பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்ட அனுமன்

இராமாயணத்தில் அசோக வனத்தில் சீதையை சந்தித்த பிறகு இலங்கையை அழிக்கத் தொடங்கிய அனுமனை நோக்கி இந்திரஜித் தனது பிரம்மாஸ்திரத்தை எய்தான். பிரம்மாஸ்திரம் தன்னை ஒன்றும் செய்யாது என்ற வரத்தை ஏற்கனவே பெற்றிருந்த அனுமன் பிரம்மாவிற்கு மரியாதை அளிக்கும் நோக்கத்திலும் அந்த அஸ்திரத்தின் வலிமையை வீணடிக்கக் கூடாது என்பதாலும் பிரம்மாஸ்திரத்தின் மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாகவும் அனுமன் அந்த அஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு அடிபணிந்து நின்றார். தான் அனுமனை கட்டுப்பட்டுத்தி வெற்றி பெற்றதாக நினைத்த இந்திரஜித் அனுமனை இராவணனின் அவைக்கு அழைத்துச் சென்றான். இலங்கையின் பலத்தையும் இராவணனின் எண்ணங்களையும் நேரில் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தூதரின் கடமையைச் செய்ய நினைத்த அனுமன் பிரம்மாஸ்திர கட்டுடன் இராவணனின் அரசவைக்கு சென்றார். இந்திரஜித்தின் அறிவுரையை மீறி அசுரர்கள் பிரம்மாஸ்திரத்தால் கட்டப்பட்ட அனுமனை மேலும் சாதாரண கயிறுகளால் கட்டினர். அவர்கள் இவ்வாறு செய்தவுடன் பிரம்மாஸ்திரம் அனுமனை விட்டு நீங்கியது.

இந்திரஜித்தின் வலிமை மிக்க பாம்பு போன்ற பிரம்மாஸ்திரம் எனும் ஆயுதத்தால் அனுமனின் கைகளும் வாலும் சுருட்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கும் இராமாயணக் காட்சி இந்த சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஆந்திர மாநிலம் தாடிபத்ரியில் உள்ள சிந்தல வெங்கடரமண சுவாமி கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில் விஜயநகரப் பேரரசின் தலைவரான திம்மநாயுடுவால் 1510 – 1525 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது.

கார்த்திகேயன்

தமிழகத்தின் மானம்பாடி நாகநாதசாமி கோயிலில் இந்த முருகரின் சிலை ஒருகாலத்தில் இருந்தது. நேர்த்தியான நுணுக்கமான அலங்கார வேலைபாடுகளுடன் சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட சிலையாகும். இக்கோயிலானது கிபி 11ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜேந்திரசோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

பத்ரகாளி அம்மன்

திரிசூலத்துடன் கூடிய பத்ரகாளி அம்மன் சிற்பமானது தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலைச் சேர்ந்தது. இக்கோயில் கிபி 13 முதல் 16ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் (பிற்காலச் சோழர் காலம் முதல் விஜயநகரநாயக்கர் காலம் வரையிலான இடைப்பட்ட காலத்தில்) கட்டப்பட்டது. சக்தியின் உக்கிர வடிவமான பத்ரகாளி அம்மன் உருவம் கொண்ட திரிசூலம் உலோகத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

நந்தி பகவான்

கொல்லுமாங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதசுவாமி கோயிலில் இந்த நந்தி பகவான் சிற்பம் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் உள்ளது. விரைவில் இந்திய தொல்லியல் துறையிடம் ஆஸ்திரேலியா ஒப்படைக்க உள்ளது.

கண நாயகன்

வேத வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி வியாசர் இடைவிடாமல் சொல்லிய மகாபாரதம் எனும் இதிகாசத்தை தன் தந்தத்தை எழுத்தாணியாக்கி உருவாக்கித்தந்த கண நாயகரின் மரத்தாலான சிற்பம். இடம் ஸ்ரீ மகாதேவர் ஆலயம், வாழப்பள்ளி, கேரளம்.

ஶ்ரீ மீனாட்சி அம்மன்

காமதேனுவின் மீது அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் அன்னை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோலம். இடம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரில் உள்ள பழைமையான மரச்சிற்பம்.

புஷ்பக விமானம்

இராவணனின் புஷ்பக விமானம் பிரம்மாவுக்காக விஸ்வகர்மா உருவாக்கினார். பின்னர் பிரம்மா அதை செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கு பரிசளித்தார். பின்னர் அதை அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இராவணன் குபேரனிடம் இருந்து கைப்பற்றி தனதாக்கிக் கொண்டார். இராமர் அனுமன் உருவாக்கிய பாலத்தின் மூலம் இலங்கை சென்று இராவணனை போரில் வென்று இராவணன் வைத்திருந்த புஷ்பக விமானத்தில் சீதையுடன் திரும்ப அயோத்திக்கு வந்தார். தனது பட்டாபிஷேகம் முடிந்த பின்னர் குபேரனை அழைத்து மீண்டும் குபேரனிடம் புஷ்பக விமானம் திரும்ப கொடுத்து விட்டார். இவ்வரலாறு கம்ப இராமாயணத்தில் மீட்சிப் படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வரலாற்றை மரச்சிற்பமாக வடித்துள்ளார்கள். கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கடவல்லூர் விஷ்ணு ஆலயத்தின் கருவறையின் வெளிச்சுவரில் இந்த சிற்பம் உள்ளது.

முருகர் 11 தலையுடன்

இராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன் குண்டுக்கரை முருகன் கோவிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோவிலில் உள்ள எனது பழைய சிலையை எடுத்து விட்டு புதிய சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி புதிய முருகன் சிலை பிரதிஷ்டை செய்து சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். முருகனுக்குரிய ஆறு முகம் மற்றும் சிவனுக்குரிய ஐந்து முகம் சேர்த்து மொத்தம் 11 முகங்களுடன் இவர் சிவமுருக அம்சமாக வீற்றிருக்கிறார். மற்ற கோவில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்து உள்ளது. இடம் இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்.

காசேர பாறா

சுவாமி ஐயப்பன் அமர்ந்த பாறை இன்றும் காட்டிற்குள் உள்ளது. அச்சன்கோயில் ஆலயத்துக்கு அருகே உள்ள அடர்த்தியான காட்டிற்கு உள்ளே 12 கிலோ மீட்டர் தூரத்தில் எரிமேலிக்கு அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ளது. காசேரபாறா உள்ளது. காசேரா என்றால் மலையாளத்தில் நாற்காலி அல்லது இருக்கை என்று பொருள். பாறா என்றால் பாறை என்று பொருள்.

பந்தளராஜன் மனைவியின் நோய் தீர்க்க புலிப்பால் தேடிச் சென்ற அய்யப்ப சுவாமி இந்த பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தார். இன்றும் பழங்குடி மக்கள் காட்டுக்குள் செல்லும்போது இந்த பாறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு காட்டுக்குள் செல்கிறார்கள்.

பார்வதிதேவி

பஞ்சாக்கினி தபசு என்பது ஐந்து பூதங்களிலும் உள்ள ஐந்து அக்னிக்களின் மத்தியில் தவம் செய்யும் ஒரு கடுமையான தவம் ஆகும். பார்வதி மலைகளின் மகள் என்பதால் இமவானின் மகளாகப் பிறந்தார். சிவனின் அருளைப்பெற இந்த அக்னி மீது பார்வதி தேவி ஒற்றைக் காலில் நின்று கடுமையான தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்று இறுதியில் சிவனின் உடலில் பாதியைப் பெற்றார். பஞ்ச அக்னி தவம் செய்யும் பார்வதி தேவியின் செதுக்கல் உள்ள இந்தத் தூண் திருக்கழுகுன்றம் கோயிலில் உள்ளது.