ஓதிமலைமுருகன்

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. ஒதிமலையில் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த அமைப்புக்கு கவுஞ்சவேதமூர்த்தி என்று பெயர். பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. புராணபெயர் ஞானமலை. தீர்த்தம் சுனைதீர்த்தம். சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன் இந்த ஓதிமலை தலத்தில் வேதம் ஆகமங்களை உபதேசித்தார். சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் ஓதிமலை என்றும் சுவாமிக்கு ஓதிமலை முருகன் என்ற பெயரும் ஏற்பட்டது. முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இந்த மலைதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது. கைப்பிடி இல்லை. கோயம்புத்தூர் அருகே புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது.

சித்தர்களில் ஒருவரான போகர் முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன் அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன் போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால் ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும் இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருக்கின்றார். இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் போகர் பழனி முருகனை காணவேண்டி யாகம் நடத்தியிருக்கின்றார். இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும். விபூதிக்காடு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது.

படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன் பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கினார். படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன் முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி பிரம்மாவையும் விடுவித்தார்.

மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான் கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது.

திருச்செந்தூர் கோவில்

டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலை ஆக்கிரமித்தனர். பீரங்கித் தளவாடங்களுடன் கோயிலை தங்கள் கொத்தளமாக மாற்றினர். இது கண்ட அப்பகுதி மக்கள் பீதியும் வருத்தமும் கோபமும் அடைந்தனர். திருமலை நாயக்கர் மன்னரிடம் முறையிட்டனர். மன்னர் திருமலை நாயக்கர் சரக்குகளுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் திருச்செந்தூர் கோயிலை உடனடியாகக் காலி செய்யுமாறும் டச்சுக்காரர்களுக்கு உத்தரவிட்டார். டச்சுக்காரர்கள் அந்த உத்தரவை மதிக்காமல் சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்களுக்குச் சென்று அவற்றைக் கொள்ளையிட்டு சூறையாடவும் தொடங்கினர். தாங்கள் வெளியேற வேண்டுமானால் 40000 டச்சு நாணயங்கள் பணயமாகத் தரப்படவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தனர். தங்களால் இயன்ற அளவு பணயத் தொகை கொடுப்பதாகச் சொல்லிய ஊர்மக்களின் வேண்டுகோளை டச்சுக் காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்துதலுக்கும் எதிராகத் திருச்செந்தூர் மக்கள் திரண்டெழுந்து போரிட்டனர்.

சுப்பிரமணிய சுவாமியின் திருவுருவச் சிலை உள்ளிட்ட கோயில் சொத்துக்கள் பலவற்றைக் கொள்ளையிட்ட டச்சுக்காரர்கள் மக்கள் கிளர்ச்சி தொடங்கும் முன் தப்பிக்கத் திட்டமிட்டு கப்பல்களில் கிளம்பத் தொடங்கினர். போரைத் தவிர்க்க விரும்பிய திருமலை நாயக்கர் தமது தூதராக வடமலையப்ப பிள்ளை என்பவரை அனுப்பி கோயில் சொத்துக்களைத் திருப்பித் தருமாறு டச்சுக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மன்னரின் மனக்கருத்தை அறிந்த டச்சுக்காரர்கள் பணயத் தொகையை 100000 டச்சு நாணயங்களாகக் கூட்டினர்

கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக்காரர்கள் கப்பல்களில் ஏறித்தப்புவதற்கு முன் கோவிலை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர். அது முடியவில்லை. விக்கிரகங்களை உருக்கித் தங்கத்தை எடுத்துச் செல்லலாம் என்று முயன்ற போது விக்கிரகங்களை உருக்க முடியாமல் அப்படியே எடுத்துக் கப்பலில் போட்டனர். கப்பல் கிளம்பியவுடன் சிறிது நேரத்தில் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சூறைக் காற்று அடித்தது. கப்பல் நிலைகுலைந்து மூழ்கும் நிலைக்கு வந்தது. உடன் வந்தவர்கள் முருகனுடைய செயல் இது முருகனுடைய விக்கிரங்கள் இருக்கும் வரை நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று கூறினார்கள். பயந்து போன டச்சுக்காரர்கள் முருகன் விக்கிரகங்களை கடலிலேயே எறிந்தனர். உடனே கடல் கொந்தளிப்பு சூறாவளி அடங்கியது. அங்கிருந்து உடனே தங்கள் நாட்டிற்கு ஓடிவிட்டனர்.

அப்போது திருநெல்வேலியில் ராஜப் பிரதிநிதியாக இருந்த வடமலையப்பபிள்ளை தீவிர முருக பக்தர். சுவாமியின் உருவச் சிலையை டச்சுக்காரர்கள் கொள்ளையிட்டது பற்றிக் கேள்விப்பட்டுப் பெரிதும் வேதனையுற்ற அவர் அதே போன்ற பஞ்சலோக விக்கிரகங்களை வடிவமைத்து பிரதிஷ்டை செய்வதற்காக திருச்செந்தூருக்கு எடுத்து வந்தார். அப்போது வடமலையப்பரது கனவில் முருகப் பெருமான் தோன்றி கடலில் சென்று தனது திருவுருவச் சிலையை மீட்குமாறு ஆணையிட்டார். அதன் படி கடலில் ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் ஒன்று முழுகாமல் மிதக்கும் என்றும் அந்த இடத்தைச் சுற்றி வானில் கருடன் வட்டமிடும் என்றும் அங்கு தான் சிலை கிடைக்கும் என்றும் கனவில் முருகர் கூறினார். வடமலையப்பர் கடலில் இறங்கியபோது அந்த அடையாளங்களுடன் இருந்த இடத்தில் தெய்வச் சிலைகள் கிடைத்தன. அவற்றை மகிழ்ச்சியுடன் எடுத்து வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.

காலனிய வரலாற்றை எழுதிய எம்.ரென்னல் என்பவரது நூலில் (A Description, Historical and Geographical, of India – published in Berlin, 1785) திருச்செந்தூர்க் கோயில் பற்றிய செய்திகள் உள்ளன. டச்சுக் கம்பெனியின் படைத்தலைவர் ஒருவரிடமிருந்து தனக்குக் கிடைத்த விவரங்கள் இவை என்று அவர் குறிப்பிடுகிறார். 1648ல் மீண்டும் திரும்பி வரும் போது கடற்கரையில் இருந்த கோயிலை அழிக்க முயற்சி செய்தனர். பீரங்கிகள் கொண்டு கனரக வெடிகுண்டுகள் அந்தக் கோயில் மீது பொழியப்பட்டன. ஆயினும் அதன் கோபுரம் இவற்றுக்கு சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை. லேசான சேதாரம் மட்டுமே ஏற்பட்டது.

வடமலையப்பபிள்ளை கட்டிய மண்டத்தில் இன்றும் ஆவணி மாசி மாத விழாக்களின் போது அவர் பெயரில் கட்டளைகள் நடைபெறுகின்றன. அந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் மேற்சொன்ன தகவல்கள் உள்ளன. வென்றிமலைக் கவிராயர் எழுதிய திருச்செந்தூர் தலபுராணத்திலும் பிள்ளையைப் புகழ்ந்து எழுதப்பட்ட வடமலை வெண்பா என்ற நூலிலும் இந்த தெய்வச் செயல் பற்றிய செய்திகள் உள்ளன.

மகாபாரதம் 8. கர்ண பருவம் பகுதி -5

பீமன் துச்சாதனனை தேடினான். துச்சாதனன் யானையின் மீது அமர்ந்து போரிட்டு கொண்டிருந்தான். அவனை நோக்கி விரைந்தான் பீமன். துச்சாதனனிடம் பீமன் தன்னுடைய முழு பலத்தையும் காட்டிக்கொள்ளவில்லை. துச்சாதனன் தன்னுடைய திறமை முழுவதையும் காட்டுவதற்க்கான வாய்ப்பை முதலில் பீமன் அவனுக்கு கொடுத்தான். தற்காப்புக்காக போர் புரிவதைப்போன்று பீமன் பாசாங்கு பண்ணினான். துச்சாதனன் பத்து அம்புகள் எய்தால் பீமன் நான்கு ஐந்து அம்புகளை மட்டுமே திருப்பி எய்தான். இத்தகைய போராட்டம் கௌரவ சகோதரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. துச்சாதனன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது. திணறிக் கொண்டே சண்டை போடுவதாக பாசாங்கு பண்ணிய பீமன் துச்சாதனனின் பழைய அக்கிரமங்களை மனதிற்குள் எண்ணி பார்த்தான். அதன் விளைவாக அவனிடம் கோபம் அதிகரித்தது. கோபம் உச்சநிலைக்கு வந்தவுடன் தன் கதாயுதம் கொண்டு துச்சாதனன் இருந்த யானையை வீழ்த்தினான்.

ஒரு ஆட்டுக்குட்டியின் மீது சிங்கம் பாய்வது போன்ற துச்சாதனன் மீது பாய்ந்தான். துச்சாதனன் தோளைப் பிடித்தபிடி மரணத்திற்கு நிகரானதாக இருந்தது. துச்சாதனன் கையில் இருந்த ஆயுதங்கள் நழுவிக் கீழே விழுந்தது. பீமனை உற்று நோக்கிய துச்சாதனன் திகைத்து நின்றான். மூன்று வருஷங்களுக்கு முன்பு சபை நடுவே வைத்து திரௌபதியை மானபங்கம் செய்தாய். பழிக்குப்பழி வாங்கும் நாளுக்காக நான் காத்திருந்தேன். அன்று உனது அடாத செயலை பார்த்த மற்றவர்கள் பலர் இப்போது இங்கு இருக்கின்றனர். பாவியாகிய நீ அழிந்து போவதை பார்த்து அவர்கள் கலங்கட்டும் என்று கூறிய பீமன் மின்னல் வேகத்தில் துச்சாதனனை தாக்கி தரையில் விழச் செய்தான் கழுத்தில் தன் காலால் மிதித்தான். அவனது வலது கையை பிடித்து இந்த கை தானே திரௌபதியின் முடியை பிடித்து இழுத்து வந்தது என்று கூறி அவன் வலது கையை உடம்பில் இருந்து பிய்த்து எடுத்தான். மீண்டும் இந்த கை தானே திரௌபதியின் சேலையை உருவியது என்று அவனது இடது கையை பிய்த்து எடுத்தான். தன் இரு கரங்களில் வலிமை தாங்கி துச்சாதனின் மார்பை பிளந்தான். துச்சாதனன் இறந்தான். துச்சாதனன் மார்பிளிருந்து வழிந்த குருதியை பருகினான். சிறிது குருதியை தன் உள்ளங்கையில் ஏந்தி திரௌபதி இருக்கும் இடம் நோக்கி நடந்து அவளிடம் அந்த குருதியை கொடுத்து தன் சபதத்தை முடித்தான். துச்சாதனன் ரத்தத்தால் தன் தலை முடியை கொதி முடித்து தன் சபதத்தை நிறைவேற்றினாள் திரௌபதி. மீண்டும் போர்க்களம் திரும்பினான் பீமன்.

முதலில் பீமனிடம் இருந்து பின்வாங்கிய கர்ணன் இப்போது பீமனை நோக்கி சென்றான். இருவருக்கும் கடும் போர் மூண்டது. வெற்றிக் களிப்பில் இருந்தான் பீமன். பீமனிடம் தோல்வியின் தாக்கத்தில் இருந்தவன் கர்ணன். வீறு கொண்டு கர்ணன் பாய வெற்றிக் களிப்பில் செருக்கில் இருந்த பீமன் விரைவில் களைத்துப் போனான். ஆயுதங்கள் ரதம் என தன் உடமைகள் அனைத்தையும் இழந்து அந்த இடத்தை விட்டு வேறிடம் செல்ல முயன்றான். அவனைத் தொடர்ந்த கர்ணன் யாராலும் வெல்ல இயலாதவன் எனும் செருக்கு இருந்தால் வெற்றி உனக்கு நிரந்தரம் அல்ல எனக் கூறினான். பீமனை கொல்லாமல் தன் தாய் குந்திக்கு அளித்த வாக்குறுதியை மீண்டும் நிறைவேற்றினான் கர்ணன்.

திருச்செந்தூர்

தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன் சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும் கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். வால்மீகி ராமாயணத்தில் கபாடபுரம் குறிப்பிடப்பட்டிருப்பதால் ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.

ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, வெண்பா அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளமாக உள்ளது.

137 அடி உயரமும் 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவார்கள். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது.

ஆதிசங்கரர் வடநாட்டு திக் விஜயத்தை மேற்கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் யாகம் செய்து ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். கோவிலின் மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.

இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் இடம் பெற்றுள்ளது.

படவ லிங்கம்

கர்நாடக மாநிலம் ஹம்பியில் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கருகில் 9 அடி உயரமுள்ள இந்த படவலிங்கம் அமைந்துள்ளது. ஒற்றைக் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த லிங்கத்தில் மூன்று கண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இது சிவனின் மூன்று கண்களாக கருதப்படுகின்றன. இது ஹம்பியிலுள்ள லிங்கங்களுள் மிகப் பெரியதாகும். ஒரு ஏழை விவசாயப் பெண் இதனைக் கட்டியதாக வரலாறு உள்ளது. லிங்கம் உள்ள அறை வழியாக ஒரு வாய்க்கால் செல்வதால் லிங்கத்தின் அடிப்பகுதி நீரால் சூழப்பட்டு அவ்வறையில் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்டளவுக்கு நீர் உள்ளது.