முருகர் 11 தலையுடன்

இராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன் குண்டுக்கரை முருகன் கோவிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வந்தபோது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோவிலில் உள்ள எனது பழைய சிலையை எடுத்து விட்டு புதிய சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும் உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என கூறி மறைந்தார். பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி புதிய முருகன் சிலை பிரதிஷ்டை செய்து சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.

சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு சொல்கிறது. அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகன் தரிசனம் தருகிறார். முருகனுக்குரிய ஆறு முகம் மற்றும் சிவனுக்குரிய ஐந்து முகம் சேர்த்து மொத்தம் 11 முகங்களுடன் இவர் சிவமுருக அம்சமாக வீற்றிருக்கிறார். மற்ற கோவில்களில் எல்லாம் பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போல சிலை இருக்கும். ஆனால் இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்து உள்ளது. இடம் இராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்.

காசேர பாறா

சுவாமி ஐயப்பன் அமர்ந்த பாறை இன்றும் காட்டிற்குள் உள்ளது. அச்சன்கோயில் ஆலயத்துக்கு அருகே உள்ள அடர்த்தியான காட்டிற்கு உள்ளே 12 கிலோ மீட்டர் தூரத்தில் எரிமேலிக்கு அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ளது. காசேரபாறா உள்ளது. காசேரா என்றால் மலையாளத்தில் நாற்காலி அல்லது இருக்கை என்று பொருள். பாறா என்றால் பாறை என்று பொருள்.

பந்தளராஜன் மனைவியின் நோய் தீர்க்க புலிப்பால் தேடிச் சென்ற அய்யப்ப சுவாமி இந்த பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தார். இன்றும் பழங்குடி மக்கள் காட்டுக்குள் செல்லும்போது இந்த பாறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு காட்டுக்குள் செல்கிறார்கள்.

பார்வதிதேவி

பஞ்சாக்கினி தபசு என்பது ஐந்து பூதங்களிலும் உள்ள ஐந்து அக்னிக்களின் மத்தியில் தவம் செய்யும் ஒரு கடுமையான தவம் ஆகும். பார்வதி மலைகளின் மகள் என்பதால் இமவானின் மகளாகப் பிறந்தார். சிவனின் அருளைப்பெற இந்த அக்னி மீது பார்வதி தேவி ஒற்றைக் காலில் நின்று கடுமையான தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்று இறுதியில் சிவனின் உடலில் பாதியைப் பெற்றார். பஞ்ச அக்னி தவம் செய்யும் பார்வதி தேவியின் செதுக்கல் உள்ள இந்தத் தூண் திருக்கழுகுன்றம் கோயிலில் உள்ளது.

யோக நரசிம்மர்

இரண்யன் வதை முடித்து யோக நிலையை மேற்க்கொள்ளும் நரசிம்மரை இரசித்து சிவனும் பிரம்மனும் ஆசி கொடுக்கின்றார்கள். யோக நரசிம்மரின் தலைக்கு மேல் சிவன் மற்றும் பிரம்மாவின் உருவம். இடம் திருக்காவியூர் மகாதேவர் கோயில், பத்தனம்திட்டா கேரளா

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி

புதுக்கோட்டை திருவேங்கைவாசல் ஊரில் கீரனூர் சாலையில் அமைந்துள்ள வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சணாமூர்த்தி என்றும் அர்த்தநாரீஸ்வர தட்சணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அபய வரத ஹஸ்தங்களுடன் ஒரு கரத்தில் ருத்ராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார். இக்கோயில் மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி அருள்பாலிக்கிறார். அம்பாள் பிரகதாம்பாள். இந்தல இறைவனை வழிபட்ட காமதேனுவின் சாபத்தை புலி ரூபத்தில் இறைவன் வந்து நீக்கியபடியால் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

பத்திரகிரியார்

பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பர்த்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும் சிவபக்தியில் சிறந்தவர். பட்டினத்தாரின் ஞானத்தை அறிந்த அந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர். இவருடைய மெய்ஞானப்புலம்பல் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. இந்த சிற்பம் உள்ள இடம் அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் தெற்கு மாட வீதி மயிலாப்பூர்.

வீணாதரசிவன்

தான் வாசித்த இந்தப் பண் எப்படியிருக்கிறது என்ற பார்வையுடன் வீணாதர சிவன். இறைவனின் கை தனது தலையில் வைத்து ஆசி பெற்ற மகிழ்ச்சிப் பூரிப்பில் துள்ளலுடன் அடியவர் நிற்கிறார். வீணாதரசிவன் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. இடம் தர்மராஜ ரதம் மாமல்லபுரம்.

சதுர தாண்டவம் ஆடும் அஷ்ட புஜ சிவன்

சதுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் 108 தாண்டவங்களுள் ஒன்று மற்றும் பரதநாட்டியத்தில் 39வது கரணம் ஆகும். இங்கு சிவன் எட்டு கைகளோடு சதுர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். இடம் காமரசவல்லி உடனுறை கார்கோடேஸ்வரர் கோயில். அரியலூர் மாவட்டம்.