ராமாயணம் பால காண்டம் பகுதி -5

ராஜகுமாரர்கள் நான்கு பேரும் இனிது வளர்ந்தார்கள். குழந்தைகள் நால்வருக்கும் ஐந்து வயது ஆனதும் தசரதர் வசிஷ்டரிடம் சென்று நான்கு குமாரர்களுக்கும் வேதங்கள் மற்றும் எல்லாவிதமான கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான்கு குழந்தைகளும் கல்வியுடன் யானை குதிரை தேர் பயிற்சிகளுடன் வில் பயிற்சியும் வசிஷ்டரிடம் பயின்றார்கள். ராமனும் லட்சுமணனும் ஒருவரையொருவர் பிரியாமல் காடு மலை நதி என எங்கு சென்றாலும் சேர்ந்தே இருந்தார்கள். அதுபோலவே பரதனும் சத்ருக்கனனும் சேர்ந்தே இருந்தார்கள். இக்காரணத்தால் மக்கள் அனைவரும் ராம லட்சுமணன் என்றும் பரதன் சத்ருக்கனன் என்றும் அழைக்க ஆரம்பித்தார்கள். நால்வரும் கௌசலை, கைகேயி, சுமித்ரை மூவரையும் பாகுபாடு பார்க்காமல் தங்கள் தாய்போல இஷ்ட தெய்வம் போல் வணங்கி வந்தார்கள். ராமர் தம்பிகள் மூவரிடமும் தந்தைக்கு நிகராக நடந்து கொண்டார். தம்பிகள் மூவரும் ராமனை தந்தைக்கு நிகராகயாகவே கருதி மரியாதை செய்தார்கள். ராமருக்கு 12 வயது முற்றுப்பெற்றது.

ஒருநாள் அரசவையில் தசரதர் இருக்கும் போது விசுவாமித்ர மகரிஷி வந்தார். அவரை வரவேற்ற தசரதர் அவருக்கு ஏற்ற சிம்மாசனத்தில் அமர வைத்து மரியாதை செய்து வணங்கினார். ராஜ்யத்தில் உள்ள அனைத்தையும் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தாங்கள் ஆணையிடுங்கள் அதனை நிறைவேற்ற காத்திருக்கின்றேன் என்று தசரதர் விஸ்வாமித்ரரிடம் கூறினார். அதற்கு விஸ்வாமித்ரர் உலக நன்மைக்காக உத்தமயாகம் ஒன்று செய்யப்போகின்றேன். யாகத்தில் மாமிசத்தையும் ரத்தத்தையும் போட்டு பாழ்படுத்த மாரீசன் சுபாகு என்னும் இரண்டு அரக்கர்கள் முடிவு செய்திருக்கின்றார்கள். என்னுடைய தவவலிமையால் அவர்களை என்னால் சுலபமாக அழிக்க முடியும் ஆனால் மேலான லட்சியம் ஒன்றின் காரணமாக என் தவவலிமையால் அவர்களை அழித்து தவவலிமையை இழக்க விரும்பவில்லை. யாகம் செய்யும் போது காவல் காக்க போர் வீரன் ஓருவன் தேவைப்படுகிறான். சாமான்ய வீரனால் காவல் காக்க முடியாது. யாகம் முடியும் வரை 10 நாட்கள் உன்னுடைய புதல்வர்களில் ராமனை அனுப்பிவைப்பாயாக ராமனுக்கு ஒன்றும் நேராதவாறு நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இதனை கேட்ட தசரதர் நிலைகுழைந்து போனார். சிறிது நேரம் அமைதியான அவர் தடுமாற்றத்துடன் விஸ்வாமித்ரருக்கு பதில் கூறினார்.

ராமர் மிகவும் சிறியவன். ராமனுக்கு போர் செய்த அனுபவம் ஒன்றும் இல்லை. பாலகனான அவன் அரக்கர்களை எவ்வாறு எதிர்க்க இயலும். ஆகவே நானே தங்களுடன் வந்து யாகம் முடியும் வரை காவல் காத்து அரக்கர்களை அழிக்கின்றேன் என்றார். இதனை கேட்ட வசிஷ்டர் இந்திரனுக்கு நீ உதவி செய்வதற்காக அசுரர்களை அழித்து அவர்களை வெற்றி கொண்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்போது இந்த அரக்கர்களை அழிக்க உன்னால் இயலாது தசரதா. இது ராமானால் மட்டுமே முடியும். உன்னுடைய புதல்வர்களுக்கு வரும் பெருமைகளையும் சிறப்புகளையும் தடுத்துவிடாதே. விஸ்வாமித்ரருடன் உன் புதல்வர்களை அனுப்புவை அவர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று கூறினார்.

ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்

விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திம்மிரெட்டி பொம்மிரெட்டி வேலூர் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு குருநில மன்னர்களாக நிர்வாகித்த காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார். ஒரு சமயம் அந்த ஊரில் தொற்றுநோய் விஷ கிருமிகளால் மக்கள் பல விதமான நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இறை பற்று மிக்க சதாசிவராய மன்னர் இதனைக் கண்டு வேதனையுற்றார். உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜ வைத்தியரான ராச பண்டித சிரோன்மணி மந்திர வைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தணரிடம் மக்கள் நோய்களை தீர்க்கும் உபாயத்தை விவாதித்தார். மன்னரின் ஆணைப்படி அந்த ராஜவைத்தியர் தன்வந்ரி முறையில் சந்திர பாஷானம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்ளிட்ட ஐந்து பாஷாணங்களை கட்டென ஆக்கி தெயவாம்சமும் மருத்துவ குணமும் இரண்டறக் கலந்த சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார். இதன் உயரம் ஆறு அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடதகத்து. கி பி 1379 ஆம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திமிரி நகரின் கோட்டையில் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12 வது சங்கராச்சாரியார் ஸ்ரீ வித்யாரன்ய சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கமும் அபிஷேக தீர்த்தமும் பக்தர்களுக்கு அருமருந்தாய் விளங்கி அனைவருக்கும் நன்மை செய்து நோய்களில் இருந்து காத்தது. அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது. மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். சில நாட்கள் கழித்து ஆற்காடு நவாப் படையெடுப்பின் போது வேலூர் கோட்டையும் திமிரி கோட்டையும் பிடிபட்டு இடிபட்டது. இந்தியாவின் புராதன சின்னங்களையும் விலைமதிப்பில்லா பொருட்களையும் கொள்ளையடிக்க வேண்டும் என்பது முகலாயப் படையினரின் இரண்டாவது குறிக்கோள். அந்த கொள்ளையரிடமிருந்து திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு வேதியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் மறைத்து திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் நீர்நிரம்பிய குளத்தில் புதைத்து வைத்தார்கள்.

இந்த இடத்தில் 1985 ஆம் ஆண்டில் திமிரி நகரில் ஐயப்பன் கோவில் நிர்மானப் பணி நடந்தது. இப்பணி ஒரு கால கட்டத்தில் தடைபட்டு நின்றது. இந்தப்பணியில் ஏதேனும் தெய்வகுற்றம் நிகழந்து விட்டதோ என ஐயமுற்ற திமிரி ஐயப்பன் கோவில் மன்ற நிர்வாகி அகத்தியர் நாடி சோதிடர் திரு A.S.இராதாகிருஷ்ணன் அவர்களை நாடினார். அகத்தியர் நாடியில் திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதையுண்ட பாஷாண லிங்கம் பற்றி செய்தி வந்தது. அந்த பாஷாண லிங்கம் தனது முயற்சியால் அகழ்ந்தெடுக்கப்பட்டு தன்னுடைய கரங்களால் மீண்டும் பிரதிஷ்டை செயப்படும் என்ற குறிப்பைக் கேட்ட திரு நாடி சோதிடர் பெருமுயற்சியுடன் குளத்தில் புதையுண்ட அந்த அபூர்வ லிங்கத்தைத் தேடினார். 1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று குளத்தில் சுமார் 600 ஆண்டுகளாக புதையுண்டு கிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது. திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள் அவர்கள் தன்னிடம் கிடைத்த அந்த திமிரி பாஷாண லிங்கத்திற்கு ஓலைச்சுவடிகளில் கூறிய முறைப்படி இன்று வரை அவராகவே அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார். இந்த லிங்கம் தற்போது நன்னீர் நிரப்பப்பட்ட கண்ணாடி லிங்க வடிவிலான குடுவையில் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

மகிழ்ச்சி

கடவுள் ஏன் அனைவரையும் மகிழ்ச்சியாக வைக்கவில்லை என்று சீடர் ஒருவர் குருவிடம் கேட்டான். அதற்கு குரு கடவுள் எல்லோரையும் ஒரு குறையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் வைத்திருக்கிறார். இருப்பதை விட்டு இல்லாததை நினைத்துக்கொண்டு எண்ணம்தான் மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் மக்களுக்கு நிம்மதி இல்லை என்றார். சீடருக்கு புரியவில்லை விழித்தான்.

குரு அங்கிருக்கும் பாதி தண்ணீர் இருக்கும் டம்ளரைக் காட்டி இது என்ன என்று கேட்டார். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்று சீடர் பதில் சொன்னான். உடனே குரு பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்பவன் நிறையைக் காண்கிறேன். பாதி டம்ளர் காலியாக இருக்கிறது என்பவன் குறையைக் காண்கிறான். வாழ்க்கை என்பது கண்ணாடி மாதிரி. மக்கள் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்களோ அதுதான் மக்களுடைய வாழ்க்கையாக பிரதிபலிக்கின்றது. இந்த வாழ்க்கையில் ஒன்றும் கிடையாது அனைத்தும் மாயை என விளக்கினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -4

பிராகசமூர்த்தியிடம் பெற்ற கலசத்தில் இருந்த அமிர்த நீரை மூன்று மனைவிகளுக்கும் கொடுக்குமாறு சிருங்கரிஷி தசரதரிடம் கட்டளையிட்டார். தசரதர் கலசத்தில் இருந்த அமிர்தத்தில் பாதியை முதல் மனைவி கௌசலைக்கும் மீதி இருந்த பாதியை கைகேயி, சுமத்ரைக்கும் பாதியாக பிரித்துக்கொடுத்தார். மூவரும் அருந்திய பிறகு பாத்திரத்தில் ஒட்டியிருந்த சிறிதளவு அமிர்தத்தை மீண்டும் கௌசலைக்கு கொடுத்தார். அப்போது சங்கு முரசுகள் முழங்க ஒரு வருடமாக நடைபெற்ற யாகம் இனிது நிறைவேறியது. யாகத்தில் ஈடுபட்ட அந்தணர்களுக்கும் வேதியர்களுக்கும் பொன் பொருள் பட்டாடைகள் கொடுத்து அனைவரையும் அனுப்பிவைத்தார். தசரதர் வசிஷ்டரையும் சிருங்கரிஷியையும் வணங்கி மரியாதை செய்து வழியனுப்பி வைத்தார்.

சில நாட்கள் கழித்து மகாராணிகள் மூவரும் கருத்தரித்தனர். அந்த நேரத்தில் மூவரும் இறைவனுக்கு வழிபாடுகள் செய்த வண்ணம் இருந்தனர். சில நாட்கள் சென்றது. சித்திரை மாதம் வளர்பிறை நவமி கடக ராசியில் புனர்பூச நடசத்திரத்தன்று கௌசலைக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் பூச நட்சத்திரத்தில் கைகேயிக்கு குழந்தை பிறந்தது. அடுத்தநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் சுமத்ரா தேவிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். தமக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ந்த தசரதன் ஏழு ஆண்டுகளுக்கு குடிமக்கள் செலுத்தவேண்டிய வரிப்பணத்தை கட்ட வேண்டாம் என்று அறிவித்தார். நாட்டின் தானிய கிடங்குகளையும் கருவூலத்தையும் திறந்துவிட்டார். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையானதை எடுத்துச்செல்லலாம் என்று அறிவித்தார். அரண்மனையில் அன்னதானமும் கோ தானமும் வஸ்திரதானமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. 3 வேளைகளிலும் கோவில்களில் அலங்கார ஆராதனைகள் செய்ய தசரதர் உத்தரவிட்டார். இளவரசர்கள் பிறந்ததை நாட்டு மக்கள் 12 நாட்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வசிஷ்ட முனிவரை தசரதர் அழைத்தார். ஓவியத்தின் அழகைப்போல் கரிய திருமேனியுடைய கௌசலையின் குழந்தைக்கு ராமன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். விரதத்தை கடைபிடித்து மெய்வழியைக்காட்டக்கூடிய கைகேயிக்கு பிறந்த குழந்தைக்கு பரதன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். சுமத்ரைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை தேவர்கள் வாழவும் அசுரர்கள் அழியவும் யாராலும் வெல்ல முடியாத புகழுடைய இக்குழந்தைக்கு லக்குவனன் என்று பெயரிடுவதாக அறிவித்தார் வசிஷ்டர். முத்து பிராகசிப்பது போல முகத்துடனும் தீமையை அழிக்கும் தகுதி பெற்ற இரண்டாம் குழந்தைக்கு சத்ருக்கன் என்றும் பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார்.

கைத்தடி

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி நழுவிப் போய் விட்டது. கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று வருத்தப்பட்டான்.

நடந்தவைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த ஒரு துறவி அய்யா நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேன். இப்போது கைத்தடியை நழுவ விட்டதாக வருத்தப்படுகின்றீர்கள். உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. எங்கிருந்தோ ஒரு கைத்தடி கங்கையில் மிதந்து வந்தது. இப்போதும் அது எங்கோ மிதந்து போய்க்கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள். அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாடி அதை இழந்ததும் வருத்தப்படுகின்றீர்கள் என்றார்.

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

ராமாயணம் பால காண்டம் பகுதி -3

புத்திர காமேஷ்டி யாகத்தை முறையாக செய்வது மிகவும் கடினமானது. கிரியா என்ற செயல்கள் அதில் அதிகமாக உள்ளது. இம்மியளவு யாகத்தில் தவறு செய்தாலும் யாகம் தனது பலனை தராது. அதற்குரிய நியதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார் வசிஷ்டர். இதனை கேட்ட தசரதர் இந்த யாகத்தை முறையாக யாரால் செய்ய இயலும் என்று கேட்டார். காசிபர் என்னும் முனிவருக்கு விபண்டகர் என்னும் முனிவர் மகன். அவருக்கு சிவபெருமானே புகழும்படி சகலகலைகளிலும் கற்றுணர்ந்த புதல்வன் சிருங்கரிஷி என்பவர் உண்டு. அவரை இங்கு வரவழைத்து இந்த புத்திரகாமேஷ்டி யாகத்தை அவரது சொல்படி நடத்துவாயாக என்று வாழ்த்தினார் வசிஷ்டர்.

உரோமபதன் என்ற அரசனின் நாட்டில் சிருங்கரிஷி இருப்பதை அறைந்த தசரதன் அவரை முறையாக தன் நாட்டிற்கு அழைத்துவர தனது மந்திரி சுமத்திரனோடு சென்றார். தன் நாட்டிற்கு தசரதர் வருவதை அறிந்த உரோம்பதன் நாட்டின் எல்லைக்கே சென்று தசரதனை வரவேற்று விருந்தளித்தான். தசரதர் வந்த காரணத்தை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட உரோம்பதன் தானே சிருங்கரிஷியை அயோத்தி நகருக்கு அழைத்து வருவதாக வாக்களித்தார். தசரதர் சென்ற பின் சிருங்கரிஷி இருக்கும் இடத்திற்கு வந்த உரோமபதன் அவருக்கு உபசாரங்கள் செய்தான். இதனை கண்ட சிருங்கரிஷி வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். தாங்கள் தமக்கு ஒரு வரம் தர வேண்டும் என்று உரோமபதன் கேட்டுக்கொண்டான். தந்தோம் என்ன வேண்டும் கேள் என்றார். அசுரர்களால் துன்பப்பட்ட இந்திரனுக்கு உதவி செய்த தசரதரின் நாட்டிற்கு சென்று அவருக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான் உரோமபதன். வரம் தந்தோம் உடனே கிளம்புவோம் என்ற சிருங்கரிஷி உரோம்பதனுடன் அயோத்தி நோக்கி கிளம்கினார்.

உரோம்பதன் அனுப்பிய ஒற்றன் சிருங்கரிஷி அயோத்திநகர் வருவதை தசரதனுக்கு தெரியப்படுத்தினான். அதனை கேட்ட தசரதர் அயோத்தி நகருக்கு மூன்று யோசனை தூரம் (ஒரு யோசனை தூரம் என்பது தோராயமாக 15 கிமீ தூரம் ஆகும்) சென்று முரசு வாத்தியங்கள் ஒலிக்க மலர்கள் தூவி முனிவரின் அடிபணிந்து தனது வரவேற்றான். அரண்மணைக்கு வந்த சிருங்கரிஷி தசரதரை பார்த்து வசிஷ்டரை குலகுருவாக கொண்ட உன்னே போன்ற அரசர்கள் யாரும் இல்லை என்று வாழ்த்தி யாகத்திற்கு செய்ய வேண்டிய நியதிகளையும் ஒழுக்கங்களையும் விரதங்களையும் கூறினார். அவரின் ஆணைக்கு உப்பட்ட தசரதரும் அவரது மனைவியர்களும் அதற்கான விரதங்களையும் நியதிகளையும் கடைபிடிக்க ஆரம்பித்தனர்.

யாகம் செய்யும் யாக பூமியை உழுது விதிப்படி திருத்தியமைத்தார்கள். யாக சாலையில் ஆகவானீயம், தக்ஷ்ணாக்கினி, காருகபத்தியம் என மூன்று விதமான யாக குண்டங்கள் கட்டப்பட்டன. வேதம் ஓத யாக குண்டங்களில் புத்திர காமேஷ்டி யாகத்திற்கு தேவையான ஆகுதி பொருட்கள் அனைத்தும் நெய்யுடன் போடப்பட்டது. யாகம் தொடர்ந்து 12 மாதங்கள் நடந்தது. யாகம் உச்சநிலை அடைந்ததும் யாக நெருப்பில் இருந்து பிராகாசமூர்த்தி ஒருவர் மேலே கிளம்பி வந்தார். அவர் கையில் கலசம் ஒன்று இருந்தது. அதை அவர் தசரதரிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.

யார் துறவி – எது துறவு

மகாபெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள். ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும் இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க பக்தர்கள் தீர்மானித்திருந்தனர். இதுபற்றிய செய்தி பெரியவரை வந்தடைந்தது உடனே அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அந்த தேரத்தில் யார் துறவி – எது துறவு என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.

ஸ்தாபனத்திற்கு பலம் என்று ஒன்று அதிகமாகி விட்டால் அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவன் ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கிகள். அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட ஒரு இடம் இருக்க வேண்டாமென்று ஊர்ஊராக செல்லும் படி சாஸ்திரம் கூறியுள்ளது. ஆனாலும் சமூகத்துக்கு வழிகாட்ட ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. அதுதான் மடம் என்றானது. இதை ஒரு தவிர்க்க முடியாத தீமை என்றுதான் கூற வேண்டும். தவிர்க்க முடியாத இந்தத் தீமையை நன்மையாக மாற்றிக்காட்டும் கடமையே சன்னியாசியின் கடமை. இந்தக் கடமையின் போது அவனது ஆன்ம தபோ பலத்தை விட பணத்தின் பலம் பெரிதாகி விடாமல் அவன் பார்த்துக்கொள்ள வேண்டும். காஞ்சிமடம் அவசியச் செலவுக்கே கஷ்டப்பட்ட காலம் உண்டு. ஆனால் சந்திரமௌலீஸ்வரர் கருணையாலே அந்த கஷ்டம் நீங்கியது. இந்த மாதிரி கஷ்டங்களை ஈஸ்வர சோதனையாகவே கருதினேன்.

உத்தமமா மடத்தை பார்த்துக்கொள்வது அவன்தான் பணமல்ல. எனவே எப்போதும் செலவுக்கு மேலே பணம் சேராதபடியே மடம் இருக்கும்படி ஜாக்ரதையாக நிர்வாகித்து வருகிறேன். இன்று இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி மடத்தின் நிதியை அதிகரிக்க கூடாது என்று கருதுகிறேன். சுவாமி தடுத்து விட்டாரே என நீங்கள் யாரும் வருத்தப்படவேண்டாம். பணத்தை வாங்கிக்கொண்டு நான் பண்ணுவது ஆசீர்வாதமாக இருக்காது. அதற்காக பணமே வேண்டாம் என்று கூறவில்லை. மடத்திற்கு நெருக்கடி ஏற்படும்போது உங்களிடம்தான் பிட்சை கேட்டு நிற்பேன். தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்மபலம்தான் பெரும் பணம் என்றார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -2

தசரதமன்னனுடைய வாழ்வில் அனைத்து சம்பத்துக்களும் இருந்தாலும் அவருடைய மனதில் குறை ஒன்று இருந்தது. அவருக்கு திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் மகப்பேறு வாய்க்கவில்லை. அதைப்பற்றிய துயரம் அவர் மனதில் அறித்துக்கொண்டிருந்தது. இந்த குறையை முன்னிட்டு அனைத்து மகிழ்ச்சிகளும் பயனற்றவைகளாக தசரத மன்னனுக்கு தெரிந்தது. மகப்பேறு ஒன்றை நாடி அவரின் உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது.

அயோத்தி மாநகரில் தசரதன் அரசவையில் இருந்தான் இப்போது குலகுருவான வசிஷ்டர் அரசவைக்கு வந்தார். அவரை அடிபணிந்த தசரதன் வழிவழியாக எங்கள் குலத்திற்கு தாயும் தந்தையாய் உயர்ந்த கடவுளாய் இருப்பவர் நீங்களே என்று போற்றி வணங்கி தக்க மரியாதை தந்து வரவேற்று அவருக்குத்தக்க ஆசனம் தந்து அமரவைத்தான். பின்பு அவரிடம் எனக்கு முன்னால் தோன்றிய சூரிய வம்சத்து அரசர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற்று அரசாட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தனர். நான் இவ்வுலகை அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தேன். பெருந்தவம் புரியும் முனிவர்கள் வேள்விகள் செய்யும் அந்தணர்கள் வரை எவ்வித குறையுமில்லாமல் நலமுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனக்குப்பின் இந்த நாட்டை ஆள வாரிசு இல்லை. ஆகையால் அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் சிக்கக்கூடும் என்று என் மனம் மிகவும் வருந்துகிறது. எனக்கு வாரிசு கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கூறவேண்டும் என்று வசிஷ்டரிடம் கூறினான். தசரதர் கூறிய அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் பிற்காலத்தில் தசரதருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தன் தவவலிமையால் அறிந்துகொள்ள கண்களை முடி பின்வருவனவற்றை கண்டார்.

இலங்கையில் வாழும் அசுர அரசனான ராவணன் தேவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தை கொடுத்துவந்தான். மனிதனைத்தவிர எந்த மூர்த்தியாலும் கொல்லமுடியாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றிருந்தான். தேவர்கள் அசுரர்கள் கொடுக்கும் துன்பத்தை தாங்க முடியாமல் பிரம்மாவிடம் முறையிட்டார்கள். பிரம்மாவும் தேவர்களுடன் சேர்ந்து வைகுண்டத்திற்கு சென்றனர். திருமாலிடம் தங்கள் குறைகளை முறையிட்டு தங்களை காக்குமாறு தேவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைக்கேட்ட திருமால் தான் தசரத சக்கிரவர்த்திக்கு மகனாக பிறக்கப்போவதாகவும் ஆதிஷேசன், சங்கு, சக்கரம் ஆகியவை எனக்கு தம்பிகளாக பிறக்கப்போகிறார்கள். விரைவில் அரக்கர்களை அழிப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனை ஞானதிருஷ்டியில் கண்ட வசிஷ்டர் தசரதனிடம் வருத்தப்படவேண்டாம். புத்திர காமேஷ்டி என்னும் வேள்வியை குறையின்றி செய்தால் உன் கவலை தீரும். ஏழு உலகையும் காக்கும் வலிமையுள்ள மகன் பிறப்பான் என்றார்.

இதைக்கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைந்து வசிஷ்டரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். புத்திர காமேஷ்டி வேள்வியை எப்படி செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறுங்கள். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் என்றான்.

ஆயுள்

ஒரு முறை பிரம்மாவுக்கு தானே சிரஞ்சீவி என்று கர்வம் ஏற்பட்டது. அவர் வைகுண்டத்துக்கு சென்று மஹா விஷ்ணுவிடம் நான் எவ்வளவு பெரியவன் சிரஞ்சீவி பார்த்தாயா என்றார். அதற்கு விஷ்ணு இல்லை உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள் என்றார். எல்லாரையும் படைப்பவன் நான் என்னை விட வயதானவர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டர். சரி வா காட்டுகிறேன் என்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அழைத்துக்கொண்டு போனார். ஒரு இடத்தில் லோமசர் என்ற ரோமரிஷி காணப்பட்டார் அவரிடம் மஹாவிஷ்ணு தங்கள் வயதென்ன இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள் என்று கேட்டார்.

என் வயதை கேட்கின்றாயா சொல்கிறேன். கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலி யுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்). அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது. இப்படி ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படி ஒவ்வொரு பிரம்ம கல்பத்துக்கு ஒரு ரோமம் உதிர்ந்தது போக இன்னும் எத்தனையோ ரோமங்கள் உடம்பில் இருக்கின்றன. என்றைக்கு இவை எல்லாமே உதிர்ந்துவிடுமோ அன்று என் ஆயுள் முடியும் என்றார். பிரம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. அதுவும் போதாதென்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அஷ்டாவக்கிர முனியின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். அவரது சரீரத்தில் 8 கோணல்கள் இருக்கும். அவர் ஒரு லோமச முனிவர் இறந்தால் என் ஒரு கோணல் நேராகும். இப்படியே எட்டு லோமச முனிவர்களின் ஆயுளில் என் எட்டு கோணல்களும் நேரானதும் என் ஆயுசு முடியும் என்றார். இதைக்கேட்டதும் பிரம்மாவின் கர்வம் கப்பென்று அடங்கியது.

ராமாயணம் பால காண்டம் பகுதி -1

புண்ணிய கங்கை நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் மிகப்பெரியதாக இருந்தது. அந்த ராஜ்யத்திற்குள் சராயு நதி ஒடிக்கொண்டிருந்தது. கங்கையின் உப நதி சராயு நதியாகும். கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசர்கள் அனைவரும் சூர்ய குலத்தை சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் மனுச்சக்கரவர்த்தி, இக்ஷ்வாகு மன்னன், மந்தாதா, சிபிச்சக்கரவர்த்தி, சகரர், பகீரதர், நகுஷன், ரகு, அஜன் ஆகிய மன்னர்கள் மேன்மை தாங்கிய மன்னர்களாக மிளிர்ந்திருந்தனர். கோசல ராஜ்யத்திற்கு அயோத்ய பட்டணம் தலைமை நகரமாக இருந்தது. அயோத்ய என்ற சொல்லுக்கு யுத்தத்தில் அசைக்க முடியாதது என்று பொருள். அக்காலத்தில் இந்த நகரம் யாரிடமும் எவ்விதத்திலும் தோல்வி அடைந்தது இல்லை.

சூர்ய குலத்து அரசர்களுள் அஜமகா ராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாகப்பிறந்த தசரத சக்கரவரத்தி கோசல ராஜ்யத்தை ஆண்டுவந்தார். தசம் என்றால் 10 என பொருள்படுகிறது. ரதம் என்பது தேரை குறிக்கிறது. தசரதன் என்னும் பெயர் ஒரே நேரத்தில் 10 தேரை வழிநடத்த வல்லவன் என்ற பொருள்படுகிறது. தசரத சக்கரவரத்தி ஆண்சிங்கத்தை ஒத்த உடல் வலிமையை பெற்றிருந்தான். இவருக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள்.

மன்னன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மாண்புகள் அனைத்தும் தசரத சக்கரவரத்தியிடம் இனிது அமைந்திருந்தது. நெடுங்காலம் செங்கோல் தாங்கி ஆட்சி புரிந்துவந்தார். அவர் ஆட்சியில் தருமம் தழைத்தோங்கியது. தடுக்க முடியாத பாங்கில் போர் வாய்த்த போது அதை தசரத சக்கரவரத்தி திறமையுடன் சமாளித்தார். தேவர்களின் நலனுக்காக அசுரர்களை எதிர்த்து போர்புரிந்த சிறப்பை தசரத சக்கரவரத்தி பெற்றிருந்தார். போர் இல்லாத காலத்தை குடிமக்களை நலனுக்காக நன்கு பயன் படுத்திக்கொண்டார். தம்முடைய குடிமக்களை தந்தையின் பாங்கில் நன்கு பராமரித்து வந்தார். குடும்ப காரியம் ஆனாலும் நாட்டிற்கான காரியம் ஆனாலும் சான்றோர்களையும் முனிவர்களையும் அணுகி அவரகளுடன் நன்கு ஆலோசித்து அதன் பிறகே முடிவு செய்வார். இவருக்கு உதவியாய் இருந்த மந்தரிகள் அனைவரும் ஆட்சித்திறமை வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தார்கள்.

நான்கு வேதங்களைக்கொண்டு வேதியர்கள் இயற்றும் வேள்விகளில் இருந்த வந்த புகைகள் வானத்தில் மேகக்கூட்டம் போல் காட்சியளிக்கும். நாட்டில் பருவமழை சரியான அளவிற்கு பொழிந்து நாடு செழிப்புடன் இருந்தது. குடிமக்கள் நன்கு கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஒழுக்கத்திலும் நன்கு நிலை நின்றவர்களாக இருந்தார்கள். குடிமக்கள் நாட்டின் செல்வத்தை வளர்ப்பதில் ஊக்கம் மிகப்படைத்த உழைப்பாளிகளாக இருந்தார்கள். அனைவரின் உள்ளத்திலும் ஆனந்தம் குடிகொண்டு திருப்தி நிறைந்திருந்தது. தசரத சக்கரவரத்தியின் ஆட்சியில் மனிதர்களின் முயற்சியும் தெய்வ சம்பத்தும் ஒன்று கூடி பூலோக வைகுண்டம் போல் கோசல ராஜ்யம் காட்சி கொடுத்தது. கோசல நாட்டின் வளம் காரணமாக வறுமை என்பதே இல்லை. ஆகையால் தானதர்மங்களும் தனியாக இல்லை. அனைவரும் சத்தியத்தை கடைபிடித்து பொய் பேசாத காரணத்தால் உண்மை என்ற ஒன்று தனியாக இல்லை. நாட்டில் கள்வர்களே இல்லாத காரணத்தால் காவலர் என்ற ஒருவர் தேவையற்றவராக இருந்தார்.