தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 276 கிளியனூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 276 வது தேவாரத்தலம் கிளியனூர். புராணபெயர் கிளிஞனூர், திருக்கிளியன்னவூர். மூலவர் அகஸ்தீஸ்வரர், அக்ஞீசரம் உடையவர். இங்கு இறைவன் மேற்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருளுகிறார். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. தீர்த்தம் அக்னி தீர்த்தம், கன்வ தீர்த்தம். தலமரம் வன்னிமரம். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார். தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக திருஞானசம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275 வது தலமாகவும், கிளியனூர் அகஸ்தீஸ்வரர் 276 வது தலமாகவும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. இக்கோயில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

காளவ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளின் தீராத மிக கொடிய நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார். சிவனின் திருவருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கியது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்று வலி நோய் நீங்கப்பெற்றார். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகத்தில் கிளியன்னவூர் பெருமானுடைய திருவடிகளை வழிபடும் அடியவர்கள் தீங்குகளிலிருந்து விடுபட்டுப் புகழுடன் வாழ்வர். வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும், மகளிரால் ஏற்படும் பூசல் இவற்றிலிருந்து விடுபடுவர். கொடியவர் நெஞ்சில் ஒருபோதும் தங்காத இறைவன் அடியவர் துயரைப் போக்கி அவர் வேண்டியதை அருள்பவன். அடியவர்கள் இவ்வுலகில் மறுபிறப்பு எடுப்பினும் முழுச் செல்வத்துடன் நல்வாழ்வு அளிப்பவர் என்று பாடியுள்ளார். மதுரை கொண்ட பரகேசரி வர்மனாகிய முதல் பராந்தகன் காலத்திலேயே இவ்வூர்க்கோயில் கருங்கல் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இம்மன்னனுடைய 10 -ம் ஆண்டு கல்வெட்டில் இவ்வூர் கிளிஞனூர் எனவும் இங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமான் திருஅக்ஞீசரம் உடையவர் எனவும் கல்வெட்டில் காணப்படுகின்றது.

கல்வெட்டுகளில் பராந்தகனுடைய ஆட்சியில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பான நிவேதனங்களுக்கு மான்யம் வழங்கியதாக செய்தி உள்ளது. முதல் குலோத்துங்கன் ஆட்சியில் இக்கோயில் கருவறையின் மேற்குப்புறம் வெளிச்சுற்றில் பிச்சாண்டவருக்காக பூஜைக்கு மான்யம் வழங்கியுள்ள செய்தியும் விளக்கு தொடர்ச்சியாக எரியவிட மான்யம், கோயில் பூஜைகள் தினந்தோறும் நடக்கவும், கோயில் திருப்பணிக்கும் பல மான்யங்கள் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் நன்மக்கள் பலரால் கொடுக்கப்பட்டது தெரிய வருகிறது. இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். கிள்ளி என்பது பழங்காளச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் பழைய சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர் என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர் என்று மருவியது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர் என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறியலாம். திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில் இடைக்காலத்துச் சோழநாட்டையாண்ட மன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தவர். ராகு, கேது கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளார்.

மிருதங்கம் வாசிக்கும் நந்திகேஸ்வரர்

சிவனின் இந்தக் காளை வாகனம் கைலாசத்தின் காவல் தெய்வம். தர்மத்தின் தத்துவமாக சிவபெருமானின் முன் அமர்ந்திருக்கிறார். 10 ஆம் ஆண்டு முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட பஞ்சேஷ்டி அகஸ்தீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்ட நந்திதேவரின் அரிய காளை மாட்டு தலையும் மனித உடலும் கொண்ட நந்திகேஸ்வரர் சிற்பம். வலது மேல் கரம் திரிசூலத்தை ஏந்தியும் இடது மேல் கரம் உடுக்கை ஏந்தி உள்ளதையும் கீழ் வலது மற்றும் இடது கைகள் மிருதங்கம் வாசிக்க 4 கைகளுடன் இந்த சிற்பம் உள்ளது. ஊர் திருவள்ளூர்.

சோமாஸ்கந்தமூர்த்தி

சிவபெருமானின் பல்வேறு வடிவங்களில் ஒன்று சோமாஸ்கந்த மூர்த்தி. இந்த உருவில் சிவன் உமையம்மையுடன் கந்தனும் சேர்ந்து மூன்று கடவுளரும் கொண்டு அருள்பாலிப்பார். முருகர் அன்னை உமையம்மை மடியில் சிறு பிள்ளையாக அவளை ஒட்டியபடியே அமர்ந்திருப்பார். ஆனால் திருமழபாடியில் உள்ள சோமாஸ்கந்தமூர்த்தி சிற்பத்தில் முருகன் சிவன் மடியில் அமர்ந்திருக்கிறார். இச்சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. இடம் அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசாமி திருக்கோயில் திருமழபாடி அரியலூர் மாவட்டம்.

எண்ணம்

ஒரு அரசர் இருந்தார் தன் மந்திரியுடன் ஒரு நாள் மாலை நேரம் நதி அருகே நடைபயிற்சி சென்றார்கள். அப்போது அங்கே ஒரு கொடியில வெள்ளரிக்காயை பார்த்த அரசர் தொங்குவதை பார்த்த அரசர் மந்திரி அந்த வெள்ளரிக்காய எடுத்து வாருங்கள் சாப்பிடலாம் என்றார். மந்திரி வெள்ளரிக்காயை பறிக்க சென்றார். அங்கே அமர்ந்திருந்த ஓரு குருடன் சொன்னான். ஐயா அது வெள்ளரிக்காய் இல்லை குமட்டிக் காய். அதனை தின்றால் வாந்தி வரும் என்றான். இதனை சோதிக்க அரசர் மந்திரியை பறித்து சாப்பிட சொன்னார். வேறு வழி இல்லாமல் மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு வாந்தி வந்தது. உடனே அரசர் இதற்கு என்ன தீர்வு? என்று குருடனை பார்த்து கேட்டார். அதற்கு குருடன் அது பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி வாயில் போட்டால் வாந்தி நிற்கும் என்றான். அதன்படி செய்ய மந்திரியின் வாந்தி நின்றது. அரசர் குருடனை பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே? எப்படி சரியா தீர்வு சொன்னாய்? என்று கேட்டார். அதற்கு குருடன் இந்த நாட்டில் எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார் என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே ஒரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. காலை உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லிவிட்டு அரசர் சென்றார்.

சிறிது நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான். ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான். இது உண்மையான வைரமா போலியா என்று எப்படி கண்டு பிடிப்பது என்று அரசருக்கு குழப்பம். யாருக்கும் அதற்கான விடை தெரியவில்லை. அரசருக்கு குருடனின் ஞாபகம் வந்தது. அவனை அழைத்து வர கட்டளையிட்டார். குருடனும் வந்தான். அவனிடம் பிரச்சனையை சொல்லி பதில் கேட்டார். அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மதிய வெயிலில் வைத்தான். சிறிது நேரம் கழித்து அதை கையில எடுத்து பாரத்து அரசே இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான். வியாபாரியும் தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்லி சமாளித்து அனைத்து வைரத்தையும் இனாமா கொடுத்து விட்டு அங்கிருந்து நகன்றான். அரசருக்கு ஆச்சரியம் எப்படி கண்டு பிடித்தாய் என்று குருடனிடம் கேட்டார். அதற்கு குருடன் சொன்னான். அரசே வெயிலில் வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரித்தேன் என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே இன்னொரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில மேற்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. மதிய உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லி அவனை அனுப்பினார்.

அரசர் தன் மகனுக்கு திருமணம் செய்ய வரன் தேட ஆரம்பித்தார். பக்கத்து நாடுகளில் இருந்து பலர் இளவரசியை கொடுக்க தயாராக இருந்தாங்க. அரசருக்கு குழப்பம். யாரை தேர்ந்தெடுப்பது? அரசருக்கு குருடனின் ஞாபகம் வந்தது. அவனை அழைத்து வர கட்டளையிட்டார். குருடனும் வந்தான். அவனிடம் இளவரசியாக யாரை தேர்ந்தெடுப்பது என்று பிரச்சனையை சொல்லி பதில் கேட்டார். அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு அரசரோட பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்றான். அரசர் ஆச்சரியத்துடன் காரணம் கேட்டார். அதற்கு குருடன் அந்த அரசர் உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு அரசர் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அவன் போர் செய்ய விரும்பினால் இரண்டு பக்கமும் அவனுக்கு அடி விழும். ஆகவே அமைதியாக இருப்பான். எல்லை பிரச்சினை வராது என்றான். அரசருக்கு மகிழ்ச்சி உடனே இன்னொரு முத்திரையை கொடுத்தார். என் அரண்மனையில தெற்கு வாசலுக்கு போ. இந்த முத்திரியை காண்பி. இரவு உணவு கொடுப்பார்கள். சாப்பிட்டு என்று சொல்லி அவனை அனுப்பினார்.

ஒரு நாள் அரசர் அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சொன்னார். நான் ஒன்று கேட்கிறேன். சரியா காரண காரியதோட பதில் சொல். என்றார். குருடனும் இயன்ற வரை சொல்கிறேன் என்றான். நமது நாட்டில் சிலர் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்தவராக இருப்பார் இந்த அரசர் என்று என்னை மறைமுகமாக அழைக்கிறார்கள். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இயன்றால் காரணத்தை சொல் என்றார். குருடன் அமைதியாக சிரித்தபடி சொல்ல மறுத்தான். அரசர் அவனை சொல்லும்படி அழுத்தம் கொடுத்தார். குருடன் அமைதியாக சொன்னான். நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்கிறேன். நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் அப்படின்னான். அரசருக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னை பார்த்தா இப்படி கணித்தாய்? என்று வருத்ததுடன் கேட்டார். அதற்கு குருடன் முதல் நாள் குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது காலை உணவு. உண்மையான அரசராக இருந்தால் கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார். பின்பு கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செய்தேன். நீங்கள் மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது மதிய உணவு. உண்மையான அரசராக இருந்தால் கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார். மூன்றாவது ஒரு ராஜ்ஜியமே உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு வழி சொன்னேன். நீங்க மகிழ்ச்சி அடைந்து எனக்கு கொடுத்தது இரவு உணவு. உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார். ஆனா உணவை தாண்டி உங்க எண்ணம் போகவில்லை. உலகத்துலேயே பெரிய விஷயம் உணவுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதனால் நாட்டில் உள்ள சிலர் உங்களை அப்படி அழைக்கிறார்கள் என்றான். அரசர் வெட்கி தலை குனிந்தார்.

நாம் யார் என்பதை நம்மிடம் உள்ள பணமோ சொத்தோ பதவியோ தீர்மானிப்பதில்லை. நமது எண்ணங்களே தீர்மானிக்கின்றன.

அதியேந்திர விஷ்ணு குடைவரை கோயில்

நாமக்கல் மலையின் கிழக்கு பக்கம் ஒரு குகைக் கோயில் உள்ளது. இம்மலையின் பாதி வழியில் வடபால் அனந்தாச்சாரி விஷ்ணு குகை இருக்கிறது. இக்குகைக் கோயிலில் வாமன அவதாரமும் கேவல நரசிம்மன், விக்கிரம அவதாரம், சங்கர நரசிம்ம அவதாரம் முதலிய சிற்பங்கள் சிறந்த வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன. இங்கு பெருமாள் கார்கோடகன் என்னும் திருநாமத்தில் தெற்கில் தலையும் வடக்கே கால் நீட்டியும் பள்ளிகொண்டு திருச்சேவை சாதிக்கிறார்.

தில்லை நடராஜர்

தில்லையில் கிபி 1648 ஆம் ஆண்டில் முகலாய மன்னர் படையெடுப்பின்போது தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சிதர்கள் நடராஜர் சிவகாமி விக்ரகங்களை இரண்டு மர பேழைகளில் (பெட்டி) பாதுகாப்பாக வைத்து மதுரை கொண்டு வந்து சில காலம் தங்கி மதுரையில் வழிபாடு செய்தார்கள். பின் அங்கிருந்து இரவு நேரங்களில் பயணம் செய்து குடுமியாண் மலையை சென்றடைந்து தங்கினார்கள். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு கேரளா மாநிலம் புளியங்குடி என்ற இடத்தை அடைந்தனர். அங்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து பூமிக்கடியில் குழி தோண்டி சுவாமி வைக்கப்பட்டிருந்த பேழைகளை மறைத்து வைத்தார்கள் பின் அந்த இடத்தில் புளியமரம் ஒன்றை நட்டு வைத்து தங்கள் ஊருக்கு திரும்பினார்கள். காலம் கடந்தது.

சிதம்பரத்தில் அமைதி திரும்பி 35 ஆண்டுகளுக்கு பின் முன்னோர்கள் சொன்ன குறிப்புகளை வைத்துக் கொண்டு இளம் தீட்சிதர்கள் பல குழுக்களாக பிரிந்து விக்ரகத்தை தேடினார்கள். அதில் ஒரு குழுவினர் புளியங்குடிக்கு சென்று பல இடங்களில் தேடியும் புலப்படாமல் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்தார்கள். அப்போது முதலாளி ஒருவர் தனது வயதான வேலைக்காரனிடம் அந்த பசு மாட்டை கொண்டு போய் அம்பலம் புளியில் கட்டு என கூறியுள்ளார். அங்கு இருந்த தீட்சிதர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு அம்பலம் புளி என்ற வார்த்தை குறித்து வயதானவரிடம் விளக்கம் கேட்டதற்கு, எனக்கு தெரியாது. எனது முதலாளியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என கூறினார். தீட்சிதர்கள் அந்த முதலாளியிடம் சென்று அம்பலம் புளி குறித்து கேட்டார்கள். அதற்கு முதலாளி இந்த இடத்தில் ஆசான் ஒருவர் இருந்தார். அவர் பல ஆண்டுகளாக அம்பலம் புளி என்ற இடத்தில் வழிபட்டு வந்தார். இங்குள்ள சிறு துளையில் விலை மதிப்பில்லாத சுவாமி திருவுருவத்தை கண்டுள்ளார். இந்த சுவாமியை பற்றி அறிந்தவர்கள் இங்கு வருவார்கள். அதுவரை நீ பாதுகாக்க வேண்டும் சுவாமியை தேடி வருபவர்கள் உண்மையானவர்களா என சோதித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆசான் கூறியதாக தெரிவித்தார்.

இதனைக் கேட்ட தீட்சிதர்கள் சிதம்பரத்திற்கு வந்து தில்லைவாழ் அந்தணர்களுடன் மூல மூர்த்திக்கு உரியவர்கள் தாங்கள்தான் என்ற ஆதாரங்களை எடுத்து சென்று கேரளா முதலாளியிடம் கொடுத்து சம்மதம் பெற்று தீட்சிதர்களே அம்பலம் புளி மரத்தின் அடியை தோண்டினார்கள். பூமிக்கடியில் இருந்து நடராஜப் பெருமானையும் சிவகாமசுந்தரி அம்மனையும் கணடெடுத்தாரகள். சுவாமிகளை புதிய பேழை ஒன்றில் வைத்து சிதம்பரத்திற்கு எடுத்து வந்தார்கள். வரும் வழியில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் உள்ள சபாபதி மண்டபத்தில் வைத்து சில காலம் தங்கி பூஜை செய்தார்கள். பின் புறப்பட்டு வைத்தீஸ்வரன் கோவில் வழியாக சிதம்பரத்திற்கு வந்தார்கள். 1688 ஆம் ஆண்டில் மீண்டும் பொன்னம்பலத்தில் நடராஜர் சிவகாமசுந்தரி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

நடராஜரையும் சிவகாமி அம்மையையும் கொண்டு செல்ல பயன்படுத்திய மரப் பேழைகள் படத்தில் காணலாம்.

நான்கு தெய்வங்களுடன் சிவலிங்கம்

சிவலிங்க பாணத்தின் நான்கு பக்கங்கிலும் பிரம்மா விஷ்ணு சிவன் மற்றும் சூரிய தேவரின் உருவங்கள் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டு கலத்திய ராஜஸ்தானை சேர்ந்ததாக கருதப்படும் இந்த சிவ லிங்கம் தற்போது அமெரிக்காவில் உள்ள பெருநகர கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.

கைகேயி ஊர்மிளை இருவரின் தியாகம்

இந்தியாவில் வால்மீகி, கம்பர், துளசிதாஸ், எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காள, சமண ராமாயணங்கள் பல கிடைக்கின்றன. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. திரு. ஏ.கே. இராமானுஜம் 1991 இல் எழுதிய ஆங்கில கட்டுரை 300 ராமாயணங்கள் இந்தியாவில் இருப்பதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த ராமாயணங்களில் சில நூலில் கதைகள் பல கோணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் கைகேயி மற்றும் ஊர்மிளையின் தியாகம் பற்றி ஒரு நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

ராவண வதம் முடிந்து சீதை லட்சுமணன் வானரங்கள் மற்றும் ராமருக்கு உதவிய ராட்சசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் அழைப்பை ஏற்று அவருக்கு வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார்கள். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும் சத்ருக்னனும் அக்னிப் பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி தான் வந்து கொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ராமரால் அனுப்பப்பட்டார். அவரும் நந்தி கிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு பரதனிடம் அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார். பரதனும் ராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார். ராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லட்சுமணனையும் என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர் எனக் காட்டினான் பரதன். அவளை வணங்கிய பின்னரும் வெளிப்படையாக உன்னைப் பெற்ற தியாகி அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும் என்றார் அனுமன். துணுக்குற்ற பரதன் அவள் மகாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்? எனக் கேட்டான். அப்போது அனுமன் கூறினார்.

பரதா உன் தாயைப் பற்றிய சில உண்மைகளை நீ தெரிந்துகொள். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா? தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளை உணரும் தன்மை கொண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவனாய் தசரதன் உத்யான வனத்தில் திரிந்த போது தளதளவென்று பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி அந்த தளிரின் உணர்ச்சியை கண்டாள். தன் குழந்தையான தளிரைப் பிரிந்து தாய் கொடியான தான் எப்படி கண்ணீர் வடிக்கிறினோ அது போலவே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய் என்று தசரதனுக்கு சாபமிட்டாள் அந்த தாய்க் கொடி. பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷி குமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால் உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய் என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார். தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

தசரதர் ராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி குறித்த முகூர்த்தத்தின் பின் விளைவுகளை பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி. அந்த முகூர்த்தப்படி ராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால் ராஜ்யத்தில் ராமர் அன்று அரசராக அமர்ந்திருந்தால் அதுவே அவரது ஆயுளை முடிந்திருக்கும். புத்ர சோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ர சோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும் போது அது ராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு பாவி என்ற பட்டமும் கொடுமைக்காரி என்ற பட்டமும் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை. அந்தக் கணத்தில் ராஜ்யத்தின் அரசனாக இருப்பவன் உயிர் நீப்பான் என்று ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள்.

ராமர் 14 நாட்கள் வன வாசம் செல்ல வேண்டும் என்று தசரதரிடம் அவள் கேட்க விரும்பினாள். ஆனால் வாய் தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம் கூட ராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகி விட்டது. எந்தப் பெண் தன் மங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? ராமரிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் நீ அரசாள வேண்டும் என்ற வரத்தைக் கேட்டாள். ஒருக்கால் நீ பதவி ஏற்றால் ராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மகா தியாகி. அவள் பதினான்கு வருடங்கள் என்று வாய் தவறி கேட்டதினால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ராமனின் தரிசனம் கிட்டியது. ராவணன் முதல் பல ராட்சசர்கள் வரை ராமரால் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்க வேண்டும் என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.
தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத் துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்பட்டது.

ராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பி விட்டனர். அவர்களுக்குச் சேவை செய்ய லட்சுமணரும் கிளம்பி விட்டார். கிளம்பியவர் தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால் இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால் தன் நினை அவரை சரிவர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள். ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள். லட்சுமணன் வந்து கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன் தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? அண்ணிதான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர்பின் போகிறாள். நானாக இருந்தால் அதுகூட போக மாட்டேன். வாருங்கள் என்னுடன் நாம் மிதிலைக்குப் போய் சௌக்கியமாக வாழலாம் என்றாள். லட்சுமணன் கோபத்துடன் நீ இவ்வளவு மோசமானவளா? நீ வர வேண்டாம் என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு என் அண்ணனுடனும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றான். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்றாள் சிரித்துக் கொண்டே ஊர்மிளை. அப்படியே ஆகட்டும் எனக் கூறிச் சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது. ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. ராம பட்டாபிஷேகம் முடிந்த பிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லட்சுமணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை எப்போதையும் விட அதிகமாக நேசித்தான்.

சங்கரர் ஜெயந்தி

காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை பூஜையெல்லாம் முடித்தும் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தும் சற்று ஓய்வில் இருந்த நேரம். மடத்தில் அவருக்கு நெருங்கிய அன்பர்கள் சிலர் மட்டுமே மகா பெரியவருடன் அப்போது இருந்தனர். ஒருவர் காஞ்சி தவ முனிவரிடம் கேட்டார். தங்களுக்கு சிறிய வயதில் பிடித்த பண்டிகை எது? தீபாவளியா? தைப்பொங்கலா? கார்த்திகை தீபமா? கோகுலாஷ்டமியா? ஆருத்ரா தரிசனமா? எது என்று சொல்லுங்கள் என்றார்.

மகா பெரியவர் இது எதையும் குறிப்பிடாமல் எனக்குப் பிடித்த பண்டிகை சங்கர ஜெயந்தி என்றார். சூழ்ந்த பக்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சங்கர ஜெயந்தியில் அப்படி என்ன விசேஷமான பண்டங்கள் விருந்து? என வியந்தனர். அவர் சொன்னார் ஆதி சங்கரர் மட்டும் அவதாரம் செய்யாவிட்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகள்தான் ஏது? நமது சனாதன தர்மத்திற்கு புத்துயிர் அளித்த சங்கரர் ஜெயந்தி எனக்குப் பிடித்த பண்டிகை என்றார்.

ஆதிசங்கரர் சாதாரண மனிதனுக்கு நான்கு விஷயங்களைச் சொன்னார் .

1. பகவானுடைய நாமத்தை ஜபி. பகவத் கீதையைப் படி
2. பகவானுடைய விஷயத்தையே மனதில் சிந்தனை செய். வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காதே.
3. நீ யாரிடமாவது நட்புடன் பழக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களிடம் நட்புடன் இரு.
4. முடிந்த அளவு இன்னொருவனுக்கு தானம் செய். நீ இப்படி தானம் செய்ய வேண்டும் அப்படி தானம் செய்ய வேண்டும் என்று நாம் யாரையும் நிர்பந்தம் செய்யவில்லை. நமக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டும். இதை நாம் என்றைக்கும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நான்கு விஷயங்களை நம் வாழ்க்கையில் நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு வந்தால் இது மிகவும் உத்தமம் ஆகும். வாழ்க்கை திருப்தியாக வாழ்வதற்கு இதுதான் வழி.

மகா பெரியவர் மூன்றாவதாக சொல்லப்பட்ட உபதேசத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். யார் நல்ல மனிதர்கள் என்று பார்த்தால் எல்லோரும் நல்ல மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. பின்பு அவர்களுடன் கொஞ்ச நாட்கள் பழகிய பின்பு தான் அவர்களுடைய குணம் தெரிந்து விடுகிறது. முதலில் தெரியவே இல்லை என்று சொல்லலாம். நல்லவர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்று கேட்டால் முக்கியமாக ஒரு உதவியை பெற்று விட்டு பதில் உதவி அவனுக்கு செய்யக் கூடாது என்கிற எண்ணம் உள்ளவர்கள் நல்லவர்கள். கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். ஆனால் இதற்கு ராமாயணத்தில் ராமர் விளக்கம் சொல்கிறார்.

ராமாயணத்தில் ராமருடைய மனைவி சீதா தேவியை ராவணன் அபகரித்துக் கொண்டு போனான். அந்த சமயத்தில் ஸ்ரீராமருக்கு உதவி செய்தது அனுமார். சீதை எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்த சமயத்தில் அவ்வளவு பெரிய சமுத்திரத்தைத் தாண்டி சீதை எங்கு இருக்கிறாள் என்று கண்டு பிடித்து அவளோடு பேசி ராவணனுக்கு புத்திமதி சொல்லி சீதையிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவந்து ராமருக்கு கொடுத்து இறுதி போரில் ராமர் வெற்றி பெற்று சீதையை பெறுவதற்கு மகா பெரிய உதவி செய்தவர் அனுமார்.

அனுமாருக்கு ராமர் ஒரு வார்த்தை சொன்னார். நீ எனக்கு செய்த உதவியை நீ மறந்துவிடு. நீ திரும்ப ஒரு உதவியை என்னிடமிருந்து எதிர் பார்க்காதே. ஏன் திரும்ப உன்னிடமிருந்து ஒரு உதவியை எதிர் பார்க்கக் கூடாதா? இது என்ன அநியாயம்? என்று கேட்கலாம். காரணம் சொல்கிறார் ராமர். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதனுடைய உதவி எப்பொழுது தேவைப்படும்? நாம் ஏதாவது ஒரு துன்பத்தில் இருந்தால் தான் இன்னொருவனுடைய உதவி தேவைப்படும். துன்பத்தில் இல்லை என்று சொன்னால் இன்னொருத்தனுடைய உதவி தேவை இல்லை. நான் இன்று துன்பத்தில் இருக்கிறேன் எனக்கு நீ உதவி பண்ணினாய் சரியாகி விட்டது. திரும்ப நாளை என்னிடம் இருந்து ஒரு உதவியை எதிர்பார்க்கிறாய் என்று சொன்னால் உனக்கும் ஒரு துன்பம் வந்தால் தானே நான் உனக்கு உதவி செய்ய வேண்டும். நான் உதவி செய்ய வேண்டும் என்று நீ நினைத்தால் உனக்கு ஒரு துன்பம் வரட்டும் என்று நீயே எதிர்பார்க்கிறாய் என்றுதானே அர்த்தம். இதை எதற்காக எதிர் பார்க்கிறாய்? நீ மகிழ்ச்சியுடன் நன்றாக இருக்க வேண்டியவன். ஆகவே இதுபோல் எதிர்பார்க்காதே என்று ராமர் அனுமாரிடம் சொன்னார்.

எதிர்பார்ப்பு இல்லாத காரணமில்லாத பக்தியை எவன் ஒருவன் இறைவனிடம் வைக்கிறானோ அவனே உண்மையான பக்தன். அது அநேகம் பேருக்கு புரியாமல் இருக்கலாம். பகவானை பூஜை செய்வது பகவானைப் பற்றி சிந்திப்பது என்பது இன்னொருவன் பாரக்க வேண்டும் என்பதற்காக எவன் செய்கிறானோ அது பக்தி இல்லை. இது என் கடமையை செய்கிறேன் என்கிற திருப்தியுடன் செய்பவனே உண்மையான பக்தன். இதுபோல் பக்தி செலுத்தி இறைவனுடைய நட்பை வைத்துக் கொள்ள வேண்டும். உலகியல் ரீதியாக பார்த்தால் அருகில் இருப்பவருடைய குணம் வருவதற்கு வாய்ப்புள்ளது. விடுமுறை என்றால் சினிமாவிற்கு செல்லும் நண்பனுடைய நட்பு கிடைத்தால் சினிமாவிற்கே கூப்பிடுவான். கோயிலுக்கு செல்லும் நண்பனின் நட்பு கிடைத்தால் கோயிலுக்கே கூப்பிடுவான். நல்ல சிந்தனையோடு இருப்பவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் எல்லோருக்கும் மகா உபதேசங்களை அருளி சனாதன தர்மத்தைக் காப்பாற்றி இந்த உலகத்தை காப்பாற்றியவர் மகா புருஷர் ஆதிசங்கரர். அப்பேர்ப்பட்ட சங்கரரிடம் நாம் எல்லோரும் என்றைக்கும் பக்திமான்களாக இருக்க வேண்டும். அவருக்கு சகல மனிதர்களும் கடமைப் பட்டு உள்ளது. அவர்களுக்கு நாம் என்றைக்கும் சிஷ்யர்களாக இருக்க வேண்டும். ஆகையால்தான் சங்கர ஜெயந்தியை பெரிய வைபவமாக கொண்டாடுகிறோம். அந்த ஆதிசங்கரருடைய கடாட்சத்துடன் எல்லோரும் அவர் காட்டிய நல்ல மார்க்கத்தில் சென்று இறைவனை அடையட்டும் என்று பிரார்த்திக்கிறேன். என்று மகா பெரியவர் நிறைவு செய்தார்.

உமாமகேஸ்வரர்

சிவன் மற்றும் பார்வதிதேவி. உமாமகேஸ்வரர் கோலத்தில் இயல்பாக அமர்ந்துள்ளனர். 5 – 6 ஆம் நூற்றாண்டு. இடம்: பரசுராமேஸ்வரர் கோவில் புவனேசுவர் ஒடிசா மாநிலம்.