36. இரசவாதம் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இரசவாதம் செய்த படலம் முப்பத்தி ஆறாவது படலமாகும்.

மதுரைக்கு அருகில் திருப்பூவனம் என்னும் ஊர் ஒன்று இருந்தது. (தற்போது அது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது). அவ்வூரில் இருந்த பூவனநாதர் என்னும் திருக்கோவில் இருந்தது. இக்கோவிலில் கணிகையர் எனப்படும் ஆடல் குலப் பெண்கள் ஆடல் பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்பினர். அப்பெண்களில் ஒருத்தி பொன்னனையாள். அவள் ஆடல் மற்றும் பாடல்களில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். அவள் தினமும் பூவனநாதர் கோவிலுக்குச் சென்று மற்ற ஆடல் மகளிருடன் இணைந்து ஆடல் மற்றும் பாடல்கள் பாடி இறைவனின் புகழைப் பரப்புவாள். பின்னர் தன் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து எஞ்சிய உணவினை உண்பாள். இதனையே அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு தன் நாட்டியத்திற்கு அதிபதியான இறைவனாரை பொன்னால் வடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பொன்னால் இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டுமானால் அதற்கு நிறையப் பணம் வேண்டும். ஆடல் பாடல் மூலம் சம்பாதித்த பணம் முழுவதும் அடியார்களுக்கு தொண்டு செய்வதிலேயே கழிந்தது. இறைவனின் திருமேனியை செய்ய பொருள் போதாமையால் அவள் ஆவல் நிறைவேறவில்லை. இரவும் பகலும் இதே ஏக்கம் கொண்டு அவள் மெலிந்தாள். பொன்னாலான இறைவனின் திருமேனியை செய்வதற்கு அருள்புரியுமாறு எப்போதும் இறைவனாரிடம் வேண்டிக் கொண்டிருந்தாள் பொன்னனையாள். மதுரை சொக்கநாதர் பொன்னனையாளின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார்.

சொக்கநாதர் சிவனடியாரின் வடிவம் ஏற்று சித்தராக பொன்னனையாள் இல்லத்திற்கு எழுந்தருளினார். பொன்னையாளின் இல்லத்தில் சிவனடியார்கள் எல்லோருக்கும் திருவமுதினைப் படைத்தாள். சித்தரான சிவனடியார் அமுதுண்ண இல்லத்திற்கு உட்செல்லாமல் புறக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது பொன்னனையாளின் பணிப்பெண் சித்தரை திருவமுது உண்ண வருமாறு அழைத்தாள். சித்தரோ இவ்வில்லத்திற்கு உரிமையான பொன்னனையாளை அழைத்து வருமாறு கூறினார். சித்தர் கூறியதை பணிப்பெண் பொன்னனையாளிடம் தெரிவித்தாள். அதனை ஏற்று பொன்னனையாளும் சித்தர் இருப்பிடத்திற்கு வந்தாள். சித்தரிடம் ஐயா தாங்கள் விரும்பிய வண்ணம் தங்களுக்கு பணிவிடை செய்கிறேன். தாங்கள் தயவுகூர்ந்து திருவமுது உண்ண வாருங்கள் என்று கோரிக்கை வைத்தாள். சித்தரும் பொன்னனையாளிடம் பெண்ணே உன்னுடைய முகம் வாடியும் உடல் மெலிந்தும் இருப்பதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். பொன்னனையாளும் பொன்னாலான இறைவனின் திருமேனியைச் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து அதனாலேயே தான் முகம்வாடி உடல் மெலிந்து இருப்பதாகக் கூறினாள். இதனைக் கேட்டதும் சித்தர் சரி உன்னுடைய வீட்டில் உள்ள வெள்ளி இரும்பு செம்பு வெண்கல ஈயப் பொருட்களை கொண்டு வா நான் அதனை எல்லாம் பொன்னாக மாற்றித் தருகிறேன். அதனைக் கொண்டு நீ உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்.

பொன்னனையாள் ஆச்சர்யம் கலந்த குழப்பத்துடன் அவளின் வீட்டில் இருந்த உலோகப் பொருட்களை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள். சித்தர் ஒவ்வொன்றிற்கும் விபூதியிட்டு நெருப்பில் வைத்தார். இந்த பாத்திரங்களை நாளை காலையில் அவைகளை எடுத்துப்பார். எல்லாம்  தங்கமாக இருக்கும். உன் விருப்பப்படி இறைவனின் பிரதிமை செய்து கொள் என்று கூறினார். அவரை உணவருந்திப் போகும்படியும் தாங்கள் இங்கு தங்கியிருந்து பொன்னாலான இறைவனின் திருமேனியைக் காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். அதற்கு சித்தர் நான் மதுரையில் வசிப்பவன். என்னை சித்தன் என்பார்கள். முதலில் நீ உன்னுடைய பணிகளை முதலில் முடி. நீ விரும்பும் போது இங்கு வருவேன் என்று கூறி மறைந்தருளினார். பொன்னனையாளும் அவ்வுலோகப் பொருட்களை மறுநாள் காலையில் பார்க்க அப்பொருட்கள் பொன்னாக மின்னின. இதனைக் கண்டதும் பொன்னனையாள் இச்செயலை சாதாரணமானவர்கள் செய்ய இயலாது. சிவனடியாராக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தாள். பின்னர் பொன்னாலாகிய இறைவனின் திருமேனியை உண்டாக்கினாள். அத்திருமேனியின் அழகில் சொக்கிய பொன்னனையாள் திருமேனியைக் கிள்ளி அழகிய பிரானோ என்று கொஞ்சி முத்தமிட்டாள். பொன்னனையாள் கிள்ளியதால் ஏற்பட்ட நகக்கீறலும் அழகிய பிரான் என்ற பெயரும் இறைவனுக்கு நிலைத்து விட்டன.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தான் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் தனக்கு பொன்னால் செய்யப்பட்ட இறைவன் வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தூய்மையான பக்தியில் அன்புடன் இறைவனை அனுகினால் தன் பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை இறைவனார் உறுதியாக நிறைவேற்றுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 457

கேள்வி: குடிலின் பொருளாதாரம் மேம்பட என்னென்ன வழிபாடுகள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளாலே மனமாற்றம் பிரார்த்தனை முக்கியம். பிறர் பொருட்டு எந்த வகையான வழிபாடுகள் செய்தாலும் மனமொன்றி செய்தால் நலம் நடக்கும். அதனையும் தாண்டி புரிந்து கொள்ளக்கூடிய ஆத்மாக்கள் புரிந்து கொள்வார்கள். புரிந்து கொள்ள இயலாத ஆத்மாக்களுக்கு ஏற்கனவே ஓரளவு புரிந்து கொண்ட ஆத்மாக்கள் எடுத்துக் கூறுவது ஒன்றுதான் எளிய வழியாகும்.

35. தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் முப்பத்தி ஐந்தாவது படலமாகும்.

குலபூஷண பாண்டியனுக்கு இரண்டு புத்திரர்கள். தந்தைக்குப் பின் மூத்தவன் இராஜேந்திரன் பட்டத்துக்கு வந்தது இளைவன் ராஜசிங்கனுக்குப் பொறாமையாயிருந்தது. மதுரையில் இறைவனின் அருளால் மீனாட்சி அம்மன் உடனறை சொக்கநாதரை வழிபட்டு காஞ்சி திரும்பினான் காடுவெட்டி சோழன். காடு வெட்டின சோழனுக்கு மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் மறக்கவே முடியவில்லை. சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் மீண்டும் வழிபட சோழன் விருப்பம் கொண்டான். மீண்டும் இறைவனை தரிசிக்க ஒரே வழி பாண்டியனுடன் நட்பு கொள்ள விருப்பம் கொண்டான். அரசனாக இருந்த இராசேந்திர பாண்டியனுக்கு தங்கம் வைரம் வெள்ளிப் பொருட்களுடன் ஏராளமானவற்றை பரிசாகக் கொடுத்து அனுப்பினான். ஏற்கனவே காடுவெட்டி மதுரை சொக்கநாதரை வழிபட்ட விதம் சோழன் சொக்கநாதரிடம் கொண்டிருந்த பேரரன்பு ஆகியவற்றை தன் தந்தை சொல்லக்கேட்டு இராசேந்திர பாண்டியன் அறிந்திருந்தான். ஆகையால் அவன் காடிவெட்டியின் பரிசினை ஏற்றுக் கொண்டு அவனுக்கு முத்துமாலை உள்ளிட்ட ஏராளமான பரிசுகளை பதிலுக்கு கொடுத்து அனுப்பினான். இதனால் பாண்டிய மற்றும் சோழ நாடுகளுக்கு இடையில் நட்புறவு ஏற்பட்டது. இதனை மேலும் வலுவாக்கி சொக்கநாதரை உரிமையுடன் வழிபட சோழன் விரும்பினான். சோழனின் மகளை இராசேந்திர பாண்டியனுக்கு மணமுடித்துக் கொடுப்பதே அதற்கான வழி என்பதை சோழன் தீர்மானித்தான். தன்னுடைய விருப்பத்தை பாண்டியனுக்குத் தெரிவித்தான்.

இராசேந்திர பாண்டியனும் சோழனின் மகளை திருமணம் செய்ய சம்மதித்தான். இராசேந்திர பாண்டியனுக்கு அரசசிங்கன் என்றொரு தம்பி இருந்தான். ராஜசிங்கனுக்கு அரச சிங்கன் இராச சிம்மன் என்ற பெயர்களும் உண்டு. அரசசிங்கன் மிகவும் தீய எண்ணம் கொண்டவனாக இருந்தான். சோழ இளவரசியை இராசேந்திர பாண்டியன் மணப்பதை அவன் விரும்பவில்லை. எவ்வாறேனும் சூழ்ச்சி செய்து சோழ இளவரசியை தான் மணந்து சோழ பாண்டிய நாடுகளை தனதாக்கிக் கொள்ள விருப்பம் கொண்டான். ஆகையால் இராசேந்திர பாண்டியனுக்குத் தெரியாமல் பாண்டியப் படையுடன் அரசசிங்கன் காஞ்சியை நோக்கிப் புறப்பட்டான். தன்னுடைய வருகையை காடுவெட்டிக்கு தெரிவித்தான். மணமகனின் வீட்டிலிருந்து வரும் விருந்தினரை வரவேற்க காடுவெட்டி தடபுடலான ஏற்பாடுகளைச் செய்தான். இதில் மகிழ்ந்த அரசசிங்கன் காடுவெட்டியிடம் என்னுடைய அண்ணன் உங்களின் மகளை மணந்தாலும் உங்களிடம் இணக்கமாக நடந்து கொள்ள மாட்டார். நான் அவ்வாறு இல்லை. உங்களுடைய மகளை எனக்கு மணம் முடித்துக் கொடுத்தால் நான் உங்களின் விருப்பப்படி நடந்து கொள்வேன் என்று நயவஞ்சகமாகப் பேசினான். காடுவெட்டியும் சோழன் வலிந்து பெண்ணைக் கொடுத்தான் என்பதைவிட பாண்டியன் விரும்பி சோழ இளவரசியை மணம் முடித்தான் என்ற சொல்லே நமக்கு புகழாகும் என்று எண்ணினான். மேலும் இளையவன் மூத்தவனை விட பலசாலி அழகன் என்பதாலும் அவன் அழைத்து வந்த பாண்டியப் படையின் பலத்தைக் கண்டு அஞ்சியும் சோழன் இதற்கு ஒப்புக் கொண்டான். திருமணம் சிறப்பாக நடந்தது. இராஜேந்திரன் இது தெரிந்தும் மௌனமாகவே இருந்தான். பின்னர் இராசேந்திர பாண்டியனுக்கு ஓலை ஒன்றினை அனுப்பினான். அதில் எனது மகளை அரசசிங்கனுக்கு மணம் முடித்து விட்டேன். ஆகையால் நீ பாண்டிய நாட்டை அரசசிங்கனிடம் ஒப்படைத்து விடு. இல்லையேல் சோழபடை உன் நாட்டின்மீது போர் தொடுக்கும். பின் போரில் வெற்றி பெற்று அரசசிங்கனை பாண்டிய நாட்டின் அரசனாக்கி விடுவேன் என்று எழுதி இருந்தான்.

மதுரைக்கு மிக அருகில் சோழப்படையும் தன் தம்பி அழைத்துச் சென்ற தமது பாண்டியப் படையில் உள்ளவர்களும் யுத்தத்திற்காக காத்திருந்தார்கள். ஓலையை படித்த பின் இராசேந்திர பாண்டியன் திருக்கோவிலை அடைந்து சொக்கநாதரிடம் எம்பெருமானே நள்ளிரவில் தனியனாய் உன்னை வழிபட்ட உன் பக்தனாகிய காடுவெட்டிய சோழனும் தனது தம்பியும் இப்போது எனக்கு விரோதமாக படையெடுத்து வந்துள்ளார்கள். அன்று அவனுக்கு துணையாக இருந்த தாங்கள் இன்று அவனுடைய செயலுக்கும் துணை புரிவீர்களா? என்று மனம் வருந்திக் கேட்டான். அப்போது பாண்டியனே நீ கலங்க வேண்டாம். உன்னுடைய சிறிய படையுடன் நாளை சோழனை எதிர்கொள்வாய். வெற்றியை உமதாக்குவோம் என்று தெய்வாக்கு வானில் கேட்டது. இறைவனாரின் தெய்வாக்கினைக் கேட்டதும் இராசேந்திரன் அரண்மனை திரும்பி மறுநாள் சோழனுடனான போருக்கு ஆயத்தமானான். இறை நம்பிக்கையில் சோழனின் பெரும் படையை எதிர்த்தான் இராசேந்திர பாண்டியன். போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இறைவனார் கடும் வெப்பத்தை அவ்விடத்தில் ஏற்படுத்தினார். சோழ பாண்டிய படைவீரர்கள் தாகத்தினால் களைப் படைந்தனர். நிழலைத் தேடத் தொடங்கினர் இருபடை வீரர்களும். அப்போது பாண்டியனின் படைக்கு இடையில் இறைவனார் சிவனடியார் வேடம் தாங்கி தண்ணீர்ப் பந்தல் வைத்தார். பாண்டியனின் படை வீரர்களுக்கு தண்ணீரை வழங்கினார். இறைவனார் அளித்த நீரினை உண்ட பாண்டியப் படைவீரர்கள் களைப்பு நீங்கி புத்துணர்வுடன் சோழப் படையை எதிர்த்து போரிட்டு எளிதில் வென்றனர். காடுவெட்டிய சோழனும் ராஜசிங்கனும் கைது செய்யப்பட்டனர். இராசேந்திர பாண்டியன் அவர்களை மன்னித்து விடுதலை செய்து காடுவெட்டிய சோழனை மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பினான். ராஜசிங்கனை மன்னித்து தன் நாட்டின் முக்கிய பதவியை அளித்த இராசேந்திர பாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன்னுடைய பக்தனாக இருந்தாலும் தர்ம வழியில் செல்லாமல் இருந்தால் இறைவன் அவர்களைக் காப்பாற்ற மாட்டார். என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 456

கேள்வி: விஷ்ணு துர்கை சிவ துர்கை இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

இறைவன் அருளால் இதுபோல் மனிதர்கள் விஷ்ணு சிவன் என்று பிரித்து பார்ப்பதால் வந்தது. இப்படியொரு துர்கை இங்கே இருந்தால் அப்படியொரு துர்கை அங்கே இருக்க வேண்டும் என்று. இங்கே விநாயகர் என்றால் அங்கே தும்பிக்கையாழ்வார் என்று. இவையெல்லாம் மனிதர்களின் ஆசை. இருந்துவிட்டு போகட்டுமே? இரண்டையும் மனிதன் வணங்க வேண்டியதுதானே?

34. விடை இலச்சினை விட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விடை இலச்சினை விட்ட படலம் முப்பத்தி நான்காவது படலமாகும்.

குலபூஷண பாண்டியன் மதுரையை ஆட்சி செய்த போது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு காடு வெட்டிய சோழன் என்னும் அரசன் சோழ நாட்டை ஆட்சி செய்தான். அடர்ந்த காடுகளை சரிசெய்து மக்கள் வசிக்கும் இடமாக மாற்றியதால் அவன் காடு வெட்டிய சோழன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிவபக்கதனாகத் திகழ்ந்தான். ஒரு சமயம் காமாட்சியை தரிசிக்க வந்த முனிவர் ஒருவர் சோழனைக் கண்டு மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரரின் பெருமையை விரித்துக் கூறினார். இதனைக் கேட்டதும் அவனுக்கு மதுரையில் மீனாட்சி அம்மனுடன் அருள்புரியும் சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நாளுக்கு நாள் சோழனின் ஆவல் அதிகரித்துக் கொண்டே சென்றது. சொக்கநாதர் சோழனுக்கு தரிசனம் தர விருப்பம் கொண்டார். ஒரு நாள் சோழனின் கனவில் சித்தரின் வடிவில் தோன்றிய சொக்கநாதர் சோழனே நீ மாறுவேடம் கொண்டு யாருடைய துணையும் இன்றி மதுரை வந்து மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதரைத் வழிபாடுவாயாக‌ என்று திருவாய் மலர்ந்து அருளினார். உடனே காடு வெட்டி சோழன் விழித்தெழுந்தான். பகைநாடான பாண்டிய நாட்டுக்கு எவ்வாறு சென்று சொக்கநாதரை வழிபடுவது என்று எண்ணிக் கொண்டிருந்த தனக்கு மாறுவேடத்தில் வருமாறு சித்தர் கூறியதை கேட்டு பெரும் மகிழ்ச்சி கொண்டான். அன்று இரவே மாறுவேடம் பூண்டு சொக்கநாதரையும், மீனாட்சி அம்மனையும் வழிபாடு மேற்கொள்ள ஆவலுடன் மதுரை நோக்கி புறப்பட்டான் சோழன்.

சோழன் பல்வேறு ஆறுகளையும் மலைகளையும் தாண்டி இறுதியில் மதுரை நகரின் வடக்கு எல்லையான வைகை ஆற்றினை அடைந்தான். அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடியது. பொற்றாமரை குளத்தில் நீராடி இறைவனை தரிசிக்க விருப்பம் கொண்டு வந்த எனக்கு இது என்ன சோதனை? பாண்டியன் கண்டால் துணையின்றி வந்த என்னை சிறைபிடிப்பானே. வெள்ளம் வடியும் வரை பொறுமையாக காத்திருந்து செல்லவும் வழியில்லையே எனப் பலவாறு எண்ணி வேதனையுற்றான். அப்போது சொக்கநாதர் சித்தர் வடிவில் வந்து மீனாட்சியைப் பார்க்கப் போகிறேன் வருகிறாயா அப்பா எனக் கேட்டார். கனவில் கண்ட சித்தர் நேரில் வரக்கண்ட சோழன் ஆச்சர்யம் அடைந்தான். சித்தர் வைகையை பார்க்க வைகையில் வெள்ளம் குறைந்தது. சோழன் பெருத்த ஆச்சர்யத்துடன் சித்தரைப் பின் தொடர்ந்து சென்றான். கோவில் அருகில் வரும்போது நடு இரவாகிவிட்டது ஆகையால் ஆலயம் அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. இதனால் மீண்டும் சோழன் வருத்தத்துடன் நின்றான். அப்போது சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கநாதரை தரிசிப்பீர்கள் கவலை வேண்டாம் என்று சொல்லி திறவுகோலை வாங்கி வந்து ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான். பொற்றாமரையில் நீராடி அம்மனையும் சொக்கநாதரையும் கண்குளிர தரிசித்து வழிபட்டு போற்றிப் பாமாலை பாடினான்.  இருட்டிலும் அவன் தெளிவாகப் பார்க்கும் தன்மையை சிவபெருமான் அருளி இருந்தார். விடியும் நேரமாகியும் அவன் புறப்படவில்லை.

சித்தர் வடிவில் இருந்த சொக்கநாதர் சோழ மன்னா நீ இங்கிருப்பதை பாண்டியன் அறிந்தால் உனக்கு துன்பம் உண்டாகும். ஆதலால் நீ இப்போது காஞ்சியை நோக்கி உன்னுடைய பயணத்தை ஆரம்பிப்பது நல்லது என்று கூறினார். பின்னர் சோழனை அழைத்துக் கொண்டு வடக்கு வாசல் வழியாக வந்தார். கோவிலின் வெளியே வந்ததும் கோட்டைக் கதவை அடைத்துத் தாளிட்டு நந்தி முத்திரையை வைத்தார். பின் வைகையின் அக்கரைக்கு கொண்டு சோழனை விட்டுவிட்டு உனக்கு நல்ல துணை கிடைக்கப் பெற்று செல்வாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆலயத்தை மறுநாள் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய முத்திரையான மீன் முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால் அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம் இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும் முழங்கி படை திரட்ட உத்தரவிட்டான். போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன் சோழநாட்டை நோக்கிப் புறப்பட தயாராக இருந்த்தார்கள்.

குலபூஷண பாண்டியன் இரவு தூங்க செல்லும் முன்பாக சொக்கநாதரிடம் முறையிட்டு வேண்டினான். இரவில் குலபூஷண பாண்டியனின் கனவில் தோன்றிய சொக்கநாதர் உன்னைப் போலவே காடுவெட்டிச் சோழனும் என்னுடைய பக்தன். அவன் எம்முடைய தரிசனம் வேண்டினான். அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற மாறுவேடத்தில் அவனை வரச்செய்து திருக்கோவிலின் வடக்கு வாயிற்வழியின் மூலமாக உட்செல்லச் செய்து வழிபாடு மேற்கொள்ளச் செய்து காஞ்சிக்கு திருப்பி அனுப்பினோம். இறுதியில் வடக்கு வாயில் கதவிற்கு நந்தி முத்திரையை வைத்து மூடினோம். சோழனின் பக்தியை எடுத்துரைக்கவே இவ்வாறு செய்தோம் சோழன் மீதுள்ள சினத்தை விடு பகையை மற. அவனும் உன் போல் ஒரு சிவ பக்தன் என்று கூறினார். இதனைக் கேட்டதும் குலபூஷண பாண்டியன் விழித்தெழுந்தான். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்று அனைவருக்கும் அறிவித்தான். பின்னர் தனது மகனான இராஜேந்திர பாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 455

கேள்வி: தத்தெடுத்த குழந்தை வளர்த்த பெற்றோருக்கு செய்யும் அர்க்யம் தர்ப்பணம் அவர்களின் ஆத்மாக்களுக்கு சென்றடையுமா?

இறைவனின் கருணையால் சில காரண காரியங்களால் முன்னோர்களுக்கு கர்மம் செய்ய மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். அது ஒருபுறமிருக்கட்டும். வாழும் பொழுதே ஒரு மனிதன் நிறைய புண்ணியத்தை சேர்த்து பக்தி வழியில் சென்று இறையருளை பெற்று விட்டால் அவன் வாரிசுகள் அவனுக்காக செய்ய வேண்டியது எதும் இல்லை. வெளியூரிலே தனத்தை தொலைத்துவிட்ட மனிதனுக்குதான் அவன் ஊரிலிருந்து தனம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கையிலே எப்பொழுதுமே தனம் அதிகமாக இருப்பவனுக்கு யாரும் தனம் அனுப்ப வேண்டியது இல்லை. எனவே என் பிள்ளை எனக்கு காரியம் செய்வானா? எனக்கான புண்ணியத்தை சேர்ப்பானா? என்று கேட்பதை விட என் பிள்ளை என்ன செய்வது? நானே நிறைய தர்மத்தை செய்கிறேன். என் பிள்ளைக்கும் அதை காட்டிக் கொடுத்து விடுகிறேன் என்று இவன் தர்மம் செய்வது மட்டுமல்லாமல் இவன் பிள்ளையையும் தர்மவானாக மாற்றிவிட்டால் அந்த தர்மவான் தனியாக இவனுக்கென்று எதுவும் செய்யவேண்டாம். அவனை தர்மவானாக மாற்றிய பலனே இவனை எப்பொழுதும் காலகாலம் பிறவிதோறும் ஆதரிக்கும் அருளை சேர்த்து தரும்.

33. அட்டமாசித்தி உபதேசித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அட்டமாசித்தி உபதேசித்த படலம் முப்பத்தி மூன்றாவது படலமாகும்.

இறைவனான சிவபெருமான் கயிலாயத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது உமையம்மை அவர் பக்கத்திலேயே அமர்ந்து இறைவனாருக்கு வெற்றிலைச் சுருளை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது இறைவனார் சிவகணங்களுக்கும் பெருந்தவ முனிவர்களுக்கும் போக மூர்த்தியாய் அமர்ந்து சிவ கதையினை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகைப் பெண்கள் அறுவரும் கயிலாய மலைக்கு வந்தனர். இறைவனாரிடம் எம்பெருமானே தாங்கள் எங்களுக்கு அட்டமா சித்தியை உபதேசித்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். கார்த்திகைப் பெண்களின் வேண்டுதலைக் கேட்ட இறைவனார் உமையம்மைச் சுட்டிக் காட்டி உலகத்தின் அன்னையான இவ்வம்மை தன்னுடைய பூரணத் தன்மையால் உலகெங்கும் பராசக்தியாகவும் மகேஸ்வரியாகவும் எங்கும் நிறைந்திருக்கிறாள். அட்டாமா சித்திகள் இவளைப் பணிந்து வழிபட்டு பணிவிடைகள் செய்யுங்கள். நீங்கள் இவ்வம்மையை வழிபட வழிபட அட்டமா சித்திகளை இவள் உங்களுக்கு அருளுவாள் என்று சொல்லி அட்டமா சித்திகள் பெரும் வழியை சொல்லிக் கொண்டிருந்தார். இறைவன் சொல்வதை அவர்கள் கவனக் குறைவாக கேட்டுக் கொண்டிருப்பதை இருப்பதை இறைவன் கண்டு கொண்டார். இந்த கவனக் குறைவால் ஏற்பட்ட வினையால் கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை வழிபட மறந்தார்கள். இதனைக் கண்ட இறைவனார் நீங்கள் கவனக்குறைவாக இருந்ததாலும் உமையம்மையை அலட்சியப்படுத்தியதாலும் பட்டமங்கை என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடக்கப் பெறுவீர்கள் என்று சாபம் அளித்தார். இதனைக் கேட்டதும் கார்த்திகைப் பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு நீங்கும் என்று இறைவனாரை கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர் ஆயிரம் ஆண்டுகள் கழித்து யாம் மதுரையிலிருந்து வந்து உங்களுக்கு சாபம் நீக்கி அட்டமா சித்தியை உபதேசிக்கிறேன் என்று கூறினார்.

கார்த்திகைப் பெண்கள் பட்டமங்கலம் என்னும் தலத்தில் கற்பாறைகளாகக் கிடந்தார்கள். இந்த ஆயிரம் வருடத்தில் கற்பாறைகளாக கிடந்த கார்த்திகைப் பெண்கள் உமையம்மையை முறைப்படி தியானித்து வழிபட்டு அட்டமா சித்திகள் அடையும் தகுதி பெற்றார்கள். ஆயிரம் வருடங்கள் கழித்து சொக்கநாதர் ஞானாசிரியராக வடிவம் கொண்டு பட்டமங்கலத்திற்கு வந்தார். இறைவனாரின் கடைக்கண் பார்வை பட்டதும் கற்பாறைகள் கார்த்திகைப் பெண்களாக மாறினார்கள். இறைவனார் அப்பெண்களின் தலைமீது தன்னுடைய கையினை வைத்து அணிமா மகிமா இலகிமா கரிமா பிராப்தி பிராகாமியம் ஈசத்துவம் வசித்துவம் ஆகியஅட்டாமா சித்தியை உபதேசித்தார். பின்னர் திருகையிலாய மலையை அடைந்து சிவப்பேறு பெற்றனர்.

  1. அணிமா என்பது மிகச்சிறிய உயிரினத்திலும் சிறுமையாகச் சென்று தங்குவது அணிமா ஆகும்.
  2. மண் முதல் சிவதத்துவம் வரையிலான முப்பத்தாறு தத்துவங்களிலும் உள்ளும் புறமும் நீங்காமல் நிறைந்திருப்பது மகிமா ஆகும்.
  3. மேருமலையைப் போல கனத்திருக்கும் யோகி இலேசான பரமாணுவைப் போல் கனமற்று இருப்பது இலகிமா ஆகும்.
  4. லேசான பரமாணுவைப் போல் மெலிந்திருக்கும் யோகி மேருமலையின் பாரம் போல் கனப்பது கரிமா ஆகும்.
  5. பாதாளத்தில் இருக்கும் ஒருவன் நினைத்த மாத்திரத்தில் பிரம்மலோகம் சென்று மீண்டும் பாதாளத்தை அடைவது பிராத்தி ஆகும்.
  6. வேறு உடலிற் புகுதலும் விண்ணில் சஞ்சரித்தலும் தான் விரும்பிய இன்பங்கள் அனைத்தையும் தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தல் பிராகமியம் ஆகும்.
  7. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் தம் இச்சைப்படி இயற்றி சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க வீற்றிருப்பது ஈசத்துவம் ஆகும்.
  8. எல்லாவகை உயிர்களையும் இந்திரன் உள்ளிட்ட திக்பாலர்களையும் தன் வசமாகக் கொள்வது வசித்துவம் ஆகும்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எதிலும் கவனக்குறைவாக இருப்பதும் அலட்சியமாக இருப்பதும் கேட்டை விளைவிக்கும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 454

கேள்வி: செய்வினை பில்லி சூனியம் சாத்தியமானதா?

இறைவன் அருளால் எப்படி மனிதர்கள் விஞ்ஞானத்தை வைத்து தவறான செயல்களை செய்ய கற்றுக் கொள்கிறார்களோ அதைப்போல மந்திரங்களை வைத்துக் கொண்டு கெடுதி செய்யவும் மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறான். இவையனைத்தும் சாத்தியமே. ஆனால் இவைகளில் உள்ள நுட்பத்தை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் செய்வினைதான் என்று அச்சப்பட தேவையில்லை. இன்னொன்று செய்வினையால் ஒரு மனிதன் பாதிக்கப்பட வேண்டுமென்றால் அதுவும் ஜாதகப்படிதான் நடக்கும். அடுத்ததாக இதைப்பற்றி அறிந்த மனிதர்கள் இந்த ஆற்றல் பெற்ற மனிதர்கள் மிகக் குறைவு. மற்றபடி தெரிந்ததாகக் கூறி தனம் பறிக்கும் மனிதர்களே அதிகம். எனவே இது குறித்து மனிதன் குழப்பம் அடைய வேண்டாம். ஆலயம் சென்று வழிபாடு செய்வதும் தர்மங்களை செய்வதும் சித்தர்களிடம் வந்தால் மீண்டும் மீண்டும் தர்மத்தைதானே கூறுகிறார்கள் என்று மனிதன் சலிப்படையலாம். மனிதர்கள் எத்தனைதான் சலிப்படைந்தாலும் விரக்தியடைந்தாலும் யாங்கள் மீண்டும் மீண்டும் எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும் எல்லா உயிர்களுக்கும் நல்லதும் வேண்டிய உதவிகளும் செய்ய வேண்டும் தர்மத்தை செய்ய வேண்டும் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்றுதான் கூறுவோம். இப்படி செய்து கொண்டே இருந்தால் எந்த செய்வினையும் யாரையும் பாதிக்காது.

32. வளையல் விற்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வளையல் விற்ற படலம் முப்பத்தியிரண்டாவது படலமாகும்.

முன்னொரு காலத்தில் தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர்கள் தங்களைப் போன்று அழகிலும் கற்பிலும் சிறந்த பெண்கள் வேறு எங்கும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்திருந்தார்கள். இறைவனான சிவபெருமான் அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணினார். எனவே அவர் பிட்சாடனார் வடிவம் கொண்டு அழகில் மன்மதனைப் போல கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி தாருகாவனத்திற்குச் சென்றார். தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர்கள் பிட்சாடனாரின் அழகில் மயங்கி செய்வதறியாது மயக்கத்தில் அவரைத் தொட வேண்டுமென்று அவரின் அருகில் சென்றார்கள். ஆனால் சிவபெருமான் அவர்களின் கைக்கு எட்டாமல் எட்டி எட்டிப் போனார்.  தவசியே நில்லுங்கள் நில்லுங்கள் எனக் கூவியபடி சிலர் பின் தொடர்ந்தார்கள்.  சிலர் பிட்சையாக பால் நெய் தயிர் தேன் சர்க்கரை என்று கொடுக்க சென்றார்கள். பிட்சாடனார் தாருகாவனத்தை விட்டுச் சென்ற பின்னும் பெண்கள் மதி மயக்கத்திலிருந்தனர். தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் மனைவியர்களின் செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்து மயக்கத்திற்கான காரணத்தை தங்களின் தவ வலிமையால் கண்டறிந்தார்கள். பெண்களின் இந்நிலைக்கு காரணம் மதுரை சொக்கநாதர் என்பதை அறிந்த அவர்கள் அப்பெண்களை மதுரையில் அழகு வாய்ந்த வணிக மகளிர்களாய் பிறக்குமாறு சாபம் அளித்தனர். அப்பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு விலகும் என்று முனிவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் யாருடைய ஸ்பரிசத்துக்காக அலைந்தீர்களோ அந்த சொக்கநாதர் வளையல் வியாபாரியாக வந்து உங்களுக்கு வளையல்கள் அணிவித்ததும் நீங்கும் என்று கூறினர். தாருகாவனத்து முனிவர்களின் சாபத்தினால் அவர்களுடைய மனைவியர்கள் மதுரையில் வணிகப் பெண்களாக அவதரித்தனர். அவர்கள் வளர்ந்து பேரழகுடன் மணப் பருவம் எய்தினர்.

ஒரு நாள் சொக்கநாதர் வளையல் வியாபாரியாக பட்டு நூலில் வளையல்களைக் கோர்த்துக் கொண்டு வணிக வீதிக்கு எழுந்தருளினார். வளையல் வாங்குங்கள் வளையல் வாங்குங்கள் என்று வளையல் வியாபாரி கூறினார். வளையல் வியாபாரின் குரலால் ஈர்க்கப்பட்ட வணிகப் பெண்கள் வீதிக்கு வந்தனர். வளையல் வியாபாரியின் மேல் ஈர்ப்பு கொண்டு அவரிடம் தங்களுக்கு வளையல்கள் அணிவிக்கும்படி கூறினார்கள். வளையல் வியாபாரியாக வந்த சொக்கநாதர் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் வளையல்களை உடைத்துவிட்டு மீண்டும் வளையல்களை அணிவிக்க வியாபாரியைக் கேட்டுக் கொண்டார்கள். சொக்கநாதரும் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார். வணிகப் பெண்கள் தாங்கள் அணிந்து கொண்ட வளையல்களுக்கு உரிய விலையைப் பெற்றுச் செல்லுமாறு கூறினர். அதற்கு இறைவனார் நாளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறி திருக்கோவிலுக்குள் சென்று சிவலிங்கத்துள் மறைந்தருளினார். வளையல் வியாபாரியின் பின் சென்ற பெண்கள் நடந்தவற்றைக் கண்டு அதிசயித்தனர். தங்களின் சாபம் நீங்கப் பெற்று மதுரையில் நீண்ட நாட்கள் வசித்து பேறு பெற்றார்கள். இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் விற்கும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கர்வம் தண்டனையைப் பெற்றுத் தரும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 453

கேள்வி: எலுமிச்சையை வேலின் மீது குத்துவது நல்லதா?

வேலை எடுத்து மனிதன் மீது குத்தலாம் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. இறைவனின் அருளாலே கூறவருவது என்னவென்றால் அரசக்கனி எனப்படும் எலுமிச்சம் பழத்தின் ஆற்றல் எத்தனையோ இருக்கிறது. இறைவனை பூஜை செய்யும் பொழுது கனி வகைகளில் புஷ்பங்களில் பதார்த்தங்களில் அரசக்கனி அவசியம் வைக்கப்பட வேண்டும். இறைவனுக்கு பரிபூரண பூஜையை செய்யும் பொழுது ஏராளமான அரசக்கனியை இறைவன் திருவடிகளில் வைத்து ஆரமாக கோர்த்து இறைவனுக்கு அணிவிப்பதும் நல்லதொரு பலனைத் தரும். அதோடு மட்டுமல்லாமல் இல்லத்தில் தோஷம் வாஸ்து குறைபாடு அதர்வண குற்றம் செய்வினை தோஷம் பிரச்சினை சண்டை மனஸ்தாபம் உடல் பிணி என்றெல்லாம் மனிதன் வருந்துகிறானே? இவர்கள் அதிக அளவு அரசக்கனியால் இறைவனை ஆராதனை செய்து எத்தனை கனிகள் கொண்டு இறைவனை வணங்குகிறானோ அதில் பாதி கனிகளை இறைவனின் திருவடியில் வைத்துவிட்டு மீதி கனிகளை இல்லத்தில் வைத்து தூப தீபங்கள் காட்டி வழிபாடு செய்தால் மேற்கூறிய தோஷங்கள் குறையும். அந்தளவில் அரசக்கனியை ஏற்றுக்கொள்ளலாம். எங்கு சென்றாலும் பூஜை செய்து அருகம்புல் எடுத்து செல்வது போல அரசக்கனியையும் உடன் எடுத்து செல்வது ஆக்கபூர்வமான ஒரு பாதுகாப்பு வளையத்தை தரும். எனவே அதிக இறையாற்றலை பெற்றுத் தரக்கூடிய கனிகளில் அரசக்கனியும் ஒன்று.

அரசக்கனி வைத்திருந்தால் நல்ல பலன்கள் உடன் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசக்கனியை வலது உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டு அதிக அளவு மந்திர ஜபத்தை உருவேற்றினால் அந்த அரசக்கனியினால் மனிதனுக்கு நற்பலன்கள் ஏற்படும். அதைப்போல இறைவனின் பிரசாதமான அரசக்கனியை காய்ந்த பிறகு தூக்கி எறிவதா? அல்லது அதனை உட்கொள்ளலாமா? என்றால் கனிச்சாறாக தாராளமாக உட்கொள்ளலாம். தவறொன்றுமில்லை. சில அரசக்கனிகளை மட்டும் பூஜைக்கு வைத்துக் கொள்ளலாம். எனவே இந்த அடிப்படையில் அரசக்கனியை ஆதரிக்கிறோம் வேறு அடிப்படையில் அல்ல.