மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -21

பாண்டவ சகோதரர்கள் ஜயத்ரதனை கைது செய்து யுதிஷ்டிரனுடைய முன்னிலைக்கு அழைத்துச் சென்று என்ன தண்டனை அளிக்கலாம் என்று யுதிஷ்டிரனுடைய அனுமதியை நாடி நின்றனர். பீமன் ஜயத்ரதனை கொல்வதற்கு யுதிஷ்டிரன் அனுமதி கொடுக்குமாறு கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் குற்றங்கள் பல ஜயத்ரதன் செய்திருக்கின்றான். எனினும் இவன் நமக்கு மைத்துனன் ஆகிறான். காந்தாரியின் கடைசி குழந்தையாகிய துஸ்ஸாலாவுக்கு இவன் கணவன். அந்த முறையை முன்னிட்டு இவனை மன்னித்து இவன் உயிரை காப்பாற்ற நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறி அவனை விடுதலை செய்தான்.

ஜயத்ரதன் அவமானத்தால் தலையை தொங்க போட்டுக்கொண்டு தன்போக்கில் போனான். அவன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போகாமல் கங்கைக் கரையோரம் சென்று சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். நாட்கள் பல கழிந்து போயின. சிவபெருமானும் அவன் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு ஜயத்ரதன் வரும் காலத்தில் வரும் யுத்தத்தில் பாண்டவர்களை கொல்வதற்கு ஏற்ற வல்லமையை தனக்கு தர வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டான். அதற்கு சிவனார் பாண்டவர்களை கிருஷ்ணன் காப்பாற்றுகிறான் ஆகையால் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. உனக்கு நாம் ஒரு சிறிய உபகாரம் செய்ய முடியும். சிறிது நேரத்திற்கு அவர்களை சமாளிக்கும் திறமை உனக்கு வந்தமையும். அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிட்டார். சிறிதளவேனும் சிவபெருமான் தனது பிரார்த்தனைக்கு செவி சாய்த்தது குறித்து ஜயத்ரதன் மகிழ்ச்சி அடைந்தவனாய் கங்கை கரையில் இருந்து தனது நாட்டுக்கு புறப்பட்டு போனான்.

12 வருட வனவாசம் முடிவுறும் தருவாயில் இருந்தது. இன்னும் சில நாட்களில் அது முற்றுப் பெற்றுவிடும். அப்போது ஒருநாள் காம்யக வனத்தில் சென்று கொண்டிருந்த பிராமணன் வருவன் தன்னுடைய அரணிக்கட்டையை மானிடம் இழந்துவிட்டான். அரணிக்கட்டை மான் ஒன்றின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது. பயந்து போன மான் ஓட்டம் பிடித்து வனத்திற்குள் சென்றது. ஏமாற்றமடைந்த பிராமணன் பாண்டவர்களிடம் ஓடி வந்து அந்த மானிடம் இருந்து அரணிக்கட்டையை மீட்டெடுத்து தரும்படி கேட்டுக்கொண்டார். அக்கணமே பாண்டவ சகோதரர்களும் அந்த மானை பின்தொடர்ந்து ஓடினர். அது அவர்களை வனத்திற்குள் நெடுந்தூரம் ஓடும்படி செய்து மாயமாய் மறைந்து போயிற்று. பசியாலும் தாகத்தாலும் சகோதரர்கள் வாடி போயினர். அனைவரும் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். பிராமணன் ஒருவனுக்கு நாம் உதவி பண்ண முடியாது போய்விட்டது. நாம் தர்மத்திலிருந்து பிசகியுள்ளோம் என்றான் சகோதரர்களில் ஒருவன்.

குறிப்பு – ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை வைத்திருப்பார்கள். அரணிக்கட்டை என்பது இரண்டு கட்டைகள் இருக்கும். அதில் ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்து தயிர் கடைவது போல கடைவார்கள். தீப்பொறி எழும். அந்த தீயை யாகத்திற்கு பயன்படுத்துவார்கள்.

பழனி மலை

சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று. பழனி மலை இருக்கும் இடத்தை கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்று குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக் கோப்பெரும்பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர். தண்டாயுதபாணி ஆலயம் சேரமன்னன் சேரமான் பெருமானால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. தங்கள் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் பாண்டியர்களும் சோழர்களும் இந்த ஆலயத்தைப் புதுப்பித்து கோபுரங்கள் மண்டபங்கள் கட்டி பல வசதிகள் செய்துள்ளனர். 450 மீட்டர் உயரமான இந்த மலையில் 690 படிகள் உள்ளது. இம்மலை முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் திருஆவினன்குடி என்றும் தென்பொதிகை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் தண்டாயுதபாணி மற்றும் குழந்தை வேலாயுதர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள முருகர் நவபாஷணத்தால் போகரால் செய்யப்பட்டவர். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் இருக்கும் பொழுது முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்து பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். 4000 திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலை செய்யப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். இந்த நவபாஷான சிலை செய்யும் காலத்தில் இயற்கை தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சிலை செய்ய ஏற்றார் போல் சூழ்நிலை அமைத்து சித்தர்களுக்கு உதவி செய்தது.

தண்டாயுதபாணி விக்ரகம் எப்பொழுதும் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீர் அபிஷேக தீர்த்ததுடன் கலந்து காலை அபிஷேகம் நடக்கும் போது அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் கொண்டு அபிஷேகம் நடைபெருகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து உடனே அகற்றப்படுகிறது. சந்தனம் பன்னீர் மட்டும் அடி முதல் முடி வரை அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால் பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி சிலையில் நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -20

யுதிஷ்டிரனுடைய இருப்பிடத்திற்கு சென்றால் தங்களுக்கு மேலும் உணவு அளிப்பார்கள். அதிகமான உணவு சாப்பிட்ட அனுபவத்தைப் பெற்றபடியால் அங்கு உணவு அருந்த இயலாது. ஆகவே அனைவரும் ஆலோசனை செய்தார்கள். பிறகு பாண்டவர்களின் கண்ணுக்குத் தென்படாது அங்கிருந்து சென்று விடலாம் என்று துர்வாச மகரிஷியும் அவரது சீடர்களும் ஏகமனதாக முடிவு செய்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள். துர்வாச மகரிஷி திரும்பி வராததைக் கண்ட யுதிஷ்டிரன் துர்வாச மகரிஷியை அழைத்து வருமாறு பீமனை அனுப்பி வைத்தான். பீமன் நதிக்கரையில் யாரும் இல்லாததை கண்டு யுதிஷ்டிரனிடம் கூறினான்.

கிருஷ்ணனுடைய கருணையால் திரௌபதி பெரும் சோதனையிலிருந்து விடுதலை பெற்றாள். பூரண யோகி ஒருவன் தன் பசியை போக்கிக் கொண்டால் அக்கம்பக்கத்தில் உள்ள அனைவருடைய பசியையும் போக்க வல்லவனாகிறான் என்பது யோகசாத்திர தர்மத்தின் கோட்பாடாகும். அந்த கோட்பாட்டை கிருஷ்ணன் இங்கு கையாண்டான். துர்வாச மகரிஷியும் அவருடைய சிஷ்யர்களும் உணவு உண்ட அனுபவத்தை பெற்றனர். பாண்டவர்களும் துர்வாச மகரிஷியின் சாபத்தில் இருந்து தப்பித்துக் கொண்டனர்.

பாண்டவர்கள் தங்கியிருக்கும் வனத்தில் தங்கியிருக்கும் சில பெண்கள் இருந்தபடியால் திரௌபதிக்கு துணையாக அவர்களை வைத்து விட்டு பாண்டவர்கள் ஐவரும் வேட்டையாட வனத்திற்குள் சென்றிருந்தனர். அப்பொழுது சிந்து நாட்டு மன்னனாகிய ஜயத்ரதன் காம்யக வனத்தை தாண்டி தன் போக்கில் சென்று கொண்டிருந்தான். அப்போது திரௌபதியை பார்த்ததும் அவன் சிறிதும் நாணமின்றி அவளிடம் தனது காதலை தெரிவித்தான். ஆனால் திரௌபதி தன்னை இன்னார் என்று அவனுக்கு அறிமுகப்படுத்தினாள். அவனுடைய செயல் முற்றிலும் சரியானது இல்லை என்று திரௌபதி தெரிவித்தாள். ஆனால் அவள் கொடுத்த விளக்கத்திற்கு ஜயத்ரதன் செவிசாய்க்கவில்லை. நாடோடிகளாகிய பாண்டவர்கள் அவளை மனைவியாக வைத்திருக்க தகுதியற்றவர்கள் என்றும் நாடாளும் வேந்தன் என்னும் முறையில் எந்த பெண்ணை வேண்டுமானாலும் தனக்கு மனைவியாக எடுத்துக் கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்றும் பேசினான். அதைத்தொடர்ந்து இருவருக்குமிடையில் கைசண்டை நிகழ்ந்தது. திரௌபதி ஜயத்ரதனை கீழே தள்ளினாள். ஆயினும் அவனுடைய வலிமையினால் திரௌபதியுடைய கைகளையும் கால்களையும் கட்டி தன் ரதத்தில் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான்.

திரௌபதிக்கு துணையிருந்த பெண்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதாக பாண்டவர்கள் உணர்ந்தனர் எனவே அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து திரும்பினர். திரௌபதியை காணவில்லை நடந்தவற்றை விளக்கமாக அங்கிருந்த பெண்கள் எடுத்துக் கூறினார். அக்கணமே சகோதரர்கள் ரதம் போன வழியில் விரைந்து ஓடினார். ஜயத்ரதனை பிடித்து நிறுத்தினர். அவனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. சிறிது நேரத்தில் ஜயத்ரதனை தோற்கடிக்கப்பட்டான். பீமன் அவனை கீழே போட்டு மிதித்தான். ஜயத்ரதனுக்க மயக்கம் உண்டாயிற்று. அவன் மயங்கி கிடந்த பொழுது ஐந்து சிறு குடுமி வைத்து அவனுடைய தலை முடி வெட்டப்பட்டது. அதன் விளைவாக அவனுடைய தோற்றம் பரிதாபத்துக்கு உரியதாயிற்று. சிறிது நேரத்திற்கு பிறகு அவனுக்கு மயக்கம் தெளிந்தது. அப்பொழுது அவன் ஒரு கால்நடை போன்று கயிற்றால் கட்டப்பட்டு இருப்பதை அறிந்தான்.

சாஸ்தா ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அழகிய ஆஸ்ராமம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு சாஸ்தா ஆலயம் ஒன்று உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் வரலாறு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.

ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில் அத்திரி மகரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தர்ம பத்தினி அனுசூயா தேவி. இவர் கற்பில் சிறந்தவர். ஒரு முறை அனுசூயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணிய சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் அத்திரி மகரிஷி இல்லாத நேரத்தில் அடியார்களின் வடிவத்தில் ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று அடியார்களும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க முன்வந்தாள். அதுவரை ஆசனத்தில் அமர்ந்திருந்த அடியார்கள் உடனடியாக எழுந்துவிட்டனர். அதைக் கண்டு மனம் வருந்திய அனுசூயா தேவி நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று மூவரிடமும் கேட்டாள்.

அதற்கு அந்த அடியார்கள் மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள் தற்போது உண்ண வேண்டு மென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது என்று கூறியவர்கள் மேலும் தொடர்ந்து பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பரிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம் என்றனர். இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும் மனதைத் தேற்றிக் கொண்டு கணவனே கடவுள் என்றும் கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் அடியார்கள் கூறியவாறு அமுது படைப்பேன் எனத் தெளிந்து தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து கணவனை மனதில் தியானித்துக் கொண்டு இவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறக்கடவது என அடியாளர்களின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள். முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளானார்கள். பின்பு தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட முப்பெரும் தேவியரும் அத்திரி முனிவரின் ஆசிரமம் வந்து அனுசூயா தேவியை வேண்ட அவளும் மீண்டும் அவர்களுக்கு சுயவுருவை அளித்தாள்.

அத்திரி மகரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம் தான் தற்போது ஆஸ்ராமம் என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்திரி மகரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். அத்திரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கோவிலின் அருகில் தீர்த்தக்குளமாக இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா என உரக்கக்கூவினார். அது நாளடைவில் மருவி அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தாவாக மாறிவிட்டது. அஞ்சனம் என்றால் மை. எழுதிய என்றால் தீட்டிய என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.

இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். சாஸ்தா கோவில்களில் சபரிமலை ஐயப்பனைப் போலவே சாஸ்தாவின் சிலையும் கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு வலக்கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் சுருளாக தோள்பட்டைக்குக் கீழே இருப்பதோடு நடு உச்சியில் கொண்டையுடன் பூணூலும் அணிந்திருக்கின்றார். கழுத்தில் பதக்கமும் இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும் திருநீற்றுப் பட்டையும் அணிந்துள்ளார். இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -19

துர்வாச மகரிஷி துரியோதனின் வேண்டுகோளுக்கிணங்கி பாண்டவர்கள் இருக்கும் காம்யக வனத்திற்கு தனது சீடர்களுடன் புறப்பட்டார். இப்பொழுது துரியோதனனும் கர்ணனும் சகுனியும் பரமானந்தத்துடன் இருந்தனர். தெய்வாதீனமாக தங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது என அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் திரௌபதி பகல் உணவு அருந்திய பிறகு அன்றைக்கு வேறு யாருக்கும் ஒரு கவளம் அண்ணம் கூட அவளால் அளிக்க இயலாது. உணவிற்க்காக விருந்தினர்கள் அடுத்த நாள் வரையில் காத்திருக்க வேண்டும் அத்தகைய நெருக்கடி அமையும்போது துர்வாச மகரிஷிக்கு கோபம் வந்துவிடும். அவர் இடும் சாபம் பாண்டவர்களை சாம்பலாக்கி விடும் இத்தகைய சூழ்நிலை தற்செயலாக அமைந்தது. அதன் விளைவுக்கு கௌரவர்கள் பொறுப்பாளிகள் ஆகமாட்டார்கள். எனவே பாண்டவர்களின் அழிவை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்கள்களும் பெரும் கூட்டமாக பாண்டவர்கள் இருக்கும் காம்யக வனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களை பாண்டவ சகோதரர்கள் முறைப்படி தக்க மரியாதையுடன் வரவேற்று மரியாதை செலுத்தினார்கள். துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்களும் நதியில் நீராடிவிட்டு வந்து போஜனம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளப்பட்டனர். அவர்களும் வரவேற்பை எற்றுக்கொண்டு நதிக்கரைக்கு சென்றனர். துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்களும் வனத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையில் திரௌபதி தன்னுடைய மதிய உணவை முடித்திருந்தாள். அட்சய பாத்திரம் அன்றைக்கு மேலும் உணவு தராது.

துர்வாச மகரிஷியும் அவரை சார்ந்திருந்த சீடர்களின் பெருங்கூட்டமும் உணவு உண்ண அழைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று கேள்வியுற்ற திரௌபதி பயம் அடைந்தாள். தற்செயலாக தனக்கு வந்து வாய்ந்த நெருக்கடியிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அவள் உள்ளக்கசிவுடன் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தனை பண்ணினாள். கிருஷ்ணன் திடீரென்று அங்கு பிரசன்னமாகி தனக்கு கடுமையாக பசிக்கிறது தன்னுடைய பசியை போக்க உணவு வேண்டும் என்று திரௌபதியிடம் கேட்டான். திரௌபதிக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வந்து ஆறாத் துயரத்தில் ஆழ்த்தியது. அவள் கதறினாள் கிருஷ்ணனும் அவளுடைய வேதனையை அறிந்து கொண்டான். அவளிடமிருந்த அட்சய பாத்திரத்தை கொண்டுவரும்படி அவன் அவளிடம் கேட்டான்.

திரௌபதி கொண்டு வந்து நீட்டிய பாத்திரத்தை கிருஷ்ணன் கூர்ந்து பார்த்தான். அதனுள் ஒரு பருக்கை அன்னம் ஓட்டிக்கொண்டிருந்தது. மகிழ்வுடன் அந்த அன்னத்தை சுரண்டி எடுத்தான் தன் வாய்க்குள் போடும் பொழுது என் பசியை முற்றிலும் அகன்று போயிற்று. வயிறு முழுக்க உணவு உண்டவன் ஆகிவிட்டேன். மேற்கொண்டு ஒரு கவளம் உணவு கூட என்னால் சாப்பிட இயலாது என்று கிருஷ்ணன் கூறியதும் துர்வாச மகரிஷிக்கும் பெரும் கூட்டமாக வந்த அவரது சீடர்களுக்கும் நூதனமான அனுபவம் ஒன்றே பெற்றனர். அவர்கள் எல்லோருக்கும் பசி பறந்தோடி விட்டது மேற்கொண்டு சாப்பிடுவது அவர்களுக்கு சாத்தியப்படாது.

ஐயப்பனின் திருவாபரணம்

மகர சங்கராந்தி காலத்தில் தவக்கோலத்திலிருந்து ஐயப்பன் கண் விழிக்கிறார். அன்றைய நாளில் ஐயப்பன் ராஜ கோலத்தில் தரிசனம் கொடுக்கிறார். மணிகண்டன் அவதாரக் காலத்தில் தன் வளர்ப்புத் தந்தையிடம் ஆண்டு தோறும் தவக்கோலத்தில் இருக்கும் ஐயப்பன் அந்த ஒருநாளில் கண்விழித்து தன் பக்தர்களைப் பார்த்து அனுக்கிரகம் பண்ணுவேன் என்று வாக்களித்திருந்தார். பகவான் கண்விழிக்கும் அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் விசேஷமாக ஆராதனை செய்வார்கள். ஐயப்பன் ஜோதி ஸ்வரூபனாகக் காட்சி கொடுக்கும் நாள் மகர சங்கராந்தி அன்று ஐயப்பனுக்கு திருவாபரணங்களை அணிவித்து தீப ஆரத்தி காட்டியதும் ஐயப்பனின் மகர ஜோதி தரிசனத்தை பொன்னம்பலமேட்டில் காணலாம். இந்தத் திருவாபரணப் பெட்டி பந்தள அரண்மனையிலிருந்து பயணித்து வந்து சரியாக மகரஜோதி தினத்தன்று சபரிமலை வந்து சேரும். இந்த நாளில் ஐயப்பன் திருவாபரணங்கள் அணிந்து பூரண சொரூபனாகக் காட்சி கொடுப்பான்.

மகர சங்கராந்தி தினத்தன்று பந்தள ராஜனின் காணிக்கையான திருவாபரணம் மூன்று பெட்டிகளில் சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். திருவாபரணம் எங்கு சென்றாலும் கருடன் அதன் மேலேயே பறந்து வருகிறது. ஐயப்பனின் சந்நிதானத்தைப் பெட்டி அடைந்ததும் கருடன் சந்நிதானத்தை மூன்றுமுறை வலம் வந்து பின் பறந்து மறையும். மூன்று பெட்டிகளில் ஒன்று ஆபரணப்பெட்டி இரண்டு வெள்ளிப்பெட்டி மூன்று கொடிப்பெட்டி. இதில் ஆபரணப்பெட்டியில் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் இருக்கும்.

முதல் திருவாபரணம் பெட்டியில் இருப்பவை

  1. திருமுக மண்டலம் எனப்படும் முக கவசம்.
  2. பூரணா புஷ்கலா தேவியருடைய உருவங்கள்.
  3. பெரிய வாள் மற்றும் சிறிய வாள்.

4 இரண்டு யானை உருவங்கள்.

  1. கடுவா எனப்படும் புலி உருவம்.
  2. வில்வமாலை.
  3. சரப்பொளி மாலை.
  4. நவரத்தின மாலை.
  5. வெள்ளிகட்டிய வலம்புரிச் சங்கு இந்த ஆபரணப் பெட்டியில் இருக்கும்.

இரண்டாவதாக இருக்கும் வெள்ளிப் பெட்டியில் தங்கக்குடம் மற்றும் பூஜா பாத்திரங்கள் இருக்கும்.

மூன்றாவது கொடிப்பெட்டியில் யானைப் பட்டம், தலப்பாற மலை, மலையின் கொடிகள் ஆகியன இருக்கும்.

ஆபரணப்பெட்டி தவிர்த்த இரண்டு பெட்டிகளும் மாளிகை புறத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எழுந்தளிப்பு என்னும் நிகழ்ச்சியில் யானைக்கு அந்தப் பட்டத்தை சாத்தி ஊர்வலங்கள் நடைபெறும். திருவாபரணப் பெட்டி சந்நிதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பகவானுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். அந்தக் காலத்தில் மகர சங்கராந்தி அன்று காலையில்தான் பந்தள அரண்மனையில் இருந்து இந்தப் பெட்டிகள் கிளம்புமாம். இந்தப் பெட்டிகளைச் சுமப்பவர்கள் பெட்டியைத் தலைமேல் ஏற்றிக்கொண்டதும் தேவதா ஆவேசம் கொண்டு ஓடிவந்து அந்த நாளின் மாலையிலேயே சந்நிதானம் வந்து சேருவார்கள். காலங்கள் மாறிவிட்டன. தற்போது சுமார் இரண்டரை நாள்கள் ஆகின்றன.

இந்தப் பெட்டிகளைச் சுமப்பதற்கென்றே சில குடும்பங்கள் உள்ளனர். அவர்கள் தான் இவற்றைச் சுமப்பர். இதில் பகவானின் சாட்சியம் என்பது போல இந்தப் பெட்டிகள் வெளியே எடுத்து வந்ததும் பருந்து ஒன்று மேலே வரும். கருடனை தரிசனம் செய்த பின்புதான் தலையில் திருவாபரணப் பெட்டிகள் ஏற்றப்பட்டு யாத்திரை புறப்படும். திருவாபரணப் பெட்டியோடு ஒரு பல்லக்கும் பந்தள ராஜாவும் உடன் வருவார். இந்த யாத்திரை செல்லும் வழியெல்லாம் உள்ள மக்கள் பகவானை தரிசனம் செய்ய வீட்டுவாசல்களில் கோலமிட்டு பூக்கள் தூவி வரவேற்பார்கள். இப்படி சரணகோஷத்தின் நடுவே மிதந்துவரும் இந்தத் திருவாபரணப்பெட்டி, பம்பை, நீலிமலை வழியாக சந்நிதானத்தை மகரசங்கராந்தி அன்று அடையும். திருவாபரணத்தைச் சுமந்துசென்று 18 படிகளில் ஏறி சுவாமிக்கு அணிவிப்பார்கள். ஐயப்பன் அன்று ராஜ கோலத்தில் காட்சி கொடுப்பார். ஐயப்பன் தன் முக மண்டலத்தில் மீசையோடும் பூரணா புஷ்கலா சமேதராக அச்சன்கோயில் அரசராகக் காட்சி கொடுப்பார். யானை புலிகள் எல்லாம் முன்பாக இருக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு முன்பாக இரு வாள்களும் வைக்கப்பட்டு ஐயன் அருட்காட்சி தருவார். அந்தக் கோலத்தில் ஐயனுக்கு தீபாராதனை முடிந்ததும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். வாழ்வில் விலைமதிக்க முடியாத ஜோதிதரிசனம் திருவாபரண தரிசனம்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 214 திருக்கூடலையாற்றூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 214 வது தேவாரத்தலம் திருக்கூடலையாற்றூர். புராணபெயர் தட்சிணப்பரயாகை. மணிமுத்தாறு, வெள்ளாறு நதிகள் இங்கு கூடுவதால் இத்தலத்திற்கு தட்சிணப்பிரயாகை என்ற பெயரும் உண்டு. மூலவர் நர்த்தன வல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாயகர். இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சித்திரை மாதம் முதல் மூன்று நாட்களில் மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. அம்பாள் பராசக்தி, ஞானசக்தி. இக்கோவிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி சன்னதியில் குங்குமமும், பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. தீர்த்தம் பரம்ம, அகஸ்திய, கார்த்தியாயனர் தீர்த்தங்கள், சங்கம தீர்த்தம். தலமரம் கல்லாலமரம். வெள்ளாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு நதிகள் கூடும் இடத்தில் அமைந்த தலம். ஆதலால் திருக்கூடலையாற்றூர் எனப் பெயர் பெற்றது.

இவ்வாலயத்தின் பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நந்திதேவர் மட்டும் காணப்படுகிறார். கொடிமரம் பலிபீடம் இல்லை. வெளிச் சுற்றில் பக்கவாயில் உள்ளது. அமுத விநாயகர், விசுவநாத லிங்கம், ஆறுமுகர், ஞானசக்தி, அம்பாள் முதலிய சந்நிதிகள் உள்ளன. அம்பாள் நின்ற திருக்கோலம். மூலவர் விமானம் இரு தள அமைப்புடையது. படிகளேறி மேலே சென்றால் அழகிய மண்டபம் உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி எதிரில் உள்ளது. நடராச சபையில் நடராஜர் சிவகாமி அம்மையுடன் உள்ளார். இக்கோவிலில் சித்ரகுப்தர் உற்சவ மூர்த்தியாக ஒரு கையில் எழுத்தாணியும் மறு கையில் ஏடும் கொண்டு காட்சி தருகிறார். இக்கோயிலில் நவக்கிரக சந்நிதியில்லை. மூலவரைத் தரிசித்து விட்டு வரும்போது வலதுபுறம் பொங்கு சனிபகவான் சந்நிதி மட்டும் உள்ளது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. இங்கு முருகர் பன்னிரு திருக்கரங்களுடன் தனது இரு தேவியர் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி பிரம்மா இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையைப் போல் மிகப்பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகத்தியர் தனக்கு ஒரு மகள் வேண்டும் என இங்குள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மகாலட்சுமி இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் இருந்த தாமரை மலர் மீது விளையாடுவதை கண்டார். அக்குழந்தையை எடுத்து அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது தன் துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவுக்கும் சன்னதி உள்ளது.

சோழநாட்டை ஆண்டு வந்த தினகர மகாராஜன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளைக் கொன்று விட்டான். இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. இதனால் நாடு மனைவி மக்களை இழந்து சுற்றித்திரிந்தான். அப்போது ஒரு வியாதியுள்ள ஓரு நாய் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும் தோற்றப்பொலிவுடனும் விளங்கியது. இதைப்பார்த்த மன்னன் தானும் அந்நதியில் நீராடி தனது தோஷம் நீங்கப்பெற்று நாடு நகரத்தை திரும்பப் பெற்றான். அவன் நீராடிய இடத்தில் இரண்டு நதிகள் கூடின. அந்த நதிகளின் கரையில் சிவாலயம் கட்டினான். நதிகள் கூடியதால் திருக்கூடலையாற்றூர் என்று பெயரும் வைத்தான். மன்னன் கட்டிய கோயில் பழுதடைந்தது. சிலைகளைக் காணவில்லை. அப்போது அம்பாள் அவ்வூர் பொன்னப்ப குருக்களின் கனவில் தோன்றி நான் ஆற்றில் கிடக்கிறேன் என்றாள். அதன்பின் குருக்கள் ஆற்றில் கிடந்த சிலைகளை எடுத்து தற்போதுள்ள கோயிலை கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்தார். சுந்தரர் திருமுதுகுன்றம் தலத்தை தரிசிக்க சென்றபோது இத்தலத்தை வணங்காமல் சென்றார். இறைவன் அந்தணராக வந்து சுந்தரர் முன்செல்ல சுந்தரர் அவரைத் திருமுதுகுன்றத்திற்கு வழி யாதெனக் கேட்டார். அந்தணராக வந்த இறைவனோ கூடலையாற்றுருக்கு வழி இது என்று கூறி மறைய திடுக்கிட்ட சுந்தரர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டார். சுந்தரமூர்த்தி நாயனார் வந்த அந்தணர் சிவபெருமானே என்று அறிந்து இறைவன் திருவருளை வியந்து தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் கூடலையாற்றூர் இறைவன் தன் முன் வந்த அதிசயத்தை தான் அறிந்து கொள்ளாமல் போனதை குறிப்பிடுகிறார். தனது பாடல்கள் பத்தினையும் பாடுபவர்களது வினைகள் பற்றுகள் அனைத்தும் கெடுவது உறுதி என்று கடைசி பாடலில் குறிப்பிடுகிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சுந்தரர், அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளனர்.


சித்தர்களின் உடலை ஏன் எரிக்காமல் ஜீவ சமாதி செய்கிறார்கள்?

பெருமையற்றவர் உடல் எரிக்கப்பட்டு பெருமையுள்ளவர் உடல் புதைக்கப் படவேண்டும் என்று திரு மூலர் சொல்கிறார்.

ஞானியர் தங்கள் உடலையே கோவிலாக கொண்டு வாழ்பவர்கள். அந்த உடலுக்கு தீவைப்பது திருக்கோவிலுக்கே தீவைப்பதற்க்கு சமனாகும். அவ்வாறு செய்தால் மண்ணில் மழையின்றி கொடிய பஞ்சம் ஏற்படும். மன்னர் அரசாட்சியை இழக்க வேண்டி வரும். அத்துடன் ஞானியரின் உடல்கள் அடக்கம் செய்ய ஆட்கள் இல்லாது மண்ணில் கிடந்தது அழிந்தால் அந்த நாட்டின் அழகு எல்லாம் கெட்டு நாடு வீழ்ச்சியடைந்து பெருந்துன்பம் ஏற்படும் என்றும் இவர்கள் உடல் மண்ணில் அடக்கம் செய்வதால் நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்றும் நாடுவளம் பெறுவதுடன் நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும் என்று சொல்கிறார் திருமூலர்

இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து வெவ்வேறு இடங்களில் நடமாடி மீண்டும் அடக்கமாகின்றார்கள். இதனால் இவர்களை அடக்கம் செய்தததாக சொல்லாமல் ஜீவ சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -18

வைஷ்ணவ யக்ஞம் இனிதாக அஸ்தினாபுரத்தில் நிறைவேறியது. யாகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அரசர்கள் அனைவரும் பரம திருப்தி அடைந்தனர். ஆயினும் இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்திற்கு இணையாகது என்பது வந்திருந்த அறிஞர்கள் கருந்தாக இருந்தது. வந்திருந்த மன்னர்கள் அனைவரும் முறைப்படி கௌரவிக்கப்பட்டு திருப்தியாக திருப்பி அனுப்பப்பட்டனர். யக்ஞம் சிறப்பாக நிறைவேறுவதற்கு கர்ணன் எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக இருந்த படியால் துரியோதனன் கர்ணனை மனமாற பாராட்டி தனது நன்றியை கூறினான். அப்போது கர்ணன் தன் உயிர் வாழ்ந்திருக்கும் காலம் எல்லாம் துரியோதனனுக்கு பணிவிடை செய்வேன் என்றும் அர்ஜுனனைக் கொல்லும் வரையில் தான் மது மாமிசம் அருந்த போவதில்லை என்று கர்ணன் விரதம் பூண்டான். இத்தீர்மானம் தக்க வேவுக்காரர்கள் மூலம் பாண்டவர்களுடைய காதுக்கு இச்செய்தி எட்டியது.

கர்ணன் மற்றுமொரு பாராட்டுதலுக்குரிய விரதம் எடுத்துக் கொண்டான். தன்னிடத்தில் இருப்பவற்றை யார் தானமாக கேட்டாலும் அதை அவர்களுக்கு அக்கணமே எடுத்துக் கொடுத்து விடுவேன் என்பது அப்பொழுது அவன் எடுத்துக்கொண்ட விரதம் ஆகும். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் அவன் கொண்டிருந்த இந்த விரதமே கர்ணன் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாகும்.

துர்வாச மகரிஷி அஸ்தினாபுரத்தில் துரியோதனனை வந்து சந்தித்தார். இந்த மகரிஷி பல ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களின் தாயாகிய குந்திதேவி சிறுமியாய் இருந்த பொழுது நாம் விரும்பிய தேவதையை தன்னிடத்தில் ஆவாஹனம் பண்ணி கொள்ளும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்திருந்தார். இம்மகரிஷி 10000 சிஷ்யர்களுடன் அஸ்தினாபுரத்தில் துரியோதனனிடம் விருந்தோம்பலை எதிர்பார்த்து நின்றார். முன்கோபமே வடிவெடுத்த முனிவரை திருப்திபடுத்த துரியோதனன் விரும்பினான். அவரை திருப்திப்படுத்தவில்லை என்றால் அவர் கோபித்துகொண்டு யாரையும் சாபம் அளிக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. அவரிடம் இருக்கும் தெய்வீகத்தன்மையை துரியோதனன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக பக்தி பூர்வமாக துரியோதனன் அவருக்கு பணிவிடை பண்ணினான். துரியோதனன் புரிந்த பணிவிடைக்கு துர்வாச மகரிஷி பரம திருப்தி அடைந்தார். அவனுக்கு வேண்டிய வரத்தை கேட்கலாம் என்று துரியோதனனிடம் அவர் மகிழ்வுடன் கேட்டார். தனக்கு வாய்ந்த இந்த சந்தர்ப்பத்தை துரியோதனன் நன்கு பயன்படுத்திக் கொண்டான்.

தாங்கள் குருவம்சத்தின் ஒரு பகுதியாகிய கௌரவர்களிடம் தங்களின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டீர்கள். அதுபோல் காம்யக வனத்தில் இருக்கும் குரு வம்சத்தின் இன்னொரு பகுதியாக இருக்கும் பாண்டவர்களின் இருப்பிடம் செல்ல வேண்டும். அங்கு திரௌபதி எவ்வளவு பேர் வந்தாலும் அனைவருக்கும் உணவு கொடுத்து விருந்தோம்பல் செய்யும் சக்தியை பெற்றிருக்கின்றாள். பாண்டவர்கள் அனைவரும் நண்பகல் உணவு சாப்பிட்ட பின்பு அவர்களிடம் நீங்கள் உங்கள் விருந்தோம்பலை கேட்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -17

வனத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் அஸ்தினாபுரத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தது. பீஷ்மர் துரியோதனனை சபா மண்டபத்திற்கு வரவழைத்து அறநெறி பிறழாத பாண்டவர்களிடம் துரியோதனன் செய்த செயலை கண்டித்தார். துரியோதனன் பீஷ்மர் கொடுத்த புத்திமதியை பொருட்படுத்தவில்லை. பீஷ்மர் பாண்டவர்களை எப்பொழுதும் புகழ்வதாகவும் தன்னை இகழவும் செய்கின்றார். ஆனாலும் எனக்கு தீங்கு ஏதும் வரவில்லை. நான் நன்கு வாழ்ந்து வருகின்றேன் என்று தன் தொடையை தட்டி பலத்த ஓசை பண்ணிவிட்டு அங்கு பீஷ்மரை அவமதிக்கும் பாங்கில் அங்கிருந்து வெளியேறினான்.

துரியோதனன் கர்ணனிடம் யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யக்ஞத்தை பார்த்த நாள் முதல் அத்தகைய வேள்வி ஒன்றை தானும் நடத்தி மாமன்னன் என்ற உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்று ஆசை இருக்கின்றது என்று தன்னுடைய எண்ணத்தை தெரிவித்தான். அதற்கு கர்ணன் அவனுடைய ஆசையை முற்றிலும் ஆமோதித்து ராஜசூய யக்ஞம் நடத்துவதற்கு முதலில் இவ்வுலகில் இருக்கும் மன்னர்கள் அனைவருடைய அனுமதியையும் பெறவேண்டும். தான் இந்த நிலவுலகை சுற்றிவந்து அனைத்து மன்னர்களின் அனுமதியையும் பெற்று யக்ஞம் நடத்தி உனக்குரிய உயர்ந்த அந்த பதவியை பெற்று தருகின்றேன். நான் இந்த நிலவுலகை சுற்றி வருவதற்குள் நீ யக்ஞம் நடத்த ஏற்படு செய்வாயாக என்று கூறினான்.

ராஐசூய யக்ஞம் நடத்துவதற்கு புரோகிதர்களிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. புரோகிதர்கள் இதற்கு சம்மதம் கொடுக்கவில்லை. ஏற்கனவே ராஐசூய யக்ஞம் நடத்திய யுதிஷ்டிரன் வாழ்ந்திருக்கும் போது துரியோதனன் மற்றொரு ராஐசூய யாக்ஞம் நடத்துவது பொருந்தாது மற்றும் மன்னராகிய திருதரஷ்டிரர் இருக்கும் போது அவருடைய மகன் யக்ஞம் நடத்துவது பொருந்த செயல் என்று தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவித்தார்கள். இப்போது துரியோதனன் தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு வேறு ஒரு உபாயத்தை எடுத்துரைத்தான். வைஷ்ணவ யக்ஞம் சீரிலும் சிறப்பிலும் ராஜசூய யக்ஞத்துக்கு நிகரானது. ஆகவே வைஷ்ணவ யக்ஞம் செய்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டான். அனைவரும் சம்மதம் கொடுத்தார்கள். யக்ஞத்திற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தார்கள். அக்கம் பக்கம் இருக்கும் அனைத்து மன்னர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன.

காம்யக வனத்தில் இருக்கும் பாண்டவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அழைப்புகள் எடுத்துச்சென்றவர்கள் முறையாக அனைத்து விஷயங்களையும் பாண்டவர்களிடம் எடுத்துரைத்தனர். அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட யுதிஷ்டிரன் யக்ஞம் இனிது நிறைவேற வேண்டும் என்று ஆசிகள் கூறி பதிமூன்று வருடங்கள் வன வாசத்தில் இருக்கும் காரணத்தால் தங்களால் வரஇயலாது என்று கூறினான். அப்போது பீமன் அழைக்க வந்தவர்களிடம் எங்களுடைய பதிமூன்று வருட வனவாசத்திற்கு பிறகு நாங்கள் ஒரு யக்ஞம் செய்வோம். அந்த யக்ஞத்திற்கு திருதராஷ்டிரரின் மைந்தர்கள் அனைவரும் ஆஹீதியாக்க படைக்கப்படுவார்கள் இந்த செய்தியை துரியோதனனிடம் தெரிவிக்கவும் என்று கூறினான். அழைக்கவந்தவர்களும் நடந்தவைகள் அனைத்தையும் அரண்மனையில் தெரிவித்தார்கள்.