யாம் கூறுகின்ற நங்கையை (பெண்ணை) மணக்க வேண்டும் என்று சிலர் எண்ணலாம். அப்பொழுதுதான் வாழ்க்கை மணக்கும் என்றும் எண்ணலாம். ஆனாலும் கூட விதியில் எது இடம் பெறுகிறதோ அதைதான் எப்பொழுதுமே மனிதன் நுகர இயலும். திருமணம் தொடர்பான கர்ம வினைகள் எத்தனையோ சிக்கலான கர்ம வினைகளைக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஆண்டாண்டு காலம் பாடம் எடுத்தாலும் கூட மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இந்த களத்திர பாவம். எல்லா பாவங்களும் அப்படிதான் என்றாலும் களத்திர பாவம் என்பது மிகவும் நுட்பமானது. அதனால்தான் பல்வேறு தருணங்களிலே பல்வேறு விதமான திருமணங்கள் பொய்த்து போவதும் பல்வேறு திருமணங்கள் புறத் தோற்றத்திற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் உள்ளே நிம்மதியாக வாழாமல் இருப்பதுமாக இருக்கிறது. மனிதனின் பெருமளவு கர்மாக்கள் குறைகின்ற இடம் களத்திர பாவம். ஆன்மீகம் என்றாலே தற்சமயம் அது பலவகையான ஆன்மீகமாக மனிதனால் பார்க்கப்படுகிறது. இந்த ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) நாங்கள் (சித்தர்கள்) சுட்டிக் காட்டுகின்ற வழியானது மிக மிக ஞானியர் என்று மனிதர்களால் மதிக்கப்படுகின்ற ஞானியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்படாத வழி முறையாகத்தான் இருக்கும். நீ கற்ற கற்கின்ற ஆன்மீக நூல்கள் நீ பார்க்கின்ற ஆன்மீக மனிதன் உன் செவியில் விழுகின்ற ஆன்ம செய்திகள் இது வரை கற்ற பல்வேறு ஆன்மீக விஷயங்கள் எல்லாம் கூட நாங்கள் (சித்தர்கள்) காட்டுகின்ற வழியிலே முரணாகத் தோன்றும்.
எமது வழி முறையில் வர வேண்டும் என்று நீயோ உன்னொத்து சிலரோ எண்ணலாம். நாங்கள் (சித்தர்கள்) வாழ்த்துகிறோம். ஆனால் அதனால் மிகப்பெரிய உலகியல் நன்மையோ அல்லது உளவியல் நன்மையோ வந்து விடாதப்பா. அதிக துன்பங்களும் அவமானங்களும் வரும். அதை சகித்துக் கொள்கின்ற பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் எமது வழியில் நீயும் வரலாம். யாங்கள் (சித்தர்கள்) தடுக்கவில்லை. வந்து வெற்றி பெற நல்லாசி கூறுகிறோம். யாம் பலமுறை கூறியிருக்கிறோம். நாங்கள் (சித்தர்கள்) பாரபட்சம் பார்ப்பதில்லை என்று. எல்லோரும் இறைவனுக்கும் எமக்கும் சேய்கள்தான் (பிள்ளைகள்தான்). ஆனாலும் கூட இறைவனுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? சித்தர்களுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? அந்த மாயத்திரை எது? அது எப்பொழுது அகலும்? தீவிர பற்று தன் பிள்ளைகள் மேல் கொண்டிருக்கின்ற பாசம் அந்த பாசத்தின் காரணமாக ஏற்படுகின்ற தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும் கூட தவறாக தெரியாத ஒரு நிலை. அதையே மற்றவர்கள் செய்தால் அது மிகப்பெரிய பஞ்சமாபாதகமாகத் தோன்றுவது. இவையெல்லாம் மாயையின் உச்சநிலை. எனவே சுயநலமும் தன்முனைப்பும் தீவிர பாசமும் ஆசையும் பற்றும் எந்த மனிதனுக்குள்ளும் எத்தனை காலம் இருந்தாலும் இறைவன் அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் அவனால் புரிந்து கொள்ள முடியாது.
அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான். கிருஷ்ணா இந்த மனிதன் தான் விரும்பா விட்டாலும் பலவந்தமாக தூண்டப்பட்டவன் போல எதனால் ஏவப்பட்டு பாவத்தை சேர்க்கிறான்?
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
ஒரு மனிதன் பாவம் செய்வதற்கு விருப்பப்படுவது கிடையாது. ஆனாலும் ஒரு அரசனின் கட்டளைக்கு அடிபணியும் சேவகன் போல ஐந்து புலன்களின் கட்டளைக்கு அடிபணிந்து ஒரு மனிதன் பாவம் செய்து விடுகிறான். ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.
எல்லாம் விதிதான் என்றால் மதிக்கு என்ன வேலை இருக்கிறது? என்றெல்லாம் சிந்திக்கின்ற மனிதன் எந்த இடத்தில் மதியை வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் மதியை வைக்காமல் வாழ்வதுதான் விதி அங்கே வெல்வதற்கு வழியாகப் போய் விடுகிறது. விதியை மீறி எத்தனையோ நல்ல விஷயங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்விலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒரு மகானின் மூலம் இறைவன் அதனை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஆயினும் பெரும்பாலான பொழுதுகளில் மனிதர்கள் அதனை உணர்வதில்லை. மிகவும் தரம் தாழ்ந்த ஆத்மாவிடம் அதே நிலைக்கு இறங்கி ஒரு மகான் வாக்கு உரைப்பது என்பது கடினம்தான் இருந்தாலும் அதனையும் நாங்கள் (சித்தர்கள்) செய்திருக்கிறோம். எப்படியாவது அந்த ஆத்மா மேலேறி வரவேண்டுமே? அவன் போக்கில் சென்றாவது மேலேற்றலாமே? என்றுதான். ஆனாலும் வழக்கம் போல் விதி வென்று மகான்களின் போதனைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.
இறைவனின் கருணையாலே இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கு இல்லை அல்லது தற்சமயம் வாக்கு பகிர்வதில்லை அல்லது சிலருக்கு வாக்கு கூறுகிறார்கள். பலருக்கு கூறுவதில்லை அல்லது யார் அதிகம் தனம் வைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் வாக்கு ஓதுகின்ற நிலை இருக்கிறது என்றெல்லாம் தத்தம் மனதிற்கு ஏற்ப அந்த மனம் எந்தளவிற்கு கீழ்மைபட்டிருக்கிறதோ அந்தளவிற்கு எண்ணுகிறார்கள். ஒருவரின் சிந்தனையும் செயலும் சொல்லும் தரம் தாழ்ந்து இருக்க இருக்க அவன் இன்னும் பாவங்களை தொலைக்கவில்லை என்பதுதான் பொருள். பாவங்கள் பெருமளவு குறைந்த ஆத்மா மேலும் பாவங்களை செய்ய அஞ்சும் ஆத்மா ஒரு தீயதை பிறர் செய்ய பார்த்தாலும்கூட அவன் அவ்வாறு செய்திருக்க மாட்டான். ஏதோ ஒரு சந்தர்ப்பம் அல்லது வேறு ஏதோ ஒரு சூழல் அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்று அதைக் கூட ஆக்கப் பூர்வமாகத்தான் பார்க்கும். ஆனால் பாவங்கள் நிரம்பியுள்ள ஒரு ஆத்மா பிறர் செய்கின்ற நற்செயல்களைக்கூட குதர்க்கமாகத்தான் பார்க்க எண்ணும். நல்லவர்களை பார்த்தாலே பாவ ஆத்மாக்களுக்கு தேகமெங்கும் எரிச்சல் வருவது போல் இருக்கும்.
மூலவர் புண்ணாகீஸ்வரர் வேறு பெயர்கள் மார்க்கசகாயேசுவரர் வழித்துணைநாதர் வழிகாட்டி வள்ளல். அம்பாள் மங்களநாயகி சவுந்தர நாயகி. இத்தலத்தில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு தனி சன்னிதி உள்ளது. இச்சன்னிதியின் கருவறைச் சுவரில் வெளிப் புறத்தில் மேற்புறமாக பல அரிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அன்னையுடன் மங்களாம்பிகை என்ற அம்பாளுக்கும் தெற்கு நோக்கிய தனி சன்னிதி அமைந்துள்ளது. அன்னை இருவரின் வடிவங்களும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. அமாவாசை தோறும் சவுந்தரநாயகிக்கு சிறப்பு அபிஷேகமும் லலிதா திரி சடையும் சிறப்பு ஆராதனையும் செய்யப்படுகிறது. ஆலய தல விருட்சம் புன்னை மரம். தீர்த்தம் சந்திர புஷ்கரணி துர்கா புஷ்கரணி மற்றும் உபமன்யு முனிவர் வழிபட்ட உபமன்யு கூபம் என்னும் கிணறு காவிரி நதியில் அமைந்துள்ள பிப்பிலர் தீர்த்த கட்டம் ஆகியவைகளாகும். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் ஆலயத்தில் ராஜகோபுரத்திற்கு வெளிப்புறம் விநாயகர் முருகன் சன்னிதிகள் உள்ளன. உட்புறம் உயர்ந்த கொடி மரமும் நான்கு திக்குகளை நோக்கும் விதமாக வேத நந்திகளை நான்கு பக்கமும் கொண்ட பலிபீடமும் அமைந்துள்ளது. இதுபோன்ற பலிபீட அமைப்பு வேறெந்த ஆலயத்திலும் இல்லை. இறைவனை நோக்கியவாறு அதிகார நந்தி அருள்பாலிக்கிறார்.
தாரகாசுரனின் மைந்தர்களான தாருகாட்சகன் கமலாட்சகன் வித்யுன்மாலி ஆகிய மூவரும் தந்தையைப் போலவே கடுந்தவம் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றனர். அந்த அசுரர்கள் மூவருக்கும் மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மன் அளித்தார். அந்தரத்தில் பறக்கும் வல்லமை கொண்ட அந்த திரிபுரங்களுக்குள்ளும் சோலைகள் சிவாலயங்கள் குளங்கள் போன்ற வசதிகள் இருந்தன. கற்பக விருட்சமும் காமதேனும் அங்கிருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்றின. தேவதச்சனான மயனைக் கொண்டு தாருகாட்சகன் பொன்னாலான கோட்டையையும் கமலாட்சகன் வெள்ளிக் கோட்டையையும் வித்யுன்மாலி இரும்புக் கோட்டையையும் தங்கள் நகரில் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர் களின் மூன்று நகரங்களும் ஒளியுடன் பிரகாசித்தன. ஆயினும் அவை அந்தரத்தில் விரைந்து பறக்கும் போது பல ஜீவராசிகள் அழிந்தன நட்சத்திரங்கள் உதிர்ந்தன. பூமி சொர்க்கம் முதலியவற்றில் இந்த நகரங்கள் நிலைபெறும் போது தேவர்கள் மனிதர்கள் முனிவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாளடைவில் அசுரர்கள் தங்கள் பிறவிக் குணத்தை காட்டத் தொடங்கினர். அவர்கள் தங்கள் சக்தியை பயன்படுத்தி தேவர்கள் முனிவர்கள் மனிதர்களுக்கு துன்பங்களை இழைத்தனர். இதனால் அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள். ஒரு கட்டத்தில் அனைவரும் பிரம்மா விஷ்ணு இருவரிடமும் சென்று தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அவர்கள் தேவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானை சரணடைந்தனர்.
சிவபெருமான் அந்த அசுரர்களை அழிக்க ஒவ்வொருவரும் தங்கள் ஆற்றலில் பாதியை அளித்தால் மட்டுமே முடியும் என்று கூறினார். இதற்கு தேவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதன்படி அனைத்து சக்திகளையும் திரட்டி வைதீகத் தேரை உருவாக்கப்பட்டது. அதனை பிரம்மதேவன் ஓட்ட முடிவானது. மேரு மலையை வில்லாக்கி வாசுகி என்ற நாகத்தை நாணாக்கி திருமாலை அம்பின் தண்டாக்கினர். வாயுவை அம்பின் அடிப்பாகமாகவும் அக்னியை அம்பின் நுனிப்பாகமாகவும் செய்தனர். இப்படி சக்தி வாய்ந்த வில் அம்பை தன் கையில் ஏந்திய சிவன் அசுரர்களின் கோட்டையை நோக்கி குறி வைத்தார். அப்போது நம்முடைய பங்களிப்பு இல்லாமல் இது நடக்காது என பிரம்மாவும் விஷ்ணுவும் கர்வம் கொண்டனர். அதை தன் ஞானக் கண்ணால் உணர்ந்த சிவன் சத்தமாக சிரித்தார். அந்த சிரிப்பே ஆயுதமாக மாறி எவரது துணையும் இன்றி மூன்று அசுரர்களையும் கோட்டையையும் எரித்து சாம்பலாக்கியது. அசுரர்களும் மாண்டுபோனார்கள். இதைக் கண்ட திருமாலும் பிரம்மனும் தங்கள் கர்வத்தை கைவிட்டனர். இருப்பினும் அவர்கள் செய்த சிவ நிந்தனையால் பாவம் வந்து சேர்ந்தது. அந்த பாவத்தைப் போக்க திருமாலும் பிரம்மாவும் சிவனிடமே வழிகாட்டும்படி வந்து வேண்டி நின்றனர். இருவரையும் பார்த்த சிவன் காவிரிக் கரையில் புன்னாகவனம் எனப்படும் புன்னை மரக்காட்டில் ஒரு மரத்தடியில் லிங்க ரூபமாய் நான் இருக்கிறேன். அங்கு வந்து என்னை பூஜித்து விமோசனம் பெறுங்கள் என்று அருளினார். அதன்படி திருமாலும் பிரம்மனும் இத்தலம் வந்து லிங்கத் திருமேனியைத் தேடினர். அப்போது வேடம் உருவில் வந்த சிவபெருமான் அவர்களை எதிர்கொண்டு புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார்.
பிரம்மனும் விஷ்ணுவும் மீண்டும் ருத்ரமூர்த்தியை வேண்டி தாங்களே லிங்கத்திற்கு பூஜை செய்து காட்டியருள வேண்டும் என்றனர். அதன்படி சிவனே வந்து இத்தல லிங்கத் திருமேனியை பூஜித்து வழிபடுவதற்கான வழியைக் காட்டியருளினார். இப்படி வழி (மார்க்கம்) காட்டி பூஜையையும் உடனிருந்து செய்தமையால் (சகாயம்) மார்க்கசகாயேசுவரர் என்று அழைக்கப்பட்டார். இதையே அழகுத் தமிழில் வழித்துணைநாதர் வழிகாட்டி வள்ளல் என்று பெயர் பெற்றார். சிவன் பிரம்மன் திருமால் ஆகிய மூவரும் புண்ணாகீஸ்வரரை பூசித்ததால் இத்தலத்திற்கு மூவரூர் (மூவர் ஊர்) என்று பெயர் வந்தது. அதுவே நாளடைவில் மூவலூர் என்று மாறிப்போனது.
மகிஷாசுரன் என்ற அசுரன் தவம் செய்து பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணத்தால் எந்த ஆண்களாலும் தன் உயிருக்கு ஆபத்து வரக் கூடாது என்ற வரத்தை சிவபெருமானிடம் கேட்டுப் பெற்றான். பின்னர் தேவர்களுக்கும் மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்தான். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். மகிஷாசுரனை வதம் செய்ய பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்த சிவன் அன்னை பார்வதியிடம் செல்லுமாறு கூறினார். அதன்படி தேவர்கள் அனைவரும் அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்கு செவிமடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம் அழகிய முகமாக மாற மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால் அழகிய முகத்தையும் திருவுருவத்தையும் பெற்றாள். அதோடு மீண்டும் தவம் இயற்றி இறைவனை மணந்தார்.
இக்கோவில் 10 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டது. இத்தலத்தில் 1925 ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கை மூலம் எட்டு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அந்த கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு திருமூவலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விக்கிரம சோழ தேவன் காலம் கிபி1120 மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் கிபி1189 மற்றும் மூன்றாம் ராஜேந்திர சோழன் கிபி 1225 காலக் கல்வெட்டுகளில் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட கொடை பூஜைகள் செய்ய வழங்கப்பட்ட பொற் காசுகள் இறைவன் இறைவிக்கு வழங்கிய ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளன. இறைவன் மூவலூர் உடைய நாயனார் என்று அழைக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் இருக்கிறது. மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு கிழக்கே திருவிளநகர் துறைகாட்டும் வள்ளல். தெற்கே பெருஞ்சேரியில் மொழிகாட்டும் வள்ளல். மேற்கே மூவலூரில் வழிகாட்டும் வள்ளல். வடக்கே உத்திர மாயூரத்தில் கைகாட்டும் வள்ளல் எனப்படும் நான்கு திசை வள்ளல்களில் ஒருவராகவும் இத்தல இறைவன் திகழ்கிறார். இத்தலத்து இறைவனை பிரம்மா விஷ்ணு துர்க்கை சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். மகா சிவராத்திரியின் நான்காம் காலத்தில் நவ நாகங்களும் ரத சப்தமியில் சப்தமாதர்களும் வழிபட்டுப் பேறுபெற்றனர்.
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த மனிதர்களின் உலக வாழ்வு எக்காலத்திலும் என்றென்றும் விதி வசம்தான் என்பது எம் போன்ற மகான்கள் அறிந்த ஒன்றுதான். இவைகளைத் தாண்டி மனிதர்களை ஓரளவு மெல்ல மெல்ல மேலேற்ற கடைத்தேற்ற கரையேற்ற இறைவழி அறவழி அழைத்து செல்லவே மகான்கள் காலகாலம் போராடுகிறார்கள். ஆயினும்கூட யாம் அடிக்கடி இயம்புவது போல பெரும்பாலான பொழுதுகளில் விதிதான் ஜெயித்துக் கொண்டேயிருக்கிறது. இதுபோல் சராசரியாகவே வாழ்ந்து உண்டு உறங்கி ஏதும் தெரியாமல் வெறும் புலன் கவர்ச்சிக்கு மயங்கி வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகளைத் தாண்டி இறை என்ற ஒன்று இருக்கிறது என்று நம்புகின்ற கூட்டம் ஒருபுறம். இந்த இரண்டையும் தாண்டி ஒரு குருவை நாடுவோம். குருவை தொட்டு தொட்டு மேலேறுவோம் என்று வாழ்கின்ற கூட்டம் ஒருபுறம். இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ஓலைகளிலே சித்தர்கள் வாக்கு உரைக்கிறார்கள். அதனைக் கேட்டு வாழ்க்கையின் துன்பங்களை நீக்கிக் கொள்வோம். அதோடு உண்மையான ஞான வாழ்வையும் அறிந்து கொள்வோம் என்று இருக்கின்ற கூட்டம் ஒருபுறம். எல்லாவற்றையும்விட இதில் எந்த நிலையில் ஒரு மனிதன் நின்றாலும் அவன் மதியில் விதி அமர்ந்து கொண்டு ஆட்டுவிக்கிறது என்பது உண்மை. அந்த விதியை மாற்றத்தான் யாங்களும் (சித்தர்களும்) எங்கள் நிலையிலிருந்து மிக மிகக் கீழே இறங்கி பல்வேறு தருணங்களில் பல்வேறு விதமான மனிதர்களுக்கு இங்கு ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) ஏறத்தாழ 9 ஆண்டுகாலம் எந்தவிதமான (பாவ ஆத்மா புண்ணிய ஆத்மா என்ற) கணக்கினையும் பார்க்காமல் இன்னும் கூறப்போனால் புண்ணியம் அதிகம் செய்த செய்கின்ற ஆத்மாக்களை விட பாவங்களை அதிகம் சுமந்து கொண்டிருக்கின்ற ஆத்மாக்களுக்கும் சேர்த்து வாக்குகளை விதவிதமாக உரைத்திருக்கிறோம். ஆயினும் கூட எப்படி ஒரு செவிடன் செவியிலே எதைக்கூறினாலும் ஒன்றும் நுழையாதோ அதைப் போலதான் நடந்து கொண்டிருக்கிறது.
இயல்பாக சாத்வீகமாக எதையும் நல்லவிதமாக பார்க்கக் கூடிய தன்முனைப்பு குறைந்த ஆத்மாக்களை கரையேற்றுவது என்பது எளிது. அதாவது ஏற்கனவே நன்றாக படிக்கக்கூடிய மாணாக்களை மேலும் நன்றாக படிக்க வைப்பது போல. ஆனால் சற்றும் கல்வி ஏறாமல் திணறிக் கொண்டு இருக்கக் கூடிய கல்வி என்றாலே வெறுக்கக் கூடிய ஒரு மாணவனை மேலேற்றுவதுதான் ஆசிரியருக்கு சவாலாக இருக்கும். அந்த வழிமுறையையும் நாங்கள் கையாண்டு இங்கு வருகின்ற பலருக்கு தராதரம் பார்க்காமல் நாங்கள் வாக்கைக் கூறியது உண்டு. ஆயினும் கூட வழக்கம் போல் விதி வென்று அவர்கள் (விதிப்படி) வாழத்தான் அவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது. இறைவன் தந்த அறிவை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் பயன்படுத்தாத மனிதன் எந்த இடத்தில் பயன்படுத்தக் கூடாதோ அந்த இடத்தில் பயன் படுத்துகிறான். சதாசர்வகாலம் மிருகவெறி கொண்டு அலைவதும் தன் முனைப்பும் ஆணவமும் கொண்டு அலைவதும் நல்ல புண்ணியம் செய்கின்ற ஆத்மாக்கள் மனம் நோக நடந்து கொள்வதும்தான் இங்கு வருகின்ற பெரும்பாலான ஆத்மாக்களின் இயல்பாக இருக்கிறது. கடும் சினமும் ஆணவமும் கட்டாயம் உலக வாழ்க்கையை மட்டுமல்ல மேலுலக வாழ்க்கை கூட தராது தடுத்து விடும் என்பதை உணரவில்லை. உணர்ந்தாலும் அதை பெரிதாக யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
நன்கு கடைபிடிக்கப்பட்ட பிறருடைய தர்மத்தைக் காட்டிலும் குணக்குறைகள் இருந்தாலும் தன்னுடைய தர்மம் மிகவும் உயர்ந்தது. ஸ்வதர்மத்தைக் கடைபிடிப்பதில் இறப்பது மேன்மையை தரும். பிறருடைய தர்மம் பயத்தைக் விளைவிக்கும்.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
அரசர்களுக்கு உண்டான தர்மம் என்றும் வியாபாரம் செய்பவர்களுக்கான தர்மம் என்றும் விவசாயம் செய்பவர்களுக்கான தர்மம் என்றும் ஒவ்வொரு தொழிலுக்கு உண்டான தர்மங்கள் பல இருக்கின்றன. அந்தந்த தொழிலை செய்பவர்கள் அந்தந்த தொழிலுக்கு உண்டான தர்மங்களை கடை பிடிக்க வேண்டும். பிறருடைய தொழிலுக்கான தர்மத்தை சிறந்ததாக இருக்கிறதே என்று தன் செய்யும் தொழிலுக்கு ஏற்ப பயன் படுத்தக் கூடாது. தன்னுடைய தொழிலுக்கு உண்டான தர்மத்தை கடைபிடிப்பதில் தன்னிடம் சில குணக்குறைகள் இருந்தாலும் தன் தொழிலுக்கான தர்மமே உயர்ந்தது. பிறர் செய்யும் தொழிலுக்கான தர்மத்தை கடைபிடித்தால் அதனால் பல பாவங்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது வரலாம். மேலும் தவறு செய்கிறோமோ என்ற பயத்தையும் உண்டு பண்டும். தன்னுடைய தொழில் தர்மத்தை விட்டு பிறர் செய்யும் தொழிலுக்கான தர்மம் சிறந்தது என்று தன் தர்மத்தை விடுவதை விட இறப்பதே மேன்மையை தரும்.
கேள்வி: தவம் பயின்றால் வினை அகலும் நோய் அகலும் என்று எல்லா மகான்களும் சொல்கிறார்கள். ஆனால் ரமண மகரிஷி இறுதிக் காலத்தில் நோய் வாய்ப்பட்டது ஒரு கேள்விக்குறியாக உள்ளது:
தவம் என்றால் என்ன என்று நீ எண்ணுகிறாய்? மற்றவர்கள் என்ன எண்ணுகிறார்கள்? (மனம் உயிரை நோக்கி உற்று கவனித்து அது என்ன நிலைக்கு செல்கிறது என்பதை கவனிப்பது தவம்). தவம் என்பதில் ஒரு பகுதியை நீ கூறுகிறாய். வள்ளுவன் என்ன கூறியிருக்கிறான்?. உற்ற நோய் நோன்றல் பிற உயிருக்கு தீங்கு செய்யாமை அற்றே தவத்திற்கு உரு என்று கூறியிருக்கிறான். ஒரு மனிதன் தனக்கு ஏற்படும் துன்பங்களையெல்லாம் சகித்துக் கொள்ளவும் பிறருக்குத் துன்பம் செய்யாமல் வாழ முயற்சி செய்வதும் தானப்பா மெய்யான தவம். கானகத்தில் (காட்டில்) சென்று பத்மாசனம் இட்டு புருவ மத்தியை நோக்குவது மட்டும் தவம் அல்ல. முதலில் இந்த இக உலகிலே வாழ்க்கையை நேர்மையாக வாழ வேண்டும். நேர்மையாக வாழ்ந்து தனக்கு எதிர்படும் இன்னல்களையெல்லாம் சகித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு ஒருவன் புன்னகையோடு பிறரை எதிர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். உன்னதமான தவம் என்பதே அதுதானப்பா. எங்கோ சென்று செய்வது மட்டும் தவம் அல்ல. இந்த தவத்தை முதலில் நன்றாக செய்தால் அந்த தவம் தானாகவே கைவரப் பெறும்.
கேள்வி: தாங்கள் இங்கேயே இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்க வேண்டும். இங்கு மீண்டும் மீண்டும் இதே போல் சத்சங்கம் அருள்வாக்கு நடக்க வேண்டும்:
இறைவன் கருணையால் இறைவன் அருளாணைக்கு ஏற்ப யாம் இது போல தொடர்ந்து நல்விதமாய் சேய்களுக்கு வழிகாட்ட சித்தமாய் இருக்கிறோம். இறைவன் கருணையாலே பலருக்கு ஒருவிதமான குழப்பம் உண்டு. சில சமயம் ஒரு சாதாரண வினாவிற்கு கூட பின்னர் உரைக்கிறோம் என்று கூறுகிறார்களே? என்று. கிரக நிலையும் கேட்கின்ற அல்லது குழுமியுள்ளவர்களின் விதி அம்சமும் எதற்கெல்லாம் சாதகமாக இருக்கிறதோ அதற்கு மட்டுமே ஜீவ அருள் ஓலையிலே வாக்கை உரைக்க வேண்டும் என்பது எத்தனையோ விதிகளில் ஒன்றாகும். அது மட்டுமல்லாமல் கேள்வி கேட்கின்ற மனிதனோ அல்லது மற்றவர்களுக்கோ அதனை புரிந்து கொள்ளக்கூடிய மனோ நிலை இல்லாத நிலையில் யாம் மெளனத்தையே கடைபிடிப்போம்.
கேள்வி: முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்களை பிரிக்க முடியாமல் சிலர் தடுமாறுகிறார்களே?
இறைவன் அருளால் இது குறித்து லோகாய மனிதனிடம் கேட்டால் நல்ல விதமான பதில் கூறுவானப்பா. எம்மிடம் கேட்டால் நாங்கள்(சித்தர்கள்) கூறுகின்ற பதில் மனிதர்களுக்கு எரிச்சலூட்டும் விதமாகத்தான் அமையும். முதலில் தன் வாரிசுகளுக்கு லோகாய ரீதியாக ஆஸ்தியை சேர்த்து வைப்பதையே நாங்கள் (சித்தர்கள்) தவறு என்று கூறுகிறோம். அப்படி அதை மீறி அதிக அளவு ஆஸ்தியோ பொருளோ பிள்ளைகளுக்கு வந்துவிட்டால் அவர்கள் அதனையெல்லாம் இயன்ற ஏழைகளுக்கு தாராளமாக ஈந்து (கொடுத்து) விடுவதே சிறப்பு. வேறு வழியில்லை. எந்த விதமான தொழிலும் இல்லை. எந்தவிதமான பணியும் இல்லை. எதையும் செய்வதற்கு என் உடலும் மனமும் ஏற்றதாக இல்லை என்பவர்கள் மட்டும்தான் பூர்வீக ஆஸ்தியிலிருந்து ஜீவனம் நடத்தலாம். இல்லையென்றால் அவ்வாறு செய்வதை யாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் கூறப் போனால் பூர்வீக ஆஸ்தி வராமல் ஏதாவது பிரச்சனைகள் இல்லத்தில் ஏற்பட்டால் மிகவும் நல்லது என்று எவன் ஒதுக்குகிறானோ அவனுக்கு இறையருள் என்பது விரைவில் கிட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவனவனும் நேர்மையாக ஈட்டுவதே மெய்யான பொருளாகும். அப்படி குழந்தைகளுக்கு எதையாவது விட்டுச் செல்ல வேண்டுமென்றால் முடிந்தவரை குழந்தைகளுக்கு புண்ணியத்தை விட்டுச் செல்வதே ஈன்றோர்களின் கடமையாகும். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைகளைப் பார்த்து நீ நன்றாகக் கல்வி கற்று நன்றாக தனத்தை ஈட்டி என்னிடம் தா. அல்லது இவ்வாறு சேர்த்து வைத்துக் கொள் என்று ஏதோ அறிவுரை கூறுவதாக நினைத்துக் கொண்டு கூறுகிறார்கள். உண்மையில் மெய்யான செல்வம் என்பது புண்ணியம் ஒன்றுதான். எனவே செல்வத்தை எப்படி நேரிய வழியில் ஈட்ட வேண்டுமோ அப்படி ஈட்டி அதை தக்க மனிதர்களுக்கு அது போன்ற தெய்வீக காரியங்களுக்கு அள்ளித் தருவதுதான் நாங்கள்(சித்தர்கள்) காட்டுகின்ற வழியாகும்.
இவையெல்லாம் எங்களால் ஏற்க இயலாது. ககரம் (கோடி) லகரம் (லட்சம்) பூர்வீக ஆஸ்தி இருக்கிறது என்றால் அதை மனித ரீதியாக தீர்த்துக் கொள்ள மனிதர்கள் முயற்சி செய்ய வேண்டியதுதான். இதையும்மீறி வேறு வழியில்லை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று வேறு வழியில்லாமல் எம்மிடம் வருபவர்களுக்கு நாங்கள் (சித்தர்கள்) கூறுவது பைரவர் வழிபாடு ஒன்றுதான். முடிந்தவரை அன்றாடம் பைரவர் வழிபாடு செய்து பைரவர் மந்திரத்தை உருவேற்றி வந்தால் நியாயமான முறையிலே கிடைக்க வேண்டிய பங்கு கிட்டுமப்பா.
கேள்வி: தியானத்தின் போது இந்த உடல் நானல்ல மனம் நானல்ல என்று உணர்ந்த பின்பு எண்ணங்கள் எழா உணர்வில் வெற்றிடம் கிடைக்கிறது. ஆனால் சிலர் அந்த வெற்றிடம் என்பது வெறும் மனோலயம் மட்டுமே. அதுவே முடிவல்ல. அதற்கு மேற்கொண்டு சாக்ஷி என்ற ஒன்று உள்ளது என்று சொல்லப்படுவது பற்றி:
எண்ணங்களற்ற நிலையை நோக்கி செல்வதே ஒரு தனி மனிதனுக்கு மிகப்பெரிய சாதனைதான். அந்த நிலைக்கு சென்ற பிறகு அடுத்த நிலை என்ன? என்பதை இறைவனே உணர்த்துவார். எனவே எண்ணங்களற்ற நிலை என்பது மிக மிக உயர்ந்த உன்னத நிலையாகும். அதுதான் மனிதனுக்கு அமைதியைத் தருகின்ற மெய்யான சுகத்தைத் தருகின்ற ஒரு நிலையாகும். மனதை உள் நோக்கி ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப் பார்த்தால் அந்த மனதிலே என்ன இருக்கிறது? முழுக்க முழுக்க லோகாயம் மட்டும்தான் இருக்கும். அந்த லோகாயத்தை அவன் விட்டுவிட்டால் மனதிலே பெரும்பாலும் வெற்றிடம் இருக்கும். எனவே அதை மேலெழுந்தவாரியாக விடாமல் அழுத்தந்திருத்தமாக விடுவதற்குண்டான முயற்சியிலே மனிதன் இறங்கினால் கட்டாயம் அவன் ஒரு நல்ல மேல் நிலையை நோக்கி செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த நிலை தாண்டி இறை இருந்தாலும் இந்த எண்ணங்களற்ற நிலையை நோக்கி முதலில் செல்லத்தான் வேண்டும்.
கேள்வி: அத்வைதத்தை எப்படி நடைமுறைக்குக் கொண்டு வருவது?
எல்லாவற்றையும் சுருக்கமாக குறுக்கு வழியில் கூறுவதற்கு உண்மையில் வாய்ப்பு இல்லையப்பா. ஒரு வகையில் எல்லாம் எளிமை போல் தோன்றினாலும் இன்னொரு வகையில் மனிதனுக்கு எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஏன் என்றால் மனிதனின் மனம் முழுக்க தேகம் சார்ந்த விஷயமாகவே இருக்கிறது. கண் முன்னால் வைத்துக் கொண்டு இதனை விடு என்றால் மனிதனால் முடியாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் மேலேற வேண்டும். இதற்கு வேறு வழியில்லை. இதற்கு ஒரே வழி தொடர்ந்து பக்தி மார்க்கம் ஒன்றுதான் இக்காலத்தில்.