தேவாரம் பாடல்கள் முன்னுரை

தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் னைுதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் பாடியுள்ளார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் இருவரும் கிபி 7ஆம் நூற்றாண்டிலும், சுந்தரமூர்த்தி நாயனார் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. 7ஆம் நூற்றாண்டு தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குடனிருந்த பௌத்தம் சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மலர்ச்சி பெற திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர்.

திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கினார். இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது தோடுடைய செவியன் என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார். தெய்வங்கள் மீது பாடப்பட்ட பாமாலைகள் ஆரம் என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றது. 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும் வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். தேவார ஆசிரியர் மூவருள் இயலிசைத் தமிழாகிய திருப்பதிகங்களை முதன்முதல் அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர் ஆகையால் அவர் அருளிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாகவும் அவரது நண்பர் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் நான்காம் திருமுறை மற்றும் ஐந்தாம் திருமுறை ஆறாம்திருமுறை என மூன்று திருமுறைகளாகவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டன.

பெரியபுராணத்தில் மூவரின் வரலாற்றை சேக்கிழார் கூறிவரும் போது இன்ன பதிகம் இந்த ஊர் எல்லையில் இறைவன் திருமுன் வலம் வரும்போது பாடப்பெற்றது என்று கூறுகிறார். அதன்படி தேவாரம் பாடப்பெற்ற காலமுறைப்படி ஒரு தொகுப்பு இருந்தது என்று உறுதி செய்யலாம். சோழர் வரலாற்றில் அக்குறிப்பு உள்ளது. அதற்கு பாடியவாறு என்று பெயர். மூர்த்தி தலம் திர்த்தம் என்பவற்றை முறையே கண்டு வழிபடும் விருப்புடைய சிவநேசச்செல்வர்கள் தாம் வழிபட விரும்பிய ஒவ்வொரு தலத்திற்கும் அமைந்த தேவாரத் திருப்பதிகங்கள் முழுவதையும் நாள்தோறும் முறையே பாராயணம் செய்தற்கு ஏற்ற வண்ணம் முறைப்படுத்தப்பெற்றதே இத்தலமுறைப் பகுப்பாகும். இப்பகுப்பு தில்லை சிதம்பரம் பெருங்கோயிலை முதன்மைத் திருத்தலமாகக் கொண்டு அமைந்திருக்கின்றது.

இது சிவத்தலங்களெல்லாவற்றிற்கும் முதலில் வைத்துப் போற்றத்தகும் சிறப்புடைய திருத்தலம் என்ற நோக்கத்துடன் தில்லைப் பெருங்கோயிலைப் பற்றி மூவரும் பாடிய திருப்பாடல் குறிப்புகளால் நன்கு உணரலாம். தேவார பாடல்கள் மொத்தம் 38000 ஆனால் நமக்கு கிடைத்தது 8227 பாடல்கள் மட்டுமே. தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் 274. முதலாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1469. இரண்டாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1,331. மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தரமூர்த்தி நாயனார் 1358. நான்காம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1070. ஐந்தாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 1015 ஆறாம் திருமுறை திருநாவுக்கரசு நாயனார் 981. ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயனார் 1026 = மொத்தம் – 8227.

நாயன்மார் – 5. ஆனாய நாயனார்

லால்குடி ரயில் நிலையத்திலிருந்து பூவாலுர் வழியே வடமேற்கில் சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம் என்ற ஊர். இத்தலத்தின் பெருமைகள் பெரியபுராணம் மற்றும் கச்சியப்ப முனிவர் பாடிய பூவாளூர் புராணத்திலும் கூறப்படுகிறது. அந்த ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்தார் ஆனாயர். பரசுராமர் சிவபெருமானை இங்கு தான் வழிப்பட்டு பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். ஏராளமான பசு மந்தைகள் இவரிடம் இருந்தன. ஆ என்றால் பசு என்று பொருள்படும். பசுக்களை மேய்க்கும் தொழிலை கொண்ட இவர் ஆனாயர் என்ற பெயர் பெற்றார். இவர் சிவனைத் தனது முழுமுதற்கடவுளாக கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களைக் காட்டுக்கு கொண்டு போய் நண்பர்களோடு சேர்ந்து மேய்த்துக்கொண்டு வருவது இவரது வழக்கம். வகை வகையாக மாடுகளை பிரித்து மேய விட்டுவிட்டு புல்லாங்குழல் வாசிப்பார். இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும். ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவராக திகழ்ந்தார். பசுக்கூட்டத்துடன் சென்று அவை மேயும் பொழுது இவர் குழல் ஊதுவார்.

ஒரு மழைக்காலத்தில் அவரது தோழர்கள் யாவரும் பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு செல்ல ஆனாயர் மட்டும் தனி வழியில் நடந்து முல்லை நிலத்திற்கு சென்றார். அப்பொழுது கார் காலம் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசியது. அங்கு பூத்துக் குழுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவபெருமானை கண்டார். தனது புல்லாங்குழலை எடுத்து ஐந்தெழுத்து மந்திரமான நமச்சிவாய என்று குழலோசையில் வாசித்தார். எங்கும் நமசிவாய என்ற ஒலி எதிர்ரொலித்தது. குழல் ஓசையைக் கேட்ட பசுக்கள் அவர் அருகில் வந்து நின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நின்றது. ஆங்கே காணப்பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நின்றது. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நின்றது. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலித்தது. அனைத்து தேவர்களும் அங்கே வந்துவிட்டார்கள். இறைவன் அப்பனும் அம்மையுமாக இடப வாகனத்தில் காட்சியளித்தனர். உன் குழல் இசையை கேட்டேன் என்றும் இந்த இசையின் சத்தத்தை எனக்குத் தரவேண்டும் என்று இறைவன் கேட்டார். உடனே இறைவனடி சேர்ந்தார் ஆனாய நாயனார். நமசிவாய மந்திரத்தை ஓதி இறைவனை கவர்ந்து என்றென்றும் இறைவன் அருகிலிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றார்.

குருபூஜை: ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?

சீடன் ஒருவன் குருவே இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா? என்று சந்தேகம் கேட்டான். அப்போது ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான்.

குருநாதர் சீடனே பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா? எனக்கேட்டார்.

குழம்பிய சீடன் சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்? எனக்கேட்டான்.

இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்?

கயிறை விட்டால் அது ஓடிவிடும்.

அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே?

குருவே பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன். என்றாலும் அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன்.

உன்னைப் போலத்தான் இறைவனும் மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது கேள்விக்குப் பதில் இதுதான் குரு சொல்ல இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தான் சீடன்.

ஆயுள்

சிலர் நான் 80 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். இனி என்ன வேண்டும் என்பார்கள். அது ஒரு பெருமை என்றார் பகவான் ரமணர் புன் சிரிப்புடன் ஒரு கதை இருக்கிறது என்றார். ஒரு முறை பிரம்மாவுக்கு தானே சிரஞ்சீவி என்று கர்வம் ஏற்பட்டது. அவர் வைகுண்டத்துக்கு சென்று மஹா விஷ்ணுவிடம் நான் எவ்வளவு பெரியவன் சிரஞ்சீவி பார்த்தாயா என்றார். அதற்கு விஷ்ணு இல்லை அப்பனே உன்னைவிட பெரியவர்கள் இருக்கிறார்கள். என்றாராம். அதெப்படி? எல்லாரையும் படைப்பவன் நானாச்சே? என்னை விட வயதானவர்கள் யார் இருக்கிறார்கள்? என்றார். சரி வா காட்டுகிறேன் என்று மஹாவிஷ்ணு அழைத்துக்கொண்டு போனார். ஒரு இடத்தில் லோமசர் என்று ஒரு மஹரிஷி காணப்பட்டார், அவரிடம் மஹாவிஷ்ணு ஐயா தங்கள் வயதென்ன? இன்னும் எவ்வளவு காலம் இருப்பீர்கள்? என்று கேட்டார். அவர் அப்பனே என் வயதை கேட்டாயா? சொல்கிறேன். கேள். கிருத யுகம், துவாபர யுகம், த்ரேதாயுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர் (43 லட்சத்து 21000 மனித வருடங்கள்). அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது. இப்படி ஒரு பிரம்மாவின் ஆயுசு முடிந்து விட்டதென்றால் என் உடம்பில் இருந்து ஒரு ரோமம் உதிரும். இப்படி ஒவ்வொரு பிரம்ம கல்பத்துக்கு ஒரு ரோமம் உதிர்ந்தது போக இன்னும் எத்தனையோ ரோமங்கள் உடம்பில் இருக்கின்றன. என்றைக்கு இவை எல்லாமே உதிர்ந்துவிடுமோ அன்று என் ஆயுள் முடியும் என்றார். பிரம்மாவுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. அதுவும் போதாதென்று மஹாவிஷ்ணு பிரம்மாவை அஷ்டாவக்கிர முனியின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். அவரது சரீரத்தில் 8 கோணல்கள் இருக்கும். அவர் ஒரு லோமச முனிவர் இறந்தால் என் ஒரு கோணல் நேராகும். இப்படியே எட்டு லோமச முனிவர்களின் ஆயுளில் என் எட்டு கோணல்களும் நேரானதும் என் ஆயுசு முடியும் என்றார். இதைக்கேட்டதும் பிரம்மாவின் கர்வம் கப்பென்று அடங்கியது. சரியான ஞானம் ஏற்பட்டால் இந்த சரீரம் யாருக்கு வேண்டும்? சதா சர்வ காலமும் நிர்மலமாக இருக்கும் தனக்கு இந்த சரீர சுமை எதற்கு? என்றார் பகவான்.

Related image

நாயன்மார் – 4. அரிவாட்டாய நாயனார்

சோழவள நாட்டில் உள்ள கணமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர் தாயனார். அவர் சிவபெருமானின் திருவடியை அன்புடன் தொடர்ந்து துதித்து வழிபட்டு வந்தார். பெரும் செல்வந்தராக இருந்த தாயனார் நாள் தோறும் ஈசனுக்கு செந்நெல் அரிசியில் உணவும் செங்கீரையும் இனிய மாவடுவும் நைவேத்தியமாக படைத்து தொழுவார். இறைவன் உணவை எடுத்துக் கொண்டதற்கு சான்றாக தாயனாருக்கு விடேல் என்ற சத்தம் ஒன்று கேட்கும். சத்தத்தை கேட்ட பின்பே உணவருந்து அன்றைய காரியத்தை தொடங்குவார் தாயனார். தன் மீது அன்பு கொண்ட பக்தர்களின் பக்தியின் உச்சத்தை சோதித்து அவர்களை உலகிற்கு தெரியப்படுத்த இறைவனுக்கு விரும்பினார். அதற்கான விளையாட்டை தொடங்கினார். இது நாள் வரை செல்வச் செழிப்பில் திளைத்து வந்த தாயனாரின் செல்வம் குறையத் தொடங்கியது. வறுமைக்கு தள்ளப்பட்டார். வறுமையில் இருந்தாலும் தாயனார் தளர்வின்றி முன்பை விட அன்புடன் இறைவனுக்கு தொண்டு செய்யத் தொடங்கினார். செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் முன்புபோலவே இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்தார். வறுமையின் பிடியில் இருந்த தாயனார் கூலி நெல் அறுத்து அதன் வாயிலாக கிடைக்கும் செந்நெல்லைக் கொண்டு இறைவனுக்கு நெய்வேத்யம் செய்து அகமகிழ்வார். செய்த வேலைக்கு கூலியாக வரும் செந்நெல் முழுவதையும் இறைவனுக்கே படைத்தார். கார் நெல்லை மட்டும் உணவாக்கி தாயனாரும் அவரது மனைவியும் உண்டார்கள். இதற்கும் இறைவன் தடை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் கூலியாக கிடைக்கும் நெல் அனைத்தும் செந்நெல்லாகவே இருந்தது. கார் நெல் கிடைக்கவில்லை. செந்நெல் முழுவதும் இறைவனுக்கே என்ற கூற்றில் இருந்து பின் வாங்காத தாயனார் அப்போதும் கூட இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்று மனம் மகிழ்ந்து அனைத்து செந்நெல்லையையும் உணவாக்கி இறைவனுக்கு நைவேத்யம் செய்து வந்தார்.

தாயனார் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்த கீரைகளை சமைத்து கணவனும் மனைவியும் உண்டு வந்தனர். சில நாளில் கீரையும் கிடைக்காமல் தண்ணீரை மட்டுமே அருந்தி இறைதொண்டை எந்த தடையும் இன்றி தொடர்ந்து வந்தார் தாயனார். பல நாள் பட்டினி கிடந்தாலும் கூலியாக வரும் செந்நெல்லைச் சிவபெருமானுக்கே அமுது செய்து படைக்கும் தாயனாரின் திருவுள்ளம் அவரது அயராத அன்பு அதற்கு உடன்பட்டு உறுதுணையாக நின்ற அவரது மனைவியின் செயல் பக்தியின் எல்லையாக இருந்தது. ஒரு நாள் வழக்கம்போல் தாயனார் கூடை நிறைய தூய செந்நெல் செங்கீரை மாவடு போன்றவற்றை சுமந்து கொண்டு மனைவியுடன் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பல நாட்களாக பட்டினி என்ற நிலையால் அவரது கால்கள் மேற்கொண்டு நடக்க முடியாமல் தள்ளாடின. தாயனாரின் பின்னால் வந்த அவரது மனைவி தன் கணவன் கீழே விழுந்து விடாமல் இருக்க தன் வலக்கரத்தால் கழுத்தை தாங்கிப் பிடித்தும் சரிந்து விழுந்தார் தாயனார். இதனால் அவர் தலையில் சுமந்திருந்த கூடை விழுந்து செந்நெல் அரிசி கீரை மாவடு போன்றவை தரையில் பரவி தூய்மையற்றதாய் மாறியது நொந்து போனார் தாயனார்.

இறைவனுக்கு படைக்க வைத்திருந்த அனைத்தும் சிதறிப் போனப் பின் கோவிலுக்கு சென்று என்ன செய்வது என்று சிந்தித்தார். அனைத்தும் இறைவன் இருக்கும் இடமே அவன் இல்லாத இடமே இல்லை. அப்படியென்றால் நிலப்பரப்பிலும் அவன் இருக்கவே செய்வான். ஆகவே தாயனார் இறைவனை வேண்டினார். இறைவா நீ எங்கும் நிறைந்தவன் எல்லாம் ஆனவன். இந்த நிலத்திலும் நீயே இருக்கிறாய். எனவே நிலப்பரப்பில் விழுந்து கிடக்கும் இந்த உணவை நைவேத்தியமாக எடுத்துக் கொண்டு அருளுங்கள் இல்லையேன்றால் நான் தவறு செய்தவனாவேன். நீங்கள் இந்த உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் என்னை மாய்த்துக் கொள்ளவும் தயங்க மாட்டேன் என்று ஈசனிடம் மன்றாடினார். நாள்தோறும் இறைவனுக்கு தாயனார் உணவு படைக்கும் போது விடேல் என்ற ஒலி கேட்பது வழக்கம். அந்த ஒலி இப்போது கேட்காததால் இறைவன் தான் கூறியும் உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்து தன் இடையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து கழுத்தை அறுக்க முயன்றார். அப்போது நிலவெடிப்பில் இருந்து வெளிப்பட்ட ஒரு கை தாயனாரை தடுத்து நிறுத்தியது. மேலும் மாவடுவைக் கடிக்கும் ஒலியாக விடேல் விடேல் என்னும் ஓசையும் எழுந்தது. இறைவனுடைய திருக்கரம் தாயனாரின் கரத்தைப் பற்றியவுடன் கழுத்தை அறுக்க முயன்றதால் உண்டாகிய காயமும் பிற வினைகளும் அகன்றன. அவற்றை உணர்ந்த தாயனார் அச்சமும் அன்பும் கொண்டு ஈசன் தனக்கு தந்த பெருங்கருணையை எண்ணி அதிசயித்து கரங்களைக் கூப்பி பாடி வழிபாடு செய்தார். அப்போது இடப வாகனத்தின் மீது இறைவியுடன் காட்சி தந்தார் இறைவன். அன்பனே நீ புரிந்த செய்கை நன்றாகும். உன் மனைவியுடன் என்றும் சிவலோகத்தில் நம்மை விட்டு நீங்காது வாழ்வாய் என்று அருள் செய்து மறைந்தார் ஈசன். தன்னுடைய கழுத்தை அரிவாளால் அரிந்த காரணத்தால் தாயனார் அரிவாட்டாய நாயனார் என்னும் திருப்பெயர் பெற்றார்.

குருபூஜை: அரிவாள் தாய நாயனாரின் குருபூஜை தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் -3. அமர்நீதியார்

சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான பகுதியிலே வணிக குல மரபில் அமர்நீதியார் பிறந்தார். 7 ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய் மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும் மணியும் முத்தும் வைரமும் வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பும் அவரது செல்வச் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டியது. இத்தகைய செல்வச் சிறப்பு பெற்ற அமர்நீதியார் சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் தமது இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுது அளித்து ஆடையும் அளித்து அளவிலா ஆனந்தம் பெற்றார். பழையாறைக்குப் பக்கத்திலே உள்ள சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வருவர். அமர்நீதியாரும் அவ்விழாவிற்குத் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபடுவார். அவ்வூரில் அடியார்கள் தங்குவதற்காக திருமடம் ஒன்றை கட்டினார். ஒரு சமயம் அவ்வூர் திருவிழாக் காலத்தில் அமர்நீதியார் தமது குடும்பத்தாரோடு மடத்தில் தங்கியிருந்தார்.

சிவனடியார்களுக்கு நல்ல பணிகள் புரியும் அமர்நீதியாரின் உயர்ந்த பக்திப் பண்பினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். அந்தண பிரம்மச்சாரி போன்ற திருவுருவத்தில் அவர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். அமர்நீதியார் அந்தணரைப் பார்த்ததும் தாங்கள் இம்மடத்திற்கு இப்போது தான் முதல் தடவையாக வருகிறீர்கள் என்று கருதுகிறேன் தாங்கள் இங்கே எழுந்தருளுவதற்கு யான் செய்த தவம்தான் என்னவோ என கூறி மகிழ்ச்சியோடு வரவேற்றார். அதற்கு எம்பெருமான் அடியார்களுக்கு அமுதளிப்பதோடு அழகிய வெண்மையான ஆடைகளும் தருகின்றீர்கள் என்ற செய்தி கேட்டு உங்களை பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன் என்று பதிலுரைத்தார். அந்தணரின் வாக்கு கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளம் குளிர மடத்தில் அந்தணர்களுக்காக வேதியர்களால் தனியாக உணவு செய்கின்றோம். அதனால் தயவு கூர்ந்து உணவருந்தி அருள வேண்டும் என்று பக்திப் பரவசத்தோடு வேண்டினார். நன்று நன்று உங்களது விருப்பத்தை நான் உளமாற ஏற்றுக் கொள்கிறேன். முதலில் நான் காவிரியில் நீராடச் செல்ல இருக்கின்றேன். அதற்கு முன் ஒரு சிறு நிபந்தனை வானம் மேகமாக இருப்பதால் மழை வந்தாலும் வரலாம். எனது உடை இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை கொடுத்து விட்டுப் போகிறேன். பாதுகாப்பாக வைத்திருந்து நான் வரும் போது தரவேண்டும். இந்தக் உடைகளை சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். இதன் பெருமையைப் பற்றி வார்த்தைகளால் எடுத்து சொல்ல முடியாது பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன அந்தணர் தன்னிடம் இருந்த உடையில் ஒன்றை எடுத்து அமர்நீதியாரிடம் கொடுத்து விட்டு நீராடி வரக் காவிரிக்குப் புறப்பட்டார். அடியவர் சொன்னதை மனதில் கொண்ட அமர்நீதியார் அந்த உடையை மற்ற உடைகளோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்புடன் வைத்தார்.

அடியார்களைச் சோதிப்பதையே தமது திருவிளையாட்டாகக் கொண்ட சிவபெருமான் அமர்நீதியாரிடம் கொடுத்த உடையை மாயமாக மறையச் செய்து அமர்நீதியாரை சோதிக்க திடீரென்று மழையையும் வரவழைத்தார். அந்தணர் சற்று நேரத்தில் மழையில் நனைந்து கொண்டே மடத்தை வந்தடைந்தார். அதற்குள் அமர்நீதியார் அடியார்க்கு வேண்டிய அறுசுவை உண்டியைப் பக்குவமாகச் சமைத்து வைத்திருந்தார். அந்தணர் மழையில் நனைந்து வருவதைக் கண்டு மனம் பதறிப்போன அமர்நீதியார் விரைந்து சென்று அடியார் மேனிதனைத் துவட்டிக் கொள்ளத் துணியைக் கொடுத்தார். முதலில் நான் கொடுத்த உடைகளை எடுத்து வாருங்கள் எதிர்பாராமல் மழை பெய்ததால் எல்லாம் ஈரமாகி விட்டது என்றார் அந்தணர். அமர்நீதியார் உடைகளை எடுத்து வர உள்ளே சென்றார். உடைகளை தாம் வைத்திருந்த இடத்தில் பார்த்தார். அங்கு உடைகளை காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். எங்குமே காணவில்லை. யாராவது எடுத்திருக்கக் கூடுமோ? என்று ஐயமுற்று அனைவரையும் கேட்டுப் பார்த்தார் பலனேதுமில்லை. அமர்நீதியாரும் அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய புதிய உடையை எடுத்துக்கொண்டு அந்தணர் முன் சென்று வேதனையுடன் தலை குனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அந்தணரை நோக்கி ஐயனே எம்மை அறியாமலே நடந்த தவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதியார். அமர்நீதியார் மொழிந்ததைக் கேட்ட அந்தணர் என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றுமே புரிய வில்லை என்றார். ஐயனே தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட உடையைப் பாதுகாப்பான இடத்தில் தான் வைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது போய்ப் பார்த்தால் வைத்திருந்த இடத்தில் அதைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் தேவரீர் இந்த புதிய உடையை அணிந்து கொண்டு எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.

அமர்நீதியாரின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும் அந்தணரின் திருமுகத்திலே கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நன்றாக உள்ளது உங்கள் பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற உடை அதற்குள் எப்படிக் காணாமல் போகும் நான் மகிமை பொருந்திய உடை என்று சொன்னதால் அதனை நீங்களே எடுத்துக்கொண்டு மற்றொரு உடையைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீர்களா? இந்த நிலையில் நீங்கள் அடியார்களுக்குக் உடை கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழுக்குகின்றீரோ கொள்ளை லாபம் கொழிக்க நீர் நடத்தும் வஞ்சக வாணிபத்தைப் பற்றி இப்போது அல்லவா எனக்குப் புரிகிறது. உங்களை நம்பி நான் மோசம் போனேன். என்று இறைவன் அமர்நீதியாரின் வாணிபத்தைப் பற்றி மேற்கண்டவாறு கடிந்து கூறினார். அந்தணரின் சொன்னதேக் கேட்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார் அறியாது நடந்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். நான் வேண்டுமென்றே செய்யவில்லை. காணாமல் போன உடைக்கு ஈடாக அழகிய விலை உயர்ந்த பட்டாடைகளும் பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். நீங்கள் உங்கள் கோபத்தை தணித்து என் தவறை பொறுத்தருள வேண்டும் என்று பயபக்தியுடன் கேட்டுக் கொண்டார். பலமுறை மன்னிப்புக் கேட்டார். அந்தணரை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியார் கல்லும் கரையக் கெஞ்சுவதை கண்டு கோபம் சற்று போனது போல் பாவனை செய்த அந்தணர் தன்னிடம் இருக்கும் நனைந்த உடையைக் காட்டி இந்த உடைக்கு எடைக்கு எடை புதிய உடையை கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எனக்கு எதற்கு என்று கூறினார்.

அந்தணர் சொன்னதைக் கேட்ட அமர்நீதியார் சற்று மன அமைதி அடைந்தார். உள்ளே சென்று தராசை எடுத்து வந்து நடுவர்கள் முன் வைத்தார். அந்தணரிடமிருந்த உடையை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த உடையை மற்றொரு தட்டிலும் வைத்தார். நிறை சரியாக இல்லை. அதை கண்ட அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த வேறு புதிய உடைகளை எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாக நிற்கவில்லை. அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. இருந்த மற்ற உடைகளையும் தட்டில் வைத்துக் கொண்டே வந்தார். எடை சமமாகவே இல்லை. அந்தணரின் உடை இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. இதனைக் கண்டு வியந்தார் அமர்நீதியார். இது உலகத்திலே இல்லாத பெரும் மாயையாக இருக்கிறதே என்று எண்ணியவாறு தொடர்ந்து நூல் பொதிகளையும் பட்டாடைகளையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே போனார். எவ்வளவு தான் வைத்தபோதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. மடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். இறைவனின் இத்தகைய மாய ஜால வித்தையை உணரச் சக்தியற்ற அமர்நீதியார் சித்தம் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். தொண்டர் நல்லதொரு முடிவிற்கு வந்தார். பொன்னும் பொருளும் வெள்ளியும் வைரமும் நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசு தட்டில் கொண்டு வந்து மலை போல் குவித்தார். இப்படியாக அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இப்போது எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் ஒன்று தான் அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார். ஐயனே எம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்து விட்டன. நானும் என் மனைவியும் குழந்தையும் தான் மிகுந்துள்ளோம். இந்தக் தராசு சமமான அளவு காட்ட நாங்கள் தட்டில் உட்கார தேவரீர் இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் அமர்நீதியார்.

அமர்நீதியாரும் அவரது மனைவியாரும் மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர். நாங்கள் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுவரை தவறு ஏதும் செய்யாமல் வாழ்ந்து வந்தோம் என்பது சத்தியமானால் இந்தத் தராசு சமமாக நிற்க வேண்டும் என்று வேண்டி திருநல்லூர் பெருமானைப் பணிந்தார். நமச்சிவாய நாமத்தை தியானித்தவாறு தட்டின் மீது ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து மனைவியாரும் மகனும் பரமனை நினைத்த மனத்தோடு ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்களை மூடிக்கொண்டு ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் முறைப்படி ஓதினர். தராசின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன. மூவரும் கண் திறந்தனர். அதற்குள் அந்தணர் மாயமாய் மறைந்தார். அந்தணரைக் காணாது அனைவரும் பெருத்த வியப்பில் மூழ்கினார். அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். விண்ணவர் கற்ப பூக்களை மழை போல் பொழிய முரசு முழங்கின. அமர்நீதியாரும் மனைவியாரும் மகனும் தராசுத் தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளினால் தராசுத் தட்டு புஷ்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புஷ்பக விமானத்தில் கைலயத்தை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.

குருபூஜை: அமர்நீதி நாயனார் குருபூஜை ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

நாயன்மார் – 2. அப்பூதியடிகள்

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும்.

திருவையாறிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். திருநாவுக்கரசர் பெருமானை பார்க்காமலேயே அவரைத் தன் குருவாக ஏற்று அவரின் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். அமைதி வடிவானவர் பொய் களவு காமம் கோபம் இவற்றையெல்லாம் நீக்கியவர். இத்தகைய அருந்தவத்தினரான அப்பூதி அடிகள் அப்பரடிகளின் திருத்தொண்டின் மகிமையையும் எம்பெருமானின் திருவருட் கருணையையும் கேள்வியுற்று அவர்மீது எல்லையில்லா பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். தாம் பெற்ற செல்வங்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அது மட்டுமல்ல அவரால் கைங்கரியம் செய்யப்பட்ட தண்ணீர்ப் பந்தல்கள், மடங்கள், சாலைகள், குளங்கள் அனைத்திற்கும் திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டி மகிழ்ந்தார். திருநாவுக்கரசரை நேரில் பார்க்காமலேயே அவர் தம் திருவடிகளை போற்றி வணங்கி அவரிடம் பேரன்புடையவராய் விளங்கினார். ஒருநாள் திங்களூர் வந்த திருநாவுக்கரசர் தன் பெயரிலேயே கல்விச் சாலைகள், சோலைகள், தண்ணிர்பந்தல் ஆகியவை கண்டு ஆச்சரியப்பட்டு அங்கிருந்த பணியாளரை யார் இது போன்று தொண்டு செய்வது என வினவினார். அங்கிருந்தவருள் ஒருவர் இப்பந்தலுக்கு இப்பெயரை இட்டவர் அப்பூதி அடிகள் என்பவர் தான். அவர் தான் இதை அமைத்து மக்களுக்கும் அடியார்களுக்கும் நற்பணியாற்றுகிறார். அதுமட்டுமல்ல அவரால் அமைக்கப்பட்டுள்ள சாலைகளுக்கும், குளங்களுக்கும் இந்தப் பெயரையே சூட்டியுள்ளார் என்று பெருமிதத்துடன் கூறினார். திருநாவுக்கரசருக்கு இவற்றையெல்லாம் கேட்டு மீண்டும் அவர்களிடம் அப்பூதி அடிகள் யார்? அவர் எங்குள்ளார் என்று கேட்டார். அவர்கள் அப்பரடிகளை அழைத்துக்கொண்டு அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு புறப்பட்டனர்.

சிவநாம சிந்தையுடன் இல்லத்தில் அமர்ந்து இருந்த அப்பூதி அடிகள் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருக்கும் அடியவர்களின் திருக்கூட்டத்தைக் கண்டார். சிவனடியார் எவரோ தமது இல்லத்திற்கு எழுந்தருளிகின்றார் என்பதறிந்து அப்பூதி அடிகள் வாயிலுக்கு ஓடிவந்தார். இரு கரங்கூப்பி வணங்கினார். திருநாவுக்கரசரும் அவர் வணங்கும் முன் அவரை வணங்கினார். அடியார்களை வழிபடும் முறையை உணர்ந்திருந்த அப்பூதி அடிகளார் திருநாவுக்கரசரை உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் அமரச் செய்தார்.சுவாமி தாங்கள் இந்த எளியோன் இல்லத்திற்கு எழுந்தருளியது எமது தவப்பயனே அருள் வடிவமான் அண்ணலே அடியார்க்கு யாம் ஏதாவது பணி செய்தல் வேண்டுமோ? என்று உளம் உருக வினவினார். திருச்சடையானைத் திருப்பழனத்திலே தரிசித்து விட்டு வருகிறேன். திங்களூர் முடியானை வணங்கும் பொருட்டு தங்கள் ஊர் வந்தேன். வரும் வழியே உங்களால் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர்ப் பந்தலைக் கண்டேன் அங்கு சிறிது நேரம் இளைப்பாறினேன். பின்னர் தங்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். தாங்கள் அறத்தில் சிறந்தவர். அடியாரைப் போற்றும் திறத்தில் மேம்பட்டவர். சிறந்த பல தர்மச் செயல்களைச் செய்து வருபவர் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். உடனே தங்களைப் பார்த்துப் போகலாம் என்று வந்தேன். தங்கள் சித்தம் என் பாக்கியம் தாங்கள் அமைத்துள்ள தண்ணீர்ப் பந்தல்களுக்கும் சாலைகளுக்கும் குளங்களுக்கும் தங்கள் பெயரை இடாமல் மற்றொருவர் பெயரை வைத்திருப்பதன் உட்கருத்து யாது என்பதனை யாம் அறிந்து கொள்ளலாமா என்று கேட்டார்.

திருநாவுக்கரசர் பெயரை மற்றொருவர் பெயர் என்று அடியார் சொன்னதைக் கேட்டு மனம் கலங்கினார் அப்பூதி அடிகள். திருநாவுக்கரசர் பெருமையை உணராமல் இந்த அடிகள் இப்படி ஒரு அபச்சார வார்த்தையை மொழிந்து விட்டாரே என்பதை எண்ணிச் சற்று சினம் கொண்டார். அவர் கண்களிலே கோபமும் துக்கமும் கலந்து தோன்றின. வாய் நின்றும் வார்த்தைகள் சற்று கடுமையாகவே வெளிப்பட்டன. அருமையான சைவத்திருக்கோலம் பூண்டுள்ள தாங்களே இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா? சமணத்தின் நாசவலையிலே நெறி இழந்த மன்னனுக்கு அறிவொளி புகட்டியவர். சைவத்தின் சன்மார்க்க நெறியை உலகோர்க்கு உணர்த்தியவர். இறைவன் திருவடியின் திருத்தொண்டால் இம்மையிலும் வாழலாம் என்ற உண்மை நிலையை மெய்ப்பித்து அருளிய ஒப்பற்ற தவசீலர் திருநாவுக்கரசர். அப்பெருமானின் திருப்பெயரைத்தான் யாம் எங்கும் சூட்டியுள்ளோம் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே. கொந்தளி்க்கும் ஆழ்கடல் அவருடன் கல்லைக் கட்டிப் போட்ட போது கல்லே தெப்பமாக மாறி அவரை கரை ஏற்றின. கருணை வடிவானவரின் பெருமையை அறியாதவர் இந்திருவுலகில் யாருமேயிருக்க நியாயமில்லையே எம்பெருமானே இப்படியொரு சந்தேகத்தை இன்று கேட்க எம் காதுகள் என்ன பாவம் செய்தனவோ? என் தேவருக்கு இப்படியொரு நிலை தங்களைப் போன்ற அடியார்களாலேயே ஏற்படலாமா? என்றெல்லாம் பலவாறு சொல்லி வருந்தினார் அப்பூதி அடிகளார். அடிகளார் தம் மீது கொண்டுள்ள வியக்கத்தக்க பக்தியையும் அன்பையும் கண்டு அப்பர் சுவாமிகள் அப்பூதியடிகளைப் பார்த்து இறைவன் அருளிய சூலை நோய் ஆட்கொள்ள சமணத்திலிருந்து மீண்டு சைவத்திற்கு வந்து வாழ்வு பெற்ற சிறுமையோனாகிய திருநாவுக்கரசன் யானே என்றார்.

திருநாவுக்கரசன் சொன்னதை கேட்டு அப்பூதியடிகள் மெய் மறந்தார். அவர் கையிரண்டும் தானாகவே அவரை வணங்கின. கண்கள் குளமாகி அருவியாகி ஆறாகி ஓடின. உரை குழறியது. மெய் சிலிர்த்தது. கண்ணற்றவன் கண் பெற்றதுபோல் பெருமகிழ்ச்சி கொண்ட அப்பூதியடிகள் அன்பின் பெருக்கால் திருநாவுக்கரசரின் மலர் அடிகளில் வீழ்ந்து இரு கைகளாலும் காலடிகளைப் பற்றிக் கொண்டார். அப்பர் அடிகளும் அப்பூதியடிகளை வணங்கி ஆலிங்கனம் செய்து கொண்டார். இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். அப்பூதியடிகளாரின் இல்லததில் கூடியிருந்த அன்பர்கள் திருநாவுக்கரசரைப் பணிந்தனர். அவரது அடக்கத்தையும் பெருமையையும் வானளாவப் புகழ்ந்தனர். கைலாச வாசனே நேரில் வந்ததுபோல் பெருமிதம் கொண்ட அப்பூதியடிகள் சற்று முன்னால் தாம் சினத்தோடு பேசியதை மன்னிக்கும் படி திருநாவுக்கரசரிடம் கேட்டார். அப்பூதியார் உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க உள்ளே ஓடினார். மனைவி மக்களை அழைத்து வந்தார். எல்லோரும் சேர்ந்து நாவுக்கரசரின் மலரடியைப் பன்முறை வணங்கினர். திருநாவுக்கரசரை வழிபாட்டிற்கு அழைத்து வந்து பாத கமலங்களைத் தூய நீரால் கழுவிப் புத்தம் புது நறுமலரைக் கொட்டிக் குவித்து அவ்வடிகளை வணங்கினார். அவரது பாதங்களைக் கழுவிய தூய நீரைத் தம் மீதும் தம் மனைவி மக்கள் மீதும் தெளித்துக் கொண்டார். தானும் பருகினார். திருநாவுக்கரசர் அவ்வடிகளின் அன்பிற்குக் கட்டுப்பட்டு உலகையே மறந்தார். பிறகு திருநீற்றை எடுத்து அப்பூதி அடிகளுக்கும் அவர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அளித்தார். அடிகளும் அவர்தம் குடும்பத்தினரும் நெற்றி முழுமையும் மேனியிலும் திருநீற்றைப் பூசிக் கொண்டார். அடிகள் திருநாவுக்கரசரிடம் ஐயனே எமது இல்லத்தில் உணவு அருந்தி எமக்கு அருள் புரிய வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி நின்றார். அங்ஙனமே ஆகட்டும் என்று அடியாரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்தார் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசர் சம்மதிக்கவே அப்பூதி அடிகளும் அவர் மனைவியும் அகமகிழ்ந்தார்கள். அவரது மனைவி அறுசுவை அமுதிற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். சற்று நேரத்தில் நால்வகையான அறுசுவை உண்டி தயாரானது. அப்பூதி அடிகளாரின் மனைவியார் பெரிய திருநாவுக்கரசிடம் வாழை இலை அரிந்து வருமாறு பணித்தாள். அன்னையாரின் கட்டளையை கேட்டு மூத்த திருநாவுக்கரசு இலை எடுத்து வரத் தோட்டத்திற்கு விரைந்தோடினான். பின்புறம் அமைந்திருந்த தோட்டத்திற்குச் சென்ற அக்குமாரன் பெரியதொரு வாழை மரத்திலிருந்து குருத்தை அரியத் தொடங்கினான். அப்பொழுது வாழை மரத்தின் மீது சுற்றிக் கொண்டிருந்த கொடிய பாம்பு ஒன்று அச்சிறுவனின் கையை வளைத்துக் கடித்தது. பயங்கரமாக அலறினான். இலையும் கையுமாக வீட்டிற்குள்ளே ஓடினான். பெற்றோரிடம் இலையைக் கொடுப்பதற்கும் விஷம் உடலெங்கும் பரவி பாலகன் சுருண்டு விழுந்து உயிரை விடுவதற்கும் சரியாக இருந்தது. பெற்றோர்கள் ஒருகணம் துணுக்குற்றார்கள். மகனுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட உணர முடியாத நிலையில் சற்று நேரம் செயலற்று நின்றார்கள். நீலம் படிந்த மகனின் உடம்பைப் பார்த்ததும் பாம்பு கடித்து இறந்தான் என்பதை உணர்ந்தனர். பெற்றோர்கள் உள்ளம் பதைபதைத்துப் போயினர். அவர்களுக்கு அலறி அழ வேண்டும் போல் இருந்தது. துக்கத்தை அடக்கிக் கொண்டனர். மகனின் உயிரைவிடத் தொண்டரை வழிபட வேண்டியது தான் தங்களது முக்கியமான கடமை என்று மனதில் கொண்டனர். வந்திருக்கும் தொண்டருக்குத் தெரியாதவாறு மூத்த திருநாவுக்கரசரின் உடலைப் பாயால் சுற்றி ஒரு சூலையில் ஒதுக்கமாக வைத்தனர். சோகத்தை அகத்திலே தேக்கி முகத்திலே சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டனர். தடுமாற்றம் சற்றுமின்றி முகம் மலர அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை அமுதுண்ண அழைத்தார். அவர் தம் மலரடிகளைத் தூய நீரால் சுத்தம் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார்.

ஆசனத்தில் அமர்ந்து அடிகளார் அனைவருக்கும் திருநீறு அளிக்கும் போது மூத்த திருநாவுக்கரசரைக் காணாது எங்கே உங்கள் மூத்த புதல்வன் என்று கேட்டார். அப்பூதி அடிகள் என்ன சொல்வது என்பது புரியாது தவித்தார். கண் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். திருநாவுக்கரசர் திருவுள்ளத்தில் எம்பெருமானின் திருவருட் செயலால் இனந்தெரியாத தடுமாற்றம் ஏற்பட்டது. மூத்த மகனைப் பற்றி்க் கேட்டதும் அடிகளார் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைக்கண்ட திருநாவுக்கரசர் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை மட்டும் குறிப்பால் உணர்ந்து கொண்டார். மீண்டும் மூத்த மகன் எங்கே? என்று கேட்டார். அப்பூதி அடிகளால் உண்மையை மறைக்க முடியவில்லை. நடந்த எல்லா விவரத்தையும் விளக்கமாகக் கூறினார். செய்தியை கேட்டு மனம் வருந்திய அப்பரடிகள் என்ன காரியம் செய்தீர்கள் என்று அப்பூதி அடிகளை கடிந்து கொண்டே மூத்த திருநாவுக்கரசின பிணத்தைப் பார்க்க உள்ளே சென்றார். பார்த்தார் திடுக்கிட்டார் மனம் வெதும்பினார். உடனே இறந்த பாலகனை எடுத்துக் கொண்டு திருக்கோயிலுக்கு வாருங்கள் என்று கூறியவாறு கோயிலுக்குப் புறப்பட்டார். அப்பூதி அடிகள் பாலகனைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார். இச்செய்தி கேட்டு ஊர் மக்களும் திரண்டனர். திங்களூர் பெருமானை திருநாவுக்கரசர் மெய் மறந்து உருகிப் பணிந்தார். ஒன்று கொல்லாம் என்னும் திருப்பதிகத்தை திருநாவுக்கரசர் மெய்யுருகி பாடினார். திருநாவுக்கரசரின் பக்தியிலே பரமனின் அருள் ஒளி பிறந்தது. மூத்த திருநாவுக்கரசு துயின்று எழுந்திருப்பவன் போல் எழுந்தான். அப்பரடிகளின் காலில் விழுந்து வணங்கினான். அப்பரடிகளின் மகிமையைக் கண்டு அனைவரும் வியந்து போற்றினார். அவரது பக்திக்கும் அருளுக்கும் அன்பிற்கும் தலை வணங்கி நின்றனர். ஆலயத்துள் கூடியிருந்து அன்பர் கூட்டம் திருநாவுக்கரசரை கொண்டாடி போற்றியது. எல்லோரும் அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு வந்தனர். எல்லோரும் ஒருங்கே அமர்ந்து திருநாவுக்கரசரோடு சேர்ந்து அமுதுண்டனர். அப்பூதி அடிகள் திருநாவுக்கரசருடன் அமுதுண்ணும் பேறு பெற்றோமே என மகிழ்ந்தார். திருநாவுக்கரசர் சில காலம் அபபூதி அடிகளின் இல்லத்தில் தங்கி இருந்து பின்னர் திருப்பழனம் பொழுது அப்பூதி அடிகளின் திருத் தொண்டினையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அப்பூதி அடிகள் நிலவுலகில் அடியார்களுக்குத் திருத்தொண்டு பல புரிந்தவாறு பல்லாண்டு வாழ்ந்து முடிவில் எம்பெருமானின் சேவடி நீழலை அடைந்தார்.

குருபூஜை: அப்பூதியடிகள் நாயனாரின் குருபூஜை தை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

சித்தி

ஒரு யோகி தன் குருவிடம் சென்று நான் பதினான்கு வருடங்கள் காட்டில் தனியாக இருந்து தவம் செய்து நீரின் மேல் நடக்கும் சித்தியை அடைந்திருக்கிறேன் என்றான். அதைக் கேட்ட குருவானவர் அவனைப் பார்த்து மகனே பதினான்கு வருடங்களையும் வீணாக்கி விட்டாயே ஒன்றரையணா கொடுத்தால் ஓடக்காரன் உன்னை நீரின் மேல் கொண்டு போய் அக்கரை சேர்ப்பானே நீ அடைந்த சித்தி ஒன்றரையணா மதிப்புத் தான் என்றார் திருவடியை அடைய வழி சித்தி அடையும் ஆசையைக் கொண்டு யாரும் காசை வீணாக்க வேண்டாம். இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்ற நோக்குடன் உண்மையான பக்தி செய்யுங்கள். அற்புதங்களைக் காட்டி மக்களைக் கவர நினைக்கும் யோகிகளிடம் செல்ல வேண்டாம் என்பது ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமொழி.

நாயன்மார் – 1. அதிபக்தர்

சோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலம். நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபக்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும்  தவறாது சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து வந்தார்.

ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் மட்டுமே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபக்தர் பசியொடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.

அதிபக்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பாக இருந்தது. அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபக்தரின் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார்.

தங்க மீன் அர்ப்பணிக்கும் விழாஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்கிறது.
அதிபத்த நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

மனம்

நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்றான் அவன்.

என்ன காரணம்? என்று கேட்டார் ஒரு பெரியவர். மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள் உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான் என்றார் பெரியவர்.

அப்படியா சொல்கிறீர்கள்? அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?

மனதைப் புரிந்து கொள். அது போதும்.
எப்படிப் புரிந்து கொள்வது? என்றான் அவன்.

இந்தக் கதையைக் கேள் என்று அவர் சொன்னார். ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை வருந்தவுமில்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை துன்பமுமில்லை அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

Image result for பெரியவர் இளைஞர்"