வைத்தீஸ்வரன் கோவில்

டில்லியை நவாப்கள் ஆண்ட கால சமயத்தில் அங்கிருந்து பெரும் படைகளுடன் புறப்பட்டு வழிநெடுக ஆங்காங்கே கோயில்களில் இருக்கும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டே வந்தனர். அப்படி வரும்பொழுது, தமிழகத்திலும் புகுந்து, சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயிலை நெருங்கியது. அப்போது படைத்தளபதிக்கு திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை.

இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை முத்துக்குமரா கொடியவன் நெருங்கி விட்டார்களே அருள் வடிவான உன் மகிமை அறியாமல் உன் ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவார்களே என்று முறையிட்டு அழுதார். அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார். அவர் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி சரவணா வருத்தங்கொள்ளாதே அத்தளபதிக்கு கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கியுள்ளது. நாளை காலை இப்பொட்டலத்திலுள்ள மருந்தை அவருக்கு கொடுத்து அவனை விழுங்கச் செய் என்று கூறி மறைந்தார். கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில் ஒரு பொட்டலம் இருந்தது.

விடிந்ததும் தளபதி இருந்த முகாமிற்கு சென்று காவலர்களிடம் உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது என்றார். அவரை அழைத்துச் சென்று தளபதியிடம் விஷயத்தை கூறினர். ஐயா என் வயிற்று வலியை உங்கள் மருந்து தீர்த்து வைத்தால் உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன் என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில் வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி வேண்டியதைக் கேளுங்கள் என்றார். சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்துக் கூறினார். இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்தான் தளபதி. தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன் ஏராளமான செல்வத்தையும் முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார். இதை நினைவுறுத்தும் விதமாகத் தான் இன்றும் செல்வ முத்துக் குமார சுவாமிக்கு தீபாராதனை நடைபெறும் காலங்களில் தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு உபச்சாரம் நடைபெறுகிறது.

பக்தி

ஆன்மிக நாட்டம் அதிகம் உள்ள ஒரு முதிய செல்வந்தர் ஒரு புனிதத் தலத்திற்கு பாலைவன வழியில் பயணித்துக் கொண்டு இருந்தார். வழியில் தங்கி இளைப்பாற இடமோ உணவு உண்ண வழியோ இல்லாமல் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதைக் கவனித்தார். இறைவனை நாடிப் போகும் பக்தர்கள் இப்படி அவதியுறுகிறார்களே என்று இரக்கப்பட்ட அவர், அவர்கள் குறை போக்க ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். புனிதத் தலத்தில் இறைவனைத் தொழுது விட்டுத் திரும்பிய பின் அவர் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார். பாலைவனத்தில் ஒரு பெரிய கூடாரத்தைக் கட்டி அந்த வழியாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்களுக்கு உண்ண உணவும் இளைப்பாறிச் செல்ல வசதியும் ஏற்படுத்தித் தர முடிவு செய்தார். அதையும் தானே அங்கு தங்கிச் செய்ய நினைத்த அவர் மகன்களிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்து விட்டுத் தன் செல்வத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

பாலைவனத்தின் மத்தியில் அந்தப் பெரியவர் பெரிய கூடாரம் இட்டுக் கொண்டு அதில் சில வேலையாட்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். புனித யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு அவர் இலவசமாக நீர் மற்றும் உணவும் இளைப்பாற வசதிகளும் தந்தார். ஆனால் வருபவர்கள் தொழுகை நடத்தி இறைவனை வணங்கிய பின்னரே அவர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. அதை ஒரு கொள்கையாகவே அவர் வைத்திருந்தார். பாலைவன வழியாக பயணித்த அனைவருக்கும் அவர் சேவை பெரிய உபகாரமாக இருந்தது. புனிதத் தலத்திற்குச் செல்லாமல் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் அவர் கூடாரத்திற்கு வந்து தொழுகை நடத்தி சாப்பிட்டு இளைப்பாறி விட்டுத் திருப்தியுடன் சென்றார்கள். அந்தப் பெரியவரும் அந்தப் பயணிகளுக்கு உதவ முடிந்ததில் பெரும் திருப்தியை உணர்ந்தார். பசியுடனும் களைப்புடனும் கூடாரத்திற்குள் நுழையும் மக்கள் திருப்தியுடனும், உற்சாகத்துடனும் கிளம்புவதைக் காணும் போது இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்கே செய்யும் சேவை போல் அவருக்கு நிறைவைத் தந்தது. அவரும் ஒரு ஆளிற்காவது உணவளிக்காமல் உணவருந்தியதில்லை. அவர் தொழுது முடித்தாலும் கூட யாத்திரீகர்களில் ஒருவராவது வந்து தொழுகை நடத்தி முடிக்கும் வரை காத்திருந்து அவருடன் சேர்ந்து தான் அவரும் உண்பார்.

ஒரு நாள் தட்பவெப்ப நிலை மோசமாக இருந்தபடியால் பாலைவனத்தில் நீண்ட நேரம் யாரும் காணவில்லை. பெரியவர் ஒருவராவது வரட்டும் என்று உணவருந்தாமல் காத்திருந்தார். நீண்ட நேரம் கழித்து ஒரு பயணி களைத்துப் போய் வந்தான். அவனைப் பார்த்தவுடன் பெரியவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை மனமார வரவேற்று உபசரித்த பெரியவர் சொன்னார். வாருங்கள். கை கால் கழுவி விட்டு இறைவனைத் தொழுங்கள். உணவு தயாராக இருக்கிறது, இறைவனைத் தொழுவதா? நானா? என்றான் அவன். அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? நான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதில்லை. நான் இது வரை ஒரு முறை கூட இறைவனைத் தொழுததும் இல்லை, பெரியவர் வருத்தத்தோடு சொன்னார். நான் இங்கு வசிப்பதையும், இந்த வழியாகப் புனிதத் தலத்திற்குப் பயணிக்கும் இறை உணர்வாளர்களுக்கு உணவு தந்து உபசரிப்பதையும் இறை பணியாகவே செய்து வருகிறேன். அதனால் இறைவனைத் தொழாதவருக்கு நான் உணவு தருவதில்லை. அவன் உறுதியாகச் சொன்னான். இறைவனைத் தொழுதால் தான் உணவு கிடைக்கும் என்றால் எனக்கு தங்கள் உணவு தேவை இல்லை, அவர் எவ்வளவோ சொல்லியும் அவன் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரும் அவன் தொழாமல் உணவு பரிமாற சம்மதிக்கவில்லை. கடைசியில் அவன் பசியோடே அங்கிருந்து வெளியேறினான்.

பசியோடவே இருந்தாலும் இருப்பேனே தவிர இறைவனை வணங்க மாட்டேன் என்று அவன் பிடிவாதமாக இருந்தது அவருக்கு திகைப்பாக இருந்தது. அன்று முழுவதும் வேறு யாரும் அந்த வழியாக வரவுமில்லை. அவரும் உணவருந்தாமலேயே இரவு வரை காத்திருந்து விட்டு உறங்கச் சென்றார். இரவில் அவரது கனவில் இறைவன் குரல் ஒலித்தது. என்னை வணங்காத அவனுக்கு ஒவ்வொரு வேளையும் நான் இருபத்தைந்து வருடங்களாக உணவு அளித்து வந்திருக்கிறேன். ஆனால் நீ என்னை அவன் வணங்கவில்லை என்பதாக ஒரு வேளை உணவு கூட அளிக்க மறுத்து பட்டினியாக அனுப்பி விட்டாயே, பெரியவருக்கு சுருக்கென்றது. கருணை மயமான இறைவன் தன்னை வணங்கினாலும், வணங்கா விட்டாலும் எல்லோரையும் காத்து வருகிறார் என்று எண்ணி மறு நாளில் இருந்து அவர் இறைவனைத் தொழுதால் தான் உணவு என்ற கொள்கையைக் கைவிட்டு விட்டார். வணங்குபவன், வணங்காதவன், வாழ்த்துபவன், நிந்திப்பவன், நம்புபவன், நம்பாதவன் முதலான பாகுபாடுகள் இறைவனுக்கு இல்லை, அவன் படைத்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது, அவனை வணங்காதவர்களும், நிந்திப்பவர்களும், நம்பாதவர்களும் கூட எல்லாம் வல்ல இறைவன் அருள் இருக்கின்றது.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 35 திருப்பந்தணைநல்லூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 35 வது தேவாரத்தலம் திருப்பந்தணைநல்லூர். புராணபெயர்கள் தென்கயிலை, கோவூர், கொன்றைவனம், விஷ்ணுபுரி, இந்திரபுரி, கணவராச்சிரமம், வாலிநகர், பானுபுரி, ஆவூர், கந்துகபுரி என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மூலவன் பசுபதீஸ்வரர். சுயம்பு லிங்க உருவில் குட்டையான பாணத்துடன் தரிசனம் தருகிறார். புற்றில் பால்சொரிந்து சொரிந்து வெண்மையாகியதால் லிங்கத் திருமேனி வெண்ணிறமாக உள்ளது மூலவர் புற்றால் ஆனவர் என்பதால் குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகின்றது. ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் இறைவன் திருமேனியில் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் படுகின்றன. அம்பாள் வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை. அம்பாள் தவம் செய்யும் கோலத்தில் உள்ளதால் இருபுறமும் ஐயனாரும் காளியும் காவலாக உள்ளனர். தலமரம் சரக்கொன்றை. தீர்த்தம் சூரியதீர்த்தம். சிவன் பசுவின் பதியாக வந்ததால் பசுபதீஸ்வரர் என பெயர் பெற்றார்.

கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் வடக்கு நோக்கி தவக்கோலத்திலும் உள்ளனர். நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் நவலிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி, நேர்கோட்டில் நவகிரகங்கள் உள்ளன. சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு திருஞானசம்பந்தர் திருவாயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இருபுறங்களிலும் தலப்பதிகங்கள் பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன. கோவிலுள் பிரமன் வாலி வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. கோயிலுக்கு எதிரில் நடுவில் நீராழி மண்டபத்துடன் ஆலயத்தின் தீர்த்தமான சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் விசாலமான ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தில் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இத்தல விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். சுவாமியின் திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில் நின்று தரிசிப்பதால் அனைவரும் அனுக்கிரக மூர்த்திகளாக உள்ளனர். நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது. விஷ்ணு தனி கோயிலில் பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப்பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர் உமையுடன் ஆயனாக வந்து இங்கு ஆதிகேசவப்பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. இதனால் சிவன் 4 வேதத்தையும் 4 பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார். பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். இவள் விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இருட்டே இல்லாமல் போனது. இதனால் மாலை வேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமல் போனது. அனைவரும் சூரியனிடம் செல்ல பார்வதியின் கோபத்திற்கு நான் ஆளாக மாட்டேன் என கூறிவிடுகிறார். எனவே அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர். சிவன் பார்வதியிடம் செல்கிறார். இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை. கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக சபிக்கிறார். வருந்திய பார்வதி சாபவிமோசனம் வேண்டுகிறார். சிவன் பந்தை காலால் எத்த அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது. இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைத்த தலம் ஆதலால் பந்தணை நல்லூர் ஆனது. பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார்,

பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் அப்பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார். பகல் பொழுதில் பசுவை மேய விட்டு மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒரு நாள் பசு புற்றிலிருந்த லிங்கத்தை பார்த்து அதன் மேல் பாலை சொரிந்து விடுகிறது. அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார். புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளி குதித்து புற்றில் காலை வைக்க அதன் ஒருகால் குளம்பு புற்றின் மீது பட இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள். மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதை இன்றும் காணலாம். பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவும் சுய உருவம் பெருகின்றனர். சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்பாள் சிவனை திருமணம் செய்கிறார். சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார்.

திருக்கோவிலில் காம்பீலி மன்னனின் மகன் பார்வை பெற்று திருப்பணிகளையும் செய்து வழிபட்டு இருக்கிறார் என புராண வரலாறு உள்ளது. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது. சோழர், விசயநகரர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் பசுபதிதேவர் என்றும் முதலம் ராசராசன் கல்வெட்டில் இத்தலம் பந்தணைநல்லூர் என்றும் குறிக்கப்படுகின்றது. இங்குள்ள கல்வெட்டொன்று முதலாம் ராசராசன் அரியணையேறிய 11-ஆம் ஆண்டில் செம்பியன்மாதேவி ஒருவிளக்குக்குப் பன்னிரண்டு கழஞ்சு பொன் வீதம் மூன்று விளக்குகளுக்கு பொன் அளித்த செய்தியைத் தெரிவிக்கின்றது. காமதேனு, திருமால், கண்வமகரிஷி, வாலி, இந்திரன், பிரம்மா, சூரியன் வழிபாடு செய்துள்ளனர். அருணகிரிநாதர் தன் திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ராமலிங்க அடிகளாரும் பட்டீஸ்வரம் மவுன குருசாமியும் பாடியுள்ளனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 34 மேலக்கடம்பூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 34 வது தேவாரத்தலம் மேலக்கடம்பூர். புராணபெயர் திருக்கடம்பூர், கடம்பைக் கரக்கோயில். மூலவர் அமிர்தகடேஸ்வரர். இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுகிறது. உற்சவர் சோமஸ்கந்தர். அம்பாள் சோதிமின்னம்மை, வித்யூஜோதிநாயகி. தலமரம் கடம்பமரம். தீர்த்தம் சக்தி தீர்த்தம். கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்துள்ளது.

கோவில் 3 நிலை ராஜ கோபுரத்துடன் உள்ளது. கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் இருக்கக் காணலாம். கொடிமரமில்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதியும் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகு வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர் அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் ஆகின்றார்.

குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்கிறார். அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கிறார். பின்புற சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார், இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி இருக்கின்றனர். விமானத்தில் தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல் வீணையுடன் இருக்கிறார். இத்தல விநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

சூரனை அழிக்கச்செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம் தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார். அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல் சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.

நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுகின்றனர். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொருநாளும் அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது. அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும் மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை வித்யஜோதிநாயகி (வித்யா – சரஸ்வதி, ஜோதி – லட்சுமி, நாயகி – துர்க்கை) என்று அழைக்கப்படுகிறாள். இவளுக்கு ஜோதிமின்னம்மை என்றும் பெயரும் உண்டு.

ரிஷபதாண்டவர் இத்தலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா சிவனை பூஜித்தபடி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன் சித்திரகுப்தர் இருக்கின்றனர் அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்துக் கொண்டாடினார் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குகின்றது.

பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அமுதகலசத்தை எடுத்துச் சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்துச் செல்ல எண்ணி கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான்.

அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை. விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம் தான் தேரை எடுத்துச் செல்ல வழிவிடும்படி வேண்டினார். விநாயகர் அவனிடம் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர் ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி ஒரு லிங்கத்தை செய்யும்படி கூறினார். அதன்படி இந்திரன் ருத்ரகோடீஸ்வர லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம் என்றார். இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்து கொண்டு இருக்கிறார். இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும் தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சி தருகிறார். தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில். முருகப் பெருமான் இந்திரன் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இத்தலத்தில்தான் பதிகம் பாடினார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 33 திருநாரையூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 32 வது தேவாரத்தலம் திருநாரையூர். மூலவர் சௌந்தரநாதர். இறைவன் சந்நிதி விமானம் அர்த்த சந்திர வடிவில் இரண்டு கலசங்களுடன் உள்ளது. சிவன் அம்பிகையை தனக்குள் ஐக்கியப்படுத்தி இருக்கிறார் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அவளுக்கும் சேர்த்து இரண்டு கலசங்கள் உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி. தலமரம் புன்னாகம். தீர்த்தம் காருண்ய தீர்த்தம், செங்கழுநீர்.

கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 5.5 ஏக்கர் நிலப்பரப்புடன் ஆலயம் அமைந்துள்ளது. கோவில் முகப்பு வாயிலுக்கு வெளியே கிழக்கில் காருண்ய தீர்த்தம் உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் சிறிய விநாயகரும் நந்தி மண்டபமும் உள்ளன. கொடி மரம் இல்லை. இறைவன் கருவறைச் சுற்றில் மேற்குப் பிரகாரத்தில் ஸ்ரீசுப்பிரமணியர் சந்நிதியும், வடமேற்கில் ஸ்ரீகஜலட்சுமி சந்நிதியும், வடக்குப் பிரகாரத்தில் ஸ்ரீ திருமூலநாதர் சந்நிதியும், ஸ்ரீசண்டிகேஸ்வரர் சந்நிதியும், தலவிருட்சமான புன்னை மரமும் உள்ளன. வடகிழக்கில் ஸ்ரீபைரவர், சூரியன்,சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. சுவாமி சந்நிதி வெளிப்புற கோஷ்ட மூர்த்திகளாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின்றார்கள். நடராஜருக்கும் இத்தலத்தில் தனிச்சன்னதி இருக்கிறது. சிவன் கோயில்களில் ஒரு சண்டிகேஸ்வரர் இருப்பார். இங்கு ஒரே சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு சண்டிகேஸ்வரரை தரிசிக்கலாம். மூலவர் சவுந்தரேஸ்வரருக்கு ஒருவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கும் திருமூலநாதருக்கு ஒருவர் என இங்கு இரண்டு சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பிரகாரத்தில் ஒரே இடத்தில் மூன்று பைரவர்கள் காட்சிஅளிக்கின்றனர்.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும். திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடையூர், மதுரை, காசி ஆகியவை பிற தலங்களாகும். இத்தலத்திலுள்ள ஆலயம் சிவாலயமாக இருந்தாலும் இங்கு விநாயகருக்கே முக்கியத்துவம் அதிகம். இவர் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். பொள்ளா என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம். இந்தப் பிள்ளையார் உளியார் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றி அருள்பாலிக்கிறார்.

நம்பியாண்டார் நம்பியின் தந்தை அனந்தேசர் இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்பி இதைப் பார்ப்பார் அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையைப்போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து பிள்ளையாரை சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.

ஸ்ரீநம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் ராஜ ராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவ திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிட வேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்கு ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான். ராஜ ராஜ சோழனின் காணிக்கைகளையும் நைவேத்தியங்களையும் நம்பியின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து ஏற்றார் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார். திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும் என்று ராஜ ராஜனும் நம்பியும் வேண்ட தில்லை ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் என தெய்வவாக்கு ஒலித்தது. ராஜ ராஜன் தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று திருமுறை தொகுக்க அனுமதி கேட்டான். அவர்கள் சொல்படி சைவ மூவர் சிலைகளை வடித்து வைத்து பூஜித்து அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையை திறக்கச் செய்தான். திறந்தவுடன் ஏடுகள் புற்றால் மூடியிருக்கக் கண்டு திடுக்கிட்டு உள்ளம் நொந்தனர். இக்காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துப் பிறவற்றைச் செல்லரிக்கச் செய்தோம் என்ற திருவள்ளுவர் தெய்வவாக்கு ஒலித்தது. வாக்கால் ஒருவாறு அமைதிப்பெற்றனர்.

திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றை பதினோரு திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான் ராஜ ராஜ சோழன். தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு பண்முறை அமைக்க விரும்பிய நம்பியும் அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள். (திருஎருக்கத்தம்புலியூர் என்னும் ஸ்தலம் தற்போது ராஜேந்திரப்பட்டினம் என வழங்கப்படுகிறது, இத்தலம் விருத்தாசலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நம்பி மற்றும் அரசனின் வேண்டுகொளுக்கு இணங்க திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த ஒரு பெண்ணுக்கு (பாடினி) பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர் என்று தெய்வவாக்கு கிடைத்தது. (இப்பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். இப்பெண்ணிற்கு இறைவன் அருள் புரிந்து பதிகங்களுக்கு பண்முறை அமைக்கச் செய்து அப்பண்னோடு திருமுறை பாட அருள் புரிந்தார்) மனம் மகிழ்ந்த மன்னனும் நம்பியும் அத்தலத்திலுள்ள அந்த பெண்ணைக் கண்டறிந்து தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்கு பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். இன்று தேவாரப் பதிகங்கள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி ராஜ ராஜ சோழன் இவர்கள் இருவர் மூலமாக அருளியவர் திருநரையூர் ஸ்ரீ பொள்ளப் பிள்ளையார்.

ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை தவிர சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மீது கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத்தொண்ட தொகை, திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மீது திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை. மற்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் மீது திருவேகாதசமாலையும் பாடியருளினார். தாம் அருளிச்செய்த இந்த பத்து நூல்களையும் சோழ மகாராஜா வேண்டுகோளின்படி பதினோராந் திருமுறையிலேயே சேர்ந்தருளினார். திருமுறைகளை கண்டெடுத்த காரணத்தால் சோழ மன்னனும் திருமுறை கண்ட சோழன் என சிறப்பு பெயர் பெற்றார். இந்தப் பிள்ளையார் சந்நிதிக்கு எதிரில் ராஜராஜ சோழ மன்னனுக்கும் நம்பியாண்டார் நம்பிக்கும் சிலை உள்ளது. கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார்.

கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் சாப்பிட்ட ஒரு பழத்தின் கொட்டையை கீழே போட்டான். அது அங்கு தவம் செய்து கொண்டிருந்த துர்வாச முனிவர் மீது விழுந்தது. தவம் கலைந்த மகரிஷி தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வனை நாரையாகும்படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். சாபம் அடைந்த நாரை ஒருநாள் சுவாமியை வழிபட வந்தபோது இறைவனின் சோதனையால் புயலுடன் கடும்மழை பிடித்துக் கொண்டது. காற்றை எதிர்த்து பறந்ததில் அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. அப்போது வாயில் இருந்த தீர்த்தத்திலிருந்து சில துளிகள் பூமியில் விழுந்தன. இது ஒரு குளமாக மாறியது. இதற்கு காருண்ய தீர்த்தம் என்று பெயர். இத்தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் உள்ளது. நாரையின் சிறகு முறிந்து விழுந்த இடம் சிறகிழந்தநல்லூர் என்று பெயர் பெற்றது. இந்த சிறகிழந்தநல்லூர் என்ற ஊர் இங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தேவார வைப்புத்தலமான ஞானபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இதன்பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.

திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தல இறைவனை வழிபடுவதால் வாக்கு, மனம், காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். உடலால் செய்யப்பெறும் குற்றம் அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும். தீவினையால் உலகில் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். உடல் நீங்கும் காலத்தில் உயிர் எடுக்க வரும் எமன் மிகவும் அஞ்சுவான். ஆகையால் நீர் நறுமணமுள்ள மலர்களைத் தூவி திருநாரையூர் இறைவனை கை கூப்பித் தொழுது வழிபாடு செய்வீர்களாக என்று பாடியிருக்கின்றார். நம்பியாண்டார் நம்பி நாரை வழிபட்டுள்ளனர். கி.பி.11 ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 32 திருக்கானாட்டுமுள்ளூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 32 வது தேவாரத்தலம் திருக்கானாட்டுமுள்ளூர். புராண பெயர் கானாட்டம்புலியூர். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு மதூகவனம் என்றும் பெயருண்டு. மூலவர் பதஞ்சலிநாதர். கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார். மூலவர் மீது தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளி படுகிறது. உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள். அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். தலமரம் வெள்ளெருக்கு. (தற்போது இல்லை) தீர்த்தம் சூரிய தீர்த்தம்.

கோவில் கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும் நந்தியும் உள்ளனர். வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளின் சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும் பதஞ்சலி முனிவரும் உள்ளனர். கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகனும் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருக்கிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும் அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.

இங்குள்ள நடராஜர் தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி உடலை பின்புறமாக சாய்த்தபடி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன் மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிக்கிறார். பதஞ்சலி நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்தபோது மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால் வெளியில் இருந்தே சிவனை தரிசித்துவிட்டு சென்றார்கள்.

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காணவிரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒருசமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்தபோது அவரை இத்தலத்திற்கு வரும்படி கூறவே இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம் என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா இப்போது திருப்தி தானே என கேட்டார். தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். பதஞ்சலிக்கு சிவன் அவர் விரும்பியபடியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும்விதமாக அவரது பெயரையே தனக்கும் பெயர் பெற்று பதஞ்சலீஸ்வரர் என்று அருள்பாலிக்கிறார்.

செங்கல்லாலான கோயில் மிகவும் பழமையானது. விக்கிரம சோழன் காத்திய கல்வெட்டில் இத்தலம் விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி முனிவர் வழிபட்டுள்ளார். சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 31 ஓமாம்புலியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 31 வது தேவாரத்தலம் ஓமாம்புலியூர். புராண பெயர் உமாப்புலியூர், திருவோமாம் புலியூர். மூலவர் பிரணவ வியாக்ர புரீஸ்வரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர். மூலவர் சுயம்பு மூர்த்தியாக சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்துடன் காட்சித் தருகிறார். அம்பாள் புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி. தலமரம் வதரி (இலந்தை). தீர்த்தம் கொள்ளிடம், கௌரிதீர்த்தம். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்தது என்றும் ஹோம புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாக கூறுகிறார். உமாதேவி அருள் பெற்ற தலம் என்பதால் உமாப்புலியூர் என்ற பெயர் ஓமாப்புலியூர் என மாறிவிட்டதாகவும் செய்திகள் உள்ளது. காவிரியின் வடகரையில் 63 சிவ ஸ்தலங்கள் உள்ளன இவற்றில் தட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமையப்பெற்ற 31 வது ஸ்தலம் ஓமாப்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலாகும். ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீஸ்வரர்.

கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும் நந்தி மண்டபத்தையும் காணலாம். அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும் மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இறைவன் சந்நிதியில் வலதுபுறம தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார். ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும் இறைவன் சந்நிதிக்கும் அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருளுகின்றனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை \ உள்ளனர். பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.

உமாதேவியார் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி பார்வதிதேவி பூமிக்கு வந்து ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள். அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார். அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொள்கிறார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்). சிவன் தட்சிணாமூர்த்தியாக உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. குரு சன்னதி பொதுவாக கோயில் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால் இந்த தலத்தில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

தில்லையில் நடராஜ பெருமானின் திருநடனத்தை காணும் முன்பு வியாக்ரபாத முனிவர் ஓமாப்புலியூர் வந்தார். சிதம்பரத்தில் நடராஜரின் திருநடனத்தைக் காண தனக்கு அருள்தர வேண்டும் என வேண்டினார். வியாக்ரபாதரால் பூஜிக்கப்பட்டதால் இவ்வூர் இறைவன் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த நடராசரின் வடிவம் சிலாரூபமாக கருவறை கோஷ்டத்தில் உள்ளது.

சோழர் காலக் கல்வெட்டு ஒன்றும் பல்லவர்கள் காலத்தவை ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேத மங்கலம் என்றும் இறைவன் பெயர் வடதளி உடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) அம்பிகை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் பாடலில் ஓமமாம்புலியூர் என்று குறிப்பிடுகிறார். திருநாவுக்கரசர் தனது பாடலில் ஓமாம்புலியூர் என்று குறிப்பிடுகிறார். இருவரும் வடதளி என்றும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர் பாடல்கள் பாடியுள்ளனர்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 30 இலுப்பைப்பட்டு

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 30 வது தேவாரத்தலம் இலுப்பைப்பட்டு. புராணபெயர் பழமண்ணிப்படிக்கரை, திருமண்ணிப்படிக்கரை. மூலவர் நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர். இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் அமிர்தவல்லி, மங்களநாயகி. தலமரம் இலுப்பை. தீர்த்தம் பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம். சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தன் கரங்களால் அழுத்தி அவ்விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்த தலம். இலுப்பை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இத்தலம் இலுப்பைபட்டு என்றும் மண்ணியாற்றின் கரையில் அமைந்ததனால் திருமண்ணிப்படிக்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

கோவிலின் கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. பிரகாரத்தில் திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகிலேயே இடம்புரி விநாயகரும் இருக்கிறார். கோயிலுக்கு எதிரே வெளியில் விஜய விநாயகர் இருக்கிறார். இங்கு தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உற்சவர் வில்லேந்திய வடிவில் எழுந்தருளியுள்ளார். இத்தலத்திலுள்ள முருகப் பெருமானை திருப்புகழில் அருணகிரிதாதர் பாடியுள்ளார். பொதுவாக சிவன் கோயில்களில் ஒரு மூலவர் மட்டுமே இருப்பார். அரிதாக சில தலங்களில் இரண்டு மூலவர்கள் இருப்பர். இக்கோவிவில் சிவன் ஐந்து தனித்தனி சன்னதிகளில் இருக்கிறார்.

பாற்கடலை கடைந்தபோது வாசுகி பாம்பு களைப்பில் விஷத்தை கக்கியது. தேவர்களை காப்பதற்காக விஷத்தை சிவன் விழுங்கினார். அவ்விஷம் சிவனின் உடம்பில் சேராமல் இருப்பதற்காக அம்பாள் சிவனுக்கு பின்புறமாக இருந்து அவரது கண்டத்தை (தொண்டைக்குழி) பிடித்து நிறுத்தினாள். விஷம் கழுத்திலேயே தங்கியது. இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவன் சன்னதிக்கு பின்புறம் அமிர்தவல்லிக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அமிர்தத்தில் கலந்திருந்த விஷத்தை நிறுத்தியவள் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறாள். இவள் தன் இடது கையால் பாதத்தை காட்டியபடி அருளுகிறாள்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள் இங்கு தேடிப்பார்த்தும் லிங்கம் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில் இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக மனதில் நினைத்து வணங்கினர். சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம் தங்களுக்கு அருளியதைப்போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது. தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர். அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர். பீமனால் வழிபடப்பட்டவர் மகதீஸ்வரர். நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர். சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது சித்திரை பெளர்ணமி நாளில் இத்தலம் வந்து பஞ்ச லிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு உள்ளது. திரௌபதி வலம்புரி விநாயகரை வழிபட்டுள்ளார். இவர்களில் நீலகண்டேஸ்வரர் படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன் சோடஷலிங்கமாக 16 பட்டைகளுடன் இருக்கிறார். ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும் நீலகண்டேஸ்வரர் படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர் தெற்கு நோக்கி இருக்கிறார்.

துரியோதனன் பஞ்சபாண்டவர்களைக் கொல்ல இங்குள்ள தீர்த்தத்தில் விஷத்தைச் சேர்த்தான். அம்பிகை அவ்விஷத்தைத் தன் கையிலிருந்த அமுதத்தால் முறித்து பிறகு அந்நஞ்சை இறைவன் சிவபெருமான் உண்டார். அதனாலேயே இத்தலத்து இறைவன் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார். அமிர்தத்தைத் தன் கையில் வைத்திருந்த காரணத்தால் இறைவி அமிர்தகரவல்லி எனப் பெயர் பெற்றார் என்றும் புராண வரலாறு உள்ளது. சனிபகவானால் பிடிக்கப்பட்ட நளமகாராஜன் ஏழரைச்சனியின் முடிவு காலத்தில் சிவதலங்களுக்கு சென்று தரிசித்து வந்தார். திருக்கடையூர் செல்லும் முன்பு அவர் இத்தலத்தில் பஞ்சலிங்கங்களை தரிசனம் செய்தார். அப்போதே தனக்கு சனியின் ஆதிக்கம் குறைந்திருப்பதை உணர்ந்து கொண்டார். இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது. இந்திரன், விபாண்டகர், துந்து, பாண்டவர்கள், பிரமன், மாந்தாதா, நளன் வழிபட்டுள்ளனர் சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 29 திருவாழ்கொளிப்புத்தூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 29 வது தேவாரத்தலம் திருவாழ்கொளிப்புத்தூர். புராணபெயர் திருவாள்ஒளிப்புற்றூர். மூலவர் மாணிக்கவண்ணர், இரத்தினபுரீஸ்வரர், இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள். அம்பாள் வண்டமர்பூங்குழல் நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் பார்ப்பதற்கு வண்டுகளை கவரும் மலரை போன்ற அழகுடன் இருப்பதால் இப்பெயர் பெற்றாள். தலமரம் வாகை. முற்காலத்தில் இப்பகுதி வாகை மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. தீர்த்தம் பிரம்மதீர்த்தம். திருவாழ்கொளிப்புத்தூர் தற்போது திருவாளப்புத்தூர், வாளொளிப்புத்தூர் என்று அழைக்கப்படுகிறது.

கோவில்வகிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் முன் ஆலயத்தின் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவன் திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார். தலவிநாயகராக நிருதி விநாயகர் உள்ளார். தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும். பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இவரது சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால் விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. உட்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி, நால்வர், பைரவர் சந்நிதிகள் உள்ளன. நால்வர் சந்நியும் உள்ளது. நடராஜர் சபையும் உள்ளது. இங்குள்ள நடராஜரின் காலுக்கு கீழே முயலகனும் நாகமும் இருக்கிறது. லிங்கோத்பவருக்கு அருகில் திருமால் பிரம்மா இருவரும் வணங்கியபடி இருக்கின்றனர். கோயில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கிறார். கஜலட்சுமி, சரஸ்வதி இருவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இருக்கின்றனர். பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடக்கிறது.

ருதுகேதன் எனும் மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே சிவன் மாணிக்க மழையை பொழிவித்தார். எனவே இவருக்கு மாணிக்கவண்ணர் என்று பெயர் வந்தது. திருமால் மாணிக்க லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட தலம். மாணிக்க கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதாலும் இப்பெயரில் அழைக்கப்படுகிறார் என்றும் புராண வரலாறு உள்ளது. வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. தேவர்கள் பாற்கடலை கடைந்த போது மத்தாக பயன்பட்ட வாசுகி பாம்பு பலவீனமடைந்தது. களைப்பில் தன்னையும் மீறி விஷத்தை உமிழ்ந்து விட்டது. சிவன் விஷத்தை எடுத்து உண்டுவிட்டார். பின் தேவர்கள் அமிர்தத்தை எடுத்துக் கொண்டனர். தன் செயலுக்கு வருந்திய வாசுகி இத்தலத்தில் மாணிக்ககல்லை உமிழ்ந்து சிவனை வேண்டி பூஜை செய்தது. அவருக்கு காட்சி தந்து மன்னித்தருளிய சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். மகிஷாசுரமர்த்தினியாக அவதரித்த துர்க்கை மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த பிறகு இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாள். இவள் எட்டு கைகளுடன் சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும் ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுகிறாள்.

பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அர்ஜுனன் இத்தலம் வழியாக சென்றபோது தாகம் எடுத்தது. எங்கு தேடியும் நீர் கிடைக்கவில்லை. ஓரிடத்தில் களைப்பில் அமர்ந்து விட்டான். அப்போது அங்கு முதியவர் ஒருவர் வந்தார். அர்ஜுனன் அவரிடம் தாகமாக இருப்பதால் நீர் தரும்படி கேட்டான். முதியவர் அர்ஜுனரிடம் ஒரு தண்டத்தை கொடுத்து அருகிலிருக்கும் ஓரிடத்தை சுட்டிக்காட்டி அங்கு தோண்டினால் நீர் வரும் என்றார். அர்ஜுனன் தான் வைத்திருந்த வாளை முதியவரிடம் கொடுத்துவிட்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றான். முதியவரோ அருகிலிருந்து புற்றில் வாளை மறைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார். அர்ஜுனன் நீர் அருந்திவிட்டு திரும்பியபோது முதியவரை காணவில்லை. அவன் தேடியபோது பாத தடம் இருந்ததைக் கண்டு பின்தொடர்ந்தான். அவை அருகிலிருந்த புற்றில் முடிந்தது. அந்த புற்றினுள் வாள் இருந்ததைக் கண்ட அர்ஜுனன் அதனை எடுத்த போது சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தானே முதியவராக வந்ததை உணர்த்தினார். பின் இவ்விடத்தில் கோயில் எழுப்பி வழிபட்டான் அர்ஜூனன். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம் வாளொளிப்புற்றூர் என்று பெயர் பெற்றது. பிரம்மன், இந்திரன், துர்வாசர், அஞ்சகேது, விப்ரவணிகன் திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி வழிபட்டுள்ளனர். சுந்தரர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.