்வொரு முறையும் தவறுவதும் மன்னிப்பதும் நல்லதல்ல என ஈசன் உரைத்து எமதர்மனை கட்டப்பட்டிருந்த வாழைநார் கட்டை விலக்கினார். எமதர்மனும் ஈசனை வணங்கி வழிமொழிந்து புறப்பட்டுச் சென்றான். சிவனடியாராக மட்டும் இருந்து விட்டால் எம பயமில்லை என இருக்க முடியாது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் சிவநெறியில் உறுதிபட இருந்தால் எமனை சிவாச்சாரர் கட்டியது போல எந்த வினையையும் எதிர்க்க முடியும். அதற்கு இந்த சிவாச்சாரியார் சிவனடியார் போல, சுவேது போல, மார்க்கண்டேயர் போல ஞானம் பெறும் வழியில் பயணிக்க வேண்டும்.