மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -16

கந்தர்வர்களின் தலைவனான சித்திரசேனனிடம் அர்ஜுனன் வேண்டுதல் ஒன்றை வைத்தான். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் யுதிஷ்டிரன் முன்பு நிறுத்தும் படியும் யுதிஷ்டிரன் கூறும் தண்டனையை இவர்களுக்கு கொடுக்கும்படியும் வேண்டுகோள் வைத்தான். இதற்கு சித்திரசேனன் முழுவதும் சம்மதம் கொடுத்தான். கௌரவர்கள் அனைவரும் யுதிஷ்டிரன் முன்பு அழைத்துச் செல்லப்பட்டனர். துரியோதனன் செய்த பிள்ளைக்காக யுதிஷ்டிரன் அவனை சிறிது கடிந்து கொண்டான். இதுபோன்ற பொருளற்ற நடவடிக்கை ஏதும் இனி செய்ய வேண்டாம் என்றும் தலைமை பட்டணத்திற்கு திரும்பிப்போய் அமைதியாக வாழவேண்டும். பகையால் பயனேதுமில்லை. இப்போது நிகழ்ந்துள்ள தௌர்பாக்கியங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு இன்புற்று வாழ்ந்து இருக்கும்படி துரியோதனனுக்கு புத்திமதி கூறி அனுப்பி வைத்தான். துரியோதனன் வெட்கத்தாலும் அவமானத்தாலும் முகம் வாடிப்போனவனாக அங்கிருந்து கிளம்பினான். உடன் வந்தவர்கள் அனைவரையும் அஸ்தினாபுரம் அனுப்பிவிட்டு அவன் தனியாக ஓரிடத்தில் தங்கினான்.

துரியோதனன் திரும்பி வந்ததை அறிந்த கர்ணன் திட்டப்படி துரியோதனன் காரியத்தை நிறைவேற்றி வந்திருக்கிறான் என கருதி துரியோதனனை கர்ணன் பாராட்டினான். ஆனால் துரியோதனனோ தனக்கு நேர்ந்த தௌர்பாக்கியத்தையும் யுதிஷ்டிரனின் மேன்மை தாங்கிய எண்ணமே தன்னை கந்தர்வர்களிடம் இருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது என்றும் தெரிவித்தான். தான் வெறுக்கும் பாண்டவர்களால் தன்னுடைய உயிர் காப்பாற்றப்பட்டதை எண்ணி மேலும் உயிர் வாழ்ந்திருக்க துரியோதனன் விருப்பமில்லை. துச்சாதனனை சிம்மாசனத்தில் அமர்த்தி வைத்து விட்டு பட்டினி கிடந்து உயிர் துறக்க தீர்மானித்தான் துரியோதனன்.

அவனுடைய தம்பிமார்கள் அவனுடைய பாதங்களில் விழுந்து கும்பிட்டு அத்தகைய தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார்கள். துரியோதனன் தான் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து மாறவில்லை. அனைத்தையும் கேட்ட கர்ணன் அப்படி செய்வது பயங்கர பயந்தாங்கோலித்தனம் என்றும் க்ஷத்ரியன் ஒருவனுக்கு அது சரியானது இல்லை என்றும் தங்களை ஆண்டுவந்த வேந்தனுக்கு செய்ய வேண்டிய கடமையை தானே பாண்டவர்கள் செய்தனர் என்றும் கர்ணன் நிலைமையை எடுத்துக் காட்டி துரியோதனன் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்குமாறு கூறினான். ஆனால் துரியோதனன் தான் கொண்டிருந்த தீர்மானத்தில் இருந்து பின் வாங்காதவனாக தென்பட்டான்.

அத்தருணத்தில் தானவர்களும் தைத்யர்களும் துரியோதனன் முன்னிலையில் வந்து தேவர்களால் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தை எடுத்து விளக்கினார்கள். தேவர்களோடு போர் புரிய அவர்கள் தீர்மானித்து இருந்தார்கள். துரியோதனன் மடிந்து போனால் தங்களுடைய போர் வலிமை குறைந்துவிடும். பாண்டவர்களுக்கு துணை புரிய தேவர்கள் முன்வந்திருக்கிறார்கள். தேவர்களைத் தோற்கடிப்பதன் வாயிலாக பாண்டவர்களை தோற்கடிப்பது உறுதி என்று அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். அரக்கர்கள் கொடுத்த இந்த வாக்குறுதி துரியோதனனுக்கு புதிய வல்லமையை கொடுத்தது இத்தகைய புதிய நம்பிக்கை அடைய பெற்றவனாக துரியோதனன் அஸ்தினாபுரம் திரும்பி வந்தான்.

ஆருத்ரா தரிசனம்

பிறப்பே எடுக்காத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி இரண்டு புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஓர் விளகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார். ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தார் சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார். சேந்தனார் வீட்டுக்கு களி உண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம் ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில் இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில் திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும் ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான். திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா என்று கூறிக் கதறி அழுதாள். அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள் இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சிவபெருமான் பக்தர்களுக்காக இப்பூமியில் நின்ற நாள் ஆருத்ரா நன்னாள்.

காயத்திரி மந்திரம்

விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும். பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள். 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள். இந்த மந்திரத்தை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. காயத்திரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு காயத்திரி மந்திரம் என்ற பெயர் ஆயிற்று.

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம் எனக் குறிப்பிட்டுள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் நதிகளில் நான் கங்கையாகவும் மலைகளில் நான் விந்திய மலையாகவும் மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகையில் பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும் காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம் தான். ஆனால் மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு ரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம் எனக் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் உயர் அறிவு சக்தியினை அளித்து அறியாமையை நீக்க வேண்டும் என்பதாகும். இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது. வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

காயத்திரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

7 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

11 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பது நரம்பு மண்டலத்திலும் சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பது ஒருவரின் அழிவுப்பூர்வ ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

31 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது மூளையின் க்ரே பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

150 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது உயர்நிலையினை மனம் மற்றும் மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாக இருக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பற்றி இதுவரை விஞ்ஞான ஆய்வுகள் செய்யப்படவில்லை. என்றாலும் அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.

கைலி கட்டும் அரங்கன்

ஸ்ரீரங்கம் கோயிலில் அர்ஜுன மண்டபம் வடகிழக்கு ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது. கிழக்கு பதிப்பகத்தால் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட மதுரை சுல்தான்கள் புத்தகத்தில் துலுக்க நாச்சியார் பற்றிய சித்திரம் மிக அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. துலுக்க நாச்சியார் என்பவர் அரங்கநாதரின் மேல் காதல் கொண்ட சுரதானி என்ற இயற்பெயர் கொண்ட இசுலாமியப் பெண்ணாவார். இசுலாமிய வழக்கப்படி அகிலும் சந்தனமும் கலந்த தூபப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. இவருக்கு அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையுடன் காட்சியளிக்கிறார்.

மாலிக் கபூர் தில்லியை ஆண்ட அலாவுதீன் கில்சியின் தலைமைப் படைத்தலைவர். தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம் கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவில்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன் கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார். திருவரங்கத்தினை கொள்ளையடித்த போது டில்லிக்கு அரங்கநாதர் விக்ரகத்தினையும் கொண்டு சென்றார்கள். ரங்கநாதரின் உற்சவர் விக்ரகத்தை தில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்திவந்த சுல்தானிடம் அந்த விக்ரகம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விக்ரகத்தைப் பார்த்த சுல்தானின் மகள் அதை ஒரு விளையாட்டுப் பதுமையாகக் கருதி தன் அறையிலேயே வைத்துக் கொண்டு அந்த அரங்கனை உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள்.

அரங்கன் ஆக்கிரமிப்பாளர்களுடன் டில்லி செல்வதைப் பார்த்த ஒரு பெண்மணி திருக்கரம்பனூரைச் சேர்ந்தவள். தானும் அவர்களைப் பின் தொடர்ந்து டில்லி சென்றாள். அவள் மூலமாகத்தான் அரங்கன் தில்லிக்குச் சென்றுவிட்ட விவரம் இங்கிருப்போருக்குத் தெரிய வந்தது. இவ்வாறு அரங்கனை மீட்டுக் கொண்டுவர தன்னாலியன்ற சேவையினைப் புரிந்ததால் அந்தப் பெண்மணியை பின் சென்ற வல்லி என்று போற்றி வைணவம் பாராட்டுகிறது. அரங்கனை மீட்க எண்ணி தலைமை பட்டருடன் பின்சென்ற வல்லி என்ற நாட்டியப் பெண்ணும் அவளது இசை நாட்டிய குழுவுமாக ஒரு அறுபது பேர் டில்லி சென்று அரசரை இசையில் மகிழ்வித்து அரங்கனைத் திருப்பித் தரக் கேட்கிறார்கள். தன் மகளிடம் இருப்பவர்தான் அரங்கன் என்பதை அறிந்த மன்னர் அரங்கனை கொண்டு செல்ல அனுமதி தந்து அவர்களுடைய மத உணர்வுக்கு மதிப்பளித்து அந்த விக்ரகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுமாறு தன் மகளிடம் சொன்னான்.

இளவரசி கொடுக்க மறுக்கிறாள். இளவரசியிடமிருந்து பெறுவது சுலபமாகயில்லை. அதனால் இசைக்குழு இளவரசியை பாடல்கள் பாடி ஏமாற்றித் தூங்கவைத்து அரங்கனை எடுத்துவந்து விடுகிறார்கள். இளவரசி கண்விழித்து தன் அறையில் அரங்கனைக் காணாமல் தொலைந்தது அறிந்து பதறி நோய்வாய்ப் படுகிறாள். மன்னன் கவலையுற்று தன் படையை ஸ்ரீரங்கம் அனுப்பி அரங்கனையும் எடுத்துவரப் பணிக்கிறார். அரங்கனின் வடிவழகில் மனம் பறிகொடுத்திருந்த அந்தப் பெண்ணோ மிகுந்த மன வருத்தத்துடன் அந்த அழகனைத் தான் நேரில் காணும் பொருட்டு நேரே திருவரங்கத்திற்கே வந்துவிடுகிறாள். டில்லியில் இருந்து இளவரசி வந்திருப்பதை அறிந்த தலைமை பட்டரோடு சிலர் தாயார் சிலைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து வில்வ மரத்தினடியில் தாயாரைப் புதைத்து விட்டு அரங்கனோடு தலைமறைவாகி விடுகின்றனர். ஸ்ரீரங்கம் கோவிலிலும் அரங்கன் இல்லாமல் கோவில் மூடியிருப்பதைக் கண்டு தன் கற்பனையில் அவள் உருவாக்கி வைத்திருந்த உருவம் அங்கே காணக்கிடைக்காததால் மனம் வெதும்பி அங்கேயே மயக்கமடைந்து இறந்து அரங்கன் திருவடி சேர்ந்தாள். அவள் உடலிலிருந்து ஒரு ஒளி மட்டும் கோவிலுக்குள் செல்வதைச் சுற்றி இருந்தவர்கள் பார்க்கிறார்கள். அதன் பிறகு அவளின் தந்தை ஏராளமான செல்வத்தைக் கோவிலுக்கு எழுதிவைத்தார்.

முகமதியருக்கு உருவ வழிபாடு கிடையாதென்பதால் அரங்கன் சன்னதியிலேயே பிரகாரத்தில் கிளிமண்டபத்திற்கெதிராக அவளை ஒரு சித்திரமாக மட்டும் வரைந்து ஒரு சன்னதியில் வைத்து துலுக்க நாச்சியார் என்ற பெயரில் வழிபாடு நடக்கின்றது. பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள அர்ச்சுன மண்டபத்தில் அவள் ஓவியமாய் இன்றைக்கும் மிளிர்கிறாள். மதம் கடந்த அங்கீகாரமாக இன்றும் அரங்கனுக்கு காலையில் லுங்கி போன்ற வஸ்திரம் அணிவித்து அவர்கள் உணவாக ரொட்டி வெண்ணை நைவேத்தியம் செய்கிறார்கள். இந்த ரொட்டி நம்முடையது போல் இல்லாமல் லேசாக வெல்லம் கலந்து இனிப்பாக இருக்கும். மிக மிக மெல்லியதாக இருக்கும் ரொட்டிக்கு தொட்டுக் கொள்ள வெண்ணை. திருமஞ்சன காலங்களில் வேட்டிக்குப் பதில் லுங்கி வஸ்திரம். அரங்கனுக்கு வெந்நீரில் மட்டுமே திருமஞ்சனம். வெந்நீர் சூட்டை மணியக்காரர் கையில் வாங்கி சரியான பதம் என்று ஆமோதித்தபின் தான் செய்ய வேண்டும்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -15

கந்தர்வர்கள் கௌரவர்களின் கையை கட்டி கைது செய்து காம்யக வனத்திற்குள் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். கௌரவர்களின் கதியை பார்த்து பீமன் அகமகிழ்வு எய்தி மிக நன்று மிக நன்று என்று கத்தினான். எங்களை ஏளானம் செய்ய திட்டம் போட்டவர்களின் வினைப்பயன் அவர்களையே சூழ்ந்து கொண்டது என்று கத்தினான். பழிக்குப்பழி வாங்கும் செயலை நாங்கள் செய்திருக்க வேண்டும். ஆனால் எங்களின் பிரதிநிதிகளாக கந்தர்வர்கள் இச்செயலை செய்து விட்டார்கள் என்று உரக்க கூறினான். பீமனுடைய பேச்சை யுதிஷ்டிரன் ஆமோதிக்கவில்லை. நம்முடைய குடும்ப தகராறுகள் நம்முடனே இருக்கட்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வேற்றார் வந்து நம்முடைய உறவினர்களை தாக்குவதற்கு நாம் ஒரு போதும் அனுமதி தரக்கூடாது. அது மட்டுமில்லாமல் குடும்ப பெண்களையும் அவர்கள் சிறைபிடித்துச் செல்கின்றார்கள். குருவம்சத்துக்கு ஆபத்து என்று ஏதேனும் ஒன்று வந்தால் பாண்டவர்களாகிய நாமும் கௌரவர்களும் ஒன்று சேர்ந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று பீமனிடம் யுதிஷ்டிரன் கூறினான்.

துரியோதனன் தங்களை காப்பாற்றுமாறு தொடர்ந்து விண்ணப்பித்துக் கொண்டிருந்தது பாண்டவர்களுக்கு கேட்டது. யுதிஷ்டிரன் தனது சகோதரர்களிடம் யாரேனும் ஒருவர் ஆபத்தில் அகப்பட்டு இருந்தால் அவர்களை காப்பாற்றுவது என்பது ஒரு பொது விதி. இப்போது ஆபத்தில் நமது உறவினர்கள் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை காப்பற்ற நாம் அதிவிரைவாக ஒட நாம் கடமைப் பட்டிருக்கின்றோம். மேலும் துரியோதனன் காப்பாற்றுமாறு நம்மிடம் உதவி கேட்கிறான். இப்போது நான் யாக்ஞத்தில் ஈடுபட்டிருப்பதால் ஆயுதம் எதையும் கையாளலாகாது. ஆகையால் நீங்கள் நால்வரும் நமது உறவினர்களை காப்பாற்ற விரைந்து செல்லுங்கள் என்று உத்தரவிட்டார்.

யுதிஷ்டிரரின் ஆணைக்கு உட்பட்டு பாண்டவ சகோதரர்கள் நால்வரும் தங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கந்தர்வர்களோடு வீராவேசத்தோடு போர்புரிந்தார்கள். இந்தப்போராட்டம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது கந்தர்வர்களின் தலைவன் சித்தரசேனன் தான் இன்னானென்று காட்டிக்கொண்டு அர்ஜூனன் முன் வந்து நின்றான். இவ்வளவு நேரம் பயங்கரமாக போரிட்டு வந்த அர்ஜூனன் இந்திரலோகத்தில் தனக்கு குருவாக இருந்த சித்திரசேனனை பார்த்ததும் அவர் முன்பு வீழ்ந்து வணங்கினான். யுத்தம் நிறுத்தப்பட்டது. கௌரவர்களை ஏன் கைது செய்து அழைத்துச் செல்கின்றீர்கள் என்று இந்திர லோகத்து குருவான சித்திரசேனனிடம் மிகுந்த வணக்கத்துடன் அர்ஜூனன் கேட்டான்.

அதற்கு சித்திரசேனன் கஷ்டதிசையில் இருக்கும் பாண்டவர்களை பரிகாசம் செய்யும் பொருட்டு கௌரவர்கள் ராஜரீதியில் உடை அணிந்து ஆடம்பரமாக வனத்திற்குள் வந்தார்கள். அவனது நோக்கத்தை அறிந்து வந்த நாங்கள் அவனை தண்டித்தல் பொருட்டு கைது செய்து அழைத்துச் செல்கின்றோம் என்றார்.

தொடரும்………

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -14

ரிஷிகள் முனிவர்கள் யோகிகள் ஆகியோர் யுதிஷ்டிரன் இருக்கும் இடத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றனர். கிருஷ்ணனும் அடிக்கடி பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு தக்க ஆதரவு கொடுக்கின்றான். அங்கு ஓயாது வந்து கொண்டிருக்கும் விருந்தினர்களுக்கு திரௌபதி அறுசுவை உணவை திருப்திகரமாக கொடுத்துக் கொண்டிருக்கிறாள். யுதிஷ்டிரன் இருக்குமிடம் கைலாசத்துக்கு வைகுண்டத்திற்கும் நிகரானது போல் தென்படுகிறது. போர்க்கலையில் அவர்கள் உச்ச ஸ்தானம் பெற்றிருக்கின்றார்கள். என்று பிராமணன் திருதராஷ்டிரன் தெரிவித்தார்.

பிராமணன் கூறிய அனைத்தையும் கேட்ட திருதரஷ்டிரருடைய மனதில் பெரும் தடுமாற்றம் ஏற்பட்டது. அவருடைய மனதில் போராட்டம் பன்மடங்கு அதிகரித்தது. துரியோதனன் மீது அவர் வைத்திருந்த பாசம் அவனுடைய உள்ளத்தில் பன்மடங்கு இருந்ததாலும் பாண்டுவின் பிள்ளைகள் மீது அவர் வைத்திருந்த பாசம் வெறும் பெயரிலேயே இருந்ததும் அவரின் வேதனைக்கு காரணமாய் இருந்தது. அனைத்தையும் கேட்ட துரியோதனன் பாண்டவர்களிடம் ராணுவ பலம் இல்லை என்றும் தன்னுடைய ராணுவத்தை அசைக்க முடியாத படி தாம் பலப்படுத்தியிருப்பதாவும் எண்ணி உள்ளம் பூரிப்படைந்ததான். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னுடைய ராணுவத்தை பற்றியும் அதனுடைய பலத்தை பற்றியும் திருதரஷ்டிரரிடம் விளக்கி கூறினான்.

கர்ணனும் சகுனியும் துரியோதனனும் சதியாலோசனை ஒன்று செய்தார்கள். காம்யக வனத்திற்கு அருகில் அஸ்தினாபுரத்திற்கு சொந்தமான மாட்டுப்பண்ணை ஒன்று இருந்தது. அதை தாங்கள் பார்வையிட போவதாக திருதராஷ்டிரனிடம் சொல்லி அவருடைய அனுமதியைப் பெறவேண்டும். பின் அத்திட்டத்தின் படி பாண்டவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது. திருதராஷ்டிரரின் அனுமதியுடன் பெண்களை தங்களோடு அழைத்துக்கொண்டு பெருங்கூட்டமாக அவர்கள் புறப்பட்டு வனத்துக்குச் சென்றார்கள். அரச குடும்பத்து பெண்கள் ஆடம்பரத்துடன் பட்டாடைகள் நகைகள் அணிந்து இருப்பதை பார்த்து திரௌபதி தன் விதியை எண்ணி வருந்த வேண்டும். தாங்கள் ராஜபோகத்துடன் இருப்பதை பார்த்து பாண்டவர்களை வருத்தப்பட்டு துன்புறுதல் வேண்டும் என்றும் பல வகைகளில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு காம்யக வனத்திற்கு கிளம்பினார்கள்.

காம்யக வனத்திற்குள் வந்த கௌரவர் கூட்டத்தினர் அங்கு தூய நீர் நிறைந்திருந்த தடகம் ஒன்றை பார்த்தார்கள். முதலில் அதில் நீராடி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ள அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே விண்ணுலகில் இருந்து வந்த கந்தர்வர்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். கந்தர்வர்கள் நீராடிக்கொண்டிருந்தது கௌரவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. ஆகவே அத்தடாகத்தை உடனே காலி பண்ணவேண்டும் என்று அவர்களுக்கு துரியோதனன் உத்தரவிட்டான். ஆனால் கந்தர்வர்கள் அந்த உத்தரவை முற்றிலும் நிராகரித்து துரியோதனனை பொருட்படுத்தவில்லை. அங்கு தகராறு ஒன்று ஏற்பட்டது. அதி விரைவில் தகராறு ஒரு பெரிய போராட்டமாக வடிவெடுத்தது. கௌரவர்கள் விரைவில் தோற்கடிக்கப்பட்டனர். கர்ணன் தன்னுடைய ரதத்தை இழந்து அவமானத்துக்கு ஆளானான். மேலும் தான் ஆபத்துக்கு ஆளாகாத வண்ணம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். கந்தர்வர்கள் பெண்கள் உட்பட கௌரவர்கள் அனைவரையும் அவர்களது கைகளை கட்டி காட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -13

பாண்டவர்கள் காம்யக வனத்திற்கு திரும்பி வந்ததை அறிந்த கிருஷ்ணன் தன்னுடைய துணைவியான சத்தியபாமாவையும் அழைத்துக்கொண்டு பாண்டவர்களை பார்க்க வந்தான். இந்த சந்திப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. வனவாசத்தில் நடந்த அனுபவங்களை பாண்டவர்கள் கிருஷ்ணனிடம் தெரிவித்தார்கள். நகரில் இருக்கும் உப பாண்டவர்கள் அபிமன்யூ சுபத்திரை ஆகியோருடைய நலனை கிருஷ்ணர் பாண்டவர்களிடமும் தெரிவித்தார். அர்ஜூனன் தனக்கு இறைவனிடம் இருந்து கிடைத்த ஆயுதங்கள் தேவலோகத்து அனுபவங்கள் அனைத்தையும் கிருஷ்ணனிடம் தெரிவித்தான்.

சிரஞ்சிவியாகிய மார்கண்டேய மகரிஷி காம்யக வனத்தில் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார். அவரை தொடர்ந்து நாரதமகரிஷியும் அங்கு வந்தார். மகாபுருஷர்களின் வருகையால் அந்த இடத்தில் தெய்வீகம் மேலோங்கியது. பக்தியை வளர்க்கும் கதைகள் கருத்துக்களை மார்க்கண்டேய மகரிஷி சிறப்பாக கூறினார். அவரிடம் இருந்த தெய்வீக ஆற்றலை பாண்டவர்கள் வேண்டியவாறு பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் அங்கு இருந்ததில் காலம் வெகு விரைவாக சென்றது. கிருஷ்ணனும் மார்கண்டேய மகரிஷியும் விரைவில் உங்களுக்கு நல்லகாலம் வரும் என்றும் ஆசிர்வதித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

வேதங்களை கற்றறிந்த தவத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்த யாத்திரை செய்யும் பிராமணன் ஒருவன் திருதராஷ்டிரரை அவருடைய மண்டபத்தில் சந்தித்தான். பாண்டவர்களை காம்யக வனத்தில் சந்தித்ததையும் அவர்களுடைய விவரங்களையும் திருதராஷ்டிரருக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தான். கௌரவர்கள் அனைவரும் அவர் சொல்வதை கேட்க ஆர்வமாக இருந்தார்கள். ஏனெனில் வஞ்சகமாக சூதாடி வனத்துக்கு விரட்டப்பட்ட பாண்டவர்களின் நிலைமையை அறிந்து கொண்டால் மேலும் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படும். திருதராஷ்டிரர் பாண்டவர்களின் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தான்.

பாண்டவர்களில் முத்தவனான யுதிஷ்டிரன் இப்போது மண்ணுலகிற்கு மட்டும் அல்லாமல் விண்ணுலகிற்கும் பயன்படுகின்ற ஏராளமான தபோபலன்களை பெற்றிருக்கின்றான். பீமன் அனுமனிடம் இருந்து புதிய உடல் திட்பத்தையும் வல்லமையையும் பெற்றிருக்கின்றான். அர்ஜுனன் தன்னுடைய தவத்தின் விளைவாக மகாதேவனிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை சிவ பிரசாதமாகப் பெற்று இருக்கின்றான். இந்திரன் அர்ஜுனனை இந்திர லோகத்திற்கு அழைத்துச் சென்று ஒப்புயர்வற்ற அஸ்திரங்களை வழங்கியிருக்கின்றான். நகுலன் சகாதேவன் திரௌபதி ஆகியோர்கள் தங்களுடைய தவத்தின் விளைவாக திண்ணிய மனப்பான்மை படைத்தவர்களாக மேலோங்கி இருக்கின்றார்கள்.

தொடரும்………..

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -12

யுதிஷ்டிரனிடம் பாம்பு கேள்வி கேட்க ஆரம்பித்தது. பிராமணன் என்பவன் யார்? அவனுடைய இலட்சணம் என்ன?

உண்மை, கொடை, பொறுமை, நல்லொழுக்கம், இரக்கம், தவம், கருணை ஆகிய குணங்களுடன் தவமும் தெய்வ சம்பத்தும் வாய்க்கப்பெற்று இருப்பவனே பிராமணன். பொறி புலன்களை அவன் வென்றவன். சத்திய விரதத்திலிருந்து அவன் மாறுவதில்லை. பரஞானத்தை நாடியிருப்பதும் அந்த பரஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதும் அவனுடைய தர்மமாகும். இதுவே பிராமணனுக்குரிய இலட்சணமாகும் என்று யுதிஷ்டிரர் சொல்லி முடித்தார்.

பாம்பு – எதை அறிந்தால் மனிதன் அனைத்தையும் அறிந்தவனாகின்றான்?

யுதிஷ்டிரன் – மாய பிரபஞ்சத்துக்கு ஆதாரமாக இருப்பது பிரம்மம். அந்த பிரம்மத்தை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்.

பாம்பு – அறியத்தக்கது எது?

யுதிஷ்டிரன் – தேசம் காலம் வஸ்து ஆகிய எவற்றாலும் அளவிடமுடியாத எந்த இறைவனிடம் சென்று அடைந்து உயிர்கள் மீண்டும் பிறப்பெடுப்பதில்லையோ அந்த இறைவனே அறியத்தக்கவன்.

பாம்பு – சாதி பிறப்பை அடிப்படையாகக் கொண்டதா?

யுதிஷ்டிரன் – பிறப்பில் சாதி அடிப்படையாக கொண்டது இல்லை. அனைவரும் மனிதர்களாகவே பிறக்கின்றார்கள். பிறகு அவர்கள் அடைந்து வருகின்ற மனப்பரிபாகத்தை முன்னிட்டு மானுடன் ஒருவன் சாதியில் மேலோங்குகின்றான். இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அறவே துறந்து இறைவன் எண்ணத்திலேயே நிலைத்திருந்து மக்கள் எல்லோரையும் உயர்நிலைக்கு அழைத்துச் செல்பவன் பிராமணன் ஆகிறான். சமுதாய ஒழுக்க கட்டுப்பாட்டை முறையாக காப்பாற்றி வருபவன் க்ஷத்திரன் ஆகின்றான். சமுதாயத்தின் செல்வத்தை வளர்ப்பவன் வைசியனாகின்றான். தன்னுடைய சுயநலத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பவன் சூத்திரன் ஆகின்றான்.

பாம்பு – பிரம்மஞானி யார்? பிரம்ம ஞானத்தின் பயன் என்ன?

யுதிஷ்டிரன் – ஞானத்தின் சிகரமாகிய பிரம்மஞானத்தை பெறுவது வாழ்வின் முடிவான குறிக்கோள் ஆகும். பிரம்மஞானி ஒருவன் நான் உடல் அல்ல தான் ஆத்ம சொரூபம் என்பதை அனுபூதியில் அறிய வருகின்றான். அவன் இறப்பிற்கும் பிறப்பிற்கும் அப்பாற்பட்டவன். இவ்வுலகத்தின் இன்ப துன்பங்கள் அவனை தாக்காது. அவனே பிரம்மஞானி. பிரம்மஞானிகளிடம் தொடர்பு கொள்கின்ற மக்கள் அனைவரும் ஒழுக்கத்திலும் பரஞானவளர்ச்சியிலும் முன்னேற்றமும் அடைகின்றனர்.

பாம்பு கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் யுதிஷ்டிரன் சரியான பதில் கூறியதும் அகத்தியர் இட்ட சாபம் முடிவுற்றது. மலைப்பாம்பு உயிர் அற்றதாக நழுவி கீழே விழுந்தது. பாம்பின் உடலில் இருந்த நகுஷன் ஜோதிமயமாக கிளம்பினான். சொர்க்கத்திலிருந்து ரதம் கீழே இறங்கி வந்து அவனை விண்ணுலகு அழைத்துச் சென்றாது. ரதம் மேல் நோக்கி செல்வதற்கு முன் யுதிஷ்டிரனை நகுஷன் ஆசிர்வதித்தான். பீமன் பழையபடி வலிமையான மனிதன் ஆனான். மானுட வாழ்க்கையில் அமையக்கூடிய அதிசயங்களையெல்லாம் வியந்து கொண்டே அண்ணனும் தம்பியும் தங்களுடைய காம்யக வனத்திற்கு திரும்பிச் சென்றனர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -11

காம்யக வனத்தில் பாண்டவர்கள் தங்கிய போது ஒருநாள் பீமன் அருகில் இருந்த வனத்திற்குள் வேட்டைக்கு சென்றான். காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான். அடர்ந்த அந்த பகுதிக்குள் கந்தர்வர்கள் சித்தர்கள் தேவ ரிஷிகள் அப்சரஸ்கள் மட்டுமே உலாவும் இடம் அது. காட்டிற்குள் மிகவும் ரம்யமாக இருந்ததால் பீமன் உற்சாகத்தோடு அங்கே சென்று விட்டான். அப்போது அவன் கண்ணில் ஒரு மிகப் பெரிய பாம்பு ஒன்று தென்பட்டது. பாம்பு பீமனை பார்த்ததும் கண் இமைக்கும் நேரத்தில் அது பீமனை தனது உடலால் சுற்றி இறுக்கியது. பலம் மிக்க பீமனால் அதனிடமிருந்து விடுபட முடியவில்லை. பீமன் அதிர்ச்சி அடைந்தான். அப்பாம்பு அவனைப் பிடித்துக் கொண்டதும் அவனிடத்தில் இருந்த வலிமை அனைத்தும் அவனை விட்டு போய் விட்ட அனுபவம் அவனுக்கு உண்டாகியது. நொடிப்பொழுதில் விவேகம் ஒன்று அவன் உள்ளத்தில் உதயமானது. உடல் வலிமை நிலையற்றது. உடல் வலிமையை சார்ந்திருக்க கூடாது என்று எண்ணினான். வலிமையை இழந்தாலும் தைரியத்தை பீமன் இழந்து விடவில்லை.

பாம்பின் வடிவில் இருக்கும் நீ யார் என்னை சுற்றி பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய். யுதிஷ்டிரனுடைய தம்பி பீமன் நான் என்று பாம்பிடம் கூறினான். அதற்கு மலைப்பாம்பு நான் மிகவும் பசியோடு இருக்கிறேன் உன்னை சாப்பிட விரும்பி உன்னை பிடித்தேன். ஆனால் உன்னை யாரென்று நீ அறிமுகப்படுத்தியதன் விளைவாக உன்னை சாப்பிட நான் தயங்குகிறேன். நான் நகுஷ மன்னன். இந்திர லோகத்தில் இந்திரனாக பதவி ஏற்றேன். அப்போது சொர்க்க வாசத்தில் மண்ணுலகில் நான் பெற்ற செல்வத்தை முன்னிட்டு எனக்கு கர்வம் உண்டாயிற்று. ஆகையால் அகத்திய மகரிஷி எனக்கு சாபமிட்டார். அவரிட்ட சாபத்தின்படி நான் மண்ணுலகில் நெடுங்காலம் மலைப் பாம்பாக வாழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுது யுதிஷ்டிரன் என்முன் வந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்து சம்வாதம் செய்து வெற்றி பெறுவான். அதன் விளைவாக எனக்கு விமோசனம் கிடைக்கும். உன்னை நீ அறிமுகப்படுத்தியதன் வாயிலாக என்னுடைய பழைய சம்பவங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது என்று பாம்பு கூறியது.

பீமனை காணாமல் காட்டிற்குள் தேடி பாண்டவ சகோதரர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சென்றார்கள். அப்பொழுது யுதிஷ்டிரன் பீமனை தேடிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான். பீமன் மலைப்பாம்பிடம் அகப்பட்டு இருந்த காட்சியை பார்த்து அவன் திகைத்துப் போனான். எனினும் அதிவிரைவில் அவன் தன் மனதை தேற்றிக்கொண்டு அங்கு நிகழ்ந்தவற்றை விசாரித்தான். பாம்பு தன் வரலாற்றை முழுவதுமாக விளக்கியது. மலைப் பாம்பாக இருந்தது தன்னுடைய மூதாதையர் நகுஷன் என்பதையும் ஒரு சாபத்தின் விளைவாக இந்த நிலைக்கு அவன் வந்திருப்பதை அறிந்த யுதிஷ்டிரன் தன்னுடைய மூதாதையராகிய பாம்பின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினான். பிறகு இருவருக்கும் இடையிலான சம்பாஷணை தொடர்ந்தது.

ஸ்ரீ அனுமன் சாலிஸா.

ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர் நீர் பெரிய ராமபக்தர். பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்கள் ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டுங்கள் என்றார். நான் மாயாஜாலக்காரன் அல்ல ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே என்று துளசிதாசர் சொல்ல கோபப்பட்ட அக்பர் அவரைச் சிறையில் அடைத்தார். எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம் என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர் தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும் திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன.

படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை. அக்பரிடம் சென்ற சிலர் ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித்தால் பிரச்னை நீங்கிவிடும் என்று ஆலோசனை அளித்தனர். அதையடுத்து துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே வானரப் படைகள் மாயமாய் மறைந்தன. துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ஸ்ரீ அனுமன் சாலிஸா.

ஹனுமான் சாலிஸா தமிழில்

மாசற்ற மனத்துடனே ஸ்ரீராமனைப் பாட
குருநாதனே துணை வருவாய்
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர வந்தருள்வாய்
ஸ்ரீ ஹனுமானே

ஜயஹனுமானே ஞானகடலே
உலகத்தின் ஒளியே உமக்கு வெற்றியே
ராமதூதனே ஆற்றலின் வடிவமே
அஞ்ஜனை மைந்தனே வாயு புத்திரனே
மஹா வீரனே மாருதி தீரனே
ஞானத்தை தருவாய் நன்மையை சேர்ப்பாய்
தங்க மேனியில் குண்டலம் மின்ன
பொன்னிற ஆடையும் கேசமும் ஒளிர
தோளிலே முப்புரிநூல் அணிசெய்ய
இடியும் கொடியும் கரங்களில் தவழ
சிவனின் அம்சமே கேசரி மைந்தனே
உன் ப்ரதாபமே உலகமே வணங்குமே
அறிவில் சிறந்தவா சாதுர்யம் நிறைந்தவா
ராம சேவையே சுவாசமானவா
உன் மனக் கோவிலில் ராமனின் வாசம்
ராமனின் புகழை கேட்பது பரவசம்

உன் சிறுவடிவை சீதைக்கு காட்டினாய்
கோபத் தீயினில் லங்கையை எரித்தாய்
அரக்கரை அழித்த பராக்ரம சாலியே
ராமனின் பணியை முடித்த மாருதியே
ராமன் அணைப்பிலே ஆனந்த மாருதி
லக்ஷ்மணன் ஜீவனை காத்த சஞ்சீவி
உனது பெருமையை ராமன் புகழ்ந்தான்
பரதனின் இடத்திலே உன்னை வைத்தான்
ஆயிரம் தலைக் கொண்ட சேஷனும் புகழ்ந்தான்
அணைத்த ராமன் ஆனந்தம் கொண்டான்
மூவரும் முனிவரும் ஸனக ஸனந்தரும்
நாரதர் சாரதை ஆதிசேஷனும்
எம குபேர திக்பாலரும் புலவரும்
உன் பெருமைதனை சொல்ல முடியுமோ
சுக்ரீவனை ராமனிடம் சேர்த்தாய்
ராஜ யோகத்தை அவன் பெற செய்தாய்

இலங்கையின் மன்னன் விபீஷணன் ஆனதும்
உன் திறத்தாலே உன் அருளாலே
கதிரவனை கண்ட கவி வேந்தனே
கனியென விழுங்கிய ஸ்ரீஹனுமானே
முத்திரை மோதிரம் தாங்கியே சென்றாய்
கடலை கடந்து ஆற்றலை காட்டினாய்
உன்னருளால் முடியாதது உண்டோ
மலையும் கடுகென மாறிவிடாதோ
ராம ராஜ்யத்தின் காவலன் நீயே
ராமனின் பக்தர்க்கு எளியவன் நீயே
சரண் அடைந்தாலே ஓடியே வருவாய்
கண் இமை போல காத்தே அருள்வாய்
உனது வல்லமை சொல்லத் தகுமோ
மூவுலகமும் தொழும் ஸ்ரீஹனுமானே
உன் திருநாமம் ஒன்றே போதும்
தீய சக்திகள் பறந்தே போகும்

ஹனுமனின் ஜபமே பிணிகளைத் தீர்க்குமே
துன்பங்கள் விலகுமே இன்பங்கள் சேர்க்குமே
மனம் மெய் மொழியும் உந்தன் வசமே
உன்னை நினைத்திட எல்லாம் ஜெயமே
பக்தர்கள் தவத்தில் ராம நாமமே
ராமனின் பாதமே உந்தன் இடமே
அடியவர் நிறைவே கற்பகத் தருவே
இறையனுபூதியை தந்திடும் திருவே
நான்கு யுகங்களும் உன்னைப் போற்றிடும்
உன் திருநாமத்தில் உலகமே மயங்கும்
ஸ்ரீராமன் இதயத்தில் உந்தன் இருப்பிடம்
ஞானியர் முனிவர்கள் உந்தன் அடைக்கலம்
அஷ்ட சித்தி நவநிதி உன் அருளே
அன்னை ஜானகி தந்தாள் வரமே
ராம பக்தியின் சாரம் நீயே
எண்ணம் எல்லாமே ராமன் சேவையே

ஹனுமனைத் துதித்தால் ராமனும் அருள்வான்
பிறவா வரம் தந்து பிறவியைத் தீர்ப்பான்
ராம நாமமே வாழ்வில் உறுதுணை
அந்திம காலத்தில் அவனின்றி யார் துணை
என் மனக் கோவிலில் தெய்வமும் நீயே
உனையன்றி வேறொரு மார்க்கமும் இல்லையே
நினைப்பவர் துயரை நொடியில் தீர்ப்பாய்
துன்பத்தைத் துடைத்து துலங்கிட வருவாய்
ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஸ்ரீஹனுமானே
ஜெகத்தின் குருவே ஜெயம் தருவாயே
ஹனுமான் சாலீஸா அனுதினம் பாடிட
பரமன் வருவான் ஆனந்தம் அருள்வான்
சிவபெருமானும் அருள் மழை பொழிவான்
இகபர சுகங்களை எளிதில் பெறுவான்
அடியவர் வாழ்வில் ஹனுமனின் அருளே
துளஸீதாஸனின் பிரார்த்தனை இதுவே.

Image result for துளசிதாசர்