மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -8

அர்ஜுனனின் சபதம் ஒற்றர்களின் வழியாக ஜயத்ரதனின் செவிகளுக்கு எட்டியது. சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன் போர்க்களத்தை விட்டு தன் நாட்டிற்கு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரனுக்கு அழகில்லை என்று மற்றவர்கள் தடுத்தனர். கௌரவர்கள் ஒன்று கூடி ஜயத்ரதனை காப்பாற்ற திட்டம் தீட்டினார்கள். அர்ஜூனனை எண்ணி துரோணர் கலங்கினார். அன்றைய போர் பயங்கரமாய் இருக்கும் என உணர்ந்தார். எனவே சகடவியூகம் மகர வியூகம் பத்ம வியூகம் என மூன்று விதமான வியூகங்களை வகுத்தார். இந்த மூன்று வியூகங்களும் விண்ணவர்களே வந்தாலும் அசைக்க முடியாது.

துரியோதனனின் தனது திட்டத்தில் ஒன்று ஜயத்ரதனை அன்று மாலை வரை தன் முழு படைபலம் கொண்டு காக்க வேண்டும். அல்லது அன்று மாலை வரை அவனை மறைத்து வைக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அர்ஜுனன் சபதத்தில் தோற்பான். அர்ஜுனனை எதிர்த்து போரிடுவதை விட ஜயத்ரதனை மறைத்து வைப்பது என்று முடிவு செய்தனர்.

ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து நீங்கள் அனைவருக்கும் சமமாக தான் விற்பயிற்சி அளித்தீர்கள் ஆனால் அர்ஜூனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன் என்று கேட்டான். அதற்கு துரோணர் அர்ஜூனன் தவ வலிமை உடையவன். ஆகவே மேம்பட்டு விளங்குகிறான். அவனுடைய தவ வலிமை என்னிடம் மட்டுமல்ல கௌரவ படையில் யாரிடமும் இல்லை. அவனை எதிர்க்கும் சக்தி படைத்தவர் இருவர் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் இப்போது அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். மற்றவர் விதுரர் அவர் துரியோதனனின் அறிவற்ற செயலால் போரில் பங்கேற்கவில்லை. மேலும் கிருஷ்ணர் அவன் தேருக்கு சாரதியாய் இருக்கிறார். எனவே இந்த யுத்தத்தை பொறுத்த வரை அவன் வெல்ல முடியாதவன்.

பதினான்காம் நாள் யுத்தம் துவங்கியது. கிருஷ்ணன் தேரை ஓட்ட அர்ஜூனன் கண்கள் சிவக்க மனதில் வெறி கொண்டு மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க காண்டீபத்துடன் போர்க்களத்திற்குள் வந்தான். துரியோதனன் தன் தம்பியான துர்மர்ஷணனை பெரும்படையுடன் அர்ஜூனனை நோக்கி அனுப்பினான். நேற்று அபிமன்யூவின் வீரத்தை கண்டு அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத துர்மர்ஷணன் அர்ஜுனனை கண்டு புறமுதுகிட்டு ஓடினான். அவன் ஒட்டத்தைக் கண்ட துச்சாதனன் கடும் சினம் கொண்டு அர்ஜூனனை எதிர்த்தான். துச்சாதனன் படைகளை அனைத்தையும் அர்ஜூனன் அழித்தான். அர்ஜூனனை எதிர்க்க முடியாமல் தோல்வியுற்று அவனும் கௌரவ பாசறைக்கு திரும்பினான்.

ஜயத்ரதனை தேடிச் சென்று வியூகத்தை உடைக்க அர்ஜூனன் முன்னேறினான். அர்ஜூனனை துரோணர் தடுத்து போரிட்டார். துரோணரை பொருட்படுத்தாமல் தன் தாக்குதலின் வலிமையை காண்பித்தான் அர்ஜூனன். துரோணரால் அர்ஜூனனை தடுக்கமுடியவில்லை. மேலும் முன்னேறினான். அதைக்கண்ட துரியோதனன் துரோணரை பார்த்து அர்ஜுனனை உங்களால் தடுக்க முடியவில்லை. நீங்கள் படை தளபதியாக இருக்க தகுதி அற்றவர் என்று கடுமையாக சாடினான். அதற்கு துரோணர் துரியோதனா அர்ஜூனனை ஜயத்ரதனை தேடி வேறு பக்கம் போக வைத்தால் யுதிஷ்டிரரை கைதியாக பிடித்து விடலாம் இதுவே எனது திட்டம் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்றார்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -7

அபிமன்யுவை எதிர்த்து துரியோதனனுக்கு பதில் அளிக்கும் விதத்தில் போரில் வீரம் காட்டினார் துரோணர். எப்படியாவது அவனை வீழ்த்த எண்ணி அதர்ம யுத்தத்தில் ஈடுபட்டார். கர்ணன் யுத்த நெறிக்குப் புறம்பாக பின்னால் இருந்து அபிமன்யூவின் வில்லை முறித்தான். பின்புறமிருந்து தாக்கியவன் யார் என அபிமன்யு திரும்பி பார்த்தபோது துரோணர் அவனின் தேர்க் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார். துரோணர் மீண்டும் புறம்பாக பின்புறத்திருந்து வில்லை துண்டித்தார். அதேமுறையில் கர்ணன் அவனது கேடயத்தைத் தகர்த்தான். மாவீரன் அபிமன்யு குதிரையையும் வில்லையும் வாளையும் கேடயத்தையும் இழந்தாலும் வீரத்தை இழக்கவில்லை.

துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்பு தேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப்பாகனை கொன்றது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம் அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. ஆனால் எதற்கும் தளராத அபிமன்யூ வாளைக் கையில் ஏந்தி தேரிலிருந்து குதித்து பல நூறு வீரர்களை வெட்டி வீழ்த்தினான். உடம்பெல்லாம் புண்ணாகி குருதி ஒழுக நிராயுதபாணியாக நின்ற அபிமன்யு உடைந்த தன் தேரில் இருந்து தேர் சக்கரத்தை கையில் ஆயுதமாக ஏந்தி தாக்க ஆரம்பித்தான். அப்போது துச்சாதனனின் மகன் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் தாக்கினான். சுருண்டு விழுந்தவன் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கினார்கள். இறுதிவரை வீரத்தோடு போர் புரிந்த அபிமன்யுவின் தேகத்தை துரோணர், கிருபர், கர்ணன், ஜயத்ரதன் ஆகியோர் செலுத்திய அம்புகள் துளைத்தது. அபிமன்யு தரையில் வீழ்ந்து வீர மரணம் எய்தினான். சரித்திர நாயகன் ஆனான். சொர்க்கம் அவனை வரவேற்றது.

அபிமன்யுவின் வீழ்ச்சியை பற்றி கேள்விப்பட்ட யுதிஸ்டிரர் ஸ்தப்பித்து போனார். வீரம் நிறைந்த அபிமன்யுவினுடைய வீழ்ச்சிக்கு பொறுப்பாளி தானே என்று தன்னைப் பெரிதும் நொந்து கொண்டான். இந்நிலையில் போர் புரிவதை விட மடிந்து போவது மேல் என்னும் உணர்ச்சி அவருடைய உள்ளத்தை வாட்டியது. இந்த நெருக்கடிகள் வியாச பகவான் அங்கு பிரசன்னமானார். மரணம் என்பது வாழ்வின் மற்றொரு பக்கம் என்று அவர் யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் காட்டி ஆறுதல் வழங்கினார். வாழ்வையும் சாவையும் சமமாக கருதி வாழ்வு என்னும் போராட்டத்தில் மனிதன் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வியாசர் எடுத்துரைத்தார்.

தென்திசையில் சம்சப்தர்களை ஒழித்துத் திரும்பிய அர்ஜூனன் காதில் இச்செய்தி விழ அவன் மயங்கி விழுந்தான். கண்ணனின் ஸ்பரிசம் பட்டு எழுந்த அர்ஜுனன் மகனின் உடலை கட்டி தழுவி அழுதான். மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்து ஜயத்ரதனை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வேன் தவறினால் அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கிருஷ்ணன் மீது ஆணை என்று சபதம் செய்தான். அதன் அறிகுறியாக தன் காண்டீபத்திலிருந்து ஒலி எழுப்பினான். கிருஷ்ணர் சங்கு நாதம் செய்தார். இவ்விருவரும் கிளம்பிய ஓலம் எங்கும் பயங்கரமாக எதிரொலித்தது. அவ்வொலிக் கேட்டு அண்ட சராசரமும் அதிர்ந்தன. சூரியன் மறைய பதிமூன்றாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -6

பத்ம வியூக அமைப்பை கண்ட யுதிஷ்டிரர் கலக்க முற்றார். ஆபத்து மிக வாய்ந்த பத்ம வியூகம் பாண்டவர்களின் படைகளை விரைவில் அழித்துவிடும். இந்த நெருக்கடியில் அபிமன்யு யுதிஷ்டிரன் முன்னிலைக்கு வந்து தன்னுடைய கருத்தை தெரிவித்தான். இதுபோன்ற பத்ம வியூகம் ஒன்றை உடைத்துக்கொண்டு உள்ளே போகும் பயிற்சியை தந்தையான அர்ஜுனன் எனக்கு புகட்டியிருக்கிறார் என்றும் ஆனால் அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே வரும் பயிற்சியே தன் தந்தை இன்னும் தனக்கு புகட்டவில்லை என்றும் அவன் தெரிவித்தான். அதனைக் கேட்ட யுதிஷ்டிரன் எப்படியாவது இந்த பத்ம வியூகத்துக்கு உள்ளே நுழைவதற்கான உபாயம் ஒன்றை கையாளும் படி அபிமன்யு கேட்டுக்கொண்டான். அபிமன்யு வியூகத்திற்குள் செல்லும் போது அவனை பின்பற்றி பீமனும் பெரிய பெரிய போர் வீரர்களும் பின் தொடர்ந்து உள்ளே நுழைந்து விடுவார்கள். அத்தனை பேரும் உள்ளே போனபிறகு எதிரிகளின் வியூகத்தை உடைத்து தகர்த்து விடுவார்கள். வியூகம் உடைந்த பிறகு அதிலிருந்து தப்பித்துக் கொண்டு சுலபமாக வெளியே வந்து விடலாம் என்றும் யுதிஷ்டிரன் அபிமன்யுவிடம் கூறினான். அபிமன்யுவும் இத்திட்டத்திற்கு சம்மதித்தான்.

அபிமன்யு தன் திறமையை கையாண்டு பத்ம வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். பாண்டவர்களின் துர்பாக்கியவசத்தால் அபிமன்யுவை பின்பற்றி ஏனைய போர்வீரர்கள் உள்ளே நுழைய இயலவில்லை. அபிமன்யு உள்ளே நுழைந்ததும் பத்மவியூகம் மூடிக்கொண்டது. ஏனைய போர்வீரர்கள் இந்த வியூகத்திற்க்குள் நுழைய முடியாதவாறு ஜெயத்ரதன் தன் மாய சக்தி கொண்டு வியூகத்தின் நுழைவை மறைத்தான். அன்று முழுவதும் வீரியம் நிறைந்த போராட்டமே கழிந்தது ஆயினும் ஜயத்ரதனை வெல்ல பாண்டவ போர்வீரர்களுக்கு இயலவில்லை.

பல காலங்களுக்கு முன்னர் திரௌபதியை தூக்கிச் செல்ல முயன்று தோல்வியுற்று பாண்டவர்களால் அவமானப்பட்ட ஜயத்ரதன் பாண்டவர்களை பழிதீர்க்க சிவனை நோக்கித் தவம் செய்து பாண்டவர்களை கொல்ல வரம் கேட்டான். பாண்டவர்களுக்கு துணையாக கிருஷ்ணர் இருப்பதால் அவ்வரத்தை தர இயலாது என்று சிவன் மறுக்க ஒரு நாளாவது பாண்டவர்களை சமாளிக்கும் வரத்தை பெற்றிருந்தான். அந்த வரத்தை பயன்படுத்தி பீமன், நகுலன், சகாதேவன், யுதிஷ்டிரர் அபிமன்யுவிற்கு உதவி செய்யாதவாறு தடுத்தான்.

எதற்கும் அஞ்சாத அபிமன்யு வியூகத்தின் நுழைந்ததும் தன் முதல் அம்புவிலேயே தலையாய் நின்ற துரோணரின் வில்லை முறித்தான். அக்கினி ஆற்றை போல் உள்ளே நுழைந்தான் பயமின்றி துணிச்சலாக தாக்கினான். அபிமன்யு எட்டு திசையிலும் அம்புகளை அனுப்பினான். கர்ணனின் குதிரைகளை காயப்படுத்தினான். துரியோதனனின் மகுடத்தை மண்ணில் தள்ளினான். துச்சாதனனின் தேரை முறித்தான். அஸ்வதாமனை கதை கொண்டு விரட்டினான். துணைக்கு யாரும் இல்லாத நிலையில் மாபெரும் போர் வீரர்களுடன் பதினாறே வயதான அபிமன்யு தனித்து நின்று போரிட்டான். அவன் வீரம் கண்டு துரோணர் கிருபரிடம் இவன் வீரத்தில் அர்ஜூனனை விட சிறந்து காணப்படுகிறான் என்று வியந்து பாராட்டினார். இதைக் கண்ட துரியோதனன் எதிரியை புகழ்ச்சி செய்வது நம்பிக்கை துரோகம். இதனால் நம் படையின் உற்சாகம் குறையும் என்று எச்சரித்தான்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -5

பதிமூன்றாம் நாள் போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம் என்ற கவலையுடன் இருந்தான் துரியோதனன். துரோணர் மீதும் கர்ணன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதிலும் அர்ஜுனனையும் கிருஷ்ணரையும் பார்க்கும் போது போர்க்களம் அவனுக்கு ஒரு மாயவலை போன்றே தோன்றியது.

அர்ஜுனனின் பாசத்திற்குரிய மகன் அபிமன்யு என்பதை துரோணர் அறிந்திருந்தார். அபிமன்யுவை கொன்றுவிட்டால் அர்ஜுனனின் போர் திறன் நிச்சயமாக பாதிக்கப்படும் என்று கணக்கிட்டார். அபிமன்யுவிர்க்கு ஆபத்து என்றால் அர்ஜுனன் வந்து அவனை காப்பாற்றிவிடுவான், எனவே அர்ஜுனனை திசை திருப்ப திட்டம் தீட்டினார். சம்சப்தர்கள் என்னும் ஏழு சகோதரர்களையும் எட்டாயிரம் வீரர்களையும் மூன்று யானை படைகளையும் அர்ஜுனன் மீது ஏவ திட்டம் தீட்டீனார்கள். அவர்களின் திட்டப்படி அவர்கள் மேற்கு திசையில் இருந்து அர்ஜுனனுக்கு சவால் விடுத்தனர். சவாலை ஏற்ற அர்ஜுனன் கிருஷ்ணரை மேற்கு நோக்கி ரதத்தை செலுத்த சொன்னான். நடக்க இருப்பதை அறிந்திருந்த கிருஷ்ணன் மௌனம் சாதித்தார். பின்பு அர்ஜுனனை நோக்கி வீரம் என்பது போர்களத்தில் கொன்று குவிப்பது மட்டும் அல்ல எத்துனை இழப்பு வந்தாலும் துவளாமல் இறுதி லட்சியத்தை அடைவது தான் உண்மையான வீரம் என்றார். அர்ஜூனக்கு ஒன்றும் புரியவில்லை. நிச்சயம் லட்சியத்தை அடைவேன் என்று கிருஷ்ணரிடம் வாக்களித்து போருக்கு தயாரானான். பின்பு மேற்கு நோக்கி பயணிதான்.

அர்ஜுனனை திசை திருப்பிய துரோணர் தன் வியூகத்தில் பாதி வென்றார். அடுத்த கணம் துரோணர் பத்மவியூகம் அமைத்தார். முகப்பில் அவர் இருந்து தலைமை தாங்கினார். துரியோதனன் பத்மவியூகத்தின் நடுவில் நின்றான். கர்ணன், துச்சாதனன், அஸ்வத்தாமன், துச்சாதனன், துஷ்ப்ரதர்ஷன், துஸ்ஸலன், அனுவிந்தன், உபசித்ரன், சித்ராக்ஷன் உட்பட 76 வீரர்களும் நூற்று கணக்கான காலாட்படை வீரர்களும் பத்மவியூகத்தின் சுவர்களாக நின்றனர்.

பத்மவியூகம் என்பது ஒர்புள்ளி தொடர் சுழல் போன்றதாகும். பத்மவியூகத்தை உடைத்து உள்ளே செல்வது கடினம். மீறி உள்ளே சென்று வெளியே வந்து விட்டால் வியூகத்தை வென்று விடலாம். உள்ளே செல்வதை விட வெளியே வருவது நூறு மடங்கு சிரமம். ஒவ்வொரு திருப்பத்திலும் இரண்டு அல்லது மூன்று மகாரதர்கள் இருப்பர். அவர்களுக்கு துணையாக அவர்களின் காலாட்படை வீரர்கள் இருப்பார்கள். வியூகத்தின் மத்திய புள்ளிக்கு சென்றுவிட்டால் எந்த திசையில் இருந்தும் யார் வேண்டுமென்றாலும் தாக்க கூடும். எப்பக்கத்தில் இருந்து அம்பு பாய்கிறது. யார் ஈட்டி எறிகிறார்கள். யார் போர்வாள் சுழற்றுவார்கள். கதாயுதம் எங்கிருந்து வரும் என்று எதையுமே யூகிக்க முடியாது. பத்மவியூகத்தை உடைக்க அசாத்திய ஆற்றல் வேண்டும்.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -4

துரோணர் யுதிஷ்டிரரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும் பயம் பீமனுக்கு ஏற்பட யுதிஷ்டிரர் இருக்கும் இடத்திற்கு பீமன் வந்தான். அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன். அவைகளை பந்தாடினான் பீமன். அபிமன்யூவும் கௌரவர் படையை எதிர்த்து போராடினான். இன்றும் அவன் துரியோதனனின் ஐந்து தம்பிகளை கொன்று அர்ஜுனனை கௌரவித்தான். அவன் ஆற்றல் கண்டு அர்ஜுனன் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றான். துருபதன், சிகண்டி, கடோத்கஜன், சுவேதன், ஆகியோர் கர்ணனை கவனிக்கும் படி திருஷ்டத்துய்மன் வியூகம் வகுத்திருந்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். கர்ணன் ஒரு மாவீரன். அவன் ஆற்றல் சாதாரணமானதல்ல என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் தங்கள் முழு திறனை கொண்டு அவனை எதிர்த்தனர். கடோத்கஜன் அரக்கியின் மகன் என்பதால் மாயங்கள் அறிந்தவன். அவன் செய்த மாயங்களை கர்ணன் சூரிய அஸ்திரம் கொண்டு சுலபமாய் தகர்த்தான். இவர்கள் நால்வரின் தாக்குதலையும் ஒருவனாய் நின்று எதிர்த்தான். இதை கண்ட அர்ஜுனனும் வியந்தான்.

பகதத்தன் எனும் மன்னன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான். அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது. பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது. பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான். அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது. ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான். பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது. சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது. யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ஜூனன் அதனைக் கொல்ல விரைந்து வந்தான் அர்ஜூனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான். அர்ஜூனன் எய்த ஒரு அம்பு யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது. யானை வீழ்ந்து மாண்டது. ஆத்திரம் அடைந்த பகதத்தன் சக்தி ஆயுதத்தை அர்ஜுனன் மீது செலுத்தினான். கிருஷ்ணன் அதை தன் மார்பில் தாங்கியதால் அர்ஜுனன் உயிர் பிழைதான். பின் அர்ஜூனன் செலுத்திய அக்னி அஸ்திரம் மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.

பின்னர் அர்ஜூனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன் விகுஷன் ஆகியோரைக் கொன்றான். சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். அர்ஜூனன் ஒளிமய கணையால் அந்த இருளைப் போக்கினான். சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான். யுதிஷ்டிரரை பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது. கௌரவர்கள் கலங்க பாண்டவர்கள் மகிழ சூரியன் மறைய பன்னிரன்டாம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தது.

அன்றைய போரில் நடந்தவற்றை கண்டு சினம் கொண்ட துரியோதனன் துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான். யுதிஷ்டிரரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள். எனக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர். நீர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றான். இதனால் கோபம் அடைந்த துரோணர் துரியோதனா உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன். அர்ஜூனனைப் போரில் வெல்ல முடியாது. போர்க்களத்தில் அவன் எப்படி யுதிஷ்டிரரைப் பாதுகாத்தான் என்று நீ பார்த்தாய். நாளை நான் உன்னதமான வேறு ஒரு போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன். அர்ஜூனனை நீ எப்படியாவது யுதிஷ்டிரனிடமிருந்து பிரித்து வெளியே கொண்டு செல் என்றார். துரோணரின் பேச்சில் துரியோதனனுக்கு நம்பிக்கை வர அங்கிருந்து சென்றான்.

தொடரும்………

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -3

யுதிஷ்டிரரை உயிருடன் பிடிக்க துரோணர் 11 வது நாளில் செய்த முயற்சிகள் அனைத்தும் அர்ஜூனன் கேடயம் போல் இருந்தமையால் பலனில்லாமல் போனது. யுதிஷ்டிரரை உயிருடன் பிடிக்க வெண்டுமெனில் அர்ஜூனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது. யுதிஷ்டிரன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் அர்ஜூனனை இழுக்க வேண்டும் எனத்திட்டம் தீட்டினர் கௌரவர்கள். திரிகர்த்த மன்னன் சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் அர்ஜுனனை கொல்வோம் அல்லது போரிட்டு மடிவோம் என சபதம் செய்தனர். இதற்கு சம்சப்தக விரதம் என்று பெயர். 12 ம் நாள் யுத்தம் தொடங்கியது. தென்திசையிலிருந்து அர்ஜூனனுக்கு சவால் விட்டனர். அர்ஜூனனும் சவாலை ஏற்றுக்கொண்டான். தென் திசைக்கு அவர்களை எதிர்க்க செல்வதால் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் யுதிஜ்டிரரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான் அர்ஜூனன்.

கடுமையாக நடைபெற்ற போரில் கிருஷ்ணரின் திறமையால் அர்ஜூனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது. கௌரவர்களும் அர்ஜுனனிடம் வெற்றி அல்லது வீரமரணம் என்று போரிட்டனர். திரிகர்த்த வேந்தனுக்குத் துணையாக அவன் சகோதரர்களையும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர். ஆயிரம் ஆயிரம் வீரர்களை திரிகர்த்த வேந்தனுக்கு துணையாக துரியோதனன் அனுப்பினான். யுதிஷ்டிரரோ அங்கு ஆபத்தில் இருக்கிறார். இங்கோ படை வீரர்கள் வந்த வண்ணமாகவே இருந்தனர். கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜூனன் வாயு அஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான். சுசர்மன் மட்டும் தப்பினான்.

தென்திசைப்போரை முடித்துக் கொண்டு அர்ஜூனன் யுதிஷ்டிரரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான். ஆனால் துரோணரோ யுதிஷ்டிரரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார். அன்றைய போரில் துரோணரின் திறைமை அனைவரையும் கவர்ந்தது. துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான். தனது மரணம் இவனால் தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்க முயற்சித்தார். அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவன் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட துரோணர் அங்கிருந்து நகர்ந்தார். துரோணரை அழித்து போர் செய்வதற்காகவே வேள்வியில் இருந்து தோன்றிய திருஷ்டத்துய்மன் துர்முகனின் வில்லை முறித்து தேரையும் தவிடுபொடி ஆக்கினான்.

அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி யுதிஷ்டிரரைக் காக்க முற்பட்டான். அவனுக்கும் துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது. துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன். அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு அவன் தலையைக் கொய்தது. சத்யஜித் வீர மரணம் எய்தினான். சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க அவனையும் அவர் கொன்றார். இவர்கள் இருவரின் மரணம் பாண்டவர்களுக்கு பேரிழப்பாக இருந்தது.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -2

கர்ணன் திரும்பிய திசையெங்கும் பிணங்கள் குவிந்தன. அவன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு அது புறப்பட்டதா இல்லையா என்று தெரியும் முன் இலக்கை தாக்கியது. கர்ணனின் அம்புகள் எதிரணியை சல்லடையாக துளைத்தது. துரியோதனன் பூரிப்படைந்தான். கௌரவ படைகள் ஆர்பரித்தன. வீரியத்துடன் போர் புரிந்தன. கர்ணனின் வருகையால் கௌரவ படை சற்று ஓங்கியது. பாண்டவர்கள் திகைத்தனர். கிருஷ்ணர் அர்ஜூனனை பார்த்து பார்த்தாயா கர்ணனை தெரிந்து கொள் அவன் ஆற்றலை. கர்னணனை நேருக்கு நேர் சந்திக்கும் போது தான் நீ உன்னை நிரூபிக்க வேண்டிய சரியான தருணம் வரும் என்றார்.

மற்றறொரு முனையில் அர்ஜுனனின் மகனான அபிமன்யு போர்களத்தில் தன் பெயரை நிலைநாட்டி கொண்டிருந்தான். அன்றைய போரில் அபிமன்யூவின் கை ஓங்கியது. அவனுக்குத் துணையாக கடோத்கஜன் இறங்கினான். துரியோதனனின் தம்பிகள் ஆறு பேரை கொன்றான். இதனால் துரோணரின் வியூகம் உடைக்கப்பட்டது. ஐந்து யானை படைகளை அம்பெய்து கொன்றான். அபிமன்யூவின் போர்த்திறன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் வெல்ல முடியாதவனாய் காட்சியளித்தான். தன் மகனின் வீரத்தை கண்டு அர்ஜுனன் மெய் சிலிர்த்தான்.

யுதிஷ்டிரனை பிடிக்க வேண்டுமென்று துரோணர் உறுதி பூண்டார். துரியோதனின் லட்சியத்தை நிறைவேற்ற துரோணர் யுதிஷ்டிரர் மீதே குறியாக இருந்தார். அதற்காக அவர் யுதிஷ்டிரனை நோக்கி சென்ற பாய்ச்சல் பயங்கரமாக இருந்தது. தம்மை எதிர்த்த அனைவரையும் அழித்தார். துரோணருக்கு துணையாக துச்சாதனன் மற்றும் ஆறு தம்பிகள் இருந்தனர். யுதிஷ்டிரரை சுற்றி வளைத்து போர் செய்தனர். யுதிஷ்டிரன் அவர் கையில் அகப்பட்டுக் கொள்ளும் தருவாயில் இருந்தான். அவன் அகப்பட்டுக் கொண்டான் என்று யூகித்த கௌரவர்கள் வெற்றிக்கு அறிகுறியாக கூப்பாடு போட்டது. இதற்கிடையில் தக்க தருணத்தில் அர்ஜுனன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டான். பீமனும் யுதிஷ்டிரரை காப்பதில் ஈடுபட்டான். அர்ஜூனனின் தாக்குதலைத் துரோணரால் சமாளிக்க முடியவில்லை. ருத்ரமூர்த்தி போர்க்களத்தில் யுத்தம் செய்வது போல் அர்ஜுனன் காட்சியளித்தான். எல்லா பக்கங்களிலிருந்தும் எதிரிப்படைகளை அவன் அழித்தான். அர்ஜுனனின் அஸ்திரங்கள் யுதிஷ்டிரருக்கு கேடயமாக அமைந்து அவரை பாதுகாத்தது. ஆஞ்சநேயரின் அருள் பெற்ற பீமன் அனைவரையும் பந்தாடினான். அர்ஜுனன் பீமன் மற்றும் கடோட்கஜனின் போர் ஆற்றலை கண்ட கௌரவர்கள் நடுங்க ஆரம்பித்தனர். துரோணரும் சோர்ந்து போனார். யுதிஜ்டிரனை பிடிக்க முடியாமல் துரோணர் மிகவும் துயரம் அடைந்தார். மாலையில் சூரியன் மறைய அன்றைய போர் முடிந்தது.

மகாபாரதம் 7. துரோண பருவம் பகுதி -1

பத்தாம் நாள் போரில் பீஷ்மரின் வீழ்ச்சி கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போரில் பங்கு கொண்ட அணைத்து வீரர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. போர் வீரர்கள் அனைவரும் கர்ணன் சேனாதிபதியாவான் என்று எண்ணினர். ஆனால் கர்ணன் துரியோதனனுக்கு வேறு ஒரு ஆலோசனை கூறினார். துரோணாச்சாரியார் அனைத்து வேந்தர்களுக்கும் ஆச்சார்யாராக இருந்தவர். துரோணாச்சாரியரை சேனாதிபதியாக ஆக்கினால் வேந்தர்களுக்கு திருப்தி உண்டாகும். அனைத்து அரசர்களுக்குள் ஒருவரை மட்டும் சேனாதிபதியாக நியமித்தால் அது அவர்களுக்குள் அதிருப்தியை உண்டாக்கும். கர்ணன் இவ்வாறு கூறியது துரியோதனனுக்கு பெரும் திருப்தியை உண்டு பண்ணியது.

சேனாதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளும்படி துரோணரை துரியோதனன் கேட்டுக்கொண்டான். துரோணர் மிகவும் மகிழ்வுடன் சம்மதம் கொடுத்தார். தம்மை சேனாதிபதி ஆக்கியதன் மூலம் தமக்கு கிடைத்த வாய்ப்பை முன்னிட்டு துரோணர் பெருமகிழ்வு அடைந்தார். அதற்கு அறிகுறியாக தம்மிடம் ஏதாவது வரம் கேட்டு பெற்றுக்கொள்ளும்படி துரியோதனிடம் அவர் கூறினார். அதற்கு துரியோதனன் சூரியன் மறைவதற்கு முன்பு யுதிஷ்டிரனை கைதியாக பிடித்து தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் இதுவே தனக்கு வேண்டும் வரம் என்றும் கேட்டான். இதனை நிறைவேற்றுவது மிகவும் கடினம் என்று துரோணர் உணர்ந்தார். ஆயினும் அரைமனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

யுதிஷ்டிரரை உயிருடன் பிடித்து விட்டால் அவரை மீண்டும் சூதாட வைத்து தோற்கடித்து ஆயுட்காலம் முழுதும் வனவாசம் அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டான் துரியோதனன். சகுனியின் சூழ்ச்சி பின் இருந்தது. இந்த செய்தி ஒற்றர்கள் மூலம் பாண்டவர்களுக்கு எட்டியது. திருஷ்டத்துய்மன் அதை தடுக்க தன்னால் இயன்றதை செய்வேன் என்று சூளுரைத்து வியூகம் வகுத்தான். அதனால் யுதிஷ்டிரருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அன்று துரோணர் சகட வியூகம் வகுத்தார். வண்டி போன்ற வடிவம் என்பது அதன் பொருள். பாண்டவர்கள் கிரௌஞ்ச வியூகம் வகுத்தனர்.

பீஷ்மர் இல்லாத நிலையில் கர்ணனை போர் செய்ய அனுமதிக்குமாறு துரோணரை வேண்டினான் துரியோதனன். துரோணரும் சம்மதம் தெரிவித்தார். செய்தி கர்ணனின் பாசறைக்கு சென்றது. துரியோதனா உனக்கு நன்றி செலுத்தும் நேரம் இது வருகிறேன் அர்ஜுனா என்று கர்ஜித்தான் கர்ணன். கௌரவ படைகள் முகத்தில் நம்பிக்கை ரேகை பரவியது. கர்ணன் தன் தந்தையாகிய சூரியனுக்கு வணக்கங்களையும் நட்பின் கடன் தீர்க்க வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றியையும் செலுத்திவிட்டு தன் ரத்தத்தில் ஏறி போர்க்களம் நோக்கி புறப்பட்டான். ஆயிரம் சூரியனின் பிரகாசம் கொண்டவனாய் காட்சியளித்தான். ஆகாயத்தை விட தெளிவான சிந்தனையுடன் போர்களத்தை கவனித்தான். நீரை போல் சுழன்று தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் அழித்தான். அவனது குறிக்கோள் ஒன்று மட்டுமே. அது துரியோதனனை அஸ்தினாபுரத்து அரியாசனத்தில் அமர வைத்து அர்ஜுனனை விட தான் சிறந்தவன் என்பதை இந்த உலகிற்கு காட்ட வேண்டும் என்ற நெருப்பு அவனுள் எரிந்து கொண்டே இருந்தது.

Image may contain: 3 people

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -17

பீஷ்மர் துரியோதனனை அருகில் அழைத்தார். அர்ஜூனனின் ஆற்றலைப் பார்த்தாயா தெய்வ பலம் பெற்றவன் இவன். இவனிடம் சிவனின் பாசுபத அஸ்திரம் உள்ளது. விஷ்ணுவின் நாராயண அஸ்திரம் உள்ளது. அது மட்டுமின்றி அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும். இப்போழுதாவது நீ சமாதானமாய் போய் விடு. அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு. இப்போர் என்னுடன் முடியட்டும் என்றார். இல்லையென்றால் நீயும் உன் சகோதரர்கள் உனது சேனைகள் அனைத்தும் துடைத்து தள்ளப்படுவீர்கள் என்று எச்சரித்தார்.

துரியோதனன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பீஷ்மர் அவ்வாறு கூறியது அவனுக்கு பிடிக்கவில்லை. தனக்கு ஒரு உதவி புரிவதற்கு பதிலாக பாட்டனார் தான் விஷயத்தில் ஏனோ தானோ என்று இருந்து விட்டார் என்று அவன் எண்ணினான். அந்த சூழ்நிலையிலும் பீஷ்மரின் அறிவுரையை துரியோதனன் ஏற்கவில்லை.

பீஷ்மர் யோக சாதனங்களும் தாரணை என்னும் சாதனையை கையாண்டார். காயப்பட்டு இருக்கும் தம் உடம்பிலிருந்து அவர் இப்பொழுது தம்முடைய மனதை பிரித்துக் கொண்டு ஆத்மா தியானத்தில் மூழ்கினார். பத்தாம் நாள் யுத்தம் பீஷ்மரின் வீழ்ச்சியுடன் குருக்ஷேத்திர போரில் மிகப்பெரிய இழப்பாக முடிந்தது. அனைவரும் பிரிந்து சென்றனர்.

நள்ளிரவில் பீஷ்மரின் அருகில் யாரும் இல்லை. அப்போது கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான். ராதையின் மைந்தனான நான் சில சமயங்களில் தங்களுக்கு உண்டான மரியாதையை தர தவறிவிட்டேன். மரியாதை குறைவாக நடந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதான். அது கேட்ட பீஷ்மர் கர்ணா நீ ராதையின் மகன் அல்ல. குந்தியின் மைந்தன் என்று எனக்கு முன்பே தெரியும். சூரிய குமரன் நீ. இதை நாரதர் எனக்கும் விதுரருக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். தக்க காலம் வரும் வரை இதனை மறைத்து வைக்கும்படியும் கூறினார். பாண்டவர்கள் உனக்கு எந்தவித தீங்கும் செய்யவில்லை. காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால் நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன். பாண்டவர்கள் உன் தம்பியர்கள். நீ யார் என்பதை விளக்கி சொல்வதன் மூலம் இந்த யுத்தத்தை நிறுத்த முடியும். உன்னை வெளிப்படுத்திக்கொண்டு பாண்டவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று என்றார்.

நான் குந்தியின் மைந்தன் என்பதை கிருஷ்ணன் எனக்கு அஸ்தினாபுரத்திலேயே தெரிவித்தார். நான் துரியோதனனை மிகவும் நேசிக்கின்றேன். என்னை முழுவதுமாக துரியோதனனுக்கே ஒப்படைக்க விரதம் பூண்டிருக்கின்றேன். அவனுக்காக உயிர் துறக்கவும் தயாராக இருக்கின்றேன். துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. துரியோதனனை மகிழ்வூட்டும் பொருட்டு பாண்டவர்கள் மீது அவதூறு கூறினேன். என்னை மன்னியுங்கள் என்றான். கர்ணா அறம் வெல்லும் நீ விரும்பியப்படியே செய் என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பீஷ்மர்.

பீஷ்ம பருவம் இந்த பகுதியுடன் முடிவடைந்தது அடுத்தது துரோண பருவம்.

மகாபாரதம் 6. பீஷ்ம பருவம் பகுதி -16

அர்ஜூனன் தனது மனதை ஒருமுகப்படுத்தி தைரியத்தை வரவழைத்து தன் முழு பலத்தோடும் ஆற்றலோடும் அம்பை செலுத்தினான். அம்பு காற்றை கிழித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தது. வாழ்த்துக்கள் அர்ஜுனா உன்னிடம் தோற்பதில் பெருமை அடைகிறேன் என்று போர்க்களம் முழுவதும் கேட்க்குமாறு வாழ்த்தினார் பீஷ்மர். அடுத்த அம்பும் சீறியது. பீஷ்மரின் நெஞ்சு கூட்டை பதம் பார்த்தது. அடுத்தது ஏழு அம்புகள் பீஷ்மரின் மார்பில் பாய்ந்தது. அர்ஜுனன் ஏககாலத்தில் பீஷ்மர் மீது அம்பு மழை பொழிந்தான். அர்ஜூனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன. பீஷ்மர் நிலை குலைந்தார். மாவீரரான பீஷ்மரின் உடல் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்படுவதை கண்டு துரியோதனன் திகைத்து நின்றான். தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது மலர் மழை பொழிந்தனர்.

கிருஷ்ணனும் அர்ஜுனனும் தவிர வேறு எந்த போர் வீரனாலும் தன் மீது பாணம் செய்ய இயலாது என்று துச்சாதனனிடம் பீஷ்மர் ஏற்கனவே சொல்லி இருந்தார். அவர் சொல்லியபடியே இப்பொழுது நடந்தது. இதை பார்த்த இருகட்சி போர் வீரர்களும் திகைத்துப் போயினர். சிறிது நேரம் யுத்தம் நின்று போனது. பரசுராமரை தோற்கடித்த பீஷ்மர் இப்போது அர்ஜுனன் கையில் தோல்வியடைந்து வீழ்ந்தார். ஆனால் மடிந்து போகவில்லை. சூரியனின் தட்சிணாயண காலம் முடிய சில நாட்கள் பாக்கி இருந்தது. பிறகு சூரியனுடைய உத்தராயண புண்ணிய காலம் துவங்கும். அதுவரையில் உயிரை பிடித்து வைத்திருக்க பீஷ்மர் தீர்மானித்தார். நினைக்கும் போது மரணம் என்னும் இச்சாமிருத்யு என்னும் வரத்தை பீஷ்மர் தன் தந்தையாகிய சாந்தனு மன்னனிடமிருந்து பெற்றிருந்தார். அந்த வரத்தின் படி அவர் அனுமதித்தால் ஒழிய அவரையும் மரணம் அணுகாது. அந்த வரத்தை அவர் இப்போது பயன்படுத்திக்கொண்டார்.

சிவனிடம் வரம் பெற்று பீஷ்மரின் மரணத்திற்கு நானே காரணமாக இருப்பேன் என்று கடந்த பிறவியில் அம்பையாக சபதம் செய்த சிகண்டியின் சபதம் நிறைவேறியது. கீழே வீழ்ந்த பீஷ்மரின் உடல் தரையில் படவில்லை. உடம்பில் தைத்திருந்த அம்புகள் உடல் பூமியில் படாது தடுத்தன. அவர் உடல் பூமியில் படவில்லை என்பதால் தலை தொங்கி கொண்டிருந்தது. அருகில் இருந்தோர் தலயணைக் கொண்டு வந்தனர். ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ஜூனனைப் பார்த்தார். புரிந்து கொண்ட அர்ஜூனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான். அவை நுனிப்பகுதி மேலாகவும் கூர்மையான பகுதி தரையில் பொருந்துமாறும் பூமிக்குள் புதைந்து நின்றன. அத்தகைய அமைப்பு பீஷ்மரின் தலைக்கு பொருத்தமான தலயணையாக அமைந்தன. பீஷ்மர் புன்னகை பூத்தார். கடும் போர் புரிந்த பீஷ்மருக்கு தாகம் எடுத்தது. தனக்கு நீர் வேண்டும் என கேட்டார். பல மன்னர்கள் தண்ணீர் கொண்டு வந்தனர். ஆனால் பீஷ்மர் மறுத்து விட்டார். மீண்டும் ஒரு முறை அர்ஜூனனை நோக்கினார். குறிப்புணர்ந்த அர்ஜூனன் அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான். தன் தாயாகிய கங்கா தேவியின் அருளால் கங்கை மேலே பீரிட்டு வந்தது. கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார்.