ராமாயணம் பால காண்டம் பகுதி -23

சீதை வரலாறு

பத்மாட்சன் என்ற அரசன் பரதகண்டத்தை ஆட்சி புரிந்து வந்தான். அவன் மகப்பேறு வேண்டி தவம் புரிந்தான். பத்மாட்சன் தவத்தின் பலனாக திருமால் அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இப்பூவுலகத்தில் எனக்கு திருமகள் மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான். திருமால் ஒரு மாதுளம் கனியை பத்மாட்சனுக்கு கொடுத்து விட்டு மறைந்தார். அவன் மாதுளம் கனியை அரண்மனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பழம் பெரிதாக ஆரம்பித்தது. உடனே பழத்தை பிளந்தான் பத்மாட்சன். அதில் ஒரு பாதி வளம் நிறைந்த மாதுளம் முத்துக்களும் மற்றொரு பாதியில் குழந்தை இருப்பதை கண்டு பத்மாட்சன் மகிழ்ந்தான். பத்மாட்சன் அப்பெண்ணுக்கு பதுமை என்று பெயர் சூட்டினான். பதுமை என்றால் சிலை என்று பொருள். சில வருடங்கள் கழிந்தது. பதுமைக்கு திருமண வயது எட்டியது. பத்மாட்சன் தன் மகளுக்கு சுயம்வரம் வைத்தான். சுயம்வரத்துக்கு 56 சிற்றரசர்ககள் வந்தார்கள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் இருந்த மன்னர்களைப் பார்த்து வேந்தர்களே விண்ணில் உள்ள நீலநிறத்தை யார் தன் உடம்பில் பூசிக்கொள்கிறானோ அவர்தான் என் மகளுக்கு மாலை போட வேண்டும் இது என் மகளின் விருப்பமாகும் என்றான். இது முடியாத காரியம் என்பதால் தங்களுக்குள் வில் வாள் போட்டி அல்லது அறிவு திறன் தொடர்பான போட்டிகள் வைக்கும்படி கூறினார்கள். பத்மாட்சன் மறுக்கவே அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பத்மாட்சன் மீது போர் தொடுத்து அரண்மனைக்கு நெருப்பு வைத்தார்கள். அவர்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள அங்கு உள்ள நெருப்பில் விழுந்து தன்னை மறைத்துக்கொண்டாள். போரில் அனைவரையும் பத்மாட்சன் வெற்றி பெற்றான்.

சில நாட்கள் கழித்து நெருப்பில் இருந்து பதுமை வெளியே வந்தாள். தான் வளர்ந்த அரண்மனை தன்னால் மண்ணோடு மண்ணாகிப் போனதைக் கண்டு கலங்கினாள். தன்னால் உண்டான அழிவிற்கு பரிகாரம் வேண்டி திருமாலை வேண்டி தவமிருந்தாள். அப்போது அங்கு வானவீதியிலே சென்று கொண்டிருந்த ராவணன் பதுமையை பார்த்து காதல் கொண்டான். பதுமையை தனக்கு திருமணம் செய்து தருமாறு பத்மாட்சனிடம் கேட்டான். வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான். இதனால் கோபமுற்ற ராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். ராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவள் தன்னை மீண்டும் நெருப்புக்குள் மறைந்துக்கொண்டாள். இதனால் கோவம் கொண்ட ராவணன் தீயை அணைத்து அதற்கடியில் தோண்டிப் பார்த்தான்.

அங்கு ஒரு பெரிய மாணிக்க கல்லை கண்டு எடுத்தான். அதனை மண்டோதரிக்கு தரலாம் என்று பெட்டியில் வைத்துக் கொண்டான். மண்டோதரி உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்துள்ளேன் என்று கூறி பெட்டியை திறந்தான். அப்பெட்டியில் பசுமை குழந்தை வடிவில் இருந்தாள். அப்போது பேசிய குழந்தை ராவணனே என் தந்தையை கொன்ற உன்னை அழிக்காமல் விடமாட்டேன். அதற்கானகாலம் விரைவில் வரும் காத்திரு என்றது.
இதனை கண்ட ராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி பல வகையான வடிவம் எடுக்கிறாள் என்று கூறி அவளை கொன்றுவிட ராவணன் வாளை ஓங்கினான். மண்டோதரி கணவனின் கரத்தைப் பற்றி தடுத்தாள். இந்த குழந்தையை வெட்ட வேண்டாம். பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாகயும் மாறி தங்களை கொன்றுவிடுவாள். இக்குழந்தையை பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினாள். ராவணன் அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயமலையில் விட்டுவிடத் தீர்மானித்து கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தில் பனிபடர்ந்த ஒரு பகுதியில் பனிப்பாறைகளுக்கு நடுவில் வைத்துவிட்டான்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -22

சாதானந்தர் ராமரிடம் கூறிய விஸ்வாமித்ரரின் வரலாற்றுக்கு சாட்சியாக விஸ்வாமித்ரரே அமர்ந்திருந்தார். மேனகையினால் தன் தவ பலன் போனது. அகங்காரத்தினால் திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கியது. வசிஷ்டரை கொல்ல முயற்சித்தது என தன்னுடைய குறைகளை அனைவரும் தெரிந்து கொண்டார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேறு யாருடைய வரலாற்றை கேட்பது போல் அனைத்தும் கடந்த பிரம்மரிஷி நிலையில் எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் விஸ்வாமித்ரர். அவரின் வரலாற்றை கேட்ட ராமரும் லட்சுமனனும் விஸ்வாமித்ரரை வணங்கி தங்கள் மரியாதையை செலுத்தினார்கள். பின் அனைவரும் ஓய்வெடுக்க சென்றனர்.

காலையில் இடி இடிப்பது போல் முரசொலிக்க இந்திரலோகம் போலிருந்த மணி மண்டபத்தில் யாகசாலையில் அனைவரும் சந்தித்தனர். ராம லட்சுமனனின் தந்தையை பற்றி சொல்லுங்கள் என்று விஸ்வாமித்ரரிடம் ஜனகர் கேட்டார். சூரிய குலத்தின் முதல் மன்னனான மனுவின் வழி வந்தவர்கள் இவர்கள். பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் பசி என்னும் துயரம் நீங்கி வாழ்வதற்கும் பூமியில் எல்லா வளமும் பெருகும்படி ஆட்சி செய்த புருது மன்னனும் இவர்கள் குலத்தவரே ஆவார். பாம்பினை படுக்கையாக கொண்ட திருமாலின் திருவரங்கத்தை நமக்கு தோற்றுவித்து தந்த இஷ்வாகு மன்னனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இந்திரனையே வாகனமாகக்கொண்ட காகுத்தன் இவர்கள் குலத்தவரே ஆவார். புலியும் பசுவும் ஒரே நீர் நிலையில் நீர் அருந்துமாறு அறத்தோடு ஆட்சி செய்த மந்தாதா என்னும் அரசனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இந்திரனுக்குரிய நகரமான அமராவதியை அசுரர்களிடம் இருந்து மீட்டு கொடுத்த திலீபன் அரசனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இவர்கள் குலத்தவர்களின் பெருமையை பல தலைகளுடைய ஆதிஷேசனாலும் சொல்லமுடியாத பெருமை வாய்ந்த குலம் இவர்களுடையது. அரசர்களில் பெருமை வாய்ந்த தசரத சக்ரவர்த்திக்கும் கௌசலைக்கும் மகனாக பிறந்தவன் ராமன். தசரத சக்ரவர்த்திக்கும் சுமித்ரைக்கும் மகனாக லட்சுமனனும் பரதனும் பிறந்தார்கள். தசரத சக்ரவர்த்திக்கும் கைகேயிக்கும் பிறந்தவன் பரதன். இங்கு ராமனும் லட்சுமனனும் இருக்கின்றார்கள் என்று ராமரின் குலத்தை பற்றி யாகத்திற்கு வந்த அனைவரும் அறியும்படி ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார்.

யாகம் சிறப்பாக நிறைவடைந்தது. யாகம் நிறைவடைந்ததும் சீதாவிற்கு பொருத்தமான வாழ்க்கை துணைவனை தேடி திருமணம் செய்யவேண்டும் என்று ஜனகர் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்தார். அதன்படி யாகசாலையில் இருந்த மன்னர்கள் அனைவரும் அரண்மனை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அரண்மனை மண்டபத்தில் அனைத்து அரசர்களும் அமர இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயவரப்போட்டி நடத்தி சீதையின் திருமணம் செய்யப்போவதாக ஜனகர் அறிவித்தார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -21

விஸ்வாமித்ரர் வேள்வியை ஆரம்பித்தார். இதனைக் கண்டு அச்சமடைந்த இந்திரன் விஸ்வாமித்திரர் முன்பாக வந்து நின்றான். அவனைக் கண்டு கொள்ளாமல் விஸ்வாமித்ரர் தன் வேள்வியை செய்து கொண்டு இருந்தார். விஸ்வாமித்ரரே தங்களின் புதிய சொர்க்கம் உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள். புதிய சொர்க்கத்தால் பல்வேறு குழப்பங்கள் உருவாகும் என்றான். அதற்கு விஸ்வாமித்ரர் திரிசங்கு மானுட உடலுடன் சொர்க்கம் செல்ல விரும்புகின்றான். நானில்லாத வேளையில் என் குடும்பத்துக்கு உணவளித்து காப்பாற்றிய அவனது விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை ஆகவே நீ அவனை சொர்க்கத்தில் அனுமதி இல்லையென்றால் புதிய சொர்க்கத்தை உருவாக்குவேன் என்று விஸ்வாமித்திரர் தனது தவ வலிமையை பயன்படுத்தி திரிசங்குவிற்காக என்றே புது சொர்க்கத்தை படைத்துவிட்டார். திரிசங்கு தான் செய்த தவறினால் வசிஷ்ட மகரிஷியால் சாபம் பெற்றவன். அவனுடைய பாவங்கள் தீராமல் அவன் சொர்க்கம் வர முடியாது என்றும் புதிய சொர்க்கம் வேண்டாம் என்றும் இந்திரன் கேட்டுக்கொண்டார்.

விஸ்வாமித்திரர் இந்திரனிடம் திருசங்குவிடம் சொர்க்கத்திற்கு அனுப்புவதாக வாக்கு கொடுத்துவிட்டேன். அதன்படி புதிய சொர்க்கத்தையும் படைத்துவிட்டேன். சொர்க்கத்திற்கான அனைத்து அம்சங்களும் அங்கு இருந்தாலும் இப்போது தலைகீழாக தொங்கும் திரிசங்கு அங்கும் தலைகீழாகவே இருந்து தனித்தே வாழ்வான். தலைகீழாக தனித்து இருப்பவனால் சொர்க்கமாக இருந்தாலும் பலகாலம் தொடர்ந்து வாழ முடியாது. அதனால் சில நாட்களில் திரிசங்குவிற்கு பூலோக ஆசைகள் தோன்றும். அப்போது அவன் மீண்டும் பூமியில் பிறந்துவிடுவான். அப்போது இந்த சொர்க்கம் மறைந்துவிடும் என்று இந்திரனை சமரசம் செய்தார் விஸ்வாமித்ரர். பிரம்மரிஷி பட்டம் பெற்றாலும் முதல் முறையாக மேனகையிடம் தனது தவ வலிமையை இழந்த விஸ்வாமித்ரர் இரண்டாவது முறை தவம் செய்து பெற்ற தவவலிமையை இப்போது தனது அதிகார ஆணவத்தினால் புதிய சொர்க்கத்தை உருவாக்கியதில் தவ வலிமைகள் அனைத்தையும் இழந்து விட்டார். வசிஷ்டர் தன்னை பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும் என்று மீண்டும் தவம் செய்து தவவலிமை பெற்றார்.

வசிஷ்டர் தன்னை பிரம்பரிஷி என்று ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்கின்ற கோபத்துடனும் ஆணவத்துடனும் ஒரு கட்டத்தில் அவரைக் கொல்லவும் துணிந்தார் விஸ்வாமித்ரர். வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி இதை அறிந்து தன் கணவர் வசிஷ்டரிடம் விஸ்வாமித்திரரை பிரம்மரிஷி என்று கூறி விடும்படி ஆலோசனை வழங்கினாள். வசிஷ்ட மகரிஷி அருந்ததியிடம் நான் விஸ்வாமித்திரரின் பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் பயந்துவிடவில்லை. அவர் மேல் கொண்ட பேரன்பினாலேயே அவரை பிரம்மரிஷி என்று மனமார ஏற்றுக்கொள்வதுடன் எல்லோர் முன்னிலையிலும் இதைக் கூறுவேன் என்றார். வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தின் வெளியில் அவரைக் கொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் செவிகளில் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் விழுந்தன. அவை விஸ்வாமித்திரரின் ஆணவம், அகந்தை, கோபம் எனும் சத்திரிய குணங்களைச் சுக்குநூறாக உடைத்தன. தன்மீது அன்பு கொண்ட வசிஷ்டரைக் கொல்ல நினைத்ததை எண்ணி மனம் பதைத்து கண்ணீர் மல்க தன் பாவங்களை வசிஷ்டரின் பாதங்களில் சமர்ப்பித்துக் கதறினார். விஸ்வாமித்திரரை வாரி அணைத்துக் கொண்ட வசிஷ்டர் விஸ்வாமித்திரரை ஆசிர்வதித்து பிரம்மரிஷி என்று அழைத்து வாழ்த்தினார். விஸ்வாமித்திரரின் வாழ்க்கை முழுமையாக மாற்றப்பட்டு விட்டது. ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை விஸ்வாமித்திரர் தான் இயற்றினார். இப்போது அவர் முழுமையடைந்த பிரம்மரிஷியாக உலக நன்மைக்காக வேள்விகள் செய்து கொண்டு தற்போது இங்கே இருக்கிறார் என்று விஸ்வாமித்ரரின் வாழ்க்கை வரலாற்றை ராமரிடம் சொல்லி முடித்தார் சதாநந்தர்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -20

வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டான் சத்தியவிரதன். ஆனால் மேலும் பசுவை கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால் மேலும் பல பிறவிகள் எடுப்பாய் என்று சாபமிட்டு சென்று விட்டார் வசிஷ்டர். வசிஷ்டரின் கொடுத்த சாபத்தினால் சத்தியவிரதன் சாம்பல் பூசப்பட்ட உடலுடன் இரும்பு அணிகலன்களும் கருப்பு ஆடை அணிந்து திரிசங்கு என்ற பெயரில் உருமாறினான். பின்பு விஸ்வாமித்திரரின் குடும்பத்தினரைச் சந்தித்து வசிஷ்டர் தனக்கு அளித்த சாபம் பற்றி கூறி அதன் பிறகும் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்து அந்தக் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில் விஸ்வாமித்திரர் தனது கடுமையான தவத்தால் பல வரங்களைப் பெற்றுத் திரும்பினார். அப்போது அவருக்கு பஞ்சத்தால் தன் குடும்பம் அடைந்த கஷ்டமும் சத்தியவிரதன் உதவி செய்ததும் அவனுக்கு சாபம் கிடைத்ததும் தெரியவந்தது. விஸ்வாமித்திரர் சத்தியவிரதனிடம் வசிஷ்டர் கொடுத்த சாபத்திலிருந்து உன்னை என்னால் விடுவிக்க முடியாது. ஆனால் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியை என்னால் காட்ட முடியும் என்றார்.

சத்தியவிரதனோ வசிஷ்டரின் சாபத்திலிருந்து விடுபடுவதை விட எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. தாங்கள்தான் எனது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றான். வசிஷ்டர் எனக்குச் சாபம் கொடுப்பதற்கு முன் நான் பசுவைக் கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால் இந்தப் பிறவியில் சொர்க்கம் செல்ல முடியாது என்றும் பசுவைக் கொன்று தின்ற பாவத்திற்கு நான் இன்னும் பல பிறவிகள் எடுக்கவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு இந்தப் பிறவியிலேயே மானிட உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று விருப்பம். என் ஆசையை நிறைவேற்றி வையுங்கள் என்று சொல்லி விஸ்வாமித்திரரை வணங்கினான். வசிஷ்ட முனிவர் மீது பொறாமை கொண்டிருந்த விசுவாமித்திரர் சத்தியவிரதா நான் செய்த தவ வலிமையால் பெற்ற வரங்களைக் கொண்டு உன் விருப்பப்படி இந்த உடலுடனே உன்னை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதற்கான வேள்வியைத் தொடங்கினார்.

விசுவாமித்திரர் செய்த வேள்வியின் பலனால் திரிசங்கு என்று பெயர் பெற்ற சத்தியவிரதன் விண்ணை நோக்கிச் செல்லத் தொடங்கினான். மானுட உடலுடன் ஒருவன் சொர்க்கம் நோக்கி வருவதைக் கண்ட வானவர்கள் இந்திரனிடம் தகவல் தெரிவித்தனர். இந்திரன் பூமியிலிருந்து மேலெழும்பி வந்து கொண்டிருந்த திரிசங்குவை வழியில் தடுத்து நிறுத்தினான். பின்னர் அவன் திரிசங்குவிடம் மானுட உடலுடன் ஒருவர் சொர்க்கலோகம் வருவது சரியான செயல் இல்லை. நீ பூலோகத்திற்குத் திரும்பிச் சென்று விடு என்று எச்சரித்தான். ஆனால் திரிசங்கு விஸ்வாமித்திரர் இருக்கும் தைரியத்தில் இந்திரனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான். இதைக் கண்டு கோபமடைந்த இந்திரன் திரிசங்கை எட்டி உதைத்தான். மறு நிமிடம் திரிசங்கு தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி செல்லத் தொடங்கினான். பயத்தில் திரிசங்கு விஸ்வாமித்திரரே என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான். விஸ்வாமித்திரர் உடனடியாக திரிசங்குவை வான் வெளியிலேயே நிற்கவைத்தார். பின்னர் திரிசங்கு உனக்காக நான் நீ தற்போது இருக்கும் இடத்திலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குகிறேன் என்று கூறி வேறொரு சப்தரிஷி மண்டலம் நட்சத்திரங்கள் முதலியவற்றை சிருஷ்டித்து புதிதாக தேவர்களையும் சிருஷ்டி செய்யப் போவதாக அறிவித்தார் விஸ்வாமித்ரர்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -19

பிரம்ம ரிஷி பட்டத்தை பெற்ற விஸ்வாமித்திரருக்கு வசிஷ்ட மகரிஷி தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தன் வாயால் பிரம்ம ரிஷி விஸ்வாமித்ரர் என்று அழைக்கவேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. இதனை தன் சுய அறிவினால் பெற்றுவிட முடியும் என்று தன் சத்திரிய குல அரச குணத்தால் அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக பயன்படுத்தினார். விஸ்வாமித்திரை சிறந்த பிரம்ம குல ரிஷியாக மாற்ற இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும் அறிவில் சிறந்தவளுமான மேனகையை அனுப்பினான்.

மேனகை அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து மேல் நிலைக்கு செல்ல ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தாள். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன் கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார். அத்துடன் மேனகையை மனைவியாக ஆக்கிக்கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள். இப்போது உணர்வு நிலைக்கு வந்த விஸ்வாமித்ரர் தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டதாலும் தன் தவ பலன்களை அனைத்தும் விரயமானதால் மேனகையை விசுவாமித்திரர் சபித்து மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். விஸ்வாமித்திரர் தனது மனைவி மக்களை விட்டுவிட்டு கடுந்தவம் செய்வதற்காகத் தனிமையான இடம் ஒன்றைத் தேடிச் சென்று விட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்த விஸ்வாமித்ரர் உண்ணாமல் மூச்சு விடுவதையும் கூட அறவே குறைத்து கடும் தவம் புரிந்தார்.

அப்போது நாட்டில் மழை பெய்யாமல் கடும் பஞ்சம் ஏற்பட்டது. விஸ்வாமித்ரரின் குடும்பத்தினருக்கு தேவையான உணவு கிடைக்காமல் அவர்கள் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். விஸ்வாமித்திரரின் குடும்பத்தினர் பட்டினி கிடப்பதை அறிந்த சூரிய வம்சத்து மன்னர் திரியருனியின் மகன் சத்தியவிரதன் அந்தக் குடும்பத்திற்குத் தேவையான உணவினைத் தேடிக் கொண்டு போய்க் கொடுத்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. அப்போது வசிஷ்டர் வளர்த்து வந்த பசுக்களில் ஒன்று அவனின் கண்ணில் பட்டது. அந்தப் பசுவைத் திருடிக் கொண்டு சென்ற அவன் அதைக் கொன்று அதன் இறைச்சியை விசுவாமித்திரரின் மனைவி மக்களுக்குக் கொடுத்து தானும் சாப்பிட்டான்.

பசு காணாமல் போனதை அறிந்த வசிஷ்டர் நடந்ததை தனது ஞான திருஷ்டியால் கண்டறிந்தார். அவர் காட்டிற்குள் இருந்த சத்தியவிரதனைச் சந்தித்து பசுவைக் கொல்வது பாவம் அதை கொன்று இறைச்சியையும் சாப்பிட்டு மிகப்பெரிய பாவம் செய்து விட்டாய் என்றார். பசிக்கு உணவில்லாத போது பசு மட்டுமல்ல எதைக் கொன்று சாப்பிடுவதும் தவறில்லை உங்களுடைய அறிவுரை எதையும் கேட்க நான் தயாராக இல்லை என்றான் சத்தியவிரதன். கோபமடைந்த வசிஷ்டர் நல்லுரையைக் கேட்காதது பசுவைக் கொன்றது மற்றும் பசு இறைச்சியை உண்டது என்ற மூன்று பாவங்களுக்காக திரிசங்கு (மூன்று பாவங்களைச் செய்தவன்) என்ற பெயருடன் சண்டாளனாக விளங்குவாய் என்று சத்தியவிரதனுக்கு சாபம் கொடுத்தார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -18

வசிஷ்டரிடம் சென்ற கௌசிகன் தாங்கள் முற்றும் துறந்த முனிவர் தங்களுக்கு இந்த நந்தினி காமதேனு பசு தேவையில்லை. நாட்டை ஆளுகின்ற என்னிடம் இருப்பதே சரியானது. என்னிடம் இந்த பசு இருந்தால் நான் கேட்டதை பெற்று நாட்டிற்கு மேலும் நன்மை அளிக்க இயலும் ஆகவே இந்த பசுவை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். வசிஷ்டர் கொடுக்க மறுத்துவிட்டார். தங்களுடைய இந்த ஒரு பசுவுக்கு இணையாக 1000 பசுக்களை கொடுக்கின்றேன் கொடுங்கள் என்று கேட்டார் கௌசிகன். ஆனால் வசிஷ்டர் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கௌசிகன் காமதேனு பசுவை பலவந்தமாக எடுத்துச்செல்ல முற்பட்டான். வசிஷ்டரின் தவபலனுக்கு முன்னால் தன் வலிமையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் படைகள் அனைத்தையும் அனுப்பி காமதேனு பசுவை எடுத்துச்செல்ல முற்பாட்டான். வசிஷ்டர் தன்னுடைய தண்டத்தை முன்னால் போட அனைத்து படைகளும் அழிந்து போனது.

அரசனின் படை பலம் அதிகார வலிமையை விட தவ பலனே அதிகம் என்பதை உணர்ந்தான் கௌசிகன். வசிஷ்டர் கௌசிக மன்னனிடம் பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு பசுக்கள் கட்டுப்படும் நீங்கள் பிரம்மரிஷியானால் காமதேனு பசுவை தருகிறேன் என்றார். தவம் செய்தாலும் சத்ரியனான தாங்கள் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று கூறினார். தவம் செய்து தன்னை வெற்றி கொண்ட வசிஷ்டரை போல் மிகப்பெரிய ரிஷியாக வேண்டும் என்றும் வசிஷ்டரே தன்னை பிரம்மமகரிஷி என்று அழைக்க வேண்டும் என்ற வேட்கை அவரிடம் அதிகரித்தது.

சத்ரிய குலத்தில் தோன்றியதால் தவ பலனை பெற்று அதிகாரத்தினாலே அனைத்தையும் பெற்று விடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. தன் சுய அறிவால் அனைத்தையும் பெற்று விட நினைத்தார் கௌசிகன். கௌசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிந்தார். இதை கண்ட பார்வதிதேவி கௌசிகன் முன் தோன்றி விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகி பிரம்மரிஷி பட்டம் பெறலாம் என்று அறிவித்து மறைந்தாள்.

பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைந்தான் கௌசிகன். எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைத்தான் கௌசிகன். தனது உடலையே திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்வதை கண்ட சிவசக்தியர் கௌசிகனுக்கு தரிசனம் கொடுத்தார்கள். தனது உடலை திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்த போது கௌசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி அதனை சிவசக்திக்கு உச்சாடனம் செய்தார். மந்திரத்திற்காக தன் உடலையே (காயத்தை) திரியாக்கி உச்சாடனம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. கௌசிகன் மன்னன்
தன் தவத்தினால் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு அளித்தார். விஸ்வம் என்றால் உலகம் மித்ரர் என்றால் நண்பன் உலகத்தின் நண்பன் என்ற பொருளில் சிவசக்தியர் கௌசிகனை விஸ்வாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்கினார்கள்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -17

ரீசிக முனிவரிடம் இரண்டு பிரசாதங்களையும் வாங்கிக்கொண்டு சத்யவதி தன் தாயை சந்திக்க சென்றாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தாள். சில நொடிகள் யோசித்த சத்யவதியின் தாய் நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது சத்யவதி பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆகையால் நீ சாப்பிட வேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ சாப்பிடு. மரத்தையும் அதற்கேற்றாற் போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம். எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காகவும் இந்நாட்டின் எதிர்கால அரசனுக்காகவும் இதை நீ செய்வாயா என்றார். சத்யவதியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் மாற்றி சாப்பிட்டு விட்டு மரத்தையும் மாற்றி சுற்றினர்.

சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்ப்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர் பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும் உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்று நான் பிரசாதம் அளித்தேன். இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி சாப்பிட்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணனுக்கு உரிய குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்க விரும்புவான். உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறான் என்றார். இதை கேட்டு அதிர்ந்த சத்யவதி நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி என கதறி அழுதாள்.

மனம் மாறிய முனிவர் ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறக்கும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்கப்பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான் அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார். அவருக்கு கௌசிகன் என்று பெயர் வைத்தார்கள். தனது தந்தைக்கு பிறகு அரசனான கௌசிகன் ஒரு நாள் காட்டிற்கு தன் படை பலத்துடன் வேட்டையாட சென்றார். காட்டில் இருந்த வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்ட கௌசிகன் அங்கு சென்றார். வந்த அனைவரையும் வரவேற்ற வசிஷ்டர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்தார். தனிமையில் காட்டில் இருக்கும் ஒரு முனிவரால் உடனடியாக இவ்வளவு பெரிய படைக்கு எப்படி உணவு இவரால் கொடுக்க முடிந்தது என்று கௌசிகன் ஆச்சரிப்பட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தான். வசிஷ்டரிடம் இருந்த கேட்டதை கொடுக்கும் நந்தினி என்னும் காமதேனு பசுவால் வசிஷ்டர் அனைவருக்கும் விருந்தளித்தார் என்பதை தெரிந்து கொண்டு வசிஷ்டரிடம் இருந்து நந்தினி காமதேனு பசுவை எப்படியாவது கொண்டு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -16

குசநாபர் காதி என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள் அவள் பெயர் சத்யவதி. அவளை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று விரும்பினான் காதி. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினான். அந்த சமயம் அரசனை தேடி அரண்மனைக்கு வந்த ரிசீகர் என்ற முனிவர் சத்யவதியின் நர்குணங்களை கண்டு வியந்தார். அவளை மனம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்று எண்ணினான். முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்டும் என்று முனிவரிடம் எனக்கு உங்களிடம் சிறிய வேண்டுகோள் உள்ளது. அதை நீங்கள் நிறைவேற்றினால் என் மகளை உங்களுக்கு மணம் முடித்து தருகிறேன் என்றான் அரசன். அது என்ன வேண்டுகோள் என்றார் முனிவர். ஒரு காது கருப்பாகவும் உடல் முழுவதும் வெள்ளையாகவும் உள்ள 1000 குதிரைகளை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். அரசனின் வேண்டுகோளை ஏற்று குதிரைகளோடு வருவதாகக் கூறி சென்றார் முனிவர். இது போன்ற 1000 குதிரைகளை முனிவர் எங்கு தேடி கண்டுபிடிப்பார். அவரால் அதை தரவே முடியாது. ஆகையால் அவர் சத்தியவதியை மணக்கும் விருப்பத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான் அரசன்.

அரசனின் வேண்டுகோளை பூர்த்திசெய்ய முனிவர் வருணபகவானிடம் வேண்டினார். வருணபகவானும் அவர் கேட்டதுபோல 1000 குதிரைகளை தந்தருளினார். அதை அரசனிடம் ஒப்படைத்தார் முனிவர். இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. ஆகையால் தன் மகளை ரிசீகர் முனிவருக்கு மனம் முடித்து கொடுத்தார். ரிசீகரும் சத்யவதியும் நல்ல ஒரு தம்பதிகளாகவே வாழ்ந்துவந்தனர். ஒருநாள் ரிசீகர் சத்யவதியை அழைத்து நான் உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன் என்ன வேண்டுமோ கேள் என்றார். நான் எனக்கான வரத்தை இன்னொரு நாள் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. ரிசீகரும் அதற்கு சம்மதித்தார். ஒருநாள் சத்யவதி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கு தாயும் மகளும் அனைத்து விஷயங்களை பற்றியும் பேசினர். அப்போது சத்யவதி தன் கணவர் தனக்களித்த வரம் குறித்து தன் தாயிடம் தெரிவித்த அவள் உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள் அம்மா நான் அதை என் கணவரிடம் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. உடனே அந்த தாய் இந்த நாட்டை ஆள்வதற்கு தனக்கொரு ஆண் மகன் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாள். சில மணி நேரங்களுக்கு பிறகு சத்யவதி தன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் இல்லத்தை அடைந்தாள்.

ரிசீக முனிவரிடம் தனக்கான வரம் குறித்த பேச்சை தொடங்கினாள் சத்யவதி. முனிவரும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார். சுவாமி எனக்கொரு மகன் வேண்டும் என் தாய்க்கும் ஒரு மகன் வேண்டும் என்றாள் சத்யவதி. அப்படியே ஆகட்டும் என்று கூறிய முனிவர் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின் இரு பிரசாதங்களை அவர் சத்யவதியிடம் கொடுத்தார். ஒரு பிரசாதத்தை குறிப்பிட்டு இதை நீ உண்ணவேண்டும் மற்றொன்றை உன் அன்னை உண்ணவேண்டும். அடுத்த நாள் இருவரும் குளித்து விட்டு நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்ற வேண்டும் என்றார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -15

கௌதம மகரிஷி அகலிகையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்ட பின் ராமர் லட்சுமனனுடன் விஸ்வாமித்ரர் தனது சீடர்களுடன் கிளம்பி மிதிலையை அடைந்தார்கள். மிதிலையில் ஜனகரின் மாளிகை வழியே சென்ற போது சீதை மாளிகையின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள். ராமர் செல்வதை சீதையும் சீதை மாடத்தில் இருப்பதை ராமரும் பார்த்துக்கொண்டார்கள். பார்த்த உடனே சீதை ராமரின் தோளகை கண்டு ஒவியம் போல் திகைத்து நின்றாள். ராமரும் சீதையின் அழகில் மயங்கினார். பார்த்த உடனே ஒருவரை ஒருவர் மனதால் கவரப்பட்டு ராமரின் உள்ளத்தில் சீதையும் சீதையின் உள்ளத்தில் ராமரும் புகுந்தனர். விஸ்வாமித்ரருடன் மாளிகையை கடந்த ராமர் அவளின் கண்களில் இருந்து மறைந்தார். இவரை தான் மணக்க வேண்டும். அதற்கு சிவதனுசு தடையைக இருக்கிறதே. இவரை மணந்து இவர் தூணைவனாக வந்தால் காட்டில் இவருடன் வாழ்வதாக இருந்தாலும் பரவாயில்லை அதற்கும் தான் தயாராக இருப்பதாக எண்ணிக்கொண்டாள் சீதை.

மிதிலையில் யாகம் செய்வதற்காக பரந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப தங்கும் இடங்கள் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தது. விஸ்வாமித்ரரும் அவரது கூட்டத்தினரும் ராம லட்சுமனனுடன் முகாமிற்கு உள்ளே நுழைந்தார்கள். ஜனக மகாராஜா தன் நடத்தும் வேள்வியின் தலைமை புரோகிதரான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்றார். தன்னுடைய யாக மண்டபத்திற்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை வணங்கி அவரின் வருகைக்கு நன்றி செலுத்தினார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின் சதாநந்தரின் தாய் அகலிகை ராமரினால் சாபவிமோசனம் பெற்றதையும் அவரது தந்தையாருடன் இணைந்து விட்டதையும் கூறினார். இதனைக்கேட்ட சதாநந்தர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

விஸ்வாமிரருடன் வந்திருந்த ராமரின் உருவம் ஜனகரை கவர்ந்தது. இதனை கவனித்த விஸ்வாமித்ரர் தனது ஆசிரமத்தில் உலக நன்மைக்காக செய்த வேள்வியை காத்து அசுரர்களை அழித்த ராம லட்சுமனனின் வீரத்தை ஜனகரிடம் தெரிவித்தார். வீரம் செறிந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் சிவதனுசை காண்பது முற்றிலும் அவசியம் ஆகவே இவர்களை அழைத்து வந்தேன் என்று ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். இதன் உட்பொருளை உணர்ந்த ஜனகர் அனைவரும் சிறிது ஒய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஒய்வெடுக்க அனைவரும் படுத்ததும் ராமருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. ஐனகரின் மாளிகையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்ததும் ரசித்துவிட்டோமே. எந்த பெண்ணை பார்த்தாலும் தனது தாயான கௌசலையை பார்ப்பது போலவே பார்ப்போம். இந்த பெண்ணை பார்க்கும் போது அந்த எண்ணம் தோன்றவில்லையே இது வரை குற்றம் செய்யத நமது மனம் குற்றம் ஏதும் செய்திருக்காது என்று எண்ணி தனக்கு தானே ஆறுதல் செய்து கொண்டார். அடுத்த நாள் அனைவரும் காலை வேள்விசாலையை அடைந்தார்கள்.

ஜனக மகாராஜாவின் தலைமை புரோகிதரான சதாநந்தர் வேள்விக்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை பற்றியும் அவரது பண்புகளும் அவரின் வரலாற்றையும் ராமரிடம் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை இருந்தது. எனவே விஸ்வாமித்ரரின் வரலாற்றை ராமரிடம் எடுத்துக்கூற ஆரம்பித்தார் சதாநந்தர்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -14

கௌதம மகரிஷி தினந்தோறும் அதிகாலை குளக்கரைக்கு செல்வதை இந்திரன் அறிந்துகொண்டான். ஒருநாள் விடிவதற்கு முன்பே சேவலாய் மாறி கூவினான். விடிந்து விட்டது என்று எண்ணிய கெளதமர் குளக்கரைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். இந்திரன் கௌதம மகரிஷி போல் உருவத்தை மாற்றிக்கொண்டு அகலிகை இருந்த குடிலுக்குள் சென்றான். தனது கணவர் தான் வந்திருக்கின்றார் என்று எண்ணிய அகலிகை அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். இதனை பயன் படுத்திக்கொண்ட இந்திரன் அவளிடம் நெருக்கமானான். திடீரென தன் கணவன் தன்னை நெருங்கி வருவதை அறிந்த அகலிகை தனது கணவரின் குணாதிசயத்தை போல் தெரியவில்லையே என மனதிற்குள் நினைத்து ஏதோ ஒரு தவறு நடக்கிறது என புரிந்து கொண்டாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்த கௌதமர் எதோ தவறு நடக்கப்போகிறது என உணர்ந்து விரைவாக குடிலுக்கு திரும்பினார். கௌதமர் உடனடியாக திரும்பி வந்ததை அறிந்த இந்திரன் பூனை உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அதனை அறிந்த கௌதமர் பூனை வடிவத்தில் இருப்பது யார் என்று தன் கையில் இருந்த தண்ணிரை பூனை மேல் தெளிக்க இந்திரன் கௌதமரின் உருவத்தை அடைந்தான். தன்னைப்போல் இருப்பவனை பார்த்த கௌதமர் நடந்ததே புரிந்துகொண்டார். உடல் முழுவதும் உனக்கு பெண் உருப்பாக போகட்டும் என்று அவனை சபித்தார். கணவனின் தொடு உணர்வை அறிந்து கொள்ளாமல் கல் போல் இருந்த நீ கல்லாக போவாய் என்று அகலிகையை சபித்தார். அகலிகை உண்மையை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதறினாள். நீண்டகாலம் காற்றே உணவாக எடுத்துக்கொண்டு கல்லாக இருப்பாயாக. பல காலம் கழித்து இங்கு தசரதன் மகன் அவதார புருஷன் ராமன் ஒருநாள் இங்கு வருவார். இந்த ஆசிரமத்திற்கு வரும் ராமரின் கால்பாதம் உன் மீது பட்டதும் உன் சாபம் பாவம் இரண்டும் நீங்கும். நீ அவரை வரவேற்று உபசரிப்பாய். அப்போது உன்னுடைய இயற்கை குணத்தை அடைந்து மறுபடியும் என்னுடன் வாழ்வாய் என்று கூறினார். இந்திரன் செய்த தவறினால் அறியாமால் தவறுக்கு உடந்தையாக இருந்த அகலிகையை சபித்துவிட்டோமே இந்த பாவத்திற்கு ஈசனின் திருவடி தரிசனம் கிடைத்தால் மட்டுமே இந்த பாவம் போகும் என்று ஈசன் திருவடியை நாடி கௌதம மகரிஷி இமயமலை சென்று தியானத்தில் அமர்ந்து விட்டார்.

இந்த துளசி செடி இருக்கும் கல்லுக்குள் அகலிகையின் ஆத்மா உள்ளது. ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு ஒரு ஆணால் சபிக்கப்பட்டவளே இந்த பெண். ராமா இவளுடைய சாபத்தை உன்னால் மட்டுமே திருப்பி எடுக்க முடியும். இந்த கல்லை உன் பாதங்களால் நீ தொட்டால் சாபத்தில் இருந்து அகல்யா மீள்வாள் இந்த கல்லில் உன் பாதத்தை வை என விஸ்வாமித்திரர் கூறினார். விஸ்வாமித்திரர் கூறியதை போல் தன் பாதத்தை கல்லின் மீது வைத்தார் ராமர். அந்த கல் ராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றாள் அகலிகை. ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து தேவகன்னிகை போல் பிரகாசித்தாள். அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததை அறிந்த கெளதமரும் அங்கே வந்து சேர்ந்தார். கௌதமரும் அகலிகையும் ராமருக்கு உபசரணைகள் செய்தார்கள். அனைத்தையும் ஏற்றுக்கொண்டார் ராமர்.