சரணாகதி நம்பிக்கை

ஒரு முனிவர் ஒருவர் வெகுநாட்களாக இமயமலை அடிவாரத்தில் சாதுக்களுடன் தவமிருந்து பல சக்திகளைப் பெற்றார். தான் பெற்ற சக்தியை இறைவனின் அருளை மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்றார். அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்து மக்களுக்கு இறைவனின் மீது நம்பிக்கையும் சரணாகதியும் வர வைக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தை தேர்வு செய்து கிராம மக்களிடம் தான் இங்கு ஆசிரமம் அமைத்து தங்கப் போவதாகவும் இங்கு சிறிய ஆலயம் ஒன்று கட்டி இங்குள்ள பிள்ளைகளுக்கு ஆன்மீகத்தை கற்பிக்கப் போவதாகவும் கூறினார். அவருக்கு அந்த கிராம மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து அவர்களும் அவருக்கு உதவியாக அவர் தங்குவதற்கு தென்னை ஓலைகள் பனை ஓலைகள் போன்றவற்றை கொடுத்து இடத்தையும் சீர் செய்து கொடுத்தனர். அங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். கிராம மக்களும் பூஜைக்கு தேவையான பால் பழம் இளநீர் போன்றவற்றை கொண்டு வந்து கொடுத்தனர். பூஜைகள் செய்து விட்டு மக்களுக்கு புராண கதைகளை கூறி தர்மத்தை போதித்தார்.

ஒரு நாள் அந்த வழியாக ஒரு ஆடு ஒன்று மேய்ந்து வந்தது. அது பாறை தடுக்கி கீழே விழுந்து அதன் கால் முறிந்து ரத்தம் கொட்டியது. உடனே முனிவர் அந்த ஆட்டுக் குட்டியை பிடித்து தன் ஆசிரமத்திற்கு பின்னால் இருந்த ஒரு பச்சிலையை கொண்டு வந்து அதன் காலில் துணியால் கட்டி இறைவா உனது செயல் இந்த ஆடு குணம் ஆக வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். உடனே அந்த ஆடு எழுந்து ஓட ஆரம்பித்தது. இதை பார்த்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் கிராமத்தில் சென்று முனிவர் செய்த அதிசயத்தை கூறினான். உடனே அந்த கிராமத்து மக்கள் முனிவரை வந்து சந்தித்து அங்கு நோய் வாய்ப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை செய்யும்படி கூறினார்கள். அதற்கு முனிவர் நான் வைத்தியன் அல்ல ஏதோ ஒரு பச்சிலையை எடுத்து அந்த ஆட்டு குட்டிக்கு கட்டினேன். இறைவன் குணப்படுத்தினார். அது எழுந்து ஓடியது. எனது செயல் ஒன்றும் இல்லை என்றார். ஆனால் கிராம மக்கள் இல்லை முனிவரே நீங்கள் உங்கள் கையால் எதை கொடுத்தாலும் எங்களுக்கு சுகமாகும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சொல்லி நோயாளிகளை அழைத்து வந்தார்கள். முனிவரும் செய்வதறியாது இறைவா இதுவும் உன் செயல் என்று கூறி நினைத்து காட்டிலிருந்த தனக்கு தெரிந்த மூலிகை செடிகளை பச்சிலைகளை பறித்து தனக்கு தெரிந்தவரை சிலவற்றை காய வைத்து பவுடராக ஆக்கியும் சில தழைகளை அரைத்து லேகியம் போல உருண்டைபிடித்தும் சில பச்சிலைகளை தைலம் போல தயாரித்து வைத்தார். கிராம மக்கள் தங்களுக்கு உண்டான நோய்களை சொல்லி மருந்து கேட்டபோது அவர்கள் வியாதிக்கு ஏற்றபடி மருந்தை கொடுத்து இறைவா குணப்படுத்து என்று பிரார்த்தனை செய்து கொடுத்தார். நம்பிக்கையுடன் வாங்கி சென்ற கிராம மக்கள் விரைவில் குணமடைந்தனர். தினமும் கூட்டம் வெளி கிராமத்தில் இருந்தும் வர ஆரம்பித்தது. அந்த ஊரில் இறைவன் மீது நம்பிக்கை இல்லாத ஒரு வாலிபன் இந்த சாமியார் செயலைப் பார்த்து இந்த ஆளை சோதிக்க வேண்டும் என்று வந்தான்.

முனிவரை பார்த்து நீங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மூலிகைகளைத்தான் கொடுக்கிறீர்கள் எப்படி குணமாகிறது என்று கேட்டான். அது இறைவன் செயலப்பா என்று முனிவர் கூறினார். எனக்கு இப்போது தீராத வயிற்று வலி அதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்று சிரிப்புடன் கேட்டான். அவன் எண்ணத்தை புரிந்து கொண்ட முனிவர் இவனுக்கு வயிற்று வலி அல்ல. நம்மை சோதிக்க வந்திருக்கிறான் என்பதை அறிந்து சரியப்பா அப்படியே செய்கிறேன் என்று சும்மா அவன் கையைப் பிடித்து பார்த்து விட்டு அந்த லேகியத்தில் ஒரு ஐந்து உருண்டை எடுத்துக் கொடுத்து தம்பி உனக்கு தீராத வயிற்று வலி. வயிறெல்லாம் புண்ணாகி உள்ளது. ஆகவே இந்த லேகியத்தை காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் அணிந்து ஒரு லேகியத்தை வெரும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டால் குணமாகும். இதற்கு ஒரு பத்தியம் இருக்கிறது நீ இந்த லேகியத்தை சாப்பிடுவதற்கு முன்பு குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது. நீ குரங்கை நினைத்து இந்த லேகியத்தை சாப்பிட்டால் அது எதிர்மறையாகி உன் உயிருக்கு ஆபத்தாகி விடும் அதுதான் பத்தியம். தொடர்ந்து ஒரு வாரம் செய்து வா. குரங்கை நினைத்து விட்டால் இந்த லேகியத்தை சாப்பிடாதே. மறுநாள் சாப்பிடு என்று அனுப்பி வைத்தார். மருந்து சாப்பிடாமலேயே தனக்கு குணம் ஆகிவிட்டது என்று மக்களிடம் சொல்லி இந்த முனிவரை திட்ட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு உள்ளே நுழைந்த உடனேயே அவனுக்கு உண்மையிலேயே வயிற்று வலி வருவது போன்ற உணர்வு வந்தது. என்ன இது உண்மையிலேயே வயிறு வலிக்கிறதோ என்று பயந்தான். பின் முனிவர் கொடுத்த மருந்துதான் இருக்கிறதே வயிற்று வலி வந்தால் காலையில் முனிவர் சொன்னது போல குளித்துவிட்டு நெற்றியில் திருநீர் இட்டுக் கொண்டு அந்த லேகியத்தை எடுத்து சாப்பிடலாம் என்று நினைத்துவிட்டு படுத்து விட்டான்.

காலையில் எழுந்ததும் வயிற்று வலி அதிகமாக இருந்தது. முனிவர் சொன்னது போலவே குளித்துவிட்டு திருநீறு அணிந்து கொண்டு லேகியத்தை எடுத்ததுமே குரங்கு ஞாபகம் அவனுக்கு வந்தது. முனிவர் எதை நினைக்கக் கூடாது என்றாரோ அந்த குரங்கு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து கொண்டே இருந்தது. குரங்கை நினைத்து விட்டோமே. இனி இந்த லேகியத்தை சாப்பிட்டால் நம் உயிருக்கு ஆபத்து வந்து விடும் என்று அன்று மருந்து சாப்பிடாமல் விட்டு விட்டான். அன்று முழுதும் வலியால் துடித்தான். மறுநாள் விடிந்ததும் குளித்துவிட்டு அதேபோல் லேகியத்தை எடுத்து சாப்பிட போனான் அப்போதும் அந்த குரங்கு தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது அன்றும் சாப்பிடவில்லை. இப்படியாக ஐந்து நாட்கள் வயிற்று வலியிலேயே அந்த லேகியத்தை சாப்பிடாமல் துடித்தான். இனி தாமதிக்கக்கூடாது என்று அந்த முனிவரிடம் ஓடிவந்து முனிவரே என்னை மன்னியுங்கள். நான் உங்களை சோதிக்கவே சும்மா வயிற்று வலி என்று சொன்னேன். ஆனால் உண்மையிலேயே வயிற்று வலி வந்து விட்டது. நீங்கள் கொடுத்த லேகியத்தை சொன்னபடி சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பத்தியம் கடைபிடிக்க முடியவில்லை அந்த லேகியத்தை எடுக்கும் போதெல்லாம் என் கண் முன்னே குரங்கு தான் வந்தது அதனால் மருந்தை சாப்பிட முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அதன்படியே செய்கிறேன். என் வயிற்று வலியை குணப்படுத்துங்கள் என்று மனதார வேண்டினான்.

முனிவர் அவனை தட்டிக் கொடுத்து தம்பி உனக்கு ஒன்றுமில்லை நீ கவலைப்படாதே நீ என்னை சோதிக்க வந்தாய் அதனால் நான் உன்னை சோதித்தேன். பத்தியம் எல்லாம் ஒன்றும் இல்லை நீ குரங்கை நினைத்து சாப்பிட்டாலும் அது ஒன்றும் செய்யாது லேகியம் வேலை செய்யும் வயிற்று வலி குணமாகும். இந்த லேகியத்தை இங்கேயே வாயில் போட்டு தண்ணீர் குடி மீதியை வீட்டிலிருந்து மீதி நான்கு நாட்களுக்கும் சாப்பிட சரியாகிவிடும். எதிலுமே நம்பிக்கை வைத்து எந்த செயல் செய்தாலும் அது வெற்றி அடையும். கிராம மக்கள் என்னிடம் நம்பிக்கையோடு வந்தார்கள் நான் கொடுத்த மருந்தை சாப்பிட்டார்கள் குணமானார்கள். நம்பிக்கை இல்லாமல் அரைகுறையாக எந்த காரியம் செய்தாலும் அது திருப்தி அடையாது வெற்றியடையாது என்று ஆசி கூறி அனுப்பினார்.

ஐயப்பன் தத்துவம் பகுதி – 1

“ஐயப்பன் தத்துவம்” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 23-11-2025 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

யோக நரசிம்மர்

இரண்யன் வதை முடித்து யோக நிலையை மேற்க்கொள்ளும் நரசிம்மரை இரசித்து சிவனும் பிரம்மனும் ஆசி கொடுக்கின்றார்கள். யோக நரசிம்மரின் தலைக்கு மேல் சிவன் மற்றும் பிரம்மாவின் உருவம். இடம் திருக்காவியூர் மகாதேவர் கோயில், பத்தனம்திட்டா கேரளா

அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி

புதுக்கோட்டை திருவேங்கைவாசல் ஊரில் கீரனூர் சாலையில் அமைந்துள்ள வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சணாமூர்த்தி என்றும் அர்த்தநாரீஸ்வர தட்சணாமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அபய வரத ஹஸ்தங்களுடன் ஒரு கரத்தில் ருத்ராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார். இக்கோயில் மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி அருள்பாலிக்கிறார். அம்பாள் பிரகதாம்பாள். இந்தல இறைவனை வழிபட்ட காமதேனுவின் சாபத்தை புலி ரூபத்தில் இறைவன் வந்து நீக்கியபடியால் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ மண்ணுடையார்

இந்திய கோயில்களில் தங்கமும் விலை மதிக்க முடியாத பொருளும் நிறைய உள்ளது என்று வெளி நாட்டில் இருந்து கொள்ளையடிக்க வந்த கும்பல் ஊர் ஊராகச் சென்று கோயில்களை இடித்து இறைவனது திருமேனிகளை உடைத்தும் பஞ்ச லோக சிலைகளையும் கோயில் சொத்துக்களையும் திருடிக் கொண்டு வந்தது. இப்படி வந்தவர்கள் தமிழகத்தின் உப்பிலியப்பன் கோயிலுக்கும் வந்தார்கள். மண்பாண்டம் செய்யும் குயவர் ஒருவர் இறைவனது திருமேனியைக் காக்க ஸ்ரீ தாயார் ஸ்ரீ பெருமாள் திருமேனிகளை சூளையில் மறைத்து வைத்து சூளையைக் கொளுத்தி விட்டார். கொள்ளையடிக்க வந்த கும்பல் இது என்ன என்று கேட்ட போது இது மண் பாண்டங்கள் செய்யும் சூளை என்று சொன்னார். வந்தவர்கள் சென்ற பின் சூளையின் நெருப்பை அணைத்து திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வைத்தார். இந்தக் குயவருடைய கைங்கர்யத்திற்காக அவருக்கு ஸ்ரீ மண்ணுடையார் என்ற திரு நாமத்தை கொடுத்து பெருமாளை எப்போதும் அவர் வணங்கும்படியான சிலை செய்து பெருமாள் சன்னதிக்கு நேரே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோயில் பிரசாதம்

இராமானுஜரின் சிறு வயதில் யாதவ பிரகாசர் என்பவர் குருவாக இருந்தார். இவர் தன்னுடைய பல்லலாக்கில் ஒரு நாட்டின் வழியாக சென்று கொண்டிருந்தார். பல்லக்கை இராமானுஜர் உட்பட அவரது சீடர்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். யாதவ பிரகாசர் தனது நாட்டின் எல்லைக்குள் வந்திருப்பதை அறிந்த அந்த நாட்டின் அரசர் அவரை வரவேற்று வணங்கி தன்னுடைய மகளை ஒரு பிரம்மராட்சசன் என்ற பேய் பிடித்திருப்பதாகவும் அந்த பேயை ஓட்டி தனது மகளை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். யாதவ பிரகாசர் அரசரின் வேண்டுகோளை ஏற்று அரசனின் மாளிகைக்கு சென்றார். அங்கு அவரது மகளைப் பார்த்த யாதவ பிரகாசர் அவளுடைய உடம்பிற்குள் இருந்த பிரம்ம ராட்சனைப் பார்த்து இந்த உடம்பை விட்டு ஓடிப்போ என்றார்.

யாதவ பிரகாசரைப் பார்த்து சிரித்த பிரம்ம ராட்சசன் நீ சொன்னால் நான் போக வேண்டுமா? நான் யார் தெரியுமா? நீ யார் தெரியுமா? என்று பேச ஆரம்பத்தது. நீ சென்ற ஜென்மத்தில் ஒரு உடும்பாக பிறந்து ஒரு கோயிலில் கிடந்தாய். கோயிலில் வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். அந்த பிரசாதத்தை அவர்கள் சாப்பிடுவார்கள். அதில் சிதறும் பிரசாதத்தை சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவன் நீ. அப்படி வாழ்நாள் முழுவதும் கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாய். அதில் புண்ணியத்தை நிரம்ப பெற்றாய். அதில் கிடைத்த ஞானத்தை வைத்து இந்த ஜென்மாவில் மனித பிறப்பெடுத்து வேதம் கற்றுக் கொண்டு பிராமணனாக குருவாக நிற்கிறாய். நான் யார் தெரியுமா? அந்தணனாக பிறப்பெடுத்து அந்தணனாக வாழ்ந்து கோயிலில் வேதம் சொல்லி யாகம் கொண்டிருந்தேன். இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல் சொல்லில் மந்திரத்தை தவறாக சொல்லியும் பெயரளவிற்கு செயலில் யாகத்தையும் செய்து கொண்டு மனம் போன போக்கில் தவறுகள் செய்து கொண்டு வாழ்ந்தபடியால் பிரம்மராட்சசனாக பிறப்பெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் நீ ஒரு உடும்பு. ஆகவே நீ சொன்னால் நான் போக மாட்டேன். நீ வந்த வழியே திரும்பிப் போ என்றான் பிரம்மராட்சசன். யாதவ பிரகாசர் என்ன செய்தால் நீ இந்த உடம்பை விட்டு செல்வாய் என்று கேட்டார். உன்னுடைய பல்லக்கை சுமந்து கொண்டு வரும் இராமானுஜர் தனது காலை எனது தலையில் வைத்து நீ போ என்றால் நான் சாப விமோசனம் பெற்று இந்த உடம்பை விட்டு சென்று விடுவேன் என்றது. யாதவபிரகாசரும் இராமானுஜரை அழைத்து பிரம்மராட்சனின் தலைமீது காலை வைக்க சொன்னார். உடனடியாக பிரம்மராட்சனும் சாப விமோசனம் பெற்று அரசனின் மகளின் உடம்பை விட்டு சென்று விட்டான்.

கோயில் பிரசாதம் கொடுக்கப்பட்டு அதில் சிந்திய உணவை சாப்பிட்ட ஒரு உடும்பே புண்ணியத்தைப் பெற்று அதன் பலனாக ஞானத்தை பெற்று குருவாக உயர்ந்த நிலைக்கு சென்றிருக்கிறார். உடும்பு பிறப்பை விட மேன்மையாக பிறப்பு மனிதப் பிறப்பு. இவர்களுக்கு கோயிலுக்கு செல்வதற்கும் இறைவனுக்கு பிரசாதம் படைப்பதற்கும் அதனை சாப்பிடுவதற்கும் உண்டான அத்தனை வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையில் தர்மப்படி வாழ்ந்து தினமும் சிறிது நேரம் ஒதுக்கி கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு கோயிலின் பிரசாதம் சாப்பிட்டு வாழ்ந்தாலே விரைவாக இந்த பிறவிக் கடலை கடந்து இறைவனை அடைந்து விடலாம்.

காஞ்சி புராணம் முன்னுரை

காஞ்சி புராணம் முன்னுரை” எனும் தலைப்பில் “ஆன்மிகத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 13-04-2024 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.