சிரார்த்தம்

உலகில் முதலில் சிராத்தம் எப்போது உண்டானது?

பிரம்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மகரிஷி தோன்றினார். அந்த மகரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் ஒரு ஆயிரம் வருடம் தவம் செய்து கொண்டிருக்கையில் ஒரு நாள் தனது உடலை விட்டார். இதனால் நிமி புத்ர சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தார். அந்த உடலுக்கு செய்ய வேண்டிய கிரியைகளை சரியாக செய்து எரித்தார். அடுத்த நாள் அமாவாசை தினம். விடியற்காலையில் எழுந்து இறந்த தனது புத்திரன் மேன்மை நிலையை அடைய என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில சிந்தனை உண்டானது. அதன்படி பிராமணர்களை அழைத்து தனது இல்லத்தில் உணவு சாப்பிடுமாறு கேட்டுக் கொண்டார். அவர்கள் உணவு சாப்பிட அமர்ந்ததும் அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பையை தெற்கு நுனியாக வைத்தார். அவர்களுக்கு திருப்தியாக உணவு பரிமாறினார். அவர்கள் சாப்பிட்டு சென்றதும் அந்த இடத்தில் தன் புத்திரனின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி உணவு தானம் செய்த அதன் பலன் தனது புத்திரனுக்கு போகுமாறு நீரை தரையில் விட்டு பிரார்த்தனை செய்தார். இப்படி செய்ததால் தன் புத்திரனின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகி விட்டதாக அவருக்கு திருப்தி வந்தது. அடுத்த நாள் அவருக்கு யாரும் இதுவரை செய்யாத தவறான காரியத்தை ஏதும் செய்து விட்டோமோ என்று சிறிது பயம் உண்டானது. இதனை அறிந்தால் ரிஷிகள் ஏதும் சாபம் கொடுத்தது விடுவார்களோ என்று பயந்தார். உடனே தனது வம்சத்தைச் சேர்ந்த அத்ரி மகரிஷியை தியானம் செய்தார். அவரது வருத்தத்தை அறிந்த அத்ரிமகரிஷியும் உடனே அங்கு வந்தார்.

நீ செய்த இந்த கர்மமானது பித்ருக்களுக்குச் செய்த யாகம் ஆகும். ஆகவே நீ பயப்படாதே. நீ ஒரு தவஸ்வி. இறந்து போனவர்களுக்கு இவ்விதம் கர்மங்கள் செய்யவேண்டுமென்று உன் மனதில் தோன்றி பிறகு நீ இதனை செய்திருக்கிறாய். இறந்து போனவர்களுக்கு இவ்விதம் கர்மங்கள் இந்த யுக காலத்தில் செய்ய வேண்டுமென்றும் அதனைத் தொடர்ந்து மக்கள் செய்து அதன் பலனாக பல நன்மைகளை அவர்கள் அடைவார்கள் என்று பிரம்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் நிர்ணயிக்கப்பட்டது. உனது தவ பலத்தினால் உனது மனதில் இது தோன்றும்படி பிரம்மா அருள் செய்தார். சிரத்தையுடன் செய்கிற கர்மமானதால் இதற்கு சிரார்த்தம் என்று பெயர் பெறும் என்று சொல்லி உபதேசித்துவிட்டு பிரம்மலோகம் போய்ச்சேர்ந்தார். பிறகு நிமி அதேமாதிரி மாத மாதம் அமாவாசை அன்று அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து அனைவரும் செய்யத் தொடங்கினார்கள். அப்போது முதல் சிரார்த்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

நிமி ஏற்படுத்திய சிரார்த்த முறைகளை அனைவரும் செய்ய ஆரம்பித்ததால் பித்ருக்களுக்கு ஏராளமான உணவு கிடைத்துக் கொண்டே இருந்தது. அதனை எடுத்துக் கொண்ட பித்ருக்கள் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப சில துன்பங்களை அனுபவித்தார்கள். இதனை சந்திர பகவானிடம் முறையிட்டார்கள். அவர் பிரம்மாவிடம் போகும்படி சொல்ல பித்ருக்கள் பிரம்மாவிடம் போய்த் தங்களுடைய துன்பத்தை போக்கும்படி வேண்டிக் கொண்டார்கள். பிரம்மா அக்னி பகவான் உங்கள் குறையை நிவர்த்திப்பார் என்று ஆசி கூறினார். பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட அவரும் இனி உங்களிடம் வரும் உணவுகளை என்னுடன் கொடுங்கள் அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டு எரித்து அழித்து விடுகின்றேன் என்று சொன்னார். அன்று முதல் சிரார்த்தம் செய்யும் போது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.

சிரார்த்தம் என்பது ஆதிகாலத்திலேயே வேதங்களில் இருந்தவற்றை ரிஷிகள் தவம் செய்து அறிந்து கொண்டு அதனை பிரம்மாவினால் அறியப்பட்டு செய்யப்படுகிறது. சிரார்த்தம் செய்யும் போது செய்யப்படும் ஹோம அக்னியில் போடப்படும் திரவியங்கள் எல்லாம் பித்ரு கணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக இறந்து போன ஜீவாத்மாக்களுக்கு கிடைக்கிறது. இந்த ஜீவாத்மாக்ககள் இதனால் ஏதேனும் ஒரு வகையில் நன்மை அடைந்து மேன்மை நிலையை அடைகிறார்கள். அவர்களுக்கு மேன்மை நிலையை கொடுத்த பலனை சிரார்த்தம் செய்தவர்களும் பெற்று தங்களது துன்பத்தை போக்கி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

பித்ருக்கள் என்பவர்கள் யார்?

பிரம்மா தேவர்களை படைத்து அவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து நீங்கள் யாகங்கள் செய்து என்னை ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் பிரம்மாவின் கட்டளைப்படி செய்யாமல் தங்களின் ஆசைகளுக்கு ஏற்ப அங்கிருந்த சுகங்களை அனுபவித்துக் கொண்டு பிரம்மா யாகம் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த ஞானம் அனைத்தும் மறந்து போனார்கள். இவர்களுடைய செயலைப் பார்த்த பிரம்மா நீங்கள் எந்த விதமான ஞானமும் இல்லாமல் போவீர்கள் என்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இதனால் பல துன்பங்களை தேவர்கள் அனுபவித்தார்கள். பின் தேவர்கள் பிரம்மாவைச் சரணாகதி அடைந்து தாங்கள் செய்த தவறுக்கு பிராயத்சித்தம் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். நீங்கள் உங்களது சுகங்களினால் உருவான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் பிராயச்சித்தம் செய்து கொள்ளுங்கள் என்றார். தேவர்களும் அவர்களுடைய பிள்ளைகளிடம் சென்று பிரம்மா சொன்னதுபோல் செய்யும்படி வேண்டிக்கொள்ள அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு பிராயச்சித்தம் செய்து இழந்த ஞானத்தை மீண்டும் கொடுத்து பிள்ளைகளே போங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் பிள்ளைகள் என்று சொன்னதால் கோபம் கொண்டு இதனை பிரம்மாவிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட பிரம்மா அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் உங்களுடைய சுகத்தினால் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்கு தந்தை ஆனீர்கள். அதுபோல் அவர்கள் உங்களுக்கு பிராயச்சித்தம் செய்து உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்கு தந்தை ஆனார்கள். ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான். ஞானம் கொடுத்த அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். ஞானம் பெற்ற நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள் என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.

பித்ருக்கள் ஏழு விதமானவர்கள் ஆவார்கள். அவர்களில் ஸுகாலர்கள், ஆங்கிரஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு வகையினர்களும் உருவத்தை கொண்டவர்கள் ஆவார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு பித்ரு லோகம் என்றும் பெயர். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்ற மூன்று வகையினர்கள் உருவம் இல்லாதவர்கள். தங்களுடைய தர்ம புன்ய பலன் மற்றும் ஞானத்தால் எங்குமிருக்கும் தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள். அணுவிலும் பிரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு விருப்பமான ரூபங்களை எடுத்துக்கொண்டு வருவார்கள். இவர்கள் இருக்கும் இடத்திற்கு சநாதன லோகம் என்று பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர். நம்முடைய இறந்து போன முன்னொர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்கள் இறந்து போனவர்களுக்கு நேரடியாகப் போவதில்லை. அவைகள் நேரடியாக பித்ரு கணங்களுக்கு அல்லது பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோக பலத்தால் மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுடர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எந்த இடத்தில் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள்.

பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய சிராத்தம் செய்து பிண்ட தானம் செய்யும் போது பூமியைப் பிளந்து கொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்கள் அணியப்பட்டிருந்தன. அந்தக் கை அவருடைய தகப்பனாருடையது. அவர் இறந்து போவதற்கு முன்னிருந்தது போலவே இருந்தது. பீஷ்மரும் பிதா கையில் பிண்ட தானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் போட்டு சிரார்த்தம் செய்தார். சிரார்த்தம் பித்ருக்களுக்கு செல்ல வேண்டும் என்ற தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வரம் கொடுத்து மறைந்து விட்டார். ஆகையால் நாம் செய்யும் சிரார்த்தம் பித்ரு தேவதைகளுக்குப் போய் பின் அவர்களால் இறந்து போன ஜீவாத்மாக்கள் எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும் அங்கு அவர்களுக்கு சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரகஸ்யம் மார்க்கண்டேயருக்கு சனத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சம் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

வீணாதரசிவன்

தான் வாசித்த இந்தப் பண் எப்படியிருக்கிறது என்ற பார்வையுடன் வீணாதர சிவன். இறைவனின் கை தனது தலையில் வைத்து ஆசி பெற்ற மகிழ்ச்சிப் பூரிப்பில் துள்ளலுடன் அடியவர் நிற்கிறார். வீணாதரசிவன் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. இடம் தர்மராஜ ரதம் மாமல்லபுரம்.

இராம சரித மானஸம்

துளசி தாசர் இயற்றிய நூல் இராம சரித மானஸம் ஆகும். இராமசரிதமானசா என்பதற்கு இராமர் வாழ்க்கையின் குளம் என்று பொருள்படும். இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்நூலில் துளசிதாசர் இராமரைப் பற்றிய சில கூடுதல் கதைகளையும் சேர்த்துள்ளார். துளசிதாசர் 1511-1623 காலத்தில் வாழ்ந்த ஒரு துறவியும் கவிஞரும் ஆவார். இவர் இராம பக்தியில் சிறந்து விளங்கினார். இந்நூலை அவாதி மொழியில் துளசிதாசர் எழுதினார். அவாதி மொழியைத் தவிர போஜ்புரி மற்றும் பிராஜ்பாஷா மொழிகளிலும் எழுதினார். வால்மீகி இராமாயணம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால் பலருக்கும் அதனை முழுமையாக புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. துளசிதாசர் எழுதிய இராம சரித மானசா மூலம் பலரால் இராமாயணத்தை எளிதாக படித்து புரிந்து கொள்ள முடிந்தது. துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். வாரணாசியில் உள்ள கங்கையில் உள்ள துளசி படித்துறை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் வாரணாசியில் அனுமனை தரிசித்த இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.

மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமான பவிஷ்ய புராணத்தில் சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுவது போல் ஒரு காட்சி உள்ளது. அதில் இராமனின் புகழைப் பாடுவதற்கு கலி யுகத்தில் அவதாரம் எடுப்பதற்காக அனுமனிடமிருந்து வால்மீகி ஒரு வரத்தைப் பெற்றார் என்று சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுகிறார். நாபதாசர் என்ற சான்றோர் ஒருவர் தனது பக்தமாலை என்ற நூலில் கலியுகத்தில் வால்மீகியே மீண்டும் துளசிதாசராக அவதாரம் எடுத்ததாக எழுதியிருக்கிறார். இதனை சான்றாக வைத்து வட இந்தியாவில் பலர் துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் என்று நம்புகிறார்கள். துளசிதாசரின் இராம சரித மானஸம் என்ற இராமாயணத்தில் இராமர் காட்டுக்கு வனவாசம் செல்ல சரஸ்வதிதேவி காரணம் என்று எழுதியிருக்கிறார். அந்நூலில் உள்ளபடி

ஒரு சமயம் இந்திரலோகத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் வருகைக்காகக் காத்திருந்தனர். சற்று நேரத்தில் இந்திரன் அந்த அவைக்குள் பிரவேசித்தான். தேவர்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதைக் கண்டு அனைவருக்கும் என்னவாயிற்று? என்று இந்திரன் விசாரித்தான். அதற்கு தேவர்கள் அயோத்தி நகரம் முழுவதும் விழா கொண்டாட்டத்தில் திளைக்கிறது. அயோத்தி மக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் மிதக்கின்றனர். தசரதன் மகன் இராமனுக்கு பட்டாபிஷேத்துக்கான நாள் குறித்து விட்டார்கள். இராமன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியின் மன்னனாகி விட்டால் அரக்கன் இராவணனையும் மற்ற அரக்கர்களையும் வதைப்பது எப்படி? இராமரின் அவதார நோக்கம்தான் என்னாவது? என்று வருத்தத்துடன் கேட்டனர் தேவர்கள். இதற்கு நாம் என்ன செய்யலாம்? என்று அதிர்ச்சியோடு கேட்டான் இந்திரன். நெடுநேரம் அனைவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் தேவர்கள் அனைவரும் சேர்ந்து பிரம்ம தேவரை சந்தித்து தங்கள் நிலையை அவரிடம் எடுத்துக் கூறி அவரின் உதவியைக் கோரினர். பிரம்ம தேவர் அவர்கள் அனைவரையும் சரஸ்வதி தேவியை சந்தித்து வேண்டும்படியும் சரஸ்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆலோசனையாகக் கூறினார். அதன்படியே தேவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியைச் சந்தித்து நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறி தங்களுக்கு உதவும்படி வேண்டி நின்றனர். அதைக் கேட்ட சரஸ்வதி தேவி மிகவும் வருத்தத்துடன் நீங்கள் சொல்லும்படி நான் நடந்தால் உலகமே என்னை தூற்றுமே இதை என்னால் செய்ய முடியாது என்று மறுத்துக் கூறினாள். ஆனாலும் உலக நலனுக்காக இதை அவசியம் நீங்கள் செய்யத்தான் வேண்டும். தங்களை விட்டால் எங்களுக்காக இதை வேறு யாரும் செய்ய முடியாது என தேவர்கள் சரஸ்வதி தேவியிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர். இராமன் வனவாசம் செல்வதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று சரஸ்வதி தேவி மீண்டும் மறுத்துக் கூற தேவர்களோடு பிரம்மாவும் சேர்ந்து சரஸ்வதி தேவியிடம் வற்புறுத்தி வேண்டினர்.

இராமர் வனவாசம் சென்றால் அரக்கன் இராவணன் மற்றும் பல அரக்கர்கள் இராட்சஸர்கள் அழிவார்கள். இராமரின் பராக்கிரமம் இந்த உலகத்திற்கு தெரியவரும். இராமாயணம் எனும் புனிதக் காவியம் இப்பூமிக்குக் கிடைக்கும். இவை அனைத்தும் உன்னுடைய ஒரு செயலில் இருக்கிறது என்று சரஸ்வதி தேவியிடம் பிரம்மா எடுத்துச் சொல்லி சரஸ்வதி தேவியை சம்மதிக்க வைத்தார். பிரம்மாவின் ஆலோசனையின்படி கலைமகள் சரஸ்வதி தேவி மந்தரையின் ரூபத்தில் கைகேயின் மனதில் பரதன் நாடாள வேண்டும். இராமன் வனவாசம் செல்ல வேண்டும் எனும் நச்சு ஆலோசனை ஊட்டினாள். துளசி தாசர் இயற்றி இராம சரித மானஸம் என்னும் இராமாயணத்தில் இராமர் காட்டுக்கு வனவாசம் சென்றதற்கு இப்படி ஒரு புதிய கோணத்தில் விளக்கம் அளிக்கிறது.

சதுர தாண்டவம் ஆடும் அஷ்ட புஜ சிவன்

சதுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் 108 தாண்டவங்களுள் ஒன்று மற்றும் பரதநாட்டியத்தில் 39வது கரணம் ஆகும். இங்கு சிவன் எட்டு கைகளோடு சதுர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். இடம் காமரசவல்லி உடனுறை கார்கோடேஸ்வரர் கோயில். அரியலூர் மாவட்டம்.

நான் யார்

அரசன் ஒருவன் தனது படை வீரர்களுடன் காட்டுக் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது பசி வந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்று நான் பசியோடு இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டன். அங்கிருந்த முனிவர் அரசனைப் பார்த்து யார் நீ என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் என்று பதிலளித்தான். அதற்கு முனிவர் நீ யார் என்று தான் கேட்டேனே தவிர உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு அரசன் உன்னை வென்று இந்த நாட்டை கைப்பற்றிவிட்டால் நீ அரசன் இல்லை. இது உனக்கு தெரியுமா? இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்கிறேன். உண்மையில் நீ யார் என்று கேட்டார். அரசனின் மனதில் உண்மையில் நீ யார்? என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் அரசனின் பசியின் காரணமாக சுவாமி பசியின் காரணமாக நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏதோ தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். இந்த வேளையில் முனிவரின் சீடன் ஒருவன் முனிவருக்கு பழ வகைளை கொண்டு வந்து முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். அரசனை கண்டு கொள்ளவே இல்லை. நாட்டுக்கே அரசனாக இருக்கிறேன். இவன் தன்னை வணங்காமல் செல்கிறானே என்று எண்ணி அரசனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அரசனிடம் கொடுக்கவில்லை.

முனிவருக்கு தனக்கு பழங்கள் கொடுக்க மனமில்லை போலும் என்றெண்ணி அரசன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். முனிவர் அரசனே பார்த்து எனது சீடனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால் உன்னை வணங்காமல் சென்று விட்டான். உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது என்று சொல்லி விட்டு பழங்களை சாப்பிடக் கொடுத்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான். அரசே நம் கோட்டையை பகை மன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் என்றான் பதைபதைப்புடன். அரசனுக்கு இப்போது பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். சுவாமி நான் இப்போது அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று கிளம்ப முயற்சித்தான். முனிவர் அரசனை தடுத்து நிறுத்தி முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு என்று முனிவர் அறிவுரை சொன்னார். முனிவரின் கனிவான வார்த்தைகள் கட்டளை போல் அவனை தடுத்து நிறுத்தியது. அரசனும் பழங்களை சாப்பிட்டு பதட்டம் நீங்கி அமைதியானான். களைப்பின் காரணமாக மரநிழலில் உறங்கி விட்டான். திடீரென்று கண் விழித்ததும் வேகமாக எழுந்து நின்றான். சுவாமி எப்படியோ என்னையும் அறியாமல் நான் தூங்கிவிட்டேன் இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். எனது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றான்.

முனிவர் அரசனிடம் நான் இந்நாட்டின் அரசன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். இப்படி எத்தனையோ விதத்தில் நான் நான் என்று பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். இத்தனை நான் சொன்னாயே இதில் எந்த நான் உண்மை. உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா? என்று கேட்டார். அமைதியாக நின்ற அரசனிடம் உடலோ உள்ளமோ உணர்வோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான மக்கள் நாடு போர் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். நீ யார் என்று அறிந்து கொண்டு ஆன்மிக வாழ்வில் வெற்றியடைவதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள் என்று அறிவுரை கூறினார். முனிவர் சொன்னபடி வாழ்வில் வந்து போகும் பொருட்கள் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமானது உள்ளே இருக்கக் கூடிய இறைவன் தான் என்று உள்ளத் தெளிவுடன் அரசன் கிளம்பினான். முனிவரின் வார்த்தைகள் அரசனின் உள்ளத்தின் உள்ளே தான் யார் என்று தேட ஆரம்பித்தது.

திரிநேத்திர தசபு வீரஆஞ்சநேயர்

மூன்று கண்களையும் பத்துக் கரங்களையும் வைத்திருக்கிறார். முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி அருள்பாலிக்கிறார். இடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் உள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில்.

பெரியவர்

திருமந்திரம் பாடல் எண்: 1031

அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே

எல்லை இல்லாத இறைவனை அளப்பவர்கள் யாருமில்லை என்று திருமூலர் அருளியிருக்கிறார். அளக்க முடியாத இறைவனை சிற்பி தன்னுடைய சிற்பத்தில் காண்பித்து கற்பனையில் இறைவனின் அளவை மனிதர்களின் அறிவுக்கேற்ப புரிந்து கொள்ளும்படி செதுக்கியிருக்கிறார்.

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் இறைவன் சன்னதிக்கு வெளியே இருக்கும் துவாரபாலகரின் காலடியில் ஒரு மரம். மரத்தில் ஒரு பாம்பு இருக்கும். அந்த பாம்பின் வாயில் யானை இருக்கும். யானை மிகவும் பெரியது. பாம்பின் வாயில் யானை என்றால் அந்த யானையையே விழுங்கும் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். அந்த பாம்பு ஒரு மரத்தில் இருக்கும். அப்படி என்றால் அந்த மரம் எவ்வளவு பெரியதாக இருக்கும். அந்த மரம் துவாரபாலகர் காலடியில் இருக்கிறது. அப்படி என்றால் துவாரபாலகரின் பாதம் எவ்வளவு பெரியது. பாதமே இவ்வளவு பெரியதென்றால் துவாரபாலகரது உருவம் எவ்வளவு பெரியது. அந்த துவாரபாலகர் தனது கையை கோயிலின் உள்ளே காட்டுகிறார். கோயிலின் உள்ளே இறைவன் இருக்கின்றார். அப்படி என்றால் இறைவன் எத்தனை பெரியவராக இருப்பார்.

பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டிய இறைவன்

சுகலன் என்னும் வேளாளனின் புதல்வர்கள் பன்னிருவர். தேவகுரு பிரஹஸ்பதியின் கோபத்திற்கு ஆளாகி பன்றிக் குட்டிகளாக பிறந்தனர். காட்டுப்பகுதியில் பாண்டிய மன்னன் வேட்டையாடும் போது இப்பன்றிக்குட்டிகளின் பெற்றோர் இறந்தனர். தாயின்றி பசியால் வாடிய பன்றிக்குட்டிகளின் பசியைப் போக்க சிவபெருமான் தாய்ப்பன்றியாக வடிவெடுத்து பாலூட்டி அவர்களின் பசியைப் போக்கினார். பின்பு அவர்களுக்கு மனித உருவம் அளித்து பாண்டியன் அரசவையில் அமைச்சர்களாக ஆக்கி முக்தி அளித்தார். பெற்ற தாயை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றி வடிவெடுத்து பாலூட்டிய சிவபெருமானின் பெருங்கருணை குறித்து பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணமாகப் பாடியருளியுள்ளார். திருவிளையாடல் புராணத்தில் 45 ஆவது படலமாக உள்ளது. இச்சிற்பம் உள்ள இடம் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில் மதுரை.

ஞானமடைய எளிய வழி

புத்தர் தனது சீடர் ஆனந்தாவுடன் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தா புத்தரிடம் ஞானமடைவதற்கு எளிமையான வழி என்ன என்று கேட்டார். அதற்கு புத்தர் சுற்றி இருப்பவற்றை சும்மா கவனி என்றார். சும்மா கவனித்தால் எப்படி ஞானம் கிடைக்கும் என்றார். புத்தர் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்தார். தாகம் அதிகமாக இருக்கிறது குடிக்க எங்காவது சென்று நீர் கொண்டு வா என்று கூறினார். ஆனந்தா தண்ணீர் தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார். யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டார் புத்தர். ஆனந்தா வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார். நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார். குட்டைத் தண்ணீர் சிறிது சிறிதாகத் தெளிந்து கொண்டே இருந்தது. ஆனந்தா அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் மிகவும் தெளிந்து தூய்மையானதாக மாறியது. இதைக் கண்ட ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது. குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர் அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும். என் மனதைத் தெளியவைக்கும் இந்த சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்றார். புத்தர் புன்னகைத்தார்.

பிரச்சனைகள் கவலையாகவோ கோபமாகவோ ஆத்திரமாகவோ அகங்காரமாகவோ எந்தவொரு ரூபத்தில் வந்து மனதை வாட்டி எடுத்தாலும் குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல மனதில் உள்ள பிரச்சனை துன்பம் சோகம் கவலை என எதுவாக இருந்தாலும் அது தெளிவடையயும் வரை அமைதியாக மனதை கவனித்துக் கொண்டிருந்தால் போதும். மனதில் வந்த பிரச்சனை துன்பம் சோகம் கவலை அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிலை உண்டாகும்.