ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 545

கேள்வி: விராலிமலைக்கு சென்றால் வாய்ப்புள்ளவர்களுக்கு அதிகாலையில் நாரதர் தரிசனம் தருவார் அதுபற்றி:

இறைவன் அருளாலே மோட்சம் முக்தி சாயுச்சியம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்கிற ஆன்ம உயர்வு நிலைகளுக்கெல்லாம் எத்தனையோ தெய்வீக சூட்சமங்கள் இருக்கிறது. இவளொத்து பலர் கேட்பது என்னவென்றால் மிகப்பெரிய ஞானிகளெல்லாம் ஒரு பிறவியிலே மகானாக ஞானியாக பிறந்து இறை தரிசனத்தை கண்டு இறையோடு இரண்டற கலந்த பிறகு மீண்டும் ஏன் பூமியில் பிறக்க வேண்டும்? என்று. இந்த இடத்தில் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மருத்துவமனைக்கு நோயாளி செல்கின்ற விதம் வேறு. மருத்துவர்கள் செல்கின்ற விதம் வேறு. மருத்துவமனையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் செல்கின்ற விதம் வேறு. நோயாளி நோய் குணமாவதற்காக செல்கின்றான். மருத்துவன் அந்த நோயாளியை குணப்படுத்தும் பணிக்காக செல்கிறான். இங்கே சராசரி மனிதர்கள் நோயாளியாக வருகிறார்கள். மகான்கள் பிறப்பது மருத்துவன் போல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

விராலி மலை

விராலிமலை முருகன் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இம்மலையின் புராண பெயர் சொர்ணவிராலியங்கிரி. மூலவர் சண்முகநாதர் ஆறுமுகம். முருகர் மயில் மீது வீற்றிருக்கிறார். இந்த மயில் தெற்கு பார்த்திருப்பதால் இதற்கு அசுர மயில் என்று பெயர். அம்மன் வள்ளி மற்றும் தெய்வானை. தலமரம் விராலிச்செடி காசிவில்வம். தீர்த்தம் சரவணப் பொய்கை நாக தீர்த்தம். நாகதீர்த்தம் நடுவே நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகரின் வாகனமான மயில்கள் அதிகமாக நடமாடும் கோயில் இது. இடும்பன் சன்னதி பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் அவரை விராலிமலை இருக்குமிடத்திற்கு வர கட்டளையிட்டார். விராலி மலைக்கு வழி தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு விராலிமலைக்கு செல்லும் வழியை காட்ட முருகன் வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி தற்போது இக்கோவில் இருக்குமிடத்தில் உள்ள குரா மரத்தினுள் மறைந்து விட்டார். இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு முருகர் அஷ்டமாசித்தி என்னும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வழங்கினார். திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.

சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். இதனால் அவரது தம்புரா வளைந்தது. சிவநிந்தையை போக்குவதற்கு இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா இப்போதும் வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா வருகிறார்.

குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை. வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர். இவர் தீவிர முருக பக்தர். இக்கோவிலில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து ஈடுபட்டார். ஒருநாள் வெள்ளிக் கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. எப்படியாவது முருகனை தரிசிக்க வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். இருவருமாக ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர் மறைந்து விட்டார். இதனைக் கண்டு வியப்புற்ற கருப்பமுத்து கோயிலை அடைந்ததும் அங்கு முருகனுக்கு முன்பாக தான் கொடுத்த சுருட்டு இருப்பதைக் கண்டு தம்மிடம் சுருட்டு பெற்றவர் முருகனே என உணர்ந்தார். கருப்பமுத்து அங்கிருந்த அனைவரிடமும் நடந்ததைக்கூற ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் உருவானது.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. அன்று இரவு முருகர் அவர் கனவில் தோன்றி எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே என்றார். மேலும் நிவேதனமாக சுருட்டை வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூறினார். அடுத்தநாள் மன்னர் தான் போட்ட தடையை நீக்கினார். முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைத்தவுடன் மன்னரின் வயிற்று வலி குணமானது. அதன்பிறகு இன்று வரை இப்பழக்கம் இருக்கிறது. ஆறு கால பூஜையின் போது பாலும் பழமும் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. உச்சிகால வழிபாட்டின்போது மட்டும் சுருட்டு சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது

வசிஷ்டரும் அவரது துணைவி அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமியற்றி உள்ளார்கள். திருவாரூரில் இருந்த தட்சிணாமூர்த்தி என்னும் அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் தோன்றி காட்சி தந்த திருத்தலம். இத்தலத்தின் மீது விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம் கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது. விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கிபி1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.

யானையின் ஆசிர்வாதம்

யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தெய்வீக ரகசியம் உள்ளது. மூலிகை தாவரங்களை மட்டும் சாப்பிட்டு மிருகங்களில் பலமுள்ளதாக திகழும் உயிரினம் யானை. மகத்தான தெய்வீக அம்சங்கள் பொருந்தியது. உலகில் வாழும் உயிரினங்களில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிக்கும் தன்மை யானைக்கு மட்டுமே உண்டு.

நம்முடைய ஒரு நாசி வழியாகவே எப்போதும் சுவாசம் நடைபெறும். தினமும் 24 நிமிடங்களுக்கு ஒருமுறை நம்முடைய சுவாசம் ஒரு நாசித் துவாரத்திலிருந்து இன்னொரு நாசி துவாரத்தில் மாறிக் கொண்டே இருக்கும். இதற்கு சூரியகலை சந்திரகலை என்ற பெயரும் உண்டு. வலது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சூரியகலை என்றும் இடது நாசி வழியாக சுவாசம் நடைபெறும் போது சந்திரகலை என்றும் பெயர். சுவாசத்தை கட்டுப்படுத்தும் மற்றும் முறைப்படுத்தும் ஆன்மீக முயற்சிகளுக்கு சரகலை என்று பெயர். பிராணயாமம் வாசியோகம் போன்றவைகளும் நமது சுவாசத்தை தெய்வீகத் தன்மைக்கு முன்னேற்றம் அடைய வைக்கும் ஆன்மீக பயிற்சி முறைகளாகும். யோகப் பயிற்சி செய்பவர்கள் வாசியோகம் அல்லது பிராணாயாமத்தில் மேல் நிலையை எட்டியவர்கள் எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் திறமையை பெற்று விடுவார்கள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.

இரண்டு நாசிகளாலும் சதாசர்வ காலமும் சுவாசிக்கும் தன்மையை பெற்றவர்கள் ஞானிகளாகின்றார்கள். ஞானிகளிடம் ஆசி பெற்றால் நன்மை நடைபெறுவது போலவே இயற்கையாகவே சுழுமுனை வாசியோகம் உள்ள யானை அதன் தும்பிக்கையை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்வதால் ஆசிர்வாதம் பெற்றவர்களுக்கு அவர்களின் மூச்சுக்காற்று சீராக செயல்பட்டு மனதில் தீய எண்ணம் வராமல் தடுத்து நல்ல சிந்தனைகளை வளரச் செய்யும். நல்ல சிந்தனைகள் இறைவனை சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும். ஒழுக்கத்தை கொடுக்கும். தர்ம சிந்தனை வளரும். மனதில் அன்பு நிறைந்து இருக்கும். இறைவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்நாளும் துன்பம் இல்லை என்பதுதான் இதன் பின்னணியில் உள்ள தெய்வீக ரகசியம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 544

கேள்வி: காக புஜண்டருக்கு கோவில்கள் எங்கெங்கே இருக்கிறது?

உண்மையான பக்தர்களின் உள்ளம் அனைத்திலும் காக புஜண்டருக்கு கோவில்கள் இருக்கிறது.

மூச்சுக்காற்று

ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கும் போது 12 எண்ணிக்கை மூச்சும் நடக்கும் போது 18 எண்ணிக்கை மூச்சும் ஒடும் போது 25 எண்ணிக்கை மூச்சும் தூங்கும் போது 32 எண்ணிக்கை மூச்சும் உடலுறவின் போதும் கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 எண்ணிக்கை மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.

இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அதனால்தான் வள்ளற்பெருமான் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில் மெல்லென நடை பயில வேண்டும் என்று கூறுவார். அதாவது நமது மூச்சுக்காற்று வெளியில் அதிக அளவில் செல்ல அவர் அனுமதிக்கவில்லை. மேலும் நம்பெருமானார் ஒருவன் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் உறங்க பழக்கப்படுத்திக் கொண்டால் அவன் 1000 வருடங்கள் வாழலாம் என்றும் கூறுவார். நாம் சும்மா உட்கார்ந்திருந்தால் 12 எண்ணிக்கை மூச்சுதான் செலவாகும். அதுவே உறங்கினால் 32 மூச்சு செலவாகிறது. அதாவது நாம் தூங்கும் போது 20 மூச்சு ஒரு நிமிடத்திற்கு விரையம் அடைகிறது. எனவே தூக்கத்தை குறைக்க வேண்டும். அதுபோல் ஒருவன் கோபப்பட்டால் 52 மூச்சு ஒரு நிமிடத்திற்கு விரையமாகிறது. எனவே கோபம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100. {21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60×24=1440)} மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன் சராசரியாக

100 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்.
93 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்.
87 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்.
80 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்.
73 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்.
66 ஆண்டுகள் வாழ்ந்தால் அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்.

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும் போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். சராசரியாக

1 நிமிடத்தில் 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு வாழலாம்.
1 நிமிடத்தில் 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு வாழலாம்.
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை (இது சித்தர்களால் மட்டுமே முடியும்).

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 543

கேள்வி: துறவு பற்றி

துறவு என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? முற்றிலும் துறப்பதல்ல. முற்றிலும் உணர்வது தான் துறவின் இலக்கணம். உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்குரு யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் தன் கடமையை நேர்மையாக ஆற்றுவதுதான் உண்மையான துறவு. இல்லறத்தில் இருந்து கொண்டு நேர்மையாக சத்தியமாக தர்மத்தோடு பக்தியோடு வாழ்ந்தால் அதுவும் துறவுக்கு சமானம்தான்.

சங்கநிதி பதுமநிதி

பக்தர்கள் எவ்வளவு செல்வம் கேட்டாலும் அள்ளிக் கொடுக்கும் லட்சுமி தேவிக்கு உதவியாக சிவ பெருமானால் நியமிக்கப்பட்டவர் அழகாபுரிப் பட்டிணத்தைச் சேர்ந்த வைச்ரவணன். ஈஸ்வரன் பட்டம் பெற்ற இராவணனின் தம்பி. பல வருடங்கள் சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததின் பலனாக சிவபெருமானின் அருளைப் பெற்றார். லட்சுமி தேவியின் செல்வங்களை பாதுகாக்கும் காவலராக சிவபெருமானால் நியக்கப்பட்டு லட்சுமி தேவியால் குபேர பட்டம் பெற்றார். சிறந்த சிவபக்தர். ஈசனின் கட்டளைப்படியும் லட்சுமி தேவியின் ஆசியுடனும் வைச்ரவணன் ஒரு நல்ல நாளில் செல்வத்தை நிர்வகிக்கும் குபேர பதவி ஏற்றார். அதன்பின் இன்றளவும் அவர் பெயர் வைச்ரவணன் என்பது மாறி குபேரன் என்றே ஆயிற்று. குபேரப் பதவியை அடைந்ததனால் அவருக்கு திருமகளின் வெண்சங்கும் கலைமகளின் வெண்தாமரையும் வரமாகக் கிடைத்தன. அந்த இரண்டையும் இரு தேவகணங்களாக்கி தன்னுடைய நிர்வாகப் பணிக்கு துணையாக வைத்துக் கொண்டார் குபேரன். வெண்சங்காய் வந்த தேவகணத்திற்குப் பெயர் சங்கநிதி. செல்வத்தை அருள்பவர். வெண்தாமரையாய் வந்த தேவகணத்திற்குப் பெயர் பத்மநிதி. அறிவினை அருள்பவர்.

ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார். கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.

சங்கம் பதுமம் மகாபதுமம் மகரம் கச்சபம் முகுந்தம் குந்தம் நீலம் வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். இந்த ஒன்பது நிதிகளில் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன. சங்கநிதி பதுமநிதி என இருநிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர். பெரும்பாலும் எல்லா சிவன் கோவில்களிலுமே இந்த இருவரின் சிற்பங்களும் கோபுரத்திலோ சற்று உயரமான இடத்திலோ அமைக்கப்பட்டிருக்கும். அறிவுச் செல்வமாக இருந்தாலும் பொருள் செல்வமாக இருந்தாலும் கேட்டதை கொடுப்பவர் ஈசன். கோவிலுக்கு வந்து கேட்கும் பக்தர்களின் உணர்வுகளை மேலிருந்து கவனித்து பார்த்து பக்தரின் நடை உடை பாவணைகளை ஆராய்ந்து பக்தர்களுக்கு இறைவன் மீது உள்ள நம்பிக்கையையும் அந்த பக்தரின் தேவையையும் அளவிட்டு நிர்ணயம் செய்து எவ்வளவு அறிவுச் செல்வத்தையும் எவ்வளவு பொருள் செல்வத்தையும் பக்தர்களுக்கு அளிக்கலாம் என முடிவு செய்து குபேரனிடம் தருவதுதான் இவர்கள் பணி. அதன்பின் ஈசனின் வரப்படி அந்த பக்தர்களுககு செல்வங்களை அளிக்க வேண்டியதுதான் குபேரரின் பணி.

இவர்களின் முக்கியத்துவம் உணர்ந்துதான் கருவூர்த் தேவர் தன்னுடைய பிரியமான இராஜராஜ சோழனை, எப்போது பெரிய கோவிலுக்குச் சென்றாலும் மதிலின் வடமேற்கே உள்ள அணுக்கன் வாயில் வழியாக உள்ளே செல்லச் சொல்வாராம். அந்த வாயிலில் சங்கநிதி பத்மநிதி சிற்பங்கள் தவிர வேறு எந்த தெய்வத்தின் சிற்பமும் காண முடியாது. இதன் காரணமாகத்தான் கோவிலுக்கு வரும்போது குளித்து விட்டு தூய ஆடை அணிந்து வம்பு தும்பு பேசாமல் இறை சிந்தனையுடன் பக்தியுடன் கோவிலை வலம் வரவேண்டும் என்று முன்னோர்கள் வரையறை செய்திருந்தனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 542

கேள்வி: கோயில் என்றாலே புண்ணியமான இடம் தானே. இராசி இல்லாத கோயில்கள் என்ற ஒன்று இருக்கிறதா?

இறைவன் அருளால் மனிதன் தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு எப்பொழுதுமே பிறவற்றை அல்லது பிறரை குற்றம் சாட்டுவது என்பது இயல்பாகி விட்டது. ஆயிரக்கணக்கான ஆடு மாடுகளை கொன்று குவிக்கும் பொழுது வராத பாவம் ஆயிரக்கணக்கான மனிதர்களை போர் என்ற பெயரில் கொன்று குவிக்கும் போது வராத பாவம் ஒரு ஆலயம் சென்று தரிசித்தால் வந்துவிடுமா என்ன? ஆலயத்தில் இறைவனால் எந்த அனாச்சாரமும் நடப்பதில்லை. அவனவன் விதியின் படி நடக்க வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கும் ஒரு ஆலயத்திற்கும் தொடர்பு இல்லை. இன்னொன்று காலத்தில் ஆலய கட்டுமான பணிகள் செய்யும்போது பல்வேறு மனிதர்கள் அந்த கட்டுமானத்தின் காரணமாக அந்த வேலையின் காரணமாக உயிரை துறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பூஜை நடந்திருக்கிறது. இன்னும் எமக்கு பிடிக்காத பலவும் நடந்திருக்கிறது. ஆலய வேலை பழுதுபடாமல் இருக்க உயிர் பலியெல்லாம் கூட தந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எக்காலத்திலும் மூடர்கள் செய்யக்கூடிய விஷயம்தான். அக்காலத்தில் அரசனும் சில மூட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இப்படியெல்லாம் செய்ததுண்டு. ஆனால் அதற்கும் இன்னவள் கூறிய வினாவிற்கும் தொடர்பில்லை. அங்கு திரையை போட்டு மறைத்து விட்டால் மட்டும் ஒருவனின் கர்மாவையும் மறைத்து விட முடியுமா என்ன?

ஆதிசங்கரரின் கடைசி உபதேசம்

ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள். பங்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம். ஸோபான பஞ்சகம் என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். இதனை உபதேச பஞ்சகம் அல்லது ஸாதனா பஞ்சகம் எனவும் கூறுவர். இதில் சங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்.

  1. தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது. அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய். பகவானை திருப்தி செய்ய பூஜைகள் செய். இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் இது பகவானுக்கு என அர்ப்பணம் செய்து விடு. வாழ்க்கை நெறி முறைகளை மீறி நடந்ததினால் குவிந்துள்ள உன் பாவ மூட்டையைச் சிறிது சிறிதாகக் கரைத்து விட்டு விடு. இதனால் சித்த சுத்தி ஏற்படும். இந்நிலையில் சம்சார தோஷங்களை துருவி அலசிப்பார்த்தால் ஞான மார்க்கத்தில் அது கொண்டு விடும். இப்போது உனக்கு நித்யா நித்ய வஸ்துக்களின் அறிவு ஏற்படும். அநித்ய வஸ்துக்களில் வைராக்கியம் ஏற்படும் போது இடையில் தடை ஏற்படுமாகின் வீட்டை விட்டு (அடுத்த ஆசிரமத்தில் நுழைந்து விடு) வெளிச் சென்று விடு.
  2. நீ சத்ஸங்கத்திலேயே நிலைத்திரு. பகவத் பக்தியை திடமாக்கிக் கொள். சமாதி சட்க ஸம்பத்திகளுடன் நீ மோட்ச வேட்கையோடு ஆத்ம விசாரம் செய். பின்னர் கர்மாக்கள் பிறவிச்சுழலில் தள்ளிவிடும் என உணர்ந்து கர்மாக்களை விட்டு விடு. பிறகு ஆத்ம ஞானி ஒருவரை சரணடைந்தால் அவர் கருணை கூர்ந்து ஆத்ம ஞானத்தை உபதேசிப்பார். உபநிஷத்துக்களில் கூறும் தத் த்வம் அஸி (நீயே அதுவாக இருக்கிறாய் என்று பொருள்) போன்ற மகா வாக்கியங்களின் உட்பொருளை உணர்ந்து கொள்வாயாக.
  3. மகா வாக்யார்த்தங்களை விசாரணை செய். ச்ருதியை பிரமாணமாகக் கொள். வேதங்கட்கு மாறாக வாதாடுவோரிடமிருந்து விலகி இரு. வேதங்களின் உட்கொருளை உணர தர்க்கம் என்ற புத்திக் கூர்மையை ஆயிதமாகக் கொண்டு அக்ஞானம் என்ற அசுரனை வெட்டிவிடு. நான் உடலல்ல பிரம்மமே என்பதை உணர்ந்து கொள். இவ்வறிவு பெற்ற பின் அகந்தையை அணுக விடாதே. அறிவாளிகளிடம் வாதம் செய்யாதே.
  4. பசி என்ற நோயைத் தீர்க்க மருந்தெனக் கருதி கிடைத்த உணவை மிதமாக உட்கொள். நாவிற்கு ருசியான உணவில் ஆசையைத் துறந்து பிச்சை எடு. சுகத்தையும் துக்கத்தையும் சமமாகக் கருதிக் செயல்படு. பொன் போன்ற நேரத்தை வெட்டிப் பேச்சில் ஈடுபடுத்தாதே. பதவியில் உள்ளவர்களையும் தனவான்களையும் புகழ்ந்து தன் காரியததைச் சாதித்துக் கொள்ள விரும்பாதே.
  5. ஏகாந்தமான இடத்தில் ஆசனத்தில் அமர்ந்து பர பிரம்மத்தைப் பற்றியே சிந்தித்திரு. பலன் தரத் தொடங்கிவிட்ட கர்மாக்களின் பலனைப் புரதத்தே தீர்த்துவிடு. பிரம்மத்திலேயே நிலைத்திருப்பதில் தயக்கம் காட்டாதே. பிரம்மமும் பூர்ணம். இந்த ஜகமும் பூரணம். பூர்ணமான பிரம்மத்திலிருந்து பூர்ணமான ஜகம் வந்த பின் எஞ்சியிருப்பதும் பூர்ணம் என அறிந்து பூர்ணாத்மாவினை தரிசனம் செய். நீ செய்த கர்மாக்களின் பலனை ஞானத்தால் எரித்து விடு.

என் அருமை சிஷ்யர்களே உங்களுக்கு இதுவே என் இறுதியான உபதேசம் என ஆதிசங்கரர் அருளினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 541

அகத்தியரின் பொது வாக்கு:

இறைவன் அருளாலே இறைவன் என்ற மகாசக்தியிலிருந்து பிரிந்த துகள் தான் அனைவரும் என்று தத்துவார்த்தமாக கூறினாலும் கூட இறைவன் விளையாட்டாக இந்த உலகை படைத்ததாக சொல்லுவோம். அப்படி படைக்கும் பொழுது இப்படி வாழ வேண்டும். இப்படி வாழ கூடாது. இது தக்கது. இது தகாதது. இது நன்மையை தரக்கூடியது. இது தீமையை தரக்கூடியது என்றெல்லாம் நல்ல ஞானிகளையும் உடன் அனுப்பி போதனைகளையும் செய்திருக்கிறார். ஆனாலும் கூட இங்கு வந்த பிறகு ஆத்மாக்கள் வெறும் லோகாய இச்சைக்குள் சிக்கி தவறுகளையும் பாவங்களையும் செய்து கொண்டேதான் போகிறது. இது எங்ஙனம்? என்றால் ஒரு மகா பெரிய ஞானி யோகி இருப்பதாக கொள்வோம். அந்த ஞானியின் போதனைகளை கேட்டு பலரும் மனம் திருந்தி நல்ல வழியில் வருவதாக கொள்வோம். ஆனால் அந்த ஞானியின் பிள்ளை அவ்வாறு இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே? ஞானியின் பிள்ளை அசட்டுத்தனமாக மூடத்தனமாக தவறுகளை செய்யக்கூடிய பிள்ளையாக பலருக்கும் இருப்பது போலத்தான். இறைவன் படைப்பாக இருந்தாலும் இறைவனைப் போல உயர்ந்த எண்ணங்கள் இல்லாமல் வாழும் சூழலை மாயையால் மனிதன் உண்டாக்கி கொள்கிறான். ஆனால் இறைவன் தான் இந்த உயிர்கள் எல்லாம் படைத்தார் என்பதற்கு குழந்தைகளை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் வஞ்சகம் இல்லை. சூழ்ச்சி இல்லை. சூது இல்லை. வாது இல்லை. அது இறைவனின் நகலாக இருக்கிறது. அது பிறகு வளர வளர ஏற்கனவே வளர்ந்த குழந்தை அனைத்தையும் அந்த குழந்தைக்கு சொல்லி தந்து விடுகிறது.

நல்லதை தொடர்ந்து செய் என்று எண்ணிதான் இறைவனை இறைவன் உயிர்களை படைத்திருக்கிறார். ஆனால் அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன் அப்படி செய்தால் உடனடியாக நன்மைகள் ஏற்பட போவதில்லை. லோகாய நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நான் சுயநலவாதியாகத்தான் வாழ்வேன் என்பது மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த தீர்மானமாக இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது இறைவன் நல்ல எண்ணத்தில் தான் அனைத்தையும் செய்து இருக்கிறார். இறைவன் மனிதனை இப்படி ஒரு மாயையில் தவிக்க விட்டதாக தத்துவார்த்த ரீதியில் புலம்பலாமே தவிர இந்த குற்றத்திற்கு முழுக்க முழுக்க மனிதர்களை காரணம். ஏனென்றால் சிந்திக்கும் ஆற்றலை தந்து தான் உயிர்களை இறைவன் உலாவை விட்டிருக்கிறார். வெளியூருக்கு செல்லும் மைந்தனுக்கு போக வர செலவுக்கும் உணவு அங்காடிக்கு உண்டான செலவுக்கும் சத்திரத்தில் தங்குவதற்கு உண்டான செலவுக்கும் தனம் தந்து அந்த தனம் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் வேறுவிதமான ஏற்பாடுகளையும் செய்து தான் தந்தை அனுப்புகிறார். ஆனால் பிள்ளையோ அதனை கேட்காமல் தவறான வழியில் சென்றால் அனுப்பிய தந்தையின் குற்றமா? தவறான வழியில் சென்ற பிள்ளையின் குற்றமா?