மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -1

கங்கை கரை ஓரம் கூடியிருந்த கூட்டம் மிகப்பெரியதாக இருந்தது. கூட்டம் ஒரு மாதகாலம் தங்கியிருந்து ஈமக் கடமைகளை பக்தியுடன் சிரத்தையுடன் செய்தனர். சடங்குகள் செய்து கொண்டிருந்த பொழுது யுதிஷ்டிரனுக்கு மனவருத்தம் மிக அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் சிறிதும் இரக்கமின்றி மானிட வர்க்கம் அழிக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் காரணம் நாடு ஒன்றை கைப்பற்றுவதற்கும் வெறும் பகட்டுக்கும் பெருமைக்கும் என எண்ணி யுதிஷ்டிரன் மிக வருத்தப்பட்டான். மேலும் கர்ணனுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. தன்னுடைய நண்பனாகிய துரியோதனனுக்கு பணி விடை செய்தல் பொருட்டு இறுதிவரை தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாது தன்னை மறைத்து வைத்தான். தன்னை இது ஒரு தேரோட்டி மகன் என்று எண்ணி ஏளானம் செய்துவந்த தன்னுடைய சொந்த சகோதரர்களோடு அவன் மிகப்பெருந் தன்மையோடு நடந்து கொண்டான். இத்தகைய பரிதாபகரமான சம்பவங்களைக் குறித்து மன வேதனை அடைந்த யுதிஷ்டிரன் நாடு ஆள்வதைக் காட்டிலும் காட்டிற்குச் சென்று கடும் தவம் புரிவது சிறந்தது என்று அவன் எண்ணி காட்டிற்கு செல்வதாக தனது சகோதரர்களிடம் கூறினான். அதற்கு சகோதரர்கள் அனைவரும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

நாரதரும் வியாசரும் இன்னும் சில ரிஷிகளும் யுதிஷ்டிரனுக்கு ஆசி கூற அங்கு வந்தார்கள். அவர்களுக்கு யுதிஷ்டிரன் பரிதாபத்துக்கு உரியவனாக காட்சி கொடுத்தான். யுதிஷ்டிரனின் வருத்தத்தை கண்ட அனைவரும் அவனுக்கு புத்திமதி கூறினார்கள். உலகிலேயே தீமைகள் பல அதிகரிக்கும் போது சண்டைகளை தவிர்க்க முடியாது என்று அவர்கள் எடுத்துக் காட்டினர். தர்மத்திற்காக சண்டை சச்சரவுகளை கண்டு அஞ்சுகின்றவன் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன் ஆகின்றான். வேந்தன் ஒருவன் தனக்கு உரியவன் அல்ல. அவன் மக்களுக்கு கடமைப்பட்டவன் ஆகின்றான். அரசன் தனக்கு உரியவன் எனக்கு என கருதுவது சுயநலத்தோடு கூடிய அகங்காரமாகும். அரசனுக்கு அத்தகைய மனநிலை அவனைக் கீழ்நிலைக்கு கொண்டு செல்லும். ஆகையால் சொந்த துயரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சமுதாய பணியில் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டும் என்று அவர்கள் யுதிஷ்டிரனுக்கு ஆசி கூறினர். யுதிஷ்டிரன் மனத் தெளிவை அடைந்தான். தன்னுடைய துயரத்தை சிறிது சிறிதாக ஒதுக்கித் தள்ளினான்.

தனக்கு ஆட்சிமுறையில் அனுபவம் போதாது என்றும் தனக்கு ஆட்சிமுறை பற்றி விளக்க வேண்டும் என்று வியாசரிடம் யுதிஷ்டிரன் விண்ணப்பித்தார். அதற்கு வியாசர் சர்வகாலமும் தத்துவ ஆராய்ச்சியில் தாம் ஈடுபட்ட காரணத்தினால் இவ்வுலக வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை அனைத்திலும் சரியாக அறிந்து கொண்டவன் இல்லை என்றும் இத்துறையில் உள்ள நுட்பங்கள் அனைத்தையும் முற்றிலும் முறையாக அறிந்த பீஷ்மர் ஒருவரே என்று அவர் கூறினார். பீஷ்மர் உலகத்தைப் பற்றிய தத்துவங்களுக்கு ஞான கடலாக விளங்கினார். அத்தகைய ஞானத்தை அவர் பலரிடமிருந்து பெற்று பாதுகாத்து வைத்திருக்கிறார். சந்தர்ப்பம் மீறி போவதற்கு முன்பே பீஷ்மரை அணுகி அந்த ஞான பொக்கிஷத்தை அவரிடம் பெற்றுக்கொள்வது சரியானதாக இருக்கும் என்று வியாசர் கூறினார். கிருஷ்ணன் இந்த கருத்தை முற்றிலும் ஆமோதித்தார். இன்னும் தனது உயிர் தாக்குப் பிடித்து வைத்திருக்கும் பீஷ்மரை விரைவில் அணுக வேண்டும் என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ஆலோசனை கூறினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.