வீணாதரசிவன்

தான் வாசித்த இந்தப் பண் எப்படியிருக்கிறது என்ற பார்வையுடன் வீணாதர சிவன். இறைவனின் கை தனது தலையில் வைத்து ஆசி பெற்ற மகிழ்ச்சிப் பூரிப்பில் துள்ளலுடன் அடியவர் நிற்கிறார். வீணாதரசிவன் கையிலுள்ள வீணையில் குடமோ தந்திகளோ இல்லை. இடம் தர்மராஜ ரதம் மாமல்லபுரம்.

இராம சரித மானஸம்

துளசி தாசர் இயற்றிய நூல் இராம சரித மானஸம் ஆகும். இராமசரிதமானசா என்பதற்கு இராமர் வாழ்க்கையின் குளம் என்று பொருள்படும். இந்நூல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்நூலில் துளசிதாசர் இராமரைப் பற்றிய சில கூடுதல் கதைகளையும் சேர்த்துள்ளார். துளசிதாசர் 1511-1623 காலத்தில் வாழ்ந்த ஒரு துறவியும் கவிஞரும் ஆவார். இவர் இராம பக்தியில் சிறந்து விளங்கினார். இந்நூலை அவாதி மொழியில் துளசிதாசர் எழுதினார். அவாதி மொழியைத் தவிர போஜ்புரி மற்றும் பிராஜ்பாஷா மொழிகளிலும் எழுதினார். வால்மீகி இராமாயணம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதால் பலருக்கும் அதனை முழுமையாக புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. துளசிதாசர் எழுதிய இராம சரித மானசா மூலம் பலரால் இராமாயணத்தை எளிதாக படித்து புரிந்து கொள்ள முடிந்தது. துளசிதாசர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் கழித்தார். வாரணாசியில் உள்ள கங்கையில் உள்ள துளசி படித்துறை இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் வாரணாசியில் அனுமனை தரிசித்த இடத்தில் சங்கட மோட்ச அனுமன் கோயிலை நிறுவினார்.

மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமான பவிஷ்ய புராணத்தில் சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுவது போல் ஒரு காட்சி உள்ளது. அதில் இராமனின் புகழைப் பாடுவதற்கு கலி யுகத்தில் அவதாரம் எடுப்பதற்காக அனுமனிடமிருந்து வால்மீகி ஒரு வரத்தைப் பெற்றார் என்று சிவன் தனது மனைவி பார்வதியிடம் கூறுகிறார். நாபதாசர் என்ற சான்றோர் ஒருவர் தனது பக்தமாலை என்ற நூலில் கலியுகத்தில் வால்மீகியே மீண்டும் துளசிதாசராக அவதாரம் எடுத்ததாக எழுதியிருக்கிறார். இதனை சான்றாக வைத்து வட இந்தியாவில் பலர் துளசிதாசரை வால்மீகியின் மறு அவதாரம் என்று நம்புகிறார்கள். துளசிதாசரின் இராம சரித மானஸம் என்ற இராமாயணத்தில் இராமர் காட்டுக்கு வனவாசம் செல்ல சரஸ்வதிதேவி காரணம் என்று எழுதியிருக்கிறார். அந்நூலில் உள்ளபடி

ஒரு சமயம் இந்திரலோகத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் வருகைக்காகக் காத்திருந்தனர். சற்று நேரத்தில் இந்திரன் அந்த அவைக்குள் பிரவேசித்தான். தேவர்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதைக் கண்டு அனைவருக்கும் என்னவாயிற்று? என்று இந்திரன் விசாரித்தான். அதற்கு தேவர்கள் அயோத்தி நகரம் முழுவதும் விழா கொண்டாட்டத்தில் திளைக்கிறது. அயோத்தி மக்களும் மிகுந்த மகிழ்ச்சியில் மிதக்கின்றனர். தசரதன் மகன் இராமனுக்கு பட்டாபிஷேத்துக்கான நாள் குறித்து விட்டார்கள். இராமன் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அயோத்தியின் மன்னனாகி விட்டால் அரக்கன் இராவணனையும் மற்ற அரக்கர்களையும் வதைப்பது எப்படி? இராமரின் அவதார நோக்கம்தான் என்னாவது? என்று வருத்தத்துடன் கேட்டனர் தேவர்கள். இதற்கு நாம் என்ன செய்யலாம்? என்று அதிர்ச்சியோடு கேட்டான் இந்திரன். நெடுநேரம் அனைவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர்களாய் தேவர்கள் அனைவரும் சேர்ந்து பிரம்ம தேவரை சந்தித்து தங்கள் நிலையை அவரிடம் எடுத்துக் கூறி அவரின் உதவியைக் கோரினர். பிரம்ம தேவர் அவர்கள் அனைவரையும் சரஸ்வதி தேவியை சந்தித்து வேண்டும்படியும் சரஸ்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆலோசனையாகக் கூறினார். அதன்படியே தேவர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியைச் சந்தித்து நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறி தங்களுக்கு உதவும்படி வேண்டி நின்றனர். அதைக் கேட்ட சரஸ்வதி தேவி மிகவும் வருத்தத்துடன் நீங்கள் சொல்லும்படி நான் நடந்தால் உலகமே என்னை தூற்றுமே இதை என்னால் செய்ய முடியாது என்று மறுத்துக் கூறினாள். ஆனாலும் உலக நலனுக்காக இதை அவசியம் நீங்கள் செய்யத்தான் வேண்டும். தங்களை விட்டால் எங்களுக்காக இதை வேறு யாரும் செய்ய முடியாது என தேவர்கள் சரஸ்வதி தேவியிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர். இராமன் வனவாசம் செல்வதற்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று சரஸ்வதி தேவி மீண்டும் மறுத்துக் கூற தேவர்களோடு பிரம்மாவும் சேர்ந்து சரஸ்வதி தேவியிடம் வற்புறுத்தி வேண்டினர்.

இராமர் வனவாசம் சென்றால் அரக்கன் இராவணன் மற்றும் பல அரக்கர்கள் இராட்சஸர்கள் அழிவார்கள். இராமரின் பராக்கிரமம் இந்த உலகத்திற்கு தெரியவரும். இராமாயணம் எனும் புனிதக் காவியம் இப்பூமிக்குக் கிடைக்கும். இவை அனைத்தும் உன்னுடைய ஒரு செயலில் இருக்கிறது என்று சரஸ்வதி தேவியிடம் பிரம்மா எடுத்துச் சொல்லி சரஸ்வதி தேவியை சம்மதிக்க வைத்தார். பிரம்மாவின் ஆலோசனையின்படி கலைமகள் சரஸ்வதி தேவி மந்தரையின் ரூபத்தில் கைகேயின் மனதில் பரதன் நாடாள வேண்டும். இராமன் வனவாசம் செல்ல வேண்டும் எனும் நச்சு ஆலோசனை ஊட்டினாள். துளசி தாசர் இயற்றி இராம சரித மானஸம் என்னும் இராமாயணத்தில் இராமர் காட்டுக்கு வனவாசம் சென்றதற்கு இப்படி ஒரு புதிய கோணத்தில் விளக்கம் அளிக்கிறது.

சதுர தாண்டவம் ஆடும் அஷ்ட புஜ சிவன்

சதுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் 108 தாண்டவங்களுள் ஒன்று மற்றும் பரதநாட்டியத்தில் 39வது கரணம் ஆகும். இங்கு சிவன் எட்டு கைகளோடு சதுர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். இடம் காமரசவல்லி உடனுறை கார்கோடேஸ்வரர் கோயில். அரியலூர் மாவட்டம்.

நான் யார்

அரசன் ஒருவன் தனது படை வீரர்களுடன் காட்டுக் சென்று வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது பசி வந்தது. சுற்றுமுற்றும் பார்த்த போது ஒரு குடிசை தென்பட்டது. அங்கே சென்று நான் பசியோடு இருக்கிறேன். எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்டன். அங்கிருந்த முனிவர் அரசனைப் பார்த்து யார் நீ என்று கேட்டார். நான் இந்நாட்டின் அரசன் என்று பதிலளித்தான். அதற்கு முனிவர் நீ யார் என்று தான் கேட்டேனே தவிர உனது பதவி பற்றி கேட்கவில்லை. வேறொரு நாட்டு அரசன் உன்னை வென்று இந்த நாட்டை கைப்பற்றிவிட்டால் நீ அரசன் இல்லை. இது உனக்கு தெரியுமா? இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்கிறேன். உண்மையில் நீ யார் என்று கேட்டார். அரசனின் மனதில் உண்மையில் நீ யார்? என்ற கேள்வி லேசான சலனத்தை உண்டு பண்ணியது. ஆனாலும் அரசனின் பசியின் காரணமாக சுவாமி பசியின் காரணமாக நான் களைப்பாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏதோ தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். இந்த வேளையில் முனிவரின் சீடன் ஒருவன் முனிவருக்கு பழ வகைளை கொண்டு வந்து முனிவரை வணங்கி பழக்கூடையை கொடுத்துச் சென்றான். அரசனை கண்டு கொள்ளவே இல்லை. நாட்டுக்கே அரசனாக இருக்கிறேன். இவன் தன்னை வணங்காமல் செல்கிறானே என்று எண்ணி அரசனின் முகம் இறுகியது. முனிவரும் அவன் கொண்டு வந்த பழத்தில் ஒன்றைக் கூட அரசனிடம் கொடுக்கவில்லை.

முனிவருக்கு தனக்கு பழங்கள் கொடுக்க மனமில்லை போலும் என்றெண்ணி அரசன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான். முனிவர் அரசனே பார்த்து எனது சீடனுக்கு உன்னைப் பற்றித் தெரியாது. அதனால் உன்னை வணங்காமல் சென்று விட்டான். உண்மையில் யார் நீ என்பதை தெரிந்து கொள்வது நல்லது என்று சொல்லி விட்டு பழங்களை சாப்பிடக் கொடுத்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு வீரன் அவசரமாக குதிரையில் வந்தான். அரசே நம் கோட்டையை பகை மன்னர்கள் சூழ்ந்து கொண்டு விட்டனர். தலைநகரில் போர் நடந்து கொண்டிருக்கிறது. வாருங்கள் என்றான் பதைபதைப்புடன். அரசனுக்கு இப்போது பசி காணாமல் போனது. குதிரையை நோக்கி ஓடினான். முனிவர் அவனைத் தடுத்து பழங்களைச் சாப்பிடும்படி கூறினார். சுவாமி நான் இப்போது அமைதி இழந்து தவிக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள் என்று கிளம்ப முயற்சித்தான். முனிவர் அரசனை தடுத்து நிறுத்தி முதலில் சாப்பிடு. களைப்பைப் போக்க சிறிது நேரம் ஓய்வெடு. கொஞ்சம் பொறுமையாக இரு என்று முனிவர் அறிவுரை சொன்னார். முனிவரின் கனிவான வார்த்தைகள் கட்டளை போல் அவனை தடுத்து நிறுத்தியது. அரசனும் பழங்களை சாப்பிட்டு பதட்டம் நீங்கி அமைதியானான். களைப்பின் காரணமாக மரநிழலில் உறங்கி விட்டான். திடீரென்று கண் விழித்ததும் வேகமாக எழுந்து நின்றான். சுவாமி எப்படியோ என்னையும் அறியாமல் நான் தூங்கிவிட்டேன் இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். எனது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றான்.

முனிவர் அரசனிடம் நான் இந்நாட்டின் அரசன். நான் பசியோடு இருக்கிறேன். நான் அமைதியை இழந்து தவிக்கிறேன். நான் அறியாமல் தூங்கிவிட்டேன். இப்போது நான் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். இப்படி எத்தனையோ விதத்தில் நான் நான் என்று பதில் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய். இத்தனை நான் சொன்னாயே இதில் எந்த நான் உண்மை. உண்மையில் யார் நீ என்பதை அறிந்தாயா? என்று கேட்டார். அமைதியாக நின்ற அரசனிடம் உடலோ உள்ளமோ உணர்வோ நான் அல்ல. நான் என்பது உண்மையில் ஆன்மா மட்டும் தான். உனது வாழ்வின் அன்றாட விஷயங்களான மக்கள் நாடு போர் வெற்றி தோல்வி என்பதெல்லாம் தற்காலிகமானதே. உயிர் உள்ளவரை மட்டுமே அதற்கு பயன். நீ யார் என்று அறிந்து கொண்டு ஆன்மிக வாழ்வில் வெற்றியடைவதை வாழ்வின் குறிக்கோளாகக் கொள் என்று அறிவுரை கூறினார். முனிவர் சொன்னபடி வாழ்வில் வந்து போகும் பொருட்கள் எதுவும் நிரந்தரமல்ல. நிரந்தரமானது உள்ளே இருக்கக் கூடிய இறைவன் தான் என்று உள்ளத் தெளிவுடன் அரசன் கிளம்பினான். முனிவரின் வார்த்தைகள் அரசனின் உள்ளத்தின் உள்ளே தான் யார் என்று தேட ஆரம்பித்தது.

திரிநேத்திர தசபு வீரஆஞ்சநேயர்

மூன்று கண்களையும் பத்துக் கரங்களையும் வைத்திருக்கிறார். முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி அருள்பாலிக்கிறார். இடம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் உள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில்.

பெரியவர்

திருமந்திரம் பாடல் எண்: 1031

அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே

எல்லை இல்லாத இறைவனை அளப்பவர்கள் யாருமில்லை என்று திருமூலர் அருளியிருக்கிறார். அளக்க முடியாத இறைவனை சிற்பி தன்னுடைய சிற்பத்தில் காண்பித்து கற்பனையில் இறைவனின் அளவை மனிதர்களின் அறிவுக்கேற்ப புரிந்து கொள்ளும்படி செதுக்கியிருக்கிறார்.

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் இறைவன் சன்னதிக்கு வெளியே இருக்கும் துவாரபாலகரின் காலடியில் ஒரு மரம். மரத்தில் ஒரு பாம்பு இருக்கும். அந்த பாம்பின் வாயில் யானை இருக்கும். யானை மிகவும் பெரியது. பாம்பின் வாயில் யானை என்றால் அந்த யானையையே விழுங்கும் பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும். அந்த பாம்பு ஒரு மரத்தில் இருக்கும். அப்படி என்றால் அந்த மரம் எவ்வளவு பெரியதாக இருக்கும். அந்த மரம் துவாரபாலகர் காலடியில் இருக்கிறது. அப்படி என்றால் துவாரபாலகரின் பாதம் எவ்வளவு பெரியது. பாதமே இவ்வளவு பெரியதென்றால் துவாரபாலகரது உருவம் எவ்வளவு பெரியது. அந்த துவாரபாலகர் தனது கையை கோயிலின் உள்ளே காட்டுகிறார். கோயிலின் உள்ளே இறைவன் இருக்கின்றார். அப்படி என்றால் இறைவன் எத்தனை பெரியவராக இருப்பார்.

பன்றிக் குட்டிகளுக்கு பாலூட்டிய இறைவன்

சுகலன் என்னும் வேளாளனின் புதல்வர்கள் பன்னிருவர். தேவகுரு பிரஹஸ்பதியின் கோபத்திற்கு ஆளாகி பன்றிக் குட்டிகளாக பிறந்தனர். காட்டுப்பகுதியில் பாண்டிய மன்னன் வேட்டையாடும் போது இப்பன்றிக்குட்டிகளின் பெற்றோர் இறந்தனர். தாயின்றி பசியால் வாடிய பன்றிக்குட்டிகளின் பசியைப் போக்க சிவபெருமான் தாய்ப்பன்றியாக வடிவெடுத்து பாலூட்டி அவர்களின் பசியைப் போக்கினார். பின்பு அவர்களுக்கு மனித உருவம் அளித்து பாண்டியன் அரசவையில் அமைச்சர்களாக ஆக்கி முக்தி அளித்தார். பெற்ற தாயை இழந்த பன்றிக்குட்டிகளுக்கு தாய்ப்பன்றி வடிவெடுத்து பாலூட்டிய சிவபெருமானின் பெருங்கருணை குறித்து பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணமாகப் பாடியருளியுள்ளார். திருவிளையாடல் புராணத்தில் 45 ஆவது படலமாக உள்ளது. இச்சிற்பம் உள்ள இடம் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவில் மதுரை.

ஞானமடைய எளிய வழி

புத்தர் தனது சீடர் ஆனந்தாவுடன் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆனந்தா புத்தரிடம் ஞானமடைவதற்கு எளிமையான வழி என்ன என்று கேட்டார். அதற்கு புத்தர் சுற்றி இருப்பவற்றை சும்மா கவனி என்றார். சும்மா கவனித்தால் எப்படி ஞானம் கிடைக்கும் என்றார். புத்தர் அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்தார். தாகம் அதிகமாக இருக்கிறது குடிக்க எங்காவது சென்று நீர் கொண்டு வா என்று கூறினார். ஆனந்தா தண்ணீர் தேடி அலைந்தார். எங்கும் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் யானைகள் உடலில் சேறோடு சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அருகில் ஏதோ நீர்நிலை இருக்கிறது என்றறிந்து தேடி ஒரு குட்டையைக் கண்டுபிடிக்கிறார். யானைகள் புரண்டு எழுந்து போனதால் நீர் முழுக்க சேறாகி குடிக்க தகுதியில்லாததாக ஆகிவிட்டது. வருத்தத்தோடு திரும்பி புத்தரிடம் விஷயத்தைச் சொல்கிறார். எனக்கு அதெல்லாம் தெரியாது. காரணமெல்லாம் சொல்லாதே. எனக்கு குடிக்க நீர் வேண்டும் என்று கேட்டார் புத்தர். ஆனந்தா வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த குட்டைக்குச் சென்றார். நீர் இப்போது கொஞ்சம் தெளிவானதைப் போலத் தெரிந்தது. இன்னும் கொஞ்சம் தெளியட்டும் என்று கரையில் காத்திருந்தார். குட்டைத் தண்ணீர் சிறிது சிறிதாகத் தெளிந்து கொண்டே இருந்தது. ஆனந்தா அந்த பண்பு மாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் நீர் மிகவும் தெளிந்து தூய்மையானதாக மாறியது. இதைக் கண்ட ஆனந்தரின் கண்களில் அருவியென கண்ணீர் கொட்டியது. குடுவையில் நீர் பிடித்துக்கொண்டு புத்தரிடம் திரும்பியவர் அவரது கையில் தண்ணீரைக் கொடுத்துவிட்டு அப்படியே சாஷ்டாங்கமாக காலில் விழுந்தார். மனசுக்குள் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்கும்போது அது குழம்பிய குட்டையாகத்தான் இருக்கும். அமைதியாக அதை கவனித்துக்கொண்டே இருந்தால் அதுவாகவே தெளியும். என் மனதைத் தெளியவைக்கும் இந்த சூத்திரத்தை நீங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்றார். புத்தர் புன்னகைத்தார்.

பிரச்சனைகள் கவலையாகவோ கோபமாகவோ ஆத்திரமாகவோ அகங்காரமாகவோ எந்தவொரு ரூபத்தில் வந்து மனதை வாட்டி எடுத்தாலும் குழம்பிய குட்டை தெளிவதற்காகக் காத்திருப்பதைப் போல மனதில் உள்ள பிரச்சனை துன்பம் சோகம் கவலை என எதுவாக இருந்தாலும் அது தெளிவடையயும் வரை அமைதியாக மனதை கவனித்துக் கொண்டிருந்தால் போதும். மனதில் வந்த பிரச்சனை துன்பம் சோகம் கவலை அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி நிலை உண்டாகும்.

துறவு

மிகப் பெரிய துறவியொருவர் தம்முடைய சீடரிடம் துறவு பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதை அறிந்து கொண்டார். அதனை சீடர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாமன்னர் ஜனகரிடம் அனுப்பி வைத்தார். சீடருக்கோ வியப்பு ஏற்பட்டது. குருவே தாங்களோ மிகப் பெரிய துறவி சற்குரு. அவரோ நாடாளும் மன்னர் குடும்பஸ்தர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? என்று கேட்டார். அந்தத் துறவி தமது சீடரிடம் நாம் சந்நியாசி அவர் குடும்பஸ்தர் என்பதையெல்லாம் தாண்டி அவரிடம் நீ கற்றுக் கொள்வதற்கு உனக்கு ஒன்று இருக்கிறது. பணிவுடன் தலைவணங்கி அவரிடம் அதைக் கற்றுக் கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். விருப்பம் இல்லாவிட்டாலும் குருவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு அந்த சீடர் மிதிலைக்கு சென்றார். அரசவைக்குள் மன்னர் ஜனகர் இருந்தார். அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். ஆடல் பாடல் என்று களைகட்டியது. அவையில் இருந்தோர் அனைவரும் நடனத்தில் மயங்கி அவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். மன்னர் ஜனகர் இந்தக் கூட்டத்தினரிடையே அமர்ந்திருந்தார். அந்தக் காட்சியைப் பார்க்கவே சீடருக்கு பிடிக்காமல் இருந்தது. ஜனகர் சிரித்துக் கொண்டே அந்த சீடரிடம் இங்கு காண்பதைக் கொண்டு தவறான முடிவுக்கு வந்து விடாதே. ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்வதற்காகத் தான் உனது குரு உன்னை இங்கே அனுப்பி வைத்துள்ளார். அதை மட்டும் கற்றுக் கொள்ள ஒரு நாள் இந்த அரண்மனையில் தங்கியிருந்து விட்டு பின் நீ புறப்பட்டு செல்லலாம் என்றார்.

அரண்மனையில் உள்ள ஒரு அறையில் சீடர் தங்கினார். அவர் தங்கியிருந்த அறை மிகவும் அழகானதாகவும் ஆடம்பரமாகவும் இருந்தது. விருந்து முடிந்ததும் தூங்குவதற்கு படுக்கையில் சாய்ந்தார். மேலே பார்த்த போது திடுக்கிட்டார். அந்த அறை முழுவதும் மேல் பகுதியில் சீடரின் தலைக்கு மேலே ஒரு கூர்மையான வாள்கள் வெறுமனே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். எந்த நேரத்திலும் நூல் அறுந்து ஏதோஒரு வாள் தனது கழுத்தில் விழும் ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்டு அன்று இரவு முழுவதும் விழித்துக் கொண்டு அந்தக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த வாளைக் கவனித்துக் கொண்டு இருந்தார். பொழுது விடிந்ததும் ஐனகர் வந்தார். அவரிடம் இந்த அறை வசதியாக இருந்ததா? படுக்கை சுகமாக இருந்ததா? இரவு நன்றாக உறங்கினீர்களா? என விசாரித்தார். அதற்கு அந்த சீடர் எல்லாமே வசதியாகத் தான் இருந்தது. ஆனால் தலைக்கு மேலே மெல்லிய நூலில் உறையில்லாத வாள் தொங்கிக் கொண்டிருக்க எப்படி நான் அமைதியாக உறங்க முடியும்? என்று பதில் அளித்தார். அரசர் அவரிடம் நீங்கள் இங்கே வரும் போது மிகவும் களைப்பாக இருந்தீர்கள். எனவே படுத்ததும் அசதியில் தூங்கிக் போயிருக்கலாம். ஆனால் ஏன் தூங்க முடிய வில்லை. தூங்கினால் வாள் அறுந்து நமது மீது விழுந்தால் என்னாகும் என்ற சிந்தனையில் பயத்தில் தூக்கம் இல்லாமல் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் உங்கள் சிந்தனை ஓடியது. இதனால் நீங்கள் தூங்காமல் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் இருந்தீர்கள். இந்த எச்சரிக்கைக்கு நடுவில் இந்த உலகம் மற்றும் இதில் இருக்கும் சுகதுக்கங்கள் ஒன்றையும் நீங்கள் சிந்தித்திருக்க மாட்டீர்கள். இந்த சிந்தனை இல்லாத மனம் தான் துறவு. இதுதான் எனது போதனை.

நான் எனது அரசவையில் அமர்ந்து கொண்டிருந்தாலும் அங்கே அழகான இளம்பெண்கள் நடனமாடிக் கொண்டிருந்தாலும் இந்த சுகபோகங்களுக்கிடையே நான் எனது தலைக்கு மேலே மெல்லிய நூலில் கட்டித் தொங்கிக் கொண்டிருக்கும் உறையில்லாத மரணம் என்ற வாளைப் பற்றிய கவனத்தில்தான் எப்போதும் இருக்கிறேன். வாழ்க்கை என்பது ஒரு நீர்க்குமிழி போன்றது. ஒரு நொடிப்பொழுதில் எப்போது வேண்டுமானாலும் உடையலாம். அதுபோல் மரணம் எந்த நேரத்திலும் நிகழலாம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள். எந்த நேரத்திலும் வரக்கூடிய அந்த மரணம் குறித்து நான் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். எனவே நான் இந்த அரண்மனையில் வாழ்ந்தாலும் கூட நானும் ஒரு துறவி தான் என்று சொல்லி சீடரை அனுப்பி வைத்தார்.

சிரசங்கி காளிகாம்பாள்

அன்னை சிரசங்கி காளிகாதேவி விஸ்வகர்மா சமூகத்தின் முக்கிய தெய்வமாகும். விஸ்வகர்மா சமூகத்தினர் இவரை காளம்மா என்று அன்புடன் அழைக்கின்றனர். கோவாவின் மபூசாவில் உள்ள ஸ்ரீ விஸ்வகர்மா கோவிலில் இந்த 3 அடி உயர காளி சிற்பம் உள்ளது. 10 – 11 ஆம் நூற்றாண்டு கல்யாண சாளுக்கியர்கள் காலத்தை சேர்ந்த சிறந்த சிற்பங்களில் ஒன்றான சிரசங்கி காளிகாம்பாவை பிரதியெடுத்து இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.