சேத்திரபாலர் – பைரவர்

பைரவரை சேத்ரபாலர் என்ற பெயரில் குறிப்பிட்டு ஒவ்வொரு ஊரையும் அங்கு திகழும் திருக்கோயிலையும் தீமைகளிலிருந்து காக்கும் கடவுளாக வணங்கப்படுகிறார். எட்டுக் கரங்களுடன் திகழும் பைரவ வடிவமே சேத்திரபாலர் திருமேனிகளில் உத்தமமானதாகும். எரிசுடர்கள் (ஜ்வாலாமகுடம்) பிறைச்சந்திரன் ஆகியவை தலைமேல் திகழ எட்டுக் கரங்களுடன் சேத்திரபாலர் திகழ்கின்றார். திரிசூலம் வாள் வில் அம்பு டமருகம் மணி (காண்டா) கேடயம் ஆகியவற்றைத் தரித்திருக்கிறார். ஆடையின்றி இடுப்பிலும் கரங்களிலும் பாம்புகளை ஆபரணமாகப் பூண்டுள்ளார். தோளிலிருந்து நீண்ட மணிமாலை கணுக்கால் வரை உள்ளது. இந்த அற்புத திருமேனியின் முன் கரங்கள் உடைக்கப் பட்டுள்ளது. இடம் பெருவுடையார் கோவில் தஞ்சை.

சக்தி பீடம் 7. அகிலாண்டேஸ்வரி திருவானைக்கா

சக்தி பீடத்தில் 7 ஆவது கோயில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயிலாகும். ஊர் திருவானைக்கா. புராணபெயர். அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி அகிலாண்டநாயகி. அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். இத்தலத்தில் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிக்கிறார். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை கிரீடம் மற்றும் மாலை அணிந்து கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். அம்பாள் காலையில் லட்சுமியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன் அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். தலமரம் வெண்நாவல். தீர்த்தம் நவதீர்த்தங்கள் காவிரி இந்திரதீர்த்தம் சந்திரதீர்த்தம். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீர் தலம் ஆகும். ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்தார். எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.

ஒருமுறை ஈசன் யோக நிஷ்டையில் அமர முடிவு செய்தார். உலகில் நீதி நெறி தவறி அக்கிரமம் எங்கும் தலை விரித்தாடியது. மனிதர்களை நல்வழிப்படுத்த ஈசன் நிஷ்டையில் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமரும்போது அம்பிகை வந்தாள். நான் அருகில் இருக்கும்போது நீங்கள் எப்படி தனியாக தியானம் செய்ய முடியும்? என்று கேட்டாள். ஈசன் உலக நன்மைக்காக அம்பிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். ஆம் தேவி நீ சொல்வது சரியே. எனவே நீ பூமிக்குச் சென்று உன் குழந்தைகள் ஞானம் பெறத் தியானம் செய். என் பக்தன் ஜம்பு என்பவன் நாவல் மரமாக வருவான். அங்கு சென்று நீ தவம் செய். நான் உனக்கு உபதேசம் செய்கிறேன் என்றார். சிவன் கட்டளைக்காக அம்பிகை பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நதியில் நீர் எடுத்து மணலில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது பஞ்ச பூத தலங்களில் நீர் தலமானது. ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார். சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர் அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு ஜம்பு என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால் சுவாமி ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இத்தலம் 60 வது தேவாரத்தலம் ஆகும்.

இக்கோயிலில் ஆரம்பத்தில் அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீசக்கரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி அந்த சக்கரத்தை பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்துவர். ஆனால் இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்துக்குப் பதிலாக இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்கரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். பிள்ளைகளான விநாயகர் முருகன் இருவரும் தனது தாயை சாந்தப்படுத்தும் வகையில் அம்பாளுக்கு எதிரே விநாயகரையும் பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார். அகிலாண்டேஸ்வரியை நன்கு மலர்ந்த செண்பகப்பூ போல் வாசம் வீசுபவள். அவளின் மாணிக்கம் வைர மூக்குத்தி ஒளியில் இந்த உலகமே ஒளி பொருந்தி இருக்கிறது என்று சஹஸ்ரநாமம் பாடலில் வருகிறது. ஆதிசங்கரர் தனது சௌந்தர்யலஹரியில் முழுமதி நிகர்த்த வடிவுடையாளை வணங்கினால் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று பாடுகிறார்.

இக்கோயிலுக்கு வந்த வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள்வதற்கு அம்பாள் வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம் நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன் என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டி விட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். கோயில் பாழ்படாமல் இருக்க எந்த தியாகத்தையும் செய்வேன் பெண்ணே தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள் என்றார். அம்பாளும் அப்படியே செய்ய அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்.

சிவமும் சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் ஒரு திருவிளையாடலை இறைவன் நிகழ்த்தினார். பிரம்மாவிற்கு ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு ஸ்திரீ தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம் பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால் அம்பிகை சிவனிடம் நான் உங்களது வேடத்தில் வருகிறேன் நீங்கள் என் வேடத்தில் வாருங்கள் என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர். பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன் அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால் அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன் மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி ஒருவரையொருவர் சிலந்தியாகவும் யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும் புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில் மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில் மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையைத் தேவையற்றதாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர யானையைத் தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக யானையும் சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.

திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரை மட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். முற்றிய கோடை காலத்திலும் காவிரி வறண்டிருக்கும் காலத்திலும் இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை. திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலம் ஆளும் நாயகியாக காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும் பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்தக் குபேர லிங்கத்தைக் குபேரன் வழிபட்டதால்தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார். பல அரிய சிற்பங்கள் இத்தலத்தில் உள்ளது. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத் தூண்களில் இந்தச் சிற்பம் உள்ளது. ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னிதிக்கு வெளியே உள்ள தூணில் உள்ளது. ஏகநாதர் என்பவர் மும்மூர்த்திகளும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்குகிறது.

மதுரையைப் போல இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. கோயில் பிரகாரத்தை கட்டி முடிக்க அவன் சிவனை வேண்டினான். சிவன் விபூதிச் சித்தராக வந்து இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்குத் திருநீறை கூலியாகக் கொடுத்தார். பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியது. இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் திருநீற்றான் திருமதில் என்றும் பிரகாரம் விபூதி பிரகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக் கரையில் சன்னதி உள்ளது. இந்த வரலாறு கோயில் தல புராணத்தில் உள்ளது.

திருஆனைக்கா கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்த போது அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால் பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள்பாலிக்கும் சொக்கநாதர் மீனாட்சியே செல்கின்றனர். சிவன் அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். இக்கோயிலில் ஜம்புகேசுவரருக்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால் கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்வது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் லிங்கத்திற்கு விபூதி காப்பிடப்படுகிறது.

முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக் கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக் கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார். முருகனும் காமத்தை அசுரத் தன்மைக்கு ஒப்பிடும் வகையில் காமத்தை ஒரு அசுரனாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். இங்குள்ள சனி பகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர். ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியேதான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல் மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது. ஐந்து சுற்றுகள் கொண்ட கோயிலில் நான்காவது திருச்சுற்றில் உற்சவமும் தேரோட்டமும் நடைபெறும். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர் ஜேஷ்டாதேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் உள்ளார்கள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம் ஜம்பு தீர்த்தக் கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.

தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டுமன்றிப் போசளப் பேரரசர்கள் விஜயநகர அரசர்கள் மதுரை நாயக்கர்கள் போன்றோரும் திருப்பணிகளை செய்திருக்கிறார்கள். சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் உள்ளது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. அம்பிகை சிலந்தி யானை ஜம்பு முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் அருணகிரிநாதர் பாடல்கள் பாடியுள்ளார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 655

கேள்வி: வான மண்டலத்தில் பல மாற்றங்கள் உதாரணமாக உத்தராயணம் தட்சிணாயனம் வளர்பிறை தேய்பிறை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் விடியற்காலையிலே தோன்றும் விடிவெள்ளி மாறாமல் இருக்கிறதே அது எப்படி?

விடிவெள்ளியும் மாறிக் கொண்டுதான் இருக்கிறதப்பா. அதை கவனித்துப் பார்த்தால் புரியும்.

லலிதை

பிள்ளையார் முருகனுடன் லலிதை சிதிலமடைந்த நிலையில் சிற்பம். தற்போது பிரித்ததானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. காலம் 11 ஆம் நூற்றாண்டு ஒடிசா கோயிலில் இருந்த சிற்பம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 654

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு தாய் தந்தை இருக்கிறார்கள் சில பிள்ளைகளை பெறுகிறார்கள் அதில். இரண்டு பிள்ளை உயர்ந்த பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறார்கள், இரண்டு பிள்ளை ஏதோ ஒரு காரணத்தால் சரியான நிலையில் இல்லாமல் சிரமப்படுகிறார்கள் என்றால் அந்த தாய் தந்தை என்ன எண்ணுகிறார்கள் என்றால் நான்கும் நமது பிள்ளைகள் தான் இரண்டு நன்றாக வாழ்கிறது. இந்த இரண்டு நிலை எண்ணினால் மீதி இருக்கும் இரண்டு பிள்ளைகள் நன்றாக வாழ வைக்கலாமே என்று தானே எண்ணுவார்கள். அப்படி அல்லாமல் என்னையும் தாய் தந்தை படிக்க வைத்தார்கள் உன்னையும் தாய் தந்தை படிக்க வைத்தார்கள். நீ சரியாக படிக்கவில்லை அதனால் அவதிப்படுத்துகிறாய் நான் ஒன்றும் உனக்கு உதவ மாட்டேன் போ போ என்று நன்றாக இருக்கும் பிள்ளைகள் வட்டம் வரும் பிள்ளைகளை விரட்டினால் அது மேலிருந்த வாரியாக பார்த்தால் அறிவுக்கு ஏற்புடைய வாதமாக தெரிந்தாலும் ஈன்றோர்க்கு (பெற்றவர்களுக்கு) ஏற்றுக் கொள்ளப்படுமா. இவன் செய்வதால் ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை என்ற நிலை இருக்கும்போது தாராளமாக செய்யலாம் என்று எண்ணுவது போல இருக்கின்ற பிள்ளை நன்றாக இருக்கிறது என்று பெற்றோர்கள் மகிழ்வார்களா அல்லது அவதிப்படும் பிள்ளைக்கு இவன் உதவுவில்லை என்று வேதனைப்படுவார்களா .

அதைப் போலதான் இறைவன் படைப்பில் அனைத்தும் இறைவனுக்கு பிள்ளைகளே. கருமத்தாலா அல்லது வேறு காரணத்தாலோ ஒருவன் அவதிப்படும்போது நன்றாக இருக்கின்ற மனிதன் அப்படி இல்லாத மனிதனுக்கு தன்னிடம் கிடைத்த உயர்ந்த பாக்கியத்தை வாய்ப்பை அவனுக்கும் தந்து வாய்ப்பிருக்கும்போது அவனுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அது செய்வது. தேவைப்பட்டால் அவனுக்கு சொந்தமாக ஏதாவது செய்து பிறர் கையை ஏந்த வேண்டிய நிலை இல்லாமல் வாழ்வதற்கு உண்டான வழிமுறைகளை செய்வதுதான் உத்தமமான காரியம். இதை செய்வது ஒரு ஏழை மைந்தன் நல்லதொரு தொழில் வாய்ப்பை தருவது அல்லது அவனுக்கு உள்ள சரியான பிரச்சனைக்கு சரியான தீர்வை செய்வதோ சகஸ்ரம் சகஸ்ரம் சகஸ்ரம் (ஆயிரம் ஆயிரம் ஆயிரம்) யாகம் செய்வதை விட உயர்வு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 653

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையாலே யாம் கூறுகிறோம் அப்பா அதிக அளவு தனம் இருப்பவன் தனவான் என்று மனிதர்கள் எண்ணுகிறார்கள் அப்படி அல்ல அதிகளவு தனம் இல்லை என்றாலும் கூட இருக்கின்றன பணத்தை பிறருக்கு பிறரின் குறிப்பு அறிந்து எவன் தருகிறானோ அவன்தான் மெய்யான தனவானாம் ஆவான். தனத்தை தானே வைத்துக் கொண்டிருக்கக் கூடியவன் உண்மையில் ஏழை தான் இதுபோல் மட்டும் அல்ல நாங்கள் அடிக்கடி கூறுவது போல இருப்பதை கொடுப்பது சிறப்பு இருப்பதை எல்லாம் கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு ஆகும். எனவே கொடுக்கின்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அத்தனை பேரும் தனவான் மட்டுமல்ல. இந்த உலகில் அவன் தான் குபேரன் குபேரனுக்கு எல்லாம் குபேரன். ஆனால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் கொடுப்பதற்கு பொருள் இல்லை என்று ஏங்குகிறானே அப்பொழுது அந்த உண்மையான ஏக்கமே அவன் ககரம் ககரம் கொடுத்ததற்கு சமமாகி இறைவன் அவனுக்கு அதற்குரிய புண்ணிய பலனை தந்து விடுகிறார். ஆனால் இறைவன் அருளால் ஒரு பிறவியில் செய்த புண்ணியத்தால் அதிகம் அதிகம் அழியக் கூடிய செல்வத்தை பெற்ற தனவான் இவையெல்லாம் பிறருக்கு தந்து விட்டால் எனக்கும் என் குடும்பத்திற்கும் பிறரிடம் நிற்க வேண்டிய நிலை வரும் எனவே யாருக்கும் தரமாட்டேன் என்று வைத்திருக்கிறான். அவன் தான் உண்மையில் உலகில் பரம ஏழையாவான். அவன்தான் இருந்தும் வறுமையில் வாடுகின்ற மனிதன் ஆவான்.

சக்தி பீடம் 6. பர்வதவர்த்தினி – ராமேஸ்வரம்

சக்தி பீடத்தில் 6 ஆவது கோயில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி கோயிலாகும். ஊர் ராமேஸ்வரம். புராணபெயர் கந்தமாதனபர்வதம் திருவிராமேச்சுரம். அம்பாளின் பெயர் பர்வதவர்த்தினி. மலைவளர்காதலி என்ற பெயரும் உள்ளது. மலைவளர் காதலி என்று திருஞானசம்பந்தர் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார். சக்தி பீடங்களில் இத்தலம் சேதுசக்திபீடம் ஆகும். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். தீர்த்தம் கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும் கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளது. இந்த தீர்த்தங்கள் தேவிபட்டினம் திருப்புல்லாணி பாம்பன் தங்கச்சிமடம் மண்டபம் ஆகிய இடங்களில் உள்ளன.

அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி உள்ளனர். சந்தான விநாயகரும் சௌபாக்கிய விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. ராமபிரானுக்கு கடலில் சேது பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன் நீலன் கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும் பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

ஒரு சமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். அம்பாள் பக்தரான ராயர் செய்த இந்த உப்பு லிங்கம் பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ளது. உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

ராமேஸ்வரம் கடல் அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப் பெற்றார். எனவே இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டது. அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்தது.

பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர் சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர் பிரம்மச்சாரி என்பதாலும் இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும் இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

முத்துராமலிங்க சேதுபதி மன்னர் இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களைக் கொண்ட இம்மூன்றாம் பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது. ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துவிஜயரகுநாத சேதுபதி அவர்களால் கி.பி. 1740-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரம் அமைக்கும் பணி முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1770 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும் வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. 22 தீர்த்தங்கள்

1 மகாலட்சுமி தீர்த்தம்
2 சாவித்திரி தீர்த்தம்
3 காயத்திரி தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம்
8 நள தீர்த்தம்
9 நீல தீர்த்தம்
10 கவய தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம்
12 கெந்தமாதன தீர்த்தம்
13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
14 கங்கா தீர்த்தம்
15 யமுனா தீர்த்தம்
16 கயா தீர்த்தம்
17 சர்வ தீர்த்தம்
18 சிவ தீர்த்தம்
19 சாத்யாமமிர்த தீர்த்தம்
20 சூரிய தீர்த்தம்
21 சந்திர தீர்த்தம்
22 கோடி தீர்த்தம்.

பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்க தலங்களில் இத்தலமும் ஒன்று. விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே ஜோதிர்லிங்கம் ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

ராம அவதார காலத்தின் தொன்மை மிக்கது ராமேஸ்வரம். ராவணனை அழித்துவிட்டு சீதையையும் மீட்டுத் திரும்ப அழைத்துக் கொண்டு புறப்பட்டார் ராமர். ராமரின் வன வாசத்திற்கான பதினான்கு ஆண்டுகளின் நிறைவும் நெருங்கியிருந்தது. அயோத்தி திரும்ப எண்ணிய போது பிரம்மாவின் பேரனும் பேரரசனுமான ராவணனைக் கொன்றது பாவம் என்று அந்த பாவத்தைப் போக்க பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக சிவபூஜை செய்ய நினைத்தார் ராமர். இலங்கையிலிருந்து புறப்பட்டுக் கடலைத் தாண்டி ராமேஸ்வரம் நிலத்தைத் தொட்டதும் உடனடியாகச் சென்று இமயமலையிலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வரும்படி அனுமனுக்கு ஆணையிட்டார். வேகமாக அனுமன் பறந்தார். அனுமன் திரும்புவதற்கு தாமதமானது. பூஜை வேளை நெருங்கிக் கொண்டிருக்க அனுமன் இன்னமும் வராத நிலையில் ராமர் அனுமனுக்காக காத்திருக்க கடற்கரை மணலிலேயே சீதாதேவி சிவலிங்கம் பிடித்தாள். அந்தச் சிவலிங்கத்திற்கு ராமர் பூஜையை நிறைவேற்றும் வேளையில் இன்னொரு சிவலிங்கத்தோடு அனுமனும் வந்தார். இப்போதும் ஆஞ்சநேயர் கொணர்ந்த சிவலிங்கத்திற்குப் பூஜைகள் நடந்த பின்னரே மூலவருக்குப் பூஜைகள் நடக்கின்றன. ராமேஸ்வரம் மிகவும் தொன்மையான தலம். ராமர் இங்கு சிவபூஜை செய்வதற்கு முன்னரே சிவசாந்நித்யம் பெற்ற தலம் இது. காரணம் இங்கு அம்பிகையின் அருள்வாசம் வெகு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. உருவமும் வடிவமும் கடந்த நிலையில் சிவனும் சக்தியும் இங்கு சஞ்சரித்திருந்தார்கள். எனவேதான், சிவபூஜைக்கு ஏற்ற இடம் என்று இதனை ராமர் தேர்ந்தெடுத்தார்.

சேற்றூர் சமஸ்தான வித்துவான் மு.ரா.அருணாச்சல கவிராயர் எழுதிய சேது பர்வதவர்த்தினியை பிள்ளைத் தமிழில் அம்பாள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல் என்று பத்து வித பருவங்களில் வர்ணித்துப் போற்றப்படுகிறார். பலபட்டடை சொக்கநாத கவிராயர் இத்தலத்தின் மேல் தேவ உலா பாடியுள்ளார். நிரம்பவழகிய தேசிகர் இத்தலத்தின் வரலாறை சேது புராணம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். பதஞ்சலி முனிவர் முக்தியடைந்த தலம். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தின் மீது தேவாரப் பாடல்கள் புனைந்து சிவபெருமானையும் அம்பிகையையும் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 652

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒரு மனிதனானவன் தனக்கும் தன குடும்பத்திற்க்கும் செலவு செய்வது இயல்பு. தர்ம சிந்தனை என்பது பூர்விக புண்யம் இருந்தால் மட்டுமே ஒருவனுக்கு வரும். அந்த தர்ம சிந்தனை இருக்கும் பொழுது அந்த தர்மமே அவன் எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும். ஏன் என்றால் ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும் எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும் எத்தனை அபிஷேகம் யாகங்கள் செய்தாலும் கூட அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால் இறை அருளை பெற முடியாது. ஒரு மனிதன் இறை அருளை பெற வேண்டுமென்றால் பூஜைகள் செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. ஏன்? இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. தர்ம குணமும் பிறருக்கு உதவும் குணமும் இருந்து விட்டால் போதும். இவன் இறையை தேட வேண்டியதில்லை. இறை இவனை தேடி வந்து விடும். எனவே எவனுக்கு இறை அருள் இருககிறதோ அவனுக்குத்தான் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். பிறர் படுகின்ற கண்ணீரை துடைக்க வேண்டும் என்ற எண்ணம் வ௫ம். அது மட்டும் அல்லாது எவன் ஒருவன் அதிக அளவு தர்மம் செய்கிறானோ அவனிடம் இறையே கை ஏந்தும் என்பதற்கு கர்ணனே ஒ௫ சாட்சி. எனவே பிள்ளைகளுக்கு ஈன்றோர சொல்லி கொடுக்க வேண்டியது. இன்னும் சொல்ல போனால், சொல்லி கொடுக்க வேண்டியதே இல்லை. ஈன்றோர் பிள்ளைகளின் முன்னால் தானத்தை அள்ளி கொடுத்துக் கொண்டே போனால் அதை பார்க்கின்ற பிள்ளைகள் தானாகவே பிறருக்கு கொடுக்கின்ற மன நிலைக்கு வந்து விடும். ஒரு பிள்ளைக்கு நீ டாக்டர் ஆகு விஞ்ஞானி ஆகு என்று தான் சொல்லி கொடுக்கிறார்களே ஒழிய நீ பிறருக்கு உதவு என்று யாரும் சொல்லி கொடுப்பதில்லை. ஏன் என்றால் ஒருவன் உலகியல் ரீதியாக வெற்றி பெறுவதும் வெற்றி பெறாமல் போவதும் அவன் விதியாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு தொழிலை செய்து அவன் தன ஜீவனை நடத்தி கொள்ளலாம். ஆனால் தர்ம குணம் மட்டும் ஒருவனுக்கு எத்தனை புத்தகம் படித்தாலும் வந்து விடாது .பிறர் என்ன உபதேசம் செய்தாலும் வந்து விடாது. அது அவன் பிறப்பிலேயே வர வேண்டும். அதற்கு தாய் தந்தை புண்யம் செய்திருக்க வேண்டும். தாய் தந்தையின் முன்னோர்கள் புண்யம் செய்திருக்க வேண்டும்.

அக்னிபகவான்

அக்னிதேவர் ஒரு கையில் அக்கமாலையும் மறு கையில் அமுத கலசமும் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். தலையில் தீ ஜ்வாலாவுடன் நீண்ட தாடியுடன் இருக்கிறார். இடம்: சுந்தரேஸ்வரர் கோவில். மேலப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.