மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -1

காம்யக வனத்திற்கு சென்ற பாண்டவர்கள் தங்கி வாழ்வதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொண்டார்கள். தினந்தோறும் முனிவர்களும் சான்றோர்களும் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து இவர்களை சந்தித்து கொண்டிருந்தனர். வருகின்றவர்களுக்கு தக்க முறையில் உணவு செய்து வைத்து உபசரிக்கும் பிரச்சனை ஒன்று உண்டாயிற்று. உலகனைத்துக்கும் உணவை கொடுக்கும் சூரிய பகவானிடம் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை யுதிஷ்டிரன் பக்திபூர்வமாக தெரிவித்தான். அவனுடைய பிரார்த்தனைக்கும் தவத்திற்கும் சூரியநாராயணன் இணங்கி அவனுக்கு ஓர் அட்சய பாத்திரத்தை கொடுத்தார். அன்றைக்கு உரிய உணவு வகைகளை சமைத்து அவைகளை அப்பாத்திரத்தில் போடுவது திரௌபதியின் கடமையாகும். அதன் பிறகு எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவை பாத்திரத்திலிருந்து அவள் எடுத்து வழங்கிக் கொண்டே இருப்பாள். உணவு வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதன் பிறகு யுதிஷ்டிரனின் தம்பிகள் நால்வருக்கும் அதிலிருந்து அவள் உணவு எடுத்துக் கொடுப்பாள். பீமனுக்கு ஏற்ற பெரும் உணவும் அதில் வளர்ந்து கொண்டே இருந்தது. தம்பிமார்கள் நால்வரும் உணவருந்திய பிறகு யுதிஷ்டிரன் உண்பான். இறுதியாக திரௌபதியும் உணவு உண்பாள். அதன் பிறகு அட்சயபாத்திரம் அன்றைக்கு காலியாகிவிடும் உணவை வளர்க்கும் சக்தி அன்றைக்கு அத்துடன் முடிவுறும். அதன் பிறகு அந்த சக்தி அடுத்த நாள் தான் வரும். பாண்டவர்கள் வனவாசம் இருக்கும் 12 வருடங்களுக்கு அட்சயபாத்திரம் இதன்படி உணவு வழங்கும் தன்மையை வைத்திருக்கும். பாண்டவர்களுக்கு இறைவன் அருளை சார்ந்திருந்த வனவாசமும் இனிதே நடைபெற்று வந்தது.

அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரர் விதுரரிடம் பாண்டவர்கள் காட்டிற்கு சென்றது குறித்து மக்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு விதுரர் பாண்டவர்கள் காட்டிற்கு சென்றது குறித்து பொதுமக்களிடம் திருப்தி ஏதுமில்லை. அதிருப்தி மட்டுமே உள்ளது. துரியோதனனின் ஆட்சியை விட யுதிஷ்டிரரின் ஆட்சி மேலானது என்று மக்கள் பாண்டவர்களிடம் அன்பு வைத்திருக்கின்றனர். துரியோதனனிடம் மனஅமைதி இல்லை. அச்சம் அவனுடைய உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கிறது. காட்டில் பாண்டவர்கள் வருந்திக் கொண்டிருப்பதற்கு ஏற்ப கௌரவர்களுடைய பாவம் இங்கு அதிகரிக்கும். பாண்டவர்களை திருப்பி அழைத்து அவர்களுடைய ராஜ்யத்தை அவர்களுக்கே திருப்பி ஒப்படைப்பதே பொருத்தமானது. அப்படி செய்யாவிட்டால் கௌரவர்கள் பாண்டவர்களால் அழிந்து போவது நிச்சயம் என்று விதுரர் திருதராஷ்டிரரிடம் கூறினார்.

விதுரர் இவ்வாறு கூறியது திருதராஷ்டிரருக்கு பிடிக்கவில்லை. பாண்டவர்களுக்கு விதுரர் நன்மை செய்கிறார். கௌரவர்களுக்கு எதிரியாக இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டார். அவருடைய எண்ணத்திற்கேற்ப கோபத்தோடு நாடு கடத்தப்பட்டவர்களிடத்தில் உனக்கு அன்பு மிக அதிகமாக இருக்கும் என்றால் நீயும் அவர்களோடு போய் சேர்ந்து கொள்ளலாம். எங்களோடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று திருதராஷ்டிரர் கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.