ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 262

கேள்வி: கிருஷ்ணகிரி மத்தூர் சிவன் கோவில் கும்பாபிஷேகம் தடைகள் நீங்கி நிறைவேற தங்கள் அருளாசி:

இக்கோவில் பெயர் அருள்மிகு சோமேஸ்வரர் ஆலயம். மத்தூர் ஊராட்சி கிருஷ்ணகிரியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது.

கட்டாயம் விநாயகப் பெருமான் வழிபாட்டை உள்ளன்போடு செய்து உள்ளன்போடு அது தொடர்புடைய மாந்தர்கள் (மனிதர்கள்) அந்த ஸ்தல யாத்திரையை மேற்கொண்டால் நலம் நடக்கும்.

கேள்வியின் தொடர்ச்சி கேள்வி: இத்தலத்தில் (மத்தூர் சிவன் கோவில்) அன்னையின் ஆலயம் எழுப்ப வேண்டுகிறோம். இது 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறப்படுகிறது. இத்தலத்தின் சிறப்பு பற்றி கூற வேண்டுகிறேன். இத்தலத்தில் ஒரு சித்தரின் ஜீவ சமாதி உள்ளது என்பது உண்மையா?

இறைவனின் கருணையாலே இந்த ஸ்தலத்திற்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது. ஸ்தல புராணம் குறித்து நாங்களே ஒரு முறை என்ன நிகழ்ந்திருக்கிறது? அல்லது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? மனிதர்கள் இது வரை செவியாறலாகக் கேட்டவை எவை? கேட்கத் தவறியவை எவை? என்றெல்லாம் பின்னர் கூறுவதாகக் கூறியிருக்கிறோம். அந்த நிலையிலே ஜீவ சமாதி என்பதை விட பல சித்தர்கள் வந்து வழிபட்டார்கள். இன்றும் வழிபடுகிறார்கள் என்று கூறுவது பொருத்தமாகும். அதே தருணம் இந்த நிலையிலே நல்விதமாய் அன்னைக்கு ஆலயமும் திருப்பணியும் ஆவதற்கு நாங்கள் அருளாசி கூறுகின்ற அதே தருணம் மனிதர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அன்னையாக தெய்வத்தை வணங்கத் தெரிகிறது. அன்னையாக நதியைப் போற்றத் தெரிகிறது. ஆனால் நிஜமான வடிவிலே வாழ்கின்ற பெண்களையெல்லாம் இடர்படுத்தினால் கொடுமைப் படுத்தினால் எப்படியப்பா இறைவன் அருள்வார்? அன்னையை வணங்க வேண்டும் அன்னைக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறிக் கொண்டே அதே பெண்களை நீ இப்படி இருப்பதால் இப்பொழுது இங்கு வரக்கூடாது. நீ பெண் என்பதால் இந்த பூஜையை செய்யக்கூடாது என்றெல்லாம் யார் வகுத்துத் தந்தார்கள்? என்று தெரியவில்லை. எனவே முதலில் அவரவர்கள் இல்லத்தில் உள்ள பெண்களை ஒவ்வொரு ஆணும் மதிக்க வேண்டும். அதைப் போல ஆண்களையும் பெண்கள் மதிக்க வேண்டும். இதை செய்யாமல் ஆலயத்திற்கு சென்று அங்கு மட்டும்தான் அன்னை இருப்பதாக எண்ணினால் கட்டாயம் அந்த அன்னையின் அருள் யாருக்குமே கிட்டாது. பொதுவாக ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம். அல்லது அதற்கு மாறான குணங்கள் கொண்டவனாக இருக்கலாம். பெண்களிலும் விரும்பத்தகாத குணங்கள் கொண்டவர்களும் இருக்கலாம். அது பற்றி நாங்கள் கூறவில்லை. ஆனாலும் கூட மனித வடிவம் எடுத்துவிட யாரையும் பழிக்காமல் இடர்படுத்தாமல் ஒருவன் வாழ்ந்தாலே அதுவே இறைவனை பூஜை செய்வதற்கு சமமாகும்.

சுலோகம் -148

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-29

பிரகிருதியில் உண்டான குணங்களால் மிக்க மயக்கம் அடைந்துள்ள மனிதர்கள் குணங்களிலும் கர்மங்களிலும் ஈடுபடுகிறார்கள். முற்றும் அறிந்திராத குறை மதியுடைய அந்த அஞ்ஞானிகளை முழுமையான அறிவு பெற்றுள்ள ஞானி தடுமாறச் செய்யலாகாது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 146 இல் உள்ளபடி பிரகிருதியில் உண்டான மூன்று குணங்களால் ஆத்மாவை அறியாமல் மயங்கி நின்று அந்த குணங்களால் உண்டாகும் செயல்களில் மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். இறைவனை அறிந்து கொண்ட ஞானத்தை பெற்றவர்கள் முழுமையான ஞானத்தை பெறாத இவர்கள் கர்ம யோகத்தின் படி செய்யும் செயல்களை தவறு என்று சொல்லியோ இதனை செய்யக் கூடாது என்று சொல்லியோ கர்ம யோகத்தில் செல்பவர்களை தடுத்து ஞான யோகத்தில் செல்லுங்கள் என்று அவர்களை குழப்பக் கூடாது.

ஸ்ரீ யந்திர ஆலயம்

ஸ்ரீ யந்திர ஆலயம்

மத்திய பிரதேசம் அமர்கண்டக் என்னும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோவில். இந்த கோயிலின் நுழைவாயிலில் 4 தலைகளைக் கொண்ட பிரமாண்டமான சிற்பம் உள்ளது. இந்த 4 தலைகளும் லட்சுமி சரஸ்வதி காளி புவனேஸ்வரி தேவியின் முகங்களைக் குறிக்கின்றன. இவர்களுக்கு கீழே 64 யோகினிகளின் நேர்த்தியான சிற்பங்களும் விநாயகர் மற்றும் முருகனின் சிற்பங்களும் உள்ளன.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 261

கேள்வி: வைணவ ஆலயங்களில் தீர்த்தம் சடாரி துளசி போன்றவற்றையும் சிவ ஆலயங்களில் விபூதியை பிரசாதமாக வழங்குவதின் தாத்பர்யம் என்ன?

சில சிவ ஆலயங்களிலும் சடாரி வைக்கப்படுவது உண்டப்பா. எல்லாவற்றிலும் மனிதனின் வித்தியாசமான சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். நீ இப்படி செய்கிறாயா? நான் இப்படி செய்யமாட்டேன் என்பது போன்ற மனோபாவத்தில் வருவதுதான். இருந்தாலும் கூட சில ஆகமங்களுக்குப் பின்னால் பலவிதமான மகான்களின் நீதி போதனைகள் அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சகலமும் ஒரு தினம் ஒன்றுமில்லாமல் அழியப் போகிறது. அப்படி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது நெருப்பு. அந்த நெருப்பை தன்னகத்தே கொண்டவர் இறைவன். அந்த இறைவன் நெருப்பு வடிவமாக இருக்கும் பொழுது சிவனாக முக்கண்ணனாக லிங்க ரூபியாக இருக்கிறார். அந்த அக்னி எரிந்து கொண்டே இருக்கிறது. எரியும் அக்னியிலிருந்து என்ன வரும்? சாம்பல் வரும். எனவே அங்கே விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. அந்த விபூதி எரியும் அக்னியிலிருந்து வந்தாலும் விபூதி என்பது அக்னித் தன்மையும் கொண்டது. குளிர்ந்த தன்மையும் கொண்டது. அதே சமயம் தூய்மையான விபூதியை ஒருவன் நெற்றியிலே அதிகமாக இட்டால் கபாலத் தொல்லைகள் (தலைவலி) குறைவதோடு கபாலத்தின் உள்ளே இருக்கும் நீர் உறிஞ்சப்பட்டு பாதுகாப்பாக வெளியேறும். இதனால் சீதளத் தொல்லைகள் இல்லாமல் வாழலாம். அதனால்தான் அக்னி ஸ்வரூபமாக இருக்கக்கூடிய அந்த லிங்க ரூபிக்கு குளிர்ந்த வில்வத்தை ஆராதனை செய்ய பயன்படுத்த சொல்லி மகான்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அதே இறை குளிர்ந்த ரூபமாக மஹாவிஷ்ணுவாக அங்கே காட்சி தருகிறார். யோக நிலையிலே சயன நிலையிலே நின்ற நிலையிலே இருக்கிறார். அங்கு சதா குளிர் சதா நீர் எனவே அங்கு வெது வெதுப்பும் வெப்பமும் தேவை என்பதால் அதுபோல் துளசி தரப்படுகிறது. யாருக்கெல்லாம் சீதளத் தொல்லை இருக்கிறதோ நுரையீரலிலே நீர் கோர்த்துக் கொண்டு இருக்கிறதோ நுரையீரல் தொடர்பான பிரச்சினை இருக்கிறதோ சுவாசம் செய்யவே கடினமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் தூய்மையான செம்பு கலசத்திலே சிறிதளவு கருந்துளசியை இட்டு தூய்மையான நீரை இட்டு அதை ஏக நாழிகை அல்லது உபய நாழிகை இயன்றால் சில நாழிகைகள் வைத்திருந்து பலமுறை தன்வந்திரி நாமத்தை உருவேற்றி அந்த நீரையும் துளசி தளத்தையும் உண்டால் கட்டாயம் தேகம் (உடல்) நலமாக இருக்கும். எனவே எல்லா மருத்துவ முறைகளும் எல்லா விதமான மனிதனுக்குத் தேவையான பொருள் பொதிந்த ஆன்மீக உண்மையும் கொண்டதுதான் இறை வழிபாடு. இவையெல்லாம் சிறு குறிப்புதான். இன்னும் போகப் போக உள்ளே அதிக விஷயங்கள் இருந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு இறை வழிபாட்டின் நுட்பங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவம் நன்றாகவே புரிபடும். சிக்கல் இல்லாமல் வாழ்வு இல்லை சிக்கலையெல்லாம் மெதுவாக களைந்தால்.

ஒரு கடினமான ஓடு உடைய தேங்காய் இருக்கிறது. அந்தக் கடினத்தையும் மோதி முயற்சி செய்து உடைத்து விட்டால் தேங்காயின் வெண்மையான தன்மை தெரிகிறது. எனவே அந்த இறை தத்துவமும் சிக்கல் போலவும் கடினம் போலவும் இருந்தாலும் கூட போராடி அதனை புரிந்து கொண்டால் இறுதியில் அந்த தேங்காயின் தன்மை போல் இறை பொருள் என்பது மனிதனுக்கு புரியவரும். அதைப் போல் அக்னி ஸ்வரூபமாக இருக்கக் கூடிய தெய்வத்திற்கு இன்னொரு அக்னியைக் காட்டி இந்த அக்னியும் ஒன்று நீயும் ஒன்று அக்னியாகிய உன் தன்மையை நாங்கள் தொட இயலாது. ஆனால் உன் சார்பாக இந்த சிறு அக்னியை உனக்கு காட்டிவிட்டு அந்த அக்னியை நாங்கள் தொட்டு ஆராதனை செய்கிறோம் என்றுதான் தூய்மையான கற்பூர தீபமும் நெய் தீபமும் காட்டப்படுகிறது. இவையெல்லாம் பல மனிதர்கள் அறிந்த உண்மைதான். இவற்றுக்குள்ளேயே ஆழ்ந்து விடாமல் ஒரு மனிதன் தனக்குள் இருக்கக் கூடிய இறையையும் தனக்குள் உள்ள பாவங்களையும் வென்று எண்ணங்களில் எல்லா விதமான நல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் கட்டாயம் இறையருள் அது எந்த நிலையாக இருந்தாலும் அவன் எந்த வடிவை வணங்கினாலும் அவன் விரும்பும் வடிவில் அவன் விரும்பும் நிலையில் அவனுக்கு இறைவனால் காட்சி தரப்படும் அருளப்படும்.

சுலோகம் -147

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-28

சுலோகம் -147

நீண்ட புஜங்களை உடையவனே குணங்களின் பிரிவு கர்மங்களின் பிரிவு இவற்றின் தத்துவம் அறிந்த ஞானயோகி குணங்கள் அனைத்தும் குணங்களில் செயல்படுகின்றன என்று அறிந்து அவற்றில் பற்று கொள்ளாமல் இருக்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 146 இல் உள்ளபடி மூன்று குணங்களையும் அதன் பிரிவுச் செயல்களான கர்மங்களின் பிரிவுகளையும் அவை செயல்படும் விதத்தையும் அறிந்த ஞானத்தை பெற்ற யோகி தான் செய்யும் செயல்களில் பற்றுக்கள் இல்லாமல் செயல்படுவார்.

திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை பகுதி-1

“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 16-10-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 260

கேள்வி: ஒவ்வொருவருக்கும் பொருளாதாரக் கல்வி ஆன்மீகக் கல்வி கிடைக்க வேண்டுமென்றால் என்ன பயிற்சி என்ன வழிபாடு செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் எல்லோருக்கும் எல்லாம் கிட்ட வேண்டும் என்பது பொதுவாகவே நல்லவர்களின் பிராத்தனை ஞானியர்களின் பிராத்தனையாக இருந்தாலும் கூட கர்ம வினை என்ற ஒன்று இருக்கும் வரை இந்த ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அதே தருணம் இன்னொருபுறம் மனிதன் சுயமாக சிந்தித்து ஏதோ செய்த புண்ணியமோ அல்லது இறைவன் அருளோ என்னை இறைவன் நன்றாக வைத்திருக்கிறான். எனக்கு நிறைய செல்வம் சேர்ந்திருக்கிறது. என்னால் முடிந்த ஒரு சில குடும்பத்தையாவது நான் காப்பாற்றுவேன் என்று ஒரு முடிவெடுத்து அவன் செயலில் இறங்கி விட்டால் எல்லோருக்கும் எல்லாம் என்கிற நிலை வந்துவிடும். ஆனால் இவையெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கும். நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றுதான் மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான். இருந்தாலும் கூட பிராத்தனை என்று வைத்துக் கொண்டால் இறைவனை அன்னப் பூரணியாக வணங்கினால் இந்த அன்ன பிரச்சனை தீர்வதற்கும் இதே ஹயக்ரீவரையும் அன்னை கலைவாணியையும் (அன்னை சரஸ்வதி) வணங்கி வணங்கி வந்தால் கூட்டு வழிபாட்டிலும் இது போல முக்கியத்துவம் தந்து வந்தால் நல்லதொரு ஞானமும் கல்வி என்றால் ஏதோ மனிதர்களால் கற்பிக்கப்படும் கல்வியை நாங்கள் கூறவில்லை. மனிதர்களால் கற்பிக்கப்படும் கல்வியை நாங்கள் கல்வி என்றே ஒத்துக் கொள்வதில்லை. எனவே மெய்யான ஞானத்தை உணர்வதற்கு அது வழிகாட்டுவதாக இருக்கும். எனவே இந்த பக்தி மார்க்கம் தவிர இக்காலத்தில் வேறு எளிய வழி மனிதர்களுக்கு இல்லை.

கேள்வி: தனி மனிதன் தன் மானசீக குருவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

அவனவன் கற்ற விஷய பொருள்களில் அல்லது கேள்விப்பட்ட ஆன்மீக விஷயங்களில் எந்த குரு மீது இயல்பாக ஈர்ப்பு வருகிறதோ அந்த குருவை மானசீக குருவாக ஏற்றுக் கொள்ளலாம்.

சுலோகம் -146

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-27

இந்த உலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ப்ரகிருதியின் ஸத்வ ரஜோ தமஸ ஆகிய மூன்று குணங்களால் நடைபெறுகின்றன. ஆனால் மனம் முழுவதும் அகங்காரம் நிரம்பிய ஒருவன் இந்த செயல்களை நான் செய்தேன் என்று நினைக்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சத்வ குணம் என்பது அமைதி தர்மச்செயல்கள் மற்றும் தன் செயல்களைப் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விடுவது பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது ஆகியவை ஆகும்.

ரஜோ குணம் என்பது ஊக்கம் ஞானம் வீரம் தருமம் தானம் கல்வி ஆசை முயற்சி இறுமாப்பு வேட்கை திமிர் தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது வேற்றுமை எண்ணம் புலனின்பப் பற்று சண்டைகளில் உற்சாகம் தன் புகழில் ஆசை மற்றவர்களை எள்ளி நகையாடுவது பராக்கிரமம் பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல் பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகியவை ஆகும்.

தமஸ குணம் என்பது காமம் வெகுளி மயக்கம் கலக்கம் கோபம் பேராசை பொய் பேசுதல் இம்சை யாசித்தல் வெளிவேசம் சிரமம் கலகம் வருத்தம் மோகம் கவலை தாழ்மை உறக்கம் அச்சம் சோம்பல் காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும் பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் ஆகியவை ஆகும்.

இந்த மூன்று குணங்களினால் இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் மனிதனிடம் நான் என்ற அகங்காரம் இருப்பதால் மனிதன் தான் செய்யும் செயல்கள் அனைத்தையும் நான் செய்தேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

குருவாயூரப்பன் அருள்

முன்னொரு காலத்தில் ஒரு வயதான பெண்மணி இருந்தாள். அவளுக்கு குருவாயூரப்பன் மிகவும் விருப்பமான தெய்வம். அவளுடைய ஊர் குருவாயூருக்கு மிகத் தொலைவில் இருந்தது. அவளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. பண வசதியும் இல்லை. ஆனால் குழந்தைக் கண்ணனைக் காண வேண்டும் என்றும் அவனுக்கு ஏதாவது கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவளுக்குக் ஆசை இருந்தது. அவள் வீட்டில் மஞ்சாடி மரம் (குந்துமணி மரம்) இருந்தது. அதிலிருந்து நிறைய குண்டுமணிகள் கீழே விழும். அவற்றைச் சேகரித்து நன்கு கழுவி துடைத்து ஒரு பை நிறைய சேர்த்து வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணனைக் காண வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் நடை பயணமாகவே புறப்பட்டாள். கண்ணனைக் காணவும் அவனுக்கு குண்டுமணிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயணம் செய்தாள். ஒரு மண்டல காலம் பயணம் செய்து கோவிலை அடைந்தாள்.

கோவிலை அடைந்த சமயம் கோவிலில் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் அந்த ஊர் அரசன் தன் பக்தியை வெளிப்படுத்த கோயிலுக்கு ஒரு யானையை சமர்ப்பிப்பது வழக்கம். அந்த நாளிலே இந்த வயதான பெண்மணியும் வந்திருந்தாள். கூட்டம் அதிகமாக இருந்த படியால் தன்னுடைய பையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். சேவகர்களின் அஜாக்கிரதையால் அவள் கீழே தள்ளப்பட்டாள். பை கீழே விழுந்து அதிலிருந்த குண்டுமணிகள் சிதறி விழுந்தன. வயதான பெண்மணியின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஒரு சொட்டுக் கண்ணீர் தரையில் விழுந்தது. அதே சமயம் கோயிலுக்கு சமர்ப்பிக்கக் கொண்டு வந்த யானை மதம் பிடித்து ஓட ஆரம்பித்தது. அனைவரும் என்ன ஆயிற்று? என்று பதறினர். கோவில் பொருட்களை யானை நாசம் செய்ய ஆரம்பித்தது. யானையை அடக்க முடியவில்லை. கலங்கிய மன்னனும் குருவாயூரப்பனிடமே ப்ரஸன்னம் கேட்டான். அப்பொழுது கர்ப்பக்கிரகத்தில் இருந்து நீங்கள் என் பக்தையை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் பக்தை அன்பாகக் கொண்டு வந்த குண்டுமணிகள் எனக்கு வேண்டும் என்று அசரீரி கேட்டது. உடனே அங்கிருந்த அனைவரும் கீழே சிதறிக் கிடந்த குண்டு மணிகளை பொறுக்கி எடுத்தனர். அதை அந்த வயதான பெண்மணியிடம் கொடுத்த அரசர் அவளிடம் மன்னிப்பும் கேட்டான். அவளை சகல மரியாதைகளுடன் சன்னிதிக்கு அழைத்துச் சென்றனர். அவள் ஆசையுடன் குண்டு மணிகளை அப்பனிடம் சமர்ப்பித்ததும் யானையின் மதம் அடங்கியது. அவள் பக்தியின் நினைவாக இன்றும் குருவாயூர் கோயிலில் உருளியில் குண்டுமணிகள் வைக்கப்பட்டுள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 259

கேள்வி: பத்ரிநாத்தில் (உத்திராகண்ட் மாநிலம்) சிரார்த்தம் செய்தாலே போதுமானது. ஒவ்வொரு வருடமும் வந்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது பற்றி:

இறைவன் கருணையாலே சில ஆலயங்களில் குறிப்பை எழுதி வைத்து இருப்பார்கள். இங்கு வந்து வழிபட்டால் கோடி முறை ஆலயத்தை வணங்கியது போல என்று இங்கு ஒரு முறை பஞ்சாட்சரம் ஜெபித்தால் கோடி முறை ஜெபித்ததற்கு பலன் உண்டு என்று. இவையெல்லாம் அந்த ஆலயத்தின் சிறப்பையும் அப்படியாவது மனிதர்கள் வர வேண்டும் என்கிற நல்ல நோக்கில் கூறப்படுவது. அப்படியே ஒரு வாதத்திற்கு இது உண்மையென்று வைத்துக் கொள்வோம். அனைத்து நதிக்கரை ஸ்தலங்களிலும் இப்பொழுது நடக்கின்ற எல்லோரும் ஆத்ம சுத்தியோடு (யாம் செய்து வைக்கின்ற மறை (வேதம்) கற்றவனை மட்டும் கூறவில்லை அதிலே கலந்து கொள்ளக் கூடிய மனிதர்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்) உடல் சுத்தம் உள்ள சுத்தம் பரிசுத்தத்தோடு பூஜை செய்கிறார்களா? பிழையற வேத மந்திரங்களை ஓதுகிறார்களா? ஒருவனுக்கு ஒரு முறை சரியான முறையில் பித்ரு காரியங்களை செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் குறைந்தபட்சம் எமது நோக்கில் இந்தப் பூவுலகில் 48 தினங்கள் (ஒரு மண்டலம்) ஆகும். ஒரு குடும்பத்திற்கு 48 தினங்கள் சில மறையோதுபவர்கள் (வேதத்தை ஓதுபவர்கள்) முறையாக செய்து வைத்த பிறகு 48 நாட்கள் அவர்கள் உபவாசம் இருந்து உருவேற்ற வேண்டும் அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை. பிறகுதான் அடுத்த பணியை செய்ய வேண்டும். இதையெல்லாம் கூறினால் இந்த அவசர உலகத்தில் சாத்தியமில்லை என்பார்கள். எனவே ஒரு முறை செய்தால் போதும் என்றால் அந்த ஒரு முறை எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்கின்ற நிலை வந்தால் அது பொருந்தும். ஆனால் இப்பொழுது இருக்கின்ற நிலையிலே ஒன்றுக்குப் பலமுறை பலமாக செய்தாலும் வினைகள் குறைவதில்லை எனும் பொழுது தாராளமாக பல ஸ்தலங்கள் சென்று பலமுறை செய்யலாம். தவறொன்றுமில்லை.

கேள்வி: ஆலயம் செல்ல இயலாத பொழுது மானசீகமாக இறைவனை வணங்குவது ஏற்புடையதா?

தாராளமாக. ஒருவன் ஆலயம் சென்று வணங்குவதே பக்தி வளர வேண்டும் என்பதற்காகத்தான். ஆலயம் சென்று வேறு எங்கோ கவனம் இருப்பதை விட வேறு எங்கு இருந்தாலும் இறைவனிடம் கவனம் இருந்தால் அதும் வழிபாடுதானப்பா.