ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 530

கேள்வி: பாவ கர்மாக்களை குறைக்க உடலோடு இருக்கும் பொழுது மட்டும்தான் பிரார்த்தனை செய்ய முடியுமா? அல்லது உடலை உகுத்த பிறகும் அந்த ஆன்மா பிரார்த்தனை செய்து கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள முடியுமா?

பூர்வ புண்ணியம் அதிகமாக இருந்தால் விலங்கு நிலையில் இருந்தால் கூட இறைவனை வணங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. இதற்கு திருவானைக்காவல் திருவெறும்பூர் உதாரணம். எனவே அப்படி பூர்வ புண்ணியம் அதிகமாக பெற்றவர்கள் தேகத்தை இழந்த பிறகும் சூட்சும சாரீரத்தில் அலைந்து கொண்டே கூட இறை நாமத்தை ஜெபிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆனால் லகரத்தில் சிலருக்கு தான் அந்த வாய்ப்பு கிட்டும். ஏனையோர்க்கு எல்லாம் குழப்பத்திலும் பயத்திலும் தான் இறந்து விட்டோம் என்று கூட தெரியாத நிலையில் எப்பொழுதும் அலைந்து கொண்டிருப்பார்கள். இது போல் நிலையிலேயே பூர்வ புண்ணியம் இருந்தால்தான் உடலோடு இருந்தாலும் வாழ இயலும். உடலை விட்டாலும் நன்றாக வாழ இயலும்.

உதங்கமுனிவர்

வில்வ மரத்தடியில் இருக்கும் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூஜை செய்யும் உதாங்கமுனிவர். இடம்: பஞ்சவர்ணேசுவரர் கோவில். உறையூர் திருச்சி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 529

கேள்வி: மோட்ச தீப வழிபாட்டில் கலந்து கொண்டால் பாவ கர்மங்களின் அளவு குறைக்கப்படுகின்றதா?

இறைவனின் அருளால் ஒரு ஏழை சிறு அளவு தனத்தை கூட செலவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறான். அன்றாடம் வாழ்க்கையில் போராட்டத்தையே காண்கிறான். வறுமையின் உச்சத்தில் இருக்கிறான். அவனைப் போன்ற மனிதர்கள் ஆலயம் சென்று வெறும் உடல் ரீதியான தொண்டை செய்துவிட்டு எதை வேண்டினாலும் ஒருவேளை இறைவன் அருளால் கிடைக்கலாம். ஆனால் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மோட்ச தீபத்திலோ வேறு வழிபாடுகளிலோ கலந்து கொண்டு வணங்கி விட்டு வந்தால் மட்டும் பலன் கிட்டாது. அந்த தொண்டிற்கு உண்டான செலவினங்களை தாராளமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் இருக்கிறது நான் மிகவும் போராடி சேர்த்து வைத்திருக்கிறேன். நான் ஏன் தர வேண்டும்? என் அந்திம (இறுதி) காலத்திற்கு நான் யாரிடம் கையேந்துவது? என்ற சித்தாந்தங்களும் கொள்கைகளும் உள்ளவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு சென்று மிகவும் சிக்கனமாக சாமர்த்தியமாக நடந்து கொண்டால் ஒரு பலனும் அவர்களுக்கு கிட்டாது.

சண்முகன்

ஆறுமுகங்களும் பன்னிருகைகளுடன் கொண்ட சண்முகன். ஸ்ரீ சிகாநாதசாமி (சிகாகிரீஸ்வரர்) கோவில் குடுமியான்மலை. புதுக்கோட்டை மாவட்டம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 528

கேள்வி: தீபத்தை புதிதாக தான் ஏற்ற வேண்டும். பழைய விளக்கில் எண்ணையை ஊற்றி தீபத்தை ஏற்றக்கூடாது என்று சொல்லப்படுகிறது அது பற்றி விளக்குங்கள்:

இறைவன் அருளால் பரிகாரம் கோரிக்கை பாவங்கள் குறைய வேண்டும் என்று ஒரு நேர்த்திக்கடனாக செய்யப்படும் பூஜைகளிலே புதிய விளக்குகளை ஏற்றுவதும் புதியதாக அனைத்தையும் பயன்படுத்துவதும் சிறப்பு. ஆனால் சாதாரணமாக ஒரு ஆலயத்துக்கு செல்கிறான் ஒரு மனிதன். அங்கு ஒரு தீபம் அணையும் நிலையில் இருக்கிறது. அதனை தூண்டிவிட்டு சுடர்விட செய்யலாம். அதில் ஒன்றும் தோஷம் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் தொண்டாக செய்யும் பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றுவது தவறில்லை. ஆனால் பிராயச்சித்தம் என்று வரும்பொழுது ஏற்றிய தீபத்தில் ஏற்றக்கூடாது. சாப்பிட்ட இலையில் சாப்பிடுவாய் என்றால் ஏற்றிய தீபத்தில் ஏற்றலாம்.

சிவசக்தி

சிவபெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை. அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள். அவள் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் சிற்பிகள். இடம்: ஹலபேடு. ஹாசன் மாவட்டம் கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 527

கேள்வி: சித்தர்கள் கூறிய பரிகாரம் பிரார்த்தனை சிறந்ததா? நாங்கள் ஆலயத்திற்கு சென்று செய்யும் பரிகாரம் பிரார்த்தனை சிறந்ததா? இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கூறுங்கள் ஐயனே:

இறைவன் அருளால் உண்மையான பிரார்த்தனைகளை நாங்கள் கூறி செய்தாலும் மனிதனாக செய்தாலும் இரண்டிற்கும் நல்ல பலன் உண்டு. இது ஒரு நிலை அடுத்ததாக மகான்களும் ஞானிகளும் வழிகாட்டி அதன் மூலம் பரிகாரங்களை செய்யும் பொழுது மனிதனுக்கு சற்று கூடுதல் பலமும் வலிமையும் கிடைப்பது என்பது உண்மையாகும். இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் ஆளுகின்ற அரசனை நேரடியாக சென்று பார்த்து உதவி கேட்பது ஒருவகை. அந்த அரசனுக்கு நெருங்கிய உறவின் மூலம் செல்வது இன்னொரு வகை. இரண்டில் எது சிறப்பு? என்பதை புரிந்து கொண்டால் இந்த வினாவிற்கு விடை புரியும்.

நடராஜர்

வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர் இருவருக்கும் நடராஜர் தனது திருநடனத்தை காட்டி அருளிய காட்சி. இடம் முக்தீஸ்வரர் கோவில். மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 526

கேள்வி: ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் சுலபமாக தீர எளிமையான பரிகாரங்கள் இருக்கிறதா?

பரிபூரண சரணாகதியோடு இறைவனின் வணங்குவது கூடுமானவரை பிறருக்கு துன்பம் செய்யாமல் வாழ்வது நேர்மையாக உழைத்து ஈட்டிய பொருளை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் கூடுமானவரை தக்க ஏழைகளுக்கு பயன்படுத்துமாறு செய்வது அன்றாடம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று முடிந்த தொண்டை செய்வது இது போதும் அப்பா.

கல்யாண சுந்தரேசுவரர்

மணக்கோலத்தில் சிவனும் உமையவளும். இடம் திருவாலந்துறையார் திருக்கோயில் மகாமண்டபத்தில் நுழைவாயில் வலதுபுறம் அமைந்துள்ளது. கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.