மகாபாரதம் 16. மௌசல பருவம் பகுதி -3

துவாரகையில் இருந்து பெண்கள் குழந்தைகள் அர்ஜூனன் தலைமையில் அஸ்தினாபுரம் செல்லும் வழியில் கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தாக்கி அவர்களிடம் இருந்த பொருள்களை கொள்ளையடித்தனர். அவர்களை துணிச்சலை குறித்து அர்ஜுனன் நகைத்தான். உடனே திரும்பி ஓடாவிட்டால் திருடர்கள் அத்தனை பேரும் அழிந்து போவீர்கள் என்று அர்ஜுனன் எச்சரிக்கை செய்தான். ஆனால் இந்த எச்சரிக்கையை கொள்ளையர்கள் பொருட்படுத்தவில்லை. தங்கள் போக்கில் அவர்கள் பொருட்களை சூறையாடினார்கள்.

அர்ஜுனன் அக்கணமே தன்னுடைய வில்லின் அம்பை பொருத்தி சண்டையிட முன் வந்தான். ஆனால் அவனது ஆயுதம் செயலற்றுப் போனது. அவன் கற்ற அஸ்திர மந்திரங்கள் அனைத்தும் மறந்து போனது. மகாபாரதப் போரில் தலை சிறந்த வில்லாளியாக இருந்த அர்ஜுனன் இபொழுது ஆதரவற்ற சாதாரண மானிட நிலைக்கு வந்துவிட்டான். பெண்கள் சிலரை மட்டும் ஏதோ ஒரு பொக்கில் தன்னால் இயன்றவரை காப்பாற்றினான்.

பெண்களில் பெரும்பான்மையோர் கைவசம் இருந்த பொருள்கள் அனைத்தும் திருடர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டது. அதைக்குறித்து அர்ஜுனன் மிகவும் வேதனைப்பட்டான். துவாரகையிலிருந்து அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தவர்களுக்கு வசிப்பதற்கு பொருத்தமான இடங்கள் வழங்கப்பட்டன. ருக்மணி சத்தியபாமாவும் காட்டிற்கு சென்று தவம் புரிந்து தங்கள் வாழ்க்கையை முடிக்க தீர்மானித்து காட்டிற்கு சென்றனர்.

பலராமனும் கிருஷ்ணனும் இல்லாத இந்த நிலவுலகம் நிர்மூலமாகி விட்டதை அர்ஜுனன் உணர்ந்தான். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் குழப்பத்துடன் இருந்த அர்ஜூனன் முன் வியாசர் தோன்றினார். அவருக்கு பணிவுடன் தனது வணக்கத்தை தெரிவித்தான். தான் கற்றிருந்த அஸ்திர வித்தைகள் மந்திரங்கள் எல்லாம் மறைந்து போயிற்று. ஆற்றல் அற்றவனாக நிற்கின்றேன். பெண்களை காப்பாற்ற இயலாமல் போயிற்று இதற்கான காரணம் என்ன என்று தனக்கு தெளிவு படுத்துமாறு வியாசரிடம் அர்ஜூனன் கேட்டான்

கருத்து மிக நிறைந்த விஷயத்தை அர்ஜுனனுக்கு எடுத்து வியாசர் விளக்கினார். பாண்டவர்களாகிய நீங்கள் மண்ணுலகிற்கு வந்ததன் நோக்கம் நிறைவேறியது. கிருஷ்ணனும் பலராமனும் வந்த காரியம் முடிவுற்றது. இனி வரும் காலத்திற்கு நீ கற்ற அஸ்திர சாத்திரங்கள் மந்திரங்கள் இவ்வுலகத்திற்கு தேவை இல்லை. நீ கற்ற அஸ்திர சாத்திரங்கள் மந்திரங்கள் எல்லாம் தனது வேலை முடிந்ததும் தங்களுக்கேற்ற தேவதைகளிடம் போய்ச் சேர்ந்து விட்டது. ஆகையால் அனைத்தும் உனக்கு மறந்து போயிற்று. இனி நீயும் உன் சகோதரர்களும் இந்த உலகை விட்டுப் புறப்படுங்கள் என்று வியாசர் அர்ஜுனனிடம் கூறினார்

மௌசல பருவம் முற்றியது அடுத்து மகாபிரஸ்தானிக பருவம்

தொடரும்………….

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.