சுலோகம் -44 # 45

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #44

ஜனார்த்தனா குல தர்மங்கள் அடியோடு அழிந்து விட்டபின் இருக்கும் மனிதர்களுக்கு எக்காலமும் நரகவாசம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?

வர்ணகலப்பின் காரணமாக சில தலைமுறைகள் சென்ற பிறகு பார்த்தால் பலரும் குலத்திற்கு உரிய தர்மங்களை மறந்து போயிருப்பார்கள். இதனால் குலத்திற்குரிய வழிபாட்டு முறைகள் மறைந்து அழிந்து போகும். அதனால் அந்த தர்மங்களை கடைபிடிக்காமல் அவரவர்கள் தங்களின் விருப்பம் போல் செய்து கொண்டிருப்பார்கள். இப்போது ஒழுக்கமுறைகள் இல்லாததால் தவறுகள் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இங்கு அதர்மம் சூழ்ந்து கொள்ளும் பாவங்கள் வந்து சேரும். இதன் விளைவாக அவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். இதனை படித்து அறிந்து வைத்துள்ள அர்ஜூனன் கண் கூடாக இதனை பார்க்கவில்லை. ஏனெனில் அர்ஜூனன் காலத்தில் இது போல் ஒரு சம்பவம் நடைபெறவில்லை. ஆகையால் இதனை கேள்விப்பட்டிருக்கிறோம் என்று சொல்கிறான்.

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #45

ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் தயாராக உள்ளோம். இது மிகப்பெரிய பாவம் என்று உணர்ந்தும் அதனைச் செய்ய துணிந்து நிற்கிறோம்.

இந்த சுலோகத்தில் உள்ள கருத்து என்ன?

மேல் சொல்லப்பட்ட 3 சுலோகங்களில் உள்ளவற்றை நாம் தெரிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறோம். ஆனாலும் ராஜ்யம் சுகம் ஆகியவற்றிற்கு ஆசைப்பட்டு நம் உறவினர்களேயே கொல்லத் துணிந்து இந்த பாவத்தை செய்ய வந்திருக்கிறோம் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கூறுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 69

கேள்வி: தமிழ் மொழியை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? உலகத்தில் தோன்றிய முதல் மொழி எது? வேதத்தை இறைவன்தான் உருவாக்கினாரா?

உலகில் தோன்றிய முதல் மொழி குழந்தையின் அழுகுரல்தானப்பா. இந்த நிலையிலே தமிழ் ஒத்து பல்வேறு மொழிகளை இறைவன்தான் உருவாக்கினாரப்பா. ஆனால் அப்படி தோன்றிய மொழிகளுக்கு தோண்டாற்றக்கூடிய வாய்ப்பையும் பணியையும் இறைவன் எமக்கு தன் அளப்பெறும் கருணையால் தந்தாரப்பா.

கேள்வி: நெருங்கிய உறவில் திருமணம் செய்யலாமா? மருத்துவர்களோ நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் பிறக்கும் குழந்தை அங்கஹீனமாக பிறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி?

இறைவனின் கருணையால் நெருங்கிய உறவில் திருமணம் செய்வது இருக்கட்டும். திருமணம் செய்த பிறகுதான் உறவே நெருங்கவேண்டும். இந்த நிலையிலே இவையெல்லாம் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பழக்கம். ஒரு மார்க்கத்தை பின்பற்றக்கூடியவன் கூடாது என்கிற விஷயத்தை வேண்டுமென்றே இன்னொருவன் பின்பற்றுகிறான். நீ கூறிய மாற்று மார்க்கம் மட்டுமல்ல. இந்த இந்து மார்க்கத்திலேயே தென்பகுதியிலே ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள் நீ கூறிய அதாவது தங்கை முறை என்று மற்ற பிரிவுகளால் ஏற்கப்பட்ட ஒரு முறையை தாரமாக இன்றும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதர்கள் வகுத்துக் கொண்ட ஒரு நிலை. நாங்கள் வேறு விதமாகக் கேட்கிறோம். ஒரே குடும்பத்தில் அண்ணன் தங்கையாக பிறந்து ஒன்றாக வளர்கிறார்கள். எனவே தங்கை அண்ணன் என்று தெரிகிறது. விதிவசத்தால் பால்ய வயதில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து எங்கோ சந்திக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொண்டால் அப்பொழுது தங்கை என்ற உணர்வு அங்கு தலைதூக்குமா? சிந்தித்து பார்க்க வேண்டும். இதற்காக இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. மனித மனம் வக்கிரமாகி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாகரீகமாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் உறவுமுறை ஏற்படுத்தப்பட்டது. எம்மைப் பொருத்தவரை தனக்குள் பிரிவினையை வளர்த்துக் கொண்டு நான் இந்த பிரிவை சேர்ந்தவன். எனவே இதற்குள்தான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது மூடத்தனம். அந்த வகையில் பார்க்கும் பொழுது தொடர்பில்லாத இடத்திலிருந்து ஒருவன் பெண்ணை தேர்ந்தெடுப்பதும் பெண் ஆணை தேர்ந்தெடுப்பதும் மிகவும் சிறப்பு. உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. நல்லதொரு ஆரோக்கியமான சந்ததிகள் பிறப்பதற்கும் ஏற்புடையதாகும்.

சுலோகம் -43

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #43

இந்த வர்ணக்கலப்பு ஏற்படுத்துகின்ற குற்றங்களினால் தொன்று தொட்டு வருகின்ற குலதர்மங்களும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: ஜாதி தர்மங்கள் என்று எதனை குறிப்பிடுகிறது?

சுலோகம் -41 இல் குறிப்பட்டுள்ள குலம் என்று அழைக்கப் படுபவர்களின் அனைத்து பிரிவுகளை இங்கு ஜாதி என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு மரவேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். நகை வேலை தச்சர் தொழில் செய்பவர்களுக்கு என்று ஒரு குலம் இருக்கும் இவர்களது குலத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த தொழிலை செய்வார்கள். இருவரது குலம் வேறு வேறு என்றாலும் இருவரும் தச்சர் வேலை செய்பவர்களே இது போல் தச்சர் தொழில் செய்யும் பல பிரிவுகளில் இருப்பவர்களை மொத்தமாக குறிப்பிடும் போது ஜாதி என்ற வார்த்தை இங்கு வருகிறது.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணக் கலப்பு குற்றம் என்றும் ஜாதி தர்மங்களும் அழிந்து விடுகின்றன என்று சொல்வதன் காரணம் என்ன?

ஒருவர் தங்களது வர்ணத்தை விட்டு வேறு வர்ணத்தில் உள்ளவர்களை திருமணம் செய்யும் போது வர்ணக் கலப்பு ஏற்படுகிறது. இதில் பெண் ஆணின் குல தர்மத்தையோ அல்லது ஆண் பெண்ணின் குல தர்மத்தையோ தொடர்ந்து செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதால் இருவரில் ஒருவர் தங்களுடைய குல தர்மங்களை தொடர்ந்து செய்ய முடியாதபடி ஆகிறது. இப்படி சில தலை முறைகள் சென்ற பிறகு பார்த்தால் ஒரு குலத்தின் தர்மங்கள் (குலத்தின் தர்மத்திற்கான விளக்கம் சுலோகம்- 40 இல் உள்ளது) அனைத்தும் அழிந்து போயிருக்கும் இதற்கு முக்கிய காராணமாக இருப்பது வர்ணக்கலப்பு ஆகும் இதனையே இந்த சுலோகம் சுட்டிக் காட்டுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 68

கேள்வி: ஆன்மா என்றால் என்ன?

என்ன? என்று எம்மை வினவுவதைவிட என்ன? என்பதை அறியுங்கால் அவனவன் மனதை வினவினால் ஆன்மா என்பது என்ன? என்பது புரியவரும். புலன்களுக்குப் புலப்படாமல் இருக்கின்ற ஒரு உயிர் தத்துவம் தான் ஆன்மா. அந்த ஆன்மாவை புரிந்து கொள்ள சுய ஆய்வும் பாவங்களற்ற தன்மையும் மிக அவசியம். அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து விடுகின்ற மூச்சுக் காற்றை சற்றே நிதானித்து உற்று கவனித்து வந்தால் ஆன்மா என்பது என்ன? தான் என்பது என்ன? தேகம் என்பது என்ன? இறை என்பது என்ன? இந்த உலக வாழ்வு என்பது என்ன? என்பது மெல்ல மெல்ல புரியவரும். நாங்கள் எத்தனை வார்த்தை பயன்படுத்திக் கூறினாலும்கூட ஐயம் மேல் ஐயம் வந்து கொண்டுதான் இருக்கும்.

கேள்வி: அழியாத புண்ணியம் எது?

புண்ணியம் எப்பொழுதுமே அழியாதப்பா. புண்ணியத்தால் ஒரு மனிதன் பெறக்கூடிய விஷயத்தைப் பொறுத்துதான் அது அழியக்கூடியதா? அழியாததா? என்பதை தீர்மானிக்க முடியும். புண்ணியம் யாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணித்து அருட்புண்ணியமாக மாற்றிக் கொண்டால் அதனால் வரக்கூடிய பலன்கள் என்றும் அழியாது. ஆனால் புண்ணியம் யாவும் லோகாய (உலக) ஆதாயத்திற்காக ஒரு புண்ணியமாக மாற்றிவிட்டால் அதனால் வரக்கூடிய விஷயங்கள் யாவும் அழிந்துவிடும்.

சுலோகம் -42

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #42

இந்த குழப்பத்தால் அந்த குலத்தார்களும் அந்த குலத்தை அழித்தவர்களும் நரகம் செல்வார்கள். இவர்களின் பித்ருக்கள் பிதுர் பண்டங்களும் நீரும் இல்லாமல் வீழ்ச்சி பெறுவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து:

வர்ணங்கள் மாறி குலங்கள் மாறி திருமணம் செய்வதால் சில தலை முறைகளுக்கு பின் வருபவர்களுக்கு தங்களின் குலத்தின் பெயரும் அதன் வழிபாட்டு முறைகளும் ஒழுக்க முறைகளும் தெரியாமல் போகின்றது. குலத்தில் ஒற்றுமை மறைந்து இறுதியில் அந்தக் குலமே இல்லாமல் போகின்றது. இதனால் அந்தக் குலத்தில் வழிவழியாக முதாதையர்களுக்கு கொடுத்த வந்த தர்ப்பத்தையும் பிதுர் கடனையும் கொடுக்காமல் விட்டு விடுகின்றார்கள். ஒழுக்க முறைகள் மாறிவிடுகின்ற படியால் தர்மத்தின் படி நடக்க முடியாமல் போகின்றது. பித்ருக்கள் நீரும் பிதுர் பண்டங்களும் இல்லாமல் தங்கள் குலத்தை கைவிட்டுச் சென்று விடுகிறார்கள். இதனால் அனைவரையும் அதர்மம் சூழ்ந்து பாவம் செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்கள் நரகத்திற்கு செல்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 67

கேள்வி: மார்கழி (2012-2013) மாதத்தில் மகா பிரளயம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையா?

இறைவன் அருளால் பிரளயம் என்றால் என்ன? என்று நீ எண்ணுகிறாய்? (சுனாமி போன்ற அழிவு)

ஒன்று தெரியுமா? ஒவ்வொரு இல்லத்திலும் இது அடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே இது போன்ற பேரழிவு குறித்து கூறியிருக்கிறோம். இப்போதைக்கு உலகம் என்பது சிறைச்சாலை ஆன்மாக்கள் செய்கின்ற பாவ புண்ணியத்திற்கு எத்தனையோ சிறைச்சாலைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்த புவி உலகம். ஒட்டு மொத்தமாக இந்த சிறைச்சாலையை அழிக்கின்ற எண்ணம் இறைவனுக்கு இல்லை. பகுதி பகுதியாக அவ்வப் பொழுது சிறிய அழிவுகள் ஏற்படும். மற்றபடி இந்த சிறைச்சாலை அழிக்கப்பட வேண்டும் என்றால் இங்குள்ள அனைவருமே புனிதர்களாக மாற வேண்டும். புண்ணிய ஆத்மாக்கள் அத்தனை பேரும் புனிதர்களாக மாறிவிட்டால் வேண்டுமானால் இந்த சிறைச்சாலை தேவையில்லை என்று இறைவன் அழித்துவிடலாம். அப்படியெல்லாம் நடக்கக்கூடாது என்று மனிதன் கங்கணம் கட்டிக் கொண்டு புனிதம் ஏன் செய்ய வேண்டும்? புண்ணியத்தை செய்து எதற்காக இந்த உலகத்தை இழக்க வேண்டும்? என்று அவன் தவறு மேல் தவறு செய்து கொண்டிருப்பதால் நீ கூறுவது போல் இந்த மார்கழி அல்ல எந்த மார்கழி வந்தாலும் எந்த ஆண்டு வந்தாலும் ஒட்டு மொத்தமாக இந்த உலகம் அழியப் போவதில்லை. ஆங்காங்கே சிறு சிறு அழிவுகள் ஏற்படுவது என்பது இயல்பு.

கேள்வி: எல்லோரின் சார்பாக கேட்கிறேன். தங்களை ஸ்தூல தேகமாக (உடல்) தரிசிக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

முதலில் இறைவனை தரிசிக்க யாது செய்ய வேண்டும்? என்று எண்ணி யாங்கள் கூறிய வழிமுறைகளையெல்லாம் பின்பற்றிக் கொண்டே வந்தால் இறை தரிசனமே மிகப்பெரிய தரிசனம் என்பதை புரிந்து கொள்ளலாம். அதை நோக்கி சென்றாலே போதுமப்பா. அதற்கிடையே மகான்கள் தரிசனம் என்பது இயல்பாகவே நடக்கும்.

சுலோகம் -41

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #41

கிருஷ்ணா அதர்மம் அதிகமாக பெருகுவதால் குலப்பெண்களின் நடத்தை கெடுகிறது வர்ணங்களில் கலப்பு உண்டாகிறது.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: குலப் பெண்கள் என்று இந்த சுலோகத்தில் சொல்லப்படுவது யார்?

ஒருவர் ஒரு தொழிலை செய்து கொண்டிருக்கிறார். அவரை பின்பற்றி அவரின் வாரிசுகள் அந்த தொழிலை சிறுவயதில் இருந்தே அவருடன் இருந்து கற்றுக் கொண்டு அதனை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அவர்களை தொடர்ந்து அவர்களது வாரிசுகள் என்று தலை முறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்து வருவார்கள். ஒரு குறிப்பிட்ட தொழிலை தொன்று தொட்டு பாரம்பரியமாக செய்பவர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு செயல்படுவார்கள். அவர்கள் தங்களின் தொழிலுக்கு எற்றபடி ஒரு தர்மத்தை அமைத்துக் கொண்டு அதன்படி ஒரு குறிப்பிட்ட இறைவழிபாட்டு முறைகளையும் ஒழுக்க முறைகளையும் கடைபிடித்து வருவார்கள். இவர்களின் மூதாதையர்களின் பெயரை இந்த குழுவுக்கு பெயராக சூட்டி இந்த குலத்தின் வழியாக வந்த தர்மங்களையும் தொழில்களையும் கடைபிடித்துக் கொண்டு குழுவாக செயல்படுவார்கள். ஒவ்வொரு குழுவைச் சேர்ந்தவர்களும் ஒரு குலத்தை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். தங்களின் குழுக்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயது வந்ததும் தங்கள் குலத்தைப் போன்றே தொழில் செய்து வரும் வேறு குழுக்களில் உள்ளவர்களுடன் பெண் கொடுத்து பெண் எடுத்து திருமணம் செய்து வைப்பார்கள். இவர்களது தலைமுறை வளர்வதற்கு காரணமான திருமணமான பெண்கள் குலப் பெண்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: வர்ணங்கள் என்றால் என்ன?

பிறப்பால் வர்ணங்கள் இல்லை அவர்களின் செயலினால் மட்டுமே என்பதை மனு தர்மம் சொல்கிறது. பிறப்பால் அனைவரும் சமமே தர்ம செயல்களை செய்வதாலும் நற்குணங்களை வளர்த்துக் கொள்வதாலும் மட்டுமே ஒருவன் மேன்மையான நிலைக்கு உயர்கிறான் என்று பகவத்கீதை சொல்கிறது. நம்முடைய வேதத்தில் இருக்கும் சில சமஸ்கிருத மந்திரங்களுக்கு பொருள் தவறாக அனைவருக்கும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் சரியான விளக்கம்

வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை கடைபிடிப்பவனும் இதனை அடுத்தவருக்கு எடுத்துரைப்பவனுக்கும் மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். மனம் வலிமையடைந்தால் அவனது முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருக்கும். மனமானது நெற்றியின் நடுவே உள்ளது. மனதை வலிமையானதாக வைத்திருப்பவர்கள் அனைவரும் பிராமணன் ஆவார்கள்.

ராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்ரியனுடைய தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போது தான் அவனால் போர்க் கலையில் சிறந்து விளங்கி எதிரிகளிடமிருந்து தனது குடி மக்களை திறம்பட காத்திட முடியும். தோள் வலிமையுடன் இருப்பவர்கள் அனைவரும் சத்ரியன் ஆவார்கள்.

வைசியனானவன் வாணிபம் செய்பவன். பல ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டும். பல நாட்கள் நடப்பதற்கு வலிமையான தொடை இருக்க வேண்டும். வலிமையான தொடைகளுடன் இருப்பவர்கள் அனைவரும் வைசியன் ஆவார்கள்.

சூத்திரர்கள் உடல் உழைப்பால் வேலை செய்பவர்கள் மற்றும் வயல்களில் வேலை செய்து இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற வேண்டிய உணவு உற்பத்திக்கு பாடுபடுபவர்கள். விவசாயம் செய்ய அவனுக்கு சோர்வில்லாத வலிமையான பாதங்கள் வேண்டும். வலிமையான பாதங்களுடன் இருப்பவர்கள் அனைவரும் சூத்திரன் ஆவார்கள்.

தற்போது சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பொய்யான விளக்கம்

பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான்
பிரம்மாவின் தோளில் இருந்து சத்திரியன் பிறந்தான்
பிரம்மாவின் தொடையில் இருந்து வைசியன் பிறந்தான்
பிரம்மாவின் பாதத்தில் இருந்து சூத்திரன் பிறந்தான்

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: குலப்பெண்களின் நடத்தை என்று சொல்லப்படுவது என்ன?

ஒரு குறிப்பட்ட தொழிலை செய்யும் குலத்தில் வளரும் பெண்கள் அந்த தொழிலை செய்யும் குலத்திற்கு என்று இருக்கும் தொழில் மற்றும் வழிபாட்டு முறைகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லிக் கொடுத்த ஒழுக்க முறைகள் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். வேறு தொழிலை செய்யும் குலத்தில் உள்ளவர்களின் வழிபாட்டு முறைகளும் ஒழுக்க முறைகளும் அவர்களுக்குத் தெரியாது.

உதாரணத்திற்கு ஒருவர் உடல் உழைப்பால் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு என்று இருக்கும் குலத்தில் வழி வழியாக வந்த தொழில் முறைகளையும் தர்மங்களையும் வழிபாட்டு முறைகளையும் மட்டுமே தங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள். விவசாயம் செய்பவர்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் நிலத்தில் விவசாயத்திற்கு உதவி செய்வார்கள். விவசாயத்தை பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். விவசாயத்திற்கு ஏற்ற சூரிய வழிபாட்டு முறைகளும் தங்களின் தொழிலுக்கு உதவி செய்யும் காளைமாடு போன்ற உயிரினங்களை எப்படி பாதுகாப்பது என்பதும் அவற்றை தெய்வங்களாக வழிபடுவது பற்றியும் மட்டுமே தெரியும்.

வேறு ஒருவர் வாணிபம் செய்து வருகிறார். அவர் ஊர் ஊராக சென்று வியாபாரம் செய்வார். அவர் வியாபாரம் செய்ய பல ஊர்களுக்கு செல்வதால் பல நாட்கள் வீட்டில் இருக்க மாட்டார். வாணிபத்திற்கு ஏற்ற பொருளை வீட்டில் வைத்திருப்பார். அதனை பாதுகாப்பது பற்றி அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் அறிந்து வைத்திருப்பார்கள். அவரின் தொழிலுக்கு பொதி சுமக்க உதவி செய்யும் குதிரைகள் கழுதைகள் போன்ற உயிரினங்களை எப்படி பாதுகாப்பது என்பது மட்டுமே தெரியும்.

இப்போது இந்த இரண்டு வர்ணங்களில் உள்ள பெண்கள் வர்ணம் மாறி வேறு ஒரு தொழில் செய்யும் குலத்தில் உள்ளவரை திருமணம் செய்து கொண்டால் புதிதாக அவர்களது வீட்டிற்கு செல்லும் பெண் அந்த வீட்டில் உள்ள தொழில் முறைகள் ஒழுக்க முறைகள் பற்றி ஒன்றும் தெரியாது. வீட்டிற்கு வந்த பெண் தொழிலுக்கு ஏற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆணுக்கு இருக்கும். இதனை செய்ய அந்தப் பெண் முயற்சி செய்தாலும் கற்றுக் கொள்ள நாட்கள் ஆகும். வேலை செய்யும் போது பல தவறுகள் ஏற்படும். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டையிட நேரிடும். கணவனுடன் சண்டையிட நேரிடும். இதற்கு ஆணும் தானை காரணம் என்று பலர் கேட்கலாம். ஆனால் இங்கு ஆண் இருக்கும் வீட்டிற்கே பெண் வருகிறாள். இந்த ஆண் தனக்கு உண்டான வேலையை சரியாக இங்கு செய்து விடுகிறான். ஆனால் வந்திருக்கும் பெண்ணால் சரியாகச் செய்ய முடியவில்லை எனவே சண்டை ஏற்படுகிறது. புகுந்த வீட்டில் சண்டை ஏற்பட காரணமான பெண்ணிற்கு அங்கே நடத்தை சரியில்லை என்ற பேச்சு அங்கே உருவாகிறது. அனைத்திற்கும் மூல காரணம் வர்ணம் மாறி திருமணம் செய்ததே ஆகும். இவற்றையே இந்த சுலோகம் சொல்கிறது.

குறிப்பு: இந்த சுலோகத்தில் சொல்லப்பட்ட பல கருத்துக்களுக்கான விளக்கங்கள் பின் வரும் தலைப்புகளில் உள்ள சுலோகங்களில் மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 66

கேள்வி: குடும்ப ஒற்றுமை பற்றி:

இறைவன் அருளால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தைகள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் மனிதரீதியாக பார்த்தால் நிறைய செல்வம் வேண்டும் தனம் வேண்டும். மனைவி எண்ணுவதையெல்லாம் கணவன் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். கணவன் எண்ணுவதையெல்லாம் மனைவி உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். கணவனும் மனைவியும் விரும்புவதை குழந்தைகள் நிறைவேற்றித் தர வேண்டும். இப்படித்தான் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புதான் ஏமாற்றம் அடையும் பொழுது கோபமாக வெடிக்கிறது. பிரச்சனையாக உருவெடுக்கிறது. எனவே பிறரிடம் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொண்டாலே கூடுமானவரை பிரச்சனைகள் குறைந்து விடும். இது ஒருபுறம் இருந்தாலும் கூட பக்திரீதியாக பார்க்கும் பொழுது துர்க்கை வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வந்தால் கட்டாயம் குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் ஏற்படும்.

அகத்திய மாமுனிவரின் மனைவியைப் பற்றி அகத்திய மாமுனிவர் வாக்கு:

இறைவன் அருளைக் கொண்டு யாமே எம் தாரத்தைக் (மனைவி) குறித்து கூறுவது என்பது அத்தனை சிறப்பாக இராது என்றாலும் கூட நல்விதமாக அன்னையின் (பராசக்தி) அருளைப் பெற்று இறைவனின் கருணையாலே எம்மில் ஒரு பாதியாக இருந்து அந்த பாவத்தில் கூறுவதென்றால் இப்படி சுருக்கமாகக் கூறிவிடுகிறோம். அவள் பெண்பால் அகத்தியர். நான் ஆண்பால் லோபாமுத்திரை அவ்வளவே.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 65

கேள்வி: அப்பா சாராயம் ஆறாக ஓடுகிறது நாட்டில் இதனால் அடுத்த தலைமுறையின் நிலை என்ன?

இறைவன் அருளாலே இந்த தீய பழக்க வழக்கங்கள் மனிதனிடம் இன்று நேற்று தோன்றியது அல்ல. என்று மனித குலம் தோன்றியதோ அன்றிலிருந்தே தீய பழக்கங்கள் அசுர பழக்கங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது வேண்டாம் முற்றிலும் அழித்து விடலாம் என்று மனிதன் எண்ணலாம். ஆனால் இது ஒருபொழுதும் நடக்கப் போவதில்லை என்பதே உண்மையாகும். ஆனால் ஒவ்வொரு மனிதனும் இது போன்ற தீய பழக்கத்திலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள மனதை வைராக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். அந்த செயலை செய்வதால் என்ன நன்மை? என்ன தீமை என்பதை ஒருவன் சுயமாக சிந்தித்துப் பார்த்தால் அப்பொழுது புரியும். மிருகங்கள் இது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை மிருகங்களுக்கு ஐந்தறிவு. மனிதனுக்கு ஆறறிவு என்று கூறிக்கொள்கிறான். ஐந்தறிவு கொண்ட மிருகம் போதைக்கு அடிமையாவதில்லை. ஆனால் ஆறறிவு கொண்டவன் அடிமையாகிறான் என்றால் எங்கே தவறு இருக்கிறது? என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். இது விளக்கம்.

இதற்கு பிராய்ச்சித்தம் என்றால் கதிர்மதி எனப்படும் அமாவாசை தினங்களிலே (வடக்கு நோக்கி இருக்கின்ற காளி போன்ற) உக்கிரமான தெய்வங்களுக்கு மிக மிக உயர்வான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் குறிப்பாக பசுவின் பாலைக் கொண்டு எத்தனை அளவு முடியுமோ அதைக் கொண்டு அபிஷேகம் செய்து அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் கனிகளால் மாலை சாற்றி நறுமண மலர்கள் மாலை சாற்றி அதன் பிறகு மிக மிக உயர்வான அன்னங்களை அதை பொருள் கொடுத்து வாங்கி உண்ண முடியாத ஏழைகளுக்கு யார் தருகிறார்களோ அந்த பகுதியிலே அதுபோன்ற பகுதியிலே இது போன்ற தீய பழக்கங்கள் படிப்படையாகக் குறையும்.