சேனாபதி முருகர்

பிணிமுகம் என்ற யானையின் மீதேறி இருக்கும் குமரனை அர்ஜுன ரதத்தில் காண முடியும். இது தேவ சேனாபதி வடிவமாகும். தாரகன் சூரபத்மன் ஆகியோருடன் சண்டை செய்யத் தயாராக இருக்கும் நிலையாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

போகாசன மூர்த்தி

விஷ்ணு ஐந்து தலை அனந்தசேஷ நாகத்தின் மேல் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துக் குடையமைத்துள்ளது. விஷ்ணு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இடக்கை சக்கரத்தையும் மேல் வலக்கை சங்கையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கை இனம் காண முடியாத ஒரு பொருளைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் இருபுறமும் இரண்டு நாகினிகள் ஒயிலாக நின்றவாறு காட்சி தருகிறார்கள். சிற்பத்தின் இடது மூலையில் கருடன் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். பூமாதேவி விஷ்ணுவின் இடது புறத்தில் வலது காலை மடக்கி அமர்ந்த நிலையில் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். இடம்: பாதாமி குடைவரை கோவில். குகை எண் 3.

சோமாஸ்கந்தர்

மாகாபலிபுரத்தில் பல இடங்களில் மிக அழகிய சோமாஸ்கந்தச் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. சோமாஸ்கந்தர் எனும் வடிவம் பல்லவர்களுக்கே பிரத்யேகமானது. பின்னர் சோழர்களால் உலோகத்தில் முன்னெடுக்கப்பட்டது. சோமாஸ்கந்தர் என்றால் உமை ஸ்கந்தன் ஆகியோருடன் கூடிய சிவன். அருகருகே சிவனும் உமையும் அமர்ந்திருக்க இடையில் குழந்தை வடிவக் குமரன் விளையாடுவதுபோல் இந்தச் சிற்பங்கள் இருக்கும். முருகன் ஏழே நாள்களில் வளர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தது மூன்று நாள் மட்டுமே. நான்காவது நாள் இளைஞனாகி விட்டான். இந்த சிற்பத்தில் சோமாஸ்கந்த வடிவில் இருப்பவர் மூன்று நாட்களே ஆன குழந்தை முருகப்பெருமான்.

தம்பதி சமேதராக தட்சிணாமூர்த்தி

சுருட்டப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கௌரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகும்.

மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து மறையோதும் எங்கள் பரமன் என்று திருஞானசம்பந்தர் தம்பதி சமோதரர்களாக விளங்கும் தம்பதி சமேத தட்சிணாமூர்த்தியை சிறப்பிக்கிறார். சாந்த சொரூபமாக தனது இடது புறத்தில் தனது தேவியுடன் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியன் திருக்கோலம் உலகின் வேறெங்கும் காண முடியாது. தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்து வலக்காலை முயலகன் முதுகின் மீது தொங்கவிட்டு பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தனது முன்கை சின்முத்திரை காட்ட இடது முன்கை மடித்த இடது காலின்மீது உள்ளது. பின்னிரு கரங்களில் மானும் மழுவும் உள்ளன. சனகாதி முனிவர்கள் காலடியில் அமர்ந்துள்ளனர். அவரது இடது தோளின் பின்புறம் பரிவோடு தோளைப் பற்றியவாறும் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பது போலவும் அமைந்துள்ள பார்வதி தேவியின் அழகிய திருவடிவம். இடம்: பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் ஊத்துக்கோட்டை சுருட்டபள்ளி ஆந்திர மாநிலம்.

பிரம்ம சாஸ்தா முருகர்

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரமனைச் சிறையிலிட்டு பிரமனின் படைப்புத் தொழிலைத் தான் கையிலெடுத்ததைக் காண்பிப்பதுதான் முருகனின் பிரம்ம சாஸ்தா முருகர். திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகையின் காலமும் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னானதே. இங்கே முருகனின் முகம் வெகுவாகச் சிதைந்துள்ளது. மார்பில் சன்ன வீரம் அணியவில்லை, ஆனால் பூணூலை நிவீதமாக வலது கைக்கு மேல் வருமாறு அணிந்துள்ளார். தலையில் வைத்துள்ள கிரீடம் முருகனைக் குறிப்பால் உணர்த்தி விடுகிறது. இடம் திருச்சி மலைக்கோட்டை. இன்னோரு முருகரின் சிற்பம் மகாபலிபுரம் திரிமூர்த்தி மண்டபத்தில் உள்ளது.

நாராயணி

ஆடை ஆபரணங்களோடு கால் மூட்டு கூட கல்லில் தெரிய காலை சிறிது மடக்கி இடையை கொஞ்சம் வளைத்து ஒயிலாக நிற்கும் நாராயணி என்றும் அழைக்கப்படும் விஷ்ணு துர்க்கை தேவியின் பல வடிவங்களில் ஒன்று. இடம்: கங்காஜடாதீஸ்வரர் கோவில் கோவிந்தபுத்தூர் அரியலூர் மாவட்டம்.

சிரித்த முகத்துடன் முருகன்

சுகாசனத்தில் வீற்றிருந்த கோலத்தில் முருகர் அருள் பாலிக்கிறார். தலையில் கரண்ட மகுடம். ஒரு கையில் அக்ஷர (அக்க) மாலை. இன்னொரு கையில் சக்தி ஆயுதம்.

சூரியன் விஸ்வகர்மாவிடம் சென்று தன் கடுமையான வெளிச்சத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். விஸ்வகர்மா சூரியனின் ஒரு சிறு பகுதியை உடைத்து சக்தி ஆயுதத்தை உருவாக்கினார். இதைக் கொண்டுதான் முருகர் மலைகளைப் பிளக்கிறார். எதிரிகளை அழிக்கிறார். முருகன் சன்னவீரம் என்ற குறுக்காகச் செல்லும் மார்புப் பட்டைகளை அணிந்திருக்கிறார். பாண்டியர்களின் கலைப் படைப்பில் உருவானது இந்த சிற்பம். இடம்: கழுகுமலை வெட்டுவான் கோவில். தூத்துக்குடி மாவட்டம்.

சூரிய பகவான்

காஷ்யப முனிவருக்கும் அவரது மனைவி அதிதிக்கும் மாகா மாதம் 7 ஆம் தேதி சூரிய பகவான் பிறந்தார். இந்நாள் சூரிய ஜெயந்தியாகவும் ரத சப்தமியாகவும் கொண்டாடப்படுகிறது. 7 ஆம் நாள் ரத சப்தமியின் அடையாளமாக சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வருகிறார். இங்குள்ள ஏழு குதிரைகள் சூரியனின் நாளான ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன. இடம்: கேதாரேஸ்வரர் கோவில் ஹலேபீடு ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.