கஜசம்ஹாரமூர்த்தி

சிவபெருமானின் 64 வடிவங்களில் கஜாசுர சம்ஹாரர் என்ற வடிவமும் ஒன்று. தாருகாவன முனிவர்கள் சிவபெருமானை அழிக்க அபிசார வேள்வி நடத்தி அதில் இருந்து கஜசூரன் என்ற யானையை உருவாக்கி சிவபெருமான் மீது ஏவி விட்டனர். இறைவன் கஜசூரன் என்ற யானையின் தோலை உரித்து தனது மேல் போர்த்திக் கொண்டு கஜசம்ஹாரமூர்த்தியாக நின்று தாருகாவன முனிவர்களின் அகங்காரத்தை அழித்து அவர்களுக்கு அருள் பாலித்தார். இவர் கரி உரித்த சிவன் என்றும் அழைக்கப்படுகிறார். கரி என்றாலும் யானை என்று பொருள். இந்த சிற்பம் உள்ள இடம் திருவதிகை வீரட்டானேசுவரர்கோவில் கடலூர் மாவட்டம்.

குருநாதர் கருத்துக்கள் #1.21

இவ்வுலக நிலையில் பொதுவாக மானிடர்களிடம் ஓர் தன்மை உண்டு. அத்தன்மையானது மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது. பொதுவாக மற்றவர்கள் நல்ல நிலையில் இருந்தால் அதைக்கண்டு யாமும் அந்த நிலையை அடைய வேண்டும் என்று எண்ணாது சிறு பொறாமைத் தன்மையையும் வளர்க்கின்றனர். இதனைத் தவிர்த்தல் வேண்டும் என்று இங்கு கூறுகிறோம். பொதுவாக ஒப்பிடுவதை ஓர் நல்வழியில் மாற்றி அமைத்தல் வேண்டும். மற்றொருவரின் நல்குணங்கள் நம்மிடம் உள்ளதா என்று ஆராய்தல் வேண்டும். அவ்விதம் இல்லையேல் அதனை நம் வாழ்வில் அமைக்க முயற்சித்தல் வேண்டும். இது மட்டும் அல்லாது தீயவர்களின் குணங்கள் நம்மிடத்தில் உண்டா என்று எண்ணி அவ்விதம் இருந்தால் அதை நீக்குதல் வேண்டும். இதுவே சீரான ஒப்பிடும் முறை என்று இங்கு கூறுகிறோம். இக்காலத்தில் ஒப்பிடுதல் செல்வம் அறிவு பதவி என்கின்ற நிலையில் செல்கின்றது. இது ஓர் வருத்தமான காரியமாகின்றது. சிறிது சிறிதாக ஒப்பிடுதலை மாற்றி நம் நன்மைக்கென ஒப்பிட்டுப் பயன் பெறுவீர்களாக.

குருநாதர் கருத்துக்கள் #1.20

கேள்வி: கடவுள் என்று கூறினால் அவர் ஆண்பாலா? பெண்பாலா? அவரை எவ்விதம் வணங்க வேண்டும்?

ஒவ்வொரு மனிதர்களிலும் ஆண்பால் பெண்பால் உண்டு என்கின்றதை அறிதல் வேண்டும். அமைதி அளிப்பது அசையா நிலையை அளிப்பது ஆண்பால் என்றும் அசையும் சக்தியானது பெண்பால் என்றும் உணர்தல் வேண்டும். சில சமயங்களில் பெண்மையும் சீறி எழுந்து ஆண் செய்யும் தொழில்கள் செய்கின்றதை காண்கின்றோம். இவ்விதமே ஆண்களும் சில சமயங்களில் மௌனம் சாதித்து அழுது ஒதுங்கி விடுகின்றனர். இது உள்ளிருக்கும் பெண்பால் செய்யும் தொழிலாகின்றது என்பதே உண்மையான நிலை. இறைவனைப் பொறுத்த அளவில் அங்கு பால் (ஆண்பால் பெண்பால்) இல்லை. பிரம்மம் என எடுத்துக் கொண்டால் பிரம்மத்திற்குப் பால் (ஆண்பால் பெண்பால்) இல்லை. குணங்கள் இல்லை ஆசைகள் இல்லை பாசங்கள் இல்லை. சுத்தம் முழுமையான சுத்தம் சுத்த சிவம் என்கின்ற பொருளாகின்றது. இவ்விதம் இருக்கையில் நமக்கு ஏன் பெண் ரூபங்கள் ஆண் ரூபங்கள் படைத்து இருக்கின்றான்? இது இறைவனாகப் படைக்கவில்லை. மனிதன் எவ்விதத்தில் இறைவனை வணங்குகின்றானோ அந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளித்து அருள் பாலிக்கின்றான் என்பதே உண்மையான நிலை.

இவ்விதம் இருக்க சக்தி பெரிதா? சிவன் பெரிதா? என்கின்ற ஓர் பழமையான வினா ஒன்றும் இங்கு காண்கின்றோம். உண்மையாக கூறுகையில் இறைவன் நமக்குள் இருக்கின்றான் இது உண்மை. அவ்விறைவன் எங்கு இருக்கின்றான்? ஆண்பால் பெண்பால் உள்ள தேகத்தில் இருக்கின்றான். அவ்விதம் இருக்கும்போது தாயாகவும் தந்தையாகவும் அவ்வொரு சக்தியே இருக்கின்றது என உணர்தல் வேண்டும். வணங்குவது உங்களது விருப்பமாக இருக்கும். ஏனெனில் எந்த ரூபம் உமக்கு அதிகமாக பிடிக்கின்றதோ அந்த ரூபத்தில் வணங்கிக் கொள்வாய் அந்த ரூபத்தில் இறைவன் காட்சி அளிப்பான். இதில் எவ்வித குழப்பமும் இல்லை. இருப்பினும் இறையருளானது பால் (ஆண்பால் பெண்பால்) அற்றது என்கின்ற நிலையை இங்கு யாம் விளக்கினோம்.

குருநாதர் கருத்துக்கள் #1.19

கேள்வி: அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்பது பழமொழி என்றால் தேக உபத்திரவம் செய்வது நலம்தானா?

இதன் உண்மையான பொருளை அறிந்து கொண்டால் எளிதாகப் புரியும். அடி உதவுவது போல் என்கின்றதை தனியாக எடுத்துக் கொண்டால் கட்டையால் அடிப்பதோ கரங்களால் அடிப்பதோ அல்ல என்றும் இங்கு யாம் பணிவுடன் எடுத்துரைக்கின்றோம். அடி உதவுவது போல் என்றால் திருவடி உதவுவது போல் என்கின்ற பொருளாகின்றது. இறைவனுடைய பாதங்களைச் சரணடைந்தால் அதுவே போதுமானது. இது பெருமளவில் உதவும் உறவினர்களை விட பெரிதாக உதவும் என்பது பொருளாகின்றது.

கேள்வி: கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் இதற்கு என்ன பொருள்?

மரத்தில் மறைந்தது மாமத யானை மரத்தை மறைத்தது மாமத யானை. உதாரணமாக கல்லில் ஒரு நாயின் சிலையை வடிவமைத்தால் குழந்தைகள் காண்பது நாயாகும். அவர்களுக்கு அந்த வினாடி கல் மறைந்து விடுகிறது. சிற்பி காண்பது கல்லாகும். சிற்பிக்கு நாய் மறைந்து விடுகிறது என்பதே பொருளாகின்றது. அவரவர் மனப்பான்மைக்கேற்பவே அனைத்தும் தோற்றமளிக்கிறது.

குருநாதர் கருத்துக்கள் #1.18

கேள்வி: காண்பவனும் அவனே கண்டதும் அவனே இடைவெளியும் அவனே என்ற ஓர் சொல்லுக்குப் பொருள் என்ன?

அனைத்திலும் இறைவன் இருக்கின்றான் என்கின்றதை உணர்த்திடவே இவ்வித சொல்லாகின்றது. அகம் பிரம்மாஸ்மி என்பது ஒரு பக்கமாக யாமும் பிரம்மமும் ஒன்றே என்கின்ற பொருள் அளிக்கின்றது. இது அதற்கும் மேலாக யாம் மட்டுமின்றி அனைத்தும் இறை அருளே அனைத்தும் பரப்பிரம்மமே என்கின்ற பொருளை விளக்குகின்றது. உட்பொருள் என்னவென்றால் இந்நிலையில் அனைத்து உயிர் ஜீவராசிகளின் மேலும் அன்பு செலுத்த வேண்டும். பாசம் செலுத்த வேண்டும். அவர்களையும் இறைவனாக காணுதல் வேண்டும் என்பதே பொருளாகின்றது. கலியுகத்தில் இது சிறிது கடினமானதாகும் என யாம் அறிவோம். இருப்பினும் இயன்ற அளவிற்கு இறைவனை அனைத்திலும் கண்டு தீயவையையும் தீய செயல்களையும் நல் செயல்களையும் இறைவனின் திருவிளையாட்டாகக் கண்டுகொண்டால் குழப்பம் நீங்குவது மட்டுமல்லாமல் மேன்மையும் அடையக்கூடும் என்பதே பொருள் ஆகின்றது.

குருநாதர் கருத்துக்கள் #1.17

கேள்வி: மழை கொடுப்பது யார் வருணனா?

இதை யாம் சிறிது மறுக்க வேண்டும். நன்றாக சிந்தித்தால் மழை நமக்கு அளிப்பது சூரிய பகவான் ஆவார் என்று அறிதல் வேண்டும். பூமியில் இருக்கும் நீர் தனை ஆவியாக்கி மேல் எடுத்துச் சென்று மேகங்களாக மாற்றி சில இடங்களில் மழை பொழிய வைக்கின்றான். பின்பு இந்நாட்டில் இச்சமயத்தில் இவ்வளவிற்கு வெப்பம் இருந்த போதிலும் மழை ஏன் இல்லை? என்று ஓர் வினாவும் எழும்புகின்றது. இதற்குப் பொருள் எளிது. இம்மழை மேகங்கள் எங்கு தர்மம் நிலை நாட்டுகின்றதோ அங்கு செல்லும் என்பதே பொருள்.

இதற்குச் சிறிதாக உதாரணங்கள் யாம் அளிப்போம். ஆகம ரீதியில் சிறப்பாக இன்றும் ஆலய வழிபாடுகள் நடக்கும் தலம் பரசுராம ஷேத்திரம் என்பதும் அங்கு மழை எப்பொழுதும் பொழியும் என்கின்ற நிலையும் உண்டு. இரண்டாவதாக கர்நாடகா எனும் பிரதேசத்தில் பலப்பல ஆண்டுகளாக ஆலயங்களில் அன்னம் அளிக்கப்படுகின்றது. இது அன்னதான சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது. இதன் வழியாக அங்கும் மழை பொழிகின்றது. ஓர் குறுகிய காலத்திற்கு முன்பாகவே இந்நாட்டிலும் இத்தகைய தானங்கள் மீண்டும் துவங்கியுள்ளார்கள் என்பதும் சிறிது காலமாகவே வழிபாடுகளில் சிரத்தை காட்டுகின்றனர் என்றும் இங்கு எடுத்து உரைத்தோமே. இனி வரும் காலங்களில் இங்கும் நன்றாக மழை பொழியக் காணும் என்றென கூறுகின்றோம்.

யம சண்டிகேசுவரர்

தமிழகத்தில் சில சிவாலயங்களில் சண்டிகேசுவரராக யமதர்மர் உள்ளார். திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோயில் திருவாரூர் போன்ற சிவாலயங்களில் யமதர்மர் சண்டிகேசுவரராக உள்ளார். இவருக்கு யமசண்டிகேசுவரர் என்று பெயர். அனைத்து சிவத்தலங்களிலும் ஒரு சண்டிகேஸ்வரர் மட்டுமே சிவ தியானத்தில் ஆழ்ந்திருப்பார். திருவாரூரில் மட்டும் இரண்டு சண்டிகேஸ்வர்கள் உள்ளார்கள். முதலாமவர் ஆதி சண்டிகேஸ்வரர். இவர் தியானத்தில் இருப்பார். மற்றொருவர் யம சண்டிகேஸ்வரர். திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்கள் என்பதால் யமனுக்கு இவ்வூரில் வேலை இல்லை. இவ்வூரில் பிறந்தவர்களின் காலக் கணக்கை சண்டிகேஸ்வரரே கவனிக்கிறார். ஆகவே இங்கு யமதர்மர் சண்டிகேஸ்வரர் ஆனார் என்கிறது தல புராணம்.

இராவணன் அனுக்ரஹ மூர்த்தி

இறைவன் இராவணனுக்கு அருளிய வடிவம் இராவண அனுக்கிரகமூர்த்தி. பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் இலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லக் கூடிய தேரினை வைத்திருந்தான் இராவணன். ஒரு முறை கயிலை மலை வழியாக இராவணன் தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதிக்காமல் மலையைப் பெயர்க்க எண்ணி மலையை அசைத்தான். மலை அசைவதைக் கண்ட உமையவள் அஞ்சினாள். இதை உணர்ந்த சிவபெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர் நீண்ட ஆயுள் வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார். தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. இடம் முதல் சிற்பம் நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி. இரண்டாவது படம் எல்லோரா குகை கோயில் சிற்பம்

குருநாதர் கருத்துக்கள் #1.16

பொதுவாக வெப்பம் அதிகம் என்று பலர் கூறுவதைக் கேட்டோம். மனிதனின் உள்ளிருக்கும் வெப்பத்தை விட இந்த வெப்பம் பெரிதா? என்று யாம் கேட்கிறோம். உள்ளிருக்கும் அனைத்தும் வெப்பம் அளிப்பதாகவே காண்கின்றோம். இவ்வெப்பத்தின் காரணமாக மனிதனின் சிந்தனை குலைந்து போவதையும் கண்டோம். இவ்வெப்பம் எதனால் உண்டாகுகின்றது என சிந்தித்தல் வேண்டும். வெளியாகக் காணும் வெப்பம் கதிரவனால் என்று உறுதியாக கூற இயலும். உள்ளில் இருக்கும் வெப்பம் எதனால் தோன்றுகிறது என வினாவக் கண்டால் இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஓர் கதிரவன் தானா? பல கதிரவர்கள் உள்ளிருந்து ஆட்டிப் படைக்கின்றனர் என்றும் இங்கு எடுத்தரைப்போம். இதில் முதன்மையான அதிக வெப்பம் அளிக்கும் காரணம் என்ன என வினாவக் கண்டால் இதற்கு மூல காரணமாக யாம் காண்பது தேவையற்ற எதிர்பார்ப்புக்கள் என்று கூறுவோம். எதிர்பார்ப்புகளின் விளைவாக பலப்பல தவறுகள் செய்கின்றனர் மானிடர் என்றும் கூறி இங்கிருக்கும் அனைவரையும் யாம் சுட்டிக் காட்டவில்லை என்றும் அறிதல் வேண்டும். இது ஓர் பொது விளக்கமாக எடுத்துக் கொள்வீர்களாக.

முதலாவதாக ஆண் குழந்தை வேண்டும் என எதிர்பார்ப்பு பெண்ணாக பிறந்தால் ஆ என்ன துக்கம்? ஏன் என்றால் அந்தப் பெண் அனைவரையும் விழுங்கி விடுவதாக எண்ணுகின்றனர். இவ்விதம் இல்லை கலியுகத்தில் பெண்ணே பெரிது என்று கூறுவோம்.

இரண்டாவதாக பெற்றக் குழந்தை இந்தக் கல்வி கற்க வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அக்குழந்தைக்கு என்ன விருப்பம் என்று எவரும் சிந்திப்பதில்லை. அந்த ஆன்மா எந்த நாட்டம் செல்கின்றது என்று எவரும் சிந்திப்பதில்லை. இது ஓர் பெரும் வெப்பமாக யாம் காண்கின்றோம்.

மூன்றாவதாக அக் குழந்தை அவ்வழியே செல்லாது வேறு வழி நாடும் போது ஆ என்ன துயரம் மீண்டும் வருத்தமே இதன் வழியாக எதிர்பார்ப்பு போய் விட்டது என் வாழ்க்கை போய் விட்டது என்று பெற்றோர் கருதுவார்கள். இதுவும் வெப்பத்தை உண்டாக்குகிறது.

நான்காவதாக இன்னாரைத்தான் நீ திருமணம் புரிதல் வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என குழந்தை கூறுகிறது பிடிக்காவிட்டால் என்ன சொத்து இருக்கின்றது என்று கூறுகின்றனர். இவ்விதம் பல வகையான சச்சரவுகள் அகம் தனில் வீண் விவாதங்கள் அனைத்தும் நடந்து ஓர் உஷ்ணமே உண்டாக்குகின்றது. விளைவு பூகம்பம் அமைதி போய் விட்டது. இதற்கு ஆண்டவனை ஓர் வழி கேட்போம். என்ன கேட்கப் போகின்றீர்கள்? நாம் உனக்கு அபிஷேகம் செய்கின்றோம் எனக்கு அமைதியைக் கொடு என்று உடனடியாக இங்கு ஓர் ஒப்பந்தம் ஓர் வியாபாரம் நடைபெறுகின்றது. உனது அபிஷேகம் ஆண்டவனுக்கு எதற்கு ஐயா? என பூசாரி வினாவுவான் என எதிர்பார்கின்றோம் ஆனால் அதுவும் அவ்விதம் இல்லை. ஓர் இருநூறு ரூபாய் தட்சணையாக நீ வைத்து விடு அனைத்தும் சிறப்பாக ஆண்டவன் மன்னிப்பான் என்று கூறுகின்றனர். பணம் செலுத்தி செலுத்தி மனிதனின் வாழ்க்கையே வியாபாரமாகி விட்டது. இவ்விதம் அனைத்தும் வியாபார ரீதியில் நீ இது தருகிறாயா நான் அது தருகிறேன் என்பது சாதாரண ஓர் காரியமாகி விட்டது.