தினமும் நான்கு காலப் பூஜைகளுக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும் தீவிரமான சிவ பக்தன் ஒருவன் இருந்தான். சிலைகளையும் படங்களையும் எங்கு பார்த்தாலும் அப்படியே நின்று பக்தியில் உருகுவான். இப்படிச் சிலைகளிலும் ஓவியங்களிலுமே பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமானை நேரில் தரிசனம் செய்ய அவன் ஆசைப்பட்டான். ஒரு சிற்பியிடம் சொல்லி அற்புதமாகச் சிவபெருமான் சிலை ஒன்றைச் செய்து வாங்கி வந்தான். சிவனே உயிரோட்டமாக வந்திருப்பது போன்ற அற்புதமான சிலை அது. தன் வீட்டுப் பூஜையறையில் அந்தச் சிலையை வைத்துப் பூஜைகளை ஆரம்பித்தான். நீண்ட காலம் அவன் சிவபெருமானை நினைத்து பூஜை செய்தான். காலங்கள் கடந்தும் சிவ பெருமானின் தரிசனம் அவனுக்குக் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவன் தன்னுடைய பூஜையை நிறுத்தினார். சிவபெருமானை வழிபடுவதை நிறுத்தினான். தான் ஆசையாகச் செய்து வாங்கிய சிவன் சிலையைத் தூக்கிப் பரண் மேல் வைத்தான். இவ்வளவு நாட்களைச் சிவபூஜையில் வீணடித்ததற்குப் பதிலாக பெருமாளை வணங்கியிருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. உடனே இன்னொரு சிற்பியைத் தேடிப் பிடித்து பெருமாள் சிலை ஒன்றைச் செய்து வாங்கினான். தன் வீட்டுப் பூஜையறையில் பெருமாள் சிலையை வைத்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தான். பெருமாள் சிலையின் முன்பாக ஊதுவத்தி ஏற்றி வைத்தான். அதன் நறுமணம் அறை முழுவதும் பரவியது. அப்போதுதான் அவன் பரணில் இருந்த சிவபெருமான் சிலையைப் பார்த்தான். பெருமாளுக்கு ஏற்றிய ஊதுவத்தியின் நறுமணத்தைச் சிவன் சிலை நுகரக்கூடாது என்று அந்தச் சிலையின் மூக்கைத் துணியால் இறுக்கமாக மூடினான்.
சிவபெருமான் அடுத்த நொடியே அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்துபோன அவன் சிவபெருமானை வணங்கிவிட்டு இத்தனை நாட்கள் நான் பூஜித்தபோது காட்சியளிக்காத நீங்கள் இப்போது காட்சி தருவது ஏன்? என்று கேட்டான். நான் கல்லாகவும் மண்ணாகவும் மலையாகவும் நீராகவும் காற்றாகவும் ஆகாயமாகவும் இருப்பவன். இந்த கல்லே நான்தான். ஆனால் நீயோ வெளியே இருந்து ஏதோ ரூபம் சிலைக்குள் வந்து காட்சி கொடுக்க போகிறது என்று எண்ணி பூஜித்து வந்தாய். இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் கல் சிலையாக நினைத்தாய். இன்றுதான் இந்தச் சிலையாகவே நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ அப்படி உணர்ந்த அந்த நொடி நான் உன் கண்முன் வந்துவிட்டேன் என்றார் இறைவன்.
இறைவனைக் காண வேண்டுமெனில் அனைத்தும் இறைவனே என்ற எண்ணமும் உறுதியான சரணாகதி மற்றும் நம்பிக்கையே முக்கியம்.
காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் 16 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருமாகறல். இறைவன் திருநாமம் திருமாகறலீஸ்வரர். இறைவியின் திருநாமம் திரிபுவனநாயகி. இத்தலத்தில் முருகப்பெருமான் யானை மீது அமர்ந்து காட்சி அளிக்கிறார். திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்திரன் முருகனுக்கு திருமணப் பரிசாக தனது பட்டத்து யானையான ஐராவதம் என்ற வெள்ளை யானையை கொடுத்தான். புதுமணத் தம்பதிகளை வெள்ளை யானையில் அமரச் செய்து அக்காட்சியை கண்ணார கண்டு மகிழ்ந்தான். மகாவிஷ்ணுவும் இக்காட்சியை காண விரும்ப முருகன் இத்தலத்தில் வெள்ளை யானை மீது அமர்ந்து காட்சி கொடுத்தார்.
கண்ணனும் பலராமரும் சாந்தீபனி என்ற குருவிடம் கல்வி கற்றார்கள். இருவரும் அறுபத்து நான்கே நாட்களில் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கற்று முடித்தார்கள். குருகுல வாசத்தைப் பூர்த்தி செய்து கொண்டு கிளம்பும்போது குருநாதரிடம் உங்களைக் குருவாக அடைந்ததை எங்கள் பாக்கியமாகக் கருதுகிறோம். உங்களுக்கு நாங்கள் குரு தட்சணையாக என்ன தர வேண்டும்? என்று இருவரும் கேட்டார்கள். அதற்கு குரு கண்ணா உங்களைப் போன்ற ஒரு மாணவன் கிடைக்க நானல்லவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்? நீயும் பலராமனும் மாணவர்களாகக் கிடைத்ததே எனக்குப் பெரிய தட்சணை என்று சாந்தீபனி பதிலளித்துக் கொண்டிருக்கையில் அவரது மனைவி சுவாமி ஒரு நிமிடம் என்று அவரை உள்ளே அழைத்தாள். அறைக்குள் வந்த அவரிடம் சுவாமி கண்ணனிடம் குரு தட்சணைை வேண்டாம் என்று சொல்லாதீர்கள் இந்தப் பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றிருக்கிறார்கள். எனவே இவர்கள் அசாத்தியமான செயல்களையும் சாதிக்கும் வல்லமை பொருந்தியவர்கள். எனவே இறந்து போன நம் குழந்தையை மீட்டுத் தருமாறு அவர்களிடம் கேளுங்கள் என்றாள்.
கண்ணனால் இதனை செய்ய இயலுமோ இயலாதோ என்ற ஐயத்துடன் வெளியே வந்த சாந்தீபனி கண்ணா பன்னிரண்டு வருடங்களுக்கு முன் நான் என் குடும்பத்தோடு கடலில் குளிக்கச் சென்றிருந்த போது என்னுடைய ஒரே மகன் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். அவனை உன்னால் மீட்டுத்தர முடியுமா? என்று கேட்டார். மகா குருவே உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா? உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்ணன் கடலரசனைக் காண புறப்பட்டான். கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன் கேட்ட போது பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான். அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான் என்று கைகாட்டினான் கடலரசன். உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான் கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு. அவனது வயிற்றுக்குள் கண்ணன் தேடினான். ஆனால் சாந்தீபனியின் மகன் அவன் வயிற்றில் இல்லை. அடுத்து வருணனிடம் சென்ற கண்ணன் சாந்தீபனியின் மகனைக் குறித்து வினவ அந்தச் சிறுவன் யமலோகத்தில் இருக்கிறான் என்றார் வருண பகவான். யமலோகத்துக்குச் சென்றான் கண்ணபிரான். தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கண்ணன் சங்கநாதம் செய்தவுடன் யமன் கண்ணனின் திருவடிகளில் வந்து விழுந்தான். பரந்தாமா என்னைத் தேடி நீங்கள் வரவேண்டுமா? அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே என்றான். தன் குருவின் மகனைக் குறித்துக் கண்ணன் கேட்க இங்கு தான் இருக்கிறான் என்று சொன்ன யமன் அவனைக் கண்ணனிடம் ஒப்படைத்தான். அந்தச் சிறுவனைச் சாந்தீபனியிடம் அழைத்து வந்து குருதட்சணையாகச் சமர்ப்பித்தார் கண்ணன்.
இதை திருமங்கையாழ்வார் தன் திருவாய் மொழியில் பாடலாக பாடியுள்ளார்.
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது சிங்கவரம் கிராமம். அங்கு பல்லவர் கால குடைவரைக் கோயிலாக அரங்கநாதர் கோயில் உள்ளது. அரங்கநாதருக்கு அருகாமையில் தனி சன்னதியில் அரங்கநாயகி தாயார் அமர்ந்து இருக்கிறார். இவர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஓர் அறை இருக்கிறது. தாயாருக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் ஆரத்தித் தட்டினை சிறிது அந்தப் பக்கம் காண்பிப்பார். சிறிய சாளரத்தின் வழியே தீப வெளிச்சத்தில் அங்கு வீற்றிருக்கும் அழகிய கொற்றவை காட்சித் தருவாள். கொற்றவைக்கு வழக்கமாக உள்ள 8 கரங்கள் ஆயுதங்கள் இங்கு இல்லை. நான்கு கரங்கள் மட்டுமே உள்ளது. பின்னிரு கரங்கள் சக்கரம் சங்கினை ஏந்தியுள்ளன. முன்னிரு கரங்கள் இடுப்பின் மீதும் தொடையின் மீதும் வைத்த நிலையில் சற்று சாய்ந்து ஒய்யாரமாக நிற்கிறாள். வழக்கமாகக் கொற்றவையின் இரண்டு கால்களும் எருமைத் தலைமீது வைத்த நிலையில் காணப்படும். ஆனால் இங்கு வலது காலை மட்டும் மகிஷனின் தலைமீதும் இடது காலை தரையிலும் ஊன்றி நிற்கின்றாள். இரண்டு பக்கமும் இரண்டு அடியவர்கள் உள்ளார்கள். வலப்பக்கத்தில் இருப்பவர் நீண்ட தலைமுடி மீசையுடன் வீரனுக்கே உரித்தான பாணியில் இருக்கிறார். தனது வலது கையில் உள்ள கத்தியால் இடது கால் தொடையின் சதையை அரிந்துகொள்வது போல் உள்ளது. இடது பக்கத்தில் இருப்பவர் தரையில் முழங்கால் மண்டியிட்டு பூஜை செய்யும் நிலையில் அமர்ந்து இருக்கிறார். தலை மழித்து காணப்படுகிறது. மீசையும் இல்லை.
அதிர்ஷ்டம் என்ற வார்த்தைக்கு பொருளானது தற்போது வசதியின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. பொருள் செல்வம் இல்லாதவன் மற்றும் திறமை அற்றவன் ஆகியோர் அதிஷ்டம் இல்லாதவனாக பார்க்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகிறது.
உண்மை பொருள்:
அதிர்ஷ்டம் என்பற்கு பார்க்கக் கூடிய அல்லது பார்ப்பதைக் குறிக்கிறது. யாராலும் பார்க்க முடியாததை பார்ப்பவனே அதிர்ஷ்டசாலி ஆகின்றான். திருஷ்டி என்ற வார்த்தை உண்டு. பார்ப்பதை குறிப்பதால் தான் திருஷ்டி பட்டுவிடப் போகிறது என்கிறார்கள். பார்த்த விஷயங்களையே பார்த்துப் பார்த்து அது நம் நினைவுகளில் சுவடுகளாக பதிவாகிவிடும். இந்த பதிவு அழியும் வரை அது அழியாத திருஷ்டியாக அப்படியே இருக்கும். கண்கள் பார்த்ததை மட்டுமே நம்புவதால் தன்னிடம் இல்லாத பொருள் இன்னொருவரிடம் இருப்பதை பார்க்கும் போது அது தன்னிடம் இல்லையே என்ற ஏக்கமும் வைத்திருப்பவர் மீது பொறாமையும் ஏற்படுகிறது. ஆகவே இதன் பொருள் திருஷ்டி ஆகும். இதன் பொருள் அதிஷ்டம் கிடையாது.
அதிர்ஷ்டம் என்றால் இதுவரை பார்க்காத பார்வைக்கு புலனாகாத விஷயம் என்று பொருள்படும். அப்படியொன்று ஒருவனுடைய வாழ்வில் கண்களுக்கு புலப்பட்டால் அனுபவமாக உணரப்படுமானால் கேட்கப்படுமானால் அவன் அதிர்ஷ்டமுடையவன் ஆகின்றன். இந்த அதிஷ்டம் ஒருவனுக்கு வாய்க்க வேண்டுமானால் ஞான குருவின் வழிகாட்டுதலின் மூலமாகவே கிடைக்கும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஞான குருவைப் பெற்றவன் மட்டுமே அதிர்ஷ்டசாலி ஆவான்.
அனாதை
அனாதை என்ற வார்த்தைக்கு தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் இல்லாதவர்கள் ஆகியோர்களை உலக ரீதியாக அனாதை என்ற சொல்லைப் பயன்படுத்ததி பார்க்கப்படுகிறது.
உண்மைப் பொருள்:
குருவை அடையாத ஒருவனை அனாதை ஆவான். அனாதை என்பதற்கு சமஸ்கிருத மொழியில் குருவை அடையாதவன் என்று பொருள். குரு சீடனுக்கு வழிகாட்டி அறிவை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் தீட்சை வழங்கி ஆத்ம ஞானத்தை ஊட்டி முக்தியடைய வழிகாட்டுபவராகவும் இறைவனை உணர வைப்பவராகவும் இருக்கிறார். எத்தனை உறவு முறைகள் சொந்த பந்தங்கள் இருந்தாலும் குருவை அடையாதவனே அனாதை ஆவான். ஏனெனில் எந்தனை சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஒரு நாள் அனைத்து சொந்த பந்தங்களும் பிரிந்து அழிந்து போகும். சொந்த பந்தங்கள் நிலையற்றது ஆகும். ஆனால் ஞான குருவை பெற்றவன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனை சென்று அடையும் வரை நிலையாக இந்த குரு சீடன் உறவு இருந்து கொண்டே இருக்கும். குருவானவர் சீடனுக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பார்.
பாண்டவர்களும் கௌரவர்களும் துரோணரிடம் வில்வித்தைக் கற்று வந்தனர். அதில் பாண்டவர்களின் திறமையே எங்கும் பளிச்சிட்டது. அதனால் துரியோதனனின் மனதுக்குள் பொறாமைத் தீ எரிந்து கொண்டே இருந்தது. ஒருநாள் பீஷ்மரிடம் வந்த துரியோதனன் தாத்தா வில் வித்தை கற்றுத் தரும் துரோணர் அனைவரையும் சரிசமமாக பாவிப்பதில்லை. பாண்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு வேறு மாதிரியாகவும் பாடம் நடத்துகிறார். இதுபற்றி அவரிடம் கேளுங்கள் என்று வற்புறுத்தினான். வேறு வழியின்றி துரோணரை சந்தித்த பீஷ்மர் தான் வந்த நோக்கத்தை நாசூக்காகத் தெரிவித்தார். உடனே துரோணர் பிதாமகரே நாளைய தலைமுறை இடையே நான் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை. அனைவரையும் ஒன்றாகவே எண்ணி போதிக்கிறேன். என்ன தான் மழை பெய்தாலும் பாத்திரத்துக்கு தக்க படி தானே நீர் நிரம்பும். அதற்காக மழையை குற்றம் சாட்ட முடியாது தானே? எனினும் தாங்களே வந்து கேட்டதற்கு நன்றி என்றவர் பீஷ்மரை நீராட அழைத்துச் சென்றார்.
துரோணரும் பீஷ்மரும் முன்னே நடக்க பாண்டவர்களும் கௌரவர்களும் பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும் அர்ஜுனா எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம் என்றிருக்கிறேன். ஆஸ்ரமம் சென்று எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்து வா என்றார் துரோணர். அர்ஜுனன் ஆஸ்ரமம் நோக்கி ஓடினான். இதையடுத்து அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். வழியில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது அதன் நிழலில் பீஷ்மருடன் சென்று அமர்ந்தார் துரோணர். அர்ஜூனன் வரும்வரை புதிய பாடத்தை சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என்றவர் மந்திரம் ஒன்றைத் தரையில் எழுதினார். பிறகு இந்த மந்திரத்தை சொல்லி மரத்தின் மீது அம்பு எய்தினால் அந்த அம்பானது மரத்தின் எல்லா இலைகளிலும் துளையிடும் என்றவர் மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தார். துரியோதனனை அழைத்து இந்த வித்தையை செய்து காட்டுமாறு பணித்தார். துரியோதனன் எழுந்தான் தரையில் இருந்த மந்திரத்தைப் படித்தான். குரு சொல்லிக் கொடுத்தபடி மந்திரத்தை சொல்லி மரத்தை நோக்கி அம்பு எய்தினான். மரத்தில் இருந்த எல்லா இலைகளிலும் துவாரம் விழுந்தது. அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். துரியோதனன் கர்வத்துடன் வந்து அமர்ந்தான். பீஷ்மர் சந்தோஷப்பட்டார். இதையடுத்து சரி நீராடச் செல்வோம் வாருங்கள் என்று கிளம்பினார் துரோணர்.
அர்ஜுனனும் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்து சேர்ந்தான். அனைவரும் நதியில் நீராடினர். பிறகு அங்கிருந்து கிளம்பியவர்கள் மீண்டும் அந்த மரத்தடியில் வந்து அமர்ந்தனர். அப்போது நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். காரணம் மரத்தின் எல்லா இலைகளிலும் இரண்டாவதாக துளை இருந்தது. பீஷ்மருக்கு குழப்பம். துரோணரே நீராடச் செல்லும்போது துரியோதனன் அம்பெய்தி மர இலைகளில் துளையை உண்டாக்கினான். நீராடிவிட்டு வந்தால் எல்லா இலைகளிலும் இன்னொரு துளை இருக்கிறதே எப்படி? என்றார் வியப்புடன். உடனே மாணவர்கள் பக்கம் திரும்பிய துரோணர் இது யார் செய்த வேலை? என்று கேட்டார். அடியேன் என்று வணங்கி நின்றான் அர்ஜுனன். பீஷ்மர் திகைத்தார். அர்ஜுனனிடம் இந்த வித்தையை துரோணர் கற்றுக் கொடுக்கும்போது நீ இங்கு இல்லை. பிறகெப்படி? என்று ஆச்சரியம் மேலிடக் கேட்டார். தாத்தா எண்ணெய்ப் பாத்திரத்துடன் திரும்பும் போது இந்த மரத்தடியில் காலடிச் சுவடுகள். அதைத்தவிர தரையில் எழுதப்பட்டிருந்த மந்திரத்தையும் கண்டேன். எதற்காக இந்த மந்திரம் என்று யோசித்த வேளையில் மரத்தின் இலைகளில் இருந்த துளைகளைக் கவனித்தேன். இரண்டுக்கும் ஏதோ தொடர்பு உண்டு என்று யூகித்தேன். மந்திரத்தை உச்சரித்து அஸ்திரம் தொடுத்தேன். என் யூகம் பொய்க்கவில்லை. எனது அஸ்திரம் எல்லா இலைகளையும் துளைத்தது என விவரித்தான் அர்ஜுனன். அவனைக் கட்டியணைத்துக் கொண்டார் பீஷ்மர். துரியோதனனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. இதென்ன சாதனை? என்று கேலி செய்தான். இதைக் கண்ட துரோணர் துரியோதனா எங்கே மீண்டும் அம்பு எய்தி இலைகளில் துளை உண்டாக்கு என்றார் சிரித்தபடி. துரியோதனன் மந்திரம் எழுதியிருந்த இடத்துக்கு வந்தான். அங்கே மந்திரம் இல்லை. அழிக்கப்பட்டிருந்தது. அதிர்ந்து போனான். தரையில் எழுதப்பட்டிருக்கும் மந்திரத்தை எவரேனும் மிதித்து விடக் கூடாதே என்று மந்திரத்தை மனதில் பதிய வைத்துவிட்டு நான் தான் அழித்து விட்டேன் பவ்வியமாகச் சொன்னான் அர்ஜுனன். மந்திரத்தை மனதில் பதிய வைக்கத் தவறியதால் தலை குனிந்து நின்றான் துரியோதனன்.
பீஷ்மரே இப்போது கூறுங்கள் என் மீது ஏதும் குற்றம் உண்டா? என்று கேட்டார் துரோணர். பிறகு மாணவர்கள் பக்கம் திரும்பிய துரோணர் சீடர்களே பொறாமை ஆத்திரம் அவசரம் கோபம் முதலான தீய குணங்களுக்கு மனதில் இடம் தரவே கூடாது. எதிலும் அலட்சியம் கூடாது. சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கோட்டை விட்டவர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பிரகாசிக்க முடியாது. பார்க்கின்றவற்றிலெல்லாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்று யோசித்து தேடி கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தினார். பீஷ்மரும் உண்மையை உணர்ந்து கொண்டு அங்கிருந்து எந்த மனச்சலனமுமின்றி சென்றார்.
ஆழ்வார்களிலே நான்காவதாக உள்ள திருமழிசை ஆழ்வார் தன்னுடைய பாசுரங்களில் திருமாலின் அவதாரங்களுக்குள் அழகன் யார் என்று ஒரு போட்டி வைத்தார்.
1 மச்ச அவதாரம்: ஒரு பெரிய வெள்ளத்தில் இருந்து மனு என்ற முதல் மனிதரைக் காப்பாற்ற விஷ்ணு மீனாக அவதரித்தார். 2 கூர்ம அவதாரம்: தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற கடலைக் கடைந்தபோது மந்தர மலையின் சுமையாக விஷ்ணு ஆமையாக அவதரித்தார். 3 வராக அவதாரம்: பூமியை கடலுக்குள் இழுத்துச் சென்ற போது பூமியை மீட்க விஷ்ணு பன்றியின் உருவத்தில் வந்தார். 4 நரசிம்ம அவதாரம்: அரக்கன் இரண்யகசிபுவை வதம் செய்ய விஷ்ணு மனிதன் மற்றும் சிங்கத்தின் உருவத்தில் அவதரித்தார். 5 வாமன அவதாரம்: திரிவிக்ரமன் என்று அழைக்கப்படும் வாமன அவதாரத்தில் விஷ்ணு ஒரு குள்ள பிராமணராக அவதரித்து மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்கினார். 6 பரசுராம அவதாரம்: பிராமணராக அவதரித்து பூமியில் க்ஷத்திரியர்களின் (ஆட்சியாளர்கள்) அட்டூழியங்களை அடக்கினார். 7 இராம அவதாரம்: திரேதா யுகத்தில் தர்மத்தின் வடிவமாக அவதரித்த விஷ்ணு ராவணனை வென்று அயோத்தி அரசராக ஆட்சி செய்தார். 8 பலராம அவதாரம்: துவாபர யுகத்தில் கிருஷ்ணரின் மூத்த சகோதரராக பலராமன் அவதரித்தார். அவர் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பாதுகாவலராக கருதப்படுகிறார். 9 கிருஷ்ண அவதாரம்: துவாபர யுகத்தில் அவதரித்து பகவத் கீதையை போதித்தவர். 10 கல்கி அவதாரம்: கலியுகம் முடியும் போது தர்மத்தை நிலைநாட்ட அவதரிக்கும் அவதாரம்.
இந்த பத்து அவதாரங்களையும் தன்னுடைய கண் முன் நிறுத்தினார். மச்ச கூர்ம வராக அவதாரங்கள் மிருக வடிவங்களில் இருந்தமையால் அவர்களை முதலில் நிராகரித்து விட்டார். மகாபலியிடம் சிறிய காலைக் காட்டி மூன்றடி நிலம் கேட்டு விட்டுப் பெரிய காலால் மூவுலகையும் அளந்தவர் நீங்கள். அதுபோலப் போட்டியிலும் நீங்கள் உருவத்தைத் திடீரென மாற்றிக் கொள்ள வாய்ப்புண்டு என்று அவரையும் நிராகரித்து விட்டார். பரசுராமர் எப்போதும் கையில் மழுவுடனும் கோபம் நிறைந்த முகத்துடனும் இருப்பதால் அவரையும் நிராகரித்தார். பலராமன் கண்ணன் இருவரையும் பார்த்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியில் பங்கேற்கக் கூடாது. யாராவது ஒருவர் மட்டும் இருங்கள் என்று கூறினார். தம்பிக்காக பலராமன் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். கல்கி பகவான் இன்னும் அவதாரமே எடுக்காததால் நீங்கள் அவதரித்தபின் அடுத்த போட்டியில் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரையும் நிராகரித்து விட்டார். ராமன் அனைத்து நற்பண்புகளும் நிறைந்த பரிபூர்ணமான மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனிதனாகவே வாழ்ந்ததால் ஒரு வண்ணானின் பேச்சுக்காக தன் தேவியையே துறந்தார். அதனால் அவரையும் நிராகரித்தார். கண்ணன் கோபிகைகளை எல்லாம் மயக்கிய அழகன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த கோபிகைகளையும் விரக வேதனையில் தவிக்க விட்டுச் சென்றபடியால் அவரையும் நிராகரித்து விட்டார். இறுதியில் நரசிம்மருக்குத் தலை சிங்கம் போல இருந்தாலும் உடல் மனித வடிவில் இருப்பதாலும் ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ அவர்கள்தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள். பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். எனவே அவர்தான் அழகு என்று கூறினார்.
பெருமாள் திருமேனியில் உள்ள அனைத்து அங்கங்களும் அழகாக இருந்தாலும் துன்பங்கள் நேரும்போது பெருமாளின் திருவடிகளைத்தான் நினைத்துக் கொள்கின்ற போது அந்தத் திருவடிகள்தான் ஆபத்திலிருந்து நம்மைக் காக்து மோட்சத்தை கொடுக்கிறது. எனவே அவைதாம் மிகவும் அழகு அவ்வாறே ஆபத்தில் ஓடோடி வந்து காப்பவரான நரசிம்மர்தான் அவதாரங்களுக்குள் அழகானவர். இந்தக் கருத்தைத் திருமழிசைப் பிரான் தாம் இயற்றிய நான்முகன் திருவந்தாதி என்ற நூலின் இருபத்திரண்டாவது பாசுரத்தில் அருளிச் செய்துள்ளார்.
அழகியான் தானே அரி உருவன் தானே பழகியான் தாளே பணிமின் குழவியாய்த்தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே மீனாய் உயிரளிக்கும் வித்து.
என்ற பாசுரத்தில் அரி எனப்படும் சிங்க வடிவில் வந்த நரசிம்மரே அழகானவர் என்று காட்டுகிறார். அதனால்தான் அழகிய ராமன் அழகிய கண்ணன் முதலிய பெயர்களை நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் நரசிம்மர் மட்டும் அழகிய சிங்கர் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இதனால் நரசிம்மருக்கு ஸ்ரீமான் என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள். மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்? ஸ்ரீமான் நரசிம்மரின் அழகிய முகத்தை திருமார்பில் இருந்தபடி காணமுடியாது. மடியில் அமர்ந்தால் காண முடியும் என்று ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவியாகிய அன்னை அமர்ந்திருந்து அவர் அழகை ஒவ்வொரு நொடியும் கண்டு லயிக்கிறாள்.
வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் குடியானவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் குழந்தை இல்லாமல் இருந்தான். ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக குழந்தை உண்டாவான் என தேற்றினார். எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் குழந்தை உண்டாகும் என்றார். தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான். ஒரு குடை ஒரு மிதியடி ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தேவைப்படுவோர் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதி வைத்துவிட்டு தன் தொழிலில் ஈடுபட்டான். பக்தியில் மேம்பட்ட அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது சமயம் வெயில் காலமாதலால் வெப்பத்தால் துடிதுடித்துச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை செருப்பு விசிறி இம்மூன்றையும் கண்டார். அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார். காசிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் உயிர் துறந்த அந்தணர் மூன்று பொருட்களையும் தானம் செய்தவன் வீட்டில் மகனாகப் பிறந்தார். தனக்கு மகப்பேறு உண்டானது கண்டு மகிழ்ந்தான். குழந்தை பிறந்து பேச ஆரம்பிக்கும் பருவத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்தது. அது கண்டு பெற்றோர்கள் கவலைப் பட்டனர். குழந்தை வளர்ந்து பதினாறு வயது அடைந்தது.
இவர்கள் வாழ்ந்த ஊரில் கள்வர்கள் பயம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை. அவ்வூர் அரசனிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். அரசன் நாள் தோறும் தினம் ஒருவராக ஊர் சுற்றி வந்து நான்கு ஜாமங்களும் பறை கொட்டி வரும்படி ஆணை பிறப்பித்தார். அவ்வாறே மக்களும் வீட்டிற்கு ஒருவராகப் பறை கொட்டி வந்தனர். ஒரு நாள் சக்கிலியன் முறை வந்தது. அன்று அவன் முக்கியமாக வெளியில் செல்ல நேர்ந்தது. மனைவியிடம் ஊமை மகனை பறை அடிக்க அனுப்பும் படிச் சொல்லி விட்டுச் சென்றான். அன்றிரவு தாய் மகனை அழைத்தாள். அவன் கையில் பறையைக் கொடுத்து சாம சாமத்திற்கு அடிக்கும் படி ஜாடை காட்டினாள். ஊமைச் சிறுவன் பறையை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடித்துக் கொண்டே சென்றான். பிறந்தது முதல் பதினாறு வயது வரையிலும் பேசாமல் இருந்தவன் முதல் ஜாமம் முடிந்ததும் பறையை நிறுத்தி வடமொழியில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான். அந் நாட்டு அரசன் அதைக் கூர்ந்து கேட்டார். இவ்வாறு சிறுவன் நான்கு ஜாமங்களுக்கும் பறை கொட்டி நான்கு ஸ்லோகங்கள் சொல்லி முடித்தான். பொழுது புலர்ந்தது. வீட்டிற்குச் சென்றான். பறையை வைத்தான். பழைய படி மௌனமாயிருந்தான். அன்றிரவு முழுவதும் விழித்திருந்து அச் ஸ்லோகங்களைக் கேட்ட அரசன் அவைகளின் பொருளை ஆராய ஆவல் கொண்டான். விடிந்ததும் வீட்டிற்கு வந்த சக்கிலியன் தன் மகன் தனது கடமையை ஒழுங்காக செய்தானா என்று மனைவியிடம் கேட்டு ஒழுங்காக செய்தான் என்றதும் மகிழ்ச்சி அடைந்தான்.
அரசனும் காலையில் அரசவைக்கு வந்தார். மந்திரியிடம் நேற்றிரவு பறை கொட்டியவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அவர்கள் சேவகர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்கள் சக்கிலியனை அழைத்து அரசர் முன் நிறுத்தினர். சக்கிலியன் அரசரைக் கண்டு நடுக்கமடைந்தான். அரசன் சக்கிலியனை ஆசனத்தில் அமரச் செய்து நேற்றிரவு பறை கொட்டும் போது நான்கு ஜாமத்திற்கும் நான்கு ஸ்லோகங்கள் சொன்னீர்களே அதன் பொருள் என்ன? என ஆவலுடன் கேட்டார். சக்கிலியன் வியப்புடன் அரசே நேற்றிரவு பறை கொட்டியவன் என் மகன் அவன் பேச மாட்டான் ஊமையன் என்றான். உடனே அரசன் அச்சிறுவனை அழைத்து வரும் படிச் சொல்லச் சேவகர்கள் அவனை அழைத்து வந்தனர். அரசனது மனம் பக்குவம் பெற்றிருந்தது. சக்கிலியன் மகனைக் கண்ட அரசன் தம் சிம்மாசனம் விட்டிறங்கினார். அச்சிறுவனை எதிர் கொண்டு அழைத்தார். ஆசனத்தில் அமரும் படி பணிவுடன் சொன்னார். இக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்தனர். அரசர் சிறுவனை உணர்ந்தார். அவனது உள்ளக் கிடக்கையை அறிய ஆவல் கொண்டு நேற்றிரவு நான்கு ஜாமங்களிலும் சொன்ன ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் படி வேண்டினன்.
சிறூவன் முதல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கம் செய்தனன்
இந்த உடம்பில் மதிப்பிட முடியாத ரத்தினத்தை விட உயர்ந்த ஞானம் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம் குரோதம் லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.
மகிழ்ச்சி அடைந்த அரசர் இரண்டாவது ஸ்லோகத்திற்கு பொருள் கேட்டார். சிறுவன் இரண்டாம் ஸ்லோகம் சொல்லி பொருள் கூறினன்.
பிறத்தல் மிகவும் துன்பம். பிறவியின் இறுதியில் வரும் முதுமை பருவம் பெருந்துன்பம். இடையில் இருக்கும் வாலிப காலங்களில் இனக்கவர்ச்சி மோகத்தால் உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும். ஜனன மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் மிகப்பெரியது. ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள்.
இரண்டாம் ஸ்லோகத்தின் மூலம் சம்சார சாகரம் தீராத துக்கம் என்றும் இதனின்று விலக அறிவு தனித்திருக்க வேண்டும் என்றும் தெளிந்தார் அரசர். சிறுவன் சொன்ன மொழிகளைக் உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் அடைய வேண்டிய மெய்ப் பொருளை அடைய ஆவல் கொண்டு அடுத்த ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார்.
ஈன்று வளர்த்த அன்னையும் தந்தையும் நிலை இல்லாதது. இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் நிலை இல்லாதது. தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் நிலை இல்லாதது. ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள். எச்சரிக்கையாய் இருங்கள்..
அரசன் சிறுவன் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார். நான்காம் ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார் அரசர். அவ்வாறே சிறுவன் கூறினன்.
இந்த உலகில் மனிதர்கள் பலவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள். இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிவதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். கர்மாவை வெல்ல முயலுங்கள்.
சிறுவனின் ஞான உரைகளைக் கேட்ட மன்னர் மிக வியந்தார். சிறுவனின் தந்தையை அழைத்து உன் மகன் ஊமையன் அல்லன். பெரிய ஞானி. நான் அவன் ஞான மொழிகளைக் கேட்கும் பேற்றைப் பெற்றேன் என்று ஆனந்தமடைந்தார்.
நம்முள் இருக்கும் திருடர்களை கவனிக்காமல் வெளியே இருக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு காலத்தை வீணாகக் கழிக்கின்றோம் என்பதை இக்கதையை உணர்ந்தால் தெரிந்து கொள்ளலாம்.
சாருகர் ஒரு மாமிச வியாபாரி. தன் கடையில் எடை கல்லாக சாளக்கிராம மூர்த்தியை உபயோகித்து வந்தார். சாளக்கிராமத்தின் மகிமையை பக்தர் ஒருவர் சொல்லக்கேட்டு நாளடைவில் அந்த மூர்த்தி மேல் அன்பு ஏற்பட்டு வியாபார நேரம் தவிரத்து மற்ற நேரங்களில் அந்த சாளக்கிராம கல்லை வணங்கி வந்தார். ஒரு நாள் இதை கவனித்த விஷ்ணு பக்தர் அவரை ஏம்பா இந்த அடாத செயல் செய்கிறாய் என சாளக்கிராமத்தின் மகிமையையும் கிருஷ்ண பரமாத்மாவின் புகழையும் எடுத்து கூறி பண்டரி மேன்மையையும் கூற இதை அறிந்த சாருகர் பண்டரி யாத்திரை செல்ல முடிவு செய்து கிளம்பினார். வழியெல்லாம் பண்டரி நாதா பண்டரிநாதா எனு கூறி என்றும் விட்டல் விட்டல் என்று பஜனை செய்து கொண்டே சென்றார். இரவு பகலாக பஜனை செய்தபடி நடந்து சென்றார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.
ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார். இரவில் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார். இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் வேலை காரணமாக கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே தாங்கள் யார்? என்று கேட்டாள். அதற்கு சாருகர் அம்மா வணக்கம் நான் ஒரு யாத்ரீகன். என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன் என்றார். அந்த பெண்மணி இவரிடம் என் உள்ளததைக் கொள்ளை கொண்ட உத்தமரே இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர் என அவரை ஆசையுடன் நெருங்கினாள். அம்மா இந்த உலகம் கடுகளவு மட்டுமே. இந்த கடுகளவு உலகத்தில் தவறு செய்யும் பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத்தினாலும் பெண்களைத் தீண்டாதவன். நீங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம். கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம் என ஒழுக்கத்தை போதித்தார். அவள் காதுகளில் ஏதும் விழவில்லை. வெறி பிடித்தவளைப் போல ஓடி கத்தியை எடுத்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துண்டித்தாள். என் உயிரினும் இனிய உத்தமரே என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர் என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள். இந்தக் கொடுஞ் செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா? பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள். சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள். பெரியோர்களே இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு வேலையாக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள். ஊர்க்காரர்கள் சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். பின்னர் காவலர்களிடம் ஒப்படைத்து சிறையில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின் அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான்.
பாண்டுரங்கன் அனைத்தும் அறிவான் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை என நடந்ததை உள்ளபடி சொன்னார் சாருகர். குற்றம் புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள். சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத சாருகர் துடிதுடித்தார். கைகளில்லாமல் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள் அறங்காவலர்கள் தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி நமது பரம பக்தனான சாருகன் வருகிறான். கோயில் மேளம் குடை சுருட்டி பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள் என்று பணித்தருளினார். அனைவரும் சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர். சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார். அப்பாேது வெட்டப்பட்ட கைகள் இரண்டும் விட்டலன் அருளால் முளைத்தன.
தேவ தேவா விட்டலா என்று அன்பின் வெளிப்பாட்டில் கதறி அழுதார். மேலும் அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லையே என்று புலம்பினார். அப்போது விட்டலன் பிரசன்னமாகி அவரை தேற்றி கூறினார். அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓர் அந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். அங்கு பசுவை வெட்ட வந்த புலையன் ஒருவன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினான் அந்த அந்தணன். புலையனும் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன. கொலையுண்ட பசுதான் தனவந்தனின் மனைவி. பசுவைக் கொலை செய்த புலையன்தான் அவளுடைய கணவன். உன்னுடைய துன்பங்கள் அனைத்தும் முற்பிறப்பில் நீ செய்த தீவினையால் வந்தவை. உன்னுடைய அனைத்து தீய வினைகளும் இப்போது தீர்ந்தது. இப்பிறவியில் நீ வினைகளின் காரணமாக பெற்ற துன்பத்திலும் விடாமால் செய்த உன் பக்தியின் பலனால் இன்று எமது தரிசனமும் கிடைத்தது என்று அருளிச் சென்றார். பின் சாருகர் காலமெல்லாம் பண்டரியிலேயே தங்கி நாம செபம் செய்து இறுதியில் வைகுண்டம் எழுந்தருளினார்.
ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். மீண்டும் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்கள். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும் அந்த சிறுவன் நான் இப்போது வளர்ந்திருக்கிறேன் இந்த வருடம் நான் தனியாக பாட்டி வீட்டிற்கு செல்கிறேன் என்கிறான். சிறிது யோசனைக்குப் பிறகு அவனது தந்தை ஒப்புக்கொண்டார். ரயில் நிலைய நடைமேடையில் நின்று சிறுவனிடம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவனது தந்தை அறிவுரை கூறிவிட்டு மகனே வழியில் திடீரென்று மோசமாகவோ அல்லது பயமாகவோ உணர்ந்தால் இது உனக்கானது என்று கூறி சட்டைப்பையில் ஒரு காகிதத்தை வைத்தார். பயண சந்தோசத்தில் சிறுவன் சரி என்று காகிதத்தின் மீது கவனத்தை வைக்காமல் ரயிலில் கிளம்பினான். முதல் முறையாக, பெற்றோர் இல்லாமல், தனியாக ரயில் பயணம், அந்த சிறுவனுக்கு உற்சாகமாகவும் திரில்லாகவும் இருந்தது. ஓடும் ரயிலில் வேக வேகமாகப் பின்னோக்கி ஓடும் இயற்கையின் அழகை ஜன்னல் வழியாக ரசிக்கத் தொடங்கினான். சிறிது நேரத்தில் இரவு சூழ ஆம்பித்தது. அந்நியர்கள் வருவதும் போவதுமான இருக்க மெல்ல தான் தனியாக இருக்கிறோம் என்று சிறுவன் உணரத் தொடங்கினான். எதிரே அமர்ந்தவரின் முரட்டுத் தோற்றமும் சிறுவனுக்கு மேலும் பயத்தை கொடுத்தது. ரயிலின் வேகத்தைப் போல தடதடவென இதயம் கொஞ்சம் வேகமாகத் துடித்தது. ஜன்னலோர இருக்கையில் தலையைத் தாழ்த்தி மூலையில் பதுங்கிக் கொண்டான். அவன் கண்களில் கண்ணீர் எழுந்தது. அப்போது தான் அந்த சிறுவனுக்கு அவனது தந்தை சட்டைப் பையில் காகிதம் வைத்தது நினைவுக்கு வந்தது. கையால் நடுங்கியபடியே அந்தக் காகிதத்தை எடுத்து பிரித்து படித்தான். அதில் பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன் என்று எழுதி இருந்தது. கற்பனை செய்ய முடியாத நம்பிக்கை அவன் மனதில் துளிர்த்தது. இப்போது அவனது மனதில் பயம் காணாமல் போய் இருந்தது. பயத்தில் குனிந்த தன் தலையை உயர்த்தி அதே அந்நியர்களுக்கு மத்தியில் மிகவும் வசதியாக நிமிர்ந்து கம்பீரத்துடன் அமர்ந்தான்.
இது போலவே நம்முடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ள நம்மை இறைவன் இந்த உலகத்திற்கு அனுப்பினார். அப்போது நம்முடன் நம்பிக்கை ஒரு காகிதத்தில் நான் உன்னுடன் இருக்கிறேன் உன்னோடு பயணம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருக்கிறார். சொன்னது போலவே நமது இதயக் கமலத்தில் வீற்றிருந்து நமக்கு துணையாகவும் வருகின்றார்.
மனிதர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கும் போது தன்னுடன் இருக்கும் இறைவனை மறந்து விடுகிறார்கள். தன்னுடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போதும் இது இறைவன் கொடுத்தது என்பதையும் மறந்து விடுகிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கும் போதும் ஆசைகளை தீர்த்துக் கொள்ளும் போதும் என்ன செய்கிறோம் என்று தெரியாமலும் தெரிந்தும் பல தவறுகளை செய்து விடுகின்றார்கள். செய்த தவறுக்கு தண்டனையாக துன்பம் என்று வரும் போது மட்டுமே இறைவனை நினைக்கிறார்கள். அந்த நினைப்பிலும் நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஏன் இந்த துன்பம் கொடுத்தாய் இறைவா என்று நினைக்கிறார்கள். தவறு செய்யும் போது நம்முடன் இறைவன் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டால் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். தண்டனைகளும் இருக்காது. மகிழ்ச்சியாக இருக்கும் போதும் நம்முடன் இருக்கும் இறைவனை நினைத்துக் கொண்டால் துன்பம் என்ற ஒன்றே வராது.