ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -5

சுகேசனுக்கு தேவவதியை விதி முறைப்படி கந்தர்வன் திருமணம் செய்து கொடுத்தான். சுகேசன் வரங்களும் செல்வங்களும் பெற்று மூவுலகிலும் அதிக மதிப்புடன் இருந்ததால் தேவவதி அவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். தேவவதிக்கு மால்யவான் சுமாலி மாலி மூன்று பிள்ளைகள் பிறந்தனர். மூவரும் பலசாலிகளாக வளர்ந்தனர். அவர்கள் மூவரும் தந்தையைப் போலவே வரங்களும் செல்வங்களும் பெறுவதற்கு கடினமான நியமங்களை ஏற்று தவம் செய்தனர். அவர்களின் தவம் மூவுலகையும் தகிக்கச் செய்தது. இதனால் தேவ ராட்சச மனிதர்கள் யாவரும் பாதிக்கப்பட்டனர். பிரம்மா அவர்களின் முன்பு தோன்றி என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். சிரஞ்சீவியாக இருந்து நெடுநாள் வாழ வேண்டும். எதிரிகளை எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும். விஷ்ணுவுக்கு நிகராக எதையும் சாதிக்கும் வல்லமை உடையவர்களாக வேண்டும் என்று வரம் கேட்டார்கள். பிரம்மாவும் சம்மதித்து வரமளித்துச் சென்றார். மூவருக்கும் வரம் கிடைத்ததும் இவர்கள் இரவு பகல் இன்றி தேவர்களை வாட்ட ஆரம்பித்தனர். இவர்களைக் கண்டு ரிஷிகளும் சாரணர்களும் தேவலோக வாசிகளும் பயந்து நடுங்கினர். தங்களைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று தவித்தனர். அந்த சமயம் விஸ்வகர்மாவை மூவரும் சந்தித்தார்கள். சிற்பிகளுக்குள் சிறந்தவர் நீங்கள். எங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும். தற்சமயம் பலத்துடன் செல்வாக்குடன் இருப்பதால் எங்களுக்கு தகுதியாக நகரத்தை அமைத்து அதில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

தேவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தாங்கள் அவர்களுக்கு நகரத்தை நிர்மாணித்து வீடுகள் கட்டிக் கொடுத்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். எங்களுக்கும் அது போல நகரத்தை நிர்மாணித்து வீடுகள் கட்டிக் கொடுங்கள் என்றார்கள். விஸ்வகர்மாவும் சமுத்திரக் கரையில் இந்திரனுடைய அமராவதி நகரத்திற்கு இணையாக கடல் நான்கு புறமும் சூழ்ந்திருந்த இடத்தில் த்ரிகூட மலையின் சிகரத்தையடுத்த சுஷேண மலையின் மேல் நகரம் அமைத்துக் கொடுத்தார். நகரத்திற்குள் ஆந்தைகள் கூட நுழையாதபடி பாதுகாப்பாகவும் செல்வச் செழிப்புடனும் வீடுகளை கட்டினார். மூவரிடமும் வந்த விஸ்வகர்மா இலங்கை என்ற இந்த நகரை நிர்மாணித்து விட்டேன் இதில் நீங்கள் வசிக்கலாம். இதுவும் இந்திரனின் அமராவதிக்கு இணையானதே என்றார். நூற்றுக் கணக்கான மாளிகைகள் உறுதியாக அமைக்கப்பட்டு கம்பீரமாக நின்றன. மூவரும் இந்த நகரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். செல்வச் செழிப்புடன் அனைத்து வசதிகளுடன் இருந்த இலங்கையின் கோட்டையைக் கண்டு அனைவரும் மலைத்து நின்றார்கள். இலங்கை நகரத்தை மூவரும் தலைமை நகரமாகக் கொண்டு தங்களைச் சார்ந்த ராட்சசர்களுடன் வசிக்க ஆரம்பித்தனர்.

இலங்கை நகரின் அழகைப் பார்க்க நர்மதா என்ற கந்தர்வ பெண் அங்கு வந்தாள். அவளுக்கு ஹ்ரீ ஸ்ரீ கீர்த்தி மூன்று பெண்கள் இருந்தார்கள். மூவரும் ஒத்த அழகும் தேஜஸும் உடையவர்கள். இவர்களை இலங்கைக்கு தலைவர்களாக இருந்த மால்யவான் சுமாலி மாலி என்ற மூன்று ராட்சசர்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தாள். மூவரும் மனைவியருடன் சுகமாக இருந்தனர். முதல் ராட்சசனான மால்யவனுக்கு வஜ்ர முஷ்டி, விரூபாக்ஷன், துர்முகன், சப்தகர்னோ, யக்ஞ கோபன், மதோன்மத்தன் என்ற பிள்ளைகளும் அனலா என்ற ஒரு பெண்ணும் பிறந்தார்கள். 2 வது ராட்சசனான சுமாலிக்கு பிரஹஸ்தன், அகம்பனன், விகடன், கால கார்முகன், துர்ம்ராக்ஷன், தண்டன், சுபார்ஸ்வன், ஸம்ஹ்ராதி, பிரகஸன், பாஸ கர்ணன் என்று பிள்ளைகளும் ராகா, புஷ்போத்கடா, கைகயி கும்பீனஸீ என்ற பெண்களும் பிறந்தார்கள். 3 வது ராட்சசனான மாலிக்கு அனிலன், அனலன், ஹரன், ஸம்பாதி என்ற பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் அனைவரும் வளர்ந்ததும் இந்திரனையும் ரிஷிகளையும் நாகர்களையும் யக்ஷர்களையும் துன்புறுத்துவதை விளையாட்டாகக் கொண்டனர். இதற்கு அவர்களின் தந்தையும் உதவியாக இருந்து மகிழ்ந்தார்கள். இவர்களின் பலமும் வீர்யமும் அவர்கள் கண்களை மறைத்து அகங்காரத்தினால் அலைந்தார்கள். காற்றைப் போல உலகை சுற்றி வந்து காலனைப் போல் யுத்தம் செய்தார்கள். முனிவர்கள் ரிஷிகள் செய்யும் யாக காரியங்களைத் தடுத்து பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக திரிந்தனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.