தேவகி தாயாருடன் பாலகிருஷ்ணர்

கோவா மாநிலத்தில் மார்செல் இடத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவகி கிருஷ்ணர் கோவிலில் மட்டுமே கிருஷ்ண பரமாத்மா தேவகி தாயாரின் இடுப்பில் அமர்ந்திருப்பார். கிருஷ்ணரின் குழந்தை வடிவத்துடன் அன்னை தேவகி வழிபடப்படும் ஒரு அரிய கோயிலாகும்.

அகத்தீஸ்வரர் கோயில்

அகத்தியர் தென்நாட்டில் பல இடங்களிலும் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டிருக்கிறார். அப்படி பிரதிஷ்டை செய்த கோயில்களில் சாரம் அகத்திஸ்வரர் கோயிலும் ஒன்று. அகத்தியா் தமது திருக்கரங்களினால் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத் திருமேனி ஶ்ரீஅகத்தீஸ்வரா் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அகத்தீஸ்வரா் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்பிகையின்திருநாமம் ஶ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆகும். இந்த அன்னையின் திருவுருவச்சிலை தற்போது திருக்கோயிலில் இல்லை. காலவெள்ளத்தில் இச் சிலை சிதிலமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அக்காலத்தில் இந்த இடம் திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டது. இங்கு ஈசன் தன் தேவியோடு அகத்திய மகரிஷி முன் தோன்றி தன் திருமணக் கோலத்தை இத்தலத்தில் காட்டியருளினாா். ஈசன் மீது அகத்தியா் கொண்டிருந்த பக்தியின் சாரத்திற்கு சான்றாக இந்த திருத்தலம் சாரம் என்று அழைக்கப்பட்டது.

இக்கோயிலில் பிரம்ம சாஸ்தா முருகர் அருள்பாலிக்கிறார். பிரணவத்திற்குப் பொருள் சொல்ல இயலாத பிரம்மனைச் சிறையிலிட்டு அவரது சிருஷ்டித் தொழிலைச் செய்யத் தொடங்கிய போது பிரம்மனுக்கு உரிய ஜபமாலையும் கமண்டலத்தையும் கொண்டாா் முருகப்பெருமான். கந்தனுக்குரிய இந்தத் திருவடிவம் பிரம்மசாஸ்தா என்று அழைக்கப்படுகின்றது. பிரம்ம சாஸ்தா என்று முருகப்பெருமானின் இந்த வடிவினை கந்தபுராணப் பாடல் குறிப்பிடுகின்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானை சுப்ரமண்யன் என்று வணங்குகிறோம். பிரம்மண்யன் என்றால் பிரம்மத்தை உணா்ந்த பரமஞானம் பெற்றவன் என்பது பொருளாகும். சு என்பது இதனை அதி உன்னதமான என்ற பொருளை மேலும் சிறப்பிக்கும் அடைமொழியாகும். பிரம்மத்தின் அதி உயா்வான நிலையை அடைந்தவன் சுப்ரமண்யன். அவனுக்கு மேலான ஞானம் தேஜஸ் வேறு இல்லை என்பது பொருள். எனவே தான் முருகப் பெருமானை ஞானக் கடவுள் என்று வணங்குகின்றோம்.

குளிகன் மற்றும் மாந்தியுடன் ஜேஷ்டாதேவியின் திருவுருவச் சிலை உள்ளது. இச்சிலை இத்தலத்தில் தற்போது ராஜமாதங்கி என்றும் சியாமள வராஹி என்றும் அழைக்கப்படுகின்றது.

பல்லவ மன்னா்கள் முருகனைப் பரமபாகவதன் பரம மகேஸ்வரன் பரம வைஷ்ணவன் பரம பிரம்மண்யன் என்று அழைத்ததாக செப்பேடுகள் தொிவிக்கின்றன. சோழ மன்னா்கள் காலத்தில் நிா்மாணிக்கப்பட்ட இத்திருக்கோயிலில் காணப்படும் அரிய இந்த பிரம்ம சாஸ்தாவின் சிலை பல்லவா்கள் காலத்தைச் சாா்ந்தது என்று வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். தொண்டை நாட்டில் ஆனூா் கந்தசாமி கோயிலிலும் காஞ்சிபுரம் குமரக் கோட்டத்திலும் புதுச்சோி மாநிலம் மதகடிப்பட்டு குண்டாங்குழி மகாதேவா் கோயிலிலும் பிரம்ம சாஸ்தா வடிவிலான முருகப்பெருமானின் சிலைகள் உள்ளன.

சாரம் ஶ்ரீஅகத்தீஸ்வரா் திருக்கோயிலில் சோழா் கால கல்வெட்டுகள் இரண்டு காணப்படுகின்றன. ஒரு கல்வெட்டில் பண்டைய அளவு கோலினைக் கல்வெட்டில் வடித்துள்ளனா். மற்றொரு கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் முப்பத்து மூன்றாவது ஆட்சியாண்டைக் குறிப்பதாகும். இக்கல்வெட்டில் இத்தலத்தின் பெயா் ஜெயங்கோவளநாட்டு சாரமான ஜெயங்கொண்ட சோழ நல்லூா் என்றும் ஈசனின் பெயர் திருஅகத்தீஸ்வரமுடைய நாயனாா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்க மன்னன் திருஅகத்தீஸ்வரமுடைய நாயனாா் கோயிலுக்கு நந்தா விளக்கேற்றுவதற்காக முப்பது பசுக்களை தானமாக வழங்கியதையும் சந்தி விளக்கெரிக்க பதினாயிரத்து எண்ணூறு காசும் கொடுத்து சூரிய சந்திரா் உள்ளவரை விளக்கெரிக்க ஒப்புக் கொண்டதையும் ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் திண்டிவனத்திற்கு அருகில் 8 கிமீ தூரத்தில் இக்கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோயில் தற்போது சிறிது சிறிதாக புணரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இரட்டை நந்தி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டரில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் இங்கு 2500 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இல்லை. உடைந்த நிலையில் காணப்படுகிறது.

ஒரு முறை விவசாயி ஒருவரின் நிலத்தில் மாடு ஒன்று மேய்ந்தது. ஆத்திரமடைந்த விவசாயி அந்த மாட்டின் காதையும் கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த கற்சிலையான நந்தியின் கொம்பும் காதும் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. வந்தது. தெய்வ நந்தி என்பதை அறியாமல் செய்த தவறுக்கு விவசாயி வருந்தினார். அதற்கு பிராயச்சித்தமாக புதிய நந்தி சிலை ஒன்றை பழைய நந்தி சிலையின் பின்பாக பிரதிஷ்டை செய்தார்.

தீர்த்தீஸ்வரர் கோயில்

மூலவர் தீர்த்தீஸ்வரர். உற்சவர் தீர்த்தீஸ்வரர். கோயிலின் மூலவராகவும் உற்சகராகவும் தீர்த்தீஸ்வர சுவாமி அருள்பாலிக்கிறார். பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்கள் தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்ந்து தனது வழிபாட்டை செய்கிறது. அம்பாள் திரிபுர சுந்தரி. தீர்த்தீஸ்வரர் சன்னதியும் திரிபுர சுந்தரி தேவியின் சன்னதியும் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கிறது. தல விருட்சம் மகிழம் மரம். ஆலயத்தின் தல விருட்சமான மகிழ மரத்திற்கு அடியில் மாழ்வினை தீர்த்தர் சன்னதி உள்ளது. அவருடன் வீரபத்திரர் விசாலாட்சி மகாவிஷ்ணு ஒன்றாக அருள்பாலிக்கிறார்கள். திருவள்ளூரில் உள்ள புகழ்பெற்ற வீர ராகவப் பெருமாள் கோயிலை ஒட்டி அமைந்துள்ள பழமையான சிவன் கோவில் இது. வீர ராகவப் பெருமாள் கோயிலின் பெரிய கோயில் குளத்தை நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. மூர்த்தி தீர்த்தம் தலம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலம் புராணத்தில் தீர்த்தபுரி என்று அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் 18 ஆம் நூற்றாண்டில் மீண்டும் புணரமைத்து கட்டப்பட்டது.

கருவறையைச் சுற்றியுள்ள சுவரில் விநாயகர் தட்சிணாமூர்த்தி விஷ்ணு பிரம்மா துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரரின் கோஷ்ட உருவங்கள் உள்ளன. வரசித்தி விநாயகர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தர்ம சாஸ்தா பால தண்டாயுதபாணி நவக்கிரகம் நடராஜர் கால பைரவர் சன்னதிகளும் உண்டு. மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டது இக்கோயில். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையே சுப்பிரமண்யர் சன்னதி உள்ளது. இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பு ஆகும்.

மது கைடபர் என்ற அரக்கர்கள் ரிஷிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இவர்களை அழிக்க திருமாலிடம் முறையிட்டனர் ரிஷிகள். திருமால் சக்ராயுதத்தை ஏவி அரக்கர்களை வதம் செய்தார். வேதத்தில் சிறந்த அவர்களை அழித்ததால் திருமாலுக்கு தோஷம் ஏற்பட்டது. இதனால் இங்கு வந்து தீர்த்தீஸ்வரரை வேண்டி தோஷம் நீங்கப்பெற்றார் திருமால். இதனால் இறைவன் மால்வினை தீர்த்தர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு சமயம் காஞ்சி மஹாபெரியவர் இங்கு ஒரு மண்டலம் தங்கி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் மகிழம் மரம் மால் வினை தீர்த்தரை வலம் வந்து வணங்கினால் மரத்தில் இருந்து மகிழம் பூ உதிர்வதுபோல் பக்தர்களது வாழ்விலும் துன்பங்கள் உதிரும் என்று அருளினார். சில காலம் முன்பாக பௌர்ணமி தினங்களில் சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை கனக குளிகை காலத்தில் ஓநான் வேலி சித்தர் என்பவர் எடுத்து மற்ற புண்ணிய தீர்த்தங்களோடு சேர்த்து திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் தீர்த்த பிரசாதமாக வழங்கினார். இந்த தீர்த்தத்தை பருகியவர்கள் தங்களது உடலில் உள்ள நோய்கள் பல நீங்கப் பெற்றார்கள்.

சாதிபிரல்ல அகஸ்தியேஸ்வரர்

சிவலிங்கத்தின் தலையில் சடாமுடி உள்ளது. சடாமுடியில் இருந்து வரும் தலைமுடி சிவலிங்கத்தின் பாணத்தில் தலையை சுற்றி பரந்து விரிந்திருக்கிறது. இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் வெவ்வேறு வம்சங்களால் புணரமைக்கப்பட்டது. 1500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இக்கோயிலில் 12 கல்வெட்டுகள் உள்ளன. 9 ஆம் நூற்றாண்டில் குறிப்பிட்ட அம்மனா பேக்கடா கோயிலை மீண்டும் புதுப்பித்து கட்டினார். இடம் கமலாபுரம் கடப்பா மாவட்டம். ஆந்திரப் பிரதேச மாநிலம்.

பக்தியின் உச்சம் அன்பு

லட்சுமி அம்மாள் என்கின்ற எச்சம்மாள் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். வினையின் காரணமாக அவரது கணவர் அவரது மகன் மற்றும் இரண்டு மகள்கள் அடுத்தடுத்து இழந்த நிலையில் விதி அவளை ரமணரின் முன்னிலையில் அழைத்துச் சென்று நிறுத்தியது. எச்சம்மாள் விருபாக்ஷா குகையில் ரமணரின் முன் ஒரு மணி நேரம் நின்றாள். அந்த ஒரு மணி நேரத்தில் அவளுடைய வேதனைப்பட்ட இதயமும் அதிர்ச்சியடைந்த மனமும் மாறியது. அவளின் மனம் அமைதியின் உச்சத்திற்கு சென்றது. ரமண மகரிஷியுடனான இந்த சந்திப்பிற்குப் பிறகு எச்சம்மாள் 1907 இல் திருவண்ணாமலையில் குடியேறினார். தினமும் சுவாமியை தரிசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டு அவருக்கும் அவருடன் வசிப்பவர்களுக்கும் உணவு கொண்டு வரும் பணியை எச்சம்மாள் எடுத்துக் கொண்டாள்.

எச்சம்மாள் ஒரு முறை பகவானுடைய படத்துக்கு ஒரு லட்சம் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதாக சங்கல்பித்தார். எவ்வளவு தேடியும் 50000 இலைகள் மட்டுமே அவளுக்கு கிடைத்தன. கடும் கோடை வேறு எங்கும் இலைகள் கிடைக்கவில்லை. வில்வ இலைகள் கிடைக்க அருள்புரியுமாறு ரமணரிடம் முறையிட்டார். உடனே ரமணர் உன் உடம்பை கிள்ளி பூஜை பண்ணு என்றார் ரமணர். எச்சம்மாளுக்கு தூக்கி வாரிப் போட்டது. கிள்ளினால் வலிக்குமே என்றார். மரத்திலிருந்து இலையை கிள்ளினால் வலிக்காதா? என்றார் ரமணர். எச்சம்மாளுக்கு தன் தவறு புரிந்தது. பகவானே முன்னேயே சொல்லி இருந்தால் அந்த ஐம்பதாயிரம் இலைகளை கிள்ளி இருக்க மாட்டேனே? என்றார். உன் உடம்பை கிள்ளினால் வலிக்கும்ன்னு தெரியும். இலைகளை கிள்ளினா அதுக்கு வலிக்கும்ன்னு தெரியாதா? இதெல்லாம் சொல்லிக் கொடுக்கணுமா? என்றார் ரமணர்.

பூஜை என்பது இலைகளைக் கிள்ளியும் பூக்களைப் போட்டும் மாலைகளை அணிவித்தும் நைவேத்தியம் செய்தும் படைப்பதல்ல. இதெல்லாம் கண் தெரியாதவனுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு செல்ல உதவும் கம்பு போல இறைவனின் அருகில் செல்ல உதவும். ஆனால் பக்தியில் முழுமையடைய வேண்டுமானால் எதிரே இருக்கும் இறைவன் அனைத்து உயிர்களுக்கும் இருக்கின்றான் என்று உணர்வதும் தனக்குள்ளேயே இருக்கின்றான் என்று உணர்வதும்தான் அந்த உணர்வில் அன்பை வெளிப்படுத்துவதே பக்தியின் உச்சம்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. திருமந்திரம் பாடல் எண்: 270

சூரிய பகவான்

தேரோட்டி அருணா ஏழு குதிரைகள் கொண்ட தேரை ஓட்ட தேரில் இரண்டு தாமரை மலர்களை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சூரிய பகவான். தேர் வேகமாக செல்வதை குறிக்கும் வகையில் சூரிய தேவனின் பின்னால் பறக்கும் அவரின் வஸ்திரம். இடம் வாராஹி தேயுலா கோவில். ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் சூரிய கோவிலுக்கு வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள சௌராஷி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.

திருமூலநாதா்

திருமந்திரம் எழுதிய திருமூலா் வணங்கியதால் இத்தல ஈசனுக்கு திருமூலநாதா் எனும் திருநாமம் ஏற்பட்டதாக கோயில் தல புராணம் சொல்கிறது. திருவள்ளுர் புழல் பகுதியில் இக்கோயில் உள்ளது. நாகாபரணம் அணிந்தபடி திருமூலநாதா் கிழக்கு நோக்கிய கருவறையில் சதுர வடிவிலான ஆவுடையாா் மீது லிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளாா். லிங்கம் பெரியது. கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வருடத்திற்கு இரண்டு முறை புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் சூரியன் தன் ஒளிக் கற்றைகளை நீட்டி திருமூல நாதரை வழிபட்டு செல்கிறார். அம்பாள் ஶ்ரீஸ்வா்ணாம்பிகை. தென்திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். கருவறை மற்றும் அா்த்தமண்டபத்தின் பஞ்ச கோஷ்டங்களில் முறையே விநாயகா் தட்சணாமூா்த்தி விஷ்ணு பிரம்மா மற்றும் துா்க்கை ஆகிய சிலாரூபங்கள் காட்சியளிக்கின்றன. தீா்த்தம் ஸ்வா்ண புஷ்கரணி. தல விருட்சம் வில்வம். துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் நந்தி சன்னதியுடன் கிழக்கு நோக்கிய ஆலயம். அகத்திய மகரிஷி ஈசனின் திருமணக் கோலத்தை இத்தலத்தில் கண்டிருக்கிறார்.

மகேந்திரி வாராஹி, பிராமினி, மகேஸ்வரி மற்றும் நாராயணி ஆகியோருடன் தனி சன்னதியில் கருவறைச் சுவரைச் சுற்றி கோஷ்ட விக்கிரகங்களாக வீற்றிருக்கிறார்கள். வெளிப் பிரகாரத்தில் மகா கணபதி, ஸ்ரீ ஆஞ்சநேயர், மகா பிரத்தியங்கரா தேவி, சரபேஸ்வரர், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி, நாகர், நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் சக்தி கணபதி, சிவலிங்கம், கஜலட்சுமி, வீரபத்ரர், முருகன் சன்னதிகள், வள்ளி, தேவசேனா, அஷ்டோத்திர லிங்கம், மகா சரஸ்வதி, 63 நாயன்மார்கள், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், சந்திரன், சூரியன் உள்ளார்கள். கோயிலுக்கு எதிரே கோயில் குளம் உள்ளது. பைரவர் சதுா் புஜங்களுடன், விரிந்த அனல் மகுடம், கண்டிகை, மணிவடம், தோள்வளை, அரைஞாண் போன்ற அணிகலன்க ளுடன் காணப்படுவதோடு இவரது வாகனமான நாய் மிகவும் எழிலாக அமைந்துள்ளது. பைரவரின் மேல் வலது திருக்கரம் உடுக்கையைப் பற்றியுள்ளது. இடது திருக்கரம் பாசக் கயிற்றைப் பிடித்துள்ளது. கீழ் வலது திருக்கரம் திரிசூலத்தையும் இடது திருக்கரம் கபாலத்தையும் ஏந்தி காட்சி தருகிறார். இச்சிலையின் காலம் 19 ஆம் நூற்றாண்டு தொல்லியல் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

இத்திருக்கோயில் பல்லவா் காலம் முதலே சிறப்புடன் இருந்தது என்பதற்கு ஆதாரமாக கிபி 8 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்த பல்லவா் கால சுப்ரமண்யரின் சிற்பம் ஒன்று இன்றும் இத்தலத்தில் காணப்படுகின்றது. சதுா்புஜங்களுடன் மேல் இரு திருக்கரங்களில் அக்கமாலையும், கெண்டியும் முன்கரங்களில் ஒன்றினை அபய ஹஸ்தமாகக் கொண்டு அமா்ந்த திருக்கோலத்தில் சுப்ரமண்யர் காட்சி கொடுக்கிறார். பல்லவா் காலத்தைத் தொடா்ந்து சோழ மன்னா்களின் ஆட்சிக் காலத்திலும் இக்கோயில் சிறப்புற்றிருந்தது என்பதற்கு ஆதாரமாக சோழ மன்னா்களால் வணங்கப்பட்ட ஜேஷ்டாதேவியின் புராதன சிற்பமும் இத்தலத்தில் உள்ளது. (தற்போது இந்த சிலை கோயிலுக்கு அருகே தனியாக கோயில் எழுப்பப்பட்டு அங்கே உள்ளது) இக்கோயில் முகமண்டபத்தை அலங்கரிக்கும் சித்திரத் தூண்கள் பன்னிரெண்டிலும் எழில் வாய்ந்த சிற்பவடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் கிபி 17−18 ஆம் நூற்றாண்டினைச் சாா்ந்தவையாகும். இத்திருக்கோயிலில் ஒரு சுரங்கப் பாதை உள்ளது. இச்சுரங்கப்பாதை இந்தத் தலத்திலிருந்து திருமுல்லைவாயில் கொடியுடையம்மன் மற்றும் திருவொற்றியூா் வடியுடையம்மன் மீஞ்சுர் திருவுடையம்மன் தலத்திற்கும் செல்வதாகக் கூறப்படுகின்றது. இதற்கு சான்றாக திருவுடையம்மன் கோயிலில் சுரங்கப்பாதை இருந்ததற்கான சுவடுகள் தற்போதும் காணலாம்.

தெற்கு கோஷ்டத்தில் கல்லால விருட்சத்தின் கீழ் தட்சணாமூா்த்தி வீராசனத் திருக்கோலத்தில் அருளுகின்றாா். இவரது மேல் இரு திருக்கரங்கள் நாகப்பாம்பினையும் அக்னி தண்டினையும் பற்றியிருக்கிறது. கீழ் வலது திருக்கரம் சின் முத்திரை தாங்கியும் இடது திருக்கரம் புத்தக முத்திரையில் ஏடு ஏந்திய திருக்கரமாகவும் காணப்படுகின்றது. சிரசினை ஜடாபாரம் அலங்கரிக்கிறது. வலது செவியில் அணிகள் ஏதும் இன்றி நீள் செவியாகவும் இடது செவியில் பத்ர குண்டலமும் அலங்கரிக்கின்றது. திருக்கழுத்தில் உருத்திராட்ச மணி, தோள்களில் தோள்வளை, முன்கைகளில் கைவளை, இடையில் தொடை வரை இடைக்கச்சை ஆகிய அணிகலன்கள் அலங்கரிக்கின்றன. இச்சிற்ப வடிவம் 15 ஆம் நூற்றாண்டைச் சாா்ந்தது என தொல்லியல் ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா்.

பாரதம் பாடிய பெருந்தேவனாா் என்ற புலவா் புழல் திருத்தலத்தில் வாழ்ந்தவா். இவா் சங்க காலப் புலவா்கள் வரிசையில் இல்லை என்றாலும் சங்க நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தை சேர்ந்தவர். இவரால் எட்டுத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அகநானூறு ஐங்குறுநூறு குறுந்தொகை நற்றிணை மற்றும் புறநானூறு ஆகிய ஐந்து நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக இவரது பாடல்கள் அமைந்துள்ளன. இவரது காலம் கிபி 700 க்கு முன்பு என்றும் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவா் என்றும் இரு வேறு கருத்துகள் உள்ளன.

புழல் கோட்டத்தில் இத்தலம் அமைந்துள்ளதால் இத்தலத்து இறைவனது பெயர் கல்வெட்டுகளில் புழல் நாயனாா் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலுள்ள கல்வெட்டுகள் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் சம்புவராய மன்னரான ராஜநாராயண சம்புவராயா், விஜயநகர மன்னர்களான முதலாம் தேவராயன், அச்சுதராயன் போன்ற அரசா்களின் கல்வெட்டுகளாகும். புழல் கோட்டத்திற்கு விக்கிரம சோழவளநாடு என்ற பெயா் இருந்ததை ஒரு கல்வெட்டு தொிவிக்கின்றது. விஜயநகர மன்னா்கள் காலத்தில் இவ்வூா் மக்கள் இக்கோயிலுக்கு அளித்த நிலதானங்கள் மற்றும் கொடைகள் பற்றியும், இக்கோயிலில் நடந்த திருவிழாக்கள் பற்றியும் அவற்றிற்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றியும் கல்வெட்டுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. புழல் கோட்டத்தின் தலைமை இடமான புழல் சோழ மன்னா்களின் ஆட்சிக்காலத்தில் ராஜசுந்தரி நல்லூா் என்று வழங்கப்பட்டுள்ளது. சோழ மன்னன் வீரராஜேந்திரன் மகனான கிழக்கு கங்கத்தை அரசாண்ட ராஜேந்திரனின் மனைவி ராஜசுந்தரி என்பவரது பெயரால் இவ்வூா் ராஜசுந்தரி நல்லூா் என்று அழைக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னா்களின் ஆட்சிக் காலம் முதலே இத்திருக்கோயில் விளங்கினாலும் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்கோயில் புனரமைக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சோழா் காலத்தின் புனரமைக்கப்பட்ட இக்கோயில் மீண்டும் அழிவினைச் சந்தித்ததால் விஜயநகர மன்னா்களின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோயில் 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சாா்ந்தது என்பதையும் வரலாற்று ஆய்வாளா்கள் தொிவிக்கின்றனா். சுந்தரா் இத்தல இறைவனை தரிசித்து பாடல்கள் பாடியுள்ளார்.