சத்யவதி கூறியபடி வியாசரை வரவேற்கும் முறை அடுத்தபடியாக அம்பாலிகாவுக்கு வந்தது. கரடுமுரடாக தென்பட்ட அந்த உருவத்தை பார்த்து அவள் முகம் வெளுத்துப் போய்விட்டது. அதன் விளைவாக அவளுக்கு பிறந்தவன் நிறத்தில் வெளுத்து இருந்தான். அவன் பாண்டு என அழைக்கப்பட்டான். முதல் மகன் கண் தெரியாதவனாக இருக்கும் படியால் அம்பிகாவுக்கு மற்றொரு மகப்பேறு தரும் படி வியாசரிடம் சத்தியவதி வேண்டிக் கொண்டாள். வியாசரும் அதற்கு சம்மதித்தார். ஆனால் அந்த ஏற்பாட்டுக்கு இணங்காத மருமகள் தனக்கு பதிலாக தன்னுடைய அழகிய பணிப்பெண் ஒருத்தியை அனுப்பி வைத்தாள். வியாசரிஷியின் தெய்வீக பாங்கை கருத்தில் கொண்டு அந்த பெண் பக்திபூர்வமாக அவரை வரவேற்றாள். மூன்றாம் மகனாகிய விதுரன் அவளால் பெற்று எடுக்கப்பட்டான். அவனிடத்தில் ஞானம் நிறைந்து இருந்தது. ஆனால் ராஜரீதி அவனிடம் அமையவில்லை.
வியாசர் தம் தாய் சத்தியவதியிடம் இத்தகைய செயலுக்காக தம்மை மீண்டும் அழைக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். இதற்கு சத்தியவதியும் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அமைந்த மூன்று குழந்தைகள் சிறுவர்களாக இருந்தார்கள். ஆகையால் பீஷ்மர் அவர்களின் பிரதிநிதியாக இருந்து அரசாங்க காரியங்களைக் கவனித்தார். மேலும் குழந்தைகளின் கல்வி விஷயத்திலும் அவர் கருத்தைச் செலுத்தினார். கல்வி ஆட்சிமுறை போர்த்திறமை போருக்கு உரிய ஆயுதங்களை கையாளுதல் ஆகிய கலைகள் அனைத்தையும் பீஷ்மர் அவர்களுக்கு புகட்டி வந்தார். தர்மத்தின் பாங்குகள் அனைத்தும் அவர்களுக்கு புகட்டினார். நாடு முழுவதும் மன திருப்தி ஓங்கியிருந்தது.
காந்தார நாட்டு ராஜ குடும்பத்தில் இருந்து திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து வைக்க பீஷ்மர் விதுரருடன் ஆலோசனை செய்தார். கண் தெரியாமல் இருந்த ராஜகுமாரன் ஒருவனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுக்க அந்த நாட்டு அரசனாகிய சுபலன் முதலில் தயங்கினான். பின்பு ராஜரீதியையும் மற்ற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தன் செல்வியை அவ்வரசனுக்கு விவாகம் செய்து வைத்தான். தனக்கு அமைய இருக்கும் அரசன் பிறவியில் இருந்தே கண் தெரியாதவன் என்பதை அறிய வந்த ராஜகுமாரியான காந்தாரி தன் கண்களை தானே துணியால் கட்டிக்கொண்டு பார்வையற்றவளாக இருக்க தீர்மானித்தாள். தனக்கு அமையும் கணவருடைய பாணியிலேயே தானும் பார்வையற்று இருப்பதே சரியானது என அவள் தீர்மானம் செய்து கொண்டாள். சகுனி என்பவன் காந்தாரியின் சகோதரன் அவன் மிகவும் மகிழ்வுடன் தன் உடன் பிறந்தவளான காந்தாரியை குரு வம்சத்தின் தலைமை பட்டணமான அஸ்தினாபுரத்திற்கு அழைத்துச் சென்றான்.
திருதராஷ்டிரன் கண் தெரியாத காரணத்தினால் அரசனாக சிம்மாசனத்தில் வீற்றிருக்க தகுதியற்றவன் ஆனான். ஆகையால் பீஷ்மர் இரண்டாவது சகோதரனாகிய பாண்டுவை நாட்டிற்கு அரசனாக்கினான். மேலும் நாட்டை ஆண்டு வந்த பாண்டு அரசனுக்கு மணமுடித்து வைக்க பீஷ்மர் தீர்மானம் பண்ணினார். அப்போது நிகழ்ந்த சுயம்வரமொன்றில் குந்தி என்ற இளவரசி பாண்டு மன்னனே தன் கணவனாக மாலை சூட்டி ஏற்றுக்கொண்டாள். இந்த நிகழ்ச்சி பீஷ்மருக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. சில காலத்திற்கு பிறகு பாண்டுவிற்கு இரண்டாவது மனைவியாக மாத்ரி என்பவளை பீஷ்மர் திருமணம் செய்து வைத்தார். மத்திர நாட்டு மன்னனாகிய சல்லியனுக்கு அவள் தங்கையாவாள்.
சத்தியவதி இதுவரை ரகசியமாக வைத்திருந்த பழைய நிகழ்ச்சி ஒன்றை இப்போது துணிந்து பீஷ்மரிடம் தெரிவித்தாள். அவள் மங்கைப் பருவத்தில் இருந்த பொழுது யமுனா நதியைக் கடப்பதற்கு பராசர மகரிஷிக்காக படகை ஓட்டும் அவசியம் ஏற்பட்டது என்றும் அப்போது மேலோன் ஒருவன் பிறக்க ஏற்ற காலம் என்று மகரிஷி தெரிவித்தார். இதற்கு தானும் இணங்கியதால் பூலோகம் பெறுவதற்கரிய குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகரிஷி தன் தவ வலிமையால் என்னை மீண்டும் கன்னியாக்கி விட்டார். அக்குழந்தை அதிவிரைவில் வளர்ந்து ஒரு ரிஷி ஆனான். கிருஷ்ண த்வைபாயனர் என்னும் பெயருடன் காட்டிலேயே அக்குழந்தை வளர்ந்து. அவன் நான்கு வேதங்களையும் முறையாக வகுத்து வைத்தான். ஆகையால் வேதவியாசர் என்னும் பெயர் அவனுக்கு வந்தது. தன்னை அவன் பிரிந்து போன பொழுது வாக்கு ஒன்றை கொடுத்திருந்தான். கஷ்டமான நேரங்களில் நெருக்கடி வருகின்ற பொழுது தன்னை பற்றி நினைத்தால் தாயின் முன் தோன்றுவேன் என்று சொல்லிவிட்டு போனான். அந்த வியாசர் தன் வழியிலே விசித்திரவீரியனுக்கு மூத்தவன் ஆகின்றான். அந்த வியாசரை அழைக்க வேண்டும் என்று சத்தியவதி சொன்னாள். பீஷ்மர் அதற்கு முழு சம்மதம் கொடுத்தார். குடும்ப பிரச்சினை நீக்கி வைப்பதற்கு அந்த நேரத்தில் அதுவே தலை சிறந்த உபயாமாக இருந்தது.
வியாசர் காட்டில் வேத சாஸ்திரத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்தார். நிறை ஞானியான அவர் தன் தாய் தன்னை அழைக்கிறார் என்று அறிந்துகொண்டார். அக்கணமே யோக சித்தியால் தாயின் முன் பிரசன்னமானார். நெடுங்காலத்திற்கு பிறகு தாயும் சேயும் சந்தித்ததில் இருவருக்கிடையில் புளகாங்கிதம் உண்டாயிற்று. இந்த இன்ப நுகர்ச்சி அடங்கிய பொழுது தன்னை அழைத்ததன் காரணம் என்ன என்று மகன் தாயிடம் கேட்டார். தனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை தாய் விரிவாக எடுத்து விளக்கினாள். விதவைகளான அம்பிகாவையும் அம்பாலிகாவையும் வயதில் இளையவர்கள். குடும்ப விருத்திக்காக மகப்பேறு அவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது. ஆகையால் அவர்களுக்கு கர்ப்பதானம் செய்து வைக்கும் படி வியாசரிடம் தாய் வேண்டிக்கொண்டாள். இக்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியை வியாச ரிஷியும் நன்கு அறிந்து கொண்டார். தன் தாயின் எண்ணத்தை நிறைவேற்றி வைக்கவும் அவர் சம்மதித்தார்.
ஆனால் அதற்கிடையில் மற்றொன்றே அவர் எடுத்துரைத்தார். காட்டில் வளர்ந்து ஜடாமுடியுடன் இருக்கும் ரிஷியாகிய தாம் அதற்கேற்ற ராஜ உடலமைப்பை பெற ஒரு வருட காலம் தேவை என்று கூறினார். சத்தியவதி தனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை எடுத்து விளக்கினாள். நாடு அரசன் இல்லாமல் நெடுநாள் வைத்து இருக்கலாகாது ஆகையால் உடனே தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கூறினாள். ஆகையால் வியாசரும் தன் தாயின் வேண்டுதலை நிறைவேற்றி வைக்க சம்மதித்தார்.
சத்யவதி தன்னுடைய மருமகள்கள் இருவரிடம் தனித்தனியே அனைத்தையும் எடுத்துரைத்தாள். இருவரும் நாணத்துடன் அதற்கு சம்மதம் கொடுத்தார்கள். தன்னுடைய அறையில் முதல் மருமகள் அம்பிகா காத்திருந்தாள். அப்போது அவள் அறைக்கு ஜடாமுடியுடனும் தாறுமாறான தாடியுடனும் எதையும் துளைத்துக் கொண்டு போகும்படியான கூர்மையான கண்களுடனும் ஓர் உருவம் வந்தது. அத்தகைய உருவத்தைப் பார்த்ததும் ராஜகுமாரி மிக பயந்து போனாள். வியாசரிஷி தன்னை விட்டுப் பிரிந்து போகும் வரையில் அவள் தன்னுடைய கண்களை இறுக மூடிக் கொண்டாள். அவளுடைய மடமையை முன்னிட்டு அவளுக்கு கண் தெரியாத மகன் ஒருவன் பிறப்பான் என்று சொல்லிவிட்டு வியாசர் சென்றார். வியாசர் சொன்னபடியே குரு வம்சத்திலே கண் தெரியாத திருதராஷ்டிரன் என்னும் மன்னன் பிறந்தான்.
நண்பர்களும் உறவினர்களும் சத்தியவதியுடன் சேர்ந்து கொண்டு பீஷ்மரிடம் திருமணம் செய்து கொள்ளுமாறும் அரச பதவியை ஏற்குமாறும் வலியுறுத்தினர். தேவவிரதனாகிய பீஷ்மர் முன்பு சிம்மாசன பதவியையும் இவ்வாழ்க்கை இன்பத்தையும் துறந்ததினால் சத்யவதி சந்தனு மன்னனை மணந்தாள். அன்றைய சூழ்நிலை அப்படி இருந்தது. இன்று சூழ்நிலை அறவே மாறிப் போயிருந்தது. எந்த சத்தியவதியின் பொருட்டு தேவவிரதன் அரச பதவியையும் இவ்வுலக இன்பத்தையும் ஒதுக்கித் தள்ளினாரோ இன்று அதே சத்தியவதி தங்கள் குடும்ப நலனை முன்னிட்டு தேவவிரதனாகிய பீஷ்மர் சிம்மாசனத்தில் ஏறியாக வேண்டும் என்றும் மணந்து கொண்டு இல்வாழ்க்கை இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாள்.
சாதாரண சூழ்நிலையில் மைந்தன் ஒருவன் பெற்றோருடைய நலனுக்காக ஏதேனும் ஒரு பதவியை விட்டுக் கொடுக்கவும் திரும்பவும் அவர்களுடைய ஆணைப்படி அப்பதவியை ஏற்கவும் செய்யலாம். ஆனால் பீஷ்மருடைய நிலைமை முற்றிலும் வேறானது பெற்றோரின் நலனுக்காக அவர் தீவிரமான விரதம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த விரதம் உயிர் வாழ்ந்திருப்பதை விட மேலானது.
பீஷ்மர் சத்தியவதியை பார்த்து தாயே பெற்றோருக்காக வேண்டியே ராஜ பதவியையும் உலக இன்பதையும் துறந்தேன். பின்பு தாயின் ஆணைக்கு உட்பட்டு இந்த விரதத்தில் இருந்து விலகுவது நல்ல மகனுடைய செயலாக இருக்கலாம். ஆனால் என் விஷயம் அத்தகையது இல்லை இந்த விரதத்தில் இருந்து விலகுவது முறையாகாது. இந்த விரதத்திலிருந்து விலகுவதும் பொய்மையில் வாழ்வதும் ஒன்று தான். நான் சத்திய மார்க்கத்தை கடைப்பிடிக்கிறேன் விண்ணுலகிலும் மண்ணுலகிலும் எந்த காரணத்தை முன்னிட்டும் நான் சத்திய மார்க்கத்தில் இருந்து விலக மாட்டேன். பஞ்சபூதங்கள் அவர்களின் செயல்களில் இருந்தும் ஒருவேளை விலகலாம். ஆனால் நான் சத்தியத்திலிருந்து விலகமாட்டேன் என்றார். மைந்தன் பூண்டிருந்த தீர்மானம் எவ்வளவு புனிதமானது என்பதை நெருக்கடியில் தவித்துக்கொண்டிருந்த தாய் சத்தியவதி அறிந்து கொண்டாள்.
குடும்பத்தின் பிரச்சினை சம்பந்தமாக தன்னை வாட்டிய துயரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கு வேறு ஏதேனும் வழிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று பீஷ்மரிடம் சத்தியவதி வேண்டினாள். இருவரும் அதில் ஆழ்ந்து தனது கருத்தைச் செலுத்தினர். அந்த நெருக்கடி சம்பந்தமாக பல பெரியோர்கள் சில நெறிகளை வழங்கி இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு புலப்பட்டது. மகப்பேறு இல்லாத விதவை ஒருத்தி காலம் சென்ற தன் கணவனுக்கு வாரிசு வேண்டுமென்று உடல் உணர்வை தாண்டியுள்ள சான்றோன் ஒருவனுடன் சேர்ந்து மகப்பேறு பெறலாம் என்னும் நியதி உள்ளது. எனவே அந்த முடிவுக்கு இருவரும் வந்தனர்.
பண்டைக் காலத்தில் பாரத கண்டத்தில் மன்னர்கள் இரண்டு விதமான முறைகளில் மணம் புரிந்து கொண்டனர். ஒன்று சுயம்வரம் முறை. அதன்படி ராஜகுமாரி ஒருத்தி தன் கணவனை தானே தேர்ந்தெடுத்துக் கொள்வாள். ராஜகுமாரியை மணந்து கொள்ள விரும்பும் ராஜகுமாரர்கள் ஒன்று கூடி தங்களுடைய திறமைகளையும் பராக்கிரமத்தையும் காட்டுவார்கள். மணந்து கொள்ள இருக்கும் ராஜகுமாரி அந்த ராஜகுமாரர்களில் தனக்கு பிடித்தமானவருக்கு மாலை சூட்டுவாள். இரண்டாவது முறை வெறும் கேள்வி அளவில் இருந்தது. நடைமுறையில் அதை யாரும் பார்த்ததில்லை. அந்த முறைப்படி போட்டிபோட வந்துள்ள ராஜகுமாரர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் புரிந்து கொள்வார்கள். அவர்களில் வெற்றி பெற்ற ராஜகுமாரன் ராஜகுமாரியை அபகரித்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்வான்.
காசியை ஆண்டு வந்த அரசனுக்கு அம்பா அம்பிகா அம்பாலிகா என்ற மூன்று பெண்கள் இருந்தனர். அவர்களுக்கு மணமுடிக்கும் காலம் வந்தது. அப்போது திருமணம் செய்யும் வழக்கத்திலிருந்த சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்களுடைய திறமைகளைக் காட்டிக் கொள்வதற்கு ராஜகுமாரர்கள் பலர் வந்திருந்தனர். அக்கூட்டத்திற்கு பீஷ்மரும் வந்திருந்தார். இவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார் என்ற எண்ணம் பலர் உள்ளத்தில் எழுந்தது. அவர் ஒப்பற்ற போர் வீரன் என்பதில் ஐயமில்லை. ஆயினும் அவர் வயதில் சற்று முதிர்ந்தவன். ஆயுட்காலம் முழுவதும் பிரம்மச்சரியம் அனுஷ்டிக்கும் விரதமிருப்பவர். அத்தகையவர் இங்கு ஏன் வந்திருக்கிறார் என்று பலர் எண்ணினர்.
அப்போது பீஷ்மர் அங்கிருக்கும் அரசர்களைப் பார்த்து வேந்தர்களே இந்த கன்னிகைகள் மூவரையும் நான் தூக்கிக் கொண்டு செல்லப் போகிறேன். குரு வம்சத்து அரசனாகிய என் சகோதரன் விசித்திரவீரியனுக்கு இம்மூவரும் மனைவிமார்கள் ஆவார்கள். இதற்கு ஆட்சேபனை செய்கின்றவர்கள் என்னுடன் போர் புரியலாம் என்றார். சுயவரத்திற்கு வந்திருந்த ராஜகுமாரர்கள் ஒன்று கூடிப் பாய்ந்து வல்லமையுடன் பீஷ்மரை எதிர்த்தார்கள். ஆனால் அந்த எதிர்ப்பு பயன்படவில்லை. வீரமும் பராக்கிரமும் நிறைந்த பீஷ்மர் அவர்கள் அனைவரையும் விரட்டிவிட்டு மூன்று பெண்களையும் தனது தலைநகரான அஸ்தினாபுரத்திற்கு தூக்கிச் சென்றுவிட்டார். சகோதரிகளில் மூத்தவளாகிய அம்பா என்பவள் பீஷ்மரிடம் வந்திருந்த ராஜகுமாரர்களில் சௌபால நாட்டு அரசனாகிய சால்வன் என்னும் அரசனை மணந்து கொள்ள ஏற்கனவே தீர்மானித்திருக்கிறேன் எனது கற்பை காத்தருளும்படி பரிந்து வேண்டுகின்றேன் என்றாள். பீஷ்மரும் சத்தியவதியும் அவளுடைய விஷயத்தை எண்ணிப் பார்த்தார்கள். சௌபால நாட்டு அரசனாகிய சால்வனிடம் கொண்டு போய் சேர்க்கும் படி ஏவலாளர்களைக் கொண்டு தக்க ஏற்பாடு செய்தார்கள். மற்ற சகோதரிகள் அம்பிகாவும் அம்பாலிகாவும் முறைப்படி விசித்திரவீரியனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். விசித்திரவீரியன் அல்ப ஆயுள் படைத்தவனாக இருந்தான். குழந்தை பெறுவதற்கு முன்பே அவன் பரகதி அடைந்து விட்டான். ராஜவம்சம் ஒன்றுக்கு ஏற்படுகின்ற துர்பாக்கியங்களுள் ஒன்று குலநாசம் அது மிகக் கொடியது. அந்த வம்சத்திற்கு இந்த ஆபத்து உண்டாயிற்று. மிக துயரத்தில் இருந்த சத்யவதி பீஷ்மரிடம் விதவைகளாக இருக்கும் ராஜகுமாரிகளை மணந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினாள்.
தேரோட்டி கூறிய அனைத்தையும் கேட்ட தேவவிரதன் தேரோட்டியிடம் அந்த செம்படவர் தலைவன் இருக்கும் இடத்திற்கு தன்னை அழைத்து செல்லுமாறு கூறினான். தேரோட்டி செம்படவர் தலைவனிடம் அழைத்துச் சென்றான். செம்படவர் தலைவன் தேவவிரதனை வரவேற்று அவனிடம் நானும் என் குடும்பமும் பாக்கியம் பெற்று உள்ளோம் என்றும் அரச குடும்பம் எங்கள் மீது அதிக அபிமானம் வைத்திருக்கிறது என்றும் கூறினார். அதற்கு தேவவிரதன் என் சிற்றன்னையை என் தந்தையாகிய அரசனிடம் அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன் என்றான். அதற்கு செம்படவர் தலைவன் நிபந்தனைகளை நிறைவேற்றினால் நீங்கள் எதிர்பார்க்கிற சிற்றன்னையை அழைத்துச் செல்லலாம் என்றான். நீங்கள் விதிக்கும் நிபந்தனையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று தேவவிரதன் கூறினான். அதற்கு செம்படவர் தலைவன் இளவரசராக இருக்கும் தாங்களுக்கு ஆட்சி செய்யும் அதிகாரம் இருக்கும் போது தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு என் பேரன் எவ்வாறு சிம்மாசனத்தில் அமர முடியும் என்று கூறினான்.
எனது தந்தையாருக்கும் சிற்றன்னைக்கும் பிறக்கும் என்னுடைய எதிர்கால தம்பிக்கு சிம்மாசனத்தின் உரிமையை விட்டுக் கொடுக்கிறேன் என்று தேவவிரதன் அவரிடம் உறுதி அளித்தான். அதற்கு செம்படவர் தலைவர் நீங்கள் பரந்த மனப்பான்மை படைத்து இருக்கின்றீர்கள் ஆனால் தங்களுடைய மகனும் பேரனும் அரசாங்க உரிமைகளை கேட்பார்கள். அப்போது எனது பேரனால் என்ன செய்ய முடியும் என்று கூறினார். அதற்கு தேவவிரதன் இந்த நேரம் முதல் என்னுடைய ஆயுள் காலம் முழுவதிலும் திருமணம் செய்யாமல் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்கும் விரதம் எடுக்கின்றேன் என்று உறுதியளித்தான். இக்கடினமான விரதத்தை எடுக்கின்றேன் என்று அவரிடம் கூறியபோது விண்ணுலகில் இருந்து தேவர்கள் அவர் மீது பூமாரி பொழிந்து பீஷ்மன் பீஷ்மன் என்று கர்ஜித்தார்கள். மானுடன் ஒருவன் கடினமான விரதம் எடுத்து அதை நிறைவேற்றுகிறான் என்பதே அந்தப் பதத்தின் பொருள் ஆகும். அந்த நொடியிலிருந்து தேவவிரதன் பீஷ்மன் என்று பெயர் பெற்றான்.
செம்படவர் தலைவனுடைய அனுமதியின் பேரில் பீஷ்மன் தன் சிற்றன்னை சத்தியவதியை அரண்மனைக்கு அழைத்துச் சென்று தன் தந்தையிடம் ஒப்படைத்தான். தன் மகன் செய்த செயற்கரிய செயலை சந்தனு மன்னன் கேள்விப்பட்டான். தேவவிரதனைத் தவிர வேறு எந்த மனிதனும் இத்தகைய அரிய பெரிய தியாகத்தை செய்ய முடியது என்று வியந்தான். அதனால் தன் மைந்தனுக்கு தந்தை ஓர் வரத்தைக் கொடுத்தார். அந்த வரத்தின் படி பீஷ்மன் அனுமதித்தால் ஒழிய மரணம் பீஷ்மரை அணுகாது.
சத்யவதியானவள் உபரிசரவசு என்னும் வேந்தனுடைய மகள் என்பதையும் செம்படவன் அவருடைய வளர்ப்புத் தந்தை என்பதையும் அந்த மன்னன் அறிந்தான். எனவே அவள் ஒரு சத்திரிய பெண் ஆகிறாள். எனவே வேத விதிப்படி வேந்தன் அவளை விவாகம் செய்து கொண்டான். திருமணம் செய்த சிறிது நாட்களில் சித்திராங்கதன் விசித்திரவீரியன் என்னும் பெயர் படைத்த இரண்டு மகன்களை சத்தியவதி பெற்றெடுத்தாள். அதன் பிறகு சிறிது காலத்தில் சந்தனு மன்னன் பரகதி அடைந்தான். தம்பிகளை காப்பாற்றும் பொறுப்பை பீஷ்மர் ஏற்றுக் கொண்டார். சித்திராங்கதனை பீஷ்மர் அரசனாக்கினார். அப்பதவியை ஏற்ற சிறிது காலத்திற்குள் அவனைப் போலவே பெயர் பெற்ற சித்திராங்கதன் எனும் பெயர் படைத்திருந்த கந்தர்வன் ஒருவனால் சித்திராங்கதன் கொல்லப்பட்டான். அதனால் ஆட்சி நடத்த அரசன் வேண்டும் என்று இளைய சகோதரனாகிய விசித்திரவீரியனை அரசனாக்கினார் பீஷ்மன். அவன் வயதில் சிறியவன் ஆதலால் அவனுடைய பிரதிநிதியாக பீஷ்மர் நாட்டை ஆண்டு வந்தார். அந்த அரசனுக்கு ஏற்ற மனைவி ஒருத்தியை பீஷ்மர் தேடினார்.
சந்தனு மன்னனின் வார்த்தையை கேட்ட அப்பெண் ஒழுக்கம் என்பது என்ன என்பதை பற்றி அரசனிடம் விளக்கினாள். பெண் ஒருத்தியிடம் இப்படி பேச்சை எடுப்பது தவறு என்றும் அதற்கு பதிலாக அவளுடைய தந்தையிடம் தெரிவிப்பது தான் முறை என்றும் அவள் ஞாபகப்படுத்தினாள். அவளின் பேச்சில் பண்பும் உண்மையும் புதைந்திருப்பதை மன்னன் அறிந்தான். செம்படவர் தலைவனான அப்பெண்ணின் தந்தையிடம் சந்தனு மன்னன் உங்களது மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று தனது கருத்தை தெரிவித்தான். அதற்கு செம்படவர் தலைவன் கன்னியான எமது பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டும். என்னுடைய செல்விக்கும் திருமணம் அவசியமாகிறது. எங்களை ஆண்டு வரும் மன்னன் அவளுக்கு கணவனாக அமைவது அவளுடைய பாக்கியம். ஆனால் அவளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்பு நான் உங்களிடமிருந்து வாக்குறுதி ஒன்றை பெற விரும்புகிறேன் என்றான். அதற்கு சந்தனு மன்னன் நியாயமான வாக்குறுதி எதையும் அளிக்க நான் ஆயத்தமாக இருக்கின்றேன் என்றான். எமது பெண்ணுக்கும் உங்களுக்கும் மகனாய் பிறப்பவன் உங்களை தொடர்ந்து சிம்மாசனத்தில் மன்னனாக இருப்பான் என்ற உறுதி மொழியை நீங்கள் கொடுத்தால் எமது பெண்ணை தங்களுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கின்றேன் என்றான் செம்படவர் தலைவன்.
சந்தனு மன்னன் மிக அழகாய் இருக்கின்ற அப்பெண்ணிடம் காதலில் மயங்கி மூழ்கியிருந்தான். ஆயினும் இந்த நிபந்தனைக்கு அவன் இசையவில்லை. இவனது நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் தேவவிரதனை ஒதுக்கி வைத்தாக வேண்டும். இந்த செயலில் ஈடுபட அவன் தயாராக இல்லை. திகைத்துப்போன சந்தனு மன்னன் தன் காதல் தோல்வியடைந்ததால் தனது அரண்மனைக்கு திரும்பிச் சென்றான். அங்கு அந்த பெண்ணின் மீதான காதலினால் அவனுடைய மனம் பாதிக்கப்பட்டு உடல் நிலை உறுதி குன்றியது. ஆனால் தன் துயரத்தை அவன் தன்னுடனே வைத்திருந்தான். இதைப்பற்றி அவன் யாரிடத்தும் எதுவும் பேசவில்லை.
தன் தந்தை உடல் நிலையிலும் மனநிலையிலும் உறுதி குன்றி வந்ததை தேவவிரதன் அறிந்துகொண்டான். தேவவிரதன் தன் தந்தையிடம் சென்று இதற்குக் காரணம் என்ன என்று பணிவுடன் கேட்டான். அதற்கு சந்தனு மன்னன் என் ஆருயிர் செல்வா கவலையுற்ற நான் ஒடுங்கி இருக்கிறேன் என்பது உண்மை. நீ எனக்கு ஒற்றை மகன். எப்பொழுதும் நீ போர் விஷயங்களிலேயே ஈடுபட்டவனாய் இருக்கின்றாய். மண்ணுலக வாழ்கை உறுதி அற்றது. போர் முனையோ தவிர்க்க முடியாதது. போரில் உனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டால் அது நம் குடும்பத்தின் துர்பாக்கியம். ஒற்றை மகப்பேறு ஒருநாளும் மகப்பேறு ஆக மாட்டாது என்று நூல்கள் கூறுகின்றன. குடும்ப வளர்ச்சியையும் விரிவையும் முன்னிட்டு நான் கவலையுடன் இருக்கின்றேன்.
தேவவிரதன் மிகப்பெரிய நுண்ணறிவாளி. தந்தை கூறியதில் ஓரளவு உண்மை இருந்தது அவனுக்கு புரிந்தது. ஆனால் முழுவிவரம் தன்னிடமிருந்து மறைத்து வைக்கப் பட்டிருக்கின்றது என்பதை அவன் உணர்ந்தான். எனவே தந்தையின் தேர்ப்பாகனை அணுகினான். தந்தையின் துயரத்திற்கு காரணம் என்ன என்று தேர்ப்பாகனிடம் வற்புறுத்தி கேட்டான். செம்படவர் தலைவனின் மகளை காதலித்து அவளை மணமுடிக்க பெண்ணின் தந்தையிடம் கேட்டபோது அவரது தந்தை கூறியவற்றை உள்ளபடி எடுத்து கூறினான் தேரோட்டி.
கங்காதேவி இவ்வாறு சொல்லிவிட்டுச் சென்றதும் அவள் கூறியது சந்தனு மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதன் விளைவாக அவன் தவ வாழ்க்கையில் ஈடுபடத் தீர்மானித்தான். கிட்டத்தட்ட ஒரு முனிவன் போல வாழ்ந்து வந்த மன்னன் தன்னுடைய நாட்டை நீதியுடனும் அன்புடனும் ஆண்டு வந்தான். காலமும் அதிவேகமாக கடந்து போய்க்கொண்டே இருந்தது. சந்தனு மன்னன் ஒருநாள் தன்னந் தனியாக கங்கை கரை ஓரத்தில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது அவன் அழகிய ஓர் இளைஞனை சந்தித்தான். அந்த இளைஞனின் செயல்கள் அனைத்தும் வேந்தன் கவனத்தைக் கவர்ந்தது. அந்த இளைஞனின் தெய்வீக பேரழகு அவனை வசப்படுத்தியது. இதற்கெல்லாம் மேலாக அவனுடைய வில் அம்பு விளையாட்டில் தனித்தன்மை மிளிர்ந்தது. அம்புகளைக் கொண்டு பெருக்கெடுத்து ஓடிய கங்கா நதியை ஓடவிடாமல் அணை போட்டு தடுத்தான். அத்தருணத்தில் அங்கு தேவதை போன்ற பெண் ஒருத்தி வந்தாள். அவள் யாரென்று சந்தனு மன்னனுக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது அவள் மன்னனிடம் நான் கங்காதேவி இவனுடைய தாய் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இந்த இளைஞன் நதியில் மூழ்கடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்ட உன்னுடைய எட்டாவது மகன் என்றாள். அதைக் கேட்ட மன்னனின் மனதில் முன்பு நிகழ்ந்து போன செயல்கள் ஞாபகத்திற்கு வந்தன. அதன் விளைவாக அவன் பிரமித்து நின்றான்.
தேவவிரதன் என்னும் பெயர் பெற்ற இவன் நம்முடைய செல்வன் ஆவான். முன்பு கூறியபடி இதுவரை அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து இவனை வளர்த்து இருக்கின்றேன். பரசுராமரிடமிருந்து வில் வித்தையை பயின்று இருக்கின்றான். வில் வித்தையில் இவன் தன் குருவான பரசுராமருக்கு சமமானவன் ஆவான். வசிஷ்ட மகரிஷியிடமிருந்து இவன் வேதங்களையும் வேத அங்கங்களையும் வேதாந்தத்தையும் கற்று இருக்கின்றான். தேவகுருவாகிய பிரகஸ்பதி அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார் என்னென்ன கலைகளையும் சாஸ்திரங்களையும் கற்று இருக்கின்றார்களோ அவைகள் அனைத்தையும் இந்த இளைஞன் கற்று இருக்கின்றான். யுத்தம் செய்வதிலும் ஆட்சி செய்வதிலும் வல்லமை படைத்த வீரன் இவன். நமது மைந்தனாகிய இவனை தான் திரும்பவும் மனமுவந்து தங்களிடம் ஒப்படைக்கின்றேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என அவள் அந்த இளைஞனை சந்தனு மன்னனிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டாள்.
சந்தனு மன்னன் தேவவிரதால் தானும் தன்னுடைய நாடும் பாக்கியம் பெற்றதாக உணர்ந்தான். மகிழ்ச்சியுடன் தேவவிரதனை தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். தக்க காலத்தில் தேவவிரதனுக்கு யுவராஜனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தான். அந்த இளைஞனிடம் இருந்த திறமைக்கும் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறே பித்ரு பக்தியும் அவனிடத்தில் தலைசிறந்து திகழ்ந்தது. அமைதியாக நான்கு ஆண்டுகள் கடந்து போயின. அதன் பிறகு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. சந்தனு மன்னன் யமுனை நதி அருகே உலாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு இடத்தில் சொல்ல இயலாத அளவிற்கு இனிமை நிறைந்த நறுமணம் கமழ்வதை உணர்ந்தான். அது எங்கிருந்து வருகிறது என்பதை சந்தனு மன்னன் நுணுக்கமாக ஆராய்ந்து நறுமணம் வரும் திசையை நோக்கி சென்றான். யமுனை நதி அருகே ஒரு தீவிலே செம்படவ வேந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய செல்வியின் பெயர் சத்தியவதி. முனிவர் ஒருவர் வழங்கிய வரத்தின் விளைவாக அந்த நறுமணம் அவளிடம் இருந்து வந்து கொண்டிருந்தது அந்த மங்கையை பார்த்த உடனே மன்னன் அவள் மீது காதல் கொண்டான். அவள் இருந்த இடம் ஒரு குடிசையாக இருந்ததை அவன் பொருட்படுத்தவில்லை. இத்தனை நாள் தவநெறியில் ஈடுபட்டிருந்த வேந்தன் இப்போது காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ளவேண்டும் என்று சிறிதும் தயங்காமல் அந்தப் பெண்ணிடம் வேண்டினான்.
சந்தனு மன்னனும் அவனது மனைவியும் பரஸ்பரம் நன்கு நேசித்து வாழ்ந்து வந்தார்கள். மகாராணி ஒருத்தியிடம் இருக்கவேண்டிய அடக்கமும் மாண்பும் அந்த மாதரசியிடம் மிளிர்ந்து இருந்தது. காலம் எப்படி கடந்து போயிற்று என்பதை அறியாதவர்களாக தம்பதிகள் இன்புற்று வாழ்ந்து வந்தனர். நாளடைவில் அரசி விபரீதமான செயலொன்றேச் செய்ய ஆரம்பித்தாள். அரசனுக்கும் தனக்கும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் தூக்கிச் சென்று கங்கா நதியில் வீசி எறிந்து விட்டு திரும்பி வந்தாள். அரண்மனை திரும்பிய அவள் பெரிய கடமை ஒன்றை நிறைவேற்றி விட்டவள் போல அரசனிடம் புன்னகைத்தாள். அரசி புரிந்து வந்த இந்தப் பாதகச் செயலை பார்த்து சந்தனு மன்னன் திகிலடையலானான். ஆனால் போட்ட நிபந்தனையின்படி அவளை ஒன்றும் கேட்காமல் இருந்தான். இதைப் பற்றி கேட்டால் அது விபரீதமாக போய்விடக் கூடும் என்று அமைதியாக தனக்குள்ளே சிந்தனை பண்ணிக் கொண்டிருந்தான். தனக்குப் பிறந்த ஏழு குழந்தைகளை அவள் கொன்று விட்டாள். எட்டாவதாக பிறந்த குழந்தையை அவள் கங்கைக்குள் போடப் போன பொழுது அச்செயலை சகிக்க சந்தனு மன்னனுக்கு இயலவில்லை.
அரசியே நீ ஏன் அரக்கத்தனம் படைத்தவள் போல உன் குழந்தையை கொலை செய்கிறாய்? தயவு செய்து இந்த 8 வது குழந்தையாவது காப்பாற்று என்றான். அதற்கு அரசி மன்னரே நீங்கள் எனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள். இப்போது உங்களது அன்பு என் மீது இல்லை குழந்தையின் மீது செல்கிறது. ஆகவே நான் செல்கிறேன். நான் செல்வதற்கு முன்பு நான் யார் என்பதையும் நான் ஏன் இந்த செயலை செய்கிறேன் என்பதையும் உங்களுக்கு எடுத்து விளக்குகின்றேன் கேளுங்கள். நான் கங்காதேவி மண்ணுலகில் பிறந்து சிறிது காலம் நான் உங்களுக்கு மனைவியாக இருக்க வேண்டும் என்பது பிரம்ம தேவன் இட்ட சாபம். தேவதையாக நான் அந்த நிலைமையை அறிகிறேன். நில உலகத்தவராகிய நீங்கள் அதை அறியவில்லை.
விண்ணுலகில் இருக்கும் எட்டு வசுக்கள் வசிஷ்ட மகரிஷி இல்லாத வேளையில் அவருடைய ஆசிரமத்திற்குள் நுழைந்து நந்தினி என்னும் பசுவை திருடிச் சென்று விட்டனர். ஆசிரமத்திற்கு திரும்பி வந்த வசிஷ்டர் தனது யோக வலிமையால் குற்றவாளிகள் யார் என்பதை கண்டு கொண்டார் அந்த வசுக்கள் 8 பேரும் உலகத்தில் மானிடராக பிறக்க வேண்டும் என்று அவர் சபித்தார். அந்த சாபம் மாற்ற முடியாதது. அந்த எட்டு வசுக்களும் மண்ணுலகில் நான் அவர்களுக்கு தாயாக வேண்டும் என்றும் அதிவிரைவில் இந்த உலக வாழ்க்கையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் என்னிடம் பரிந்து வேண்டிக் கொண்டார்கள் அதன் படியே நான் அவர்களில் 7 பேருக்கு விமோசனம் கொடுத்து விட்டேன். எட்டாம் குழந்தை இந்த உலகில் நீடித்து வாழ்ந்து செயற்கரிய பல செயல்களைச் செய்வான். ஆகையால் அவனை வழி அனுப்ப மாட்டேன். மற்றொரு காரியத்தைச் செய்வேன். அரிதிலும் அரிதாக இருக்கின்ற அஸ்திர சாஸ்திர வித்தைகள் பலவற்றை இவனுக்கு பயிற்றுவித்து உங்களிடம் ஒப்படைப்பேன் என்று சொல்லிவிட்டு அந்த குழந்தையை கையில் எடுத்துச் சென்று விட்டாள். இந்த குழந்தை தான் மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் ஆவார்.
தன்வந்திரி பிறந்தது ஐப்பசி புனர்பூசம் நட்சத்திரத்தில். 800 வருடம் 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். தன்வந்தரி ஆயூர்வேத மருந்துகளின் அதிபதி. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிர்த கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார். அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிர்தத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார். நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய். அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும் எனக் கூறியப் பின் மறைந்து போனார்.
வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது. வாசுகி என்னும் பாம்பு விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சை அடைந்தவர்களை எழச் செய்தார். அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர். அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர். அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார். விஷ்ணு தந்த வரமும் பலித்தது. வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதியடைந்தார்.
ஒரு குடும்பம் காசிக்குச் சென்று அங்கேயே தங்க நேரிடுகிறது. வேதம் ஓதுவதும் குழந்தைகளுக்கு தர்மத்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். தன் ஒரே மகளை நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். மகள் வளர இவளுக்கு ஒரு திருமணத்தை செய்ய எண்ணுகிறார். மகளோ பிடிவாதமாக நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம் காசி விஸ்வநாதர் மீது ஆணை என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி ஒதுங்கி விடுகிறாள்.
தந்தை போதித்தவற்றை செயல்படுத்தினால் என்ன என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே பல ஊர்களில் இருந்து காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும் உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க காலம் செல்லச் செல்ல இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார் என்று அறிந்து பலர் மருத்துவ உதவி கல்வி உதவி வேண்டும் என்று கேட்க இவளும் செய்து கொண்டே வருகிறாள். அந்தக் காசி மாநகரம் முழுவதும் இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து ஒரு கட்டத்தில் வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க வேறு வழியில்லாமல் அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி இறைவா நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால் என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும் கடனை திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்று மனம் உருகி இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.
ஒரு நாள் ஒரு பழுத்த மகான் இவளைத் தேடி வருகிறார். மகளே கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார் அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும் என்று அந்த மகான் கூறுகிறார். எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும் துறவி கூறியதால் அன்று மாலை அந்த செல்வந்தர் இல்லத்திற்குச் செல்கிறாள்.
அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே பெண்ணே உனக்கு என்ன வேண்டும் எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய் என்று செல்வந்தன் கேட்க இவள் தயங்கி ஒரு துறவி தான் தன்னை இங்கு அனுப்பினார் என்றும் தனக்கு ஏற்பட்டுள்ள கடன் மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி ஐந்து லட்சம் கடன் ஆகிவிட்டது. நீங்கள் ஐந்து லட்சம் தந்தால் காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது பணி செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன் என்றாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லட்சம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தர முடியாது என்றால் நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணி அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.
உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும் நீர்த்தடங்களை அமைப்பதும் கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி தர்மம் செய்தாய்? நீயே நடு வீதிக்கு வந்து விட்டாய். எப்படி உன்னால் என்னிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியும்? அடுத்ததாக நான் கடன் கொடுத்தால் அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.
இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி அய்யா நீங்கள் கூறுவது உண்மைதான். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள் என்று கேட்கிறாள். மன்னித்து விடு பெண்ணே அடமானம் இல்லாமல் நான் எதுவும் தருவதற்கு இல்லை என்று செல்வந்தர் கூற அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு அய்யா உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நான் ஆங்காங்கே பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட அடியேன் கட்டியது தான். இந்த நீரை தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இந்தத் திருக்குளத்திலே நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து யாரெல்லாம் நீர் பருகிறார்களோ அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.
ஐந்து லட்சத்திற்கு உண்டான அசல் வட்டிக்கு சமமான புண்ணியம் எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன் என்றாள். செல்வந்தர் பெண்ணே புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து புண்ணியம் என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கிறார். அய்யா அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள் என்று அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி எம்பிரானே அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும் கடனிலிருந்து தப்பிக்க இந்த அபவாதத்தை செய்கிறேன். ஈசனே இந்த திருக்குளத்தின் அடியில் நீ இருக்க வேண்டும். எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து அசலும் வட்டியுமான புண்ணியம் இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும் ஈஸ்வரா என்று கூறி பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி அடியவர்களின் துணை கொண்டு அந்த சிவலிங்கத்தை தூக்கி திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.
சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு அந்த செல்வந்தரைப் பார்த்து அய்யா நீரின் உள்ளே இருப்பது வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சிவபெருமான் தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால் எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ அப்பொழுதே இந்த சிவலிங்கம் மேலே வந்து மிதக்கும் என்று கூறுகிறாள். அம்மா சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே என்றார். இளம் பெண்ணோ நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும் என்றாள்.
செல்வந்தர் யோசிக்கிறார். இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து பணம் தர மாட்டேன் என்றால் நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால் இவள் புண்ணியவதி என்பதை நானும் ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால் இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும் என்று எண்ணி அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார் யாருக்கு தர வேண்டுமோ அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு இறைவா உன்னை நம்பித்தான் இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே என்று வேண்டிக் கொண்டு நிம்மதியாக சிவனை நினைத்து உறங்கச் செல்கிறாள்.
செல்வந்தர் காலையில் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன? என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து விட்டு வீட்டில் அமர்ந்து கொண்டு குளக்கரையை பார்வையிட துவங்குகிறார். முதலில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று குளத்து நீரை அருந்தி விட்டு மறுபக்கம் செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென தூப தீப சாம்பிராணி சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு உடுக்கை ஒலிக்க சிவலிங்கம் மேலே வந்து மிதக்கிறார். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கி நிலைகுழைந்து விட்டார். ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே ஐந்து லட்சத்திற்கு சமம் என்றால் அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால் என் செல்வம் அத்தனையும் வீண் என்பதை புரிந்து கொண்டு என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே செல்வம் தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள். என்று கூற ஊரே சென்று பார்த்தது. அதன் பிறகு தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு தானும் கடைசிவரை தர்மம் செய்து வாழ்ந்தார்.