ராமாயணம் பால காண்டம் பகுதி -24

இமயமலையில் பனியில் அக்குழந்தை உறைந்து இறந்துவிடும் என ராவணன் நினைத்தான். ஆனால் அதற்கு மாறாக பனி உருகி கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் சொல்லப்பட்டு மிதிலை நகரை அடைந்து அங்கு ஆற்றங்கரையோரம் மண்ணில் புதைந்தது. மிதிலையை ஆட்சி புரிந்தவர் ஜனகர். மகப்பேறு வேண்டி தங்க கலப்பையால் வேதமந்திரம் சொல்லி நிலத்தை உழுத பொழுது ராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. அப்பெட்டியில் மகாலட்சுமி போல் குழந்தை இருந்தது. குழந்தையை பார்த்து மகிழ்ந்த பூமாதேவியின் அம்சமாக அக்குழந்தைக்கு சீதை என்று பெயர் சூட்டினார். சில மாதங்கள் கழித்து ஜனகருடைய மனைவி சுநைனா கருவுற்று ஒரு பெண் குழந்தையைப் பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பெயர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு இரண்டு பெண்கள் பிறந்தார்கள். அவர்களுக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்று பெயர் சூட்டினார்கள்.

ஒருநாள் நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். சீதை வீசிய பந்து ஜனகர் பூஜை செய்யும் சிவன் வில்லின் அடியில் மாட்டிக் கொண்டது. ஊர்மிளை பந்தை எடுத்துப் போடு என்றாள் சீதை. அக்கா பந்து சிவ வில்லின் கீழ் அகப்பட்டுக் கொண்டது. இதை அறுபதினாயிரம் பேர் சேர்ந்து தான் தூக்கமுடியும் என்றாள் ஊர்மிளை. ஒர் பந்தை எடுக்க அறுபதினாயிரம் பேர் வேண்டுமா என்று கூறி கொண்டு அன்னம்போல் நடந்து சென்று தன் இடது கையால் வில்லை எடுத்து மூலையில் வைத்துவிட்டுப் பந்தை எடுத்தாள். ஆனால் வில்லை பழையபடியே எடுத்து மேடையில் வைக்க மறந்துவிட்டாள் சீதை. மறுநாள் ஜனகர் காலையில் பூஜை செய்ய வந்தபோது வில் மேடையில் இல்லாமல் மூலையில் வைத்து இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். உடனே சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது என்று கேட்டார். சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை என்றும் சீதை தன் தங்கையுடன் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் என்று கூறினான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது என்று கேட்டார். சீதை, அப்பா நான் தான் வில்லை எடுத்து வைத்தேன் என்றாள். என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா என்று கூறிவிட்டு வில்லை இடது கையால் எடுத்து இருந்த இடத்தில் வைத்துவிட்டாள்.

ஜனகருக்கு இந்த நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. அறுபதினாயிரம் பேர் எடுக்க வேண்டிய இந்த வில்லை ஐந்து வயது சிறுமியான சீதை எவ்வித இடர்பாடுகள் இன்றி தன் இடது கையால் எடுத்து வைத்து விட்டாளே. இந்தப் பெண்ணை யாருக்கு திருமணம் செய்து கொடுப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தார். வில்லை வளைத்தவனுக்கே பெண்ணை திருமணம் செய்து தருவதாகப் பிரகடன் செய்தார். பலர் வந்து முயன்றும் வில்லை வளைக்க முடியாமல் தோல்வியுற்றார்கள். சீதையின் திருமணம் மங்களகரமாக நடைபெறும் பொருட்டு ஒரு சத்ரயாகம் தொடங்கினார் ஜனகர்.

இந்த யாகம் இனிது நடைபெற்று முடிந்தமையால் இப்போது சுயவரம் நடக்கும் யார் இந்த வில்லை முறிக்கின்றீர்களோ அவர்களுக்கே சீதையை மணமுடித்து கொடுப்பதாக ஜனகர் சபையில் அனைத்து மன்னர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

சுவாசம்

ஓர் நாட்டில் இருந்த ஞானி அனைவராலும் நேசிக்கப்பட்டார். அந்த நாட்டின் அரசியும் ஞானி மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். ஒருநாள் ஞானியை தரிசிக்க சென்றாள். ஞானியிடம் அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம் தான் வேண்டும் என்றாள். அவர் உடனே தனது பிச்சைப் பாத்திரம் கொடுத்து விட்டார். ராணி அவரிடம் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொடுத்தாள். இந்த பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன். உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி இப்பாத்திரம் என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன் என்றாள். அவரைப் பொறுத்தவரை பழைய பாத்திரமும் தங்கத்திலானா பாத்திரமும் ஒன்றுதான் எனவே அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டார்.

ஞானியிடம் தங்கத்திலான பாத்திரம் இருப்பதை திருடன் ஒருவன் பார்த்தான். ஒரு சந்நியாசியிடம் இருக்கும் பாத்திரத்தை திருடி விடவேண்டும் என்று முடிவு செய்தான். ஞானி ஒரு மிகவும் பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார். ஞானி சீக்கிரமே தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லாமல் பாத்திரத்தை எடுத்துகொண்டு சென்று விடலாம் என்று காத்திருந்தான். தங்க பாத்திரத்திற்காக திருடன் காத்திருப்பதை கண்ட ஞானி அவன் ஏன் காத்திருக்க வேண்டும் என்று தங்க பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. விலையுயர்ந்த பொருளை அவர் இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை. ஞானி அருகே சென்ற அவன் மிகவும் நன்றி சுவாமி. உங்களைப் போன்ற பற்றில்லாதவர்களும் இருக்கின்றார்கள் என்று இப்போது அறிந்து கொண்டேன். உங்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளலாமா என்று கேட்டான். அவன் கூறியதை கேட்டு சிரித்த அவர் என்னிடம் நீ வரவேண்டும் என்று தான் பாத்திரத்தை வீசினேன் அருகே வா என்றார்.

ஞானியின் பாதங்களை தொட்டு வணங்கிய திருடன் வாழ்க்கையில் முதன்முறையாக தெய்வீகத்தை உணர்ந்து பரவசத்தை அடைந்தான். நானும் உங்களைப் போல ஞானியாக மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான். இங்கேயே இப்போதே மாறலாம் என்றார். அதைக்கேட்ட திருடன் நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். நான் ஒரு திருடன் என்பது அனைவருக்கும் தெரியும். மூன்றுமுறை அரசரின் பொக்கிஷ அறைக்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். யாராலும் என்னை பிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நான் இப்போதே எப்படி ஞானியாக மாற முடியும் என்றான். ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இல்லாமல் இருட்டாக இருக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு தீபத்தை ஏற்றிக் கொண்டு வந்தால் அங்கிருக்கும் இருட்டு ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஆகவே நான் போக மாட்டேன் என்று சொல்லுமா. தீபத்தை கொண்டு போனதும் வெளிச்சம் அங்கே உடனே வந்துவிடும். அதுபோல் திருட்டு என்னும் இருட்டிற்குள் இருக்கும் உனக்குள் ஒரு வெளிச்சத்தை ஏற்றிக்கொள். வெளிச்சம் உனக்குள் வந்துவிடும் இப்போதே நீ ஞானியாகலாம் என்றார் ஞானி. திருடனால் புரிந்து கொள்ள முடிந்தது.

நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன் மூலம் நீ உனக்குள் வெளிச்சத்தை கொண்டு வர முடியும் என்றார். அதற்குவதிருடன் நான் என் திருட்டு தொழிலை விட வேண்டுமா எனக் கேட்டான். நீ எப்போதும் இருப்பது போல் உன் விருப்பப்படி செய்து கொள். ஒரு ரகசியத்தை நான் உனக்கு கற்றுத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன் விருப்பம் என்றார். இதை கேட்டு மகிழ்ந்த திருடன் ரகசியத்தை கற்றுத்தரும்படி கேட்டான். எந்த வேலை செய்வதாக இருந்தாலும் அப்போது நீ உன்னுடைய சுவாசத்தை கவனி உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ அப்போதெல்லாம் நீ உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும் போது வேறு யாருடைய வீட்டிற்குள் இரவில் நுழையும்போதும் உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும்போதும் வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும் போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே என்றார். மகிழ்ந்த திருடன் இது மிகவும் எளிதானதாக இருக்கிறதே. நான் எப்பவும் போல் இருக்கலாம் ஆனால் ஞானியாகி விடுவேன் என்று மகிழ்ச்சியுடன் ஞானியின் காலில் விழுந்து வணங்கி சென்றான்.

ஞானியை சில நாட்கள் கழித்து திருடன் பார்க்க வந்தான். நான் கடந்த பதினைந்து நாட்களாக திருட முயற்சி செய்தேன். நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால் என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக விழிப்போடு தன்னுணர்வோடு கவனமானவனாக இருக்கிறேன். அந்த நேரத்தில் வைரங்கள் கூட கூழாங்கற்களாக தெரிகிறது. நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான். நீ சொன்ன அந்த அமைதி மௌனம் ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் சுவாசத்தை கவனித்தக்கொண்டே இரு நீ ஞானியாகி விடுவாய். வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என நினைத்தால் சுவாசத்தை கவனிக்க மறந்து திருட்டு தொழிலை செய்து கொள். நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய் என்றார். உன் வாழ்வில் தலையிட நான் யார் என பதிலளித்தார். என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கு தீட்சையளியுங்கள் என்று திருடன் கேட்டான். அதற்கு ஞானி நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்று ஆசிர்வதித்தார். குருவின் காலில் விழுந்தான் சீடன்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -23

சீதை வரலாறு

பத்மாட்சன் என்ற அரசன் பரதகண்டத்தை ஆட்சி புரிந்து வந்தான். அவன் மகப்பேறு வேண்டி தவம் புரிந்தான். பத்மாட்சன் தவத்தின் பலனாக திருமால் அவன் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இப்பூவுலகத்தில் எனக்கு திருமகள் மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான். திருமால் ஒரு மாதுளம் கனியை பத்மாட்சனுக்கு கொடுத்து விட்டு மறைந்தார். அவன் மாதுளம் கனியை அரண்மனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பழம் பெரிதாக ஆரம்பித்தது. உடனே பழத்தை பிளந்தான் பத்மாட்சன். அதில் ஒரு பாதி வளம் நிறைந்த மாதுளம் முத்துக்களும் மற்றொரு பாதியில் குழந்தை இருப்பதை கண்டு பத்மாட்சன் மகிழ்ந்தான். பத்மாட்சன் அப்பெண்ணுக்கு பதுமை என்று பெயர் சூட்டினான். பதுமை என்றால் சிலை என்று பொருள். சில வருடங்கள் கழிந்தது. பதுமைக்கு திருமண வயது எட்டியது. பத்மாட்சன் தன் மகளுக்கு சுயம்வரம் வைத்தான். சுயம்வரத்துக்கு 56 சிற்றரசர்ககள் வந்தார்கள். பத்மாட்சன் சுயம்வர மண்டபத்தில் இருந்த மன்னர்களைப் பார்த்து வேந்தர்களே விண்ணில் உள்ள நீலநிறத்தை யார் தன் உடம்பில் பூசிக்கொள்கிறானோ அவர்தான் என் மகளுக்கு மாலை போட வேண்டும் இது என் மகளின் விருப்பமாகும் என்றான். இது முடியாத காரியம் என்பதால் தங்களுக்குள் வில் வாள் போட்டி அல்லது அறிவு திறன் தொடர்பான போட்டிகள் வைக்கும்படி கூறினார்கள். பத்மாட்சன் மறுக்கவே அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பத்மாட்சன் மீது போர் தொடுத்து அரண்மனைக்கு நெருப்பு வைத்தார்கள். அவர்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள அங்கு உள்ள நெருப்பில் விழுந்து தன்னை மறைத்துக்கொண்டாள். போரில் அனைவரையும் பத்மாட்சன் வெற்றி பெற்றான்.

சில நாட்கள் கழித்து நெருப்பில் இருந்து பதுமை வெளியே வந்தாள். தான் வளர்ந்த அரண்மனை தன்னால் மண்ணோடு மண்ணாகிப் போனதைக் கண்டு கலங்கினாள். தன்னால் உண்டான அழிவிற்கு பரிகாரம் வேண்டி திருமாலை வேண்டி தவமிருந்தாள். அப்போது அங்கு வானவீதியிலே சென்று கொண்டிருந்த ராவணன் பதுமையை பார்த்து காதல் கொண்டான். பதுமையை தனக்கு திருமணம் செய்து தருமாறு பத்மாட்சனிடம் கேட்டான். வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை உடம்பில் பூசிக்கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான். இதனால் கோபமுற்ற ராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். ராவணன் பத்மாட்சியைப் பற்றுவதற்கு முயன்றான். அவள் தன்னை மீண்டும் நெருப்புக்குள் மறைந்துக்கொண்டாள். இதனால் கோவம் கொண்ட ராவணன் தீயை அணைத்து அதற்கடியில் தோண்டிப் பார்த்தான்.

அங்கு ஒரு பெரிய மாணிக்க கல்லை கண்டு எடுத்தான். அதனை மண்டோதரிக்கு தரலாம் என்று பெட்டியில் வைத்துக் கொண்டான். மண்டோதரி உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்துள்ளேன் என்று கூறி பெட்டியை திறந்தான். அப்பெட்டியில் பசுமை குழந்தை வடிவில் இருந்தாள். அப்போது பேசிய குழந்தை ராவணனே என் தந்தையை கொன்ற உன்னை அழிக்காமல் விடமாட்டேன். அதற்கானகாலம் விரைவில் வரும் காத்திரு என்றது.
இதனை கண்ட ராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் மாயக்கன்னி பல வகையான வடிவம் எடுக்கிறாள் என்று கூறி அவளை கொன்றுவிட ராவணன் வாளை ஓங்கினான். மண்டோதரி கணவனின் கரத்தைப் பற்றி தடுத்தாள். இந்த குழந்தையை வெட்ட வேண்டாம். பல வடிவங்கள் எடுத்த இவள் பத்ரகாளியாகயும் மாறி தங்களை கொன்றுவிடுவாள். இக்குழந்தையை பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்துவிடுங்கள் என்று கூறினாள். ராவணன் அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயமலையில் விட்டுவிடத் தீர்மானித்து கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தில் பனிபடர்ந்த ஒரு பகுதியில் பனிப்பாறைகளுக்கு நடுவில் வைத்துவிட்டான்.

கடவுள்

கடவுள் தான் இருப்பதை ஏன் மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை என்று குருவிடம் சீடன் கேட்டான். குரு ஒரு கதை சொன்னார்.

கடவுளிடம் ஒரு மனிதன் கடவுளே என்னோடு பேசுங்களேன் என்றான். அப்போது குயில் ஒன்று பாடியது. அதைக் காதில் வாங்காத அவன் கடவுளே என்னோடு பேசுங்களேன் என்று உரத்த குரலில் கத்தினான். உடனே உரத்த இடியோசை எழுந்தது அதையும் பொருட்படுத்தாத அவன் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை உன் தரிசனத்தை கொடு என்று இறைவனிடம் கேட்டான். சுடர்விட்டுப் பிரகாசித்த படி வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது நட்சத்திரத்தை கவனிக்காத அவன் தரிசனம் கொடுக்க மாட்டேன் என்கிறாய். பரவாயில்லை. ஏதாவது ஓர் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டு என்றான். கடவுள் மெல்ல கீழே இறங்கி பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார் அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு
நடந்தபடி சொன்னான். கடவுள் இல்லை. கடவுள் இருந்திருந்தால் என்னோடு பேசி இருப்பார். அவரின் குரலை கேட்டிருப்பேன். கடவுள் இருந்திருந்தால் தரிசனம் கொடுத்திருப்பார். நன்றாக பார்த்திருப்பேன். கடவுள் இருந்திருந்தால் அற்புதத்தை காட்டியிருப்பார். நன்றாக ரசித்திருப்பேன். எதுவுமே நடக்கவில்லை ஆகவே கடவுள் இல்லை என்றான்

கதையைக் கேட்ட சீடன் சொன்னான் புரிந்தது குருவே கடவுள் தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் தான் புரிந்து கொள்வதில்லை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

சிவனுக்கு உகந்த வில்வம்

  1. வில்வம்
  2. நொச்சி வில்வம்
  3. முட்கிளுவை வில்வம்
  4. விளா வில்வம்
  5. மாவிலங்கை வில்வம்
  6. மஹாவில்வம்.

இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள் முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும். இவைகளால் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாபங்கள் விலகும்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -22

சாதானந்தர் ராமரிடம் கூறிய விஸ்வாமித்ரரின் வரலாற்றுக்கு சாட்சியாக விஸ்வாமித்ரரே அமர்ந்திருந்தார். மேனகையினால் தன் தவ பலன் போனது. அகங்காரத்தினால் திரிசங்கு சொர்க்கத்தை உருவாக்கியது. வசிஷ்டரை கொல்ல முயற்சித்தது என தன்னுடைய குறைகளை அனைவரும் தெரிந்து கொண்டார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் வேறு யாருடைய வரலாற்றை கேட்பது போல் அனைத்தும் கடந்த பிரம்மரிஷி நிலையில் எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியாக அமர்ந்திருந்தார் விஸ்வாமித்ரர். அவரின் வரலாற்றை கேட்ட ராமரும் லட்சுமனனும் விஸ்வாமித்ரரை வணங்கி தங்கள் மரியாதையை செலுத்தினார்கள். பின் அனைவரும் ஓய்வெடுக்க சென்றனர்.

காலையில் இடி இடிப்பது போல் முரசொலிக்க இந்திரலோகம் போலிருந்த மணி மண்டபத்தில் யாகசாலையில் அனைவரும் சந்தித்தனர். ராம லட்சுமனனின் தந்தையை பற்றி சொல்லுங்கள் என்று விஸ்வாமித்ரரிடம் ஜனகர் கேட்டார். சூரிய குலத்தின் முதல் மன்னனான மனுவின் வழி வந்தவர்கள் இவர்கள். பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் பசி என்னும் துயரம் நீங்கி வாழ்வதற்கும் பூமியில் எல்லா வளமும் பெருகும்படி ஆட்சி செய்த புருது மன்னனும் இவர்கள் குலத்தவரே ஆவார். பாம்பினை படுக்கையாக கொண்ட திருமாலின் திருவரங்கத்தை நமக்கு தோற்றுவித்து தந்த இஷ்வாகு மன்னனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இந்திரனையே வாகனமாகக்கொண்ட காகுத்தன் இவர்கள் குலத்தவரே ஆவார். புலியும் பசுவும் ஒரே நீர் நிலையில் நீர் அருந்துமாறு அறத்தோடு ஆட்சி செய்த மந்தாதா என்னும் அரசனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இந்திரனுக்குரிய நகரமான அமராவதியை அசுரர்களிடம் இருந்து மீட்டு கொடுத்த திலீபன் அரசனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இவர்கள் குலத்தவர்களின் பெருமையை பல தலைகளுடைய ஆதிஷேசனாலும் சொல்லமுடியாத பெருமை வாய்ந்த குலம் இவர்களுடையது. அரசர்களில் பெருமை வாய்ந்த தசரத சக்ரவர்த்திக்கும் கௌசலைக்கும் மகனாக பிறந்தவன் ராமன். தசரத சக்ரவர்த்திக்கும் சுமித்ரைக்கும் மகனாக லட்சுமனனும் பரதனும் பிறந்தார்கள். தசரத சக்ரவர்த்திக்கும் கைகேயிக்கும் பிறந்தவன் பரதன். இங்கு ராமனும் லட்சுமனனும் இருக்கின்றார்கள் என்று ராமரின் குலத்தை பற்றி யாகத்திற்கு வந்த அனைவரும் அறியும்படி ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார்.

யாகம் சிறப்பாக நிறைவடைந்தது. யாகம் நிறைவடைந்ததும் சீதாவிற்கு பொருத்தமான வாழ்க்கை துணைவனை தேடி திருமணம் செய்யவேண்டும் என்று ஜனகர் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்தார். அதன்படி யாகசாலையில் இருந்த மன்னர்கள் அனைவரும் அரண்மனை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அரண்மனை மண்டபத்தில் அனைத்து அரசர்களும் அமர இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுயவரப்போட்டி நடத்தி சீதையின் திருமணம் செய்யப்போவதாக ஜனகர் அறிவித்தார்.

இறைநம்பிக்கை

சீடன் ஒருவன் குருவிடம் இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா என்று சந்தேகம் கேட்டான். சமயம் வரும் போது சொல்கிறேன் என்றார் குரு. சில நாட்கள் கழித்து அந்தச் சீடன் ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர் சீடனே பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா? எனக்கேட்டார். குழம்பிய சீடன் குருவே தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான்.

இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய் இது உன் பேச்சை இந்த பசு கேட்கும் ஆனாலும் நீ ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய் என்றார். கயிறு இல்லை என்றால் பசு ஓடிவிடும் ஆகையால் கயிற்றால் கட்டி கொண்டு செல்கிறேன் என்றான். அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லையா என்று கேட்டார். அதற்கு சீடன் குருவே பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன் என்றாலும் அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன் என்றான்.

உன்னைப் போலத்தான் இறைவனும் மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது அன்றைய கேள்விக்குப் பதில் இதுதான் குரு சொல்ல இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தான் சீடன்.

கருத்து:

பிறந்த பசு கன்று ஒன்று தன்னைப் பெற்ற பசுவிடம் மிகுந்த பாசம் இருந்தாலும் விளையாட்டால் துள்ளித் திரிந்து தூரத்திற்கு ஓடும். அக்கன்றைப் பெற்ற பசுவோ மனம் உருகி அதைப் பிரிந்து விடாமல் அதன் பின்னே தொடர்ந்து ஓடி அதைச் சுற்றிச்சுற்றி வரும். அப்பசுவின் நிலையே இறைவன் நிலை. சிவ சிவ என்று தெய்வத்தின் நாமத்தின் பெயரை மனம் உருகிச் சொல்லுபவர்கள் பின்னே அச்சிவன் செல்வான்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -21

விஸ்வாமித்ரர் வேள்வியை ஆரம்பித்தார். இதனைக் கண்டு அச்சமடைந்த இந்திரன் விஸ்வாமித்திரர் முன்பாக வந்து நின்றான். அவனைக் கண்டு கொள்ளாமல் விஸ்வாமித்ரர் தன் வேள்வியை செய்து கொண்டு இருந்தார். விஸ்வாமித்ரரே தங்களின் புதிய சொர்க்கம் உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள். புதிய சொர்க்கத்தால் பல்வேறு குழப்பங்கள் உருவாகும் என்றான். அதற்கு விஸ்வாமித்ரர் திரிசங்கு மானுட உடலுடன் சொர்க்கம் செல்ல விரும்புகின்றான். நானில்லாத வேளையில் என் குடும்பத்துக்கு உணவளித்து காப்பாற்றிய அவனது விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை ஆகவே நீ அவனை சொர்க்கத்தில் அனுமதி இல்லையென்றால் புதிய சொர்க்கத்தை உருவாக்குவேன் என்று விஸ்வாமித்திரர் தனது தவ வலிமையை பயன்படுத்தி திரிசங்குவிற்காக என்றே புது சொர்க்கத்தை படைத்துவிட்டார். திரிசங்கு தான் செய்த தவறினால் வசிஷ்ட மகரிஷியால் சாபம் பெற்றவன். அவனுடைய பாவங்கள் தீராமல் அவன் சொர்க்கம் வர முடியாது என்றும் புதிய சொர்க்கம் வேண்டாம் என்றும் இந்திரன் கேட்டுக்கொண்டார்.

விஸ்வாமித்திரர் இந்திரனிடம் திருசங்குவிடம் சொர்க்கத்திற்கு அனுப்புவதாக வாக்கு கொடுத்துவிட்டேன். அதன்படி புதிய சொர்க்கத்தையும் படைத்துவிட்டேன். சொர்க்கத்திற்கான அனைத்து அம்சங்களும் அங்கு இருந்தாலும் இப்போது தலைகீழாக தொங்கும் திரிசங்கு அங்கும் தலைகீழாகவே இருந்து தனித்தே வாழ்வான். தலைகீழாக தனித்து இருப்பவனால் சொர்க்கமாக இருந்தாலும் பலகாலம் தொடர்ந்து வாழ முடியாது. அதனால் சில நாட்களில் திரிசங்குவிற்கு பூலோக ஆசைகள் தோன்றும். அப்போது அவன் மீண்டும் பூமியில் பிறந்துவிடுவான். அப்போது இந்த சொர்க்கம் மறைந்துவிடும் என்று இந்திரனை சமரசம் செய்தார் விஸ்வாமித்ரர். பிரம்மரிஷி பட்டம் பெற்றாலும் முதல் முறையாக மேனகையிடம் தனது தவ வலிமையை இழந்த விஸ்வாமித்ரர் இரண்டாவது முறை தவம் செய்து பெற்ற தவவலிமையை இப்போது தனது அதிகார ஆணவத்தினால் புதிய சொர்க்கத்தை உருவாக்கியதில் தவ வலிமைகள் அனைத்தையும் இழந்து விட்டார். வசிஷ்டர் தன்னை பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும் என்று மீண்டும் தவம் செய்து தவவலிமை பெற்றார்.

வசிஷ்டர் தன்னை பிரம்பரிஷி என்று ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்கின்ற கோபத்துடனும் ஆணவத்துடனும் ஒரு கட்டத்தில் அவரைக் கொல்லவும் துணிந்தார் விஸ்வாமித்ரர். வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி இதை அறிந்து தன் கணவர் வசிஷ்டரிடம் விஸ்வாமித்திரரை பிரம்மரிஷி என்று கூறி விடும்படி ஆலோசனை வழங்கினாள். வசிஷ்ட மகரிஷி அருந்ததியிடம் நான் விஸ்வாமித்திரரின் பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் பயந்துவிடவில்லை. அவர் மேல் கொண்ட பேரன்பினாலேயே அவரை பிரம்மரிஷி என்று மனமார ஏற்றுக்கொள்வதுடன் எல்லோர் முன்னிலையிலும் இதைக் கூறுவேன் என்றார். வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தின் வெளியில் அவரைக் கொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் செவிகளில் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் விழுந்தன. அவை விஸ்வாமித்திரரின் ஆணவம், அகந்தை, கோபம் எனும் சத்திரிய குணங்களைச் சுக்குநூறாக உடைத்தன. தன்மீது அன்பு கொண்ட வசிஷ்டரைக் கொல்ல நினைத்ததை எண்ணி மனம் பதைத்து கண்ணீர் மல்க தன் பாவங்களை வசிஷ்டரின் பாதங்களில் சமர்ப்பித்துக் கதறினார். விஸ்வாமித்திரரை வாரி அணைத்துக் கொண்ட வசிஷ்டர் விஸ்வாமித்திரரை ஆசிர்வதித்து பிரம்மரிஷி என்று அழைத்து வாழ்த்தினார். விஸ்வாமித்திரரின் வாழ்க்கை முழுமையாக மாற்றப்பட்டு விட்டது. ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை விஸ்வாமித்திரர் தான் இயற்றினார். இப்போது அவர் முழுமையடைந்த பிரம்மரிஷியாக உலக நன்மைக்காக வேள்விகள் செய்து கொண்டு தற்போது இங்கே இருக்கிறார் என்று விஸ்வாமித்ரரின் வாழ்க்கை வரலாற்றை ராமரிடம் சொல்லி முடித்தார் சதாநந்தர்.

அமைதி

பெரிய அரச வம்சமத்தை சேர்ந்த புத்தர் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியானார். ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும் கையோட்டையும் பார்த்த மக்கள் சிரித்தார்கள். கேலி செய்து அவர் மீது கல் வீசினார்கள். அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக் காரனைப்போல திரிகிறாயே என்று கேலி செய்கிறார்கள். புத்தரிடம் எந்த சலனும் இல்லை. மக்களின் நீண்ட நேர கேலிக்கு பிறகு இறுதியில் குற்ற உணர்வு உண்டாயிற்று. புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து சன்னியாசியே நாங்கள் இவ்வளவு அவமானப் படுத்தியும் நீங்கள் அமைதியுடன் ஆனந்தமாக இருக்கின்றீர்கள். எவ்வாறு தங்களால் இப்படி இருக்க முடிகிறது என்று கேட்டார்கள்.

அமைதியாக அவர்களை பார்த்த புத்தர் நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர். நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன. அதனால் அவற்றை நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார். யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்கே அந்த இனிப்பு சொந்தம் என்றனர் மக்கள். இப்போது நீங்கள் செய்த அவமானங்களையும் நான் ஏற்கவில்லை அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் என்று கேட்டார் புத்தர். எங்களுக்குத்தான் என்றார்கள் மக்கள். சரி நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்து கிளம்பினார் புத்தர்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -20

வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டான் சத்தியவிரதன். ஆனால் மேலும் பசுவை கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால் மேலும் பல பிறவிகள் எடுப்பாய் என்று சாபமிட்டு சென்று விட்டார் வசிஷ்டர். வசிஷ்டரின் கொடுத்த சாபத்தினால் சத்தியவிரதன் சாம்பல் பூசப்பட்ட உடலுடன் இரும்பு அணிகலன்களும் கருப்பு ஆடை அணிந்து திரிசங்கு என்ற பெயரில் உருமாறினான். பின்பு விஸ்வாமித்திரரின் குடும்பத்தினரைச் சந்தித்து வசிஷ்டர் தனக்கு அளித்த சாபம் பற்றி கூறி அதன் பிறகும் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தேடிக் கொண்டு வந்து கொடுத்து அந்தக் குடும்பத்தினரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில் விஸ்வாமித்திரர் தனது கடுமையான தவத்தால் பல வரங்களைப் பெற்றுத் திரும்பினார். அப்போது அவருக்கு பஞ்சத்தால் தன் குடும்பம் அடைந்த கஷ்டமும் சத்தியவிரதன் உதவி செய்ததும் அவனுக்கு சாபம் கிடைத்ததும் தெரியவந்தது. விஸ்வாமித்திரர் சத்தியவிரதனிடம் வசிஷ்டர் கொடுத்த சாபத்திலிருந்து உன்னை என்னால் விடுவிக்க முடியாது. ஆனால் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியை என்னால் காட்ட முடியும் என்றார்.

சத்தியவிரதனோ வசிஷ்டரின் சாபத்திலிருந்து விடுபடுவதை விட எனக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. தாங்கள்தான் எனது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றான். வசிஷ்டர் எனக்குச் சாபம் கொடுப்பதற்கு முன் நான் பசுவைக் கொன்று தின்றதால் ஏற்பட்ட பாவத்தால் இந்தப் பிறவியில் சொர்க்கம் செல்ல முடியாது என்றும் பசுவைக் கொன்று தின்ற பாவத்திற்கு நான் இன்னும் பல பிறவிகள் எடுக்கவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு இந்தப் பிறவியிலேயே மானிட உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று விருப்பம். என் ஆசையை நிறைவேற்றி வையுங்கள் என்று சொல்லி விஸ்வாமித்திரரை வணங்கினான். வசிஷ்ட முனிவர் மீது பொறாமை கொண்டிருந்த விசுவாமித்திரர் சத்தியவிரதா நான் செய்த தவ வலிமையால் பெற்ற வரங்களைக் கொண்டு உன் விருப்பப்படி இந்த உடலுடனே உன்னை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதற்கான வேள்வியைத் தொடங்கினார்.

விசுவாமித்திரர் செய்த வேள்வியின் பலனால் திரிசங்கு என்று பெயர் பெற்ற சத்தியவிரதன் விண்ணை நோக்கிச் செல்லத் தொடங்கினான். மானுட உடலுடன் ஒருவன் சொர்க்கம் நோக்கி வருவதைக் கண்ட வானவர்கள் இந்திரனிடம் தகவல் தெரிவித்தனர். இந்திரன் பூமியிலிருந்து மேலெழும்பி வந்து கொண்டிருந்த திரிசங்குவை வழியில் தடுத்து நிறுத்தினான். பின்னர் அவன் திரிசங்குவிடம் மானுட உடலுடன் ஒருவர் சொர்க்கலோகம் வருவது சரியான செயல் இல்லை. நீ பூலோகத்திற்குத் திரும்பிச் சென்று விடு என்று எச்சரித்தான். ஆனால் திரிசங்கு விஸ்வாமித்திரர் இருக்கும் தைரியத்தில் இந்திரனின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான். இதைக் கண்டு கோபமடைந்த இந்திரன் திரிசங்கை எட்டி உதைத்தான். மறு நிமிடம் திரிசங்கு தலைகுப்புற கவிழ்ந்து பூமியை நோக்கி செல்லத் தொடங்கினான். பயத்தில் திரிசங்கு விஸ்வாமித்திரரே என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான். விஸ்வாமித்திரர் உடனடியாக திரிசங்குவை வான் வெளியிலேயே நிற்கவைத்தார். பின்னர் திரிசங்கு உனக்காக நான் நீ தற்போது இருக்கும் இடத்திலேயே ஒரு சொர்க்கத்தை உருவாக்குகிறேன் என்று கூறி வேறொரு சப்தரிஷி மண்டலம் நட்சத்திரங்கள் முதலியவற்றை சிருஷ்டித்து புதிதாக தேவர்களையும் சிருஷ்டி செய்யப் போவதாக அறிவித்தார் விஸ்வாமித்ரர்.