மும்பை சித்தி வினாயகர்
மொக்கணீஸ்வரர் ஆலயம்
வியாபாரி ஒருவர் தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார். ஒருமுறை தன் நண்பருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார். பயணக் களைப்பால் ஒரு காட்டில் தங்கி கண்ணயர்ந்தனர். வியாபாரிக்கு முன்பாகவே எழுந்த நண்பர் ஓடையில் குளித்து விட்டு கட்டுசாதத்தை சாப்பிட்டார். தன் நண்பர் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டார். இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்த நண்பர் ஒரு சாக்கில் மண்ணை நிரப்பி சிவலிங்கம் போல் வடிவமைத்து காட்டுப்பூக்களால் அலங்கரித்து ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி நட்டு வைத்தார். பார்ப்பதற்கு அசல் சிவலிங்கம் போலவே இருந்தது. வியாபாரி எழுந்ததும் மாமா நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டீர்கள். உங்கள் பக்கத்திலேயே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வணங்கியபின் சாப்பிடுங்கள் என்றார். எங்கும் சிவமயம் என்று மகிழ்ந்த வியாபாரியும் தன் நண்பர் காட்டிய சிவலிங்கத்தை தரிசித்து பின் சாப்பிட்டார்.
அப்போது நண்பா சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் என்பதற்காக ஒரு சாக்குப்பையில் மண் நிரப்பி நிஜலிங்கமென உங்களை நம்ப வைத்து விட்டேன். உங்கள் உடல்நலம் கருதி செய்த இந்த தவறை மன்னிக்க வேண்டும் என்றார். என்ன சொல்கிறீர்கள் நண்பரே நான் பார்த்தது நிஜமான லிங்கத்தை தான். என் சிவனையே லிங்க வடிவில் தரிசித்தேன் என்றார் உறுதியாக. சாக்குப்பையில் மண்ணை போட்டு நட்டு வைத்தது நான் தான் என்ற நண்பர் அங்கே சென்று சாக்குப்பையை எடுக்க முயன்றார். ஆனால் அசையக்கூட இல்லை. அங்கே நிஜமான லிங்கம் எழுந்தருளி இருந்ததைக் கண்ட நண்பர் மூச்சடைத்துப் போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அவரும் சிவபக்தரானார். இந்த லிங்கத்தின் பெருமையை மாணிக்கவாசகர் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி என்று தனது பாடலில் போற்றுகிறார்.
மூலவர் மொக்கணீஸ்வரர். அம்பாள் மீனாட்சி. தலமரம் வில்வம். மிகச்சிறிய கோயில். அம்பாள் மீனாட்சி தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் அருளுகிறாள். முன்மண்டபத்தில் மாணிக்கவாசர் இருக்கிறார். கொள்ளு வைக்கும் சாக்குபைக்கு மொக்கணி என்ற பெயர் உண்டு. எனவே சிவன் மொக்கணீஸ்வரர் என்று பெயர் பெற்றார். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சிவசூரியன் காட்சி தருகிறார். சிதிலமடைந்த பழைய கோயில் மண்டபத்தில் மாணிக்கவாசகர் அமர்ந்த கோலத்தில் கைகளை கூப்பி வணங்கியபடி இருக்கிறார். இத்தல விநாயகர் மூத்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.




அக்னி நட்சத்திரம் குறித்த மகாபாரதக் கதை
யமுனை ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காட்டின் பெயர் காண்டவவனம். இந்திரனின் பாதுகாப்பில் உள்ள அவ்வனத்தில் உள்ள அரிய மூலிகைகள் செழித்து வளர அவ்வப்போது மழை பெய்ய செய்தான் இந்திரன்.
யமுனை நதியில் கண்ணன் மற்றும் அர்ஜுனன் தங்களுடைய தோழர்களுடன் நீராடி மகிழ்ந்தனர். பின் அவர்கள் கரையேறும் போது அங்கு வந்த அந்தணர் ஒருவர் கண்ணனையும் அர்ஜுனனையும் பார்த்து உங்களை பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். என் பசிக்கு உங்களால் தான் உதவ முடியும். இவ்வனத்தில் என் பசிப்பிணியை தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினார். அந்தணரை உற்றுப் பார்த்த கண்ணன் அக்னி தேவனே ஏன் இந்த வேடம் நேரிடையாகவே உன் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே என்று சொன்னதும் தன் வேடத்தை கலைத்த அக்னி தேவன் உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை சுவேதசி என்ற மன்னனுக்காக நுாறாண்டுகள் தொடர்ந்து யாகம் நடத்தினார் துர்வாச முனிவர். யாகத்தின் விளைவால் அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு ஆளானேன். அதனால் மந்த நோய் என்னை தாக்கி விட்டது. அந்நோய்க்கான மூலிகைகள் இவ்வனத்தில் உள்ளன. அவற்றை நான் கபளீகரம் செய்தால் மட்டுமே என் பிணி தீரும் என்றார். நான் இவ்வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போதெல்லாம் மழை பெய்ய மேகங்களுக்கு உத்தரவிட்டு என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியை தடுத்து விடுகிறான் இந்திரன் என்றார். ஆகவே நான் எரிக்கும் போது மழையை தடுத்து உதவி செய்யுங்கள் என்று கேட்டார்
இதைக்கேட்ட அர்ஜுனன் அக்னி தேவனே நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் இங்கு நாங்கள் நீராட வந்ததால் எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. அதனால் இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு அம்பறாத் துாணியும் அம்புகளும் வில்லும் தேவை என்றான். உடனே அர்ஜுனனுக்காக சக்தி மிக்க காண்டீப வில் அம்புகள் மற்றும் அம்பறாத் துாணி என எல்லாவற்றையும் தந்தார் அக்னி பகவான். அப்போது கிருஷ்ணர் அக்னி தேவனிடம் உன் பசி பிணியை தீர்த்து கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இக்காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அச்சமயத்தில் இந்திரன் மழை பொழியாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றார் கிருஷ்ணர். அக்னி தேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் துவங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். வானில் மேகங்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்ட அர்ஜுனன் அவ்வனத்தில் மழை பொழியாமலிருக்க தன்னிடம் உள்ள அம்புகளால் சரக்கூடு ஒன்றை கட்டி தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வனத்தில் உள்ள மூலிகை பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தார். அடுத்த வந்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாக கொண்டார். அடுத்த வந்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு இறுதியில் இருவரிடமும் விடைபெற்றார் அக்னி தேவன். காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திரம் என்று கூறுகிறது புராணம்.




குருவின் வழிகாட்டுதல்
குரு ஒருவர் ஒரு ஊருக்கு வந்தார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர். இளைஞன் ஒருவன் வந்தான் சாமி எனக்கு ஒரு சந்தேகம் உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர். ஆனால் இன்றும் மனிதன் தீய வழியில் தான் செல்கிறான். உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன் என்று கேட்டான். துறவி அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன். நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் அதற்கு முன் ஒரு வேலை செய் ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை. நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கே கட்டி இருக்கட்டும். தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.
மறுநாள் காலை குரு அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும் அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான். இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் குரு. இன்று சுத்தப் படுத்தினாலும் இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் திரும்ப திரும்ப அசுத்தம் ஆகுதுன்னு சுத்தப்படுத்தாமல் விட்டால் இந்த இடம் மிகவும் அசுத்தம் ஆகிவிடும் ஆகையால் சுத்தம் செய்கிறேன் என்றான். இதை கேட்ட குரு அப்போது சொன்னார் தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில். நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன். அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் மனிதர்களை நல்வழிபடுத்தும் செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்.
இளைஞன் கேட்டான் சாமி இதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று கேட்டான். அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார். பின்பு அந்த இளைஞனைப் பார்த்து இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா என்று கேட்டார். ஆகாது சாமி என்றான். உன் கேள்விக்கு இதான் பதில். நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் வழிகாட்டும் பாதையில் சென்று மனிதன் தன்னிடம் இருக்கும் வினைகள் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி இறைவனை அடைந்து விடுகிறானோ அப்பொழுதே எங்களின் சுத்தப்படுத்தும் கடமை முடிந்து விடும் என்றார்.

விதி
துரியோதனனுக்கு யுதிஷ்டிரரிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள வேண்டும் என்னும் வஞ்சம் இருந்தது. சூதாட்டத்தின் மூலமாகத்தான் யுதிஷ்டிரருடைய அத்தனை செல்வத்தையும் அபகரிக்க முடியும் என்றார் சகுனி. சூதாட்டம் ஆட வா என்று அழைக்க முடியாது. அழகிய மண்டபம் ஒன்று கட்ட வேண்டும் அதை விழாவாக வைத்து அனைவரையும் அழைத்து சூதாடலாம் என்று நினைத்தான் துரியோதனன். அதன்படியே மண்டபம் கட்டும் வேலையைத் தொடங்கினான். மண்டபம் காண வாருங்கள் மகிழ்வாக விழாவைக் கொண்டாடலாம் என்று ஓலையில் அழைப்பு எழுதி திருதராஷ்டிரனிடம் கையெழுத்து வாங்கினான் துரியோதனன். பிறகு சகுனியின் அறிவுரைக்கேற்ப விதுரர் மூலமாக தர்மருக்கு அனுப்பி வைத்தான்.
யுதிஷ்டிரருக்கு விதுரர் அழைப்பு ஓழையை கொடுத்தார். அதைப் படித்த யுதிஷ்டிரர் தனது சகோதரர்களிடம் சென்று தனித்தனியாக ஆலோசனை செய்தார். திருதாராஷ்டிரர் கையெழுத்திட்ட ஓலை வந்திருக்கிறது. மண்டப விழாவுக்கு செல்வோமா என்று கேட்கிறார். மூன்று சகோதரர்கள் போகலாம் என்றார்கள். சகாதேவனிடம் இதே போன்று கேட்டதும் ஓலை கொண்டு வந்தது யார் என்று கேட்கிறான். விதுரர் ஓலை எடுத்துவந்தார் என்கிறார் யுதிஷ்டிரர். அனுப்பியது யார் என்றான் சகாதேவன். துரியோதனன் அனுப்பினான் என்கிறார். ஓலையில் கையெழுத்து அது யார் போட்டிருக்கிறார்கள் என்று கேட்டான். அது திருதராஷ்டிரன் போட்டிருக்கிறார் என்றார் யுதிஷ்டிரர். இப்படியே சகாதேவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சலிக்காமல் பதில் கூறினார். ஒரு கட்டத்தில் சலித்து விட்டார். எதற்கு கேட்கிறாய் சகாதேவா என்று யுதிஷ்டிரர் கேட்டார். நமக்கு ஓலை அனுப்பியது ஒருவர். கையெழுத்திட்டது ஒருவர். அனுப்ப நினைத்தது ஒருவர். கொண்டு வந்தது மற்றொருவர் என்றெல்லாம் நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப்பொறுத்த வரை இவை அனைத்தையும் செய்வது விதி ஒருவன் தான் என்றான் சகாதேவன்.

காவி உடை
காவி என்பதை நம் முன்னோர் துறவற நிறமாக வைத்தனர். இல்லறத்தை துறந்து துறவறம் செல்வோர் அனியவேண்டியது. வெள்ளை வேட்டியை சில மூலிகைகளை தண்ணீரில் போட்டு நனைத்து கட்டுவதே காவி உடை. காட்டில் செல்லும்போதும் பல இடங்களில் உறங்கும் போதும் பல புழுப்பூச்சிகள் விலங்குகள் கடிக்கும். இந்த காவி நிற உடையிலிருந்து வரும் மூலிகையின் வாசனை பூச்சிகள் பெரிய விலங்குகள் அருகில் வராமல் தடுக்கும்
காவி கட்டுவோர் இல்லறம் துறந்தார் என்று சிவாகமத்தில் கூறப்படுகிறது.
மஞ்சணத்தி மரத்தின் பட்டயை பக்குவப்படுத்தி அதனோடு ஆகமல மரத்தின் கட்டைகளை துண்டுகளாக்கி சுடு நீரில்போட்டு அதனுடன் அதிமதுரம், கொடிவேலிபருத்தி இலையும் சேர்த்து பின் வெண்மை நிறதுணியை அந்த சுடு நீரில் போட்டு துவைத்து எடுத்தால் வெண்மையான துணி காவி நிறத்தில் இருக்கும். முழுதும் காய வைத்து எடுத்தால் காவி உடையாகி விடும். இந்த ஆடையை துறவறம் பூண்டு காட்டிற்கு செல்பவர்கள் அணிந்தார்கள். இந்த காவி நிற ஆடையை தழுவி வரும் உயிர்த்துவமான காற்றை மூச்சுக் குழாய் வழியாக உள் இழுத்து தன் மூச்சை நிலை நிறுத்தி தான் கற்க வேண்டிய கலையைக் கற்றார்கள். ஆனால் இன்று இது தெரியாமல் காவி என்றால் துறவு என்றாகி விட்டது. காவி உடை எதற்கு ஏன் என்று பலருக்கும் இன்று தெரியாமல் போனது.

எண்ணங்கள்
குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் யுதிஷ்டிரர் ஒருமுறை வீதியில் நடந்து சென்றார். துரியோதனன் அந்தப் பக்கமாக தேரில் வந்தான். யுதிஷ்டிரர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் வீதியில் நடக்க வேண்டும் இதுபற்றி அவன் யுதிஷ்டிரரிடம் கேட்டான். அண்ணா நம்மைப் போன்றவர்கள் வீதியில் நடக்கலாமா நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் இருந்தும் நீங்கள் நடந்து செல்கின்றீர்கள். இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ என்றான். யுதிஷ்டிரர் அவனிடம் தம்பி நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு வீதியாக நடந்தால் தான் நமது நாட்டின் நிலைமை மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும் என்றதும் துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது. நாடாளப் போவது நானல்லவா அப்படிப் பார்த்தால் நானல்லவா வீதியில் நடந்து செல்ல வேண்டும் என்று எண்ணி இவரைப் போலவே நாமும் நடப்போம் என தேரில் இருந்து குதித்தான்.
மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும் அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம் இவனும் கவனித்துப் பார்த்தான். ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன் ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். யுதிஷ்டிரருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இவனது காலில் ஒரு முள் குத்தினால் ஆ வென அலறுகிறான். ஆனால் இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு கரகரவென நறுக்குகிறான். இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா என்று அவனை மனதுக்குள் எண்ணியபடியே நடந்தார். அப்போது அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன. இதைப்பார்த்த யுதிஷ்டிரர் தவறு செய்துவிட்டோமே இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும் மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும் நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு தர்மத்தையும் பாதுகாக்கிறான். அப்படியானால் இவனைப் பற்றிய தப்பான எண்ணம் என் மனதில் ஏன் ஏற்பட்டது. நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.
வீட்டிற்கு சென்றதும் இதைப்பற்றி பெரியவர்களிடம் கேட்டான். நடந்தவைகள் அனைத்தும் கேட்டவர்கள் யுதிஷ்டிரனுக்கு பதில் சொன்னார்கள். தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால் துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட எண்ணங்களும் காற்றில் பரவி உன்னையும் பாதித்து விட்டது. இதனால் தான் துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுவோம் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

குக்கே சுப்ரமணியசுவாமி கோயில்
கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே உள்ள தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்லியா வட்டத்தில் குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அடர்ந்த காட்டில் குமார மலையில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில் சேஷமலை அமைந்துள்ளது. கோயிலின் முன் மண்டபத்திற்கும் கர்ப்பகிரகத்திற்கும் நடுவே கருடனின் வெள்ளித்தூண் உள்ளது. அந்தத் தூணில் கருடன் பொறிக்கப்பட்டுள்ளார். முருகன் தலை மீது ஐந்து தலை நாகருடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. சமஸ்கிருதத்தில் இத்தலம் குக்ஷி என அழைக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் குக்கி சுப்ரமண்யா என மாறி அந்தப் பெயரே நிலைத்து விட்டது. இத்தலத்தை சுற்றி 113 சிவத்தலங்கள் உள்ளன. 9 கால பூஜை நடக்கிறது. காலையில் கோ பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சாயரட்சை பூஜை ஆகியவற்றை கேரள தந்திரிகள் செய்கின்றனர். மற்ற பூஜைகளை அர்ச்சகர்கள் செய்கின்றனர். கால பைரவர் சன்னதி உள்ளது. நாகர் பிரகாரத்தின் ஈசான மூலையில் உள்ளார். கந்தபுராணத்தில் தீர்த்த சேத்ரா மகிமணிரூபணா அத்தியாயத்தில் இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் குமாரதாரா நதி ஓடுகிறது. முருகப்பெருமான் தாரகாசூரனை அழித்த பின் தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இந்த நதிக்கு வந்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடியுள்ளார். ஆதிசங்கரர், மத்வாச்சாரியார் ஆகியோர் இங்கு வந்துள்ளனர்.
புராணக்கதைப்படி தாருகாசூரன் சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்ற பின்பு சுப்ரமணியசுவாமி வினாயகருடன் இக்குமாரமலையில் தங்கினார். அப்போது தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் மற்ற தேவர்கள் சுப்ரமணியசுவாமியை வரவேற்றனர். இந்திரனின் மகளான தேவசேனாவை சுப்ரமணிய சுவாமிக்கு திருமணம் செய்து கொடுக்க இந்திரன் விரும்பினான். இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்ற சுப்ர மணியசுவாமி தேவசேனாவை மணந்தார். இத்தேவ திருமணம் குமாரமலையில் நடந்தது. பிரம்மா விஷ்ணு சிவன் மற்றும் இதர தேவர்கள் எழுந்தருளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமிக்கு மங்கல வாழ்த்துகள் தெரிவித்தனர். அன்று முதல் தேவசேனாவுடன் சுப்ரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.
காசியப முனிவரின் மனைவியரான கத்ரு வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில் யாருடைய கருத்து சரியானதோ அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில் கத்ரு தோற்றாள். ஒப்பந்தப்படி கத்ருவும் அவளது குழந்தைகளான நாகங்களும் வினதாவிற்கு அடிமையாயின. வினதாவின் குழந்தையான கருடன் நாகங்களை துன்புறுத்தி வந்தது. வருந்திய நாகங்கள் வாசுகி என்ற பாம்பின் தலைமையில் குமாரதாரா என்ற நதியின் அருகிலிருந்த குகையில் வந்து தங்கின. அங்கிருந்தபடியே தங்களைக் காக்கும்படி அவை சிவனை வேண்டின. சிவபெருமான் அந்தப் பாம்புகள் முன்தோன்றி எனது மகன் சுப்பிரமணியனிடம் உங்கள் குறைகளைக் கூறுங்கள். அவன் உங்களைக் காப்பாற்றுவான் என்றார். அதன்படி பாம்புகள் குமாரதாரா நதியில் நீராடி சுப்ரமணியரை வழிபாடு செய்தன. இதனால் மகிழ்ந்த சுப்பிரமணியர் நாகங்களைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக வாசுகி பாம்பு தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு குடையானது. சேவல் கொடி வைத்துள்ள இத்தல முருகன் குக்குட த்வஜ கந்தஸ்வாமி என அழைக்கப்படுகிறார். இக்கோயிலை ஒட்டி பள்ளூஸ் என்ற இடத்திலுள்ள குகையில் சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் பல யுகம் கண்ட கோயிலாகும்.
குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் மங்களுரிலிருந்து 105 கி.மீ. தூரத்திலும் பெங்களூரிலிருந்து 317 கி.மீ. தூரத்திலும் உள்ளது. பெங்களூர் – மங்களூர் ரயில்வண்டித் தடத்தில் அமைந்துள்ள சுப்ரமண்யா ரோடு நிலையத்திலிருந்து 15 நிமிட நேர பயணத்தில் குக்கே சுப்ரமணியசுவாமி கோயிலை அடையலாம்.





கிருஷ்ணனை எதிர்த்து போர் புரிந்த அர்ஜுனன்
ஒருநாள் அதிகாலையில் காலவ முனிவர் ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும் நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க கையில் நீரை எடுத்தபோது ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர். ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல் வேகமாகச் சென்றுவிட்டான். கோபமடைந்த காலவ முனிவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார்.
சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன் என்று சூளுரைத்தார் கிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு போருக்கும் ஆயத்தமானார். தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன் கிருஷ்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். கிருஷ்ணனுடன் நேரடியாகக் போரிடத் துணியவில்லை. செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு முனிவரின் கால்களிலும் கிருஷ்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால் அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும் ஆணவம் பிடித்த சிந்திரசேனன் அதைச் செய்யாமல் அவனது மனதில் சூழ்ச்சி ஒன்று பிறந்தது. அர்ஜுனனை தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். அர்ஜுனா உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று கூறி சரணடைந்தான். எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன் அதுதான் க்ஷத்திரிய தர்மம் என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.
சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா என்று கேட்டான் சித்திரசேனன். நான் வணங்கும் கிருஷ்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன். தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்றான் அர்ஜுனன். என் பெயர் சித்திரசேனன் நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக என் மீது போர் தொடுத்து என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று அவனோடு போரிட்டு அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கெஞ்சினான். உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல் என்று கேட்டான் அர்ஜுனன். தங்கள் ஆத்ம நண்பன் துவாரகா அதிபதி கிருஷ்ணன் என்றான் சித்திரசேனன். அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்து விட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை. இதனை கண்ட சித்திரசேனன் அர்ஜுனா அதிர்ச்சி அடைந்தவிட்டீர்களா உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான கிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா அல்லது கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா தங்களால் முடியவில்லை என்றால் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன் என்றான் சித்திரசேனன்.
நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும் நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட நண்பன் மீதே போர் தொடுத்து உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன் என்று சூளுரைத்து போர்க்கோலம் பூண்டு யுத்த பூமியில் கிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன். கிருஷ்ணன் கவசம் அணிந்து வாள், வில் ஏந்தி நின்ற போர்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். கடமையைச் செய்யும் போதும் சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கிருஷ்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான். கிருஷ்ணார் அர்ஜுனன் யுத்தம் ஆரம்பமானது. துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்தது போல் தவித்தான் அர்ஜுனன். விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும் ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.
யுதிஷ்டிரனும் பீமனும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது. அறிவு தெளிந்தது. கிருஷ்ணரின் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் சித்திரசேனன். செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார் கிருஷ்ணன். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர். தன் ஆத்ம நண்பன் கிருஷ்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கிருஷ்ணரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதற்கு கிருஷ்ணன் இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தர்மயுத்தம் நடக்கப்போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காகவே இந்த நாடகத்தை நடத்தி இந்த யுத்தத்தை ஒரு பயிற்சிக் களமாக அமைத்தேன் என புன்முறுவலோடு கூறினார் கிருஷ்ணன்.

