மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -25

யுதிஷ்டிரன் தன்னுடைய தெய்வீக தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். பன்னிரண்டு வருஷகாலம் வனவாசத்தை நாங்கள் வெற்றிகரமாக கழித்து உள்ளோம். எப்பொழுதும் யாரிடத்திலும் நான் எந்த வரத்தையும் கேட்பதில்லை. ஆயினும் தந்தையே நான் இப்பொழுது ஒரு நெருக்கடியில் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நாங்கள் எல்லாரும் ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் பண்ணியாக வேண்டும். அதை வெற்றிகரமாக முடிக்க எங்களை ஆசீர்வதிக்கும்படி பிரார்த்திக்கிறேன் என்றான். அதற்கு தர்ம தேவதை உன்னை நீ வனத்திலோ மலைக்குகையிலோ உன்னை மறைத்துக் கொள்ள மாட்டாய். மறைந்திருத்தல் பொருட்டு விண்ணுலகிற்கு ஓடிப் போக மாட்டாய். சமுதாயத்திலேயே வசித்திருந்து பயன்படுகின்ற பணிவிடைகளை புரிந்து கொண்டு இருப்பாய். அப்படியிருந்தும் ஒரு வருடத்திற்கு உன்னை யார் என்று கண்டுபிடிக்க யாருக்கும் இயலாது. நான் உன்னை முழுமனதோடு உன்னை ஆசீர்வதிக்கிறேன் என்று தர்மதேவதை சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்தார்.

அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அக்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள். பாண்டவர்கள் 12 வாருட வனவாசத்தை நல்லமுறையில் பயன்படுத்தினார்கள். மாமுனிவர்கள் அந்தணர்கள் தவசிகள் என பல நல்லோர்களின் இணக்கம் அவர்களுக்கு அமைந்ததே இதற்கு முதல் காரணமாக இருந்தது. 12 வருட காலமும் அருள் நாட்டத்திலேயே அவர்கள் மூழ்கியிருந்தனர். சான்றோர்களுடைய வரலாற்று ஆராய்ச்சிலேயே அவர்கள் ஈடுபட்டிருந்தனர். 12 வாருட வனவாசம் முடிவுக்கு வந்தது.

அக்ஞாத வாசத்தை பற்றி பாண்டவர்கள் திட்டமிடலாயினர். இப்பொழுது பாண்டவர்களை தவிர வேறு யாரும் அவருடன் இருக்க இயலாது முனிவர்களும் கூட அத்தீர்மானத்தில் கலந்து கொள்ளலாகாது. ஆகையால் அரை மனதுடன் யுதிஷ்டிரன் தங்களை விட்டுப் பிரிந்து போகும் படி முனிவர்களையும் மற்ற மேன்மக்களையும் பணிவுடன் வேண்டிக் கொண்டார்கள். பாண்டவர்களை சந்திக்க வருபவர்களுக்கு ஓயாமல் உணவு வழங்கிக் கொண்டிருந்த அட்சய பாத்திரத்தின் செயலும் ஒரு மங்களகரமான முடிவுக்கு வந்தது. ரிஷிபுங்கவர்கள் மாமுனிவர்கள் அந்தணர்கள் தவசிகள் ஆகிய எல்லோரும் பாண்டவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அவரவர் போக்கில் பிரிந்து போயினர்.

வன பருவம் இந்த பகுதியுடன் முற்றியது. அடுத்து விராட பருவம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.