மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -2

யுதிஷ்டிரன் இப்போது மனத்தெளிவு அடைந்திருந்தான். உலக சம்பந்தமான இன்ப துன்பங்களை பொருட்படுத்தாத நடுநிலையான மனநிலைக்கு இப்பொது அவன் வந்துவிட்டான். பொது நல சேவையில் அமைதியுடன் ஈடுபட ஆயத்தமானான். சிரார்த்தம் செய்யும் ஒரு மாத காலம் முடிவற்றது. நதிக்கரையிலிருந்து நகரத்தை நோக்கி அரச குடும்பம் அமைதியாக நகர்ந்தது. திருதராஷ்டிரரின் ரதம் முதலில் சென்றது. அதனை தொடர்ந்து யுதிஷ்டிரன் ரதமும் மற்றவர்களெல்லாம் முறையாக பின் தொடர்ந்து வந்தனர்.

முடிசூட்டும் மண்டபத்திற்கு கிருஷ்ணன் யுதிஷ்டிரனை அழைத்து வந்து குருகுலத்தின் அரச சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தான். அந்த முடிசூட்டு விழா ஆடம்பரமில்லாமல் மிகவும் சுருக்கமாக முடிந்தது. அரச பதவியை ஏற்றுக்கொண்ட யுதிஷ்டிரன் பெரியப்பா திருதராஷ்டிரரின் பிரதிநிதியாக இருந்து பொதுமக்களுக்கு உள்ளன்போடு பணிவிடை செய்வதாக உறுதி கூறினான்.

பீஷ்மர் தன் தேகத்தை விட்டுவிட உத்ராயண புண்ணிய காலத்திற்காக காத்திருந்தார். அதிவிரைவில் அவரிடம் சென்று தங்கள் நிலைமையை அவருக்கு தெரிவிப்பது என்று பாண்டவர்கள் முடிவு செய்தனர். கிருஷ்ணனையும் அழைத்துக்கொண்டு பீஷ்மர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். பீஷ்மர் போர்க்களத்தில் கூரிய அம்பு படுக்கையில் படுத்திருந்தார். முதலில் கிருஷ்ணன் பீஷ்மரிடம் தான் வந்திருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டான். இருவரிடமும் பரஸ்பரம் பாராட்டுதலும் விசாரிப்பதும் அமைதியாக நடந்தது. அதன்பிறகு கிருஷ்ணன் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் தங்களைப் பார்க்க அஞ்சுகிறான். ஏனென்றால் மானுடர்ளை பெருவாரியாக அழித்த யுத்தத்திற்கு காரணமாக இருந்தவன் என்று எண்ணி தங்கள் முன்னிலையில் வர அஞ்சுகின்றான் என்றார். அதற்கு பீஷ்மர் இந்த யுத்தத்திற்கு யுதிஷ்டிரன் மட்டும் காரணம் இல்லை. இந்த பழி பாவத்துக்கு நானும் காரணமாக இருந்திருக்கின்றேன். என் முன்பு யுதிஷ்டிரன் வரலாம் என்றார் பீஷ்மர்.

பீஷ்மர் முன்னிலையில் வந்த யுதிஷ்டிரன் தனது வணக்கத்தை தெரிவித்துக்கொண்டான். சிம்மாசனத்தில் அரசனாக வீற்றிருக்க தான் விரும்பவில்லை என்றும் செய்த பாவத்தில் இருந்து என்னை விடுவித்து கொள்ள வனத்திற்கு சென்று தவம் புரிய விரும்புகிறேன் என்றான். அதற்கு பீஷ்மர் இந்த யுத்தத்தை தூக்கியவன் நீ அல்ல. அது உன் மீது சுமத்தப்பட்டது. கொடியவர்களை நீ அழித்துள்ளாய். நீ செய்தது பாவம் அல்ல. அது க்ஷத்திரிய தர்மம். ஆள்பலமும் படைபலமும் அதிகம் இருந்த கௌரவர்களுக்காக அதர்மத்தின் பக்கம் நின்று போர் புரிந்த நான் வெற்றியடையவில்லை. தீயவர்களுக்காக நான் போர் புரிந்தும் அந்தப் பாவம் என்னை வந்து சேரவில்லை. ஏனென்றால் என்னிடத்தில் சுயநலம் எதுவும் இல்லை. அது போல் சுயநலம் இல்லாமல் நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பொதுநல கடமையை நிறைவேற்றுவயாக. வனத்திற்குச் சென்று தவம் பிரிவதை விட மேலானது பொது நல சேவையில் தன்னை ஒப்படைப்பது ஆகும். அந்த நலனுக்காக அரசனாக நீ இருப்பாயாக. இது நான் உனக்கு இடும் ஆணையாகும் என்று பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் கூறினார். தங்களின் அணைக்கு அடிபணிந்து வணங்கி தங்கள் கட்டளையை ஏற்கின்றேன் என்று யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கூறினான்.

அகோபிலம் நரசிம்மர்

இன்று யாரோடு போய் மோதிவிட்டு வரலாம் என்று தனது படைகளோடு ஆலோசனை நடத்தினான் ராவணன். இறுதியில் பாதாளலோகத்தில் மஹாபலிச்சக்கரவர்த்தி என்று ஒருவர் இருக்கிறார் அவரோடு இன்று சண்டைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார்கள். இலங்கையிலிருந்து ராவணனின் படை பாதாளலோகம் நோக்கிப் புறப்பட்டது.

மஹாபலிச்சக்கரவர்த்தி பிரஹலாதனின் வழிவந்தவர். நரசிம்மமூர்த்தி இரண்யவதம் நிகழ்த்திய போது அருகிலிருந்த பிரஹலாதனை அழைத்து இனி உன் தலைமுறையில் யாரையும் கொல்லமாட்டேன் என்றே வரம் தந்தார். எனவே எம்பெருமான் வாமன அவதாரம் நிகழ்த்தியபோது பிரஹலாதனின் வழித்தோன்றலான மஹாபலிச்சக்கரவர்த்தியை சம்ஹாரம் செய்யாமல் அவரைப் பாதாளலோகத்துக்கு அரசனாக்கி வைத்தார். மேலும் அந்த பாதாளலோகத்திற்கு நானே காவல் செய்வேன் என்றும் கூறி பாதாளலோகத்தைக் காவல் செய்துவந்தார் எம்பெருமான்.

அவ்வாறு எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனே காவல்காத்து நிற்கும் பாதாளலோகத்துக்கு சண்டை போட வந்தான் இராவணன். வாசலில் காவல்நிற்கும் எம்பெருமானைப்பார்த்து மஹாபலியைக் காண இலங்கேஸ்வரன் வந்திருக்கிறேன் என்று போய்ச்சொல் என்று விரட்டினான் இராவணன். எம்பெருமானும் மஹாபலியிடம் அனுமதி பெற்று இராவணனை உள்ளே அனுப்பினார். இராவணனைப் புன்சிரிப்போடு வரவேற்ற மஹாபலி இராவணா என்னோடு நீ சண்டையிடுவதற்கு முன் அதற்கான தகுதி உனக்கு இருக்கிறதா என்று நான் ஆராய்ந்து பார்க்கவேண்டும் முதலில் அதோ அங்கிருக்கும் பொருளைத் தூக்கிக்காட்டு அவ்வாறு அப்பொருளை நீ தூக்கிவிடும் பட்சத்தில் நான் உன்னோடு சண்டைக்கு வரத் தாயாராக இருக்கிறேன் என்றார்.

அப்பொருளில் என்ன இருக்கிறது என ராவணன் கேட்டான். அதற்கு இடிஇடியெனச் சிரித்த மஹாபலிச் சக்கரவர்த்தி இரவணனிடம் கூறினார். முன்பு ஒருமுறை எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ஹ அவதாரம் எடுத்து என்னுடைய பாட்டனாராகிய இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தார். சம்ஹாரம் செய்யும் முன்பாக இரண்யகசிபுவைத் தன் தலைக்கு மேலாக உயர்த்திப் பிடித்துப் பலமுறை பலசுற்று சுற்றினார் ஸ்ரீநரசிம்ஹமூர்த்தி அவ்வாறு சுற்றியபோது என் பாட்டானார் தன் காதில் அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதி கீழே தெரித்து விழுந்துவிட்டது. என் பாட்டனார் நினைவாக அதனைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அதைத்தான் தற்போது உன்னைத் தூக்கச் சொன்னேன் என்று விலாவாரியாகச் சொன்னார் மஹாபலி. கடுக்கனை தூக்கமுடியாமல் இராவணன் பயத்தில் வெலவெலத்துப் போய் படைகளை கூட்டிக்கொண்டு இலங்கைக்கு ஓட்டம் பிடித்தான்.

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுக்கப் புறப்பட்ட காலத்தில் அவரோடு கூடவே சங்கு சக்கரம் முதலான அவரது திவ்ய ஆயுதங்களும் புறப்பட்டன. அவைகளுக்கெல்லாம் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார் நரசிம்ம மூர்த்தி. நான் புதுமையான அவதாரம் நிகழ்த்தப் போகிறேன். இந்த அவதாரத்தில் எனது நகக்கண்களே எனக்கு ஆயுதம் என்று முடிவெடுத்தார். இரண்யகசிபு அணிந்திருந்த கடுக்கனின் ஒருபகுதியை கைலாய மலையை தூக்க முற்பட்ட உலகத்தை ஆட்சி செய்த இராவணனால் தூக்க இயலவில்லை என்றால் கடுக்கனின் முழு பகுதியின் எடையை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.

கடுக்கனின் ஒரு பகுதி பளுவே இப்படி இருந்தால் முழுபகுதி கடுக்கனை காதில் மாட்டியிருந்த இரண்யகசிபுவின் வல்லமை எப்படி பட்டதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த இரண்யனின் உடலைத் தன் மடியிலே கிடத்தி தன் விரல் நகத்தினாலே அவனை சம்ஹாரம் செய்த நரசிம்ம மூர்த்தியின் பலத்தைக் கண்டு தேவர்களெல்லாம் அகோபலம் அகோபலம் என்று முழங்கினார்கள். அப்பெயரே சற்றே மருவி அகோபிலம் என்னும் ஆந்திர தேசத்திலுள்ள திவ்யதேசத்தின் திருப்பெயராயிற்று. தற்போது அகோபிலம் மலைக்குமேல் குரோத நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர், சதரவத நரசிம்மர், பார்கவ நரசிம்மர், ஜ்வாலா நரசிம்மர், அகோபில நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உள்ளன.

மகாபாரதம் 12. சாந்தி பருவம் பகுதி -1

கங்கை கரை ஓரம் கூடியிருந்த கூட்டம் மிகப்பெரியதாக இருந்தது. கூட்டம் ஒரு மாதகாலம் தங்கியிருந்து ஈமக் கடமைகளை பக்தியுடன் சிரத்தையுடன் செய்தனர். சடங்குகள் செய்து கொண்டிருந்த பொழுது யுதிஷ்டிரனுக்கு மனவருத்தம் மிக அதிகமாக இருந்தது. இதற்கு காரணம் சிறிதும் இரக்கமின்றி மானிட வர்க்கம் அழிக்கப்பட்டது. இவை அனைத்துக்கும் காரணம் நாடு ஒன்றை கைப்பற்றுவதற்கும் வெறும் பகட்டுக்கும் பெருமைக்கும் என எண்ணி யுதிஷ்டிரன் மிக வருத்தப்பட்டான். மேலும் கர்ணனுடைய வாழ்க்கை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. தன்னுடைய நண்பனாகிய துரியோதனனுக்கு பணி விடை செய்தல் பொருட்டு இறுதிவரை தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாது தன்னை மறைத்து வைத்தான். தன்னை இது ஒரு தேரோட்டி மகன் என்று எண்ணி ஏளானம் செய்துவந்த தன்னுடைய சொந்த சகோதரர்களோடு அவன் மிகப்பெருந் தன்மையோடு நடந்து கொண்டான். இத்தகைய பரிதாபகரமான சம்பவங்களைக் குறித்து மன வேதனை அடைந்த யுதிஷ்டிரன் நாடு ஆள்வதைக் காட்டிலும் காட்டிற்குச் சென்று கடும் தவம் புரிவது சிறந்தது என்று அவன் எண்ணி காட்டிற்கு செல்வதாக தனது சகோதரர்களிடம் கூறினான். அதற்கு சகோதரர்கள் அனைவரும் ஆட்சேபம் தெரிவித்தார்கள்.

நாரதரும் வியாசரும் இன்னும் சில ரிஷிகளும் யுதிஷ்டிரனுக்கு ஆசி கூற அங்கு வந்தார்கள். அவர்களுக்கு யுதிஷ்டிரன் பரிதாபத்துக்கு உரியவனாக காட்சி கொடுத்தான். யுதிஷ்டிரனின் வருத்தத்தை கண்ட அனைவரும் அவனுக்கு புத்திமதி கூறினார்கள். உலகிலேயே தீமைகள் பல அதிகரிக்கும் போது சண்டைகளை தவிர்க்க முடியாது என்று அவர்கள் எடுத்துக் காட்டினர். தர்மத்திற்காக சண்டை சச்சரவுகளை கண்டு அஞ்சுகின்றவன் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன் ஆகின்றான். வேந்தன் ஒருவன் தனக்கு உரியவன் அல்ல. அவன் மக்களுக்கு கடமைப்பட்டவன் ஆகின்றான். அரசன் தனக்கு உரியவன் எனக்கு என கருதுவது சுயநலத்தோடு கூடிய அகங்காரமாகும். அரசனுக்கு அத்தகைய மனநிலை அவனைக் கீழ்நிலைக்கு கொண்டு செல்லும். ஆகையால் சொந்த துயரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சமுதாய பணியில் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டும் என்று அவர்கள் யுதிஷ்டிரனுக்கு ஆசி கூறினர். யுதிஷ்டிரன் மனத் தெளிவை அடைந்தான். தன்னுடைய துயரத்தை சிறிது சிறிதாக ஒதுக்கித் தள்ளினான்.

தனக்கு ஆட்சிமுறையில் அனுபவம் போதாது என்றும் தனக்கு ஆட்சிமுறை பற்றி விளக்க வேண்டும் என்று வியாசரிடம் யுதிஷ்டிரன் விண்ணப்பித்தார். அதற்கு வியாசர் சர்வகாலமும் தத்துவ ஆராய்ச்சியில் தாம் ஈடுபட்ட காரணத்தினால் இவ்வுலக வாழ்க்கை சம்பந்தமான விஷயங்களை அனைத்திலும் சரியாக அறிந்து கொண்டவன் இல்லை என்றும் இத்துறையில் உள்ள நுட்பங்கள் அனைத்தையும் முற்றிலும் முறையாக அறிந்த பீஷ்மர் ஒருவரே என்று அவர் கூறினார். பீஷ்மர் உலகத்தைப் பற்றிய தத்துவங்களுக்கு ஞான கடலாக விளங்கினார். அத்தகைய ஞானத்தை அவர் பலரிடமிருந்து பெற்று பாதுகாத்து வைத்திருக்கிறார். சந்தர்ப்பம் மீறி போவதற்கு முன்பே பீஷ்மரை அணுகி அந்த ஞான பொக்கிஷத்தை அவரிடம் பெற்றுக்கொள்வது சரியானதாக இருக்கும் என்று வியாசர் கூறினார். கிருஷ்ணன் இந்த கருத்தை முற்றிலும் ஆமோதித்தார். இன்னும் தனது உயிர் தாக்குப் பிடித்து வைத்திருக்கும் பீஷ்மரை விரைவில் அணுக வேண்டும் என்று கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு ஆலோசனை கூறினான்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -4

விதுரர் மற்றும் சஞ்சயனுடைய மேற்பார்வையில் மடித்து போனவர்களுடைய சடலங்கள் அனைத்தும் ஊழித்தீயில் தகனம் செய்யப்பட்டன. யுதிஷ்டிரரும் அவருடைய சகோதரர்களும் திருதராஷ்டிரனும் ஏனைய பிரமுகர்கள் அனைவரும் கங்கை தீர்த்தத்துக்கு போய் சேர்ந்தார்கள். காந்தாரியும் குந்தியும் திரௌபதியும் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அனைவரும் கங்கை நதியில் நீராடி மடிந்து போனவர்களுக்கு இறுதிக்கடன் முறையாக நிறைவேற்றினார்கள்.

இப்பொழுது உயிரை கொடுப்பதற்கு நிகரான கடமை ஒன்று குந்திக்கு வந்தது. துயரத்தில் இருந்த குந்திதேவி கர்ணன் தனக்கு பிறந்த முதல் செல்வன் என்பதையும் யுதிஷ்டிரனுக்கு மூத்தவன் என்பதையும் கர்ணனின் வரலாறு முழுவதையும் அனைவரிடம் கூறினாள். இச்செய்தி துயரத்தில் மூழ்கியிருந்த அனைவருக்கிடையில் சலசலப்பை உண்டு பண்ணியது. பாண்டவ சகோதரர்கள் கர்ணனை பலவிதங்களில் அவமானப்படுத்தி இருந்தனர். ஆனால் அதை அலட்சியம் செய்து பாண்டவர்கள் பேசியதை பொருட்படுத்தவில்லை. தன்னுடைய உண்மை வரலாற்றை வாழ்க்கையின் பிற்பகுதியில் கர்ணன் அறிந்தான். உயிர் இருக்கும் வரையில் துரியோதனனுக்கு சேவை செய்யும் பொருட்டு அந்த ரகசியத்தை மறைத்து வைத்திருந்தான். இத்தனை காலம் கர்ணனை யார் என்று அறிந்து கொள்ளாது அவனை அலட்சியப்படுத்திய பாண்டவர்கள் ஐவரும் கர்ணனின் மேல் இருந்த வெறுப்பு மாறி அவனிடம் மரியாதை கொண்டனர். உயிரோடு இருந்த காலமெல்லாம் சூழ்நிலையால் கர்ணனை வேற்றான் என்று எண்ணிய பாண்டவர்கள் இப்போது கர்ணனுக்கு சிரத்தையுடன் ஈமசடங்கை செய்து முடித்தனர்.

ஸ்திரீ பருவம் முடிந்தது அடுத்தது சாந்தி பருவம்.

பற்று

ஒருவன் செல்வத்தின் மீது பற்று கொண்டு ஏராளமான செல்வத்தைச் சம்பாதித்தான். பல சொத்துக்களை வாங்கிக் குவித்தான். அவன் ஆசைப்பட்டதற்கு அதிகமாகவே அவனிடம் செல்வம் சேர்ந்து விட்டது. ஆனால் அவன் மனம் ஏனோ திருப்தியடையவே இல்லை. ஏதோ ஒரு வெறுமையை தனக்குள் அவன் உணர்ந்தான். அந்த வெறுமை உணர்வு அவன் மன அமைதியைக் கெடுப்பதாக உணர்ந்தான். இவ்வளவு செல்வங்கள் குவிந்தாலும் தன்னிடம் எல்லாம் இருந்தாலும் தன் மனதில் ஏதோ ஒன்று இல்லாதது போன்ற ஒரு வெறுமை உணர்வு ஏன் வந்தது? என்று தனக்குள் யோசித்தான். முடிவில் அவன் மனதில் அதற்கான காரணம் என்ன என்பது புலப்பட்டது. தன்னுடைய இந்த அமைதியற்ற வெறுமைக்குக் காரணம் செல்வத்தின் மீது தான் கொண்ட ஆசையினால் தான் என்ற முடிவுக்கு வந்தான். இனி அமைதியடைய என்ன செய்யலாம் என்று பல நாட்களாகச் சிந்தித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான். தான் அடைந்த இந்த செல்வத்தையெல்லாம் ஒரு துறவிடம் கொடுத்து விட்டு மன நிம்மதியை அடைந்திடலாம் என்று தீர்மானித்தான்.

தனது எல்லா ஆஸ்திகளையும் விற்று செல்வமாக்கி ஒரு மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் காடு மேடெல்லாம் அலைந்து ஒரு உண்மையானத் துறவியைக் கண்டு பிடித்தான். தான் கொண்டு வந்த மூட்டையை அவர் காலடியில் போட்டான். குருவே நான் கஷ்டப்பட்டு உண்டாக்கிய செல்வங்கள் அனைத்தும் இந்த மூட்டையில் இருக்கின்றன. இதை எடுத்துக் கொண்டு என்னை சீடனாக ஏற்று மன நிம்மதியை அடையும்படிக்கு அருளுங்கள் என்று பணிந்து நின்றான்.

குனிந்த தலையை நிமிர்த்தி பார்த்த போது துறவியைக் காணவில்லை. அவரோ இவன் கொண்டு வந்த மூட்டைத் தூக்கிக் கொண்டு வெகு தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தார். இவனைப் போய் உண்மையான நல்ல துறவி என்று எண்ணி ஏமாந்து விட்டோமே என்று துறவியைத் துரத்திக் கொண்டு ஓடினான். துறவியோ ஏற்கனவே தொலை தூரத்திற்குச் சென்று விட்டபடியினால் இவனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. முடிவில் கண்களை விட்டே மறைந்து விட்டார். இவனுக்கோ களைப்பு மேலிட்டது. தாகம் வாட்டியெடுத்தது. சரி அந்தத் துறவியின் குடிலுக்குப் போய் தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்போம் என்று திரும்பி வந்தவன் திடுக்கிட்டான். அங்கு துறவி குடிலுக்கு முன் உள்ள மரத்தடியில் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கிடந்தார். மூட்டை கீழே கிடந்தது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது துறவி மெதுவாகக் கண்களைத் திறந்தார். அவனைப் பார்த்துக் கேட்டார். நீ இந்த செல்வத்தால் நிம்மதியே இல்லை இது வேண்டாம் என்று தானே என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தாய். பிறகு ஏன் என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தாய்? அப்படியானால் இந்தச் செல்வத்தின் மீதுள்ள பற்று இன்னும் உனக்கு நீங்கவில்லை என்று தானே பொருள். எனவே உமது செல்வத்தை எண்ணி சரி பார்த்து எடுத்துசெல். உடமைப் பொருள் எதன் மீதும் பற்று கொள்ளாமல் இருப்பதே அமைதியடைவதற்கு ஒரே வழி என்றார். அவன் அவர் காலடியில் விழுந்து பற்று விட்டு பற்றில்லாமல் வாழ வழிகாட்டுங்கள் குருவே என்று அழுதான். அவர் அவனைத் தேற்றி ஞானம் பெற உபதேசித்தருளினார்.

இறைவனை அடையும் வழி

புதிதாக வந்த சீடன் குருவிடம் இறைவனை தேடுகிறேன் அறிந்து கொள்ள பல பயிற்சிகள் செய்கிறேன். என்னால் இறைவனை விரைவில் அறிந்து கொள்ள முடியுமா என்று குருவிடம் கேட்டான்.

குரு – சீடனே உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?

சீடன் – நம்புகிறேன் இருப்பினும் கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.

குரு – எதனால் இந்த சந்தேகம் வருகிறது?

சீடன் – பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.

குரு – நல்லது எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது சீடனே. இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன் நீ ஆண்டவனைத் தெரிந்து கொள்ள அடைய உண்மையிலேயே விரும்புகிறாயா?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?

சீடன் – ஆமாம் குருவே.

குரு – அன்புள்ள சீடனே நீ இறைவனை அடைய ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்.

சீடன் – மிகவும் சந்தோஷம் குருவே இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

குரு – ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது ஆனால் இறைவன் தான் உன்னை வந்து அடைவான்.

சீடன் – இது குழப்பமாக இருக்கிறதே.

குரு – ஒரு குழப்பமும் இல்லை ஒர் கதை சொல்கிறேன் கேள் ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது. ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான் அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல நற்காரியங்களை செய்கின்றான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. ராஜாவே அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார் பாராட்டுகிறார் பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?

சீடன் – நிச்சயமாக நடக்கும் குருவே.

குரு – இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது சிறிது கடினம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே (இறைவனே) உன்னைப் பார்க்க வருவார். எனவே இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான தான தர்ம செயல்களில் ஈடுபடு இறைவனே உன்னை வந்து அடைவான் சரிதானே?

சீடன் – மிகவும் சரிதான் குருவே.

குரு – நல்லது சீடனே இனி ஆன்மிகம் உனக்கு கை கூடும். போய் வா என்றார்.

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்.

நம் எண்ணங்களும் உணர்வுகளும் சிந்தனைகளும் சொல்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு நல்லது செய்யுமெனில்
இறைவனை நாம் தேட வேண்டியதில்லை இறைவனே நம்மை தேடி வருவார்.

மகாபாரதம் 11. ஸ்திரீ பருவம் பகுதி -3

பாண்டவ சகோதரர்கள் 13 வருடங்களுக்கு பிறகு தங்களிடமிருந்து தாய் குந்தியை சந்தித்தனர். அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கினர். காந்தாரியின் மருமகள்களும் அருகில் தனது கணவர்களை இழந்து நின்றனர். சோகம் ததும்பிய சந்திப்பாக அது காட்சி கொடுத்தது. காந்தாரியை பார்த்து திரௌபதி தாயே உங்களுடைய பேரர்கள் அனைவரும் நடந்த போரில் அழிந்துவிட்டனர் என்று தேம்பி அழுதாள். பெரும் துயரத்தில் மூழ்கி இருந்தவர்கள் தங்களது பரிதாபகரமான நிலையை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்

கொடிய யுத்தத்தின் முடிவை அறிந்து கண்டு கொள்வதற்காக காந்தாரிக்கு ஞானக்கண்ணை கொடுத்தருளினார் வியாசர். சிறிது நேரம் இதை பார்த்து திகைத்து போன காந்தாரி யுத்தத்தை உள்ளபடி கிருஷ்ணரிடம் விவாதித்தாள். இறுதியில் பார்த்த நிகழ்ச்சிகள் யாவும் மனைவிமார்கள் தங்களுடைய கணவன்மார்களை இழந்து விட்டதை குறித்து அழுகையின் குரலாகவே இருந்தன. இதற்கெல்லாம் காரணம் கிருஷ்ணனுடைய பாராமுகம் என்று காந்தாரி கிருஷ்ணரிடம் குற்றம் சாட்டினாள். கிருஷ்ணன் நினைத்திருந்தால் இந்த பெரும்போரை ஆரம்பத்திலேயே தடுத்து இருக்கலாம் என்பது காந்தியின் கருத்து. எண்ணிக்கையில் அடங்காத சேனைகள் சேனைத் தலைவர்கள் அரசர்கள் அழிந்து போனதற்கு காரணமாக இருந்தவன் கிருஷ்ணன் என்று காந்தாரி எண்ணினாள்.

குரு வம்சம் முழுவதும் அழிந்து போனதற்கு நிகராக 36 வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ணரின் விருஷ்ணி வம்சம் தங்களுக்குள்ளேயே கலவரம் மூண்டு அழிந்துபோகும் என்று கிருஷ்ணன் மீது அவள் சாபத்தை சுமத்தினார். அதற்கு கிருஷ்ணன் தாயே நீ உள்ளன்போடு உனது கணவருக்கு நீ செய்திருந்த பணிவிடைகளின் விளைவாக ஓரளவு புண்ணியத்தை நீ பெற்றிருக்கிறாய். விருஷ்ணி வம்சத்தின் மீது சாபம் கொடுத்ததன் விளைவாக சேர்த்து வைத்த புண்ணியத்தை நீ இழந்து விட்டாய். விருஷ்ணிகள் யாராலும் வெல்லப்பட மாட்டார்கள் என்பது உண்மையே. ஆயினும் ஏதேனும் ஒரு விதத்தில் அவர்கள் இவ்வுலகை காலி பண்ணி ஆக வேண்டும். ஆகையால் உன்னுடைய சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த யுத்தத்தில் நான் பாராமுகமாக இருந்து விட்டேன் என்று நீ குற்றம் சாட்டுவதில் உண்மை இல்லை. குரு வம்சத்தவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்துக் கொண்டேன். உண்மையில் உங்கள் குடும்பத்தின் அழிவுக்கு காரணம் உங்களுடைய பாராமுகமும் உங்களுடைய கணவரின் பாராமுகம் மட்டுமே. உங்களுடைய புதல்வர்களின் கொடுரம் நிறைந்த அதர்மங்களே இந்த யுத்தத்திற்கு காரணம். இந்த அதர்மங்களுக்கு துணை நின்ற இனைத்து அரசர்களும் தடுக்க முடியாதபடி அழித்துவிட்டனர். அது குறித்து இனி ஆவது ஒன்றுமில்லை. ஆகையால் துயரத்திலிருந்து விடுபட்டு தெளிவடைந்து இருப்பாயாக என்று கிருஷ்ணன் கூறினார்.