ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -29

ராமரின் கேள்விக்கு அகத்தியர் பதில் கூற ஆரம்பித்தார். ராவணன் பல அரசர்களை துன்புறுத்தியபடி மாஹிஷ்மதி என்ற ஊரை அடைந்தான். அந்த ஊர் சொர்கபுரி போல் இருந்தது. வசுரேதஸ் என்ற அரசன் அதை ஆண்டு வந்தான். அவனுக்கு கார்த்த வீர்யார்ஜூனன் என்ற பெயரும் உண்டு. அவனை எதிர்க்க ராவணன் முடிவு செய்து அந்த அரசனை சீக்கிரம் என் முன் வரச்சொல்லுங்கள் அவனுடன் நான் யுத்தம் செய்ய வேண்டும் என்று தன் மந்திரிகளுக்கு உத்தரவிட்டான். மந்திரிகள் விசாரித்து இந்த ஊரில் தற்போது அரசன் இல்லை அவன் விந்திய மலையில் இருக்கிறான் என்றார்கள். ராவணன் விந்திய மலைக்கு புறப்பட்டான். தன்னுடன் யுத்தம் செய்ய ராவணன் வருகிறான் என்று தெரிந்த கார்த்த வீர்யார்ஜூனன் தனது கதை ஆயுதத்துடன் வந்தான். கருநீல மலை போல் உருவத்தையும் அவனது ஆயிரம் கைகளையும் பார்த்த ராட்சச வீரர்கள் பயந்து ஓடி ஒளிந்தார்கள். ராவணனுக்கும் கார்த்த வீர்யார்ஜூனனுக்கும் யுத்தம் நடந்தது. இருவரும் தங்களது கதை ஆயுதத்தால் யுத்தம் செய்தார்கள். ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீர்யார்ஜூனனை இருபது கைகள் கொண்ட ராவணனால் வெல்ல முடியவில்லை. கார்த்த வீர்யார்ஜூனன் தனது கதை ஆயுதத்தால் ராவணனனை அடித்து வெற்றி பெற்று அவனைப் பிடித்துக் கட்டி தனது நாட்டிற்கு இழுத்துச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் இக்காட்சிக்காண ஆகாயத்தில் குவிந்தார்கள்.

தேவர்கள் கார்த்த வீர்யார்ஜூனன் மீது பூக்களை தூவி வாழ்த்தினார்கள். கார்த்த வீர்யார்ஜூனனை எதிர்த்து ராவணனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனை அறிந்த ராவணனின் தந்தையின் தந்தை புலஸ்திய முனிவர் தன் பேரன் மேல் கொண்ட பாசத்தால் மாஹிஷ்மதி அரசனான கார்த்த வீர்யார்ஜூனனைக் கண்டு பேச வந்தார். புலத்திய முனிவருக்கு உரிய மரியாதை கொடுத்து அவரை வரவேற்ற கார்த்த வீர்யார்ஜூனன் தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு புலத்தியர் ராவணனை பிடித்து வந்து விட்டாய் என்ற செய்தி அறிந்து வந்திருக்கிறேன். யாராலும் வெல்ல முடியாத ராவணனை நீ வென்று விட்டாய். உன் பலம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று பாராட்டினார். அவன் எனது பேரன் அவனை உன்னிடம் நான் யாசிக்கிறேன். என் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அவனை விடுதலை செய்து அவனுடன் நட்பு கொள் என்று கேட்டுக் கொண்டார். புலத்தியரின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல் ராவணனை அப்போதே விடுதலை செய்தான் கார்த்த வீர்யார்ஜூனன். புலத்தியரின் சொல்படி ராவணனும் கார்த்த வீர்யார்ஜூனனும் அக்னி வளர்த்து நட்புடன் இருப்பதாக ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இலங்கை திரும்பிய ராவணன் கார்த்த வீர்யார்ஜூனனிடம் தோற்றதை எண்ணி பெரும் வெட்கம் அடைந்தான். புலஸ்தியர் வந்து விடுவித்தது ராவணனின் தன்மானத்தை பெரிதும் பாதித்தது. சில காலம் சென்ற பின் அனைத்தையும் மறந்த ராவணன் தன்னை விட பலவான்கள் யாரும் இருக்கக்கூடாது என்று மறுபடியும் அரசர்களை துன்புறுத்த ஆரம்பித்து அகங்காரத்துடன் பூமியை வலம் வந்தான்.

வானரனான வாலி ஆண்டு வந்த கிஷ்கிந்தை நகரத்திற்கு வந்து சேர்ந்தான் ராவணன். பொன் மாலையணிந்த வாலியின் முன்பு சென்று யுத்தம் செய்தால் தன்னுடைய சக்தி பாதி வாலிக்கு சென்று விடும் என்று அறிந்த ராவணன் வாலியைப் பற்றி விசாரித்தான். அதிகாலையில் நான்கு திசைகளில் உள்ள கடல் பகுதிக்கு சென்று பூஜைகளும் ஜபமும் செய்யும் பழக்கமுடையவன் என்பதை அறிந்த ராவணன் ஒரு திட்டத்தை திட்டினான். அத்திட்டத்தின்படி வாலி அதிகாலை ஒரு திசையின் கடல் பகுதியில் தனது கண்களை மூடி ஜபம் செய்து கொண்டிருக்கும் போது ராவணன் வாலியின் பின்பக்கம் மெதுவாக தனது ஆயுதத்துடன் சென்றான். ராவணன் தாக்க வருவதை அறிந்து கொண்ட வாலி ராவணன் அருகில் வரும் வரை அமைதியாக அமர்ந்திருந்தான். ராவணன் அருகில் வந்ததும் ராவணனை பிடித்து தன் கைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டு நான்கு திசைகளிலும் உள்ள கடல் பகுதியிலும் தான் செய்ய வேண்டிய பூஜை ஜபத்தினை செய்து முடித்தான். கை கால்களை உதைத்துக் கொண்டு கருடன் வாயிலிருந்த தொங்கும் நாகம் போல ராவணனை துடித்தான். வாலியின் வலிமைக்கு முன் ராவணானால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிப்பதை பலரும் கண்டார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.