சிதம்பரம் நடராஜருக்கு வருடத்திற்கு இரண்டு முறைதான் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த அலங்காரத்தில் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். ஒருவர் நடனமாடிக் கொண்டே இருந்தால் அவரின் முகத்தை சரியாக பார்க்க முடியாது. சதாசர்வ காலமும் நிற்காமல் நடனமாடும் நடராஜரின் முகத்தை அனைவரும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த அலங்காரமானது செய்யப்படுகிறது.
அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்து மகாராஜா ஒருமுறை வேட்டையாடக் காட்டுக்குச் சென்றபோது மரத்தடியில் தவம் புரிந்துகொண்டிருந்த முனிவரின் கழுத்தில் இறந்து கிடந்த பாம்பு ஒன்றை எடுத்துப் போட்டான். இதை ஆசிரமத்திலிருந்த முனிவரின் மகன் கண்டுவிட்டார். தன் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட பரீட்சித்திடம் கோபம் கொண்டு என் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட நீ இன்னும் ஏழுநாளில் பாம்பு கடித்து இறப்பாய் என்று சபித்துவிடுகிறார். அதன்படியே பரீட்சித்து மகாராஜா ஏழாவது நாளில் கார்க்கோடகன் என்னும் பாம்பு கடித்து இறந்து விட்டார். அஷ்ட நாகங்களில் ஒருவனும் நாகங்களின் தலைவனுமான கத்துருவின் மகன்தான் கார்க்கோடகன்.
முனிவரின் மகன் இட்ட சாபத்தின் காரணமாக தன் தந்தை இறந்துவிட்ட தகவல் பரீட்சித்து மகாராஜாவின் மகன் ஜனமேஜயனுக்குத் தெரிய வந்தது. எனவே அவன் ஒரு யாகம் செய்து உலகத்திலுள்ள அனைத்து வகைப் பாம்புகளும் யாக அக்னியில் விழுந்து பொசுங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டான். அந்த யாக அக்னியில் விழாமல் கார்க்கோடகன் பாம்பு மட்டும் எப்படியோ தப்பித்து விட்டது. தப்பிச் சென்ற கார்க்கோடகனால் தனக்கு ஆபத்து எதுவும் வரக் கூடாது என்பதற்காக ஜனமேஜயன் மகா விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தான். அவன் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாவிஷ்ணு சோழ மண்டலத்திலுள்ள காமரசவல்லி என்னும் தலத்தில் கார்க்கோடகனால் வழிபடப்பெற்ற அருள்மிகு பாலாம்பிகா சமேத அருள்மிகு சௌந்தரேஸ்வரரை வழிபட்டால் கார்க்கோடகனால் உனக்கு எந்த ஆபத்தும் வராது என்று கூறினார். அதன்படியே ஜனமேஜயன் காமரசவல்லிக்கு வந்து அருள்மிகு சௌந்தரேஸ்வரரை பக்தியுடன் வழிபட்டான். ஜனமேஜயனின் பக்தியில் மகிழ்ந்த ஈசன் இனி உன் வம்சத்துக்குக் கார்க்கோடகனால் எந்த ஆபத்தும் நேராது என்று வரம் கொடுத்ததுடன் அந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு சகல விதமான சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்றும் அருள்புரிந்தார். ஜனமேஜயன் பூஜித்த இந்த ஈசனை கார்க்கோடகனும் பூஜித்ததால் ஈசனுக்கு கார்க்கோடகன் என்ற திருப்பெயரும் பெற்றது. இந்த சிற்பம் உள்ள இடம் சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் காமரசவல்லி அரியலூர்.
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நைமிசாரண்யத்தில் சீதா குண்ட் என்று ஒரு பிரபலமான குளம் உள்ளது. சீதா தேவி நீராடிய இடம் என்று நம்பப்படுகிறது. புகழ்பெற்ற ஆன்மிக புனித தலமாக உள்ளது.
வடக்கு ஆந்திர மாநில கடற்கரைப் பிரதேசமான விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் 244 மீட்டர் உயரமுள்ள சிம்மாசலம் என்ற குன்று உள்ளது. இந்த குன்றின் மீது பெரிய அளவில் வராக நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. மடக்கிய கால்கள் காட்டுப் பன்றி முகம் சிங்க வால் மனித உடலுடன் காட்சியளிக்கும் இவர் இரணியனை மடக்கிய முன்காலில் கிடத்தி அவன் வயிற்றைத் தன் இரு கரங்களால் கிழிக்கும் நிலையிலும் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் உள்ளார். இக்கோயில் கருவறை சுற்றுச்சுவரில் ஒரு பிறை மாடத்தில் மூலவர் வராக நரசிம்மரின் முழு உருவமும் சிற்ப வடிவில் காணப்படுகிறது. இவரும் மூலவரைப் போலவே அமைந்திருக்கிறார். மூலவர் வராக நரசிம்மர் வருடம் முழுவதும் கெட்டியான சந்தனத்தால் காப்பிடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவர் உக்கிர நரசிம்மராக இருப்பதால் வருடம் முழுவதும் சந்தனக் காப்பு சாற்றப்படுகிறது. ஒரு நாள் தவிர வருடம் முழுவதும் சந்தனத்துக்குள் இருக்கிறார். பார்க்க சிவலிங்கம் போலவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரிதியை அன்று ஒருநாள் மட்டும் மூலவர் மீதுள்ள சந்தனக் காப்பு முழுவதும் அகற்றப்பட்டு நிஜ ஸ்வரூபத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் வராக நரசிம்மர். அன்றைய தினம் இத்தலத்திற்கு வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள காந்தாரா நீர் வீழ்ச்சியுடன் கூடிய புஷ்கரணியில் நீராடி விட்டு கோயிலுக்கு வந்து வராக நரசிம்மரைத் தரிசிக்கிறார்கள். ஆந்திர மாநில திவ்ய ஷேத்திரங்களில் இந்தக் கோயிலும் ஒன்று.
முதல் படம்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் 400 ஆண்டுகளுக்கு முன்பு கையால் வரையப்பட்ட ஓவியம். அருகில் பிருங்கிரிஷி முனிவர். இரண்டாவது படம்: AI மூலம் உருவாக்கப்பட்ட படம்.
பிருங்கிரிஷி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அர்த்தநாரீஸ்வரராய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று அர்த்தநாரீஸ்வரர் கோலத்தை பிருங்கிரிஷி முனிவர் வழிபடும் காட்சி. ஊர் திருச்செங்கோடு.
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் 16 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி. இத்தலத்தில் முருகப்பெருமான் யானை மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார். திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப் பரிசாக தனது பட்டத்து யானையான ஐராவதம் என்ற வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத் தம்பதிகளை வெள்ளை யானையில் அமரச் செய்து அக்காட்சியை கண்ணார கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி கொடுத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சிங்கவரம் கிராமம். அங்கு பல்லவர் கால குடைவரைக் கோயிலாக அரங்கநாதர் கோயில் உள்ளது. அரங்கநாதருக்கு அருகாமையில் தனி சன்னதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓர் அறை இருக்கிறது. தாயாருக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் ஆரத்தித் தட்டினை சிறிது அந்தப் பக்கம் காண்பிப்பார். சிறிய சாளரத்தின் வழியே தீப வெளிச்சத்தில் அங்கு வீற்றிருக்கும் அழகிய கொற்றவை காட்சித் தருவாள். கொற்றவைக்கு வழக்கமாக உள்ள 8 கரங்கள் ஆயுதங்கள் இங்கு இல்லை. நான்கு கரங்கள் மட்டுமே உள்ளது. பின்னிரு கரங்கள் சக்கரம் சங்கினை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் இடுப்பின் மீதும் தொடையின் மீதும் வைத்த நிலையில் சற்று சாய்ந்து ஒய்யாரமாக நிற்கிறாள். வழக்கமாகக் கொற்றவையின் இரண்டு கால்களும் எருமைத் தலைமீது வைத்த நிலையில் காணப்படும். ஆனால் இங்கு வலது காலை மட்டும் மகிஷனின் தலைமீதும் இடது காலை தரையிலும் ஊன்றி நிற்கின்றாள். இரண்டு பக்கமும் இரண்டு அடியவர்கள் உள்ளார்கள். வலப்பக்கத்தில் இருப்பவர் நீண்ட தலைமுடி மீசையுடன் வீரனுக்கே உரித்தான பாணியில் இருக்கிறார். தனது வலது கையில் உள்ள கத்தியால் இடது கால் தொடையின் சதையை அரிந்துகொள்வது போல் உள்ளது. இடது பக்கத்தில் இருப்பவர் தரையில் முழங்கால் மண்டியிட்டு பூஜை செய்யும் நிலையில் அமர்ந்து இருக்கிறார். தலை மழித்து காணப்படுகிறது. மீசையும் இல்லை.
கருவறையில் அய்யனார் வடக்கு நோக்கிய நிலையில் உத்குடி ஆசனத்தில் ஜடாமுடியுடன் மாலை மற்றும் யக்ஞோபவீதம் கால்களில் சலங்கை அணிந்து அமர்ந்துள்ளார். சுற்றி காவல் தெய்வங்கள் உள்ளார்கள். உள்ளூர் மக்கள் இந்த அய்யனாரை சாஸ்தா என்றும் அழைக்கிறார்கள். இங்கு இவரது வாகன யானை பீடத்தின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: விஷ்ணு கோவில் இடங்கிமங்கலம் லால்குடி திருச்சி மாவட்டம்.
இராமர் சீதையுடன் பட்டாபிஷேகம் காட்சி. இராமரின் அருகில் இலட்சுணன் வணங்கியபடி நிற்கிறார். சீதையின் அருகில் பரதன் இராமர் சீதைக்கு குடைபிடிக்க சத்ருக்கனன் வெண்சாமரம் வீசுகிறார். இராமரின் காலருகே அனுமன். இடம் ஸ்ரீரங்கபுரம் ஸ்ரீரங்கநாயக சுவாமி ஆலயம். தெலங்கானா மாவட்டம். கிபி 1540 ஆம் ஆண்டில் வனபர்த்தி சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்களால் கட்டப்பட்டது.