காசேர பாறா

சுவாமி ஐயப்பன் அமர்ந்த பாறை இன்றும் காட்டிற்குள் உள்ளது. அச்சன்கோயில் ஆலயத்துக்கு அருகே உள்ள அடர்த்தியான காட்டிற்கு உள்ளே 12 கிலோ மீட்டர் தூரத்தில் எரிமேலிக்கு அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ளது. காசேரபாறா உள்ளது. காசேரா என்றால் மலையாளத்தில் நாற்காலி அல்லது இருக்கை என்று பொருள். பாறா என்றால் பாறை என்று பொருள்.

பந்தளராஜன் மனைவியின் நோய் தீர்க்க புலிப்பால் தேடிச் சென்ற அய்யப்ப சுவாமி இந்த பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தார். இன்றும் பழங்குடி மக்கள் காட்டுக்குள் செல்லும்போது இந்த பாறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு காட்டுக்குள் செல்கிறார்கள்.

பார்வதிதேவி

பஞ்சாக்கினி தபசு என்பது ஐந்து பூதங்களிலும் உள்ள ஐந்து அக்னிக்களின் மத்தியில் தவம் செய்யும் ஒரு கடுமையான தவம் ஆகும். பார்வதி மலைகளின் மகள் என்பதால் இமவானின் மகளாகப் பிறந்தார். சிவனின் அருளைப்பெற இந்த அக்னி மீது பார்வதி தேவி ஒற்றைக் காலில் நின்று கடுமையான தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்று இறுதியில் சிவனின் உடலில் பாதியைப் பெற்றார். பஞ்ச அக்னி தவம் செய்யும் பார்வதி தேவியின் செதுக்கல் உள்ள இந்தத் தூண் திருக்கழுகுன்றம் கோயிலில் உள்ளது.

யோக நரசிம்மர்

இரண்யன் வதை முடித்து யோக நிலையை மேற்க்கொள்ளும் நரசிம்மரை இரசித்து சிவனும் பிரம்மனும் ஆசி கொடுக்கின்றார்கள். யோக நரசிம்மரின் தலைக்கு மேல் சிவன் மற்றும் பிரம்மாவின் உருவம். இடம் திருக்காவியூர் மகாதேவர் கோயில், பத்தனம்திட்டா கேரளா

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி

புதுக்கோட்டை திருவேங்கைவாசல் ஊரில் கீரனூர் சாலையில் அமைந்துள்ள வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சணாமூர்த்தி என்றும் அர்த்தநாரீஸ்வர தட்சணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அபய வரத ஹஸ்தங்களுடன் ஒரு கரத்தில் ருத்ராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார். இக்கோயில் மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி அருள்பாலிக்கிறார். அம்பாள் பிரகதாம்பாள். இந்தல இறைவனை வழிபட்ட காமதேனுவின் சாபத்தை புலி ரூபத்தில் இறைவன் வந்து நீக்கியபடியால் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

பத்திரகிரியார்

பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பர்த்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்த அந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர். இவருடைய மெய்ஞானப்புலம்பல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இந்த சிற்பம் உள்ள இடம் அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் தெற்கு மாட வீதி மயிலாப்பூர்.

வீணாதரசிவன்

தான் வாசித்த இந்தப் பண் எப்படியிருக்கிறது என்ற பார்வையுடன் வீணாதர சிவன். இறைவனின் கை தனது தலையில் வைத்து ஆசி பெற்ற மகிழ்ச்சிப் பூரிப்பில் துள்ளலுடன் அடியவர் நிற்கிறார். வீணாதரசிவன் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. இடம் தர்மராஜ ரதம் மாமல்லபுரம்.

சதுர தாண்டவம் ஆடும் அஷ்ட புஜ சிவன்

சதுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் 108 தாண்டவங்களுள் ஒன்று மற்றும் பரதநாட்டியத்தில் 39வது கரணம் ஆகும். இங்கு சிவன் எட்டு கைகளோடு சதுர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். இடம் காமரசவல்லி உடனுறை கார்கோடேஸ்வரர் கோயில். அரியலூர் மாவட்டம்.

திரிநேத்திர தசபு வீரஆஞ்சநேயர்

மூன்று கண்களையும் பத்துக் கரங்களையும் வைத்திருக்கிறார். முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி அருள்பாலிக்கிறார். இடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் உள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில்.