ரெணபலி முருகர்

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் செல்லும் வழியில் பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோவில் உள்ளது. மூலவர் சிவ சுப்பிரமணியசுவாமி இவர் ரெணபலி முருகர் என்றும் அழைக்கப்படுகிறார். உற்சவர் சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் இருக்கிறார். தலவிருட்சம் மகிழம் மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. இக்கோயிலின் சிறப்பு முருகரின் வேல் ஆகும். இந்த வேல் பற்றி திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று சொல்லி தன் சொற்பொழிவுகளில் எல்லாம் இந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகம் கோயிலில் அவர் புகைப்படத்தோடு உள்ளது. இரணபலி முருகன் கோயிலானது கட்டயத்தேவர் என்ற குமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் (கிபி 1728-1735) முதலமைச்சரான வைரவன் சேர்வை என்பவரால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலுக்கு கிபி 1736 இல் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி பெருவயல் கலையனூர் என்ற சிற்றூரை கொடையாக அளித்துள்ளார்.

ரெணபலி முருகர் கோயில் ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கி கிழக்கு நோக்கி உள்ளது. கோயிலின் நுழைவு வாயிலில் இரண்டு குதிரை சிலைகள் உள்ளது. ஒரு குதிரையில் பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும் இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது. காலசந்தி மற்றும் சாயரட்சை பூஜையின் போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது. இராஜ கோபுரத்தைக் கடந்தால் ஜெயம் கொண்ட விநாயகள் உள்ளார். அவரைத் தாண்டினால் பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்த மண்டபம் தொடர்ந்து கருவறை உள்ளது. கருவறையில் வள்ளை தெய்வாணையுடன் ரெணபலி முருகர் உள்ளார். கோயில் பிரகாரத்தில் இராமநாதசுவாமி பர்வதவர்தினி சண்முக சக்கரம் நாகர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதிக் கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. உற்சவர்களாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும் முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும் சூரசம்ஹாரம் நடைபெறும் நாள் மட்டுமே பக்தர்களால் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் கோயிலிற்கு கொண்டு வந்து அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு.

இராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் சேதுபதி ஆண்டு வந்த சமயம் அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியர் சாத்தப்பன் என்கிற காத்த  வீரதளவா வயிரவன் சேர்வை. முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் தோன்றி என்னை  வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிபட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணா முனை என்ற இடத்தில் மேலே  கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார். இதேபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால் இருவரும் மறுநாள் சந்தித்து கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் இரணத்துடன் (காயத்துடன்) திரும்பினார்கள். இறுதியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலைகளையும் வேலையும் எடுத்து வந்தார். செய்தியை அறிந்த மன்னர் தன் அரண்மனையில் இராமலிங்க விலாசம் என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக் கரையில் முருகனுக்கு கோயில் அமைக்க நிலங்களை கொடுத்தார். அதன்பின்னர் கோயிலிற்குப் பணிகள் விரைவாக நடைபெற்று கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டின் அடிப்படையில் பெருவயல் கோயிலிலும் பூஜைகளும் விழாக்களும்  நடைபெறுகின்றன. வயிரவன் சேர்வை இராமேஸ்வரம் இராமநாதசுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால் இராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல்  தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் இரணம் (காயம்) ஏற்பட்டதால் மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி ரெணபலி முருகன் என்றே  அழைக்கப்படுகிறார்.

கோயிலில் மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவமும், கந்த சஷ்டி விழாவும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. பதினாரு நாள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவத்தில் 7 ஆம் நாள் திருச்செந்தூர் முருகரைப் போல் சிவசுப்ரமணிய சுவாமி சிவப்பு, வெள்ளை, பச்சை சாத்தி மூன்று காலங்களில் எழுந்தருள்வார். இக்காட்சி இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களைக் குறிக்கும். 10 ஆம் நாள் தேரோட்டமும் 11 ஆம் நாள் கோயில் தீர்த்தமான சரவண பொய்கையில் தீர்த்தவாரியும் நடைபெறும். ஏழுநாள் உற்சவமாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி திருவிழாவில் 6 ஆம் நாள் பிரசித்தி பெற்ற சூரசம்ஹாரம் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். அப்போது கடலில் கண்டெடுக்கப்பட்ட அரிய சத்ரு சம்ஹார வேலைக் கொண்டு சூரனை முருகப் பெருமான் வதம் செய்யும் அற்புதக் காட்சியை காணலாம். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டால் கிடைக்கும் என்பது கோயில் வரலாறு. இக்கோயிலில் இராமநாதபுரம் மன்னர் குமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டும் செப்பேடுகளும் உள்ளன. அவை இக்கிராமத்தின் பெயர் பெருவயல் கலையனூர் என்றும் மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி என்ற ரெணபலி முருகய்யா எனவும் குறிப்பிடுகிறது.

காசேர பாறா

சுவாமி ஐயப்பன் அமர்ந்த பாறை இன்றும் காட்டிற்குள் உள்ளது. அச்சன்கோயில் ஆலயத்துக்கு அருகே உள்ள அடர்த்தியான காட்டிற்கு உள்ளே 12 கிலோ மீட்டர் தூரத்தில் எரிமேலிக்கு அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ளது. காசேரபாறா உள்ளது. காசேரா என்றால் மலையாளத்தில் நாற்காலி அல்லது இருக்கை என்று பொருள். பாறா என்றால் பாறை என்று பொருள்.

பந்தளராஜன் மனைவியின் நோய் தீர்க்க புலிப்பால் தேடிச் சென்ற அய்யப்ப சுவாமி இந்த பாறையில் அமர்ந்து ஓய்வெடுத்தார். இன்றும் பழங்குடி மக்கள் காட்டுக்குள் செல்லும்போது இந்த பாறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து விட்டு காட்டுக்குள் செல்கிறார்கள்.

பார்வதிதேவி

பஞ்சாக்கினி தபசு என்பது ஐந்து பூதங்களிலும் உள்ள ஐந்து அக்னிக்களின் மத்தியில் தவம் செய்யும் ஒரு கடுமையான தவம் ஆகும். பார்வதி மலைகளின் மகள் என்பதால் இமவானின் மகளாகப் பிறந்தார். சிவனின் அருளைப்பெற இந்த அக்னி மீது பார்வதி தேவி ஒற்றைக் காலில் நின்று கடுமையான தவம் செய்து சிவபெருமானின் அருளைப் பெற்று இறுதியில் சிவனின் உடலில் பாதியைப் பெற்றார். பஞ்ச அக்னி தவம் செய்யும் பார்வதி தேவியின் செதுக்கல் உள்ள இந்தத் தூண் திருக்கழுகுன்றம் கோயிலில் உள்ளது.

ஶ்ரீபூதநாதகீதை பகுதி – 1

இறைவனே மணிகண்டனாக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த இறைவனின் அருளால் உணர்ந்த ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை அரசன் இராஜசேகர பாண்டியன் இறைவனது பாத கமலங்களில் சரண் புகுந்து பிறவிப் பிணி தீர்க்க வேண்டி பிரார்த்தித்தார். முக்தியை நாடி வரும் மன்னனுக்கு மணிகண்டன் தானே ஞானாசிரியனாக விளங்கி ஞான தத்துவங்களை உபதேசித்தார். இந்த உபதேசத்தில் ஞான முதிர்ச்சி அடைந்தார் மன்னன். அந்த உபதேசமே ஶ்ரீபூதநாத கீதை நூல் ஆகும். இந்த ஶ்ரீபூதநாதகீதை நூல் திரு V. அரவிந்த் சுப்ரமணியம் அவர்களால் வெளிக் கொண்டுவரப்பட்டது. அந்த நூலில் உள்ள உபதேசங்களைப்பற்றிய சிறு விளக்கம் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சி பகுதி – 2 விரைவில் பதிவேற்றப்படும்.

கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் கோயில்

தேனி மாவட்டத்தில் கம்பம் என்னும் ஊரில் கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாத கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளுக்கு தனியாக சன்னதியும் சிவனுக்கு தனியாக சன்னதியும் சிவன் பெருமாள் கோயில்கள் ஒரே வளாகத்தில் தனித்தனி கொடிமரங்களுடன் உள்ளது. பிரம்மா வன்னி மர வடிவில் அருள்பாலிக்கிறார். ஆக மும்மூர்த்திகளும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்கள். பெருமாள் மூலவர் கம்பராயப்பெருமாள். தாயார் அலமேலு மங்கை நாச்சியார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். விமானத்துடன் தரிசிக்கும் வகையில் இவளது சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. இவருக்கு பின்புறமுள்ள நரசிம்மர் நான்கு கைகளிலும் சக்கரங்களுடன் காட்சி தருகிறார். சிவன் மூலவர் காசி விஸ்வநாதர். அம்பாள் காசிவிசாலாட்சி. ஆஞ்சநேயர் தட்சணாமூர்த்தி கௌமாரியம்மன் உபசன்னதிகளும் உள்ளன. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் சுரபி. மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் திரிதள விமானம் எனப்படும். இத்தலவிநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். காசி விநாயகர் காவல் தெய்வம் வடமலை மொட்டையாண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதி இருக்கிறது. இங்குள்ள முருகப்பெருமான் சண்முகநாதர் என்றழைக்கப்படுகிறார். ஆறுமுகங்களைக் கொண்ட இவருக்கு முன்புறம் ஐந்து முகங்களும் பின்புறம் ஒரு முகமும் கொண்டு வித்தியாசமான அமைப்பில் அருள்பாலிக்கிறார். சிவன் கோயிலில் காசி விஸ்வநாதர் சதுர வடிவ ஆவுடையாருடன் காட்சி தருகிறார். காசி விசாலாட்சிக்கும் சன்னதி இருக்கிறது. கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி கமண்டலத்துடன் யோக நிலையில் காட்சி தருகிறார். யோக பட்டை அணிந்திருக்கிறார். சீடர்கள் இல்லாமல் இவரது தலைக்கு மேலே கல்லால மரம் இல்லாமல் இவரது காலுக்கு கீழ் முயலகன் இல்லாமல் இருக்கிறார். காலின் கீழ் நாகம் மட்டும் இருக்கிறது.

அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவருக்கு சிவனுக்கும் பெருமாளுக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது. எப்படி இக்கோயிலை கட்டுவது என்று அவருக்கு தெரியவில்லை. ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பெருமாள் மேற்கு மலைத்தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஒரு கல் கம்பம் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவ்விடத்தில் தனது சிலை வடிவம் இருப்பதை உணர்த்தினார். அவரது கனவில் பெருமாள் சொன்னபடி சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கம்பம் அருகில் கிடைத்தவர் என்பதால் சுவாமிக்கு கம்பராயப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டினார். அந்த ஊருக்கும் கம்பம் என்று பெயர் வைத்தார். பின்னர் காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து இருவருக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் செய்வித்தார்.
 
சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு கலியன் என்று பெற்றோர்கள் பெயர் வைத்தார்கள். இவரை நீலன் என்றும் அழைத்தார்கள். இவர் சோழ மன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க் களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரை சோழ தேசத்தின் ஒரு பகுதியான திருமங்கை என்னும் நாட்டின் மன்னனாக்கினான். அன்று முதல் இவர் திருமங்கை மன்னன் என அழைக்கப்பட்டார். இவர் குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் பெருமாளை வணங்கி வழிபட ஆரம்பித்தார். மங்கையின் விருப்பப்படி திருமங்கை மன்னன் அடியார்களுக்குத் தினமும் அன்னதானம் செய்வதையும் திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்து வந்தார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும் அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தார். இறை சேவைக்காக யாசகம் செய்ய ஆரம்பித்தார். அதுவும் போதவில்லை. எனவே திருட ஆரம்பித்து அதில் கிடைக்கும் பொருளை வைத்து அடியார்களுக்கு தினமும் அன்னம் இடுவதையும் திருவரங்கத் திருக்கோயிலுக்கு கைங்கரியங்களையும் செய்து வந்தார். ஒரு நாள் இவர் திருட காத்திருக்கும் இடத்தில் பெருமாள் தன் உருவத்தை மாற்றி இலட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். திருமங்கை மன்னன் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக் கொண்டார். தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் பெருமாள் கழட்டவில்லை. திருமங்கை மன்னன் மோதிரத்தை கழட்டும்படி கூறியதற்கு என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள் என்றார் பெருமாள். அதேபோல் திருமங்கை மன்னன் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது பெருமாள் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த திருமங்கை மன்னன் மண்டியிட்டு பெருமாிடம் சரணடைந்தார். அதன்பின் அவர் ஆழ்வார்களில் ஒருவராகி திருமங்கையாழ்வார் என்று பெயர் பெற்றார்.

திருமங்கையாழ்வாரின் பக்தியையும் அவரது வாழ்க்கையையும் சிறப்பிக்கும் விதமாக இக்கோயிலில் ஆனி மாதம் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில் திருமங்கையாழ்வார் திருடிய வைபவம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்று திருமங்கையாழ்வார் திருடுவது போல பாவனை செய்து காவலர்கள் அவரை பிடித்துச் சென்று சுவாமி முன்பு நிறுத்துகின்றனர். அவ்வேளையில் அவர் திருடிய பொருட்களின் பட்டியல் வாசிக்கப்படும். இந்த நிகழ்வுக்கு பட்டோலை வாசித்தல் என்று பெயர். அதன்பின் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு காட்சி தரும் நிகழ்வு நடைபெறும். திருவோண நட்சத்திர நாட்களில் பெருமாள் சன்னதியில் ஓண தீபம் ஏற்றப்படும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்ததால் திருவல்லிக்கேணியில் பார்த்த சாரதி கோயில் பெருமாள் மீசையுடன் காட்சி தருகிறார். அது போல் இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று ஒருநாள் மட்டும் சுவாமிக்கு மீசையுடன் அலங்காரம் செய்யப்படுகிறது. திருவிழா நாட்களில் பெருமாள் சிலை கிடைக்கப்பெற்ற இடத்திலுள்ள கம்பத்திற்கு முதல் பூஜை செய்யப்படுகிறது. இவ்வூரில் தேரோட்டம் மூன்று நாட்கள் நடக்கும். ஆனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கு விசேஷ ஹோமத்துடன் பூஜை நடக்கிறது. பெருமாள் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி நவராத்திரி அனுமன் ஜெயந்தி ராமநவமி ஆகிய விழாக்களும் சிவனுக்கு சிவராத்திரி ஆடிப்பெருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம் ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது. இந்த கோயிலை விஜயநகரப் பேரரசு காலத்தில் விஸ்வநாத நாயக்கர் புதுப்பித்து கட்டியிருக்கிறார்.

சரணாகதி நம்பிக்கை

ஒரு முனிவர் ஒருவர் வெகுநாட்களாக இமயமலை அடிவாரத்தில் சாதுக்களுடன் தவமிருந்து பல சக்திகளைப் பெற்றார். தான் பெற்ற சக்தியை இறைவனின் அருளை மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து மக்களுக்கு இறைவனின் மீது நம்பிக்கையும் சரணாகதியும் வர வைக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை தேர்வு செய்து கிராம மக்களிடம் தான் இங்கு ஆசிரமம் அமைத்து தங்கப் போவதாகவும் இங்கு சிறிய ஆலயம் ஒன்று கட்டி இங்குள்ள பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை கற்பிக்கப் போவதாகவும் கூறினார். அவருக்கு அந்த கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து அவர்களும் அவருக்கு உதவியாக அவர் தங்குவதற்கு தென்னை ஓலைகள் பனை ஓலைகள் போன்றவற்றை கொடுத்து இடத்தையும் சீர் செய்து கொடுத்தனர். அங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். கிராம மக்களும் பூஜைக்கு தேவையான பால் பழம் இளநீர் போன்றவற்றை கொண்டு வந்து கொடுத்தனர். பூஜைகள் செய்து விட்டு மக்களுக்கு புராண கதைகளை கூறி தர்மத்தை போதித்தார்.

ஒரு நாள் அந்த வழியாக ஒரு ஆடு ஒன்று மேய்ந்து வந்தது. அது பாறை தடுக்கி கீழே விழுந்து அதன் கால் முறிந்து ரத்தம் கொட்டியது. உடனே முனிவர் அந்த ஆட்டுக் குட்டியை பிடித்து தன் ஆசிரமத்திற்கு பின்னால் இருந்த ஒரு பச்சிலையை கொண்டு வந்து அதன் காலில் துணியால் கட்டி இறைவா உனது செயல் இந்த ஆடு குணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். உடனே அந்த ஆடு எழுந்து ஓட ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் கிராமத்தில் சென்று முனிவர் செய்த அதிசயத்தை கூறினான். உடனே அந்த கிராமத்து மக்கள் முனிவரை வந்து சந்தித்து அங்கு நோய் வாய்ப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை செய்யும்படி கூறினார்கள். அதற்கு முனிவர் நான் வைத்தியன் அல்ல ஏதோ ஒரு பச்சிலையை எடுத்து அந்த ஆட்டு குட்டிக்கு கட்டினேன். இறைவன் குணப்படுத்தினார். அது எழுந்து ஓடியது. எனது செயல் ஒன்றும் இல்லை என்றார். ஆனால் கிராம மக்கள் இல்லை முனிவரே நீங்கள் உங்கள் கையால் எதை கொடுத்தாலும் எங்களுக்கு சுகமாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லி நோயாளிகளை அழைத்து வந்தார்கள். முனிவரும் செய்வதறியாது இறைவா இதுவும் உன் செயல் என்று கூறி நினைத்து காட்டிலிருந்த தனக்கு தெரிந்த மூலிகை செடிகளை பச்சிலைகளை பறித்து தனக்கு தெரிந்தவரை சிலவற்றை காய வைத்து பவுடராக ஆக்கியும் சில தழைகளை அரைத்து லேகியம் போல உருண்டைபிடித்தும் சில பச்சிலைகளை தைலம் போல தயாரித்து வைத்தார். கிராம மக்கள் தங்களுக்கு உண்டான நோய்களை சொல்லி மருந்து கேட்டபோது அவர்கள் வியாதிக்கு ஏற்றபடி மருந்தை கொடுத்து இறைவா குணப்படுத்து என்று பிரார்த்தனை செய்து கொடுத்தார். நம்பிக்கையுடன் வாங்கி சென்ற கிராம மக்கள் விரைவில் குணமடைந்தனர். தினமும் கூட்டம் வெளி கிராமத்தில் இருந்தும் வர ஆரம்பித்தது. அந்த ஊரில் இறைவன் மீது நம்பிக்கை இல்லாத ஒரு வாலிபன் இந்த சாமியார் செயலைப் பார்த்து இந்த ஆளை சோதிக்க வேண்டும் என்று வந்தான்.

முனிவரை பார்த்து நீங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மூலிகைகளைத்தான் கொடுக்கிறீர்கள் எப்படி குணமாகிறது என்று கேட்டான். அது இறைவன் செயலப்பா என்று முனிவர் கூறினார். எனக்கு இப்போது தீராத வயிற்று வலி அதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்று சிரிப்புடன் கேட்டான். அவன் எண்ணத்தை புரிந்து கொண்ட முனிவர் இவனுக்கு வயிற்று வலி அல்ல. நம்மை சோதிக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்து சரியப்பா அப்படியே செய்கிறேன் என்று சும்மா அவன் கையைப் பிடித்து பார்த்து விட்டு அந்த லேகியத்தில் ஒரு ஐந்து உருண்டை எடுத்துக் கொடுத்து தம்பி உனக்கு தீராத வயிற்று வலி. வயிறெல்லாம் புண்ணாகி உள்ளது. ஆகவே இந்த லேகியத்தை காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் அணிந்து ஒரு லேகியத்தை வெரும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டால் குணமாகும். இதற்கு ஒரு பத்தியம் இருக்கிறது நீ இந்த லேகியத்தை சாப்பிடுவதற்கு முன்பு குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது. நீ குரங்கை நினைத்து இந்த லேகியத்தை சாப்பிட்டால் அது எதிர்மறையாகி உன் உயிருக்கு ஆபத்தாகி விடும் அதுதான் பத்தியம். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வா. குரங்கை நினைத்து விட்டால் இந்த லேகியத்தை சாப்பிடாதே. மறுநாள் சாப்பிடு என்று அனுப்பி வைத்தார். மருந்து சாப்பிடாமலேயே தனக்கு குணம் ஆகிவிட்டது என்று மக்களிடம் சொல்லி இந்த முனிவரை திட்ட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு உள்ளே நுழைந்த உடனேயே அவனுக்கு உண்மையிலேயே வயிற்று வலி வருவது போன்ற உணர்வு வந்தது. என்ன இது உண்மையிலேயே வயிறு வலிக்கிறதோ என்று பயந்தான். பின் முனிவர் கொடுத்த மருந்துதான் இருக்கிறதே வயிற்று வலி வந்தால் காலையில் முனிவர் சொன்னது போல குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் இட்டுக் கொண்டு அந்த லேகியத்தை எடுத்து சாப்பிடலாம் என்று நினைத்துவிட்டு படுத்து விட்டான்.

காலையில் எழுந்ததும் வயிற்று வலி அதிகமாக இருந்தது. முனிவர் சொன்னது போலவே குளித்துவிட்டு திருநீறு அணிந்து கொண்டு லேகியத்தை எடுத்ததுமே குரங்கு ஞாபகம் அவனுக்கு வந்தது. முனிவர் எதை நினைக்கக் கூடாது என்றாரோ அந்த குரங்கு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருந்தது. குரங்கை நினைத்து விட்டோமே. இனி இந்த லேகியத்தை சாப்பிட்டால் நம் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று அன்று மருந்து சாப்பிடாமல் விட்டு விட்டான். அன்று முழுதும் வலியால் துடித்தான். மறுநாள் விடிந்ததும் குளித்துவிட்டு அதேபோல் லேகியத்தை எடுத்து சாப்பிட போனான் அப்போதும் அந்த குரங்கு தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அன்றும் சாப்பிடவில்லை. இப்படியாக ஐந்து நாட்கள் வயிற்று வலியிலேயே அந்த லேகியத்தை சாப்பிடாமல் துடித்தான். இனி தாமதிக்கக்கூடாது என்று அந்த முனிவரிடம் ஓடிவந்து முனிவரே என்னை மன்னியுங்கள். நான் உங்களை சோதிக்கவே சும்மா வயிற்று வலி என்று சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வயிற்று வலி வந்து விட்டது. நீங்கள் கொடுத்த லேகியத்தை சொன்னபடி சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பத்தியம் கடைபிடிக்க முடியவில்லை அந்த லேகியத்தை எடுக்கும் போதெல்லாம் என் கண் முன்னே குரங்கு தான் வந்தது அதனால் மருந்தை சாப்பிட முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அதன்படியே செய்கிறேன். என் வயிற்று வலியை குணப்படுத்துங்கள் என்று மனதார வேண்டினான்.

முனிவர் அவனை தட்டிக் கொடுத்து தம்பி உனக்கு ஒன்றுமில்லை நீ கவலைப்படாதே நீ என்னை சோதிக்க வந்தாய் அதனால் நான் உன்னை சோதித்தேன். பத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை நீ குரங்கை நினைத்து சாப்பிட்டாலும் அது ஒன்றும் செய்யாது லேகியம் வேலை செய்யும் வயிற்று வலி குணமாகும். இந்த லேகியத்தை இங்கேயே வாயில் போட்டு தண்ணீர் குடி மீதியை வீட்டிலிருந்து மீதி நான்கு நாட்களுக்கும் சாப்பிட சரியாகிவிடும். எதிலுமே நம்பிக்கை வைத்து எந்த செயல் செய்தாலும் அது வெற்றி அடையும். கிராம மக்கள் என்னிடம் நம்பிக்கையோடு வந்தார்கள் நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டார்கள் குணமானார்கள். நம்பிக்கை இல்லாமல் அரைகுறையாக எந்த காரியம் செய்தாலும் அது திருப்தி அடையாது வெற்றியடையாது என்று ஆசி கூறி அனுப்பினார்.

ஐயப்பன் தத்துவம் பகுதி – 1

“ஐயப்பன் தத்துவம்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 23-11-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

யோக நரசிம்மர்

இரண்யன் வதை முடித்து யோக நிலையை மேற்க்கொள்ளும் நரசிம்மரை இரசித்து சிவனும் பிரம்மனும் ஆசி கொடுக்கின்றார்கள். யோக நரசிம்மரின் தலைக்கு மேல் சிவன் மற்றும் பிரம்மாவின் உருவம். இடம் திருக்காவியூர் மகாதேவர் கோயில், பத்தனம்திட்டா கேரளா

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி

புதுக்கோட்டை திருவேங்கைவாசல் ஊரில் கீரனூர் சாலையில் அமைந்துள்ள வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சணாமூர்த்தி என்றும் அர்த்தநாரீஸ்வர தட்சணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அபய வரத ஹஸ்தங்களுடன் ஒரு கரத்தில் ருத்ராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார். இக்கோயில் மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி அருள்பாலிக்கிறார். அம்பாள் பிரகதாம்பாள். இந்தல இறைவனை வழிபட்ட காமதேனுவின் சாபத்தை புலி ரூபத்தில் இறைவன் வந்து நீக்கியபடியால் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.