ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 82

கேள்வி: ஐயனே தாங்கள் தீட்டு என்பது மனதை பொறுத்தவிஷயம் என்று கூறியிருக்கிறீர்கள். இருந்தாலும் தீட்டை எந்த கால கட்டத்தில் பார்க்க வேண்டும். அப்படி எதாவது இருக்கிறதா? உதாரணமாக மாதவிலக்கு மரண வீட்டுத் தீட்டு?

உள்ளம் சுத்தமாக இருப்பதை நாங்கள் பார்க்கிறாறோம். அதற்காக உடல் அசுத்தமாக இருக்க வேண்டும் என்று பொருளல்ல. உடலும் உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்பொழுது நீ கூறிய பெண்களுக்கு உண்டான மாதாந்திர விலக்கு என்பது ஒருவகையான உடல் சார்ந்த நிகழ்வு. இது போன்ற தருணங்களிலே உடல் சோர்ந்து இருக்கும். எனவே அவர்கள் அயர்வாக ஓய்வாக இருப்பது அவசியம். அதைக் கருதிதான் அவர்கள் விலக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே தோஷம் காரணமாக விலக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கருதத் தேவையில்லை. என் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் தாராளமாக இயங்கட்டும். ஆனால் சித்தர்களைப் பொறுத்தவரை இது போன்ற தருணங்களில் பெண்கள் முழுக்க முழுக்க ஓய்வாக இருப்பது அவர்களின் பிற்கால உடல் நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும். அனைத்து இல்லக்கடமைகளில் இருந்தும் ஒதுங்கி இருப்பதே ஏற்புடையது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லையே என்று மனிதன் எண்ணலாம். மனிதன் ஏதாவது ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும். இது போன்ற தருணங்களில் ஒன்றல்ல இரண்டல்ல குறைந்தபட்சம் ஏழு நாட்கள் இல்லையென்றால் ஐந்து நாட்கள் அமைதியாக இருப்பதும் உடலை அதிகமாக வருத்தக்கூடிய எந்த செயலையும் செய்யாமல் இருப்பதும் பெண்களுக்கு ஏற்புடையது.

இது போன்ற தருணங்களில் ஆலயம் சென்றால் தோஷம் இறைவன் சினந்து (கோபித்து) விடுவார் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. இது போன்ற தருணங்களில் எங்கும் செல்லாமல் இருப்பது ஒரு பாதுகாப்பான நிலையைத் தரும். அது மட்டுமல்ல இது போன்ற தருணங்களிலே நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவதால் நோய்கள் தாக்கக்கூடிய நிலைமை ஏற்படும். சில எதிர்மறை ஆற்றல்கள் எதிர்மறை சக்திகள் பெண்களை பீடிக்க வாய்ப்பு இருப்பதால் அமைதியாக இல்லத்தில் ஒரு பகுதியில் அமர்ந்து மனதிற்குள் இறை நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கலாம். இந்த அளவில் இதை எடுத்துக் கொள்ளலாமே தவிர மனிதர்கள் எண்ணுவது போல் ஏதோ மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும். கடுமையான தோஷம் ஏதோ குற்றவாளி போல் நடத்த வேண்டும் என்றெல்லாம் நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அதைப்போல் இறப்பு குறித்து நாங்கள் முன்னர் கூறியதுதான். மன உலைச்சலை ஏற்படுத்தாத எந்த இறப்பும் பெரிய தோஷத்தை ஏற்படுத்தாது.

சுலோகம் -58

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #11

நீ துக்கப்படத் தகாத மனிதர்களின் பொருட்டு வருந்துகிறாய். மேலும் பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய். ஆனால் உயிர் போனவர்களுக்காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?

துக்கப்படத் தகாத மனிதர்கள் என்று கிருஷ்ணர் யாரை குறிப்பிடுகிறார்?

கௌரவர்களுடன் சேர்ந்து யுத்தம் செய்வதற்காக வந்திருப்பவர்கள் அனைவரும் அதர்மத்திற்கு துணை நிற்பவர்களே. அதர்மத்திற்கு துணை நிற்பவர்கள் அனைவரும் தர்மத்தால் அழிக்கப்படுவார்கள். இவர்கள் அழிந்தால் அவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இவர்களையே துக்கப்படத் தகாத மனிதர்கள் என்று கிருஷ்ணர் இங்கு குறிப்பிடுகிறார்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?

அர்ஜூனனை பண்டிதர்களைப் போன்று பேசுகிறாய் என்று கிருஷ்ணர் எதனால் கூறுகிறார்?

அர்ஜூனன் முதல் அத்தியாயத்திலும் 2 வது அத்தியாயத்திலும் குலநாசத்தினால் வரும் பெரிய பாவங்களை எடுத்துக் காட்டியும் மேலும் பல விதமான கருத்துக்களை கிருஷ்ணரிடம் சொல்லியும் யுத்தம் செய்வது சரியில்லை என்று பேசினான். அர்ஜூனன் பேசிய கருத்துக்கள் அனைத்தும் உயர்வான நீதி சாஸ்திரங்களைப் படித்து அவற்றை விளக்கும் பண்டிதர்களின் கருத்துக்களைப் போல இருந்ததால் அவனை பண்டிதர்கள் போல பேசுகிறாய் என்று கிருஷ்ணர் கூறினார்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி?

உயிர் போனவர்களுக்காகவும் உயிர் போகாதவர்களுக்காகவும் பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று கிருஷ்ணர் ஏன் கூறினார்?

பண்டிதர்களின் பார்வையில் ஆனந்த மயமான பொருள் ஒன்று தான். அது அழியாதது. அதைத் தவிர உலகில் அழியாத வேறு பொருள் எதுவும் இல்லை. அதுவே எல்லாவற்றிற்குள்ளும் இருக்கின்ற சோதி வடிவான ஆத்மா. அதற்கு எந்த விதத்திலும் அழிவு ஏற்படாது என்று நன்கு உணர்ந்தவர்கள் பண்டிதர்கள். மேலும் இந்த உலகிலுள்ள உயிர்கள் தங்களின் ஐந்து புலன்களின் மூலம் பார்ப்பவைகள் கேட்பவைகள் உண்பவைகள் முகர்பவைகள் உணர்பவைகள் ஆகிய அனைத்தும் தவிர்க்க முடியாத கனவு போன்ற மாயையால் ஆகியது என்பதையும் தெரிந்து கொண்டதால் அனைத்தும் இறைவன் செயலே என்று இருப்பார்கள். அதனால் இறந்தவர்களை பற்றி கவலைப்படவும் மாட்டார்கள். இருப்பவர்களை நினைத்து வருத்தப்படவும் மாட்டார்கள். இதனை வைத்து பண்டிதர்கள் வருந்துவதில்லை என்று கிருஷ்ணர் கூறினார்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அதர்மம் செய்பவர்களையும் அதற்கு துணை நிற்பவர்களையும் நினைத்து துக்கப்படத் தேவையில்லை. ஏனெனில் அதற்கான தகுதியை அவர்கள் இழந்து விட்டார்கள் என்றும் மேலும் அர்ஜூனன் பண்டிதர்களைப் போல் பேசினாலும் பண்டிதர்களைப் போல் முடிவு எடுக்கவில்லை. ஆகையால் நீ பண்டிதன் அல்ல ஆனால் பண்டிதன் போல் பேசுகிறாய் அவ்வளவு தான் என்று அர்ஜூனனுக்கு உணர்த்தி அவன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் கிருஷ்ணர் இந்த சுலோகத்தில் இருந்து பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.

அன்பு

ஒரு நாள் குருவும் அவரது சீடர்களும் ஒரு குளக்கரையில் அமர்திருந்தார்கள். அப்போது ஒரு சீடன் எழுந்து குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். குருவே சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன? எனக்கு விளக்கமாக சொல்லுங்கள் என்றான். குரு சீடனுக்கு சுற்றிலும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது. குரு அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர் பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான். குருவோ எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப்பை இருந்தது. அதில் மீன்களின் உணவான பொரி இருந்தது. அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன. குரு அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே மீன் என்றால் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். குரு அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார். பார்த்தாயா இருவரும் மீனின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது அவர்கள் மீனென்றால் உயிர் என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன் மீன்களிடம் இருக்கும் ருசி என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால் அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது ஆனால் இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில் அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது நிரந்தரமானது என்று சொல்லி முடித்தார்.

சுலோகம் -57

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #10

பரத குலத் தென்றலே திருதராஷ்டிரரே கிருஷ்ணன் இரண்டு படைகளுக்கு நடுவில் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் அர்ஜூனனிடம் சிரித்தார் போல் இந்த வார்த்தைகளை பேச ஆரம்பித்தார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி?

திருதராஷ்டிரரை பரதகுலத் தென்றல் என்று சஞ்சயன் ஏன் குறிப்பிட்டு சொல்கிறார்?

பரதகுலத்தில் தோன்றிய அரசர்கள் தர்மத்தின்படி உடனடியாக முடிவு எடுத்து அதனை செயல் படுத்தினார்கள். ஆனால் திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் பல முறை மறைமுகமாக எச்சரித்து விட்டான். இந்த யுத்தம் நடந்தால் யுத்தத்தில் கௌரவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். உங்கள் புதல்வர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று ஆனாலும் திருதராஷ்டிரர் தனது மகன் துரியோதனன் செய்யும் அதர்மமான செயலுக்கு துணை செல்வது போல் எந்த முடிவும் எடுக்காமல் தென்றல் போல் அமைதியாகவே இருக்கிறார். ஆகவே பரத குலத் தென்றலே என்ற வார்த்தையை சஞ்சயன் குறிப்பிட்டு சொல்கிறான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி?

மேற்கண்ட சுலோகங்களில் அர்ஜூனன் சொன்னவைகள் அனைத்தையும் கேட்ட கிருஷ்ணர் ஏன் சிரித்தபடியே பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்?

அர்ஜூனன் தர்மத்தை காக்க யுத்தம் செய்து தனது வீரத்தைக் காட்டுவதற்காக யுத்தகளத்திற்கு வந்துவிட்டு வருந்திக் கொண்டிருக்கிறான். என்னை சரணடைந்து பதில் சொல்லுமாறு கூறிவிட்டு நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே யுத்தம் செய்ய மாட்டேன் என்று முடிவு செய்துவிட்டானே என்று கிருஷ்ணர் தனது மனதிற்குள்ளாக எண்ணி அர்ஜூனனை பார்த்து சிரித்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 81

கேள்வி: உயிர்க்கொலை செய்வது பாவம் எனப்படுகிறது. படிப்பு நிமித்தமாக உயிர்க்கொலை செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன பரிகாரம் செய்வது?

எந்த நோக்கத்தில் செய்தாலும் பாவம்தான். மருத்துவ வித்தையை (கல்வியை) கற்றுக்கொள்வதற்காக மருத்துவ அறிவு வேண்டும் என்பதற்காக உயிர்களை பகுத்துப் பார்ப்பதை நாங்கள் ஏற்கவில்லை. போகன் போஓன்ற சித்தர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? எதையும் சோதிப்பதற்கு முன்னால் தன் உடலுக்கு அந்த மருந்தை செலுத்திப் பார்த்துதான் சோதனை செய்வான். ஒன்று ஞானத்தில் அறிந்துகொள்ள முயல வேண்டும் இது தக்கது இது தகாதது என்று. ஆனால் மனிதன் எப்பொழுதுமே லோகாயரீதியாக (உலக ரீதியாக) சிந்தித்தே பழகிவிட்டான். வேறு வகையில் கூறுகிறோம். ஒரு குழந்தையின் மீது ஒரு நாகம் ஏறிவிட்டது. சற்றே கவனக்குறைவாக இருந்தாலும் அந்தக் குழந்தையை நாகம் கொன்றுவிடும். இப்பொழுது அந்த நாகத்தை அப்புறப்படுத்துவதா? அல்லது கொல்வதா? நாகத்தைக் கொன்றால் பாவம் வந்துவிடுமே? என்றால் கட்டாயம் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும். ஆனாலும் நாகத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். அந்த நிலையில் நாகத்தைக் கொன்றால் கட்டாயம் பாவம்தான் வரும். ஆனால் அங்கே நோக்கம் எவ்வாறு இருக்கிறது? என்று இறைவனால் பார்க்கப்பட்டு அதற்கு ஏற்றாற்போல் பாவத்தின் தன்மை அவனுக்கு அளிக்கப்படுகிறது. எனவே வெறும் சுயநல நோக்கத்திற்காக செய்யப்படுகின்ற எல்லா உயிர்க் கொலைகளும் பாவம்தான். இதை எப்படிப் பார்த்தாலும் இந்தப் பாவம் ஒரு மனிதனை பற்றத்தான் செய்யும். கூடுமானவரை இதை தவிர்ப்பது நன்மையைத் தரக்கூடிய நிலையாகும்.

சுலோகம் -56

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #9

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் அரசனே எதிரிகளை வெல்பவனும் உறக்கத்தை வென்றவனுமாகிய அர்ஜூனன் இவ்வாறு (மேலுள்ள சுலோகங்கள்) கோவிந்தனிடம் சொல்லிவிட்டு நான் போர் புரிய மாட்டேன் என்று மௌனமாகி விட்டான்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்லும் போது கிருஷ்ணரை கோவிந்தன் என்று ஏன் அழைக்கிறார்?

கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன் பூமியை தாங்குபவன் என்று பொருளாகும். அர்ஜூனன் தனது மனக் குழப்பத்தில் இருந்து விடுபட கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு சரணடைந்து விட்டான். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் கிருஷ்ணர் குருவாக நின்று அர்ஜூனனுக்கு உபதேசம் செய்து தெளிவைக் கொடுத்து விடுவார். அர்ஜூனன் தனது மனக் குழப்பங்களில் இருந்து தெளிந்து விடுபட்டு யுத்தம் செய்ய ஆரம்பித்தால் அதன் பிறகு உனது மகன்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்வதற்காக கோவிந்தன் என்ற பெயரை சஞ்சயன் சொல்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 80

கேள்வி: நாரதர் கலகம்தான் செய்வார் என்பது பற்றி

இறைவன் அருளால் தவறான கருத்து அப்பா. இந்த நாரதர் மிகப்பெரிய மகான் ஞானி. ஞானத்தையெல்லாம் வேடிக்கையாகப் பல பேருக்கு உபதேசம் செய்து பல ஆத்மாக்களை கரையேற்றியிருக்கிறார். இன்று வால்மீகி மனிதர்களுக்கு கிடைத்திருக்கிறார் என்றால் அதற்கு பின்னால் நாரதரின் பங்குதான் அதிகமாக இருக்கிறது. முன் ஜென்ம பாவத்தால் தவறான தொழிலை செய்ய வேண்டி நிலைமை ஏற்பட அதே வால்மீகியின் முன் ஜென்ம புண்ணியத்தால் ஒரு மகான் மூலம் ராம நாமத்தை ஜபிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் அவன் புனிதனாவான் மாமேதையாவான் மாமனிதனாவான் மகானாவான் என்கிற விதி இருக்க அந்த விதிக்குள் ஒரு விதி இருந்தது. ராம நாமத்தை அவன் நேரடியாக உபதேசம் பெறக்கூடாது. பெற்றால் பலிக்காது என்று இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் நாரத மகரிஷி வால்மீகியை கள்வனாக இருக்கும் பொழுதே கண்டு நீ மரா மரம் மரா மரம் என்று ஓதிக் கொண்டே இரு. உனக்கு வேண்டியதெல்லாம் கிட்டும் என்று கூற அவனும் ஏதும் புரியாமல் மரா மரா மரா மரா என்று ஓத அதுவே பின்னால் ராம ராம ராம ராம என்று ஆகி மனித குலத்துக்கு ஒரு வால்மீகி கிட்டினான்.

வால்மீகி மிகப்பெரிய ஞானி. வால்மீகம் என்றால் புற்று என்று பொருள். விண்ணளவு புற்று வளரும்வரை தவம் செய்தவனடா. எனவே இதுபோன்ற பல ஞானியர்களை உருவாக்கிய பெருமை நாரதருக்கு உண்டு. முன்பே கூறியிருக்கிறோம். நாரதர் வழிபாடுகளெல்லாம் இங்கு வழக்கொழிந்து இருக்கிறது. ஹரிச்சந்திரனை மயானத்தோடு நிறுத்தி விட்டார்கள். உண்மை அங்குதான் இருக்கிறது என்பதை மனிதன் சொல்லாமல் சொல்கிறான். ஊருக்குள் உண்மை வரவேண்டாம் என்று மனிதன் என்றோ முடிவெடுத்து விட்டான். அதைப்போல் நாரதரையும் இப்படியே கூறி ஒதுக்க விட்டார்கள். அவ்வாறெல்லாம் எண்ணாமல் தாராளமாக நாரதரை மிகப்பெரிய மகானாக ஞானியாக சித்தனாக முனிவனாக வணங்கலாம். நல் உபதேசங்களும் ஞான கருத்துகளும் ஞான வழியில் வருகின்ற மனிதனுக்கு நல்ல வழிகாட்டுதலும் இன்றளவும் நாரதர் செய்து கொண்டிருக்கிறார்.

சுலோகம் -55

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #8

நான் உன்னை சரணடைந்தது ஏன் என்றால் இந்த உலகில் எதிரிகள் இல்லாத தனமும் தானியங்களும் நிறைந்த செழிப்பான அரசு மற்றும் தேவர்களின் தலைவனான இந்திரனின் பதவியைக் கூட நான் அடையலாம். ஆனால் எனது புலன்கள் அவற்றை அனுபவிக்க இயலாத படி வருத்துகின்ற நிலையை எது போக்கும் என்பதை நான் உணர இயலவில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கிருஷ்ணர் முன்பே சொன்னபடி யுத்தம் செய்து வெற்றி பெற்று தனமும் தானியங்களும் நிறைந்த செழிப்பான அரசையும் இந்திரனுக்கு நிகரான பதவியைப் பெற்றாலும் கூட இவை அனைத்தும் என்னுடைய வருத்தத்தை போக்காது. ஆகவே எனது புலன்களை அடக்கி வருத்தத்தை போக்க குருவாய் இருந்து நல்ல வழியை நீங்கள் கூற வேண்டும் அதனால் சரணடைகிறேன் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் சொல்கிறான்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

அர்ஜூனன் வருத்தம் என்று எதனை குறிப்பிடுகின்றான்?

உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று வெற்றி பெற்று அதனால் செழிப்பான ராஜ்யம் கிடைத்தாலும் உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று விட்டோமே என்றும் அவர்கள் தற்போது இல்லையே என்று நினைப்பதையே வருத்தம் அர்ஜூனன் இங்கு கூறிப்பிடுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 79

கேள்வி: இறைவன் ஒருவரே அவர் சிவபெருமான் தான். அப்படியென்றால் படைக்கும் கடவுள் யார்? காக்கும் கடவுள் யார்? அழிக்கும் கடவுள் யார்? இவர்கள் இருக்கிறார்களா அல்லது இல்லையா?

இறைவன் ஒருவரே சரியாக கூறினாய். சிவபெருமான்தான் என்று ஏன் கூறுகிறாய்? மகாவிஷ்ணுவை வணங்கக் கூடியவன் என்ன எண்ணுவான்? மகாவிஷ்ணுதான் என்று கூறுவான். பிரம்மனை வணங்கக் கூடியவன் பிரம்மன் என்று கூறுவான். பிறை மார்க்கத்தில் (இஸ்லாம்) பிறந்தவன் என்ன எண்ணுவான்? அவன் அல்லா என்று தான் கூறுவான். அன்பு சித்தன் (இயேசு) வழியில் பிறந்தவன் வழியில் வந்தவன் பரமபிதா என்றுதான் கூறுவான். நன்றாக புரிந்துகொள். ஒருவன் இல்லத்திலே மனைவிக்கு கணவன். தந்தைக்கு பிள்ளை தாத்தாவிற்கு பேரன் பேரனுக்கு தாத்தா சகோதரனுக்கு சகோதரன் சகோதரிக்கு சகோதரன். அலுவலகம் சென்றால் அதிகாரி இப்படி இருக்கின்ற ஒருவனே பல வடிவங்கள் எடுக்கிறான். இறை ஏனப்பா பல வடிவங்கள் எடுக்கக்கூடாது?

கேள்வி: தர்மர் மட்டும்தான் வைகுண்ட பிராப்தி அடைந்தார். கர்ணன் உட்பட மற்றவர்கள் அவர்களின் கர்மாவின்படியான நிலையை அடைந்தார்கள் என்று மூல நூலில் படித்தேன் அது குறித்து.

சூரியனிடமிருந்து பிரிந்த ஒரு சிறு சக்திதான் கர்ணன் என்ற ஒரு பாத்திரமாக பரிணமித்தது. அது தன்னுடைய கடமையை இறையாணையின்படி செய்துவிட்டு பிறகு இறையோடு ஒன்றாகக் கலந்து சூரிய பகவானோடு இணைக்கப்பட்டது என்பதே உண்மையான தேவ செய்தியாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 78

கேள்வி: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் துன்பங்களை தாங்கள் அறிவீர்கள். சொந்த வீடு அமைய எளிய வழியைக் காட்டுங்கள்

இறைவன் அருளைக் கொண்டு ஆத்மா குடியிருக்கும் தேக வீட்டை (உடல் வீட்டை) நன்றாக ஒரு மனிதன் பராமரிக்க வேண்டும். ஒரு பிறவியிலே பெற்ற புண்ணியத்தால் பல்வேறு இல்லங்களை பெறக்கூடிய வாய்ப்பு பல்வேறு மனிதர்களுக்கு ஏற்படுகிறது. அப்பொழுது அந்த ஆணவத்தால் பலரை இடர்படுத்திய பாவம்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்லதொரு சுகமான இல்லம் அமையாமல் ஒரு மனிதன் வேதனைப்பட நேரிடுகிறது. எனவே இது போன்ற கடுமையான மனைதோஷம் அடையப்பெற்ற ஜாதகர்கள் அவர்கள் விருப்பம்போல் இறை வழிபாட்டை செய்வதோடு குறிப்பாக செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வணங்கி நவகிரகங்களில் உள்ள செவ்வாய்க்கும் (பூமிக்காரகன்) முடிந்த பிராத்தனைகளை செய்து கொண்டே இருப்பதும் கூடுமானவரை மனைதோஷங்கள் குறைவதற்கு முடிந்தவரை தர்மங்களை குறிப்பாக சிறிய அளவு மனையையாவது ஒரு ஏழைக்கு தானமாக அளித்தால் கட்டாயம் இந்த தோஷம் விலகுமப்பா.

கேள்வி: அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டால் இறைவன் முக்தி அருள்வார் என்ற கருத்து சரியா?

இறைவனுக்கு தர மனிதன் யாரப்பா? இறைவனுக்கு தருகிறேன் என்ற எண்ணம் இருக்கும் வரையில் எப்படியப்பா முக்தி கிட்டும்? அப்படியானால் இறைவன் வேறு தான் வேறு என்ற எண்ணம் இன்னும் அங்கு இருக்கிறது என்று பொருள். அது இருக்கும் வரையில் அங்கு முக்தி கிட்டாது.