கங்கையின் வரலாறு

ஆதிகாலத்தில் அயோத்தியை ஆண்ட இசுவாகு குலத்தில் சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். சில காலம் கழித்து சகரர் அசுவமேதயாகம் செய்ய ஏற்பாடுகள் செய்தார். சகரர் அசுவமேதயாகம் செய்தால் தன்னுடைய பதவி போய்விடுமோ என்று அஞ்சிய இந்திரன் யாக குதிரையை மறைத்து வைக்க குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். அந்த குதிரையை தேடிச்சென்ற சகரரின் புதல்வர்கள் ஆறுபதாயிரம் பேரும் கபிலரின் ஆசிரமத்தில் குதிரை இருப்பதை கண்டு கபிலரை திட்டியதுடன் அவரை துன்புறுத்த துவங்கினார்கள். கோபமடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார். அனைத்தையும் அறிந்த சகரர் மன்னன் கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்ததினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்கள் சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுமாறும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சகரர் குதிரையை எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பலானதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அவனுக்குப்பின் அவனது புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் ஆறுபதாயிரம் பேருக்கு நடந்ததை தெரிந்துகொண்டார். பின்பு நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் கடும் தவம் இயற்றினான். இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்தார்.

பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்துவிட்டனர். பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.

பகீரதன் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்டினான் மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்து பகீரதா உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன். என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என யோசித்தாள். எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக்கொண்டாள். பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைந்தான் ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.

பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் கங்கையை எடுத்து அள்ளிக் குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும் கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான். சகரர் புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்தது.

சிறுவனின் பக்தி

யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள பகுதி ஒன்றில் (இன்றைய மதுரா) ஒரு சின்னஞ்சிறு இடையன் வசித்து வந்தான். அவனுக்கு விளையாட யாரும் தோழர்கள் இல்லாததால் ஒரு சிறு கல்லையே சிவலிங்கமாக கருதி அதை பூஜித்து விளையாடி வந்தான். சேற்றையே சந்தனமாக கருதி அதற்கு இட்டு அழகு பார்த்தான். மேய்ச்சல் நிலத்தில் கிடைத்த சில மலர்களை கொண்டு அதற்கு அர்ச்சனை செய்து மகிழ்ந்தான். நைவேத்தியத்திற்கு கனிகள் கிடைக்கவில்லை என்பதால் பல வகை மண் வகைகளையே உருண்டையாக பிடித்து வைத்து அவற்றை கனிகளாக பாவித்து அந்த சிவலிங்கத்திற்கு படைத்து மகிழ்ந்தான். அவன் வழிபாடு அன்போடும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.

இடையர் குலச் சிறுவனின் இந்த பூஜையை பெரிதும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்ட சிவபெருமான் குபேரனின் தனத்தில் இருந்து பெருமளவு எடுத்து அச்சிறுவனுக்கு கொடுத்து அவன் பூஜித்து வந்த அந்த கல்லை ரத்தின லிங்கமாக மாற்றிவிட்டார். அவனுடைய வீடும் சகல செல்வங்களாலும் நிரம்பி ரத்தின மயமாக காட்சியளித்தது. திடீரென தான் பூஜித்து வந்த சிவலிங்கமானது ரத்தினக் கல்லாகவும் தனது வீடு உள்ளிட்ட அனைத்தும் செல்வத்தால் நிரம்பி வழிவதைக் கண்ட அந்த சிறுவன் வியப்படைந்தான். அப்போது அவன் முன்னர் பிரத்யட்சமானார் சிவபெருமான். தான் ஏக்கத்தோடு பணிந்து பூஜித்து வந்த சிவபெருமான் தன் முன் நிற்பதை கண்ட அந்த பாலகன் அவரை பணிந்து பலவாறு துதித்தான்.

சிவபெருமான் அந்த சிறுவனை நோக்கி குழந்தாய் நீ செய்துள்ள புண்ணியத்தால் இனி உன் பெயர் ஸ்ரீகரன் என்று வழங்கப்படும். மேலும் உன் வம்சத்தில் நந்தகோபன் என்கிற மகன் பிறப்பான். அவரிடம் மகாவிஷ்ணுவே மகனாக வளர்வார். நமது நல்லாசிகள் என்று கூறிவிட்டு மறைந்தார். அதன் பிறகு அந்த சிறுவன் பல காலம் சிவபூஜை செய்தபடி வாழ்ந்துவிட்டு அனைத்து விதமான இன்பங்களையும் துய்த்துவிட்டு இறுதியில் சிவலோகப் ப்ராப்தி அடைந்தான்.

கருத்து: எவ்வளவு பெரிய மற்றும் சிறிய யாகங்கள் பூஜைகள் செய்தாலும் எந்த எண்ணத்தில் செய்கின்றோம் என்பதே முக்கியமானது.

ராமாயணம் பால காண்டம் பகுதி -18

வசிஷ்டரிடம் சென்ற கௌசிகன் தாங்கள் முற்றும் துறந்த முனிவர் தங்களுக்கு இந்த நந்தினி காமதேனு பசு தேவையில்லை. நாட்டை ஆளுகின்ற என்னிடம் இருப்பதே சரியானது. என்னிடம் இந்த பசு இருந்தால் நான் கேட்டதை பெற்று நாட்டிற்கு மேலும் நன்மை அளிக்க இயலும் ஆகவே இந்த பசுவை என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். வசிஷ்டர் கொடுக்க மறுத்துவிட்டார். தங்களுடைய இந்த ஒரு பசுவுக்கு இணையாக 1000 பசுக்களை கொடுக்கின்றேன் கொடுங்கள் என்று கேட்டார் கௌசிகன். ஆனால் வசிஷ்டர் மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கௌசிகன் காமதேனு பசுவை பலவந்தமாக எடுத்துச்செல்ல முற்பட்டான். வசிஷ்டரின் தவபலனுக்கு முன்னால் தன் வலிமையால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் படைகள் அனைத்தையும் அனுப்பி காமதேனு பசுவை எடுத்துச்செல்ல முற்பாட்டான். வசிஷ்டர் தன்னுடைய தண்டத்தை முன்னால் போட அனைத்து படைகளும் அழிந்து போனது.

அரசனின் படை பலம் அதிகார வலிமையை விட தவ பலனே அதிகம் என்பதை உணர்ந்தான் கௌசிகன். வசிஷ்டர் கௌசிக மன்னனிடம் பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு பசுக்கள் கட்டுப்படும் நீங்கள் பிரம்மரிஷியானால் காமதேனு பசுவை தருகிறேன் என்றார். தவம் செய்தாலும் சத்ரியனான தாங்கள் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று கூறினார். தவம் செய்து தன்னை வெற்றி கொண்ட வசிஷ்டரை போல் மிகப்பெரிய ரிஷியாக வேண்டும் என்றும் வசிஷ்டரே தன்னை பிரம்மமகரிஷி என்று அழைக்க வேண்டும் என்ற வேட்கை அவரிடம் அதிகரித்தது.

சத்ரிய குலத்தில் தோன்றியதால் தவ பலனை பெற்று அதிகாரத்தினாலே அனைத்தையும் பெற்று விடலாம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. தன் சுய அறிவால் அனைத்தையும் பெற்று விட நினைத்தார் கௌசிகன். கௌசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிந்தார். இதை கண்ட பார்வதிதேவி கௌசிகன் முன் தோன்றி விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகி பிரம்மரிஷி பட்டம் பெறலாம் என்று அறிவித்து மறைந்தாள்.

பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைந்தான் கௌசிகன். எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைத்தான் கௌசிகன். தனது உடலையே திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்வதை கண்ட சிவசக்தியர் கௌசிகனுக்கு தரிசனம் கொடுத்தார்கள். தனது உடலை திரியாக்கி தீபம் ஏற்றி தவம் செய்த போது கௌசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி அதனை சிவசக்திக்கு உச்சாடனம் செய்தார். மந்திரத்திற்காக தன் உடலையே (காயத்தை) திரியாக்கி உச்சாடனம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. கௌசிகன் மன்னன்
தன் தவத்தினால் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு அளித்தார். விஸ்வம் என்றால் உலகம் மித்ரர் என்றால் நண்பன் உலகத்தின் நண்பன் என்ற பொருளில் சிவசக்தியர் கௌசிகனை விஸ்வாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்கினார்கள்.

எண்ணங்கள்

ஒரு வீட்டு வாசலில் ஒரு மரம் இருந்தது. அதன் கீழ் ஒரு துறவி அமர்ந்திருந்தார். அந்த வீட்டில் ஒரு வேசி இருந்தாள். அவருக்கு வேசியின் மேல் மிகவும் அக்கறை. இவள் இந்தத் தீய தொழிலைச் செய்து இப்படி வீணாகப் போகிறாளே என்று வருத்தப்படுவார். ஒரு ஆசாமி உள்ளே போனதும் ஒரு சிறிய கல்லை எடுத்துப் போடுவார். அப்படிப் போட்டதில் மலைபோல கற்கள் அங்கு குவிந்துவிட்டது. வேசிக்கோ துறவியைப் பார்த்து பொறாமை இவர் எப்போதும் தெய்வத்தை நினைத்து தியானத்திலேயே இருக்கிறாரே நாம் இந்தப் பாவத் தொழிலை செய்து கொண்டு இருக்கிறோமே என்று எப்போதும் நினைத்து வருந்தியபடி இருந்தாள். ஒரு நாள் அவள் இறந்துபோனாள். தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் அவளை அழைத்துப் போவது துறவிக்குத் தெரிந்தது. துறவி ஆச்சரியத்துடன் பார்த்தார்.

சிறிது நாட்களில் துறவி இறந்தார் அவரை யம தூதர்கள் வந்து நரகத்துக்கு அழைத்துப் போனார்கள். துறவிக்கு கோபம் வந்துவிட்டது. என்ன இது அநியாயம் நான் எப்போதும் இறை நினைவாகவே இருந்தேன். எனக்கு நரகம் அதோ கல்குவியல் அளவுக்கு ஆண்களோடு சுகித்த வேசிக்குப் புஷ்பக விமானமா என்று கேள்வி கேட்டார். எமதூதர்கள் கூறினார்கள் முனிவரே அவள் இறைவனைத் தியானம் செய்யமுடியவில்லையே என்று இரவும் பகலும் இறைவனை எண்ணியபடியே தன் தொழிலைச் செய்தாள். நீங்களோ இறைவனை நினைத்து தியானம் செய்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு எத்தனை பேர் செல்கின்றார்கள் என்று பார்த்து கல்லை போட்டுக்கொண்டிருந்தீர்கள். இந்தக் கல்குவியல் அளவுக்கு அவளேயே நினைத்துப் பாவம் சம்பாதித்துக் கொண்டீர்கள் என்று நரகத்திற்கு அழைத்துப் சென்றார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

கருத்து: எந்த செயல் செய்தாலும் எண்ணங்களே பிரதானம்.

ஆயுள்

புத்தர் பெருமான் மரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் சீடர்கள் அவருடைய அருளுரையைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள். புத்தர் தம் சீடர்களை நோக்கி ஒரு மனிதனின் வாழ்நாள் எவ்வளவு காலம் என்று கேட்டார். எதற்கு அவர் இப்படியொரு சாதராணக் கேள்வியைக் கேட்டார் என்பது விளங்காமல் சீடர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். எழுபது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். அறுபது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். ஐம்பது ஆண்டுகள் என்றார் ஒரு சீடர். தவறு என்றார் புத்தர். இதென்ன எல்லாவற்றையும் தவறு என்கிறாரே மனித வாழ்வு ஐம்பது ஆண்டுகள் கூட இல்லையா என்ன என்று திகைத்தார்கள் சீடர்கள். சில வினாடிகள் அமைதியாக இருந்த புத்தர் அது ஒரு மூச்சு என்றார்.

வெறும் மூச்சுவிடும் நேரம்தானா என்று கேட்டார் ஒரு சீடர். ஆமாம் வாழ்வு என்பது மூச்சுவிடும் ஒரு நேரம் தான். அந்த நேரம் மட்டுமே நமக்கு சொந்தம் அடுத்த மூச்சுவிடும் நேரத்திற்கு நாம் இருப்போமா இருக்க மாட்டோமா என்று யாருக்கும் தெரியாது. அதனால் நமக்கு சொந்தமான இந்த ஒவ்வொரு வினாடி நேரத்தையும் அனுபவித்து நிகழ்காலத்தில் முழு ஈடுபாட்டோடு வாழ வேண்டும். ஒவ்வொரு வினாடி பொழுதிலும் முழுமையாக வாழவேண்டும். சிலர் நேற்றைய நினைவில் வாழ்கிறார்கள். சிலர் இறந்தகால நினைவில் வாழ்கிறார்கள். சிலர் அறியப்படாத எதிர்காலத்தில் எதிர்காலக் கனவில் எதிர்கால ஏக்கத்தில் ஒரு தெளிவில்லாமல் வாழ்ந்து நிகழ்காலத்தை இழந்து விடுகிறார்கள். இவர்கள் எதார்த்தமான நம் முன்னால் துடித்துக்கொண்டுள்ள நம் கைவசமுள்ள நம் ஆளுகைக்கு உட்பட்ட நம் அதிகாரத்தில் உள்ள நிகழ்காலத்தைக் காணச் சக்தியற்ற கண்பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -17

ரீசிக முனிவரிடம் இரண்டு பிரசாதங்களையும் வாங்கிக்கொண்டு சத்யவதி தன் தாயை சந்திக்க சென்றாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தாள். சில நொடிகள் யோசித்த சத்யவதியின் தாய் நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது சத்யவதி பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆகையால் நீ சாப்பிட வேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ சாப்பிடு. மரத்தையும் அதற்கேற்றாற் போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம். எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காகவும் இந்நாட்டின் எதிர்கால அரசனுக்காகவும் இதை நீ செய்வாயா என்றார். சத்யவதியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு சரி என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் மாற்றி சாப்பிட்டு விட்டு மரத்தையும் மாற்றி சுற்றினர்.

சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்ப்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர் பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும் உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்று நான் பிரசாதம் அளித்தேன். இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி சாப்பிட்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணனுக்கு உரிய குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்க விரும்புவான். உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறான் என்றார். இதை கேட்டு அதிர்ந்த சத்யவதி நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி என கதறி அழுதாள்.

மனம் மாறிய முனிவர் ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறக்கும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்கப்பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான் அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார். அவருக்கு கௌசிகன் என்று பெயர் வைத்தார்கள். தனது தந்தைக்கு பிறகு அரசனான கௌசிகன் ஒரு நாள் காட்டிற்கு தன் படை பலத்துடன் வேட்டையாட சென்றார். காட்டில் இருந்த வசிஷ்டரின் ஆசிரமத்தை கண்ட கௌசிகன் அங்கு சென்றார். வந்த அனைவரையும் வரவேற்ற வசிஷ்டர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்தார். தனிமையில் காட்டில் இருக்கும் ஒரு முனிவரால் உடனடியாக இவ்வளவு பெரிய படைக்கு எப்படி உணவு இவரால் கொடுக்க முடிந்தது என்று கௌசிகன் ஆச்சரிப்பட்டு தெரிந்து கொள்ள முயற்சித்தான். வசிஷ்டரிடம் இருந்த கேட்டதை கொடுக்கும் நந்தினி என்னும் காமதேனு பசுவால் வசிஷ்டர் அனைவருக்கும் விருந்தளித்தார் என்பதை தெரிந்து கொண்டு வசிஷ்டரிடம் இருந்து நந்தினி காமதேனு பசுவை எப்படியாவது கொண்டு சென்றுவிடவேண்டும் என்று எண்ணினார்.

ராமாயணம் பால காண்டம் பகுதி -16

குசநாபர் காதி என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள் அவள் பெயர் சத்யவதி. அவளை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று விரும்பினான் காதி. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினான். அந்த சமயம் அரசனை தேடி அரண்மனைக்கு வந்த ரிசீகர் என்ற முனிவர் சத்யவதியின் நர்குணங்களை கண்டு வியந்தார். அவளை மனம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்று எண்ணினான். முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்டும் என்று முனிவரிடம் எனக்கு உங்களிடம் சிறிய வேண்டுகோள் உள்ளது. அதை நீங்கள் நிறைவேற்றினால் என் மகளை உங்களுக்கு மணம் முடித்து தருகிறேன் என்றான் அரசன். அது என்ன வேண்டுகோள் என்றார் முனிவர். ஒரு காது கருப்பாகவும் உடல் முழுவதும் வெள்ளையாகவும் உள்ள 1000 குதிரைகளை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். அரசனின் வேண்டுகோளை ஏற்று குதிரைகளோடு வருவதாகக் கூறி சென்றார் முனிவர். இது போன்ற 1000 குதிரைகளை முனிவர் எங்கு தேடி கண்டுபிடிப்பார். அவரால் அதை தரவே முடியாது. ஆகையால் அவர் சத்தியவதியை மணக்கும் விருப்பத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான் அரசன்.

அரசனின் வேண்டுகோளை பூர்த்திசெய்ய முனிவர் வருணபகவானிடம் வேண்டினார். வருணபகவானும் அவர் கேட்டதுபோல 1000 குதிரைகளை தந்தருளினார். அதை அரசனிடம் ஒப்படைத்தார் முனிவர். இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. ஆகையால் தன் மகளை ரிசீகர் முனிவருக்கு மனம் முடித்து கொடுத்தார். ரிசீகரும் சத்யவதியும் நல்ல ஒரு தம்பதிகளாகவே வாழ்ந்துவந்தனர். ஒருநாள் ரிசீகர் சத்யவதியை அழைத்து நான் உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன் என்ன வேண்டுமோ கேள் என்றார். நான் எனக்கான வரத்தை இன்னொரு நாள் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. ரிசீகரும் அதற்கு சம்மதித்தார். ஒருநாள் சத்யவதி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கு தாயும் மகளும் அனைத்து விஷயங்களை பற்றியும் பேசினர். அப்போது சத்யவதி தன் கணவர் தனக்களித்த வரம் குறித்து தன் தாயிடம் தெரிவித்த அவள் உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள் அம்மா நான் அதை என் கணவரிடம் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. உடனே அந்த தாய் இந்த நாட்டை ஆள்வதற்கு தனக்கொரு ஆண் மகன் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாள். சில மணி நேரங்களுக்கு பிறகு சத்யவதி தன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் இல்லத்தை அடைந்தாள்.

ரிசீக முனிவரிடம் தனக்கான வரம் குறித்த பேச்சை தொடங்கினாள் சத்யவதி. முனிவரும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார். சுவாமி எனக்கொரு மகன் வேண்டும் என் தாய்க்கும் ஒரு மகன் வேண்டும் என்றாள் சத்யவதி. அப்படியே ஆகட்டும் என்று கூறிய முனிவர் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின் இரு பிரசாதங்களை அவர் சத்யவதியிடம் கொடுத்தார். ஒரு பிரசாதத்தை குறிப்பிட்டு இதை நீ உண்ணவேண்டும் மற்றொன்றை உன் அன்னை உண்ணவேண்டும். அடுத்த நாள் இருவரும் குளித்து விட்டு நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்ற வேண்டும் என்றார்.

புத்தர்

கடுங்குளிரில் வந்த வயது முதிர்ந்த ஒருவருக்கு புத்த விஹாரத்தில் தங்க இடம் கொடுக்கப்பட்டது. அன்று இரவு கடுங்குளிர் முதியவரால் குளிரைத் தாங்க முடியவில்லை. மரத்தால் செய்யப்பட ஒரு புத்தர் சிலையை எடுத்து அதை எரித்து குளிர் காய ஆரம்பித்தார். மரம் எரியும் சப்தம் கேட்ட விஹாரத்தின் குரு ஓடிவந்து புத்தர் சிலை எரிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். முதியவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் உங்களுக்கு பைத்தியமா தெய்வத்தையே எரித்து விட்டீர்களே என்று கோபத்தில் கதறினார். உடனே முதியவர் ஒரு குச்சியைக் கொண்டு சாம்பலைக் கிளறினார். அவர் என்ன கிளருகின்றீர்கள் என்று குரு கேட்டதற்கு முதியவர் புத்தரை எரித்து விட்டதாக சொன்னீர்களே அவரின் எலும்புகளைத் தேடுகிறேன் என்றார். புத்தரை எரித்து விட்டு இப்படி செய்கின்றீர்களே என்று கோபத்துடன் குரு அவரை மடத்தை விட்டு வெளியே தள்ளி விட்டார். மறுநாள் காலை முதியவர் என்ன ஆனார் என்று வெளியே சென்று பார்த்தார்.

முதியவர் இரவு எரிந்த மரபுத்தர் சாம்பல் மீது பூக்களைத் தூவி புத்தம் சரணம் கச்சாமி என்று பிரார்த்தனை செய்து கீழே விழுந்து வணங்கி வழிபாடு செய்து கொண்டிருந்தார். குரு அவர் அருகே சென்று என்ன செய்கிறீர்கள் இப்போது சாம்பலை வழிபாடு செய்து கொண்டிருக்கின்றீர்கள். இரவு வணங்க வேண்டிய புத்தரை எரித்து விட்டீர்கள். உங்களுக்கு மனநிலை சரியில்லையா என்று கேட்டார்.

முதியவர் குருவை பார்த்து நீங்கள் தானே இரவு இவர் புத்தர் என்று சொன்னீர்கள் ஆகையால் அவரை வழிபட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார். இரவு மரத்தில் புத்தராக இருந்தார் இப்போது சாம்பலாக இருக்கின்றார் அவ்வளவு தானே வித்யாசம் என்றார். புத்தர் உருவ வழிபாடு வேண்டாம் என்றார். இன்று நீங்கள் அவரின் உருவத்தை வைத்து வணங்கி இறுதியில் அவரின் கொள்கைகளை விட்டுவிட்டீர்கள். நேற்று நான் புத்தர் சிலையை எரித்து குளிர் காய்ந்தது என்னுள் இருக்கும் புத்தரைக் காப்பாற்றத்தான். அந்த மரச்சிலைகள் உயிரற்றவை. அந்த மரத்திலான புத்தரை எரித்ததற்காக நீங்கள் உயிருள்ள புத்தரை வெளியே துரத்தி விட்டீர்கள் என்றார். குருவுக்கு தலையில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் இருந்தது.

ராமாயணம் பால காண்டம் பகுதி -15

கௌதம மகரிஷி அகலிகையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்ட பின் ராமர் லட்சுமனனுடன் விஸ்வாமித்ரர் தனது சீடர்களுடன் கிளம்பி மிதிலையை அடைந்தார்கள். மிதிலையில் ஜனகரின் மாளிகை வழியே சென்ற போது சீதை மாளிகையின் மாடத்தில் நின்று கொண்டிருந்தாள். ராமர் செல்வதை சீதையும் சீதை மாடத்தில் இருப்பதை ராமரும் பார்த்துக்கொண்டார்கள். பார்த்த உடனே சீதை ராமரின் தோளகை கண்டு ஒவியம் போல் திகைத்து நின்றாள். ராமரும் சீதையின் அழகில் மயங்கினார். பார்த்த உடனே ஒருவரை ஒருவர் மனதால் கவரப்பட்டு ராமரின் உள்ளத்தில் சீதையும் சீதையின் உள்ளத்தில் ராமரும் புகுந்தனர். விஸ்வாமித்ரருடன் மாளிகையை கடந்த ராமர் அவளின் கண்களில் இருந்து மறைந்தார். இவரை தான் மணக்க வேண்டும். அதற்கு சிவதனுசு தடையைக இருக்கிறதே. இவரை மணந்து இவர் தூணைவனாக வந்தால் காட்டில் இவருடன் வாழ்வதாக இருந்தாலும் பரவாயில்லை அதற்கும் தான் தயாராக இருப்பதாக எண்ணிக்கொண்டாள் சீதை.

மிதிலையில் யாகம் செய்வதற்காக பரந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தினர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப தங்கும் இடங்கள் கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தது. விஸ்வாமித்ரரும் அவரது கூட்டத்தினரும் ராம லட்சுமனனுடன் முகாமிற்கு உள்ளே நுழைந்தார்கள். ஜனக மகாராஜா தன் நடத்தும் வேள்வியின் தலைமை புரோகிதரான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்றார். தன்னுடைய யாக மண்டபத்திற்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை வணங்கி அவரின் வருகைக்கு நன்றி செலுத்தினார். அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின் சதாநந்தரின் தாய் அகலிகை ராமரினால் சாபவிமோசனம் பெற்றதையும் அவரது தந்தையாருடன் இணைந்து விட்டதையும் கூறினார். இதனைக்கேட்ட சதாநந்தர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

விஸ்வாமிரருடன் வந்திருந்த ராமரின் உருவம் ஜனகரை கவர்ந்தது. இதனை கவனித்த விஸ்வாமித்ரர் தனது ஆசிரமத்தில் உலக நன்மைக்காக செய்த வேள்வியை காத்து அசுரர்களை அழித்த ராம லட்சுமனனின் வீரத்தை ஜனகரிடம் தெரிவித்தார். வீரம் செறிந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் சிவதனுசை காண்பது முற்றிலும் அவசியம் ஆகவே இவர்களை அழைத்து வந்தேன் என்று ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். இதன் உட்பொருளை உணர்ந்த ஜனகர் அனைவரும் சிறிது ஒய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஒய்வெடுக்க அனைவரும் படுத்ததும் ராமருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. ஐனகரின் மாளிகையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்ததும் ரசித்துவிட்டோமே. எந்த பெண்ணை பார்த்தாலும் தனது தாயான கௌசலையை பார்ப்பது போலவே பார்ப்போம். இந்த பெண்ணை பார்க்கும் போது அந்த எண்ணம் தோன்றவில்லையே இது வரை குற்றம் செய்யத நமது மனம் குற்றம் ஏதும் செய்திருக்காது என்று எண்ணி தனக்கு தானே ஆறுதல் செய்து கொண்டார். அடுத்த நாள் அனைவரும் காலை வேள்விசாலையை அடைந்தார்கள்.

ஜனக மகாராஜாவின் தலைமை புரோகிதரான சதாநந்தர் வேள்விக்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை பற்றியும் அவரது பண்புகளும் அவரின் வரலாற்றையும் ராமரிடம் எடுத்துச்சொல்ல வேண்டிய கடமை இருந்தது. எனவே விஸ்வாமித்ரரின் வரலாற்றை ராமரிடம் எடுத்துக்கூற ஆரம்பித்தார் சதாநந்தர்.