இக்காலம் வரை ஜபம் தியானம் நற்பணிகள் திருப்பணிகள் அனைத்தும் செய்தும் யாம் இருக்கும் இடத்தில் இருக்கின்றோம் என்று சிலர் எண்ணுகின்றனர் இவர்களுக்கு யாம் ஒன்று செப்புவோம்.
அன்பர்களே யாமும் நீங்களும் ஓர் பாதையில் செல்கின்றோம். சிறிது முன் யாமும் பின்பு நீங்களும் என்பதே வித்தியாசம் என்றும் செப்பிட்டோமே. இறை பாதை நாடுவோர்கள் அனைவருக்கும் நல்முக்தி உண்டு என்றும் செப்பிட்டோமே. எப்பொழுது என்பதுதான் விதி. உதாரணமாக பயிரிட்டு செடி வளர அதனை இழுப்பதால் மேலும் வளர்வதில்லை அழிந்து போகும். இதை மனதில் நிறுத்தி காலங்கள் இதற்கு ஒதுக்கிட்டு தியான முறைகள் கர்ம யோக முறைகள் என்பதெல்லாம் செய்து வர அனைத்தும் கைகூடும் என்றும் செப்பிட்டோமே.
அவசரம் ஆன்மிகத்திற்கு ஆகாத ஓர் அவஸ்தை என்றும் இங்கு உங்களுக்கு எடுத்துரைத்தோம். ரோமாபுரி ஓர் நாளில் கட்டவில்லை என்று முன் செப்பியுள்ளோம். ஓர் கட்டிடத்திற்கு இந்நிலை என்றால் ஆன்மாவின் வளர்ச்சி, ஆன்மாவை முழுமையாக இறைவனிடம் சேர்க்க, எத்தனை காலங்கள், ஜன்மங்கள் எடுத்தல் வேண்டும் என்று சிந்தித்தால் போதும். நல் கர்மாக்கள் பலனால் இன்று நீங்கள் அனைவரும் இறை பாதையை நோக்கி அதில் ஏறி நடந்து கொண்டு இருக்கின்றீர்கள், இதுவே ஒரு பெரிய சாதனையாகும் என்று எடுத்துரைத்தோமே.
அச்சப்படுவதற்கோ, வேதனைப்படுவதற்கோ இங்கு எந்நிலையும் இல்லை. ரோகங்களும் கர்ம நிலைகள் மாறிட முழுமையாக நீங்கும் என்று எடுத்துரைத்தோமே. சிறு வேதனைகள் உண்டாகுதல் வேண்டும் என்கின்ற விதி உண்டு. அவ்விதம் இல்லையேல், கர்ம கழிப்புகள் இல்லை என்பதையும் உணர்தல் வேண்டும். ஏனெனில், உடலால் செய்த கர்ம வினைகள் உடலால் அநுபவித்து தீர்த்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு. இதுவே நடைபெறுகின்றது. இருப்பினும், அனைத்தும் எம்பிரான் திருவடியில் சமர்ப்பித்து செயல்பட முடிவு நன்மையே என்று செப்புகின்றோம்.
