ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 73

கேள்வி: பாவங்கள் ஒரு மனிதனை ஆன்மீக வழியில் செல்லவிடாது எனும் பொழுது அது எப்படி மனித குற்றமாகும்?

இறைவன் அருளால் பாவத்தை குறைத்துக் கொள்ள மனிதன் என்றாவது ஒரு சிறு முயற்சி எடுத்திருக்கிறானா? என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். கட்டாயம் பாவங்கள் இருக்கும் வரை இறை சிந்தனையோ பெருந்தன்மையோ தர்ம சிந்தனையோ வராது என்பது உண்மை. அதனால்தான் முதலில் ஏதாவது ஒரு ஆலயம் செல்லப் பழக வேண்டும். பிறகு அன்றாடம் சில நாழிகையாவது இறை நாமத்தை மனம் சோர்ந்தாலும் தளர்ந்தாலும் பாதகமில்லை என்று உருவேற்ற வேண்டும். எல்லாம் கடினம் என்று எண்ணினால் தனம் இருப்பவர்கள் முதலில் இந்த தனம் நமக்கு உரியதல்ல என்றோ நாம் செய்த (நல்) வினைகளுக்காக இறைவன் தந்திருக்கிறார். நமக்கும் நம் குடும்பத்திற்கும் போக எஞ்சியுள்ள தனம் அனைத்தையும் பிறருக்காக தந்துவிட்டால் நல்லது என்ற சிந்தனையை அசைபோட வேண்டும். அதனால்தான் மனம் என்பது பாவத்தை நோக்கி செல்லாமல் இருக்கும். பாவங்கள் இருக்கிறது. எவ்வாறு தர்மம் செய்வது? அந்த பாவங்கள்தானே மனிதனை மேல் நோக்கி செல்லவிடாமல் தடை போடுகிறது என்ற சிந்தனை வரும் பொழுதே அந்த பாவங்களை நீக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்துவிட வேண்டும். உடல் ஊனம் நான் எப்படி வாழ்வேன்? என்பதை விட இந்த உடல் ஊனத்தோடு என்ன முடியுமோ அதை செய்வேன் என்பதுதான் மனஉறுதி. எனவே யாம் மீண்டும் மீண்டும் கூறுவது என்னவென்றால் வறுமை தண்டனையல்ல. வித்தை கற்காமை தண்டனையல்ல. பிணி தண்டனையல்ல. அறியாமை ஒன்று தான் தண்டனை.
விதி மனிதனிடம் விளையாடுவது அறியாமையை வைத்துத்தான்.

அறியாமை என்றால் என்ன?

ஆசை பற்று தனக்கு வேண்டும் தன் குடும்பத்திற்கு வேண்டும் தன் வாரிசுக்கு வேண்டும் தனக்குப் பின்னால் தன் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவே எப்படியாவது முடிந்தவரை தனத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறானே? இதை முதலில் மனதை விட்டு அகற்றினாலே பாவங்கள் அகன்றுவிடும். எனவே தான் மீண்டும் மீண்டும் இந்த ஜீவ அருள் ஓலையிலே பரம்பொருள் கூறுகின்ற தர்ம விளக்கத்தைக் கூறிக்கொண்டே இருக்கிறோம். சோதித்துக்கூட பார்க்கலாம். பாவம் இருக்கிறது என்னால் ஆலயம் செல்ல முடியவில்லை பிராத்தனை செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது. அடுத்தடுத்து நஷ்டம் வருகிறது. போராட்டமாக இருக்கிறது. போர்க்களமாக இருக்கிறது. ஒன்று போனால் ஒன்று கஷ்டம் வருகிறது. இதில் எப்படி நான் தர்மத்தை செய்ய முடியும்?

முதலில் நான் பட்ட கடனையெல்லாம் அடைக்க வேண்டும். நான் படும் கஷ்டங்களிலிருந்து வெளியே வரவேண்டும். நான் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தால் தானே எதனையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அந்த நிம்மதியும் சந்தோஷமும் கிடைப்பதற்காக முதலில் எப்படி அன்றாடம் உலகியல் கடமைகளை மனிதன் ஆற்றுகிறானோ அதைப்போல அவனவனால் முடிந்த உதவியை அன்னத்தை ஆடையை தனத்தை மருத்துவ உதவியை தேடி தேடி தேடி தேடி தேடி தேடி தேடிச் சென்று தர தர பாவங்கள் குறைந்து கொண்டே வரும். பாவங்கள் குறைந்தாலே மனம் அறியாமையிலிருந்து விடுபட்டுவிடும். எனவேதான் கடுமையான பூஜைகளையும் தவங்களையும் நாங்கள் கூறாமல் இந்த எளிய வழிமுறைகளைக் கூறுகிறோம். வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 72

கேள்வி: சக்தியும் சிவனும் வெவ்வேறா? அல்லது ஒன்றா?

தங்கமும் நகையும் வெவ்வேறா? (பதில் – இல்லை ஒன்றுதான்). அதைப்போல் தானப்பா.

கேள்வி: அவ்வாறிருக்க சக்திக்கும் சிவனுக்கும் ஏன் தனித்தனி வழிபாடுகள்?

முன்புதான் கூறினோமேயப்பா. மனிதனுக்கு அனைத்தும் விதவிதமாக இருக்க வேண்டும். உண்ணுகின்ற உணவாக இருந்தாலும் உடுத்துகின்ற உடையாக இருந்தாலும் செல்லுகின்ற மார்க்கமாக இருந்தாலும் ஒரே விதமாக இருந்தால் அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனிடம் இருக்கின்ற தன்முனைப்புதான் இத்தனை விதமாக இறைவனை பிரித்து வைத்திருக்க உதவியிருக்கிறது அல்லது அதுதான் சரி என்று அவனுக்கு பட்டிருக்கிறது. எதுவுமே இல்லை ஒரு விலங்கைப் பார்த்து இதுதான் இறைவன் என்றால் அதையும் மனிதன் ஏற்றுக் கொள்வான். அதன் பின்னாலும் சிலர் செல்வார்கள். எனவே நீ சக்திக்குள்ளேயே சிவத்தைக் காணலாம். சிவத்திற்குள்ளேயே சக்தியைக் காணலாம். அதையெல்லாம் உணர்ந்து தானே அந்த அர்த்தநாரி வடிவத்தையே அன்று இறைவன் எடுத்திருக்கிறார். யாருக்கு எந்த வடிவில் இறைவனை வணங்க பிடிக்கிறதோ அந்த வடிவில் வணங்கிவிட்டுப் போகட்டும் என்றுதான் இறைவனும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கேள்வி: பூனை வழிபட்ட புனுகீஸ்வரர் பற்றி

சர்ம பிணிகளை நீக்கிக் கொள்ள முடியாமல் கர்மவினையால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

கேள்வி: நண்டு வழிபட்ட ஈஸ்வரர் பற்றி:

இந்த நண்டு வடிவில் மட்டுமல்ல பல்வேறு மகான்களும் ஞானிகளும் இன்றளவும் வழிபடக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. பிரம்மஹத்தி தோஷங்களில் நீக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.

குறிப்பு: பூனை மற்றும் நண்டு வழிபட்ட கோவில்களை பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

சுலோகம் -48

சாங்கிய யோகம் முன்னுரை

சாங்கிய என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கணிதம் என்று பொருள். கணிதம் என்றால் ஏதோ கணக்கு வாய்ப்பாடு கூட்டல் கழித்தல் என்று பொருள் அல்ல. தர்க சாஸ்திரத்தில் கேள்வி கேட்டு விவாதம் செய்து அதற்கு விளக்கம் சொல்லி புரிய வைப்பது போல அறிவை அகலப்படுத்துவதற்கு கணிதம் செய்தல் என்று பொருளாகும். விஷாத யோகத்தில் அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்ட கேள்விக்கு பதிலாக ஆத்ம தத்துவத்தையும் சுய தர்மத்தையும் கர்ம யோகத்தின் சொரூபத்தையும் இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார். மற்ற அத்தியாயங்களை விட இந்த அத்தியாயத்தில் ஆத்ம தத்துவ உபதேசங்கள் விளக்கமாக கூறப்பட்டுள்ளதால் இந்த அத்தியாயம் சாங்கிய யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் 72 சுலோகங்கள் உள்ளது.

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் #1

சஞ்சயன் கூறினான். இப்படி மனம் முழுவதும் இரக்கம் நிறைந்தவனாக கண்களில் நீர் பெருகிக் கலங்கிய கண்களும் நிலைகுலைந்த உள்ளமும் உடையவனாக அர்ஜூனன் நின்றான். அவனைப் பார்த்து மதுசூதனன் பேசத் துவங்கினார்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: சஞ்சயன் கிருஷ்ணரை ஏன் மதுசூதனன் என்று குறிப்பிட்டு கூறுகிறார்?

மது எனும் அரக்கனை கிருஷ்ணர் அழித்ததால் அவர் மதுசூதனன் என்று பெயர் பெற்றார். மது என்னும் அரக்கனை கொன்றது போல உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மேல் உள்ள இரக்கத்தினாலும் கருணையினாலும் யுத்தம் செய்ய மறுக்கும் அர்ஜூனனின் கவலைகளையும் அவனது குழப்பங்களையும் கொன்று அர்ஜூனனின் மனதை தெளிவிக்கப்போகிறார் கிருஷ்ணர். அதன்பின் உனது மகன்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று திருதராஷ்டிரருக்கு மறைமுகமாக சொல்வதற்காக மதுசூதனன் என்ற பெயரை சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 71

கேள்வி: ஸ்ரீராமருக்கு எவ்வாறு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டது?

அயனம் என்றால் பாதை என்பதை புரிந்துகொள். ராமாயணம் எனும் பொழுது ராமரின் வாழ்வின் பாதை. வாழ்வு நிலை என்று எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும். இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? மேலிடத்து நாடகத்தை மனிதர்கள்தாம் தாம் அறிந்த வழியில் சிந்தித்தால் குழப்பம்தான் மிஞ்சும். எனவே இந்த நிலையில் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான்.

நல்ல நோக்கத்திலே கூட பிறரை வதம் செய்தால் தோஷம் வரும் என்றால் சுயநல நோக்கத்திலே பிறரை வதம் செய்தால் அந்த தோஷமும் பாவமும் எத்தனை பிறவி தொடரும். எனவே நல்ல நோக்கத்திற்காகவே பிற உயிரை எடுக்கக்கூடாது எனும் பொழுது சுயநல நோக்கிலே பிற உயிரை எடுத்தால் அதனால் வரக்கூடிய பாவங்களும் அதன் விளைவுகளும் எத்தனை கடுமையாக இருக்கும்? என்பதை புரிந்து கொண்டு சாத்வீகமாக வாழ வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை பொருளாகும்.

கேள்வி: தாய்க்கும் குருவிற்கும் என்ன வித்தியாசம்?

தாய் பலருக்கு குருவாக இருக்கலாம். ஏனென்றால் மராட்டிய மண்ணிலே பிறந்து வீரம் செறிய போரிட்டானே அதை வீரம் என்று மனிதர்கள் கூறலாம். அதற்குள் நாங்கள் போக விரும்பவில்லை. அந்த மன்னனுக்கு தாய்தான் குரு போல இருந்து போதித்திருக்கிறாள். இன்னும் பலருக்கு தாய் குருவாக இருந்திருக்கிறாள். ஆனால் குருவோ எல்லோருக்கும் தாயாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கிறார்.

கேள்வி: நாக தோஷத்திற்கு என்ன மந்திரங்கள் சொல்வது?

நவக்கிரக வழிபாட்டையும் செய்யலாம். அதோடு ஒவ்வொரு நவக்கிரத்திற்கு உண்டான அதிதெய்வ வழிபாட்டையும் சேர்த்து செய்வது சிறப்பு.

புனுகீஸ்வரர்

மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியில் புனுகீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி முற்காலத்தில் தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. தற்போது கூறைநாடு என்று அழைக்கப்படுகிறது. சிவத்தலங்கள் மொத்தம் 1008 என்று கூறப்படுகிறது. இவற்றுள் 276 தலங்களுக்கு மட்டுமே தேவாரப் பாடல்கள் கிடைக்கின்றன. ஏனைய தலங்களைப் பற்றிய பாடல்கள் அழிந்து போயின. புனுகீஸ்வரர் திருக்கோயில் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் சிறப்புக்களை இக்கோவில் பெற்றுள்ளது. மூலவர் புனுகீசுவரர். அம்பாள் சாந்தநாயகி மேல் இரு கரங்களில் மாலையையும் தாமரை மலரையும் தாங்கி கீழ் இரண்டு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தலவிருட்சம் பாரிஜாதம் என்னும் பவழமல்லிகை வடக்கு உள்பிரகாரத்தில் அமைந்துள்ளது.

திருக்கோயில் இரு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் ஐந்து நிலைக் கோபுரத்துடன் அமைந்துள்ளது. நேராக பலி பீடமும் உயந்த கொடிமரமும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் கன்னி மூலையில் விநாயகப்பெருமான் உள்ளார். அருகில் சகஸ்ரலிங்கம் சந்நிதி உள்ளது. சனிபகவான் திருநள்ளாரில் இருப்பதைப் போன்று கிழக்கு நோக்கி தனி விமானத்துடன் கூடிய கருவறையில் அமைந்துள்ளார். தென்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது. உள்பிரகாரத்தின் கன்னிமூலையில் வரதவிநாயகர் சந்நிதியும் அருகில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள சந்நிதியும் அமைந்துள்ளன. வடமேற்குப்பகுதியில் ஆறுமுகப்பெருமான் லட்சுமி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன. தெற்கு நோக்கி நடராஜரின் சந்நிதி அமைந்துள்ளது. கருவறையின் வடக்கு மாடங்களில் துர்க்கை பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. அதனருகில் சண்டேசர் சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவர் சூரியன் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கீழ்ப்பகுதியில் நவக்கிரகங்களுக்கான சந்நிதி உள்ளது. கருவறையின் கிழக்கு மாடத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார். உள்பிரகாரத்தின் தென்கிழக்கில் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இங்கு நால்வருக்கும் சேக்கிழாருக்கும் திருவுருவங்கள் உள்ளன. மாடத்தில் ஜுரஹரேசுரர் பிள்ளையார் உருவங்கள் உள்ளன. புதிதாகச் செய்யப்பட்ட அறுபத்து மூவரின் செப்புச் சிலைகள் உள்ளன. அதனை அடுத்து இத்தலத்தில் அவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும் அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய நேசநாயனாரின் சந்நிதி உள்ளது. சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்த தொண்டினை செய்ததினால் இறைவனால் இவருக்கு முக்தி கொடுக்கப்பட்டது என்று பெரியபுராணம் கூறுகிறது.

முற்காலத்தில் இந்த இடம் வனப்பகுதியாக தனியூர் என்று அழைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே அமைந்திருந்த இந்த வனத்தில் எண்ணற்ற புனுகுப் பூனைகள் வாழ்ந்து வந்தன. அதன் காரணமாக அந்த வனத்தின் காற்றில் புனுகு மணம் கமழ்ந்தது. அங்கு வசித்த புனுகுப்பூனைகளில் ஒன்றிற்கு முற்பிறவி வாசனையின் காரணமாக இறை ஞானம் பெற்று தன் முற்பிறவி ஞாபகம் வந்தது. அந்த புனுகுப்பூனை முற்பிறவியில் இந்திரனாக இருந்தது. அப்போது நடந்த தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால் புனுகுப்பூனையாக மாறும்படி சிவனாரால் சபிக்கப்பட்டான் இந்திரன். பின்னர் அவன் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் சாபவிமோசனம் வேண்டினான். சிவபெருமான் விமோசனமாக இத்தலத்திற்கு சென்று வழிபடுமாறு கூறினார். புனுகுப்பூனையாக இங்கு பிறந்த இந்திரன் சிவன் அருளியபடி அந்த வனத்தில் உள்ள பவளமல்லி விருட்சத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபட்டது. தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து வலம் வந்து வழிபட்டது. நெடுங்காலம் தொடர்ந்தது இந்த வழிபாடு புனுகுப்பூனையின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அதற்குத் தேவ வடிவம் கொடுத்து ஆட்கொண்டார். இதையறிந்து இறைவனின் கருணைத்திறன் கண்டு வியந்த பிரம்மா திருமால் உள்ளிட்ட தேவர்கள் அந்த இடத்துக்கு வந்து பவளமல்லி விருட்சத்தின் நிழலில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவனாரைப் போற்றி வழிபட்டனர். பிற்காலத்தில் இறைவனின் அற்புத லீலையை அறிந்த சோழ மன்னன் வனத்தில் இறைவனுக்கு அழகியதோர் ஆலயம் எழுப்பி இறைவனுக்கு புனுகீசர் என்று பெயரிட்டு வணங்கினான். நித்திய பூஜைகளும் விழாக்களும் நடைபெறும்படிச் செய்தான். இதுகுறித்து மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய தனியூர்ப் புராணம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

சுலோகம் -46 # 47

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #46

இந்தப் போரில் ஆயுதம் ஏந்தாமல் எதிர்த்துப் போரிடாமல் இருக்கின்ற என்னைக் கையில் ஆயுதம் தாங்கிய திருதராஷ்டிர குமாரர்கள் கொன்றாலும் அதுவும் எனக்கு நன்மை பயப்பதாகவே ஆகிவிடும்.

இந்த சுலோகத்தில் அர்ஜூனன் சொல்ல வந்த கருத்து என்ன?

இந்த யுத்தத்தில் ஆயுதம் ஏந்தி நான் போரிடப் போவதில்லை. அப்போது கௌரவர்களின் தரப்பில் யார் என்னை கொன்றாலும் அதனை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்வேன். அப்படி நான் கொல்லப்பட்டால் மேலே சொல்லப்பட்ட சில சுலோகங்களில் உள்ள பாவங்கள் நடைபெறுவதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன். ஆகையால் என்னை அவர்கள் கொல்வது எனக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #47

சஞ்சயன் சொல்கிறான். இப்படியாக சொல்லிய அர்ஜூனன் போர்க்களத்தில் சோகத்தினால் கலங்கிய மனதுடன் தன்னுடைய அம்புகளையும் ஆயுதங்களையும் கீழே வைத்துவிட்டு தேரில் அமர்ந்து விட்டான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சஞ்சயன் திருதராஷ்டிரரிடம் சொல்கிறார். அர்ஜூனன் தர்மத்திற்கு பயப்படுகிறான். தன் குருக்கள் உறவினர்கள் நண்பர்கள் மீது வைத்திருந்த கருணையினாலும் அன்பினாலும் பாசத்தினாலும் மனக்கலக்கத்தினாலும் அர்ஜூனன் தன்னுடைய ஆயுதங்களை கீழே வைத்து விட்டு கவலையுடன் தேரில் அமர்ந்து விட்டான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 70

கேள்வி: போக மகரிஷியின் தொடர்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஆசி கூறுங்கள்.

இறைவனின் அருளைக் கொண்டு இன்னவனின் முன் இரு வினாக்களுக்கு பின்னொரு தருணம் இன்னவன் எம்முன்னே அமரும் தருணம் யாங்கள் வாக்குகளை பரவலாகக் கூறுகின்ற தருணம் இயம்பிடுவோம். அதே தருணம் போகன் என்று இல்லை. எந்த மகானுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க வழக்கங்களையும் குணங்களையும் விட்டுவிட்டு இன்னும் கூறப்போனால் பல மனிதர்களிடம் தன்னிடம் இன்ன இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்துகொள்ள முடியாமல் வாழ்கிறார்கள். அவற்றையெல்லாம் சுய ஆய்வு செய்து மெல்ல மெல்ல விட்டுக்கொண்டே இன்னொருபுறம் எந்த சித்தனோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறானோ அந்த சித்தனின் நாமத்தை (பெயரை) அடிக்கடி ஆழ்மனதிலே சொல்லிக் கொண்டு இருப்பதும் குறிப்பாக முன் பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து வடகிழக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து ஓர் முக சிந்தனையோடு அந்த சித்தனின் நாமாவளியை (பெயரை) மனதிற்குள் உருவேற்ற உருவேற்ற சித்தர்களின் தொடர்பு என்பது மிக எளிதாகும்.

ஆனால் சிக்கல் எங்கே உருவாகிறது? என்றால் சித்தர்களோடு எனக்கு தொடர்பு இருக்கிறது. சித்தர்கள் என்னோடு பேசுகிறார்கள் அல்லது நான் சித்தர்களை தரிசனம் செய்திருக்கிறேன் என்பது ஒரு மனிதனை பொறுத்தவரை அந்தரங்கமாக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. அதனை பலரும் நம்ப வேண்டும் என்று அவன் முயற்சி செய்யும் பொழுதுதான் சிக்கல் உருவாகிறது. எனவே இதனை அவன் தனித்தன்மையோடு வைத்துக்கொண்டு இந்தவிதமான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இதோடு பெருவாரியான தொண்டுகளையும் தேகவழி (உடல்வழி) தொண்டுகளையும் பொருள் வழி தொண்டுகளையும் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் சித்தர்களின் தொடர்பு எல்லா மனிதர்களுக்குமே எளிதாகக் கிட்டும்.

சுலோகம் -44 # 45

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #44

ஜனார்த்தனா குல தர்மங்கள் அடியோடு அழிந்து விட்டபின் இருக்கும் மனிதர்களுக்கு எக்காலமும் நரகவாசம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?

வர்ணகலப்பின் காரணமாக சில தலைமுறைகள் சென்ற பிறகு பார்த்தால் பலரும் குலத்திற்கு உரிய தர்மங்களை மறந்து போயிருப்பார்கள். இதனால் குலத்திற்குரிய வழிபாட்டு முறைகள் மறைந்து அழிந்து போகும். அதனால் அந்த தர்மங்களை கடைபிடிக்காமல் அவரவர்கள் தங்களின் விருப்பம் போல் செய்து கொண்டிருப்பார்கள். இப்போது ஒழுக்கமுறைகள் இல்லாததால் தவறுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இங்கு அதர்மம் சூழ்ந்து கொள்ளும் பாவங்கள் வந்து சேரும். இதன் விளைவாக அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். இதனை படித்து அறிந்து வைத்துள்ள அர்ஜூனன் கண் கூடாக இதனை பார்க்கவில்லை. ஏனெனில் அர்ஜூனன் காலத்தில் இது போல் ஒரு சம்பவம் நடைபெறவில்லை. ஆகையால் இதனை கேள்விப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறான்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #45

ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் தயாராக உள்ளோம். இது மிகப்பெரிய பாவம் என்று உணர்ந்தும் அதனைச் செய்ய துணிந்து நிற்கிறோம்.

இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?

மேல் சொல்லப்பட்ட 3 சுலோகங்களில் உள்ளவற்றை நாம் தெரிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறோம். ஆனாலும் ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் துணிந்து இந்த பாவத்தை செய்ய வந்திருக்கிறோம் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கூறுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 69

கேள்வி: தமிழ் மொழியை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? உலகத்தில் தோன்றிய முதல் மொழி எது? வேதத்தை இறைவன்தான் உருவாக்கினாரா?

உலகில் தோன்றிய முதல் மொழி குழந்தையின் அழுகுரல்தானப்பா. இந்த நிலையிலே தமிழ் ஒத்து பல்வேறு மொழிகளை இறைவன்தான் உருவாக்கினாரப்பா. ஆனால் அப்படி தோன்றிய மொழிகளுக்கு தோண்டாற்றக்கூடிய வாய்ப்பையும் பணியையும் இறைவன் எமக்கு தன் அளப்பெறும் கருணையால் தந்தாரப்பா.

கேள்வி: நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாமா? மருத்துவர்களோ நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தை அங்கஹீனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி?

இறைவனின் கருணையால் நெருங்கிய உறவில் திருமணம் செய்வது இருக்கட்டும். திருமணம் செய்த பிறகுதான் உறவே நெருங்கவேண்டும். இந்த நிலையிலே இவையெல்லாம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பழக்கம். ஒரு மார்க்கத்தை பின்பற்றக்கூடியவன் கூடாது என்கிற விஷயத்தை வேண்டுமென்றே இன்னொருவன் பின்பற்றுகிறான். நீ கூறிய மாற்று மார்க்கம் மட்டுமல்ல. இந்த இந்து மார்க்கத்திலேயே தென்பகுதியிலே ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள் நீ கூறிய அதாவது தங்கை முறை என்று மற்ற பிரிவுகளால் ஏற்கப்பட்ட ஒரு முறையை தாரமாக இன்றும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதர்கள் வகுத்துக் கொண்ட ஒரு நிலை. நாங்கள் வேறு விதமாகக் கேட்கிறோம். ஒரே குடும்பத்தில் அண்ணன் தங்கையாக பிறந்து ஒன்றாக வளர்கிறார்கள். எனவே தங்கை அண்ணன் என்று தெரிகிறது. விதிவசத்தால் பால்ய வயதில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து எங்கோ சந்திக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டால் அப்பொழுது தங்கை என்ற உணர்வு அங்கு தலைதூக்குமா? சிந்தித்து பார்க்க வேண்டும். இதற்காக இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. மனித மனம் வக்கிரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாகரீகமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் உறவுமுறை ஏற்படுத்தப்பட்டது. எம்மைப் பொருத்தவரை தனக்குள் பிரிவினையை வளர்த்துக் கொண்டு நான் இந்த பிரிவை சேர்ந்தவன். எனவே இதற்குள்தான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது மூடத்தனம். அந்த வகையில் பார்க்கும் பொழுது தொடர்பில்லாத இடத்திலிருந்து ஒருவன் பெண்ணை தேர்ந்தெடுப்பதும் பெண் ஆணை தேர்ந்தெடுப்பதும் மிகவும் சிறப்பு. உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. நல்லதொரு ஆரோக்கியமான சந்ததிகள் பிறப்பதற்கும் ஏற்புடையதாகும்.

சுலோகம் -43

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #43

இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களினால் தொன்று தொட்டு வருகின்ற குலதர்மங்களும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: ஜாதி தர்மங்கள் என்று எதனை குறிப்பிடுகிறது?

சுலோகம் -41 இல் குறிப்பட்டுள்ள குலம் என்று அழைக்கப் படுபவர்களின் அனைத்து பிரிவுகளை இங்கு ஜாதி என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மரவேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். நகை வேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். இருவரது குலம் வேறு வேறு என்றாலும் இருவரும் தச்சர் வேலை செய்பவர்களே இது போல் தச்சர் தொழில் செய்யும் பல பிரிவுகளில் இருப்பவர்களை மொத்தமாக குறிப்பிடும் போது ஜாதி என்ற வார்த்தை இங்கு வருகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணக் கலப்பு குற்றம் என்றும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன என்று சொல்வதன் காரணம் என்ன?

ஒருவர் தங்களது வர்ணத்தை விட்டு வேறு வர்ணத்தில் உள்ளவர்களை திருமணம் செய்யும் போது வர்ணக் கலப்பு ஏற்படுகிறது. இதில் பெண் ஆணின் குல தர்மத்தையோ அல்லது ஆண் பெண்ணின் குல தர்மத்தையோ தொடர்ந்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால் இருவரில் ஒருவர் தங்களுடைய குல தர்மங்களை தொடர்ந்து செய்ய முடியாதபடி ஆகிறது. இப்படி சில தலை முறைகள் சென்ற பிறகு பார்த்தால் ஒரு குலத்தின் தர்மங்கள் (குலத்தின் தர்மத்திற்கான விளக்கம் சுலோகம்- 40 இல் உள்ளது) அனைத்தும் அழிந்து போயிருக்கும் இதற்கு முக்கிய காராணமாக இருப்பது வர்ணக்கலப்பு ஆகும் இதனையே இந்த சுலோகம் சுட்டிக் காட்டுகிறது.