அர்ஜூனனின் ஆர்வம்

அரண்மனையில் மன்னர் திருதராஷ்டிரர் துரோணாச்சாரியரை அழைத்தார். அவர் வந்ததும் எனக்கு ஒரு சந்தேகம் என்று ஆரம்பித்தார் மன்னர் திருதராஷ்டிரன். சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல் வித்தைக்களை கற்பிப்பது தானே நல்ல ஆசானின் இலக்கணம்? என்று திருதராஷ்டிரன் கேட்டார். ஆம் மன்னா பதிலளித்தார் துரோணர். தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம். மன்னா என்ன கூறுகிறீர்கள்? திடுக்கிட்டார் துரோணர். துரோணரே பாண்டவர்களையும் கௌரவர்களையும் தாங்கள் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் கற்பிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் திருதராஷ்டிரர்.

பாண்டவர்கள் மீது பொறாமை கொண்ட கௌரவர்கள் தன்னைப் பற்றி தவறாக ஏதோ சொல்லி இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டார் துரோணர். பிறகு அவர் மன்னிக்க வேண்டும் மன்னா நான் எந்த விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. ஆர்வம் முயற்சி உத்வேகம் தனித்தன்மை போன்ற இயல்புகள் எல்லோரிடமும் ஒரே மாதிரி அமையவில்லை என்பதைத் தாங்கள் உணர வேண்டும் என்று திருதராஷ்டிரனிடம் எடுத்துக் கூறினார். அதோடு கௌரவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று துரோணர் எண்ணினார். மறு நாள் காலை நேரத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் வித்தைகள் பயில்வதற்காக வந்து துரோணரை வணங்கி நின்றனர். அவர்களிடம் துரோணர் சீடர்களே இன்று நான் ஓர் அரிய வித்தையை உங்களுக்குக் கற்பிக்கப் போகிறேன். அதற்காக நாம் காட்டுக்குச் செல்லலாம் என்றார். உடனே அனைவரும் துரோணருடன் புறப்பட்டனர்.

ஓர் ஆற்றங்கரையை அடைந்தனர். சீடர்களை அங்கு அமருமாறு கூறிய துரோணர் ஆற்று மணலில் தன் விரலால் ஒரு ஸ்லோகத்தை எழுதினார். சீடர்களே இன்று உங்களுக்குக் கற்பிக்கப் போகும் வித்தை மூலம் ஒரு காட்டையே எரித்து பஸ்பமாக்கி விடலாம். நான் எவ்வாறு இந்த ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகிக்கிறேன் என்று கூர்ந்து கவனியுங்கள் என்றவர் அர்ஜுனனிடம் அர்ஜுனா கமண்டலத்தை எடுத்து வர மறந்து விட்டேன். நீ விரைவாகச் சென்று ஆசிரமத்தில் இருந்து அதை எடுத்து வா என்றார். குருநாதர் கற்பிக்கும் இந்த அரிய வித்தையைக் கற்கும் வாய்ப்பு நழுவி விடுமோ? என்ற கவலையுடன் குருநாதரின் குடிலை நோக்கி விரைந்தான் அர்ஜுனன். கமண்டலத்துடன் திரும்பியவன் அவர்கள் ஆற்றங்கரையைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தான். உடனே ஆற்றைக் கடந்து அவர்களிடம் சென்றான். கமண்டலத்தை குருநாதரிடம் தந்தான். குருவே என்னை மன்னியுங்கள் சற்றுத் தாமதமாகி விட்டது என்றான் அர்ஜுனன். அவனிடமிருந்து கமண்டலத்தைப் பெற்றுக் கொண்ட துரோணர் மற்றவர்களிடம் தனது உரையைத் தொடர்ந்தார் நல்லது சீடர்களே இன்று கற்பித்த வித்தையில் எவருக்காவது சந்தேகம் இருந்தால் என்னிடம் கேளுங்கள் என்றார். குருவே நான் வருவதற்குள் பாடம் முடிந்து விட்டதா? என்று ஏமாற்றமாகக் கேட்டான் அர்ஜுனன். ஆம் என்று அவனுக்கு பதிலளித்த துரோணர் மற்றவர்களை நோக்கி சரி ஒவ்வொருவராக வந்து ஸ்லோகம் சொல்லி அம்பைப் பிரயோகித்து அந்தக் காட்டுப் பகுதியை எரியுங்கள் பார்க்கலாம் என்றார்.

கௌரவர்கள் நூறு பேர் பாண்டவர்கள் நால்வர் (அர்ஜுனனைத் தவிர) என ஒவ்வொருவராக வந்து ஸ்லோகத்தை உச்சரித்து அஸ்திரம் பிரயோகித்தனர். ஆனால் பலன் இல்லை. என் உழைப்பு மொத்தமும் வீண் என்று கோபத்தில் கத்தினார் துரோணர். குருவே தாங்கள் ஆணையிட்டால் அந்தக் காட்டை நான் எரித்துக் காட்டுகிறேன் என்று அர்ஜுனன் முன்வந்தான். உடனே கௌரவர்களிடையே பெரும் சலசலப்பும் கேலிக் கூக்குரல்களும் எழுந்தன. பாடம் நடத்தும் போது இவன் ஆளே இல்லை. பாடத்தைக் கவனித்த நம்மாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. இவன் எரித்துக் காட்டப் போகிறானாம். நல்ல வேடிக்கை என்று இகழ்ந்தனர். வீணாக குருவின் கோபத்துக்கு ஆளாகப் போகிறான் என்றான் கௌரவர்களில் ஒருவன். துரோணர் அர்ஜுனனிடம் எங்கே எரித்துக் காட்டு. பார்க்கலாம் என்றார். வில்லையும் அம்பையும் எடுத்த அர்ஜுனன் கண்களை மூடி ஸ்லோகத்தை உச்சரித்து அம்பைப் பிரயோகித்தான். உடனே காடு திகுதிகுவென தீப்பிடித்து எரிந்தது கௌரவர்கள் உட்பட அனைவருக்கும் பிரமிப்பு. அர்ஜுனா மந்திர உபதேசம் செய்யும் போது நீ இங்கு இல்லை. பிறகு எப்படி உன்னால் இதைச் சாதிக்க முடிந்தது? என்று துரோணர் கேட்டார். குருவே கமண்டலத்துடன் ஆற்றங்கரைக்கு வந்த போது அங்கு நீங்கள் மணலில் எழுதிய மந்திர ஸ்லோகம் பார்த்தேன் படித்தேன். அதை மனதில் பதிய வைத்தேன் அவ்வளவுதான் என்றான். துரோணரின் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. ஒரு சீடனிடம் ஆர்வம் இருந்தால் குருவின் போதனையை எப்படியும் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அர்ஜுனனே சாட்சி என்ற துரோணர் கௌரவர்களைப் பார்த்தார். வெட்கித் தலை குனிந்தனர் கௌரவர்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 385

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணுகின்ற நன்மைகளை எண்ணுகின்ற நல்ல ஆத்மாக்களுக்கு இறைவன் அருள் என்றும் தொடரும். இறைவனின் கருணையைக்கொண்டு நாங்கள் சில ஆத்மாக்களை கடைத்தேற்ற என்றென்றும் ஒரு முயற்சியில் இறங்கிக் கொண்டே இதுபோல் இறைவன் இறைவன் என்று கூறிக்கொண்டே அந்த இறைவனின் கருணையை அந்த ஆத்மாக்கள் உணரும் பொருட்டு உய்யும் பொருட்டு ஒரு கருவியாக இருந்து செயல் பட்டுக் கொண்டே இருக்க அதே இறைவன் எம்மை படைத்த காரணம் என்று எண்ணி யாம் என்றென்றும் எம்வழி சென்று கொண்டிருக்கிறோம். இதுபோல் பலவிதமான ஆர்வம் எம்மீது கொண்ட பல்வேறு மனிதர்களை யாங்கள் அறிவோம். அதுபோல் மெய்யாக மெய்யாக மெய்யாக எம் மீதும் எம் வழிமுறை மீதும் ஆர்வம் கொண்ட அனைத்து ஆத்மாக்களுக்கும் நாங்கள் நல்லாசிகளை என்றுமே வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

ஆனாலும் மனிதர்கள் தாம் தாம் அறிந்த வகையிலே சிந்திப்பது யாதென்றால் தன்னை விட உயர் சக்தியின் துணை கிடைத்து விட்டால் தன்னை விட மேம்பட்ட சக்தியின் உதவி கிடைத்து விட்டால் குறிப்பாக இது போன்ற சித்தர்களின் அருளாசி கிடைத்து விட்டால் அல்லது சித்தர்களின் தொடர்பு இருந்து விட்டாலே எவ்வித துன்பங்களும் இல்லாமல் வாழ்க்கை சுகபோகமாக செல்ல வேண்டுமே ஆனால் அவ்வாறு செல்வதில்லையே? பிறகு எப்படி இது போன்ற விஷயங்களை நம்புவது? சித்தர்களை நம்பி ஓரளவு சித்தர்கள் வழியில் வருகின்ற மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. இதனை நம்பாத மனிதர்களுக்கும் துன்பம் இருக்கிறது. என்ன பெரிய வேறுபாடு? என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுகின்ற எண்ண ஓட்டங்கள் அனைத்தையும் யாம் அறிவோம்.

பலமுறை யாங்கள் ஞானமார்க்கம் குறித்து விதவிதமான வார்த்தைகளை பயன்படுத்தி கூறினாலும் கூட அறியாமையும் மாயையும் பற்றும் பாசமும் மனிதனை ஒரு நிலைக்குமேல் சிந்திக்க விடுவதில்லை. இறைவனின் கருணையால் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டியது யாதென்றால் இதுபோல் ஆசையும் தீவிர ஆசையும் நிலையற்ற தன்மை மேல் வைக்கின்ற பற்றும் என்றுமே துன்பத்தை தந்து கொண்டுதான் இருக்கும். விழிப்புணர்வற்ற ஞானமற்ற ஒன்றின் மீது மனிதன் வைக்கின்ற விருப்பமோ ஆசையோ பற்றோ கட்டாயம் ஒரு நிலையில் அவனுக்கு இன்பத்தை தருவதுபோல் இருந்தாலும் மறுநிலையில் துன்பத்தைத் தரும். அதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு வனாந்தரம் செல்ல வேண்டுமா? குகையிலே அமர்ந்து சதா சர்வகாலம் தவம் செய்ய வேண்டுமா? என்றெல்லாம் மனிதர்கள் வினவலாம். அது ஒரு நிலை.

இந்த சமூக வாழ்க்கையை நன்றாக நேர்மையாக மேற்கொள்வதோடு எந்த பந்தபாசத்திலும் பற்றிலும் ஆழ்ந்து விடாமல் வாழப்பழகுவதே மெய் ஞானத்தை நோக்கி நன்றாக வலுவாக செல்வதற்குண்டான வழிமுறையாகும். ஒன்று தீவிரமான நேர்மையான சிந்தனையை வளர்த்துக் கொண்டு அந்த நேர்மையான சிந்தனைக்கு பங்கம் வராமல் வாழக் கற்றுக் கொண்டிட வேண்டும். இல்லையென்றால் பரிபூரண சரணாகதி பக்தியிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்டு அனைத்தும் இறைவனுக்குத் தெரியும். இறைவன் பார்த்துக்கொள்வார் என்று வாழ்ந்து விட வேண்டும். ஆனால் மனிதர்கள் சில சமயம் அப்படியும் சில சமயம் இப்படியும் வாழ்வதே பல்வேறு விதமான குழப்பங்களுக்கு வழி வகுக்கிறது. இப்படி வழி வகுத்திடாமல் மனிதன் தன்னையும் நிம்மதியாக வைத்துக் கொண்டு தன்னை சுற்றி உள்ளவர்களையும் நிம்மதியாக வாழும்படி செய்வதற்குண்டான செயலை செய்வதே வாழ்க்கையை எமது வழியில் வாழ்வதற்கு ஒப்பாகும். தன்னை சுற்றியுள்ள எல்லா வகை உயிர்களுக்கும் எந்த வகையிலும் தீங்கை செய்யாமல் எண்ணுகின்ற எண்ணத்தில் கூட பிறரை இழிவாக தரக் குறைவாக எண்ணாமல் பிறரை பற்றி ஒரு தவறான விமர்சனத்தை உருவாக்கி விடாமல் வாழக் கற்றுக்கொள்ள அதே இறைவழியில் செல்வதற்குண்டான சரியான வழியாகும்.

திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை பகுதி-1

“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 16-10-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்