சுலோகம் -54

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #7

கோழைத்தனத்தினால் சீரழிந்த சுபாவம் கொண்டவனும் தர்ம விஷயத்தில் குழம்பிய மனதுடையவனுமான நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால் எந்த செயல் உறுதியாக மேன்மை பயக்கக்கூடுமோ அதனை எனக்குச் சொல்லுங்கள் நான் உங்களுடைய சீடன். உங்களை சரணடைந்த எனக்கு அறிவுரை கூறுங்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

யுத்தம் செய்யலாமா? வேண்டாமா? தர்மத்தின் படி எது சிறந்தது என்ற குழப்பத்தில் இருக்கிறேன் எனக்கு சரியானது எதுவோ அதனை எனக்கு சொல்லி புரியவையுங்கள். நான் சீடனாக தற்போது நிற்கிறேன் குருவாக வந்து எனக்கு உபதேசியுங்கள். நான் உங்களை சரணடைகிறேன் என்று கிருஷ்ணரை சரணடைந்தான் அர்ஜூனன்.

இந்த சுலோகத்தின் ஒரு கேள்வி?

கிருஷ்ணரும் அர்ஜூனனும் நண்பர்கள் இந்த இடத்தில் ஏன் கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு தன்னை சீடன் என்று சொல்கிறான் அர்ஜூனன்?

கிருஷ்ணர் நண்பன் என்ற ஸ்தானத்தில் தர்மம் எது என்று அறிவுரை மட்டும் சொல்லி புரியவைப்பார். ஆனால் குருவாக ஏற்றுக் கொண்டால் குருவானவர் தர்மம் எது என்று அறிவுறை மட்டும் சொல்லாமல் அதனை ஏதேனும் ஒரு வகையில் உணர்த்தி புரிய வைப்பார். தான் உணர்ந்தால் மட்டுமே தெளிவுடைய முடியும் என்ற எண்ணத்தில் கிருஷ்ணரை குருவாக ஏற்றுக் கொண்டு சீடனாக சரணடைந்தான் அர்ஜூனன்.

சுலோகம் -53

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #6

நாம் அவர்களை வெற்றி கொள்வோமா? அல்லது நம்மை அவர்கள் வென்று விடுவார்களா? இவற்றுள் எது மேன்மை என்பது விளங்கவில்லை. யாரைக் கொன்று நாம் வாழக்கூட விரும்பவில்லையோ அவர்களே (திருதராஷ்டிர குமாரர்கள்) நம் முன்னே நம்மை எதிர்த்து நிற்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

யுத்தம் செய்வது நல்லது அதுவே மேன்மை என்ற முடிவுக்கு வந்து யுத்தம் செய்தால் அதில் நமக்கு வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பமடைகிறான் அர்ஜூனன். வெற்றி பெற்றால் உறவினர்களையும் நண்பர்களையும் கொன்று அதனால் பாவத்தை சேர்க்க வேண்டும் மேலும் அவர்கள் இல்லாத இந்த வாழ்க்கையில் இன்பமும் விரும்பமும் இருக்காது. இது எப்படி மேன்மை ஆகும் என்று எண்ணுகிறான். அது போல் யுத்தத்தில் தோற்று கொல்லப்பட்டால் அதர்மம் வெற்றி பெற்று விடும் அது எப்படி மேன்மை ஆகும் என்ற குழப்பத்தில் அர்ஜூனன் இருக்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 77

கேள்வி: கிரிவலம் செல்லும் போது செருப்பை அணிந்து கிரிவலம் செல்லலாமா? அன்றாடம் வீட்டில் காலையில் பூஜை செய்யும் போது வாயை மட்டும் கொப்பளித்து விட்டுத்தான் பூஜையில் அமரவேண்டுமா?

இறைவன் அருளால் மலை வலமாக இருக்கட்டும் ஆலயத்தின் ராஜகோபுரம் அல்லது ஆலயத்தின் எல்லையாக இருக்கட்டும் கூறப்போனால் இன்னும் பல இடங்களில் ஆலய கோபுரத்தை சுற்றியும் பாதரட்சைகளை (செருப்பு) மனிதர்கள் விடுகிறார்கள். இது மகாபெரிய தோஷத்தை ஏற்படுத்துவதாகும். இன்னும் கூறப்போனால் ஆலயம் செல்வதற்கு முன்பாகவே உடல் தூய்மை செய்துவிட்டு நீராடிவிட்டு மாற்று உடை அணிந்து செல்வதே மிகவும் சிறப்பு. ஆண்கள் மேலாடை இல்லாமல் ஆலயம் சென்று வழிபடுவது சிறப்பு. கட்டாயம் கிரிவலம் போன்ற இறைவழிபாட்டிலே பாதரட்சை (செருப்பு) அணியாமல் செல்வதே சிறப்பாகும்.
பாதரட்சை அணியாமல் செல்ல முடியவில்லை அதனால் சில துன்பங்கள் ஏற்படுகிறது என்றால் ஒன்று அதை சகித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செல்லாமல் இருப்பதே சிறப்பு. அடுத்ததாக உடல் சுத்தி என்பது மனிதனுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதற்காக ஏற்படுத்தப்பட்டது. உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக் கொண்டு இறைவனை வணங்கினால் நன்மை உண்டு. தவிர்க்க முடியாத சூழலிலே இன்னவள் கூறியது போல் மேலெழுந்தவாரியாக சுத்தம் செய்து கொண்டு தாராளமாக இறைவனை வணங்கலாம். ஆனால் இதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்யாமல் இறை வழிபாடு செய்வதை நாங்கள் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

கேள்வி: ஜாதகத்தில் ராகு கேது போல் மாந்தி என்ற ஒன்று உள்ளதா?

மாந்தி இருக்கிறது. இன்னும் சில காலம் கழித்து இன்னும் பல கிரகங்கள் சேர்க்கப் போகிறார்கள். ஆனால் எத்தனை சேர்த்தாலும் அது ஒன்பதின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். சனியின் பலன்கள் அத்தனையும் மாந்திக்கும் பொருந்தும் என்பதால் மாந்தியை சேர்த்து பார்த்தாலும் தவறில்லை. அதை சேர்க்காவிட்டாலும் தவறில்லை.

சுலோகம் -52

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #5

மேன்மை பொருந்திய பெரியவர்களை கொல்வதை விட இவ்வுலகில் பிட்சை எடுப்பதால் கிடைக்கும் அன்னத்தை உண்பது சிறந்தது அல்லவா? இவர்களை கொன்ற பின்னர் அவர்களுடைய உடமைகள் அனைத்தும் அவர்களின் ரத்தத்தால் நனைந்திருக்கும். அதனை நாம் எவ்வாறு அவர்கள் இருந்த இடத்திலேயே நின்று அனுபவிக்க இயலும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சத்திரியர்கள் பிட்சை எடுத்து சாப்பிட்டு உடலை வளர்க்கக் கூடாது என்பது நியதி இவ்வாறு செய்வது இகழ்ச்சியான செயல். மேன்மை பொருந்திய பெரியவர்களை எதிர்த்து யுத்தம் செய்து அவர்களை கொல்வதை விட சத்திரிய தர்மத்தை விட்டு விட்டு பிட்சை எடுத்து உண்பது மேல் என்றும் யுத்தம் செய்து அவர்களை கொன்ற பிறகு அவர்கள் இருக்கும் இந்த மண்ணில் அவர்களின் ரத்தக் கறை படிந்து இருக்கும். இந்த இடத்தில் மகிழ்ச்சியாக எப்படி இருக்க முடியும் என்று அர்ஜூனன் தன் கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 76

கேள்வி: புலனடக்கம் குறித்து விளக்குகள் ஐயனே தாம்பதிய உறவை விட்டதால்தான் ஞானமார்க்கம் சித்திக்குமா?

அப்படியெல்லாம் நாங்கள் கூறவில்லை. இறைவன் அருளாலே ஒன்றை நன்றாக புரிந்து கொள். எது குற்றமாகிறது? எது தவறாகிறது? எது பாவமாகிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறர் மீது ஆதிக்கமும் பிறர் மனதையும் பிறர் உடலையும் பிறர் உடைமைகளையும் பாதிக்கும் வண்ணம் ஒரு மனிதன் நடந்து கொள்ளும் போது பாவத்திற்குண்டான ஒரு சூழலுக்கு தன்னை ஆட்படுத்திக் கொள்கிறான். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லறம் நடத்துவது என்பது நேர்மையான முறையிலே ஒருவன் நடத்துகிற இல்லறம் கட்டாயம் இறைவனுக்கு எதிரானது அல்ல. ஆனால் தாரமாக இருந்தாலும் கூட உடலும் உள்ளமும் சோர்ந்திருக்கும் நிலையிலே அவளைக் கட்டாயப்படுத்தி நீ கூறிய அந்த நிலைக்கு ஆட்படுத்துவது ஒருவிதமான பாவத்திற்கு கணவனை ஆட்படுத்தும் என்பதை மறந்துவிடக் கூடாது. எங்கு கட்டாயம் இல்லாத நிலை இருக்கிறதோ எங்கு இயல்பாக அனைவரும் ஒத்துப் போகிறார்களோ அந்த உணர்வுகள் எதுவும் இறைவனுக்கு எதிரானது அல்ல.

சுலோகம் -51

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #4

அர்ஜூனன் கூறுகிறான். பகைவர்களை அழிப்பவனே மதுசூதனா நான் போர்க்களத்தில் எவ்வாறு அம்புகளினால் பாட்டனார் பீஷ்மரையும் ஆச்சாரியார் துரோணரையும் எதிர்த்துப் போரிடுவேன்? அவர்கள் இருவரும் பூஜிக்கத் தக்கவர்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பூஜிக்கத் தக்க பெரியவர்களை சொல்லால் கூட துச்சமாக நினைத்து பேசுவது பாவம் என்று சொல்லப்படுகின்ற போது அவர்கள் முன் எதிர்த்து நின்று அவர்களின் மீது கூரான அம்புகளை ஏவி எப்படி யுத்தம் புரிவேன்? இந்தப் பெரியவர்களை எதிர்த்து யுத்தம் செய் என்று எப்படிச் சொல்கிறாய்? இந்த பாவத்தை எப்படி நான் செய்வேன்? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 75

கேள்வி: சிறுநீரகங்களை இழக்காமல் அவற்றை செயல்பட செய்ய சித்த மருத்துவத்தில் வழி உள்ளதா?

அப்படியொரு மாற்று சிகிச்சை பெறவேண்டும் என்ற விதி இருக்கும் பொழுது அவன் எத்தனை பிராத்தனை செய்தாலும் அந்த சிகிச்சையிலிருந்து தப்பிப்பது கடினம். இருந்தாலும் கூட ஆதி நிலையிலே இருப்பவர்கள் முறையான தெய்வ வழிபாட்டையும் தர்மத்தையும் செய்வதோடு சந்திரனுக்கு உகந்த ஸ்தலங்களுக்கு சென்று முடிந்த வழிபாடுகள் செய்வது கூடுமானவரை மாற்று சிகிச்சையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இது போன்ற குறைகள் வருவதற்கு எத்தனையோ பாவங்கள் காரணமாக இருந்தாலும் முறையற்ற இடத்தையெல்லாம் மனிதன் ஆக்கிரமிப்பு செய்து அசுத்தப்படுத்துவதால்தான் இது போன்ற நோய்கள் மனிதனைப் பற்றுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இடத்தை அதற்கென்று ஒதுக்கிவிட்டால் அந்த இடத்தை அதற்கென்றுதான் பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யாமலும் மிக அநாகரீகமாக நடந்து கொள்வதும் குறிப்பாக புனித தீர்த்தம் ஆலயம் புண்ணிய நதிகளையெல்லாம் அசுத்தப்படுத்துகிறான். எல்லா வகையான தொழிற்சாலை கழிவுகளையும் புண்ணிய நதியில் கலக்கிறான். இப்படி பூமியை அசுத்தப்படுத்த அசுத்தப்படுத்த மனிதர்களின் உடலில் அசுத்தங்களை சுத்தப்படுத்தும் உறுப்புகள் செயலிழக்கத் துவங்கும். இதையும் சரி செய்து கொண்டால் மனிதனுக்கு இதுபோன்ற பிணிகள் வராமல் இருக்கும்.

சுலோகம் -50

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #3

பார்த்தா பேடித்தனத்தை நீ அடைந்து விடாதே அந்தத் தன்மை உனக்கு பொருத்தம் இல்லை எதிரிகளை பயத்தால் வாட்டுபவனே மிகவும் தாழ்மை விளைவிக்கக் கூடிய இந்த இதயத் தளர்வை நீக்கி எழுந்து நிற்பாயாக.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி: கிருஷ்ணர் அர்ஜூனனை ஏன் பார்த்தா என்று அழைக்கிறார்?

அர்ஜூனனின் தாய் குந்தியின் இயற்பெயர் பிருதை (சிறந்த அழகி என பொருள்) இவளது பெயரை வைத்து பிருதையின் மகனே என்ற பொருளுக்கு பார்த்தனே என்று அர்ஜூனனை அழைப்பார்கள். போர் ஆரம்பிப்பதற்கு முன்பாக குந்தியை கிருஷ்ணர் சந்திக்க சென்ற போது அவரிடம் அர்ஜூனனுக்கு யுத்தத்திற்கான வீரமிக்க வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தாள். அதில் வீரத்தாயின் வீரமகன் என்று ஆரம்பித்து அர்ஜூனனுக்கு வாழ்த்து சொல்லி யுத்ததிற்க்கு அர்ஜூனனை உற்சாகம் ஊட்டியிருந்தாள். அதனை இங்கே சுட்டிக் காட்டி வீரத்தாயின் வீரமகனை என்று அர்ஜூனனுக்கு மன தைரியத்தை கொடுப்பதற்காக கிருஷ்ணர் பார்த்தா என்று குறிப்பிட்டு அழைத்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 74

கேள்வி: தலைமுடி காணிக்கை குறித்து விளக்குங்கள்?

இறைவன் அருளால் பலமுறை இது குறித்து கூறியிருக்கிறோம். மேலும் கூறுகிறோமப்பா. ஒரு மனிதன் இறைவனை நோக்கி பக்தி செலுத்தும் பொழுது எடுத்த எடுப்பிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால் பக்தியை செலுத்தலாம். இல்லையென்றால் ஒரு குழந்தைத் தனமான ஒரு பக்திதான் இறைவனிடம் தோன்றும். இறைவா என்னுடைய பிரச்சனையைத் தீர்த்துவிடு. என் முடியைக் காணிக்கையாகத் தருகிறேன். இறைவா என் குழந்தைக்கு உன் சந்நிதியில் வந்து காதினை நகையலங்காரம் செய்து பார்க்கிறேன். இறைவா உன்னுடைய சந்நிதிக்கு இதை செய்கிறேன் என்பதெல்லாம் மிக மிக ஆதி நிலை பக்தியாகும். அதற்காக இதனை ஏளனம் செய்யத் தேவையில்லை.

தன்னுடைய தலை சிகையை முடி காணிக்கையாக தந்தால்தான் இறைவன் அருள்வார் என்ற மனப்பான்மை இருக்கும்வரை அந்த பக்தி நிலை சரி. ஆனால் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தால் இறைவன் அருள்வார் மகிழ்வார். நாம் நேர்மையாக வாழ்ந்தாலே இறைவன் அருள்வார். நம் மீது கருணை செய்வார் என்ற சிந்தனை வளர்ந்த பிறகு மீண்டும் இந்த பக்தி நிலைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் வேண்டிக் கொள்ளும் பொழுது எந்த மனநிலையில் இருந்து வேண்டிக் கொள்கிறானோ அந்த வேண்டுதலை கூடுமானவரை அவன் மனநிலைக்கு ஏற்ப சரியாக கடமையாற்றுவது மிக சரியான செயலாகும். எனவே பக்தியில் எல்லா நிலைகளும் உயர்வுதான். ஒரு நிலை உயர்வு ஒரு நிலை தாழ்வு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உயரே செல்ல செல்ல தாழ்ந்த நிலையில் இருக்கின்றவனை பார்த்து உயர்ந்த நிலையில் இருப்பவன் ஏளனம் செய்ய வேண்டாம்.

சுலோகம் -49

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #2

அர்ஜூனா இத்தகைய தகாத நேரத்தில் இந்த வருத்தம் உன்னை எந்த காரணத்தினால் பீடித்தது? உனது கருத்து சான்றோர்களால் கடைபிடிக்கப்படாதது. சொர்கத்தை அளிக்காது மேலும் பெருமைக்கு இழுக்காகி விடும்.

இந்த சுலோகத்தில் சொல்லப்படும் கருத்து என்ன?

முதல் அத்தியாயத்தில் அர்ஜூனன் சொன்னவற்றை கேட்ட கிருஷ்ணர் இப்போது பேச ஆரம்பிக்கிறார். யுத்தம் ஆரம்பிக்க இருக்கும் இறுதி நேரத்தில் அர்ஜூனன் யுத்தம் செய்ய மறுப்பதால் இந்த நேரத்தை தகாத நேரம் என்று கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். பெரிய மகாரதர்களையும் வெற்றி பெறக்கூடிய அர்ஜூனனுக்கு யுத்தத்தில் இருந்து பின் வாங்கும் இந்த கோழைத்தனம் எப்படி வந்தது என்று கேட்கிறார். இந்த கோழைத்தனத்தினால் உனது கடமையை செய்ய மறுக்கிறாய். கடமையை செய்ய மறுப்பவனுக்கு சொர்க்கம் இல்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்கிறார். மேலும் அர்ஜூனன் யுத்தத்தில் யாராலும் வெற்றி பெற முடியாதவன் என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியவனாக இருக்கிறான். இப்போது யுத்தத்தில் இருந்து பின் வாங்கினால் யுத்தத்திற்கு அர்ஜூனன் பயப்படுகிறான் என்ற அவச்சொல் ஏற்பட்டு அவனது பெருமைகள் அனைத்துப் அழிந்து போகும். யுத்தத்தில் இருந்து பின் வாங்க அர்ஜூனன் சொல்லும் காரணங்கள் அனைத்தும் இதற்கு முன்பாக இருந்த முன்னோர்கள் யாரும் கடைபிடிக்காதவைகள் ஆகும் என்று கிருஷ்ணர் அர்ஜூனனிடம் சொல்கிறார்.

இந்த சுலோகத்தில் சான்றோர் என்ற தமிழ் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ஆரியன் என்ற சொல் வருகிறது. அதற்கு பொருள் என்னவென்றால் அறவழியில் நிற்பவனும் ஆசைகளுக்கு அடிபணியாதவனும் பண்பட்ட மனமும் இறைவனை நோக்கிச் செல்லும் சிறந்த வாழ்க்கை முறையை கொண்டவன் எவனோ அவனே ஆரியன் என்றும் தமிழில் சான்றோன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.