தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 38 திருமங்கலக்குடி

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 38 வது தேவாரத்தலம் திருமங்கலக்குடி. மூலவர் பிராணவரதேஸ்வரர். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் மங்களநாயகி மங்களாம்பிகை. தலமரம் வெள்ளெருக்கு கோங்கிலவு கோங்கு. தீர்த்தம் மங்கள தீர்த்தம் காவிரி. இத்தலம் பஞ்சமங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 1. ஊரின் பெயர் மங்கலக்குடி 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தல தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம் 5. இத்தல விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. அனைத்து கோயில்களிலும் சிவலிங்கத்தில் ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம் ஆவுடையாரை விட உயர்ந்ததாக இருக்கிறது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் பாணம் மட்டும் பெரிதாக இருக்கின்றது. அகத்தியர் சுவாமியின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தித்தான் மலர் வைத்து பூஜித்தார். நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று உள்ளது. இவருக்கு தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்யம் படைத்து வலம்புரி சங்கில் பால் பன்னீர் தேன் சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள். இதுதவிர சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின் போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. உள்சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன.

ஒரே கோயிலே இரட்டைக் கோயிலாக தனித்தனியே அமைந்திருக்கிறது. இதில் பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் ஆகும். பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக உள்ளது. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிசேகம் செய்கின்றனர். சிவன் சன்னதிக்குச் செல்லும் போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது. இக்கோயிலின் வெளிச்சுற்றில் அகஸ்தீஸ்வரர் சன்னதி உள்ளது.

அனைத்து கோயில்களிலும் காலையில் திருக்கல்யாணம் நடந்து மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இக்கோயிலில் இரவில்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவமும் ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணியளவில் சுவாமி அம்பிகை திருக்கல்யாணமும் அதன்பின் திருமண விருந்தும் நடக்கும். நவராத்திரியின் போது அனைத்து கோயில்களிலும் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வார்கள். ஆனால் இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம் ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக் காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப் போல அலங்கரிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.

ஒரு சமயம் காலமாமுனிவருக்கு உண்டாகவிருந்த நோயை நவக்கிரகங்கள் தடுத்ததால் அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக இத்தலத்தில் சிவன் அருளுகிறார். கிரகங்கள் வழிபட்ட இத்தலத்தில் நவக்கிரகத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவக்கிரக திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயில் (சூரியனார் கோயில்) அமைந்திருக்கிறது. நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டுள்ளனர். எனவே இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.

பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார. கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அதுபடி மந்திரி உயிர் திரும்பப் பெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் (ஜீவநாயகன்)என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள். இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளினர்கள். இத்தலத்தில் உள்ள புருஷமிருகம் என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தில் மனிதன் விலங்கு பறவை என்ற மூன்று முகங்கள் உள்ளது.

11 ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்துள்ளார். இக்கோயிலில் சோழர் பல்லவர், விஜய நகர மன்னர்கள் காலத்திய 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. காளி சூரியன் திருமால் பிரம்மா அகத்தியர் அம்பாள் ஆகாசவாணி பூமாதேவி ஆகியோர் வழிபட்டுள்ளார்கள். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 37 திருக்கோடிகா

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 37 வது தேவாரத்தலம் திருக்கோடிகா. புராண பெயர் வேத்ரவனம். இத்தலம் 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட உள்ளது. மூலவர் கோடீஸ்வரர் வேத்ரவனேஸ்வரர் கோடிகாநாதர் கோடிநாதர். இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் திரிபுரசுந்தரி வடிவாம்பிகை. தலமரம் பிரம்பு. தீர்த்தம் சிருங்கோத்பவ தீர்த்தம் காவிரிநதி. ஆனி 19 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் சூரியபகவான் தன் கதிர்களை இறைவனை மீது செலுத்தி வழிபாடு செய்கிறார். மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன. அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் கோடீஸ்வரர் என்றும் ஊர் திருக்கோடிக்கா அழைக்கப்பட்டது. சனி பகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர். அதே போல் சித்திரகுப்தனும் துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ளனர். இங்குள்ள சனிபகவான் பாலசனி என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. இவ்வூரை ஒட்டி காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் கரையேற்று விநாயகர் கற்சிலை நடராஜர் சப்தரிஷிகள் அகத்தியர் சித்திரகுப்தர் யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன.

கா என்றால் சோலை எனப் பொருள்படும். கா என முடியும் ஐந்து சிவத்தலங்களை பஞ்ச காக்கள் என அழைப்பர். அவை திரு ஆனைக்கா (திருவானைக்காவல்). திருக்கோலக்கா (சீர்காழி சட்டநாதர் கோவில் எதிரில்) திருநெல்லிகா (திருத்துறைப் பூண்டி) திருகுறக்குக்கா (நீடுர் அருகில்) மற்றும் இக்கோயில் திரு கோடிக்கா ஆகும். சோலைகளுக்கு இடைய அமைந்துள்ள ஊர் என பொருள் கொள்ளலாம்.

திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள். வலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலத்தில் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர் மத்தளம் அடிப்போர் தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ளபூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி அகத்திய முனிவர் தட்சிணாமூர்த்தி அத்ரி முனிவர் பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. கோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் உள்ளது. ராஜகோபுர வாயிலில் காமதேனு கற்பக விருட்சம் குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன் நீதி வரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் உள்ளனர்.

திருக்கோடீஸ்வரரின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை கரகம் அபயஹஸ்தம் தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும் தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்குபுற விமானத்தில் சுவாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது. திருக்கோடிகா கோயிலில் மேற்கு திருச்சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளது. அடுத்து முருகன் சந்நிதி ஆறுமுகம் பன்னிரண்டு கைகள் கைகளில் நாககனி வில் பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி தேவானையுடன் அசுர மயில் வாகனத்தில் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக் யஜுர் சாம அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி தன் மகன் மாந்தி மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும் மாந்தியின் முகம் ரிஷப முகமாயும் இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது.

சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் மற்றொரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமன் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும் காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும் அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். பாவக சேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான ஜப தப தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன் யமலோகத்தில் முழக்கமிடுகிறான். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டு விட்டதால் யமனிடமிருந்து விடுபட்டு பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.

திருக்கோடீஸ்வரரின் வடபுற திருச்சுற்று சன்னதியில் திருக்கோடீஸ்வர் கருவறைச் சுற்றின் அருகில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை வலக்கைகளில் சூலம் பாணம் கட்கம் (கத்தி, சங்கு இடக்கைகளில் சக்கரம் வில் கேடயம் ஆகியவையும் உள்ளன. இடக்கை ஒன்றை தொடையில் ஊன்றி உள்ளார். துர்க்கையை ஒட்டி சண்டிகேஸ்வரர் தனிச்சன்னதியும் அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சன்னதி உள்ளது. ஒரு சமயம் கைலாசத்தையும் திரிக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது இத்தலம் உயர்ந்து கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட பூமி இது. இங்கே கணபதியின் மகிமையும் கூடியுள்ளது. இந்த இடத்தில் செய்யும் தியானம் ஹோமம் ஜபம் எல்லாம் மும்மடங்காகப் பலிக்கிறது. இங்கே காவிரி உத்திரவாஹினியாக இருக்கிறாள். என்னுடைய சன்னதியில் இருக்கும் இந்த உத்திரவாஹினியில் கார்த்திகை மாதம் ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லா பாவங்களும் தொலைந்துவிடும். இவ்வாறு பகவான் கூறி அருளினார். மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது.

திருக்கோடிகா ஊருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும் இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை திருமங்கலக்குடி திருக்குரங்காடுதுறை திருவாவடுதுறை திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பி விடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டவர். ஒரு நாள் மாலை திருக்கோடிக்கா ஆலயத்தில் திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடியவில்லை. ஒரே இருட்டு வேறு அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஈஸ்வரா இப்படி ஏன் சோதனை செய்கிறாய் என்று துயரப்பட்டுக்கொண்டே நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறேன் என்றார். ஹரதத்தருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தெய்வாதீனமாக அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றிக்கொண்டு வேகமாக நடந்து கஞ்சனூரை அடைந்து அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி அதைப் பெற்றுக் கொண்டு போய்விட்டார். திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் மறுநாள் காலை நந்தி அம்பாள் சுவாமி விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில் அன்னமும் சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர் திருக்கோடீஸ்வரர்தான்.

ஈசனால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமனை உயிர் பெறச் செய்வதில் இத்தலத்து விநாயகர் பேருதவி செய்ததால் கரையேற்று விநாயகர் எனப் பெயர் பெற்றிருக்கிறார். திருக்கடையூரில் கால சம்ஹாரம் நடந்த பிறகு யமதர்மன் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து அனைத்தும் சிவத்திற்குள் அடக்கம் என்ற நிலையுணர்ந்து பிரம்புக் காட்டினுள் உறைந்துள்ள திருகோடிக்காவல் ஈசனுக்குள் ஐக்கியமாகி அசைவற்றுக் கிடந்தார். காலன் இயக்கமற்று விட்டதால் பூலோகத்தில் மரணம் நின்றுவிட்டது. இதனால் பூமி தன் பாரம் தாங்காமல் பூமாதேவி செயல்பட முடியாமல் சகல பூலோக காரியங்களும் முரண்பட்டு நிலை தடுமாறியது. விபரீதத்தை உணர்ந்த இந்திராதி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட எண்ணி திருக்கோடிக்காவல் நோக்கி ஓடி வந்தனர். அப்போது கங்கைக்குச் சமமான காவிரி நதியைக் கடக்க எண்ணுகையில் திடீரென காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துச் சுழலில் சிக்கி மீள முடியாது தவித்தனர். ஈசனைச் சந்திக்கும் அவசர கதியில் முதற்கடவுளாம் விநாயகரைப் பூஜிக்காது வந்ததனால் ஏற்பட்ட சோதனை இது என்பதை உணர்ந்தனர். உடனே ஆற்று மணலிலேயே விநாயகப் பெருமானது உருவத்தைச் சிருஷ்டி செய்து அவரிடத்தே பிழை பொறுத்துக் காக்க வேண்டினர். இதனால் மனமிரங்கிய விநாயகரும் ஆற்று வெள்ளத்தைத் தணித்துத் தேவர்களைக் கரையேற்றினார். அப்போது முதல் இத்தலத்து விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற நாமம் தாங்கி அருளி வருகிறார் ஆற்று மணலினால் ஆன திருமேனி என்பதால் அபிசேகங்கள் இவருக்குச் செய்யப்படுவதில்லை.

ஆழ்வார்கள் வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன் அவர்களுக்கு காட்சி தரவில்லை. மாறாக திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள் அங்கே செல்லுங்கள் என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும் ஆவலுடன் புறப்பட்டு திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கிய போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக் கடந்து வரமுடியாமல் ஆழ்வார்கள் சிரமப்பட்டபோது அகத்திய முனிவர் அவர்கள் முன் தோன்றி ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வார்கள் கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.

பிருங்கி மஹரிஷியானவர் தனித்த சிவமே பரம்பொருள் என்று சக்தியின்றி சிவனை மட்டுமே வழிபடலானார். இதைக் கண்டு கோபம் கொண்ட அன்னை அவருடைய கால்கள் இரண்டையும் செயலிழக்கச் செய்தாள். ஆனால் பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் முறையிட்டு மூன்றாவதாக ஒரு காலைப் பெற்றுச் சிவனை சுற்றி வரலானார். இதைப் பார்த்த அன்னை மேலும் கோபம் கொண்டு அவரை நடக்கவே முடியாதபடி முற்றிலும் சக்தி அற்றவராகச் செய்தார். மனம் தளராத பிருங்கி சிவபெருமானைத் துதித்து வேண்டி ஒரு வண்டாக உருப்பெற்று சுவாமியை மட்டும் சுற்றிப் பறந்தார். இதைக் கண்ணுற்ற அன்னை சுவாமியிடம் வரம்பெற்று அவர் உடம்பில் பாதி ஆனார். (அர்த்த நாரீஸ்வரர்). இதைச் சகிக்காத வண்டு உருவில் உள்ள பிருங்கி அர்த்த நாரீஸ்வரரின் உடலில் பாதியை துளைத்து சிவனை தனிமைப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். இத்துடன் தனது சோதனையை நிறுத்திக்கொண்ட பரம்பொருள் அன்னையின் கோபத்தை தணித்து பிருங்கியின் தீவிர சிவபக்தியை நிலைநாட்டி அவரை ஆட்கொண்டார். துர்வாச மகரிஷி தட்சன சிதம்பரம் என அழைக்கப்படும் திருக்களர் ஊரில் பாரிஜாதவனேஸ்வரரை தரிசித்து விட்டு ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜரை வணங்கி விட்டு திருக்கோடிக்கா வந்தடைந்தார். வேத்ரவனேஸ்வரரான திருகோடீஸ்வரரை தரிசிக்க ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில் அம்பாளின் சன்னதியைத் தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுரசுந்தரி அன்னை எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும் சிவன் வேறு சக்தி வேறு எனப் பிரித்து எண்ணி விடுவாரோ என எண்ணி அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக்கூடாது என்று தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுத்தாள். இதை உணர்த்தும் வகையில் சுவாமி சந்நிதியில் திருக்கோடீஸ்வரருக்கும் துர்வாசர் சிலைக்கும் நடுவில் மகா மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை உள்ளது.

திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்ததால் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில் முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில் சனகாதி முனிவர்களுக்கு சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம். கிர்த யுகத்தில் பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்) மூன்று கோடி மந்திர தேவதைகளும் சாயுஜ் முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு வேங்கடகிரியில் திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில் மந்திரங்களைக் சொல்லிக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த துர்வாச மகரிஷி இவர்களின் நோக்கத்தை அறிந்து பரிகாசித்தார். பின் அவர்களைப் பார்த்து சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும் குருவிற்கு பணிவிடை செய்து அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று பிரம்ம ஞானம் பெற்று பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் ஞானமுக்தி பெற முடியும் என்று கூறினார். இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப் பழித்த துர்வாசரைத் தூற்றினர். முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து இக்கணமே தாங்கள் முக்தியடையவோம் என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது. வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது என்று துர்வாசர் சபித்தார்.

துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள் தாங்கள் சபதம் செய்தது போல் திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள் துர்வாசருடைய அறிவுரையை ஏற்று அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி டுண்டிகணபதி விஸ்வேஸ்வரர் விசாலாட்சி பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் திருக்கோடீஸ்வரர் அவரது கனவில் தோன்றி மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து அத்யாத்ம வித்தையை கற்றுத் தரும்படியும் ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும்படியும் கட்டளையிடுகிறார். அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு அவர்களுடன் முக்கோடி மந்திர மந்திர தேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார். அப்போது திருக்கோடீஸ்வரர் அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள் பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில் கொண்டு வந்திருந்த சிருங்கோத்பவ தீர்த்தத்தை பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது. இதைக் கண்ணுற்ற மந்திர தேவதைகள் துர்வாசரைப் பார்த்து உங்கள் முயற்சியாலோ பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்கவில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள் என்று சூளுரைத்தார்கள். மந்திர தேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்.

புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திர தேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம் நைமிசாரணியம் துவாரகை கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் நாராயணன் தோன்றி நீங்கள் துர்வாசரை விரோதித்துக் கொண்டு அவரது கோபத்திற்கு ஆளானது மிகத் தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள் எனக் கூறுகிறார். மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றபோது நாரத முனிவர் தோன்றி பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெறமுடியும் என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே இவரும் கூறியதைக் கேட்டு கோபமடைந்த மந்திர தேவதைகள் நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள் மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து கடைசி ஜென்மத்தில் நாராயணனின் அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள் என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திரதேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும் நாராயணனைக் குறித்து தவமிருந்து விட்டு கடைசியாக சுவேத தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு என்ன செய்வது என்று புரியாத நாராயணன் வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி ஆலோசனை கேட்கிறார்.

வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார். இந்த உலகத்தில் பாவக சேத்திரம் ஒன்று உள்ளது அதில் அரசமரம் அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு சர்வேஸ்வரன் திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் திரிபுரசுந்தரி தேவியுடன் இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம் சித்ர குப்த தீர்த்தம் யம தீர்த்தம் வருண தீர்த்தம் குபேரதீர்த்தம் அக்னி தீர்த்தம் துர்கா தீர்த்தம் பூத தீர்த்தம் காளி தீர்த்தம் நிர்நதி தீர்த்தம் என்ற மகா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து தர்ம அர்த்த காம மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் சித்தி பெற்றன. மேலும் சப்தரிஷிகளும் சனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள். தவிர ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர் தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம் தட்சயாகத்தில் பல பேரைக் கொன்றதால் எனக்கும் காளிக்கும் ஏற்பட்ட மகா ஹத்யாபாபம் இவற்றிற்கெல்லாம் திருக்கோடிக்கா ஸ்தலத்தில்தான் பாப நிவர்த்தி கிடைத்தது. இந்த சேத்திரத்தின் மகிமையை யாராலும் வர்ணித்துச் சொல்ல இயலாது என்று கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும்படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். நாராயணனும் அவ்விதமே திருக்கோடிக்கா வந்து இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி அரச மரத்தை பிரதட்சணம் செய்து பரமேஸ்வரனைக் குறித்து தவமிருந்து,அசுவமேத யாகங்கள் செய்தார். இதனால் ஈஸ்வரன் மனம் மகிழ்ந்து நாராயணன் முன்தோன்றி அவரது விருப்பம் என்னவென்று கேட்டார். நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீங்கள் தவம் இருந்ததாலும் பெரிய யாகங்கள் செய்ததாலும் உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன் என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார்.

நாராயணன் திரிகோடி பிராமணர்களிடம் அவர்களை திருக்கோடிக்கா சென்று திருக்கோடீஸ்வரரைக் குறித்து ஒரு வருடம் தவம் இருக்கும்படி கூறுகிறார். மந்திர தேவதைகளும் மகிழ்ச்சி அடைந்து திருக்கோடிக்காவை அடைந்து பரமேஸ்வரனைக் குறித்து தவம் இயற்றத் தொடங்கினர். இத்தருணத்தில் நாரதர் துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில் மந்திர தேவதைகளுக்கு முக்தி கிடைக்கப் போகிறது. அதுமட்டுமன்று அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. நாராயணனின் முயற்சியால் அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால் தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு கணபதியைத் தொழுகிறார். கணபதி துர்வாசருக்கு காட்சி கொடுத்தார். அவரிடம் முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித் ததையும் தூஷித்ததையும் கூறி அவர்களுக்கு முக்தி கிடைக்கும் முன் பல இடையூறுகளை உண்டு பண்ண வேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார்.

கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க காவிரி நதியை கும்பகோண மத்யார்ஜுன சேத்திர மார்க்கமாக திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து அர்த்த ராத்திரியில் எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து மந்திர பிராமணர்களை அதில் மூழ்கடித்து திணற அடிக்கிறார். அந்த சமயத்தில் மகா காளியும் வீரபத்திரரும் மகாகணபதியின் கட்டளையின் பேரில் திரிகோடி மந்திர தேவதைகளை மிகவும் துன்புறுத்தினார்கள். வேறு வழி தெரியாத மந்திர தேவதைகள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும் நாரதரையும் போற்றி தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும் ஒரு பிரம்மச்சாரியாக வந்து அவர்களைக் காப்பாற்றி கரையேற்றி விட்டு பிரம்ம வித்தையை பழிப்பதோ வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன். என்று அவர்களிடம் கூறிவிட்டு தமது சுய வடிவத்தைக் காட்டினார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட அவரும் திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை பூஜை செய்யுங்கள் உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி மறைகிறார். பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும்படி வேண்டுகிறார்கள். அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார் என்று துர்வாசர் கூறிவிட்டு நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து லோபா முத்திரையுடன் அகத்தியர் திருக்கோடிக்கா வந்து சேருகிறார்.

திரிகோடி மந்திர தேவதைகள் வேண்டுகோளின்படி அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து முத்திரைகளை சொல்லித் தந்து சிவ பூஜை விதிகளையும் எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து மந்திர பிராமணர்கள் சாஸ்தா காளி துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரை பூஜை செய்தனர். பின் அகத்தியர் திருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில் மணலால் கணபதியை பிரிதிஷ்டை செய்ய எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர் திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர். இந்த சஹஸ்ர நாமம் அபூர்வமானது. இதற்கு சமம் எதுவும் கிடையாது.

த்ரிகோடிஸ்த:
த்ரி கோட்யங்க:
த்ரிகோடி பரிவேஷ்டித: என்று ஆரம்பமாகும் இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு அகஸ்தியர் கற்றுக்கொடுத்தார். அகஸ்தியருக்கு சண்முகராலும் சண்முகருக்கு விநாயகராலும் விநாயகருக்கு சிறுவயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்.

சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஒரு சமயம் பரமேஸ்வரனும் பார்வதியும் ஜலக்கிரீடை செய்யும்போது மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து திரிபுரசுந்தரியானவள் முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாள். இத்தருணம் மகாகணபதி முக்கோடி மந்திர தேவதைகள் முன் தோன்றி தமது மூர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும்படி கூறுகிறார். அதன்படி மந்திர தேவதைகள் நந்திக்கு கிழக்கே பார்த்து ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் நாதேஸ்வரர் சண்டிபீடேஸ்வரர் கஹோனேஸ்வரர் என்ற மூன்று லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு திருப்தி அடைந்த துர்வாசர் கைலாசம் சென்று விநாயகரிடம் திரிகோடி மந்திர தேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய கணபதியும் பரமஸ்வரனிடம் சென்று நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி முறையிட்டார். அதன்படி கைலாசபதியான பரமேஸ்வரன் திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் சாந்நித்யம் ஆகி முக்திக்காக காத்திருக்கும் மூன்று கோடி மந்திர தேவதைகள் முன் தோன்றினர். பிரபோ எங்கள் பாக்கிய வசத்தால் தங்கள் திருப்பாதங்களைக் கண்டோம் என்று அவர்கள் பரவசமானார்கள். சுவாமி சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி தமது பிரம்பால் திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின் அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம் நீரிலிருந்து ஒரு திவ்ய ஜோதி கிளம்பிற்று அந்த ஒளிப்பிழம்பில் மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள் பிரம்மாதி தேவர்கள் சனகாதி முனிவர்கள் முதலியோர் திருக்கோடீஸ்வரரைத் துதிக்கத் தொடங்கினார்கள்.

பரமேஸ்வரன் கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு நந்தியின் கொம்பால் உண்டான இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய சேத்திரம் இது எல்லா சௌபாக்கியங்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது என்று அருளினார். சிறந்த சிவபக்தரான சுதர்சனன் என்ற வைஷ்ணவ சிறுவன் ஹரதத்தராக மாற திருவருள் கிடைத்த தலம். இத்தல அம்பிகை மகானான பாஸ்கரராயரை லலிதா சகஸ்ரநாமத்திற்கு தன் சன்னதியிலேயே உரை எழுத அருள்பாலித்த தலம்.

கிபி 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ பாண்டிய பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர். கிபி 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் இக்கோயிலில் உள்ள லட்சுமி சரஸ்வதி கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கிபி 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விரு கல்வெட்டுகளில் இந்த அரசன் மாணிக்கவாசகர் சுவாமிகளின் உலோகச் சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே கூறிய செய்திகளைத் தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது. தினமும் 5 குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது சுவாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள் மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது. சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த செம்பியன் மாதேவி எடைக்கு எடை பொற் காசுகளை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கத்தை தோற்றுவித்தார். பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதில் சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ளது.

திருக்கோடிகா கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் பல விபரங்களை அறிந்து கொள்ளலாம். சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கிபி எட்டாம் நூற்றாண்டில் 750 ம் வருடத்தில் தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கிபி 950 – 957 க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தம சோழ மன்னர் ஆண்ட சமயம் அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன் மாதேவியாரின் ஆணைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழிவழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன. ராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்கிறது. அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்கிறது. செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ளவதற்காக செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழைவாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம். இக்கோவில் திருவிசைப்பாப்பதிகம் பாடிய கண்டராதித்த சோழரது மனைவியாகிய செம்பியன்மா தேவியாரால் கற்றளியாக ஆக்கப் பெற்றது. சிவபெருமானின் 64 லீலைகளை பல்லவ கால சிற்பங்களில் இத்தலத்தில் காணலாம். பல்லவர்கள் முத்தரையர்கள் பாண்டியர்கள் சோழர்கள் காலக் கல்வெட்டுகள் மொத்தம் 50 உள்ளன. மூன்று கோடி ரிஷிகள் சேக்கிழார் வழிபட்டுள்ளார்கள். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 36 திருக்கஞ்சனூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 36 வது தேவாரத்தலம் திருக்கஞ்சனூர். இறைவன் அக்னீஸ்வரர். இங்கு இறைவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் கற்பகாம்பிகை கற்பாகம்பாள். தலமரம் பலாசமரம் மற்றும் புரசு. தீர்த்தம் அக்கினி தீர்த்தம் பராசர தீர்த்தம். கம்சன் வழிபட்டதால் இத்தலம் கஞ்சனூர் என்று மாறியது. இத்தலத்திற்கு பலாசவனம் பராசரபுரம் பிரமபுரி அக்கினிபுரம் கம்சபுரம் முத்திபுரி என்று வேறு பெயர்கள் உள்ளது. நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் சிலை ரூபமாக இருக்கிறார். இத்தல இறைவன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் முக்தி தாண்டவ மூர்த்தி என அழைக்கப்படுகிறார். பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம். பராசரருக்கு சித்தபிரமை நீங்கியது. பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது. அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது. சந்திரனின் சாபம் நீங்கியது. கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீங்கியது. கலிக்காமருக்கு திருமணம் நடந்தது. மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம்.

மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற நவக்கிரக தலங்களில் இத்தலத்திற்கு செல்ல வேண்டும். நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும் பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு கவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர் சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை கற்றவர். இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண் தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார். நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார்.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடைய பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தை அடைந்தால் இடப்பாக்கம் விநாயகர் தரிசனம் வலப்பக்கம் விசுவநாதர் சன்னதி. அடுத்து அம்பாள் சன்னதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்குச் செல்லும் போது இடப்பக்கம் வெளவால் நெத்தி மண்டபத்தில் விநாயகர் மயூர சுப்பிரமணியர் மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர் கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார். மகா மண்டபத்தில் பைரவர் சூரியன் சனிபகவான் சந்திரன் நவக்கிரக சன்னதி நால்வர் சன்னதிகள் உள்ளன.

கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை திருமங்கலக்குடி திருக்குரங்காடுதுறை திருவாவடுதுறை திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு அர்த்த ஜாம பூஜைக்கு தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை தினம் தனது வழக்கமாகக் கொண்டார். வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவ பக்தராக இருப்பதை அவ்வூர் மக்கள் விருப்பமில்லை. எனவே அவரை அவ்வூர் மக்கள் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியில் அமர்ந்து சிவனின் மகிமையை உலகிற்கு காட்ட வேண்டும் இல்லையெனில் எந்த சிவன் கோவிலுக்கும் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டார்கள். ஊர் மக்கள் கட்டளையிட்டபடி பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலி மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்று சுதர்சனர் மூன்று முறை கூறினார். அவருக்கு உடலில் எந்த விதமான தீக்காயங்களும் ஏற்படவில்லை. இதனைக் கண்ட ஊர் மக்கள் அவரின் மகிமையை அறிந்து அவரை சரணடைந்தார்கள். இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கோயில் நடராஜர் சன்னதியிலும் உள்ளது. இவ்வூரின் பெருமாள் கோயிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளார்கள். ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர்.

ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பது போல காட்சி தருவார். ஒருநாள் அக்கனவு தோன்றவில்லை. காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்ததில் அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும் அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் உணர்ந்தார். இதன் மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வந்தர் அவரை தேடிச்சென்று வணங்கினார். ஆலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும் ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன. ஊருக்குள் வரும்போது அரசமரத்தின் எதிரில் கிழக்கு நோக்கி ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது.

சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் சுரைக்காய் பக்தர் என்ற அடியவர் மனைவியுடன் காட்சிதருகிறார். இவ்வூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுரைக்காய் விற்று பிழைத்து வந்தார். இதனால் இவர் பெயர் சுரைக்காய் பக்தர் என்றாயிற்று. இவரிடம் ஒரே ஒரு சுரைக்காய்தான் எஞ்சியிருந்தது. அதை விதைக்கு ஆகும் என்று அப்படியே வைத்து விட்டார். அந்நிலையில் இறைவன் அவரிடம் விருந்தினராக வந்து உணவிடுமாறு கேட்க அவர் செய்வதறியாது திகைத்தார். விருந்தினருக்கு சுரைக்காய் ஆகாது என்று எண்ணி கலங்கினார். அப்போது இறைவன் அசரீரியாக ஒரு பாதி விதைக்கு ஒரு பாதி கறிக்கு என்று கூறி அருளினார். இறைவனின் ஆணைப்படி பாதி சுரைக்காயை விருந்தினருக்கு உணவு அளித்தும் பாதி விதைக்கும் பயன்படுத்தினார்.

பிராமணர் ஒருவர் புல் கட்டை கீழே போடும் போது தெரியாமல் பசுக்கன்று ஒன்று இறந்தது. இதனால் அவருக்கு பசுதோஷம் நேர்ந்தது. இதனால் பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்கி வைத்துவிட்டனர். அவர் செய்வதறியாமல் ஹரதத்தரிடம் முறையிட்டார். அவ்வாறு முறையிடும் போது பிராமணர் பஞ்சாட்சரத்தைச் சொல்லியவாறே சென்றார். அதைக்கேட்ட ஹரதத்தர் சிவ பஞ்சாட்சரத்தை சொல்லியதால் அப்பாதகம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நேரடிச்சான்று தந்து நிரூபிக்குமாறு கூறினர். ஹரதத்தர் உடனே அந்த பிராமணரை அழைத்து காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அந்த கல்நந்தியிடம் தருமாறு பணித்தார். அப்பிராமணரும் அவ்வாறே செய்து கல்நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும் என்று சொல்லி புல்லைத்தர அந்நந்தியும் உண்டது. அனைவரும் பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமையை உணர்ந்து பிராமணரை தங்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

பராசர முனிவர் பிரம்மா அக்கினி கம்சன் சந்திரன் விருத்தகாளகண்டன் சித்திரசேனன் மார்க்கண்டேயர் சுரைக்கா முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளார்கள். சோழர் விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு நல்லாற்றூர் நாட்டுக் கஞ்சனூர் என்றும் இறைவன் பெயர் அக்னீஸ்வரம் உடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளன. சுந்தரர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்கள்.

நம: பார்வதி பதயே

சிவன் கோயில்களில் நம: பார்வதிபதயே என ஒருவர் சொல்ல ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வார்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தந்தை. தேவர்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் அவருக்கு மகாதேவன் என்று பெயர்.

பூலோகத்தில் உமாதேவியிடம் ஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தர் இறைவனை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தார். இவர் ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷமத்தைக் கேட்டதும் உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாக அழிந்து விட்டது. அதாவது உலகத்தில் துயரமே இல்லாமல் போனது. என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும் உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும் என்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடினார். அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே என்றார் திருஞானசம்பந்தர். அரன் என்றால் சிவன். சிவ நாமம் உலகம் முழுவதும் சூழ துயர்கள் அனைத்தும் தீரும்.

நம: பார்வதீபதயே என்று ஒரு பெரியவர் சொல்ல உடனே அனைவரும் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரியே பக்தியோடு அம்மையப்பனைத் துதித்து ஹர ஹர மகாதேவா என்று சொன்னால் அனைத்து தீயவைகளும் அழிந்து போகும்.

Image result for நம: பார்வதி பதயே"

மாணிக்கவாசகர்

This image has an empty alt attribute; its file name is image-6.png

திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும் சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய இவரை மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அமைச்சராகப் பதவி அமர்த்தினார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தான். தன் புலமையால் தென்னவன் பிரமராயன் எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்த போதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு செய்து வந்தார்.

ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர் பொன்னோடு திருப்பெருந்துறையில் உள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவிலை அடைந்தார். அங்கே ஓரு மரத்தின் அடியில் சிவபெருமான் மானிட வடிவு எடுத்து கையில் ஏடுகள் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்பு சென்று மாணிக்கவாசகர் தங்கள் கரத்தில் இருப்பது என்னவென்று கேட்க அவர் சிவஞான போதம் என்றார். (இது மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் அல்ல) சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் என்னவென்று அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன் என்றார் மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்கு போதித்து திருவடி தீட்சையும் கொடுத்தார் குரு வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர்.

பாண்டிய மன்னன் ஒற்றர்களிடம் அரசனின் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகரை அழைத்துவரக் கட்டளையிட்டான். மாணிக்கவாசகரோ குருவின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை என்று கூறி அந்த ஓலைச்சுவடியை குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குரு ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்து குதிரைகள் வர இப்போது நல்ல நாளில்லை ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல் என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்து கொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் எங்குமே குதிரைகள் தென்படவில்லை என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.

பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை ஒற்றர்கள் மூலம் பிடித்து சுட்டெரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனை தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமான் தமது சிவகணங்களை குதிரை வீரர்களாகவும் நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றி விடுவித்தான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி அவற்றின் சிறப்பைக் கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான்.

அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்து விட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூரரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். மாணிக்கவாசகர் வெயிலில் நின்றதும் சிவபெருமான் கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார். கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்க வேண்டும் என்று முரசு அறிவிக்கிறான். ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்கு ஒருவர் செல்கின்றனர். வந்திக் கிழவி எனும் ஒருவள் மட்டும் தன் வீட்டில் யாருமில்லாததால் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய் அதற்கு கூலியாக நான் விற்கும் பிட்டில் உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது வேலையைத் தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான்.

மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும் படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய் கேட்டது. மன்னவா வாதவூரரின் பெருமையை உலகுக்கு தெரிவிக்கும் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய் என்று அக்குரல் சொல்லிற்று. மாணிக்கவாசகரின் பெருமையை அறிந்த மன்னன் அவரை விடுவித்தான்.

திருவாதவூரரர் அரசவையை விட்டு திருப்பெருந்துறைக்குச் சென்று தங்கி குருபீடம் ஒன்றை நிறுவினார். அங்கு அவர் சிவபுராணம் திருச்சதகம் முதலிய பாடல்களைப் பாடினார். அதன் பின்னர் இறைவனின் ஆணையை மேற்கொண்டு உத்தரகோசமங்கை என்னும் தலத்தில் இருந்து பாடல்கள் இயற்றினார். அதன் பின்னர் தலயாத்திரை புரிந்து திருவண்ணாமலையில் திருவெம்பாவை திருவம்மானை ஆகியவற்றைப் பாடினார். மேலும் பல சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்து கொண்டிருந்தார். அந்த பாடல்கள் அனைத்தும் திருக்கோவையார் என்ற பெயருடன் இருக்கிறது. பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது இலங்கையில் புத்த மதம் மேலோங்கி இருந்தது. தில்லையம்பலத்தைப் பற்றி கேள்விப்பட்டு மன்னனும் புத்தபிட்சுக்களும் தில்லையில் தங்கள் மதத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தில்லைக்கு வந்தனர். அப்போது மன்னன் தனது ஊமை மகளையும் அழைத்து வந்தான். வந்தவர்கள் தில்லையில் தங்கி நாங்கள் சைவர்களோடு வாதம் செய்து புத்த மதத்தை நிலைநாட்ட வந்தோம் என்று தில்லை அந்தணர்களிடம் கூறினார்கள்.

அந்தணர்கள் கலக்கமுற்றார்கள். அன்று இரவு தில்லை நடராஜர் அந்தணர்கள் கனவில் வந்து தில்லைக்கு தற்போது வந்திருக்கும் திருவாதவூரனை அழைத்து வாதம் செய்ய சொல்லுங்கள் அவன் வெல்வான் என்று கூறினார். அந்தணர்கள் திருவாதவூரரிடம் சென்று இறைவன் கூறியதைக் கூறி வாதம் புரிய அழைத்து வந்தனர். வாதம் நடந்தது. புத்தபிட்சுக்கள் தோற்றனர். இதனைப் பொறுக்காத புத்தபிட்சுக்கள் திருவாதவூரரைத் திட்ட ஆரம்பித்தார்கள். இதனை கேட்ட திருவாதவூரர் சரஸ்வதியை வேண்ட புத்தபிட்சுக்கள் அனைவரும் ஊமைகளாயினர். அதனைக் கண்ட இலங்கை மன்னன் பேசுவோரை ஊமை ஆக்கும் ஆற்றல் இருந்தால் ஊமையைப் பேச வைக்கும் ஆற்றல் இருக்குமல்லவா என்று கூறித் தனது மகளை பேச வைக்கும் படி கூறினார். திருவாதவூரரும் இறைவனை வேண்ட மன்னனின் மகள் பேச ஆரம்பித்தாள். இதனைக்கண்ட அனைவரும் திருவாதவூரரிடம் பணிந்து சைவ மதத்திற்கு மாறினர். பின்பு அனைவருக்கும் பேசும் ஆற்றல் வந்தது. மதம் மாறிய புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விக்கு மன்னனின் மகளையே பதில் சொல்ல வைத்தார். புத்தபிட்சுக்கள் கேட்ட கேள்விகளுக்கு மன்னனின் மகள் கூறிய விடைகளே திருச்சாழல் என்னும் பதிகமாக அமைந்தன.

சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி தாங்கள் யாரோ என்று வாதவூரார் கேட்டார். நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை எழுத வந்தேன். நீங்கள் பாடுங்கள் அவற்றை நான் எழுதுகிறேன் என்று கூறினார் வேதியர். அதற்கு ஒப்புக்கொண்ட மாணிக்கவாசகர் பாட பல செய்யுட்களை எழுதி முடித்தார் வேதியர். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும் ஓலைச்சுவடியின் முடிவில் மாணிக்கவாசகன் ஓத சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையொப்பமிட்டு ஓலைச் சுவடிகளைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லை அந்தணர் ஒருவர் அவ்வோலைகளை எடுத்துப் பார்க்க அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடிகளாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த தில்லை அந்தணர்கள் இதன் பொருள் என்ன என்று வாதவூரரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்தில் நடராஜர் முன்பாக அழைத்துச் சென்ற வாதவூரர் இந்தப் பாடல்களின் பொருள் இவரே என்று கூறி நடராஜரைக் காட்டி விட்டு நடராஜர் இருக்கும் மூலஸ்தானத்தினுள் சென்று மறைந்தார்.

திருவாசகம்

  1. திருச்சாழல்

அம்பரமாம் புள்ளித்தோல்
ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர்
எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏது அடுத்தங்கே அமுது
செய்திடினும்
தம்பெருமை தானறியாத்
தன்மையன்காண் சாழலோ.

கேள்வி

உனது பிரானுக்கு பிடித்த உடை போயும் போயும் புலித்தோல் அவன் அமுதமாக விரும்பி அருந்துவது ஆலகால விஷம்? இதில் என்ன பெருமை என்று கூறடி

பதில்:

எம்பெருமான் சிவன் தன்னைக் கொல்ல தாருகா வன முனிவர்களால் ஏவி விடப் பட்ட புலியைக் கொன்று அதை ஆடையாக அணிந்ததையோ அல்லது உலகைக் காக்க ஆலகால விஷத்தை விரும்பி அருந்தியதையோ பறை சாற்றிக் கொண்டதேயில்லை. தனது பெருமையை தானே அறியாத தன்மையவன் அவன் தெரிந்து கொள்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -6

அஸ்தினாபுரத்திற்கு கௌரவர்கள் திரும்பிப் போய்க் கொண்டிருந்த பொழுது பாண்டவர்கள் படைத்திருந்த சௌபாக்கியங்களைப் பார்த்து தனக்கு வந்துள்ள பொறாமை குறித்து துரியோதனன் கர்ணனிடமும் சகுனியிடமும் விவாதித்தான். பாண்டவர்களின் நிறைந்த செல்வத்தையும் பரந்த சாம்ராஜ்யத்தையும் தங்களது சுய முயற்சியினால் தானே பெற்றுள்ளார்கள் என்று சகுனி துரியோதனனுக்கு சமாதானம் சொன்னான். துரியோதனன் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பாண்டவர்கள் அடைந்த முன்னேற்றத்தையும் செல்வப் பெருக்கையும் தன்னால் பார்த்து சகித்துக்கொள்ள முடியவில்லை. எதிரிகளின் ஆக்கத்தை பார்த்துக் கொண்டு இருப்பதை விட மாய்ந்து போவதே மேல் என்று வெளிப்படையாக துரியோதனன் சகுனியிடம் சொன்னான். இப்பொழுது சகுனியின் துர்புத்தி வெளியாயிற்று. பாண்டவர்களை வெல்ல நம்மால் இயலாது. ஆக சூதாடுவது ஒன்றே சரியான உபாயமாக இருக்கும். யுதிஷ்டிரனுக்கு சூதாட்டத்தில் பயிற்சி போதாது. ஆயினும் அவன் அதை ஓரளவு சூதாட விரும்புகின்றான். சூதாட்டத்தில் எனக்கு வேண்டியவாறு திறமை உள்ளது. ஆகையால் சூதாடி பாண்டவர்களை ஏமாற்றி நாடு நகரம் அவர்களது செல்வம் அனைத்தையும் வாங்கிவிடலாம் என்று சகுனி துரியோதனனிடம் கூறினான். துரியோதனனும் இதனை ஆமோதித்தான்.

அஸ்தினாபுரம் திரும்பிய பிறகு துரியோதனன் விரைந்து தனது தந்தையிடம் சென்றான். பாண்டவர்களின் செல்வம் தம்முடைய செல்வம் மற்றும் இரு தரப்பினரிடமும் படைத்திருந்த ராஜ்யங்களில் உள்ள பாகுபாடுகளை தந்தையிடம் அவன் விளக்கிக் கூறினான். நம்மை விட பலமடங்கு இந்திரப்பிரஸ்தம் மேலோங்கி மிளிர்ந்து இருக்கின்றது. அவர்களை போரில் வெற்றி பெற்று இந்திரப்பிரஸ்தத்தை நம்மால் பெற இயலாது. ஆகவே இந்த இந்திரப்பிரஸ்தத்தை சூதாடி அதிகரித்துக் கொள்ள அனுமதி தாருங்கள் என்று தந்தையின் அனுமதியை துரியோதனன் வேண்டி நின்றான்.

திருதராஷ்டிரன் இதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. துரியோதனன் கூறிய அனைத்திற்கும் தடை போட்டார். ஆனால் துரியோதனின் பிடிவாதத்திற்கும் சினத்திற்கும் சூழ்ச்சிக்கும் இறுதியில் திருதராஷ்டிரன் சம்மதித்தார். சூதாடுவதற்க்காக மாளிகை ஒன்றை விரைவில் கட்டுவதற்கு ஏற்பாடு ஆயிற்று. அத்திட்டம் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்டது. திருதராஷ்டிரன் பாண்டவர்களை அழைத்து வரும்படி விதுரருக்கு உத்தரவிட்டார். புதிதாக கட்டியுள்ள மண்டபத்தில் உற்றார் உறவினர்களோடு அளவளாவி விளையாடுவது அந்த அழைப்பின் நோக்கம் என்றான். ஆனால் இந்த ஏற்பாடு விதுரருக்கு பிடிக்கவில்லை. பாண்டவர்களும் கௌரவர்களும் அவரவர்களுடைய ராஜ்யத்தில் மகிழ்வுடன் வாழ்ந்து இருக்கின்றனர். பகடை விளையாட பாண்டவர்களை கூப்பிடுவlன் வாயிலாக பகையும் வேற்றுமையும் வளரும். இந்த விளையாட்டு வினையாக முடியும் என்று விதுரர் எச்சரிக்கை செய்தார். ஆனால் திருதராஷ்டிரன் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. அரசகுமாரர்கள் ஓய்வு நேரங்களில் பொழுதுபோக்காக பகடை விளையாடுவது பழக்கம் என்றும் புதிதாக கட்டப்பட்டு இருக்கின்ற மண்டபத்தை பார்க்க பாண்டவர்களை அழைத்து வர வேண்டும் என்று விதுரருக்கு திருதராஷ்டிரன் உத்தரவிட்டான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -5

கிருஷ்ணன் சிசுபாலனுடன் சண்டையிட போகிறேன் என்று சொல்லி சிசுபாலனை நோக்கி செல்வதை பார்த்து அரசர்கள் அனைவரும் ஸ்தம்பித்து போனார்கள். யுதிஷ்டிரன் துயரத்தில் இருந்தான். பீஷ்மர் புன்னகையுடன் இருந்தார். கிருஷ்ணன் சிசுபாலன் மீது கொண்டிருப்பது கோபம் அல்ல. அனுக்கிரக மூர்த்தியாக நின்று கொண்டு சக்கராயுதத்தை சிசுபாலன் மீது கிருஷ்ணன் ஏவினான். சக்கராயுதம் சூரியப் பிரகாசத்தோடு வெட்டவெளியில் சுழன்று சென்று சிசுபாலனுடைய தலையை அவன் உடம்பில் இருந்து விடுவித்தது. சக்கராயுதம் பிறகு கிருஷ்ணன் கையில் வந்து அமர்ந்தது. சிசுபாலனுடைய மேனியிலிருந்து ஒளி ஒன்று கிளம்பி கிருஷ்ணனின் பாதங்களில் வந்து ஒதுங்கியது. இந்த சிசுபாலன் வேறு யாருமில்லை வைகுண்டத்தில் துவார பாலகர்களாக இருந்த ஜயன் விஜயன் ஆகிய இருவருள் இவன் முன்னவன் ஆவான். மகாவிஷ்ணுவின் ஆணைக்கு உட்பட்டு அவருக்கு எதிராக எடுத்த மூன்றாவது பிறவியை முடித்துக் கொண்டு அவன் கிருஷ்ணனிடம் தஞ்சம் அடைந்தான்.

ராஜசூய யாக்ஞம் மங்களகரமாக முடிந்தது என்று கூற முடியாது. வேந்தர்களில் பலர் அதிருப்தி அடைந்திருந்தனர். பொருந்தாத சில சகுனங்கள் தென்பட்டன. உலகுக்குக் கேடு காலம் வந்து கொண்டிருக்கின்றது என்று ரிஷிகள் கூறினர். இத்தகைய சூழ்நிலையில் யுதிஷ்டிரன் சக்கரவர்த்திக்கு எல்லாம் சக்கரவர்த்தி என்னும் பட்டத்தைப் பெற்றான்.

துரியோதனன் சகுனி கர்ணன் ஆகிய கௌரவர்கள் அஸ்தினாபுரத்திற்கு உடனே திரும்பிப் போகவில்லை. மயனால் அமைக்கப்பட்டு இருந்த மாளிகையை நன்கு ஆராய்ந்து பார்க்க அவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் தங்கியிருந்தார்கள். பாண்டவர்களும் அவர்களை அன்புடன் உபசரித்து வந்தார்கள். விருந்தினர்களாக தங்கியிருந்த அவர்களை மகிழ்விக்க பல பல இடங்களை காட்டினார்கள். இந்த மாளிகையினுள் வியப்புக்குரிய வேலைப்பாடுகள் பல இருந்தது. அவர்கள் அவைகளை கூர்ந்து கவனித்துப் பார்த்தார்கள். நீண்ட நடைபாதை ஒன்றின் வாயிலாக நடந்து கொண்டிருந்த பொழுது துரியோதனன் தடாலென்று தண்ணீருக்குள் விழுந்து முழுவதும் நனைந்து போனான். ஏனென்றால் தண்ணீரின் மேற்பரப்பில் முற்றிலும் நிலம் போன்று தென்பட்டது. வேறு ஒரு இடத்தில் துரியோதனன் வாயிலின் மேல் படியின் மீது தலையை மூட்டிக் கொண்டான். அதற்குக் காரணம் வாயில்படி இருந்தும் அது கண்ணுக்குப் புலனாகவில்லை. இதைப்போன்ற வியப்புக்குரிய அமைப்புகள் பல அந்த மாளிகையினுள் அமைந்திருந்தது. கௌரவர்கள் ஏமாற்றம் அடைந்த பொழுதெல்லாம் நகைப்புக்கு ஆளானார்கள். அவர்கள் இதனை விளையாட்டாக பொருட்படுத்தவில்லை. வெறுப்புடனும் பொறாமையுடனும் பார்த்தார்கள். ஆனால் அதை துரியோதனன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. விளையாட்டாக எடுத்துக் கொண்டது போன்று பாசாங்கு பண்ணினான்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -4

ராஜசூய யாக்ஞம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் முதல் மரியாதைக்கு ஏற்றவர் யார் என்னும் வினா எழுந்தது. பாட்டனாராகிய பீஷ்மரும் பாண்டவர்களும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர். வந்திருந்தவர்களில் கிருஷ்ணனை தலை சிறந்தவன். கிருஷ்ணனுக்கே முதல் மரியாதை செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய தெளிவான முடிவு. அதன்படியே சகோதரர்கள் மிக இறைவனாகிய சகாதேவன் கிருஷ்ணனுக்கு பாத பூஜை செய்து பிறகு புஷ்பங்களை கொண்டு வழிபாடு செலுத்தினான்.

ராஜசூய யாக்ஞம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களில் சிசுபாலன் என்பவன் எழுந்து நின்றான். கிருஷ்ணனுக்கு முதல் மரியாதை செய்வதைப் பார்த்து உரத்த குரலில் கடகடவென்று சிரித்தான். அடுத்தபடியாக பீஷ்மரையும் யுதிஷ்டிரனையும் பொருந்தாத பொன் மொழிகள் பேசி அவமானப்படுத்தினான். அதன் பிறகு கிருஷ்ணனையும் ஆடு மேய்ப்பவன் என்று கூறி அவமானப்படுத்தினான். தெய்வ பொலிவுடன் இருந்த இடம் திடீரென்று கீழ்நிலைக்கு மாறியது குறித்து யுதிஷ்டிரன் திகைத்துப் போனான். பீமன் கோபாவேசத்துடன் குமுரிக் கொண்டிருந்தான் சகாதேவனுடைய கண்கள் செக்கசெவேல் என்று நிறம் மாறின. அவரவர் பாங்குக்கு ஏற்ப அவையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு விதங்களில் மனம் குழப்பினர். ஆனால் பீஷ்மர் கிருஷ்ணர் இருவர் மட்டும் எக்காரணத்தை முன்னிட்டும் குழப்பம் இல்லாத சாந்தமூர்த்திகளாக அமர்ந்திருந்தனர்.

சிசுபாலன் பேசுவதை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தான். அனைவரையும் அவமானப்படுத்தி கொண்டே இருந்தான். பொருந்தாத பொருந்தாத சொற்களைக் கூறி கிருஷ்ணனையும் பாண்டவர்களையும் அவமானப் படுத்திக் கொண்டே இருந்தான். அடுத்தபடியாக ஆட்சேபனை தெரிவிக்கும் பொருட்டு சபையை விட்டு வெளியேறினான். அவனுடைய செயலுக்கு உடந்தையாய் இருந்த வேறு சில வேந்தர்களும் அவனோடு வெளியேறினர். வெளியே நின்று கொண்டு சிசுபாலன் கிருஷ்ணனுக்கு சிறிதாளவாவது ஆண்மையை இருந்தால் அவன் என்னோடு சண்டைக்கு வரட்டும் என்று அறைகூவினான்.

கிருஷ்ணர் சபையில் எழுந்து நின்று அனைவரையும் பார்த்து இந்த ராஜசூய யாக்ஞம் இனிதே நிறைவேற வேண்டும் என்று நான் பெருமுயற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால் இந்த சிசுபாலன் என்னை அவமானபடுத்துகின்றான். அவன் என் மீது சொல்லும் நூறு அவமானங்களை சகித்துக் கொண்டு இருப்பேன் என்று அவனுடைய அன்னைக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். இப்பொழுது அவமானத்தின் எண்ணிக்கை நூறுக்கும் மேல் சென்று விட்டது. மேலும் அவனோடு நான் சண்டையிட வேண்டும் என்று அழைக்கின்றான். அவனோடு சண்டையிடப் போகிறேன் என்று கிருஷ்ணன் சிசுபாலனின் நோக்கி சென்றார்.

மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -3

கிருஷ்ணன் அர்ஜுனன் பீமன் மூவரும் ஜராசந்தனைப் பற்றி கூறியவற்றைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன் ஜராசந்தனை கொல்வதற்கு அனுமதி வழங்கினான். இப்பொழுது கிருஷ்ணனும் பீமனும் அர்ஜுனனும் வழிப்போக்கர்கள் போன்று மாறுவேடம் அணிந்து ஜராசந்தன் இருக்கும் மகத நாட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் அரண்மனைக்கு சென்று ஜராசந்தனை துவந்த யுத்தத்திற்கு வரும்படி அழைத்தனர்.

மூவரையும் பார்த்த ஜராசந்தன் பீமனே மூவருள் என்னுடன் சண்டையிட தகுதியானவன் என்று கூறி பீமனோடு சண்டையிட துணிந்தான். இருவருக்குள் சண்டை நெடுநேரம் நிகழ்ந்தது. பிறகு பீமன் ஜராசந்தனை இரண்டாக கிழித்து தரையில் போட்டான். ஆனால் இரண்டாக கிழிந்த ஜராசந்தனின் இரண்டு பகுதிகளும் மீண்டும் ஒட்டிக்கொண்டது. ஜராசந்தன் உயிர் பெற்று எழுந்து புதிதாக சண்டையிட துவங்கினான். இருவருக்குள் சண்டை நடந்து கொண்டிருந்த போது கிருஷ்ணன் வைக்கோல் ஒன்றை எடுத்து அதை இரண்டாக கிழித்து அதனை மாற்றி தரையில் போட்டான். அதை பார்த்த பீமனுக்கு விஷயம் விளங்கியது. அவன் ஜராசந்தனை மீண்டும் இரண்டாக கிழித்து உடலை மாற்றி போட்டான். இப்போது கிளிந்த இரண்டு பகுதிகளும் ஒட்டவில்லை அத்தோடு ஜராசந்தன் அழிந்தான்.

சிறையிலிருந்த அனைத்து ராஜகுமாரர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ஜராசந்தனின் மகன் மகத நாட்டிற்கு அரசனாக்கப்பட்டான். சண்டையில் வெற்றி வீரர்களாக மூவரும் இந்திரப்பிரஸ்தத்திற்கு திரும்பினார். யுதிஷ்டிரன் அவர்களின் பராக்கிரமத்தை பெரிதும் பாராட்டினான். மகத நாட்டில் தாங்கள் புரிந்த வீரச் செயலை துவாரகா வாசிகளுக்கு எடுத்துச் சொல்ல கிருஷ்ணர் துவாரகாவிற்கு புறப்பட்டான்.

ராஜசூய யாக்ஞம் சிறப்பாக நடைபெற பீமன் அர்ஜுனன் நகுலன் சகாதேவன் ஆகிய யுதிஷ்டிரனின் நான்கு சகோதரர்களும் நான்கு திசைகளில் சென்று ஆங்காங்கு இருந்த அரசர்களின் நட்பையும் செல்வத்தை பெற்றார்கள். எடுத்த காரியம் நன்கு நிறைவேற்றப் பெற்று நால்வரும் தங்கள் தலைமை பட்டணத்திற்கு வெற்றியுடன் திரும்பினார்கள். அரசர்கள் அனைவரும் ராஜசூய யாக்ஞத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அஸ்தினாபுரத்தில் இருந்த முதியோர்களும் தாயாதிகளும் அந்த யாக்ஞத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தம் சொர்கம் போன்று இருந்தது. ராஜசூய யாக்ஞம் அற்புதமாக நிறைவேறியது. பாண்டவர்களிடம் மேன்மையும் மகிமையும் மிளிர்ந்தது. இதன் காரணமாக கௌரவர்களிடம் வெறுப்பும் பொறாமையும் உருவெடுத்தது. ராஜசூய யாக்ஞம் இனிது நிறைவேறியது. வந்திருந்த விருந்தினர்களுக்கு வந்தனையும் வழிபாடும் செலுத்துவது கடைசி நிகழ்ச்சி ஆகும்.