கேள்வி: மகான்கள் பிறந்த நாளை ஆனந்தத்துடன் ஜெயந்தி என்று சிறப்பாக கொண்டாடுகின்றோம். ஆனால் அவர்கள் முக்தி அடைந்த நாளையும் அவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது ஏன்? அதனால் யாருக்கு நன்மை?
பொதுவாக ஜனன காலம் (குழந்தை பிறக்கும் நேரம்) அதன் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆனந்தம் கொடுக்கின்றது. ஆனால் குழந்தைக்கு அது பிறந்த நாள் முதல் வேதனைகள் துவங்குகின்றது. மாறாக முக்தி, இறப்பு என்பது அந்தக் குழந்தைக்கு அதன் வேதனைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் நேரமாகும். ஆதலால் அதுவும் கொண்டாடப்பட வேண்டியது என்று ஞான வழியில் கூறுவோம். அடுத்ததாக பலருக்கும் பலவழிகளில் ஞானிகள் உதவுகின்றனர். இது தெரிந்தும் தெரியாமலும் பல வழிகளில் நடைபெறுகின்றது. எனவே அவர்கள் விடுதலை பெற்ற நன்நாளில் அவர்களைப் போற்றி நன்றி செலுத்துவது ஓர் மகத்தான காரியமாகின்றது. அதுமட்டுமின்றி முக்தி பெற்றபின் சூட்சும வடிவில் அந்த மகான்கள் சஞ்சரிக்கும் காலங்களில் சில மலங்கள் அவர்களின் சூட்சும வடிவோடு ஒட்டிக்கொள்கின்றன. அவர்கள் முக்தி பெற்ற காலங்களில் பல பூஜைகள், மந்திரங்கள், செய்து ஆரத்தி காண்பிப்பதன் மூலம் அந்த மலங்கள் அவர்களின் சூட்சும வடிவை விட்டு நீங்குவதற்கு நாம் உதவுகின்றோம். இது அந்த மகான்களுக்கு நாம் செய்யும் மிகவும் புனிதமான காரியமாகும்.
