மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -19

துர்வாச மகரிஷி துரியோதனின் வேண்டுகோளுக்கிணங்கி பாண்டவர்கள் இருக்கும் காம்யக வனத்திற்கு தனது சீடர்களுடன் புறப்பட்டார். இப்பொழுது துரியோதனனும் கர்ணனும் சகுனியும் பரமானந்தத்துடன் இருந்தனர். தெய்வாதீனமாக தங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது என அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் திரௌபதி பகல் உணவு அருந்திய பிறகு அன்றைக்கு வேறு யாருக்கும் ஒரு கவளம் அண்ணம் கூட அவளால் அளிக்க இயலாது. உணவிற்க்காக விருந்தினர்கள் அடுத்த நாள் வரையில் காத்திருக்க வேண்டும் அத்தகைய நெருக்கடி அமையும்போது துர்வாச மகரிஷிக்கு கோபம் வந்துவிடும். அவர் இடும் சாபம் பாண்டவர்களை சாம்பலாக்கி விடும் இத்தகைய சூழ்நிலை தற்செயலாக அமைந்தது. அதன் விளைவுக்கு கௌரவர்கள் பொறுப்பாளிகள் ஆகமாட்டார்கள். எனவே பாண்டவர்களின் அழிவை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்கள்களும் பெரும் கூட்டமாக பாண்டவர்கள் இருக்கும் காம்யக வனத்திற்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களை பாண்டவ சகோதரர்கள் முறைப்படி தக்க மரியாதையுடன் வரவேற்று மரியாதை செலுத்தினார்கள். துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்களும் நதியில் நீராடிவிட்டு வந்து போஜனம் பண்ண வேண்டும் என்று வேண்டிக் கொள்ளப்பட்டனர். அவர்களும் வரவேற்பை எற்றுக்கொண்டு நதிக்கரைக்கு சென்றனர். துர்வாச மகரிஷியும் அவருடைய சீடர்களும் வனத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையில் திரௌபதி தன்னுடைய மதிய உணவை முடித்திருந்தாள். அட்சய பாத்திரம் அன்றைக்கு மேலும் உணவு தராது.

துர்வாச மகரிஷியும் அவரை சார்ந்திருந்த சீடர்களின் பெருங்கூட்டமும் உணவு உண்ண அழைக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று கேள்வியுற்ற திரௌபதி பயம் அடைந்தாள். தற்செயலாக தனக்கு வந்து வாய்ந்த நெருக்கடியிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அவள் உள்ளக்கசிவுடன் கிருஷ்ணனை நோக்கி பிரார்த்தனை பண்ணினாள். கிருஷ்ணன் திடீரென்று அங்கு பிரசன்னமாகி தனக்கு கடுமையாக பசிக்கிறது தன்னுடைய பசியை போக்க உணவு வேண்டும் என்று திரௌபதியிடம் கேட்டான். திரௌபதிக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி வந்து ஆறாத் துயரத்தில் ஆழ்த்தியது. அவள் கதறினாள் கிருஷ்ணனும் அவளுடைய வேதனையை அறிந்து கொண்டான். அவளிடமிருந்த அட்சய பாத்திரத்தை கொண்டுவரும்படி அவன் அவளிடம் கேட்டான்.

திரௌபதி கொண்டு வந்து நீட்டிய பாத்திரத்தை கிருஷ்ணன் கூர்ந்து பார்த்தான். அதனுள் ஒரு பருக்கை அன்னம் ஓட்டிக்கொண்டிருந்தது. மகிழ்வுடன் அந்த அன்னத்தை சுரண்டி எடுத்தான் தன் வாய்க்குள் போடும் பொழுது என் பசியை முற்றிலும் அகன்று போயிற்று. வயிறு முழுக்க உணவு உண்டவன் ஆகிவிட்டேன். மேற்கொண்டு ஒரு கவளம் உணவு கூட என்னால் சாப்பிட இயலாது என்று கிருஷ்ணன் கூறியதும் துர்வாச மகரிஷிக்கும் பெரும் கூட்டமாக வந்த அவரது சீடர்களுக்கும் நூதனமான அனுபவம் ஒன்றே பெற்றனர். அவர்கள் எல்லோருக்கும் பசி பறந்தோடி விட்டது மேற்கொண்டு சாப்பிடுவது அவர்களுக்கு சாத்தியப்படாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.