ஊர்த்துவ தாண்டவத்தில் சிவபெருமான்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் கிழக்குப் பகுதியின் தெற்குப் பகுதியில் ஊர்த்துவ தாண்டவரின் சிற்பம் உள்ளது. சிவனுக்கும் காளிக்கும் இடையே யார் சிறந்த நடனக் கலைஞர் என்ற போட்டியின் போது சிவன் தனது வலது காலை நேராகத் தன் தலையின் மட்டத்திற்கு தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். சிவபெருமானின் இடது காலுக்கு அருகில் அமர்ந்து மத்தளம் இசைக்கும் நந்திதேவர் சிவாம்சத்துடன் கூடியவர் என்பதை விளக்க 2 கைகள் தலைக்கு மேலே உயர்த்தி இறைவனை வணங்கிய நிலையில் அஞ்சலி ஹஸ்தமாகவும் 2 மத்தளம் வாசிக்கும் நிலையிலும் மொத்தம் 4 கரங்களுடன் உள்ளது. வலதுபக்கம் உடன் காரைக்கால் அம்மையார் உள்ளார். இடம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மதுரை.

ராமர் சீதை

ராமரும் சீதையும் சின்முத்திரையில் உள்ளார்கள். பரதன் சத்ருக்கன் அருகே உள்ளார்கள். லட்சுமணன் பணிவாக வணக்கம் செலுத்துகிறார். அனுமான் அன்புடன் ஸ்ரீராமரின் பாதங்களைத் தன் கைகளில் தொட்டு வணங்குகிறார். இடம் சிருங்கேரியில் உள்ள குரு நிவாஸில் இந்த சிற்பம் உள்ளது.

சிருங்கார நரசிம்மர் செஞ்சு லட்சுமி

அஹோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். உலக நன்மைக்காக செஞ்சுக்களின் குடியில் பிறந்த லட்சுமியை நரசிம்மர் இங்கு வந்து திருமணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது. செஞ்சுலட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள். இடம் அஹோபிலம்

அனுமன் மேல் ஸ்ரீராமன்

அனுமனின் மேல் அமர்ந்திருக்கும் கம்பீர தோற்றத்தில் ராமர். ஸ்ரீராமரை சுமந்திருப்பதால் பணிவான பெருமிதத்துடன் அனுமன். இடம்: ஸ்ரீசௌந்திரராஜபெருமாள் கோவில் தாடிக்கொம்பு. திண்டுக்கல் மாவட்டம்.

தும்புரு

காசியபர் முனிவருக்கு மூத்த மகனாக மனித உடலும் குதிரை முகமுமாக அவதரித்தவர் தும்புரு. நாரதர் இவருடைய குரு. நாரதரைப் போலவே இசையில் வல்லவர். நாரதரின் இசைக்கு நாரதகானம் என்றும் தும்புருவின் இசைக்கு தேவகானம் என்றும் பெயர். இவர் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருடர்கள் ஆகியோரின் தலைவர். இவர்களில் சிலர் பறவை உடலும் மனித முகமும் கொண்டவர்கள்.

ஒரு முறை நாரதர் தும்புருவின் கையில் வைத்து இருந்த பொன்னும் மணியும் பதித்த வீணையைக் கண்டு விவரம் கேட்க பூலோகத்தில் ப்ராசீனபர்ஹி என்ற பேரரசனைப் புகழ்ந்து பாடியதால் கிடைத்தது என்கிறார். நாரதர் கோபத்துடன் இறைவனைத் தவிர நரஸ்துதி கூடாது எனத் தெரியாதா வென்று கேட்டார். தும்புரு பூலோகத்தில் போய் வீழவேண்டுமென்று சாபமும் இட்டார். திருப்பதி திருமலையில் உள்ள கோண தீர்த்தம் என்னும் பகுதியில் தும்புரு வீழ்ந்தார். இதுவும் இறைவனின் திருவுளமே என்று நாராயணனைத் துதித்து இறுதியில் பரமபதம் அடைந்தார். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் அனைவரும் பரமபதம் அடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து வரமாகப் பெற்றார். அன்று முதல் கோண தீர்த்தம் தும்புருதீர்த்தம் ஆனது. தும்புருவின் கையில் உள்ள வீணையின் பெயர் களாவதி (மகதி). இடம்: சக்கரபாணி கோவில் கும்பகோணம்.

யோக சிவன்

யோக நிலையில் அமர்ந்துள்ள சிவன். இடம் கடம்பவனேஸ்வரர் கோவில். எறும்பூர். விருத்தாச்சலம். முதலாம் பராந்தகசோழன் காலம் (கி.பி 907-953)

அடிமுடி காணா அண்ணல்

அடிமுடி காணா அண்ணாமலையாக இறைவன் நிற்க திருமால் வராக அவதாரம் எடுத்து அவரது பாதத்தை தேட பிரம்மா முடியை காண மேலே சென்ற காட்சி. முற்சோழர் கால கலைப் படைப்பு. இடம்: நற்றுணையப்பர் திருக்கோயில். திருநனிப்பள்ளி நாகை மாவட்டம்.

மயிலில் முருகர்

முருகன் தன் தெய்வீக வாகனமான மயில் மீது கம்பீரமாக அமர்ந்துள்ளார். தேவந்திரனும் சூரனும் மயில் வடிவம் கொண்டு அவரை வாகனமாகத் தாங்கியதற்கு முன்பாக ஓங்கார (மந்திரம்) மயில் வடிவுடன் அவருக்கு வாகனமாக இருந்து வந்தது. இவ்வகையில் முருகனுக்கு தேவ மயில் அசுர மயில் இந்திர மயில் பிரணவாகார மயில் எனப் பலவிதமான மயில்கள் வாகனமாக இருக்கின்றன. இடம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

கூர்ம அவதாரம்

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்து கடலின் அடியில் அமர்ந்து கொள்ள மந்தார மலையை மத்தாகக் கொண்டும் வாசுகி எனும் நாகத்தை கயிறாகக் கொண்டும் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையும் அற்புதமான காட்சி. இடம்: ஹட்கேஷ்வர் மகாதேவ் கோவில். வாட்நகர் குஜராத்.