மகாபாரதம் 10. சௌப்தீக பருவம் பகுதி -2

பாஞ்சால நாட்டு இளவரசன் திருஷ்டத்யும்னனும் திரௌபதியின் செல்வர்கள் ஐவரும் பாண்டவர்களின் படைகளும் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யுதிஷ்டிரனிடன் எடுத்துச் செல்லப்பட்டது அதை கேட்டு அவன் ஸ்தப்பித்துப்போனான். பாண்டவ சகோதரர்களும் திகைத்துப் போயினர். இந்த மகாபாரதப் போரின் விளைவாக தோல்வியுற்றவர்களும் வெற்றி அடைந்தவர்களும் ஏறத்தாழ ஒரே பரிதாபகரமான நிலையில் இருந்தார்கள். இந்த விபத்து நடந்த இடத்திற்கு திரௌபதி அதிவிரைவில் அழைத்து வரப்பட்டாள். தன் செல்வர்கள் மடிந்த கிடந்ததை பார்த்த அவள் மயங்கி கீழே விழுந்து கதறி அழுதாள். அதே வேகத்துடன் அவள் பேச ஆரம்பித்தாள். அஸ்வத்தாமனை கொல்ல முடியாது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவனை வெட்டி தள்ள வேண்டும். இல்லையெனில் அவன் சிரசில் அணிந்திருக்கும் மணியை பிருங்கி அவனை அவமானப்படுத்த வேண்டும். இந்த இரண்டில் ஒன்று நிகழும் வரை நான் பட்டினி கிடப்பேன் என்றாள் அவனைத் தேடிப் பிடிக்க பீமன் உடனே கிளம்பினான்.

வல்லமை பெற்ற அஸ்வத்தாமனை எளிதில் பிடிக்க பீமனால் இயலாது என்பதை அறிந்த கிருஷ்ணரும் அர்ஜூனனும் பீமனோடு கிளம்பினார்கள். கங்கை கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனை கண்டார்கள். பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான். அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளை இட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் ஆற்றல் இல்லை.

பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். உத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்று வியாசர் ஆசி கூறினார். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்கு சென்றான்.

கிருஷ்ணர் அர்ஜுனன் பீமன் மூவரும் பாசறைக்கு திரும்பிச்சென்று தாங்கள் கைப்பற்றி வந்த அஸ்வத்தாமனின் மணியை திரௌபதியிடம் ஒப்படைத்தார்கள். துரியோதனன் அழிந்து விட்டான். உன்னுடைய சபதம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது என்று தெரியப்படுத்தினார்கள் திரௌபதி ஒருவாறு மன அமைதி அடைந்தாள்.

சௌப்தீக பருவம் முடிந்தது அடுத்து ஸ்திரி பருவம்.

மகாபாரதம் 10. சௌப்தீக பருவம் பகுதி -1

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள் படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகியோர் துரியோதனைக் கண்டு வேதனைப்பட்டனர். துரியோதனன் வாழ்ந்திருந்த காலத்தில் வல்லமை மிக்க பேரரசனாக இருந்தான். சிற்றரசர்களும் மந்திரிகளும் அவனுடைய ஆணையை நிறைவேற்ற காத்திருந்தனர். அல்லும் பகலும் அவனுக்கு பணிபுரிய பாணியாளர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது துரியோதனன் கவனிப்பார் யாரும் இல்லாமல் அடிபட்டு வெறும் தரையில் தன்னந்தனியாக படுத்து தவித்துக் கொண்டிருந்தான். தொடைகள் முறிந்ததால் நகர முடியாதமல் துயரமுற்றான். தான் அணு அணுவாக செத்து கொண்டிருப்பதை அறிந்தான் துரியோதனன்.

தன் வேந்தனின் நிலையை பார்த்த அஸ்வத்தாமன் வருந்தினான். விதியை வெல்ல முடியவில்லையே என்று அஸ்வத்தாமனிடம் வருந்தினான் துரியோதனன். அஸ்வத்தாமனுக்கு கோபம் மூண்டது. இல்லாத பொய்யை சொல்லி பாண்டவர்கள் என் தந்தையை தோற்கடித்து அவரைக் கொன்று விட்டனர். அடாத முறையை கையாண்டு உங்களை இந்நிலைக்கு கொண்டுவந்து விட்டனர். இப்பொழுது நான் சபதம் மேற்கொள்கிறேன். பாண்டவர்களே நான் கொல்வேன். அவர்களை ஒழித்துத் தள்ளும் வரை நான் ஓய மாட்டேன் என்று அசுவதாமன் துரியோதனனிடம் கூறினான். அஸ்வத்தாமனின் சபதம் துரியோதனனுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது அஸ்வத்தாமன் மீது நீர் தெளித்து அவனை சேனாதிபதி ஆக்கினான் துரியோதனன். இப்போது கௌரவர்களிடம் சேனே ஒன்றும் இல்லை. கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா மூவரும் பாண்டவர்கள் தங்கியிருந்த பாசறைக்கு அருகில் சென்று நள்ளிரவு வரை காத்திருந்தனர்.

உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும் திரௌபதியையும் கொல்ல வேண்டும் என அஸ்வத்தாமன் கருதினான். கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை. கிருபரின் எதிர்ப்பை மீறி அன்று இரவு அஸ்வத்தாமன் பாண்டவர்கள் பாசறைக்குள் நுழைந்தான். அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அவன் திரௌபதியின் புதல்வர்களான உபபாண்டவர்களை பாண்டவர்கள் என்று எண்ணி தலையை கொய்து கொன்றான். தன் தந்தையை கொன்ற திருஷ்டத்துய்மனை சித்ரவதை செய்து கொன்றான். சிகண்டியையும் கொன்றான். அப்போது பாண்டவர்கள் கிருஷ்ணரின் அறிவுறைப்படி அங்கு இல்லை.

அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான். அஸ்வத்தாமன் தான் கொய்த தலைகளை துரியோதனன் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு கொண்டு சென்று காண்பித்தான். அதை பார்த்த துரியோதனன் மூடனே இவர்களின் இளகிய முகத்தை பார்த்துமா உனக்கு தெரியவில்லை இவர்கள் பாண்டவர்கள் இல்லை என்று என்ன காரியம் செய்தாய் நீ என்று திட்டி விட்டு இறுதிவரை பாண்டவர்களை ஒழிக்க முடியவில்லையே என்று கூறி தன் விழிகளை மூடினான். துரியோதனன் உயிர் பிரிந்தது. வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை. மரணித்த ஒவ்வொரு வீரனின் இறப்பிற்கு பலரின் பூர்வ ஜென்ம கதை, சாபங்கள், பாவங்கள், புண்ணியங்கள், சூழ்ச்சி, கடன் என அனைத்தும் இருந்தது. ஆயிரம் ஆயிரம் வீரர்களை பலிக்கொண்டு சடலங்களை மலையாக குவித்து குருதியை ஆராய் பெருக்கெடுக்க செய்த குருக்ஷேத்திர போர் முடிவிற்கு வந்தது.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -6

பாண்டவர்கள் கௌரவர்களுடைய பாசறைக்கு சென்று அதை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அப்படி செய்தது கௌரவர்களை வெற்றி பெற்றதற்கு அறிகுறியாக இருந்தது. கிருஷ்ணர் அர்ஜூனனை தேரில் உள்ள கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்க சொன்னார். கொடியில் வீற்றிருந்த மஹா பலசாலியான அனுமாரையும் இறங்குமாறு வேண்டினார். அவர்கள் இறங்கியதுமே அர்ஜுனனின் தேர் பற்றியெரிந்தது. சுக்கு நூறாக வெடித்து சிதறியது. அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து இது என்ன விபரீதம் என்று வினவினான். அதற்கு கிருஷ்ணர் பீஷ்மர் துரோணர் கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும். நானும் சிரஞ்சீவி அனுமாரும் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை. நான் இறங்கியதும் அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது என்றார். பாண்டவர்கள் கிருஷ்ணரை வணங்கி நன்றி கூறினர். தர்மத்தை காக்க நடத்திய நாடகத்தில் அனுமாரின் பங்கு முடிந்தது என்று கூறி அவருக்கு விடை கொடுத்தார் கிருஷ்ணர். அனுமாரும் கிருஷ்ணரை வணங்கி பாண்டவர்களுக்கு ஆசி கூறி விடை பெற்றார்.

யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். உடனடியாக அஸ்தினாபுரம் சென்று பெரியப்பா திருதராஷ்டிரருக்கும் பெரிய தாய் காந்தாரிக்கும் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணர் அன்று இரவு பாண்டவர்கள் ஐவரும் பாசறைக்குள் தங்காமல் வெளியில் தங்கி உறங்குமாறு கேட்டுக்கொண்டார். கிருஷ்ணர் கூறியதை பாண்டவர்கள் ஏற்றக்கொண்டனர்.

திருதராஷ்டிரருக்கும் காந்தாரிக்கும் கிருஷ்ணர் ஆறுதல் கூறினார். உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம். அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை. தான் என்னும் ஆணவத்தால் அழிந்தான். அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது. காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறி ஆசி வழங்கினாய் என்று நினைவு இருக்கிறதா மகனே தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு என்றாயே அது அப்படியே நிறைவேறியது. எல்லாம் விதி. எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம் என்ற கிருஷ்ணரரின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள்.

சல்லிய பருவம் முடிந்தது. அடுத்தது சௌப்தீக பருவம்.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -5

பீமன் கொடுத்த ஒரு பயங்கரமான அடியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு துரியோதனன் மேல் நோக்கி லாவகமாக குதித்தான். அவன் கால் கீழே படுவதற்குள் அவனுடைய இரண்டு தொடைகளையும் கதையால் ஓங்கி அடித்தான் பீமன். துரியோதனனின் இரண்டு தொடைகளும் உடைந்து அழிந்தன. துரியோதனன் நிற்க இயலாமல் கீழே வீழுந்தான்.

இடுப்புக்குக் கீழ் அடிப்பது பிழை. அது போர் நெறி ஆகாது. எந்த போர் வீரனும் இந்த அடாத செயலை ஆமோதிக்க மாட்டான். இது பீமனுக்கும் தெரியும். ஆனால் துரியோதனனின் கோபத்தை கிளப்புதல் பொருட்டே வேண்டுமென்றே பீமன் தொடையில் அடித்தான். அதன் பிறகு பீமன் துள்ளி குதித்தான் இக்காட்சியைப் பார்த்த துரியோதனன் ஆத்திரமும் சினமும் கொண்டான். பீமா இதுவா போர் முறை இதுவா சத்திரிய தர்மம் என்றான்.

துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் துரியோதனா நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய் அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா. கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே அது தர்மமா. அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே அது தர்மமா. திரோபதியை சபையில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மானபங்கம் செய்தாயே அது தர்மமா. எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே அது தர்மமா. பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய். நீ செய்த செயல்களின் வழியாக குரு வம்சத்திற்கு பேரழிவைக் கொண்டு வந்த பொல்லாத பாவி நீ. இந்த நெருக்கடியில் உன்னுடைய தொடைகளை நொறுக்கி தள்ளுவேன் என்று நான் சபதம் ஏற்று இருக்கிறேன். அதே வேளையில் உன் தலையின் மீது என் காலை வைப்பேன் என்று சபதம் ஏற்றேன். அதனை இப்போது நிறைவேற்றுகிறேன் என்று கூறிக்கொண்டு தரையில் கிடந்த துரியோதனனை காலால் உதைத்து காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்.

பீமனின் இச்செயலை யுதிஷ்டிரர் விரும்பவில்லை. வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் இல்லை என பீமனைக் கண்டித்தார். பீமன் செய்த இச்செயலுக்காக துரியோதனிடம் யுதிஷ்டிரர் மன்னிப்பு கேட்டார். நடந்த இந்த துர்பாக்கியங்கள் அனைத்தும் துரியோதனன் தனக்குத்தானே தேடிக் கொண்டவைகள் என்று அவனுக்கு விளக்கிக் காட்டினார். அதற்கு துரியோதனன் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆண்ட வீரமும் க்ஷத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதத்துடன் உயிர் துறந்து நண்பர்களுடன் சொர்கத்தில் இருப்பேன் என்றான். படுகாயம் அடைந்த துரியோதனன் மரணத்தின் வாயிலில் நிற்கவோ நடக்கவோ முடியாத சூழ்நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தான். இதற்கு மேல் அவனை தாக்க வேண்டாம் என்று முடிவெடுத்தனர் பாண்டவர்கள். தானாக இறந்து விடுவான் என்று கருதி அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால் அவன் உயிர் பிரியவில்லை. துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை. பாண்டவர்கள் மீது இருத்த வஞ்சம் அவனை இன்னும் சாக விடாமல் உயிருக்கு உரமாகி கொண்டே இருந்தது.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -4

யுதிஷ்டிரன் யுத்தத்திற்கு அழைத்ததும் துரியோதனன் பேசினான் என்னுடைய நண்பர்கள் அனைவரும் எனக்காக உயிரை கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் பட்டிருக்கும் கடனை நான் உங்கள் அனைவரையும் அழித்து அதன் வாயிலாக அவர்களுக்கு என் கடனை திருப்பி செலுத்துவேன். ஆனால் இப்பொழுது என்னிடம் ஆயுதம் ஏதுமில்லை. கவசம் எதுவும் இல்லை. ரதம் இல்லை. நீங்கள் அனைவரும் அறநெறி பிறழாத போர்வீரர்கள். ஆயுதம் இல்லாமல் இருக்கின்ற என்னை நீங்கள் தாக்குதல் பொருந்தாது என்றான். அதற்கு யுதிஷ்டிரர் அறநெறி இல்லாத முறையை கையாண்டு சிறுவனாகிய அபிமன்யுவை ஆயுதம் அற்றவனாக நீங்கள் செய்து வைத்தீர்கள். நிராயுதபாணியாக இருந்த பொழுது அவனை மகாவீரர்கள் ஒன்று கூடி அவனை கொன்றீர்கள். உன்னை அணுஅணுவாக சித்ரவதை செய்து கொன்றாலும் தகும். ஆனால் இது போன்று நாங்கள் செய்ய மாட்டோம். உனக்கு தேவையான ஆயுதங்கள் நாங்கள் தருகின்றோம். நாங்கள் அனைவரும் தனித்தனியாக உன்னுடன் யுத்தம் செய்கின்றோம். எங்களில் யாரேனும் ஒருவரை நீ கொன்றால் மற்றைய நான்கு பேரும் வனவாசத்தை நோக்கி செல்கின்றோம். அப்போது எதிரி இல்லாத சாம்ராஜ்யத்தை ஏற்று அனுபவிப்பாயாக என்று கூறினார்.

பீமன் இடையில் துரியோதனனிடம் பேசினான். உன்னுடைய சகோதரர்கள் அனைவரையும் நான் அழித்து விட்டேன். அதற்கெல்லாம் மேலாக உன்னையும் கொல்ல வேண்டும் என்று நான் உறுதி கொண்டிருக்கின்றேன். ஆகையால் தயவு செய்து என்னுடன் போர் புரிய வா என்றான். அதற்கு துரியோதனன் உன்னுடன் கதை யுத்தம் செய்ய வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக என்னிடம் இருக்கிறது. இப்போது கதை ஆயுதம் ஒன்று தான் என்னிடம் இருக்கிறது. உன்னிடத்தில் க்ஷத்திரனுக்குரிய பாங்கு இருக்குமாகில் நீ அணிந்திருக்கும் கவசங்களையும் ஏனைய ஆயுதங்களையும் புறக்கணித்துவிட்டு தரையில் நின்று என்னுடன் நீ சண்டை புரிவாயாக. ஏனென்றால் இப்பொழுது என்னிடத்தில் ரதம் ஏதும் இல்லை என்றான். இந்த நிபந்தனைக்கு இருவரும் ஒத்துக்கொண்டனர். இருவரும் குருஷேத்திரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள். யுத்தம் துவங்கியது.

யுத்த நியதிகளை இருவரும் கடைபிடித்தனர். அவரவர் திறமைகளை இருவரும் நன்கு வெளிப்படுத்தினர். பார்ப்பதற்கு ஒருவருக்கொருவர் பொருத்தமான எதிரியாகவே தென்பட்டார்கள். திறமையை காட்ட துவங்கிய சிறிது நேரத்தில் சண்டை உயிரை வாங்கும் விதமாக வடிவெடுத்தது. அத்தகைய சண்டையிலும் போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை. பீமன் வல்லமை வாய்ந்தவன். துரியோதனன் திறமைசாலி. இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது. கிருஷ்ணர் யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால் தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து அவன் தொடையைப் பிளக்க வேண்டும் என அர்ஜூனனிடம் குறிப்பால் தெரிவிக்க அர்ஜூனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையை தட்டிக்காட்டினான்.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -3

பாண்டவர்களில் சகாதேவன் சகுனியை கொல்வேன் என்ற தன் சபதத்தை நிறைவேற்றினான். பீமன் 100 கௌரவர்களையும் அழிப்பேன் என்ற சபதத்தில் துரியோதனை தவிர்த்து அனைவரையும் அழித்துவிட்டான். துரியோதனனையும் அழித்து தன் சபதத்தை முடிக்க துரியோதனனை தேடினான்.

துரியோதனன் யுத்தகளத்திலிருந்து நடந்த செல்ல ஆரம்பித்தான். இந்த வம்சம் முழுவதும் அழிந்து போவதற்கு நீயே காரணமாக இருப்பாய் என்று விதுரர் துரியோதனிடம் கூறியது அவனுக்கு அப்போது ஞாபகத்துக்கு வந்தது. தன்னுடைய தேகம் தீயினுள் போட்டு வெந்து கொண்டிருப்பது போன்று இருந்தது துரியோதனனுக்கு. தன்னுடைய கதையை தவிர அவன் கைவசம் வேறு எதுவும் இல்லை. தன் கதாயுதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நடந்து சென்ற அவன் அருகில் இருக்கும் துவைபாயன தடாகத்தை அடைந்தான். தன் உடலின் எரிச்சலை தணிப்பதற்கு தடாகத்திற்குள் அமர்ந்தான்.

துரியோதனன் மரணத்திலிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு ஓடிவிட்டான் என்று கருதிய பாண்டவர்கள் ஏமாற்றமடைந்தனர். அவன் உயிர் பிழைத்திருத்தால் யுத்தம் இன்னும் பூர்த்தியடையவில்லை என்று பாண்டவர்கள் எண்ணினார்கள். வேட்டைக்காரர்கள் கூட்டமொன்று அவர்களை அணுகி துரியோதனன் துவைபாயன தடாகத்தில் அமர்ந்து இருப்பதாக தெரிவித்தார்கள். அது மாலை நேரம். பாண்டவர்களும் கிருஷ்ணன் விரைந்து சென்று துரியோதனனை கண்டுபிடித்தனர். துரியோதனனை கண்ட யுதிஷ்டிரர் நீ ஒரு க்ஷத்திரன் என்று எண்ணியிருந்தேன். ஆனால் நீ ஒரு பயந்தாங்கோலி போன்று உன் உயிரை காப்பாற்றுவதற்கு இங்கு வந்து ஒளிந்து கொண்டு இருக்கின்றாய். உனக்காக உயிர்த்தியாகம் செய்த கூட்டத்தாரை நீ மறந்து விட்டாய் என்றான். அதற்கு துரியோதனன் என் உடலுக்கு சிறிது ஓய்வு தருதல் பொருட்டே நான் எங்கே இருக்கின்றேன். என்னுடைய சகோதரர்கள் நண்பர்கள் அனைவரையும் இழந்தேன். இப்போது ராஜ்யத்தில் எனக்கு ஆசை ஏதும் இல்லை. ஆகையால் இந்த ராஜ்யத்தை உனக்கு தானமாக கொடுத்து விட்டு காட்டிற்குள் சென்று தவ வாழ்க்கை வாழ எண்ணியுள்ளேன் என்றான்.

அன்று முதியவர்கள் கொடுத்த புத்திமதியை நீ ஏற்கவில்லை. நாங்கள் சம்பாதித்த ராஜ்ஜியத்தில் ஐந்து ஊசிமுனை நிலம் கூட கொடுக்க மாட்டேன் என்று மறுத்தாய். இப்பொழுது யுத்தத்தில் தோற்கும் தருவாயில் தானமாக கொடுக்கின்றேன் என்கிறாய். உன்னுடைய பித்தலாட்டம் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிகிறது. இந்த ராஜ்யம் உன்னுடையது என்று நீ உரிமை கொண்டாடினால் உன்னை வென்று அந்த ராஜ்யத்தை பெற நான் விரும்புகின்றேன். நான் ஒரு க்ஷத்திரன் என்பதை தயவு செய்து நீ தெரிந்துகொள். யாரிடமிருந்தும் நான் தானமாக எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அப்படியிருக்க உன்னை போன்ற எதிரி ஒருவனிடம் இருந்து நான் எப்படி தானமாக ஏற்பது யுத்தத்திற்கு வா என்று யுதிஷ்டிரர் அழைத்தார்.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -2

பதினேட்டாம் நாள் யுத்தம் துவங்கியது. சிறுசிறு கூட்டங்களை வைத்தே பொருத்தமான வியூகத்தை சல்லியன் அமைத்தான். பாண்டவர்களின் நிலையும் இவ்வாறே இருந்தது. அவர்களும் சிறு கூட்டத்தை வைத்து வியூகம் அமைத்துக்கொண்டனர். இரு படை வீரர்களும் போர்க்களம் வந்தனர். யுத்தம் துவங்கியது. கர்ணன் போர்க்களத்தில் இறந்ததால் தானே போர்க்களம் சென்று கிருஷ்ணரையும் அர்ஜூனனையும் கொல்வதாக கர்ணனினிடம் கூறிய உறுதிமொழியை மனதில் எண்ணிக்கொண்டான் சல்லியன். சல்லியனை எதிர்த்து போராட யுதிஷ்டிரர் முன் வந்தார். யுதிஷ்டிரருக்கும் சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது. சல்லியன் எய்த அம்புகள் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது. யுதிஷ்டிரருக்கு உதவி புரிய பீமன் வந்தான். சல்லியனின் ரதத்தை உடைத்து தள்ளினான். வேறு ரதத்தில் வந்த சல்லியன் யுதிஷ்டிரரின் இருபக்கமும் இருந்த படைகளை அழித்து தள்ளினான். அவனை வெற்றி அடைவான் வெற்றி தங்களுக்கு உரியது என்று கௌரவ கூட்டத்தினர் எதிர்பார்த்தனர். அமைதியாக போர் புரிந்து வந்த யுதிஷ்டிரர் திடீரென்று எமதர்மனுக்கு நிகரான போர் வீரனாக தென்பட்டான்.

யுதிஷ்டிரர் தன் சிந்தையை கிருஷ்ணர் மீது செலுத்தினார். கிருஷ்ணர் புன்முறுவலுடன் பார்க்க யுதிஷ்டிரர் தன் சக்தி ஆயுதத்தை எடுத்து சல்லியனின் மீது வீசினார். சக்தி ஆயுதம் சல்லியனின் மார்பில் சரியாக சென்று தாக்கி சல்லியனை கொன்றது. கௌரவர்களின் கடைசி தளபதியும் வீழ்ந்தான்.

கௌரவ படைகளில் இப்போது குழப்பம் உண்டாகியது. நாலாபக்கமும் பீதியுடனும் அவர்கள் கலைந்து ஓடினர். இந்த நெருக்கடியில் துரியோதனன் உட்புகுந்து அவர்களுக்கிடையில் தைரியத்தையும் ஊட்டினான். பாண்டவர்களை எதிர்த்து அவன் வீராவேசத்துடன் போர்புரிந்தான். மீதம் இருந்த அவனுடைய சகோதரர்களும் தங்களுடைய முழு திறமையை கையாண்டனர். ஆயினும் அவர்கள் அனைவரையும் பீமன் அழித்தான். தான் செய்திருந்த சபதத்தை நிறைவேற்ற இந்த சந்தர்ப்பத்தை பீமன் நன்கு பயன்படுத்தி கொண்டு அவர்கள் அனைவரையும் அழித்தான். துரியோதனன் ஒருவன் நீங்கலாக ஏனைய 99 பேரும் மடிந்து போயினர்.

குருக்ஷேத்திர போருக்கு காரணமான சகுனி போருக்கு வந்தான். அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான். சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை. அப்போது சகாதேவன் உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு. குல நாசம் புரிந்த கொடியவனே இது சூதாடும் களம் அல்ல போர்க்களம். இங்கு உன் வஞ்சம் பலிக்காது என்றபடியே சகுனியின் பகடை விளையாண்ட கையை முதலில் வெட்டினான். பின்பு சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான். பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் சகாதேவன் செய்த சபதமும் நிறைவேறியது. பாண்டவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். துரியோதனன் தனது படைகள் தளபதிகள் உடன் பிறந்தோர் என பலரை இழந்தான். போர்க்களத்தை உற்று நோக்கினான். தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.

மகாபாரதம் 9. சல்லிய பருவம் பகுதி -1

கிருபாச்சாரியார் துரியோதனனிடம் உன்னை நான் உள்ளன்போடு நேசிக்கிறேன். நீ நெடுநாள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இந்த யுத்தத்தை நீ தொடர்ந்து நடத்தினால் அழிந்து விடுவாய். பாண்டவர்கள் இப்பொழுதும் சமாதானத்திற்கு தயாராக இருக்கின்றனர். அவர்களோடு சமாதானம் செய்து கொண்டு அமைதியாக நீ நெடுங்காலம் வாழ்ந்து இருப்பாயாக என்று கூறினார். அதற்கு துரியோதனன் ஆச்சாரியாரே என் மீது தங்கள் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. என் மீது அன்பு வைத்திருந்த அனைவரும் ராஜ்யத்தை எனக்காக வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு எனக்காக உயிர் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது நான் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொண்டால் இறந்த என் நண்பர்களுக்கு நான் துரோகி ஆவேன். நானும் மடிந்து போய் அவர்களோடு சேர்வதே முறை. இரண்டாவதாக பாண்டவர்களுக்கு பின்னணியில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன். யுதிஷ்டிரன் யுவராஜாவாக இருந்த பொழுது அவன் என்னை விட மிக்கவனாக மிளிர்ந்தான். யுவராஜா பதவியில் இருந்து அவனை அப்புறப்படுத்தினேன். பிறகு அவன் இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்கினான். அங்கருந்தும் அவனை கீழே தள்ளி நான் வெற்றி பெற்றேன். பாண்டவர்களோடு சேர்ந்து இருப்பது என்பது ஒரு பொழுதும் ஆகாது என்று கூறினான்.

பதினெட்டாம் நாள் யுத்தத்திற்கு கௌரவ படைகளுக்கு சேனாதிபதியாக இருக்கும் படி துரியோதனன் அஸ்வத்தாமனை கேட்டுக்கொண்டான். அதற்கு அஸ்வத்தாமன் திறமை வாய்ந்த போர்வீரர்களுக்கு இடையில் சல்லியன் எல்லோருக்கும் மூத்தவர். அவரை சேனாதிபதியாக்கலாம் என்று கூறினான். துரியோதனன் சல்லியனிடம் சென்று சேனாதிபதியாக இருந்து எனக்கு வெற்றியை தேடி தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார். துரியோதனின் வேண்டுகோளுக்கிணங்க சல்லியன் சேனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டு உனக்கு சேனாதிபதியாக இருந்து என் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார்.

கௌரவ பாசறையில் நிகழ்ந்த இத்திட்டத்தை கேட்ட யுதிஷ்டிரன் பெரிதும் தயங்கினார். கௌரவ படைகளில் உயிரோடு இருப்பவர்களில் சல்லியனுக்கு நிகரானவர் யாருமில்லை. அவனை வெல்வதும் யாருக்கும் சாத்தியமில்லை. கிருஷ்ணரும் இதனை உண்மை என்று ஒத்துக் கொண்டார். சல்லியனை அழிக்க திட்டம் ஒன்றை கிருஷ்ணன் எடுத்துரைத்தான். யுதிஷ்டிரன் சல்லியனை எதிர்த்து போர் புரிய வேண்டும் அறநெறி பிறழாத சல்லியனை வெற்றிபெற அறநெறி பிறழாத யுதிஷ்டிரனே எதிர்க்க சரியானவன் என்றும் இதை தவிர வேறு எந்த வழியும் பலனளிக்காது என்றார் கிருஷ்ணர். யுதிஷ்டிரர் சல்லியனை எதிர்த்து போர் புரிய சம்மதித்தார்.

மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -11

கிருஷ்ணன் கர்ணனிடம் யாசகம் கேட்கும் அந்தணனாக சென்று யாசிக்கிறார். கர்ணனோ என்னிடம் இப்போது இருப்பது என் உயிர் மட்டுமே. இல்லை என்று என்னை கூற வைக்காமல் என் உயிரை யாசகமாக பெற்று என்னை பெருமை அடைய வையுங்கள் வேண்டாம் என்று சொல்லி என்னை சிறுமை படுத்திவிடாதீர்கள் என்று கூறினான். அதற்கு கிருஷ்ணன் கர்ணா நீ செய்த தர்மத்தின் பலனை எல்லாம் எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விடு அதுபோதும் என்கிறார். கர்ணனும் மறு மொழியின்றி இறப்பிலும் இன்முகத்தோடு தான் செய்த தான தர்மத்தின் பலனை எல்லாம் தன் உதிரம் மூலம் கிருஷ்ணருக்கு தாரை வார்த்துக் கொடுத்தான். பின் கிருஷ்ணன் தன் விஸ்வரூபத்தை காட்டி அழியா புகழோடு நீ முக்தியையும் பெறுவாய் என்று வாழ்த்தினார். கர்ணன் தன் இரு கைகளை கூப்பி பரந்தாமனை வணங்க அப்போது அர்ஜூனன் எய்த அம்பு கர்ணனின் கழுத்தை துண்டித்தது. கர்ணனின் உடலில் இழுந்து ஒளி ஒன்று சொர்கத்தை நோக்கி சென்றது. கர்ணன் வீர மரணம் அடைகிறான். நட்புக்கு இலக்கணமாய் வீரத்திற்கு உதாரணமாய் கொடுத்த வாக்கிற்கு பீஷ்மமாய் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளலாய் வாழ்ந்த கர்ணன் சரித்திர நாயகனாய் மண்ணில் சாய்ந்தான். சூரியன் மறைய பதினேழாம் நாள் யுத்தம் முடிவிற்கு வந்தது.

கர்ணன் மாண்ட நிமிடமே போர் தொண்ணூறு சதவிகிதம் முடிந்தது. பிறகு நடந்த போர் வெறும் சடங்குக்காகவே நடக்கிறது என்பதை துரியோதனன் உணர்ந்தான். தனது பிரியமான 99 தம்பியர்களை இழந்தான். பீஷ்மர் குரு துரோணரை இழந்தான். உயிரினும் மேலான நண்பன் கர்ணனை இழந்தான். மனம் வருந்தினான். செய்வதறியாமல் தவித்தான். இவ்வுலகவாழ்வில் இனி பயன் ஒன்றுமில்லை என்ற உணர்ச்சி அவனுக்கு உண்டாயிற்று. ஆதிக்கத்திலும் உலக ஆட்சியிலும் அவன் படைத்திருந்த பேராசை நிரந்தரமாக அவனைவிட்டு அகன்று போயிற்று. இவ்வுலகில் இனி வாழ்ந்து இருக்க அவன் விரும்பவில்லை. அதிவிரைவில் மறுமையை அடைந்து தன் தோழர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். கௌரவர்கள் கூட்டத்தில் ஒரே துயரம். பாண்டவர்களுடைய கூட்டத்தில் ஒரே மகிழ்ச்சி பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்கு காரணம் கிருஷ்ணருடைய கிருபை என்று யுதிஷ்டிரர் அனைவரிடமும் கூறினார்.

கர்ண பருவம் முடிந்தது. அடுத்து சல்லிய பருவம்.

மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -10

கர்ணன் சல்லியனிடம் தேரை பூமியில் சிக்குண்ட இடத்தில் இருந்து மீட்குமாறு கூறினான். அதற்கு சல்லியன் எனது வேலை தேர் ஓட்டுவது மட்டும் தான். தேரை மீட்பது அல்ல. என்னை நீ அவமதித்து பேசினாலோ முறை தவறி பேசினாலோ நான் உன்னை விட்டு விலகி விடுவேன் என்று துரியோதனனிடம் போட்ட நிபந்தையின் பெயரில் தான் உனக்கு சாரதி ஆனேன். இப்போது நான் போகிறேன் என்று கூறிவிட்டு ரதத்தை விட்டு சென்றுவிட்டார். கர்ணன் தன் தேரில் இருந்து குதித்து தன் தேர் சக்கரங்களை வெளியே எடுக்க முயன்றான். இந்த சூழ்நிலையில் அர்ஜுனன் அவனை கொல்ல விரும்பவில்லை.

கிருஷ்ணர் அர்ஜுனனை நோக்கி ஏன் தயங்குகிறாய் அர்ஜுனா அவன் மீது உள்ள அணைத்து சாபங்களும் ஒன்றாக வேலை செய்கிறது. இது தான் சரியான தருணம். செலுத்து உன் அம்புகளை. கொன்றுவிடு அவனை என்றார். அர்ஜுனனும் தன் இலக்கை குறித்தான். பரசுராமர் அளித்த சாபம் இப்போது வேலை செய்தது. ஆபத்து வேளையில் கர்ணன் கற்ற வித்தைகள் அனைத்தும் அவனுக்கு மறந்து போனது. அர்ஜுனன் தன் மேல் போர் தொடுப்பதை கண்ட கர்ணன் நிராயுதபாணியாய் நிற்கின்ற என்னை தர்மத்தின் பெயரில் கேட்கிறேன் தேரை பூமியில் இருந்து மீட்டு எடுக்க சற்று அவகாசம் கொடு என கேட்டான்.

அப்போது கிருஷ்ணர் கர்ணா நீயா தர்மத்தைப் பற்றி பேசுகிறாய். துரியோதனன் சகுனியுடன் சேர்ந்து தீமைக்குத் துணைப்போனாய். அப்போது உன் தர்மம் என்ன ஆயிற்று. மன்னர் நிறைந்த அவையில் திரோபதியின் உடையைக் களைய நீயும் உடந்தைதானே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம். பாண்டவர்கள் பதின்மூன்று காலம் வன வாசம் முடித்து வந்ததும் தர்மப்படி நடந்துக் கொண்டாயா. அபிமன்யூவை தர்மத்திற்கு விரோதமாக பின்னால் இருந்து தாக்கினாயே அப்போது எங்கே போயிற்று உன் தர்மம் என கேட்டார். கர்ணன் பதில் பேச முடியாமல் நாணித் தலை குனிந்தான். தான் புரிந்த செயல்கள் சரியானவர்கள் என்று சமாதானம் சொல்ல அவனுக்கு இயலவில்லை

அர்ஜூனன் தன் சக்தி அஸ்திரத்தை எடுத்து நான் தர்மயுத்தம் செய்வது உண்மையென்றால் இது கர்ணனை அழிக்கட்டும் என கர்ணன் மீது செலுத்தினான். அஸ்திரங்களை ஏவும் மந்திரங்கள் மறந்து போக உதவி அற்ற நிலையில் புறமுதுகு காட்டாமல் அர்ஜுனனின் அஸ்திரங்களை மார்பிலே கர்ணன் ஏந்தினான். அம்பு மீது அம்பு விட்டான் அர்ஜுனன். ஆனாலும் கர்ணனின் உயிரை அவற்றால் தீண்டக் கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் மின்னல் வேக அம்புகள் அனைத்தும் மலர் மாலைகளாகி கர்ணனுக்கு விழத் துவங்கின. குழம்பினான் அர்ஜுனன்.